Pages - Menu

Tuesday 29 November 2016

திருவருகைக் காலம் இரண்டாம் ஞாயிறு

திருவருகைக் காலம் இரண்டாம் ஞாயிறு  
         
  02 - 12 - 2016
எசா 11 : 1 - 10;      உரோ 15 : 4 - 9;         மத் 3 : 1 - 12

மனமாற்றம் என்ற மாய விளக்கு

பவுல் அடிகளாரின் மனமாற்றத்தைக் குறிப்பிட, ‘மாற்றம் தரும் ஆற்றல்’ என்று ஒருவர் விளக்கினார். வளர்ச்சியில் இடம்பெறுவது மாற்றம். தாவரங்கள்,  உயிரினங்கள் வளர்ச்சியில் உருவத்தின் மாற்றத்தில் காணலாம். மனிதரின் வளர்ச்சியில், மனிதரின் மனம், மைய இடத்தைப் பெறுகிறது.
திருவருகைக் காலத்தின் இரண்டாம் ஞாயிறன்று, திருவழீபாடு திருமுழுக்கு யோவானை நம் கண்முன் வைக்கிறது. திருமுழுக்கு யோவான், ‘சின்ன இயேசு’ என்று துவக்கத் திருச்சபையில் அழைக்கப்பட்டார். இயேசுவின் போதனையின் மையக் கருத்தான மனமாற்றம் என்ற கருத்தையே திருமுழுக்கு யோவான் வலியுறுத்தி போதித்தார். இயேசு அளித்த திருமுழுக்கினையே, மனமாற்றத்தின் அடையான செயலாக நிகழ்த்தினார். மனம் மாறாதவர்களுக்கு தீவினைகள், தண்டனைகள் காத்திருக்கின்றன என்றும் இயேசுவை போல வலியுறுத்தினார்.
‘மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம், இனநலம்
எல்லா புகழும் தரும்’ (குறள் 457)
ஒருவரின் உயர்வு ஒருவரின் மனத்தை சார்ந்தது என்கிறார் வள்ளுவர்.
மனிதர் தன்னுள் இருக்கிற தீய நாட்டங்களை திசை திருப்பும்போது, இங்கே இறைவன் செயல்படுகிறார். இறைவனின் வல்ல செயல் அங்கு நடைபெறுகிறது. மனிதரிடம் நடக்கும் போராட்டம், வன்செயல்கள் மறைகின்றன. இதனைத்தான் முதல் வாசகம் விளக்குகிறது. ஆண்டவரின் ஆவி அவர்மேல் தங்கியிருக்கும்படி ஞானம், மெய்யுணர்வு, அறிவுரைத் திறன், ஆற்றல், நுண்மதி, ஆண்டவரைப் பற்றிய அச்ச  உணர்வு ஆகிய எழில் மிகுப் பண்புகளை ஆவியானவர், மனமாறியவருக்கு வழங்குகிறார். அச்சூழலில் பகைமையயல்லாம் அழிகின்றன. மனம்மாறியவர் மற்றவருக்கு முன்னோடியாகத் திகழ்வர்.
இரண்டாம் வாசகத்தில் பவுலடிகளார், கிறிஸ்து, விருத்தசேதனம் செய்துக் கொண்டவர்களுக்கு தொண்டரானார் என்றும் மக்கள் இறைவனை போற்றி புகழும் பண்பில் வளரவே, கிறிஸ்து தொண்டரானார் என்றும் கூறுகிறார்.
மனிதரிடத்தில் பிடிவாத  எண்ணம், பாத்திரத்தில் படிந்த பாசானம் போல பற்றி புடித்து நிற்கிறது. குடும்பங்களை அழிக்கும் குடிபழக்கத்தை விட்டுவிட மனஉறுதி இல்லாது தமிழ்நாட்டில் கோடிகணக்கானோர் உள்ளனர். பாகப்பிரிவினை, சொத்து பிரிவினை ஆகியவைகளால் பகைமையில் மூழ்கி இருப்பவர்கள், விட்டுக் கொடுத்து ஒற்றுமையாக வாழ முன்வராதவர் ஏராளம். பொருள் பைத்தியம்எல்லோரையும் ஆட்டிப் படைக்கிறது. ஓர் அரசு கடைநிலை ஊழியர். அவருக்கு ஒரே மகன். நாம் கஷ்டபட்டது போல் நம் பிள்ளை கஷ்டப்படக்கூடாது என்று செல்லமாக வளர்த்தார். உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் போதே பெரிய பைக் வேண்டுமென்று பையன் கேட்டு வாங்கினான். இப்போது கல்லூரியில் சேர்க்க வேண்டும். எனக்கு கார் வாங்கி தரவேண்டும் என்று அடம்பிடித்தான். ‘நம்மால் இது முடியாதப்பா. நம் வருமானத்தில் இதை வாங்கி நாம் நிர்வகிக்க முடியாது’ என்றனர் பெற்றோர். இடையில் தீய நண்பர்களுடன் சேர்ந்து போதைப் பொருளை பயன்படுத்தினான் பையன். பெற்றோர் கார் வாங்கி தராத நிலையில், ஒரு நாள் மது அருந்தி வந்து ‘கார் வாங்கி தரமுடியாத நீ என்னை ஏன் பெத்த?’என்று வீட்டீலுள்ள தொலைக்காட்சி பெட்டி, மற்ற கண்ணாடி பொருள்களை உடைத்தான்.
பையனை எப்படி மனமாற்றுவது? தந்தை ஒரு முடிவெடுத்தார். என் அலுவலில் யாரிடமும் லஞ்சம் வாங்க மாட்டேன், மற்றவருக்கு உதவி செய்வேன், வழிபாட்டு நிகழ்ச்சிகளில் பங்குக் கொள்வேன் என்று முடிவெடுத்து செயல்பட்டார். புதுமையாக மகனின் மனம் மாறியது. ஆர்வமாக கல்லூரி சென்று படித்து வருகிறான்.
திருவருகைக் காலம் மனதைத் திருத்தும் காலம். நல்லவராகிய இறைவனிடம் திரும்பும் காலம்.


