Pages - Menu

Tuesday 28 March 2017

திருப்பலி விளக்கம், 14. நற்கருணை வழிபாடு (ii)

திருப்பலி விளக்கம்
14. நற்கருணை வழிபாடு (ii) 

- அருள்பணி. எஸ். அருள்சாமி, 
பெத்தானி இல்லம், கும்பகோணம்

அடையாள காணிக்கையும், பொது மன்றாட்டுகளும்

தமிழகத்தில் ஒரு புதிய பழக்கம் உருவாகியுள்ளது. அதாவது சில அடையாள காணிக்கைகளை காணிக்கையாக்கும்போது பொது மன்றாட்டுகளை அதற்கேற்றவாறு மாற்றி செபிப்பது. இது அறியாமையால் ஏற்படும் ஒரு குழப்பத்துக்குரிய செயல். நாம் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல் பொது மன்றாட்டுகள் அதாவது விசுவாசிகளின் மன்றாட்டுகள் “வார்த்தை வழிபாட்டை” முடித்து வைக்கும் ஒரு செயல். காணிக்கைகளைப் பவனியாகப் பலிபீடத்திற்குக் கொண்டு வருதல் “நற்கருணை வழிபாட்டைச் சார்ந்த ஒரு தொடக்கச் செயல். காணிக்கைகளைத் தயார் செய்வதின் முதல்படியாகும். எனவே , இவற்றை இணைப்பது பொருத்தமற்றது.”

அடுத்து ‘அடையாள காணிக்கை’ என்ற சொற்களைச் சரியாகப் புரிந்துக் கொள்ள வேண்டும். பலிபீடத்தில் இயேசுகிறிஸ்து கல்வாரி மலையில் ஒப்புக்கொடுத்த அதே பலி அப்பம்இரசம் என்ற அடையாளங்கள் வழியாக ஒப்புக் கொடுக்கப்படுகிறது  என்பதில்  உள்ள பொருள் செறிவை  சரியாகப் புரிந்துக் கொள்ள வேண்டும். மேலே காணிக்கையின் இறையியல் சிந்தனையில் சொல்லப்பட்டது போல நாம் கிறிஸ்துவின் சிலுவைப்பலியோடு நம்மை ஒன்றிணைக்க வேண்டுமானால் நமது உடல், பொருள், ஆவி அனைத்தையும் கடவுளுக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும். இந்த மனப்பாங்கை செயலாக்கும் விதத்தில் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவே பயன்படுத்திய அப்பத்தையும், இரசத்தையும் காணிக்கையாக்குகிறோம். அதனால் நமது பலி அடையாளங்கள் வழியாக ஒப்புக்கொடுக்கப்படுகிறது என்கிறோம்.

ஆனால் அப்பம்இ-ரசம் தவிர்த்து, நாம் கொண்டுவரும் மற்ற பொருள்களைக் காணிக்கைகளாகக் கொண்டு வரும்போது அவற்றின் நோக்கம் இருவித பயன்பாடுகளை நோக்கியதாக இருக்க வேண்டும். ஒன்று திருப்பலியோடு தொடர்புடைய பயன்பாடாக இருக்க வேண்டும்: பீட துகில் வாங்க, மெழுகுவர்த்திகளும், அவற்றைத் தாங்கும் நிலைபேழை (Stands),  தூபக் கலசம் போன்றவைகளை வாங்குவதற்கும் பயன்படுத்தப்பட வேண்டும். அடுத்து உணவுப் பண்டங்கள், உடைகள் போன்றவை ஏழை மக்களுக்கு பகிர்வதற்காக இருக்க வேண்டும்.

இந்த இரண்டுவித பயன்பாடுகளைத் தவிர்த்து அடையாளங்களாக நாம் கொண்டுவரும், உலகம் முழுவதையும் குறித்துக் காட்டும் க்ளோபு (Globe), பேனா, புத்தகம், விவிலிய நூல், மண்வெட்டி, உப்பு, தண்ணீர், காய்ந்த (பட்ட) குச்சி, முள், சர்க்கரை, தேய்ந்து போன மிதியடி  போன்றவைகளைக் காணிக்கையாகக் கொண்டு வந்து, அவை  குறிக்கும் உண்மை - அதாவது  உழைப்பு, அர்ப்பணம், கரைதல், எரிதல், வெறுமை, ஒன்றுமில்லாமை - பற்றி விளக்கங்களை வாசித்துவிட்டு, அவற்றை கொண்டு வந்தவர்களே எடுத்து போவது சரியன்று. இத்தகைய அடையாள காணிக்கைகள் தவிர்க்கப்பட வேண்டும்.  அடையாளம் என்ற பெயரில் சிறிதும் பொருத்தமே இல்லாத சடங்குகளும் இடம் பெறுகின்றன. எடுத்துக்காட்டாக தனது வெறுமையையும், ஒன்றுமில்லாமையையும் குறித்துக்காட்டும் விதமாக ஓர் அருள்சகோதரி பவனியாக வந்து குருவிடம் தமது காலியாக உள்ள இருகரங்களையும் இணைத்து அருள்பணியாளரிடம் விரித்துக் காட்டுவது கேலி கூத்தாகிவிடும். இதனால் யாருக்கு என்ன பயன்?

அப்ப - இரசத்தை ஒப்புக்கொடுத்தல் 

அப்ப-இரசத்தைப் பெற்றுக் கொண்ட அருள்பணியாளர் அவற்றை ஒவ்வொன்றாக எடுத்து அதற்குரிய மன்றாட்டோடு இறைவனுக்கு ஒப்புக்கொடுக்கிறார் (காண்.  மேலே). இரசத்தை ஒப்புக்கொடுக்கும்முன் அதனுள் சிறிதளவு தண்ணீர் சேர்க்கப்படுகிறது. இந்த செயல் யூதர்களின் பழக்கத்திலிருந்து வருகிறது. அதாவது யூதர்கள் எப்போதும் இரசத்தோடு சிறிதளவு தண்ணீர் கலந்தே பருகினர். இது கிறிஸ்துவுடன் நாம் ஒன்றாக கலந்து விடுவதைக் குறிக்கிறது என்கிறார் புனித சிப்ரியன். எனவே இன்று இரசத்தோடு தண்ணீரைக் கலக்கும்போது “இந்த தண்ணீர் இரசம் வழியாக நாமும் அவரது இறையியல்பில் பங்கு பெறுவோமாக” என்று செபிக்கிறார் அருள்பணியாளர். இந்த  செபம் புனித பவுல், யோவான் ஆகியோர் தரும் போதனைகளுக்கு ஏற்றவாறு அமைந்துள்ளது. அதாவது இறைமகன் மனிதஉரு எடுத்து மனிதரானார். அவரை ஏற்றுக் கொள்வோருக்கு கடவுளின் பிள்ளைகளாகும் பேற்றினைத் தந்தார் என்கிறார்கள் (காண். கலா 4 : 6 - 7; உரோ 8 : 15 - 17; யோவா 1 : 12 -14).

