Pages - Menu

Monday 7 December 2015

வேண்டும் சுதந்திரம்! கவிதை

கவிதை
வேண்டும் சுதந்திரம்!
அந்தோணிசாமி,  ஓய்வு, ஆசிரியர்
மகிழம்பாடி.
சுதந்திரமாய் வாழவே
சுதந்திரம் பெற்றோம்.
செங்கரும்பு சுவையூறும் சுதந்திரம்
சும்மா வரவில்லை
வாடா இனத்தின் வளர் தலைமுறை
வாங்கித் தந்த சுதந்திரம்
சுக்கா மிளகா சுதந்திரம்?
வீழ்க ஆதிக்க அயலினமென
வாழ சாதிக்கும் நம்மினம்
வாங்கிய சுதந்திரம்
வழுக்கி விழுந்தால்
விலங்கொடு மக்களன்றோ?
சுதந்திரம் வாங்கினோம்
சுதந்திரம் எங்கே?
இன்னுமின் நாட்டில் ஏற்றத்தாழ்வு
இருக்கிறதின்னும் ஆண்டானடிமை
இன்றுவரை இருக்கிறது சாதிவெறி
ஏனென்று கேட்டால் சிறைவாசம்

எதற்கென்று கேட்டால் அடிதடி
எதிலும் சமத்துவ ஊழலோ ஊழல்
உண்மையைச் சொன்னால் உன்மத்தன்
ஊருக்குழைத்தான் தறுதலைப் பட்டம்
உண்டா இல்லையா உணர்ந்து பார்!
சாதியால் வீழ்ந்திட்டோம்
சமயத்தால் அடிமையானோம்
விளங்குதா விபரம்
வேண்டிய சுதந்திரம்
வீணருக்கோ அய்யோ!
வேதனையைச் சொன்னால்
வீண் வம்பு தான்
வேண்டுமொரு சுதந்திரம்
வீறு கொள் சுதந்திரம்
வினையயல்லாம் தீர்க்க
வாழ்ந்திடும் மக்கள் சமத்துவம் காண
வாங்குவோம் மற்றொரு சுதந்திரம்
வேதன் சத்தியம் தருவான் நிச்சயம்.


No comments:

Post a Comment

Ads Inside Post