திருப்பலி விளக்கம் 11. வார்த்தை வழிபாடு (3)

திருப்பலி விளக்கம்

11. வார்த்தை வழிபாடு (3)

அருள்பணி. எஸ். அருள்சாமி, 
பெத்தானி இல்லம், கும்பகோணம்

இதுவரை ஞாயிற்றுகிழமை வாசகங்கள் அமைப்புப் பற்றி விளக்கினோம். இப்பொழுது வார நாள் வாசகங்கள் பற்றியும், பெருவிழாக்கள், விழா நாள் வாசகங்கள் பற்றியும் மற்றும் புனிதர்களுடைய நினைவு நாள் வாசகங்கள் பற்றியும் விளக்குவோம்.

வார நாள் வாசகங்கள் :

வார நாள் வாசகங்கள் இரண்டு ஆண்டு கால வட்டத்தில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. ஒற்றைபடை ஆண்டை முதல் ஆண்டு என்றும், இரட்டைப்படை ஆண்டை இரண்டாவது ஆண்டு என்றும் கணித்து அதற்கு ஏற்றார் போல் முதலாவது அல்லது இரண்டாவது ஆண்டு வாசகங்கள் தேர்வு செய்யப்பட வேண்டும்.

ஏன் வார நாள் வாசகங்கள் இரண்டு ஆண்டு கால வட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளன. மூன்று ஆண்டு கால வட்டத்தில் அமைக்கப்படவில்லை என்ற கேள்வி எழுவது இயல்பானதுதான். காரணம், வார நாள்கள் ஞாயிற்றுக்கிழமைகளை விட எண்ணிக்கையில் அதிகமுள்ளன. அவை 7:1 என்ற விகிதத்தில் இருக்கின்றன. எனவே இரண்டு ஆண்டு கால வட்டத்திலேயே எண்ணிக்கையில் அதிகமான வாசகங்கள் பெற வாய்ப்பு உள்ளது. வார நாள்களில் இரு வாசகங்கள் மட்டுமே (முதல் வாசகம் + நற்செய்தி வாசகம்) இடம் பெறுவது கவனிக்க வேண்டியது. தவறாமல் தினமும் திருப்பலியில் பங்கு பெற்றால் ஒருமுறை விவிலியம் முழுவதையும் கேட்க முடியும் என்பது திருஅவையின் கருத்து.

வாரநாள் வாசகங்களும் திருவழிபாட்டு ஆண்டின் கணிப்பையே பின்பற்றும். உதாரணமாக 2016ஆம் ஆண்டின் வாரநாள் வாசகம் இரட்டைப்படை ஆண்டுக்குரியவையாகும். இது 2015 நவம்பர் இறுதியில் திருவருகை காலத்தின் முதல் வாரம்  திங்கள் கிழமையே தொடங்கிவிட்டது. இவ்வாண்டு கிறிஸ்து அரசர் பெருவிழாவுக்கு பின்வரும் சனிக்கிழமை வரை இது நீடித்தது.

பெருவிழாவுக்கான வாசகங்கள் :

ஞாயிற்றுக்கிழமையைத் தவிர்த்து மற்ற வாரநாள்களில் பெருவிழாக்கள் வர நேரிட்டால் அன்று ஞாயிற்றுக்கிழமை போல் மூன்று வாசகங்கள் இடம்பெறும். ஞாயிற்றுக்கிழமைக்குரிய வாசகங்களின் விதிமுறையே இந்நாளில் பின்பற்றப்படும். அதாவது முதல் வாசகம் பழைய ஏற்Vட்டிலிருந்தும், இரண்டாவது வாசகம் புதிய ஏற்பாட்டு மடல்களில் இருந்தும், மூன்றாவது வாசகம் தகுதியான நற்செய்திகளிலிருந்தும் தேர்வு செய்யப்படும். புனித வாரம் தவிர்த்து மற்ற தவக்கால வார நாள்களில் இப்பெருவிழா வர நேரிட்டாலும் அன்று இரண்டாவது வாசகத்திற்குப் பின் அல்லேலூயாவும், அதனுடைய வசனமும் ஆர்ப்பரிக்கப்படும். எடுத்துக்காட்டாக மார்ச் 19 புனித யோசேப்பு, கன்னி மரியாவின் கணவர் அல்லது மார்ச் 25 ஆண்டவர் பிறப்பின் அறிவிப்பு.

ஞாயிற்றுக் கிழமையில்லாமல் மற்ற நாள்களில் நேரிடக்கூடிய பெருவிழாக்கள் : ஜுன் 24 - புனித திருமுழுக்கு யோவானின் பிறப்பு, இயேசுவின் திருவுடல், திருஇரத்தம் பெருவிழா இந்தியாவில் ஞாயிற்றுக்கிழமையில் கொண்டாடப்படுவதால் அதற்கு அடுத்த வெள்ளிக்கிழமை கொண்டாடப்படும் திரு இருதய ஆண்டவரின் பெருவிழா, புனிதர்கள் பேதுரு, பவுல் - திருத்தூதர்கள் பெருவிழா, ஜுலை 3 புனித தோமா - திருத்தூதர் (இந்தியா) பெருவிழா, ஆகஸ்ட் 15 புனித கன்னி மரியாவின் விண்ணேற்பு பெருவிழா, நவம்பர் 1 புனிதர் அனைவர் பெருவிழா, டிசம்பர் 3 புனித ஃப்ரான்சிஸ் சவேரியார் (இந்தியா) பெருவிழா டிசம்பர் 8 புனித கன்னி மரியாவின் அமல உற்பவம் பெருவிழா ஆகியவை.