பலியை நிகழ்த்தும் அ ருள்பணியாளர் அப்ப - இரசத்தை ஒப்புக்கொடுத்தப்பின், “ஆண்டவரே, தாழ்மையான மனமும் நொறுங்கிய உள்ளமும் கொண்ட எங்களை ஏற்றருளும். ஆண்டவராகிய இறைவனே, நாங்கள் இன்று உமது திருமுன் ஒப்புக்கொடுக்கும் பலி உமக்கு உகந்தது ஆவதாக” என்று தாழ்ந்த குரலில் செபிக்கிறார். ஆனால் இச்செபம் பன்மையில் இருப்பதால் எல்லா மக்களுக்கும் கேட்கும்படி சப்தமாகத் தெளிவான குரலில் சொல்லலாம் என்பது எமது கருத்து. இதை அருள்பணியாளரின் தனி செபம் என்பது சரியானதாகத் தோன்றவில்லை.

அருள்பணியாளர் கைகளைக் கழுவுதல் 

கைகழுவுதல், உடல் தூய்மை, ஆசார முழுக்கு ஆகியவற்றை ‘முன்னோர்’ பரம்பரை என யூத மக்கள் கருதினர். (காண்.  மத் 15 : 1,2,10 ‡ 20) கைகள் தூய்மையாவது போல் உள்ளமும் தூய்மையாக  வேண்டும் என்பதைக் குறிக்கும் விதத்தில், ஆண்டவரே, எனது குற்றம் நிங்க என்னை கழுவியருளும்; என் பயத்திலிருந்து என்னைத் தூய்மையாக்கும் என அருள்பணியாளர் சொல்லிக் கொண்டு தமது கைகளைக் கழுவுகிறார். வெளிப்படையாக செய்யும் கைகளைக் கழுவும் செயல் உள்ளத்தூய்மைக்கு அடையாளமாக இருக்கிறது (காண் எபி 10 : 22). இதைத்தான் அப்பொழுது சொல்லப்படும் செபம் உணர்த்துகிறது.

அருள்பணியாளர் தமது கைகளைக் கழுவுவதற்கு வேறு ஒரு விளக்கமும் கொடுக்கப்படுகிறது. அதாவது பலவித காணிக்கைப் பொருள்களைக் காணிக்கை பவனியின்போது அருள்பணியாளர் பெற்றதால், மாசுபட்ட கைகளின் கறையைப் போக்கவும் கைகள் கழுவப்படுகின்றன என்பது. அப்படியானால் இச்செயல் எப்போது இடம் பெற வேண்டும் என்ற ஒரு கேள்வி எழுகிறது. காணிக்கைகளை மக்களிடமிருந்து பெற்றவுடன், அப்ப ‡ இரசத்தை ஒப்புக்கொடுக்கும்முன் இச்செயல் நடந்தால் சரியாக இருக்கும் என்பது எமது கருத்து. மேலே குறிப்பிட்ட உள்ளத்தூய்மையைக் குறிக்கும் அடையாளம் கைகளைக் கழுவுவதில்  இருக்கிறது என்ற விளக்கம்கூட காணிக்கைகளைப் பெற்றபின் கைகளைக் கழுவுவதோடு ஒத்துப் போகும் என்பதும் எமது  கருத்து.

ஒப்புக்கொடுக்கப்பட்ட அப்ப இரசங்களுக்கு தூபம் காட்டுதல்

பாடல் திருப்பலிகளில் தூபம் பயன்படுத்துவது திருவழிபாட்டின் நீண்ட கால மரபு ஆகும். பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளிலும், பெருவிழாக்களிலும் பாடல் திருப்பலி நிகழ்த்தலாம். திருப்பலியில் நான்கு முறை தூபம் காட்டப்படுகிறது. முதல்முறை திருப்பலியின் தொடக்கத்தில் பலிபீடத்துக்கு வணக்கம் செலுத்தியபின் அருள்பணியாளர்  பலிபீடத்திற்கும், பாடுபட்ட சுரூபமுடைய சிலுவைக்கும் தூபம் காட்டுகிறார். இரண்டாவது முறையாக நற்செய்தி பறைசாற்றும் முன் வாசக நூலுக்குத் தூபம் காட்டப்படுகிறது. அப்ப இரசத்தைக் காணிக்கையாக்கிய பின், காணிக்கைகளுக்கும் பலி பீடத்திற்கும், பாடுபட்ட சிலுவைக்கும், அருள்பணியாளர்களுக்குத் தூபம் காட்டப்படுகிறது. எழுந்தேற்றத்தின்போது கிறிஸ்துவின் உடலாகவும், இரத்தமாகவும் மாறிய அப்பம் இரசக்கிண்ணத்திற்குத் தூபம் காட்டப்படுகிறது.

ஆனால் இச்செயலைச் செய்வதில் சில குறைபாடுகளைக் காணமுடிகிறது. பலிபீடம் கிறிஸ்துவுக்கு அடையாளமாக இருப்பதால் அதற்குத் தூபம் காட்டப்படுகிறது. ஆனால் பல முறைகளில் பீடத்திற்குத் தூபம் காட்டாமல் பீடத்தைச் சுற்றியுள்ள தரைக்கு  (Floor)   தூபம் காட்டப்படுவதைப் பார்க்கிறோம். இதற்குக் காரணம் கவனக்குறைவும், பீடத்தை சுற்றியுள்ள மலர் தொட்டிகளும் மெழுகுதிரி நிலை பேழைகளும் (ளீழிஐdயிe றீமிழிஐdவி) மற்றும் பீடத்திற்கு முன் வைக்கப்பட்டிருக்கும் காணிக்கைப் பொருள்களும் ஆகும். இக்குறையைத் தவிர்க்க வேண்டுமானால் அருள்பணியாளர்கள் கிறிஸ்துவை குறித்துக் காட்டுவது பலி பீடம் என்பதை உணரவேண்டும். அடுத்து பீடத்தைச்  சுற்றி தூபம் காட்டிக் கொண்டு வரும்போது இடையூர்களாக உள்ளப் பொருள்கள் அகற்றப்பட வேண்டும்.