விழாக்களுக்கான வாசகங்கள் :

இயேசு ஆண்டவர், கன்னி மரியா, புனித திருத்தூதர்கள் மற்றும் சில புனிதர்கள் இவர்களுடைய திருநாள் விழாக்களாகக் கொண்டாடப்படுகின்றன. இவற்றிக்கெல்லாம் முதல் வாசகம், நற்செய்தி வாசகம் என இரண்டு வாசகங்கள் மட்டும் உள்ளன. இதற்கு விதிவிலக்காக பின்வரும் நான்கு விழாக்களுக்கு மூன்று வாசகங்கள் வாசிக்கப்படும். அவை: ஆண்டவரைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் விழா (பெப்ருவரி 2), ஆண்டவரின் தோற்ற மாற்றம் விழா (ஆகஸ்ட் 6), திருச்சிலுவை மகிமை விழா (செப்டம்பர் 14), இலாத்தரைன் பேராலய நேர்ந்தளிப்பு (நவம்பர் 9).

மற்ற புனிதர்களின் நினைவு நாள் வாசகங்கள் :

பொதுவாக புனிதர்களின் நினைவு திருப்பலியில் கொண்டாடப்படும்போது ஆண்டின் வார நாள்களின் வாசகமே வாசிக்கப்பட வேண்டும். அவற்றை மாற்றக்கூடாது. இந்த ஒழுங்குமுறைக்கு விதிவிலக்குகள் உண்டு. ஒன்று ஒரு சிலர் முக்கிய நினைவு நாள்களில், எடுத்துக்காட்டாக புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள் நினைவு (ஆகஸ்ட் 29), தொழிலாளர் புனித யோசேப்பு நினைவு (மே 1), கன்னிமரியின் துயரங்கள் (செப்டம்பர் 25), மற்றொன்று ஒரு புனிதருடைய விழா நினைவு நாளாக இருந்தாலும், அவர் ஒரு பங்கின் அல்லது நிறுவனத்தின் பாதுகாவலராக இருந்தாலும் அல்லது ஒரு துறவற சபையை நிறுவியவராக இருந்தாலும் அன்று அவருக்கான சிறப்பு வாசகத்தை வாசிக்கலாம். இந்த நினைவு நாள்களை விழாவாகக் கூட கொண்டாடலாம்.

வாசகங்களை எதிலிருந்து வாசிப்பது?

நாம் மேலே குறிப்பிட்ட மூன்றாண்டு கால வட்டம் இரண்டு ஆண்டு கால வட்டங்களுக்கான வாசகங்கள் பலவிதங்களில் மக்கள் கைவசம் வந்து சேர்கின்றன. ஞாயிறு வழிபாடு கையேடு  என்று சுமார் நான்கு பக்கங்களில் வெளியிடப்படும் துண்டு பிரசுரங்கள் (Leaflets) ஒருபக்கம்; விவிலிய நாள்குறிப்பேடு (Bible Diary) என்று பல பதிப்பகங்களில் (வைகறை, கிளாரட், நல்லாயன்) ஆகியவற்றிலிருந்து வரும் நாள்குறிப்பேடுகள் மற்றொரு பக்கம். இவற்றையன்றி விவிலிய நூலை கையிலேந்தி வரும் நம்பிக்கையாளர், அருள்பணியாளர் மற்றும் பங்கு ஆலயங்களில் கிடைக்ககூடிய வாசகநூல்.

இவை அனைத்தும் இறைவார்த்தைப் பகுதிகளை முழுமையாகவும், பகுதியாகவும் கொண்டுள்ளன. இவற்றில் வழிபாட்டு கையேடு எனும் துண்டு பிரசுரமும், விவிலிய நாள் குறிப்பேடும் குறிப்பிட்ட நோக்கத்திற்காக வெளியிடப்படுவன. அதாவது வழிபாட்டை வாழ்வாக்கிட இவற்றை வாசித்து தியானித்தல், வழிபாட்டிற்கு தயாரித்தல் போன்ற நோக்கங்களுக்கு பயனுள்ளவையாக இருக்கின்றன என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் இவை வழிபாட்டு நூல்வகையைச் (யிஷ்மிற்rஆஷ்உழியி ணுலிலிவவி) சாராதவை. எனவே வார்த்தை வழிபாட்டில் இறை வார்த்தையைப் பறைசாற்ற உகந்தனவல்ல. ஆதலால் இவற்றிலிருந்து இறைவார்த்தையைப் பறைசாற்றுவது கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். வழிபாட்டில் இவற்றிலிருந்து நற்செய்தியைப் பறைசாற்றும் போது தூபம் காட்டப்படுகிறது. இவை வழிபாடு சாராத காரியங்களுக்குப் பயன்படுத்தப்பட்டு இறைவார்த்தைக்கு பங்கம் ஏற்படுகிறது. எடுத்துக்காட்டாக ஞாயிறு வழிபாட்டு கையேடு துண்டு பிரசுரத்தில், அடுத்து வரும் ஞாயிறு வழிபாட்டின் போது அதில்  உப்பு  வைக்கப்படுகிறது. மற்றும் கசக்கி குப்பைத் தொட்டியில் போடப்பட்டதையும் பார்க்க நேரிடுகிறது. அதேபோல் விவிலிய நாள் குறிப்பேடு மக்களை சந்திக்க நிர்ணயிக்கப்படும் நேரத்தைக் குறிக்கவும் (Appointments) மற்றும் சில தகவல்களைக் குறித்து வைக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இவை யாவும் இறைவார்த்தையின் மாண்புக்கு உகந்தவை அல்ல என்பதை யாரும் மறுக்க முடியாது.

அருள்பணிக்கு உதவும் சிற்றேடுகளை  எ.கா ., இறைமக்கள் வாசகத்தைத்  தயார் செய்யவோ, தனியாகத் தியானிக்கவோ வெளியிடப்படும் கையேடுகளை வாசகப்புத்தகத்திற்குப் பதிலாகப் பயன்படுத்தக் கூடாது. இது இறைவாக்கின் மாண்புக்குப் பொருந்துவதாக இல்லை - வாசக நூல் முன்னுரை எண் 37இல் குறிப்பிட்டிருப்பது கவனிக்கப்பட வேண்டும்.