அடுத்துவரும் முக்கியமான காரியம், எவ்வாறு தூபம் காட்ட வேண்டும் என்பது நற்கருணைக்கும், பாடுபட்ட சுரூபமுடைய சிலுவைக்கும் மூன்று மூன்று வீச்சுகளாக மும்முறை காட்டவேண்டும். அருள்பணியாளர்களுக்கு இரண்டு வீச்சுகளாக மூன்று முறையும், புனிதர்களின் சுரூபத்திற்கும். திருக்குழுமத்திற்கும்  ஒருவீச்சாக மூன்று முறையும் காட்டவேண்டும். திருப்பலிக்குத் தலைமைத் தாங்கி சடங்கை நிகழ்த்துபவருக்குத் தனியாக தூபம் காட்டவேண்டும். அதன்பின் அவரது வலது இடது புறம் இருக்கும் அருள்பணியாளர்களுக்குத் தனியாகவும் மற்ற கூட்டுப்பலி அருள்பணியாளர்களுக்குத் தனியாகவும் தூபம் காட்ட வேண்டும்.

காணிக்கை மீது மன்றாட்டு 

காணிக்கை மீது  மன்றாட்டைச் சொல்லுமுன் அருள்பணியாளர் ஒப்புக்கொடுக்கப்பட்ட காணிக்கைகளை, அதாவது அப்பத்தையும் இரசத்தையும் கிறிஸ்துவின் திருவுடலாகவும், திருஇரத்தமாகவும் மாற்றிடவும், அது கடவுளுக்கு உகந்தப் பலிபொருளாகவும் செபிக்க நம்பிக்கையாளர்களை பின்வரும் வார்த்தைகளினால் அழைக்கிறார் : “சகோதர சகோதரிகளே, என்னுடையதும் உங்களுடையதுமான இப்பலி எல்லாம்வல்ல தந்தையாகிய இறைவனுக்கு ஏற்றதாகும்படி மன்றாடுங்கள்”.

இதைச் சரியாக புரிந்துக் கொள்ளாமல் உயர் அதிகாரத்தில் இருக்கும் சிலரும், சில அருள்பணியாளர்களும் அன்றைய திருப்பலிக் கருத்துகளையும், வார்த்தைப்பாடு, ஜுபிலி விழாக்கள் கொண்டாடுபவர்களுக்காகவும் செபிக்க அழைக்கிறார்கள். இது தவறு. திருப்பலி அமைப்பின் அறியாமையின் வெளிபாடாகிறது.

இறுதியாக பீடத்தின்மீது காணிக்கையாக்கப்பட்டிருக்கும் பலிபொருளை ஏற்றுக்கொண்டு, கூடி வந்திருக்கும் நம்பிக்கையாளர்களுக்கு அருள், ஆசிர் வழங்கும்படி அருள்பணியாளர் செபிக்கிறார். இதோடு காணிக்கைகளை தயாரிக்கும் சடங்கு நிறைவு பெறுகிறது.                                                                                                                (தொடரும்)

உயிர்ப்புத் திருநிகழ்ச்சி சுட்டிக்காட்டும் பணித்தலைமை

உயிர்ப்புத் திருநிகழ்ச்சி சுட்டிக்காட்டும் பணித்தலைமை

அருள்பணி.அ.பிரான்சிஸ், 
பாபநாசம்

இயேசுவின் பாடுகள், மரணம், உயிர்ப்பு ஆகியவையே பாஸ்கா மறைபொருளாகும். “ மனிதா! மனந்திரும்பு ” என்று சொல்லி சாம்பலைப் பூசித் தொடங்கப்பட்ட தவக்காலம்,   ஆண்டவர் உயிர்த்தார். அல்லேலூயா என்று உயிர்ப்புக் கீதம் பாடி நிறைவுறுகின்றது. ஓசன்னா இசைத்து குருத்தோலை ஏந்தி ஆரம்பமாகும் புனித வாரத்தின் புனித வியாழன், புனித வெள்ளி, புனித சனி, உயிர்ப்பு ஞாயிறு ஆகிய நாள்களின் வழிபாடுகள் அனைத்தும் இயேசு ஆண்டவரின் பணித்தலைமையையே வெளிப்படுத்துகின்றன.

தொண்டு ஏற்பதற்கல்ல :

இயேசுவின் பிறப்பு, வளர்ப்பு, செயல்பாடுகள், போதனைகள், இறுதியில் அவரது பாடுகள், மரணம், உயிர்ப்பு போன்றவை அனைத்தும் இயேசுவின் பணித்தலைமையினை அடித்தளமாகக் கொண்டே அமைந்துள்ளன. இதனையே மானிட மகன்  “தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்குமே வந்தார்”   (மத் 20 : 28) எனத் தமது பணியினைத் தெளிவாக்குகின்றார்.


தமது பாடுகள், மரணம், உயிர்ப்பு  ஆகிய இவற்றில் இயேசு எதிர் கொண்ட அனுபவங்கள் :

விண்ணகத் தந்தையின் திருவுளம் தம்மில் நிறைவேறிடவே இயேசு உலகிற்கு வந்தார்.  “ நான் உண்பதற்குரிய உணவு ஒன்று உண்டு. என்னை அனுப்பியவரின் திருவுளத்தை நிறைவேற்றுவதும், அவர் கொடுத்த வேலையைச் செய்து முடிப்பதுமே என் உணவு” (யோ 4 : 32, 33) என்று கூறி அதனை எதிர்கொண்டும் செல்கின்றார்.

 வேதனையை உணவாக உண்டிட்ட   வேந்தன் :

பொதுவாக எந்த மனிதரும் வேதனையினை ஏற்க விரும்புவதில்லை. ஆனால் இயேசு தனது சுய விருப்பங்களை தந்தையின் விருப்பங்களுக்கு  ஒப்புவித்தார்  (மத் 26: 39 ‡ 42,44).   தனது  உணவாக வேதனைகளை  உண்டிட்ட வேளைகளில் அவர்  எதிர் கொண்ட கசப்பான அனுபவங்கள்  இதோ.....  

  1. காட்டிக் கொடுக்கப்பட்டார் :   மூன்றாண்டுகள் தன்னோடு உண்டு , உறங்கி வாழ்ந்த  யூதாஸ் இஸ்காரியோத்து என்பவனால் காட்டிக் கொடுக்கப்படுகின்றார்  (மத் 26 : 47 ‡50)  துரோகத்தில் எல்லாம் மாயேடும் துரோகம் நம்பிக்கைத் துரோகம். ரபி வாழ்க என்று கூறி முத்தமிட்டுக் காட்டிக் கொடுத்த துரோகம்.