அடுத்து விவிலியத்தை வார்த்தை வழிபாட்டில் வரும் வாசகங்களைப் பறைசாற்றப் பயன்படுத்தலாமா? என்ற ஒரு கேள்வியும் வைக்கப்படுகிறது. இதற்குப் பதிலாக நான் சொல்ல விரும்புவது பின்வருபவை: விவிலியத்தை வழிபாட்டு வாசகங்களைப் பறைசாற்றக் கூடாது என்று யாரும் சொல்ல முடியாது. அது தவறு என்றும் சொல்லக்கூடாது. தவிர்க்க முடியாத இடத்திலும், நேரத்திலும் பயன்படுத்தலாம். ஆனால் விவிலியம் வழிபாட்டு நூல் அன்று. வழிபாட்டிற்கெனத் தயார் செய்யப்பட்டுள்ள வாசக நூலே வழிபாட்டு நூல் ஆகும். எனவே வார்த்தை வழிபாட்டில் வாசகங்களைப் பறைசாற்ற வாசக நூலைப்  பயன்படுத்துவதே சாலச் சிறந்தது.

விவிலியத்தின் பகுதிகள் வாசக நூலில் இருந்தாலும், அவை வழிபாட்டிற்கு ஏற்றவாறு மாற்றி அமைக்கப்படுகின்றன. உதாரணமாக பவுலின் மடல்களில் இருந்து வாசகம் இருக்கும்போது தொடக்கத்தில் சகோதர, சகோதரிகளே என்று கூடி வந்திருக்கும் மக்களை விளித்து வாசிக்கப்படுகிறது. விவிலிய நூலைப் பயன்படுத்தும்போது எல்லாராலும் இது சரியாக செய்யப்பட வாய்ப்பு மிகக் குறையும்.

இதே போன்று நற்செய்தி வாசகத்தின்போது ‘அக்காலத்தில்’ என்ற வார்த்தை சேர்க்கப்பட்டு அதற்கேற்றவாறு நற்செய்தி வாசகத்தின் தொடக்கச் சொற்கள் மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. விவிலியத்தில் இருந்து நேராக நற்செய்திப்  பகுதி வாசிக்கப்படும் போது முன் தயாரிப்பில்லாமல் எல்லா அருள்பணியாளர்களாலும் இதை சரியாகச் செய்யமுடியாது.

மூன்றாவதாக வார்த்தை வழிபாட்டின் மையக் கருப்பொருளுக்கேற்றவாறு இறை வசனங்கள் தொடர்ச்சியாக இல்லாமல், இடை இடையே சொற்றொடர்களும், வாக்கியங்களும் விடுபட்டு தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. விவிலியத்திலிருந்து வாசிக்கும் போது எல்லாராலும் தடுமாற்றமும் தாமதமும் இன்றி செய்ய இயலாது.

வாசக நூலின் முன்னுரைப் பகுதியின் பின்வரும் குறிப்புகளைக் காண முடிகிறது :

வாசகத்தின் தொடக்கமாக வழக்கமான முன்மொழிச் சொற்கள் இருக்கும்; இவையாவன : அக்காலத்தில், அந்நாள்களில், சகோதர சகோதரிகளே, அன்பிற்குரியவர்களே, ஆண்டவர் கூறுவது. இந்த முன்மொழிச் சொல்லுக்குப் பின் வாசகம் தொடர்கிறது. பாடம் தனது பின்னணிச் சூழலிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டிருப்பதால், அதை புரிந்துக் கொள்ளத் தேவையான சில சொற்களைச் சேர்க்கலாம் அல்லது விட்டு விடலாம். பாடம் தொடர்ச்சியான வசனங்களைக் கொண்டிருக்கவில்லை என்றால் அதில் மாற்றங்கள் செய்யத் தேவைப்படலாம் (எண் 124, காண் எண் 77). இந்த காரணங்களுக்காக வார்த்தை வழிபாட்டில் வரும் விவிலியப் பகுதிகளை வாசக நூலில் இருந்தே வாசிப்பது சிறந்தது. 

இறுதியாக மற்றும் ஒரு கேள்வி எழுகிறது. வார்த்தை வழிபாட்டில் இறைவார்த்தை வாசகம் பறைசாற்றப்படும் போது, நம்பிக்கையாளர்களும், அருள்பணியாளரும் விவிலியத்தை கையில் வைத்துக் கொண்டு வாசிக்கலாமா? என்பது.  இத்தகைய பழக்கம் அருங்கொடை இயக்கத்திலிருந்து வந்ததொன்று. இதற்கு ஆதரவு ஒருசில விவிலிய வல்லுநர்களிடமிருந்து வந்துள்ளது. அருளாளர் ஆறாம் சின்னப்பர் ‘நற்செய்தியறிவிப்பு’ (Evangelium Nuntiandi) என்ற ஆவணத்தில் சான்று பகர்தலை வலியுறுத்தும்போது இன்றைய உலகம் கேட்கும் நாகரீகத்தில் இருந்து (Civilization of Hearing) பார்க்கும் நாகரீகத்திற்கு (Civilization of Seeing) கடந்து வந்துள்ளது என்பதைக் காரணம் காட்டுகிறார்கள். மேலும் கத்தோலிக்க மக்களிடையே விவிலிய அறிவு மிக சொற்பமாக இருப்பதால் வார்த்தை வழிபாட்டின் நேரத்திலும் அன்றைய வாசகங்களை விவிலியத்தை வைத்துக் கொண்டு பறைசாற்றப்படும்போது பின்பற்றுவது பயனளிக்கும் எனக் கருதுகிறார்கள்.

இது முற்றிலும் சரியல்ல. இறைவார்த்தை வழிபாட்டில் விவிலியப் பகுதிகள் வாசிக்கப்படுகின்றன என்று சொல்வதை விட பறைசாற்றப்படுகின்றன (Proclaimed) என்று சொல்வதே சரியானது. பறைசாற்றப்படுவதை கேட்க வேண்டும் என்பதுதான் சரி. வாசக நூலின் பொது முன்னுரை விளக்கங்களை துருவி ஆராய்வோமானால், அங்கு பறைசாற்றப்படுவது கேட்கப்பட வேண்டும் என்றுதான் மீண்டும் மீண்டும் குறிப்பிடப்பட்டுள்ளது (எண்கள் 6, 8, 45, 47, 48, 55, 62 மற்றும் காண்க). “அறிவிப்பதைக் கேட்டால்தான் நம்பிக்கை உண்டாகும்” (உரோ 10 : 17). என்று புனித பவுல் கூறுவது கவனிக்கத்தக்கது. இறைவார்த்தை பறைசாற்றப்படும்போது இறைவன் (இயேசு) பேசுகிறார். இறைவெளிப்பாடு இங்கு, இப்பொழுது இடம் பெறுகிறது. அதைக் கேட்கத்தான் வேண்டும். வழிபாட்டு வல்லுநர்களும், பல புகழ்பெற்ற விவிலிய வல்லுநர்களும், மக்களோ, அருள்பணியாளர்களோ பறைசாற்றும் வார்த்தையைக் கேட்க வேண்டுமேயயாழிய வாசிக்கக்கூடாது என்றுதான் சொல்லுகிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது.
இதைத் தடை செய்ய ஆயருக்குரிய அதிகாரம் (Episcopal Authority) என்னிடமில்லை; ஆனால் இது சரியல்ல என்று சொல்ல வழிபாட்டியியலில் நம்பக நிலை (Liturgical Authority) என்னிடம் இருக்கிறது என்று சொல்ல முடியும்.
வார்த்தை வழிபாட்டில் மற்றுமொரு பழக்கம் நுழைந்துள்ளது. இது மேலே நாம் குறிப்பிட்ட பழக்கத்தோடு நெருங்கியத் தொடர்புடையது. அதாவது இறைவார்த்தையை வாசிக்கும் போது அது எந்த அத்தியாயத்தில் இருக்கிறது. எத்தனை வாக்கியங்களைக் கொண்டது போன்ற தகவல்களைக் கொடுக்கின்ற பழக்கம். திருப்பலிக்கு வரும் மக்கள் விவிலியத்தைக் கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தியதால் இறைவார்த்தையைப் பறைசாற்றுபவர், கையில் விவிலியத்தை வைத்திருப்பவர்கள் திறந்து பின்பற்றுவதற்கு உதவியாக இருக்கும் விதத்தில் பறைசாற்றப்படும் பகுதியின் அத்தியாயம், வாக்கியங்கள் எல்லாம் பற்றி சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இது தேவையற்றது. வழிபாட்டு மரபில் இத்தகைய பழக்கம் என்றுமே இருந்ததில்லை.

அப்படி சொன்னாலும் அது பாதகமில்லை என்பது எமது தனிக்கருத்து. ஆனால் அக்குறிப்பு சரியான முறையில் இருக்க வேண்டும். ‘பிரிவு’, ‘சொற்றொடர்கள்’ என்ற சொற்கள் பயன்படுத்தப்படுவதைப் பார்க்கிறோம். இச்சொற்களின் உண்மைப் பொருளை அறியாமையால் வந்த பழக்கம். ‘பிரிவு’ என்றால் ‘செக்­ன்’ (Section) என்றும், ‘சொற்றொடர்கள்’ என்றால் ‘ப்ரேஸ்’ (sentences) என்றும் பொருள். ஆங்கில-தமிழ் அகராதியை எடுத்து செக்­ன், ப்ரேஸ் என்பவற்றின் பொருள் காணவும். இயல் அல்லது அத்தியாயம் என்று சேப்டருக்கும் (உஜுழிஸ்ரீமிer) இறை வசனங்கள் அல்லது வாக்கியங்கள் (விeஐமிeஐஉeவி) என்று சொல்வதே சரியானது.

வாசக நூலில் ஒவ்வொரு வாசகப் பகுதிக்கும் மேல் ஒரு தலைப்பு மிக கவனமாகத் தேர்வு செய்யப்பட்டு கொடுக்கப்பட்டிருக்கும். இது அந்த வாசகத்தின் முக்கியமானக் கருத்தை சுட்டிகாட்டுவதாக அமைந்திருக்கும். வாசகங்களைப் பறைசாற்றுபவர் இந்த தலைப்பையும் வாசிக்கக் கூடாது. இது விளக்கவுரையாளருக்கும், மறையுரைக்கும் பயன்படுவதாக கொடுக்கப்பட்டுள்ளது.

முடிவுரை :

இதுவரை மூன்று நிலைகளில் இறைவார்த்தை வழிபாடு பற்றி நாம் விளக்கியவற்றை சரியாக பொருள் உணர்ந்து செய்வதாலும், மேலே நாம் சுட்டிக்காட்டிய சில குறைகளையும் தேவையற்ற பழக்கங்களையும் சரிசெய்வதினாலும் வார்த்தை வழிபாடு அழகுள்ளதாக அமையும். அனைவரும் இறைவார்த்தை விருந்தில் நல்லமுறையில் பங்கு பெற்று, தங்கள் நம்பிக்கையைப் புதுப்பித்துக் கொண்டு நற்கருணை விருந்திலும் பங்கு பெற தங்களைத் தகுதியாக்கிக் கொள்ள முடியும். 