2. தனித்து விடப்பட்டார் :   இயேசுவிடமிருந்து அனைத்து நன்மைகளையும் பெற்று வாழ்ந்த அவரின் சீடர்கள் அனைவரும் அவரை விட்டு விட்டுத் தப்பி ஓடுகின்றனர் (மத் 26 : 56)

3.மறுதலிக்கப் பட்டார் :    கோழி கூவும் முன் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய் (யோவா 13: 38 ) என்று முதன்மைச் சீடரின் செயலினை இயேசு  முன்னுரைக்கின்றார், இருப்பினும் நீயும் இம்மனிதனுடைய சீடருள் ஒருவன் தானே? என்று பேதுரு மறுதலிக்கின்றார்.

4. தண்டிக்கப்பட்டார் :    இயேசு குற்றம் அற்றவர் என நன்கு  உணர்ந்திருந்தும் கள்வானாகிய பரபாஸ்  என்பவனை பிலாத்து விடுவித்து இயேசுவைச் சிலுவையில் அறைந்து கொல்லும்படிக் கட்டளைப் பிறப்பிக்கின்றான் (மத் 27 : 15 ‡26)    இவ்வாறாகக் கொடுமையாகக் கொலைக்களத்தில் தண்டிக்கப்பட கையளிக்கின்றார்.

5. முள்முடி அணிவித்து ஏளனப் படுத்தப்படார் :     இவரின் ஆடைகள் களையப்பட்டு கருஞ்சிவப்பு அங்கி அணிவிக்கப்படுகிறது. முள்முடி பின்னித் தலையில் வைத்து அமிழ்த்தி காரித்துப்பி இச்சகனமான வார்த்தைகளைச் சொல்லி அவமானப் படுத்தப்பட்டாVர் (மாற்  15 : 16 ‡ 20) . 

 6. பாரமான சிலுவை சுமந்து கல்வாரி மலையில் தன்னையே அறைந்துகொள்கின்றார்  :
  பாரமான சிலுவை சுமந்து கொண்டு யயருசலேம் நகரத் தெருக்களில் நடந்து செல்கின்றார். தன்னையே உலக  மக்களின்   மீட்புக்காகச்,  சிலுவையில் அறைந்து கொல்ல  விட்டு விடுகின்றார் . அவமானத்தின் சாவு,  அவமானத்தின்  சிலுவை மரணம் உலகோரை மீட்டு இரட்சிக்கிறது.  (யோவா 19 : 17 ‡ 29)

7. சந்தேகத்துக்குட்படுத்தப்படுகின்றார் :    உயிர் பெற்று  எழுந்த பின்னரும் இவரின் சீடர்கள் இவர் உயிர்த்ததை நம்பவில்லை. குறிப்பாக தோமா ஆண்டவரின் காயங்களின்  தழும்புகளைப் பார்த்த பின்னரே  நம்புகின்றார் (யோவா 20 : 24 ‡29) இப்படியாக கடவுளின் திருவுளம் தன்னில் நிறைவேறிட வேதனைகளையே தனது உணவாக உட்கொள்கின்றார். மேற்சொல்லபட்ட பாடுகள்  மற்றும் உயிர்ப்பின் வரலாறு,  இயேசுவின் துன்புறும் ஊழியத் தன்மையினையே சுட்டுகின்றது.

பணித் தலைமையின் பண்புகள் :    உண்மைத் தொண்டன் பணிவுடையவனாகத் திகழ்வான். அவனிடம் கீழ்க்காணும் 9 பண்புகள்  நிறைந்திருக்கும். இதுவே துன்புற்று உயிர்த்த தலைவரின் பண்பு நலன்களாகும்
1. பலதரப்பட்ட கருத்துகளுக்கும் மதிப்பளித்தல்.
2. நம்பிக்கை கலாச்சாரத்தினை  உருவாக்குதல்.
3. தொண்டர்கள் மத்தியில் தலைமைத்துவப் பண்பினை வளர்த்தெடுத்தல்.
4. வாழ்க்கைப் பிரச்சினைகளை எதிர்க் கொள்ளத் தூண்டுதல்.
5. உற்சாகப் படுத்தி திறமைகளை வெளிக்கொணர்தல்.
6. ஆணையிடுவதை விட அரவணைப்போடு செயல்பட வைத்தல்.
7. நான் அல்ல. நீ மனப்பான்மை.
8. நீண்டகாலச் செயல்பாட்டினை நோக்குதல்.
9. அனைத்தையும் பணிவோடு செய்தல்.
மேற்கூறப்பட்டவையனைத்தும் பணித்தலைமை கொண்டிருப்போரின் பண்புகளாக  விவஷ்ஸ்ரீ rஷ்உஜுழிrd  என்னும் மனவியலாளர் அவர்களால் பகுக்கப்பட்டவையாகும்.

உயிர்ப்பினை வாழ்வாக்கும் பணித் தலைமை :
 மூன்றாண்டுகள் தனது இறையரசுப் பயணத்தின் வாழ்க்கைப் பட்டறையில் தன் சீடர்கள் அனைவரையும் பணித்தலைமைக் கொண்டு வாழவே பயிற்றுவித்தார், இவர்கள் தடம் மாறிய வேளைதனில் அவர்களைக் கண்டிக்கவும் செய்தார். தன்னைப் போன்றே,  வேதனை என்னும் வேள்வியில் இணைத்துக்கொண்டு  செயல்படுவோருக்கு தலைமையேற்கும் பண்பு உண்டெனச் சொல்கின்றார் (மாற்கு 10 : 35 - 45 )

 உயிர்ப்பினை வாழ்வாக்கும்  தலைமைத்துவம் :
  உலக, இந்திய, தமிழக அரசியல் களத்தில் ஆண்டான் - அடிமை , ஆள்வோர் ‡ ஆளப்படுவோர் என்னும் கொள்கையே தலைதூக்கி நிற்கிறது. இயேசு விரும்பும் தலைமைத்துவப் பண்பு என்பது திப 2: 42 -47இல் காணும் வாழ்க்கை முறையாகும். அங்கே கருத்தொருமைப்பாடு  இருந்தது. நட்புறவு நிலவியது. அப்பம் பிட்டு இறை வேண்டலில் மக்கள் நிலைத்திருந்தனர். எல்லாரும் எல்லாமும் பெற்று  - அங்கே இல்லாமை இல்லை என்ற  நிலையிருந்தது,  இது போன்ற தலைமைத்துவப்  பண்புக் கொண்டோரே  இன்று நமக்குத் தேவை.

தன்னெழுச்சி பெறும் தலைமை :   தமிழகத்தில் இந்த ஆண்டுத் தொடக்கத்திலிருந்தே பணித் தலைமை உயிர்ப்புத் தன்மை கொண்டு செயல்படுவதனைக் கண்டு மகிழ்கின்றோம்.
சவால்களைச்  சந்திக்க  தன்னெழுச்சியாக சென்னை மெரினாவில் மட்டுமல்லாது. தமிழகமெங்கும் ஒன்று 
கூடி இளைஞர் பட்டாளம் நடத்திய எழுச்சிமிகு போராட்டம்  இன்றும் ,  என்றும்  வரவேற்கத் தக்க ஒன்று. 2017 ஆம் ஆண்டு 
ஜனவரி  8 முதல் 23 வரை நடைபெற்ற இந்தப் போராட்டக்களத்தில் சமூக  வலைத்தளங்களின் பங்கேற்பு அதிகமாக இருந்தது. ஆனால் காவல் துறையினரின் காட்டுமிராண்டித் தாக்குதல் மூலம் அரசு தன்னைத் தரம் தாழ்த்திக் கொண்டது. 

2. ஹைட்ரோ கார்ப்பன் திட்டத்துக் கெதிரான போராட்டம்:   மத்திய , மாநில அரசு பன்னாட்டு  தொழிலபதிர்களிடம் கையூட்டுப் பெற்று  “ சோழ வளநாடு சோறுடைத்து”  என்னும் பழமொழியை மாற்றிப் பாலைவனமாக்கும் திட்டமே மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டமாகும், இதனை எதிர்த்து நெடுவாசல், கீழவாசல்  மற்றும் நல்லாண்டார் கொல்லையில் தன்னெழுச்சியாக மக்களால் நடத்தப்படும் போராட்டம்  இயேசுவின் உயிர்ப்பு செயல்பாடுகளில் ஒன்றே.
3. இலங்கை கடற்படையின் துப்பாக்கிச் சூட்டினை எதிர்த்து நடத்தப்படும்  போராட்டங்கள்:    மார்ச் 7 ஆம் தேதி தனுஸ்கோடி அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள்,  இலங்கை கடற்படையால் நடத்தப்பட்ட   துப்பாக்கிச்  சூட்டினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர், பிரிட்ஜோ என்னும் 22 வயது  இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.  ஒருவர் உயிருக்குப்      போராடி வருகின்றார். இந்த அநீதிமிக்க  அக்கிரமச் செயல்பாட்டினை எதிர்த்து போராட்டம் தொடர்கிறது. இவையனைத்தும் உயிர்த்த ஆண்டவரின் பணித்தலைமையைத்  தேடுவோரின் செயல்பாடுகளே. 

   ஆண்டவர் ஒடுக்கப்பட்டோருக்கான நீதியை நிலை நாட்டுகின்றார், பசித்திருப்போர்க்கு உணவளிக்கின்றார்;  சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கின்றார்  - திருப்பாடல்   146 : 7.
 சிலுவையின்றி உயிர்ப்பு இல்லை.                            பணித்தலைமையே இயேசுவின் உயிர்ப்பு வாழ்வு.
உயிர்ப்பினை வாழ்வாக்குவோம்......


உயிர்ப்பு ஆன்மீகம்

உயிர்ப்பு ஆன்மீகம்

 இயேசுவின் உயிர்ப்பை ஆன்மீக அனுபவமாகத்தான் நற்செய்திகள் விவரிக்கின்றன. வாரத்தின் முதல்நாள் விடியற்காலையில் பெண்கள் சந்தித்தது காலியான கல்லறை. பிறகு உயிர்த்த இயேசுவின் காட்சிகளாக இடம் பெறுகின்றன. அன்னை தெரசா கூறுவார்,   “இயேசுவின் உயிர்ப்பு அனுபவத்தை மறக்கும் போதுதான் வாழ்க்கைத் துன்பங்கள் பாரசுமையாக மாறுகின்றன” என்கிறார். ஆன்ட்ரு முரே என்பவர்  “இயேசுவின் இறப்பு தியாகத்தை மனதில் இருத்தி அனைத்தையும் செய்யும் போது, உயிர்த்த இயேசு நமக்காக அனைத்தையும் செய்வார்” என்கிறார். புதிய வாழ்வு, புதிய திருப்பம், புத்துணர்ச்சி ஆகியவை உயிர்ப்பு  வாழ்வின் மறுபெயர் எனலாம். 
                                      இயேசுவின் உயிர்ப்பை, உணர்வுடன் இணைந்துக் கொண்டாடத்தான் நாற்பது நாள்களின் தவக்காலம். அண்மையில் சில கிராமங்களில் வீடுகளை சந்தித்தேன். அரசு மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்  ஒருவருக்கு, அதே  மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவர், ஒரு மருந்தினை சோதனை முறையில் கொடுத்திருக்கிறார். அதனால் தோல் வியாதினால் பாதிக்கப்பட்டு  உடல் எரிச்சலுடன் படுத்த படுக்கையாய் இருக்கிறார். அவ்வியாதியிலிருந்து விடுதலை வேண்டுகிறார். மருத்துவரின் செயலால் வாழ்வை கசந்து வாழும்  அவர்,  உயிர்ப்பின்  அனுபவத்தை  எதிர் நோக்கியிருக்கிறார். 

   ஒரு அம்மையாருக்கு ஒரே மகன்  9 வயதில் வீட்டை விட்டு ஓடியவன். இருபத்தெட்டு ஆண்டுகள் ஆகியும் வீட்டிற்கு  வரவில்லை. செல்பேசியில் பேசுவான். நேரடியாக வரவில்லை. பெற்ற மகனை நேரில் பார்க்க தாய் ஆசைமேல் ஆசையாயிருக்கிறார். தனது மகன் நேரில் வரும் உயிர்ப்பு நிகழ்ச்சியை  எதிர் நோக்கி  இருக்கிறார். 
                                       

 துன்பங்களை ஏற்கும்போதுதான் உயிர்ப்பு மலர் அங்கு  மலர்கிறது. இயேசுவின் பிரச்சன்னத்தை ஆழ்ந்து  உணர்வதுதான் உயிர்ப்பின்  அனுபவம். “துன்பங்கள்  என்ற ஒளியின் மூலம்தான் ஞானம் நம்மில் நுழைகியது” என்கிறார் ஓர் அறிஞர்.          உயிர்த்த இயேசுவின் புதுமை அனுபவம் நம் அனைவருக்கும் விடியாலாக கிடைக்க வாழ்த்துகிறேன்.
                                          தமிழகத்தில் அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது.  தமிழகம் தன்னை வழிநடத்தும் நல்ல தலைவரை தேடிவருகிறது.  அநீதிகளுக்கு எதிராக  மக்கள் ஒன்றுதிரண்டு துணிவுடன் குரல் கொடுத்து வருவது நம்பிக்கையைத் தருகிறது.  மெரினா போராட்டத்திற்கு பிறகு நெடுவாசல் போராட்டம் தொடர்கிறது.  விழிப்புணர்வு தான் இயேசுவின் உயிர்ப்பின்  கனி.  