வெற்றி உங்கள் கையில்

வெற்றி உங்கள் கையில் 

- அருட்திரு. எஸ். ஜான் கென்னடி,

பூண்டி புதுமை மாதா கல்வியியல் கல்லூரி, சமயபுரம்

தோல்வி ... தோல்வி ... எனத்  தோல்விகளால்

மட்டுமே துரத்தி அடிக்கப்பட்டவரின் முதல் வெற்றியே ... கின்னஸ் சாதனை! டேனியல், சென்னை ஸ்பென்சர் பிளாசாவில் தொடர்ந்து 100 மணி நேரத்துக்கு மேல் நின்றுகொண்டே 7000 துணிகளுக்கும் அதிகமாக அயர்ன் மாரத்தான் செய்திருக்கிறார். இந்தச் சாதனையை செப்டம்பர் மாதம் 2016இல் நிகழ்த்தியிருக்கிறார். வெற்றி நாயகனின் வார்த்தைகளை வாசிப்போமா! “ஒண்ணுமே இல்லாத பய நான். தோத்தாங்குளினு சொல்வாங்க ... அப்படி வெறும் உடம்பை மட்டும் சுமந்துட்டு உலகத்துக்கு பாரமாத்தான் இருக்கேன்னு நினைப்பேன். சின்ன வயசுலயே அப்பா இறந்துட்டார். ரொம்ப ஏழ்மையான குடும்பம். பத்தாவது முடிச்சதும், வேலைக்குப்  போக வேண்டிய சூழல். மேஸ்திரி வேலை. துணி விற்கிறதுனு சில வேலைகள் செஞ்சேன். அப்பதான் துணிகளை அயர்ன் பண்ணும் சிலரை சந்திச்சேன்.

அயர்ன் தொழிலில், ஒரு நாளைக்குக் குறைந்தது 1000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்னு சொன்னாங்க. வழிப்போக்கனுக்கு எங்க ஒதுங்க இடம் கிடைச்சாலும் ஒதுங்குற மாதிரி ... நானும் இனி இதுதான் நம்ம வேலைன்னு ஒரு லாண்டரி கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்துட்டேன். 50 துணிகளைக் கொடுத்தாலும் சும்மா சட்டு சட்டுன்னு பக்காவா அயர்ன் செஞ்சுடுவேன். கம்பெனியில் குட்பாய்னு பேர் வாங்கினேன்.

எனக்கு தெரிஞ்சது அயர்ன். அதுல ஏதாவது ஒரு சாதனை செய்தால் எல்லோரும் திரும்பிப் பார்ப்பாங்க என்பதால் அயர்ன் செய்த சாதனையாளர்கள் லிஸ்ட்டை தேடினேன். லயன்ஸ் கிளப் உறுப்பினர், முரளி  என்பவர் கின்னஸ் சாதனை செய்ய வழிகாட்டினார். அவரிடம் சாதனையாளர்கள் லிஸ்ட் கொடுத்தேன். முதன் முதலில் 1999இல் சுவிட்சர்லாந்துக்காரர் 40 மணி நேரம் தொடர்ந்து அயர்ன் பண்ணினார். 2015ஆம் வருடம் இங்கிலாந்து நாட்டுக்காரர் றூழிreமிஜு றீழிஐderவி தொடர்ந்து 100 மணி நேரம் அயர்ன் செய்து 2000 துணிகளை அயர்ன் பண்ணினார். “அப்போ நீங்க இதையும் தாண்டி அயர்ன் பண்ணனும்னு” முரளி சார் சொன்னார். அவர் சில டெஸ்ட்கள் வச்சார். மூனுநாள் ஒரே இடத்துல உட்கார வச்சு அங்கேயே இருக்கேன்னு கேமரா வைச்சு டெஸ்ட் பண்ணினாங்க. மனசு முழுக்க கின்னஸ் வெறி இருக்கும் போது தூக்கம் எப்படி எட்டிப் பார்க்கும்?

கனவு நனவாகும் தருணம் கைகூடி வந்தது. 26 மணி நேரம் 30 நிமிடத்துலேயே 2,000 துணிகளை அயர்ன் பண்ணி முதல் சாதனை பண்ணிட்டேன். தொடர்ந்து மூன்று நாட்கள் என்னை உற்சாகம் செய்யும் விதமா இழுக்க ஆரம்பிச்சுடுச்சு. அசரலை. 90 மணி நேரமும் நெருங்கிட்டேன். எங்கே இருக்கேன்கிற உணர்வே இல்லை. அடுத்த 10 மணி நேரமும் கையில அயர்ன் பாக்ஸ் இருந்தது. ஆனா, ஒரு ரோபோ மாதிரி அயர்ன் பண்ணிட்டே இருந்தேன். முன்னாடி செஞ்ச சாதனையை முறியடிக்கும் விதமா 100 மணி நேரத்தைத் தாண்டிட்டேன். ஆனாலும் கூடுதலாக 2 மணி நேரம் அயர்ன் பண்ணச் சொன்னாங்க. கடைசி 26 நிமிடம் சுத்தமா முடியல. பசங்க என் மேல் தண்ணிய ஊத்தினாங்க. எப்படியோ நினைவு வந்து சரியாக 102 மணி நேரம் 30 நிமிடம் 7,104 துணிகளை அயர்ன் பண்ணி கின்னஸ் சாதனை பண்ணிட்டேன். வேகமாக அயர்ன் செய்தது. அதிக நேரம் அயர்ன் செய்தது என இரண்டு சாதனைகள். ஒரு தோத்தாங்குளிக்கு முதன் முதலில் வெற்றிப் பட்டம் கிடைச்சது. அங்க இருந்தவங்க என்னை தூக்கிக் கொண்டாடினாங்க. நிற்க கூட முடியாம கீழே விழும்போதுதான் தோனுச்சு, வாழ்க்கையில் வெற்றி எவ்வளவு முக்கியம்னு”. வெற்றி களிப்பில் கண் கலங்கியபடியே கைகுலுக்குகிறார் டேனியல்.

அன்பு குழந்தைகளே! பண்பான இளைஞர், இளம்பெண்களே! அருமை பெற்றோர்களே! பாசமுள்ள வாசகர்களே! உங்களைப் பார்த்து பலர் “நீங்கள் தோத்தாங்குளிகள், ஒன்றுக்கும் உதாவாதவர்கள், ஒன்றும் தெரியாதவர்கள், திறமையற்றவர்கள், தேவையற்றவர்கள், சாதிக்க முடியாதவர்கள், பயனற்றவர்கள், வாழத்தெரியாதவர்கள்” என்று பட்டியல் இடும்போது இதயத்தில் வெற்றி நெருப்பை பற்ற வைத்து வாழ்க்கை ஓட்டத்தில் சாதனையை கைவசப்படுத்தி கின்னஸில் இடம் பிடித்த அயர்ன் மேன் டேனியலை சற்று நினைத்துக் கொள்ளுங்கள். நீங்களும் சாதனைகள் புரிந்து வெற்றியாளராக ஜொலிக்கலாம். அனைவருக்கும் கிறிஸ்து பிறப்பு மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! புதிய ஆண்டு வெற்றியின் ஆண்டாக அமைய வாழ்த்துகிறேன்.

“நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப்படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில்  ஏறு”

இயற்கையை நேசிக்கும் கிறிஸ்மஸ்

இயற்கையை நேசிக்கும் கிறிஸ்மஸ்

- அருள்பணி. அ. பிரான்சிஸ், பாபநாசம்

சோதிமணிப் பெட்டகமே சுடரொளியே - யூதருக்கு
ஆதி மகனாய்ப் பிறந்த அருந்தவமே தாலேலோ
மாணிக்கத் தொட்டிலுக்கு வாய்க்காத பெருமையயல்லாம்
ஆநிரைத் தொழுவினுக்கு ஆரளித்தார் எங்கோவே!

- இயேசு காவியம் எண் : 9

வையகம் மீட்க வந்திட்ட வானவன் இயேசு பிறந்ததுவோ மாட்டுத் தொழுவத்தில். பழைய கந்தல் துணிகளால் சுற்றப்பட்டு கிடத்தப்பட்ட இடமோ தீவனத்தொட்டியில். இவரின் பிறப்புச் செய்தி ஒலித்திட்ட இடம் வெட்டவெளி. வயல்வெளி. மீட்பர் பிறந்திட்ட மகிழ்ச்சியின் செய்தியினை வானவர் அறிவித்தார். ஆடுகளை சாமக்காவல் காத்திட்ட இடையருக்கு எல்லாமே இயற்கைச் சூழலில் நிகழ்ந்திட்ட வரலாற்றுப் பதிவுகள் (காண் லூக்கா 2 : 1 - 16)

கடும்குளிர் நிறைந்த நடுச்சாம வேளையில் ஆடு, மாடுகள் தின்னும் புல், வைக்கோல் நிறைந்த தீவனத் தொட்டியில் தவழ்கின்றது தெய்வக் குழந்தை. காட்டை, மேட்டைப் பண்படுத்தி சேற்றில் உழன்று வியர்வை சிந்தி உலகோருக்கு உணவளிப்பவர் உழவர். உலகின் முதன்மைத் தொழிலாகிய உழவுத் தொழிலாளருக்கு உற்ற தோழராய் இருப்பவை கால்நடைகள். இயற்கையைப் பேணி உழைப்போருள் ஒருவராக இயேசு பிறப்பெடுக்கின்றார்.

எல்லாம் நன்றாயிருந்தன :

நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகியன பிரபஞ்சம் எனப்படுகின்றன. வாய்ச் சொல்லால் உலகினைப் படைக்கின்றார் இறைவன். தனது  உருவிலும், சாயலிலும் மண்ணால் மனிதரை  உருவாக்கி, அவர் நாசிகளில் உயிர்மூச்சை ஊதி உயிரளிக்கின்றார். தனியாயிருந்த  முதல் மனிதனாகிய ஆதாமுக்குத் துணையாகப் பெண்ணாகிய ஏவாளைத் தந்து ஏதேன் தோட்டத்தைப் பண்படுத்தவும், பாதுகாக்கவும் ஆண்டவராகிய கடவுள் மனிதனை அங்கு குடியிருக்கச் செய்கின்றார் (காண் தொநூ 1 ‡ 2 பிரிவுகள்). இறுதியில் தாம் படைத்த அனைத்தும் நன்றாயிருக்கின்றது என்று இறைவன் மகிழ்கின்றார் (தொநூ 1 : 31).

இறைவா, உமக்கே புகழ் :

புத்துலகச் சிற்பியாம் இறைவனின் மாபெரும் கொடையாகத் திகழும் பிரான்சிஸ் திருத்தந்தை இயற்கை பற்றிய தனது கொள்கைகளை, ‘இறைவா, உமக்கே புகழ்’ என்னும் கொள்கைத் திரட்டு மூலம் மக்களோடு உறவாடுகின்றார். படைப்பெங்கும் நிறைந்திருப்பவர் இறைவன். படைப்பின் அழகினை ரசித்து அனுபவிக்கும்போது நாம் கடவுளைக் கண்ணாரக் காணுகின்றோம். எங்கணும் நீக்கமற நிறைந்திட்ட இறைவனின் உடனிருப்பினை உணர்ந்து வாழ அழைக்கப்படுகின்றோம்.

மேலும் சுற்றுச் சூழலைப் பேணி வாழ்கின்ற போது இயற்கை புதுப்பொலிவடைகின்றது. இயற்கையில் உறையும் தெய்வத்தின் சாயல் சீர்குலையாது வாழ்வதுவே உண்மையான விசுவாச வாழ்வு என்று திருத்தந்தை தெளிவுபடுத்துகின்றார்.

நிலத்தின் உரிமையாளர் :

‘நிலத்தை அறுதியாய் விற்றுவிட வேண்டாம், ஏனெனில் நிலம் என்னுடையது. நீங்களோ என்னைப் பொறுத்த மட்டில் அன்னியரும், இரவற்குடிகளுமே’ (லேவியர் 25 : 23). ஆக, ஆண்டவரே நிலத்தின் உரிமையாளர். கால்நடைகள் மனித உழைப்பின் தோழர்கள் மட்டுமல்ல, இயற்கையின் கொடைகள். எனவே நல்லார் தம் கால்நடைகளைப் பாதுகாப்பர் (நீ மொ 12 : 10) என்று விவிலியம் கூறுகிறது.