                                             சென்ற மார்ச் 11, சனிக்கிழமை, அன்னையின் அருட்சுடர் எழுத்தாளர் மற்றும் ஆசிரியர்குழுக் கூட்டம் நடந்தது. 20 பேர் அதில் கலந்துக் கொண்டனர். அன்னையின் அருட்சுடரின் வளர்ச்சிக்கான சில வழிகளை அவர்கள் முன் வைத்தனர்.  தற்போது  
அருட்சுடர் கண்டிருக்கும் வளர்ச்சியினைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தனர். இன்னும் அரசியல், பொருளாதாரம் சார்ந்த கட்டுரைகள் அன்னையின் அருட்சுடரில் இடம் பெறலாம் என்றனர்.  அன்னையின் அருட்சுடர்  பொருளாதார  தன் நிறைவு  பெற சந்தா தொகையை ரூ 130/‡ ஆக உயர்த்தலாம்  என்ற கருத்தையும்  முன் வைத்தனர்.  சந்தா தொகை அனுப்பாதவர்களுக்கு நினைவூட்டல்   அனுப்பப்பட்டுள்ளது. நீங்கள் காட்டும் ஆதரவிற்கு நன்றி! தொடர்ந்து புதிய வாசகர்களை அறிமுகப்படுத்துவதாலும், விளம்பரங்கள் பெற்று தருவதாலும் உதவலாம். அன்னையின் அருட்சுடரின் பொன்விழாவினை எளிமையாக கொண்டாடவும் திட்டம் தீட்டி வருகிறோம். கவிதை போட்டி, கட்டுரைகள் போட்டிகள் நடத்தவும் திட்டம் உள்ளது. மீண்டும் உயிர்த்த  இயேசுவின் மகிழ்வின் வாழ்த்துகள்....              

Sunday 19 March 2017

தவக்காலம் நான்காம் ஞாயிறு

தவக்காலம் நான்காம் ஞாயிறு    
   
 26 - 03 - 2017
1 சாமு 16 : 16, 6 - 7, 10 - 13;     எபே 5 : 8 - 14;    யோவா 9 : 1 - 41

ஓர் ஆசிரியர் எழுது பலகையில் கீழ்க்கண்டவாறு எழுதி மாணவர்களை அதனைப் பற்றி விமர்சனம் செய்ய சொன்னார். அவர் எழுதியது இதுதான். 1 $ 9 = 7; 2 $ 9 = 18; 3 $ 9 = 27; 4 $ 9 = 36. மாணவர்கள் சரியாக உற்று நோக்கி, முதல் பெருக்கல் 1 $ 9 = 7 என்பது தவறு என்றார்கள். மாணவர்களைப் பார்த்து, ‘நான் வேண்டுமென்றேதான் அவ்வாறு எழுதினேன். 4 பெருக்கல் சரியாக இருந்தது. ஒன்று தவறாக இருந்தது. இந்த தவறான எண்தான் நம் கண்களுக்குப் பட்டது. அதே போல நாம் பல நன்மைகளை செய்தாலும் நம்மிடமுள்ள சிறுகுறையைதான் மனிதர் பெரிதுபடுத்தி ¼ பசுவர். எனவே, மற்றவர்கள் கூறும் வீண் குறைபாடுகளைப் பற்றி கவலைப்படாமல் நம் பயணத்தை தொடரவேண்டும்’ என்றார்.

தவக்காலத்தின் நான்காம் ஞாயிறாகிய இன்று, பிறவியிலேயே பார்வையற்ற ஒருவரை இயேசு பார்வை பெற செய்கிறார். பார்வை தரும் நிகழ்ச்சி ஏழு வசனங்களில் மட்டும் விளக்கப்படுகிறது. மற்ற 34 வசனங்களில், அவர் பார்வை பெற்றதைப் பற்றிய விவாதம் நடக்கிறது. பரிசேயரும், யூதரும் இயேசு குணப்படுத்திய செயலில் குறை காண்கிறார்கள். இயேசு இவ்வாறு செய்தது ஓய்வு நாளன்று. ஓய்வு நாளின் மரபினை பின்பற்றாதவர் ஒரு பாவி (யோவா 9 : 24).  அவரால் அரும் அடையாளங்களை செய்ய முடியாது என்றனர்.

ஆனால் பார்வை பெற்றவர், நேர்மையின் கிளையை கெட்டியாக பிடித்துக் கொண்டு, இயேசுவுக்கு சாட்சியம் கூறுகிறார். இந்நிகழ்ச்சியின் கதாநாயகன் பார்வை யற்றவர்தான். 13 வசனங்கள் இவரைப் பற்றித்தான் விவரிக்கின்றன. விழிகளின் ஒளியை மட்டும் பெற்றுக் கொள்ளவில்லை. உள்ளொளியைப் பெற்றிருக்கிறார். பரிசேயரும், யூதரும் இரண்டுமுறை பார்வையற்றவரிடம் விசாரணை நடத்துகின்றனர். பார்வை பெற்றோரின் பெற்றோர்களிடமும் விசாரணை  நடத்துகின்றனர். பார்வை பெற்றவரின் பெற்றோர், தாங்கள் பாதிக்கப்படாமல், ‘நடந்ததை அவனே சொல்லட்டும்’ என்று யூதர்களுக்கு அஞ்சி நடுங்குகின்றனர். ஆனால் பார்வை பெற்றவர், இயேசு, ‘ஓர் இறைவாக்கினர்’ (யோவா 9 : 17) என்றும், ‘கடவுளிடமிருந்து வந்தவர்’ என்றும், ‘இறைபற்றுடையராய் கடவுளின் திருவுளப்படி நடப்பவர்’ (யோவா 9 : 31 ‡ 33) என்று உறுதியாக சான்று பகர்ந்தார்.

முதல் வாசகத்தில, சாமுவேல் இறைவாக்கினர், தாவீதுதான் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்று கண்டு கொண்டு அவரை இஸ்ரயேலின் அரசராக திருப்பொழிவு செய்தார். ‘மனிதர் முகத்தை பார்க்கின்றனர். ஆண்டவரோ அகத்தைப் பார்க்கிறார்’ என்ற அழகிய வசனம் இன்றைய முதல் வாசகத்தில் வருகிறது (1 சாமு 16 : 7). இன்றைய இரண்டாம் வாசகத்தில், பவுலடிகளார், ‘ஒரு காலத்தில் இருளாய் இருந்த நீங்கள் இப்போது ஆண்டவரோடு இணைந்து ஒளியாய் இருக்கிறீர்கள். ஆகவே, ஒளி பெற்ற மக்களாக வாழுங்கள் என்கிறார் (எபே 3 : 8).

தவக்காலத்தில்முதல் ஞாயிறு அன்று சோதனைகளை வெற்றி கொள்ளுதல் என்ற கருத்து நம்முன் வைக்கப்பட்டது. இரண்டாம் ஞாயிறு, ‘உருமாற்றம் பெறுகிறோம்’ என்ற கருத்து தெரிவிக்கப்பட்டது. மூன்றாம் வாரம் சமாரியப் பெண்ணை இயேசு சந்தித்தது  போல நம்மையும் இறைவன் சந்திக்கிறார் என்ற சிந்தனை வழங்கப்பட்டது. இந்த நான்காம் வாரம், பிறவியில் பார்வையற்றவர், இயேசுவால் பார்வை பெற்ற பிறகு இயேசுவுக்கு சாட்சியம் அளித்தது போல், இயேசு நமக்கு வழங்கியிருக்கும் நன்மைகளை கண்டு கொண்டு அவருக்கு துணிந்து சாட்சியம் அளித்து வாழ வேண்டும் என்ற கருத்து நம் கண்முன் வைக்கப்படுகிறது.



நம்மிடம் உள்ள நன்மைகளை எளிதாக எடுத்துக் கொள்கிறோம்.

தவக்காலம் மூன்றாம் ஞாயிறு

தவக்காலம் மூன்றாம் ஞாயிறு                   
     19 - 03 - 2017
விப 17 : 3 -7;   உரோ 5 : 1 - 2, 5 - 8;     யோவா 4 : 5 - 42

நீரைத் தருகிறார் இறைவன்,  உணவை பெறுகிறார் மனிதர்

“நீரின்றி அமையாது  உலகம்” என்றார் வள்ளுவர். மழை பொய்த்தது  என்றால்  உலகில் மாண்புறு பண்புகளும் மறைந்துவிடும் என்றும் விளக்குகிறார் வள்ளுவர்.

“நீரின்றி அமையாது  உலகெனின் யார்யார்க்கும் 
வானின்று அமையாது  ஒழுக்கு” (குறள் 20) 

தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு இன்று, சமாரிய பெண்ணுடன் இயேசு நடத்திய உரையாடலில், இறைவன் நீரான நம்பிக்கையை அவரே நமக்குத் தருகிறார் என்ற கருத்தினை எடுத்துக் கூறுகிறார். நீர் வாழ்வின் ஆதாரம். நம் உடலின் பெரும்பகுதி நீரால் ஆனது என்கிறது அறிவியல். பழைய ஏற்பாட்டு பின்னனியில், நீர் பெரிய அடையாள பொருளாக விளங்கியது. கும்ரான் முனிவர்கள், தூய்மைப்படுத்தும் கடவுளின் ஆவியானவருக்கும், இறைவனுக்கும் நீரினை அடையாளமாகக் கருதினர். எனவேதான் யோவா 3 : 5இல் ‘ஒருவர் தண்ணீராலும், தூய ஆவியாலும் பிறந்தாலன்றி இறையாட்சிக்கு உட்பட முடியாது’ என்று, நீர் தூய ஆவியாரோடு இணைத்துக் கூறப்படுகிறது. எரே 2 : 13இல், ‘பொங்கி வழிந்தோடும் நீருற்றாகிய என்னை புறக்கணித்தார்கள்’ என்று இறைவன் நீருற்றுடன் ஒப்பிடப்படுகிறார். திப 36 : 8ம் இறைவனை போற்றி  ‘உமது  பேரின்ப நீரோடையில் அவர்கள் தாகத்தை தணிக்கிறீர்’ என்று புகழ்கிறது.

இயேசு சமாரிய பெண்ணிடம் தானே முன்வந்து, குடிக்க தண்ணீர் கேட்டு, ‘நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கும் எவருக்கும் என்றுமே தாகம் எடுக்காது. நான் கொடுக்கும் தண்ணீர் அதைக் குடிப்பவருக்குள் பொங்கி எழும் ஊற்றாக மாறி நிலைவாழ்வு அளிக்கும்’ (யோவா 4 : 14) என்று வாழ்வு தரும் தண்ணீரை தருபவர் இயேசு என்று விளக்குகிறார். தண்ணீர் என்பது  இறைவனை குறிக்கும் அடையாளப் பொருள் என்ற பழைய ஏற்பாட்டு பின்னனியில், இயேசு இறைவனை தருபவர், வாழ்வின் சோகங்களை போக்கி நிறைவை தருபவர் என்று இங்கு விளக்கப்படுகிறது. இயேசு, ஒதுக்கப்பட்ட பிரிவை சேர்ந்தவராக கருதப்பட்ட சமாரிய பெண்ணுடன் நண்பகல் வேளையில்  உரையாடுகிறார். உணவு வாங்க சென்ற சீடர்கள் அங்கு திரும்புகிறார்கள். அவர்களுடன் உரையாடகின்றபோது, மனிதரின் உண்மையான உணவு எது? என்பதை விளக்குகின்றார் இயேசு. ‘என்னை அனுப்பியவரின் திருவுளத்தை நிறைவேற்றுவதும், அவர் கொடுத்த வேலையை செய்து முடிப்பதுமே என் உணவு’ என்கிறார் இயேசு (யோவா 4 : 35).

ஆக இன்றைய நற்செய்தி பகுதியில் நிர், உணவு என்ற மனிதரின் அடிப்படை தேவைகளை வைத்து இறை உறவு  என்ற, இறை அனுபவத்தை விளக்குகிறார் இயேசு. இறைவன் தானே முன்வந்து மனிதருடன் உறவு கொள்கிறார் (சமாரிய பெண் ‡ இயேசு உரையாடல்). அதே நேரத்தில் மனிதரும் இறைவனுடன் உறவு கொள்ள, அவர்களும் மன்வர வேண்டும். இறைவனின் திருவுளத்தை அறிந்து அதனை நிறைவேற்றுதல், தனக்குக் கொடுக்கப்பட்ட பணிகளை நிறைவாக செய்தல் ஆகியவை வழியாக மனிதர் இறைவனை உணவாக பெறுவர்.