இயேசுவும் இயற்கையும் :

இயற்கையோடு ஒன்றித்து வாழும் ஏழையரின் ஏழ்மையில் பங்காளியாகப் பிறந்தார் இயேசு. இவரின் போதனைகள் அனைத்தும் இயற்கையில் நாம் காண்பவற்றையே உவமைகளாக்குகின்றார். எடுத்துக்காட்டாக விதைப்பவர் உவமை (மத் 13 : 4 - 9, 18 - 23), திராட்சைக் கொடி (யோவான் 15 : 1 - 17), காணாமற் போன ஆடு (லூக் 15 : 4 - 7), கடுகு விதை (மத். 13 : 31 - 33), வயலில் தோன்றிய களைகள் (மத். 13 : 36 - 43).

மேலும் வானத்துப் பறவைகள் (மத். 6 : 26). காட்டு மலர்ச் செடிகள் (மத். 6 ; 28). அத்திமரம் (மாற்கு 11 : 12 - 14, 20 - 24) போன்றவை. அது மட்டுமன்று திராட்சைக் கனிகளை முட்செடிகளிலும், அத்திப் பழங்களை முட்பூண்டுகளிலும் பறிக்க முடியாது. நல்ல மரம் நல்ல கனிகளைக் கொடுக்கும். நச்சு மரம் நச்சுக் கனிகளைக் கொடுக்கும் (மத். 7 : 16, 17). இவையனைத்தும் நமது அன்றாட வாழ்வின் எதார்த்தங்களை இயற்கையிலிருந்து கற்றுக் கொள்ள இறைவன் நமக்கு விடுக்கும் அழைப்பாகும்.

தாயாகும் இயற்கை :

நாம் நம்மை ஈன்றெடுத்த தாயை அதிகம் நேசிக்கின்றோம். காரணம் தாயின் கருவறைதான் உயிரை வரவேற்று, பாதுகாத்து, உணவளித்து, உருதந்து உலகிற்குக் கொண்டு வருகிறது. அதே போன்றே இயற்கை அன்னையும் நம்மை வரவேற்று, பாதுகாத்து, உணவளித்து, இறுதியாக நமது உடல்தனை அவளோடு இணைத்து விண்ணகப் பேரின்ப வீட்டிற்கு அனுப்பி வைக்கின்றாள்.

இயற்கை இறையியல் : 

படைப்பினில் இறைவனைக் கண்டதனால்தான் அசிசி நகர் புனித பிரான்சிஸ் சூரியனை தன் சகோதரன் என்றும் சந்திரனை தன் சகோதரி என்றும் அழைத்தார். முண்டாசு மீசைக்கவிஞர் பாரதி படைப்பனைத்தும் இறைவனின் சாயலே என்றுணர்ந்து கீழ்க்காணும் வரிகளில் பாடுகின்றார். 

காக்கைச் சிறகினிலே நந்தலாலா! நின்றன்
கரிய நிறந் தோன்றுதைய்யா நந்தலாலா ...

நாம் வாழும் இக்காலத்தின் சுற்றுச்சூழல் அறிஞர்களுள் முதன்மையாளராகத் திகழ்பவர் சால்லி மைக்பேக் (றீழியியிஷ்e னிஷ்உக்ஷூழிஆற்e) என்னும் பெண்மணி. னிலிdeயிவி லிக்ஷூ றூலிd: வீஜுeலியிலிஆதீ க்ஷூலிr ழிஐ சிஉலியிலிஆஷ்உழியி ஹிற்உயிeழிr புஆe என்னும் தனது கட்டுரையில் காணப்படும் கருத்துக்கள் நமது சிந்தனையைக் கூர்மைப்படுத்துவதாக உள்ளது.

1. இயற்கை இறைவனின் உடல்
2. இயற்கை நமது தாய்
3. இயற்கை நமது காதலி
4. இயற்கை நமது தோழி
5. இயற்கை இறைவனின் பிரசன்னம்

இருவகை இறப்புக்கள் :

அ. மனித வாழ்வின் அழிவு
ஆ. இயற்கையின் அழிவு
முந்தையது தனி மனிதரோடு முடிந்துவிடுவது.
பிந்தையது நாளைய சந்ததியினை அழிப்பது.

இயற்கையை அழிக்கும் ஏரோதுக்கள் : 

தனக்குப் போட்டியாக எவரும் உருவெடுக்கக் கூடாது என்பதற்காக ஏரோது மன்னன் பச்சிளங் குழந்தைகளைக் கொன்றதாக மத். 2 : 1 - 18 பதிவு செய்கின்றது.

இயற்கையை அழிக்கும்போது எழும் ஓசை மாசில்லாக் குழந்தைகளின் மரண ஓலங்களே. இயற்கையை அழிக்கும் எவரும் நவீன ஏரோதுவே. உலக  மயமாக்கல், நவீனத் தொழில் நுட்பம், வணிகம் மற்றும்  உற்பத்தி  என்னும்  பெயரில் நடைபெறும் செயல்பாடுகள் மூலம் ஒவ்வோராண்டும் ஆயிரக்கணக்கான தாவர மற்றும் விலங்கின உயிர்கள் மறைந்து வருகின்றன. 2050க்குள் நமது  சுயநலச்  செயல்களால்  ஆயிரக்கணக்கான தாவர மற்றும் விலங்கின  உயிரினங்கள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது (புகழ் அனைத்தும் உமதே , 32 - 42). இன்னும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் மூலம் மனித குலச் சீரழிவு நடைபெறுகிறது. இந்நிலை தொடர்ந்தால் உறவு நிலைகள் குறைந்து நாம் வாழும் பூமி ஒரு பெரிய சாவுக்குழியாக மாறும். எனவே இயற்கையைப் பாதுகாப்போம். சுற்றுச் சூழலை நேசிப்போம். வளமான வாழ்வைப் பெறுவோம். இதுவே இன்றைய சூழலில் உண்மையான கிறிஸ்மஸ் கொண்டாட்டம்.

Ads Inside Post