முதல் வாசகத்தில், இஸ்ரயேல் மக்களுக்கு பாலைவனத்தில், பாறையிலிருந்து தண்ணீர் வழியச் செய்து அவர்களின் தாகம் போக்கம் நிகழ்ச்சியை வாசிக்கக் கேட்டோம். இரண்டாம் வாசகத்தில், பவுல் அடிகளார், ‘குறித்தக் காலம் வந்ததும் கிறிஸ்து நமக்காக தம் உயிரைக் கொடுத்தார்’ என்ற இறை அன்பை குறிப்பிடுகிறார் (உரோ 5 : 6).
‘தியாகமுள்ள செயல்களுடன் இணைந்து செய்யப்படும் செபங்கள்தான், இறைவன்முன் விரைவாக சென்றடையும்’ (தூய சிப்ரியன்).

‘மக்களோடு, இணைந்து வாழும்போது அவர்களின் பிரச்சனைகளைத் தெரிந்துக் கொள்ளலாம். இறைவனடன் இணைந்து வாழும்போதுதான் அப்பிரச்சனைகளைத் தீர்க்கும் வழிகள் தெரியும்’ (பீட்டர் போர்சித்).

ஒரு முனிவரிடம், வாடகை கார் ஓட்டுபவர் சென்று பகிர்ந்துக் கொண்டார். ‘என் பணியினால், பொது வழிபாட்டு நேரங்களில் ஆலயத்திற்கு சென்று  இறைவனை வழிபட முடியவில்லை’ என்றார். முனிவர், ‘ஏழைகளை ஏற்றி செல்ல ஏதாவது சலுகை தருவீர்களா?’ என்றார். வண்டி ஓட்டுனர், ‘ஏழைகள் என்றால் கட்டணம் வாங்குவதில்லை’ என்றார். முனிவர், ‘அப்படியயன்றால் உன் பணியை, வழிபாட்டில் பக்தியுடன் பங்குபெறுவது போல. ஆர்வமுடன்  தொடர்ந்து செய்’ என்றார். 

‘தேடி வருகிறார் இறைவன், நாடி செய்க 


உம் பணிகளை’.

தவக்காலம் இரண்டாம் ஞாயிறு

தவக்காலம் இரண்டாம் ஞாயிறு           
    12 - 03 - 2017

தொ நூ 12 : 1 - 4, 2 திமொ 1 : 8 - 10, மத் 17 : 1 - 9

ஒளிமயமான இறைபிரசன்னம்

“ஒளி படைத்த கண்ணினாய்” என்றார் பாரதி. “ஒளி மயமான எதிர்காலம்” என்றார் கண்ணதாசன். இயேசு ஒளி வடிவமாக, தான் தேர்ந்தெடுத்த மூன்று சீடர்கள் முன் தோன்றுகிறார். இயேசு தனக்கு வரப்போகிற பாடுகளை அறிவிக்கிறார். பேதுரு, “ஆண்டவரே, இது வேண்டாம். இப்படி  உமக்கு நடக்கவே கூடாது” என்றார் (மத் 16 : 21 ‡ 22). இச்சூழலில்தான், இயேசு ஒளிமயமான தோற்ற மாறுதலை மூன்று சீடர்கள்முன் காண்பிக்கிறார்.

“ஆறு நாள்களுக்குப் பின்” என்று இந்நிகழ்வு விளக்கப்படுகிறது. விப 24 : 13 - 16இல் ஆறு நாட்களுக்குப் பின், சீனாய் மலையில் மோசேவுக்கு இறைவன் காட்சி தருவதைப் பார்க்கிறோம். மோசே சீனாய் மலையிலிருந்து உடன்படிக்கை பலகைகளை தாங்கிக் கொண்டு வரும்போது, மோசேயின் முகத்தோற்றம் ஒளிமயமாய் இருந்தது என்ற குறிப்பையும் விப 34 : 30இல் பார்க்கிறோம். இயேசுவின் தோற்ற மாற்றத்திலும், இயேசுவின் முகம் ‘கதிரவனைப் போல் ஒளிர்ந்தது’ என்று விளக்கப்பட்டுள்ளது. மேலும் ‘ஒளிமயமான மேகம்’ ஒன்று அவர்கள் மேல் நிழலிட்டது என்றும் இயேசுவின் தோற்ற மாற்றத்தில் குறிப்பிடப்படுகிறது.
ஆக, சீனாய் மலையில் நடந்தது போல, இறை பிரசன்னத்தை சீடர்கள் உணர்ந்த ஒரு நிகழ்ச்சியாக இது விளங்குகிறது. முதல் வாசகத்தில், ஆபிரகாம், இறைவனின் வார்த்தைகளுக்குப் பணிந்து, கடவுள் காண்பிக்கும் நாட்டிற்கு செல்லும்போது, இறைவனின் ஆசீரின் திருத்தலமாக ஆபிரகாம் மாற்றப்படுவார் என்ற வாக்குறுதி கொடுக்கப்படுகிறது.

இரண்டாம் வாசகத்தில் பவுல் அடிகளார், ‘கிறிஸ்து இயேசு வழியாக நமக்கு அளிக்கப்பட்ட அருளின்படி நம்மை மீட்டுள்ளார். நம் செயல்களை முன்னிட்டு அல்ல’ என்று விளக்குகிறார். அதாவது இறைவனே முன்னின்று நம்முடன் உறவு கொள்கிறார் என்று விளக்குகிறார்.  எனவே இறை பிரசன்னத்தை உணர்கின்ற அனுபவநிலையை இன்றைய வாசகங்கள் நம் கண்முன் வைக்கின்றன. இறைவன் கட்டளைகளை வாழ்வதன் வழியாக இறைவனும் முன்வந்து நம்முடன் உறவு கொள்கிறார். இது ஒளிமயமான அனுபவமாகிறது.

அண்மையில் இரயிலில் பயணம் செய்தேன். சரியான கூட்டம். எனவே நின்று கொண்டு பயணம் செய்தேன். ஒருவர் அமரும் இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவர், என்னைஅழைத்து அவருடன் அமர்ந்து கொள்ள அழைத்தார்.  மற்ற இருக்கைகளில் இடம் இருந்தும் மற்றவர்கள் இடம் தரவில்லை. இவர் இப்படி அழைத்து அமர வைத்தது ஓர் இறை அனுபவமாகவே கருதினேன். அவரை போன்று நாமும் மற்றவர்களுக்கு முன்வந்து  உதவவேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது.
இத்தவக்காலத்தில், இறைவன் நமக்குக் கொடுத்திருக்கும் கடமைகள் என்ன? என்று கண் விரித்துப் பார்ப்போம். கடமைகளை செய்யும்போது  நிச்சயம் ஒளிமயமான இறைவனின் பிரசன்னத்தை அனுபவமாக பெறுவோம்.



Ads Inside Post