Pages - Menu

Monday 30 November 2015

திருவருகைக்காலம் இரண்டாம் ஞாயிறு
அருள்தந்தை. சி. குழந்தை, காணியிருப்பு
 06/12/2015
பாரூக் 5 : 1 - 9
பிலிப் 1 : 4 - 6, 8 -11
லூக் 3 : 1 - 6
மனமாற்றம்

சீசர் பேரரசரின் பேராட்சியில், பிலாத்து, ஏரோது பிலிப்பு, அன்னா, கயபா போன்றவர்கள் வரலாற்றில் வைக்கப்பட்டனர். தடம் பதித்தார்கள் என்பதை விட தடம் புரண்டார்கள் என்பதாலேயே வரலாற்றில் செருகப் பெற்றனர். இந்தப் பின்னணியில்தான் பாலைவனக்குரல் திருமுழுக்கு யோவானைப் பதிவு செய்து பெருமிதம் கொண்டார் புனித லூக்கா. முன்னவர்களின் ஆட்சி ஆடம்பரத்திலும், அதிகாரத்திலும், புற அழகிலும் அகந்தையிலும் வேரூன்றியது. எனவேதான் அவர்களின் குரல் ஒலிக்கவில்லை. பதிவு செய்யப்படவில்லை. எடுபடவில்லை. ஏற்கப்படவில்லை. மாறாக யோவானின் வாழ்வு எளிமையிலும் ஏழ்மையிலும் ஊறிப்போனது. வலிமையும் வல்லமையும் படைத்தது. எனவேதான் இவருடைய  குரல் ஓங்கி ஒலித்தது என்று லூக்கா யோவானை உயரத்தூக்கிப் பிடித்துக் காட்டுகிறார். இது லூக்காவின் இணையயாப்பு முறை ஆகும். யோவானுடன் இயேசுவை ஒப்பிடும்போது இயேசுவை வானுயரத் தூக்கிப் பிடித்துக் காட்டுகிறார்.

பாலைவனக் குரலை, எசாயா, வரலாற்றில் முன்மொழிந்தும் பேசியிருக்கிறார். (எசாயா 40 : 3 - 5). அந்தக்குரல் ஒலித்தது என்ன? பாவ மன்னிப்பு பெற மனமாறித் திருமுழுக்குப் பெறுங்கள் (லூக் 3 : 3) என்பதாகும்.திருமுழுக்குப் பெற்றவர்கள் இயேசுவின் இரண்டாவது வருகைக்குத் தயாராக அறிவிலும், அன்பிலும், நீதியிலும், நேர்மையிலும் வாழ்ந்து வளரக் கடமைப்பட்டவர்கள் என்று இரண்டாவது வாசகத்தில் பவுலடியார் உணர்த்துகிறார்.(பிலிப் 1 : 8 - 11).

ஓர் அரசனுக்கு இரு புதல்வர்கள். மூத்தவன் ஆடம்பரப் பிரியன். அதிகார யோகினி. பிறரை அடக்கி ஆளுவதிலே அலாதி இன்பம் அடைபவன். இளையவன் மூத்தவனின் குணங்களுக்கு முற்றிலும் மாறுபட்டவன். நல்லவன். நிதானம் கொண்டவன். அரசன் இருவரையும் அழைத்து என் ஆட்சி உங்களில் யாருக்கு உரியது? என்று வினவினான். முதலவன், செல்வேன் எத்திக்கும், செவ்வானம் வரை வெல்வேன், வேறு பல நாடுகளை சமர்ப்பிப்பேன் வெற்றிகளை உம் பாதம். நிலைக்கும் உம் புகழ். மலைக்கும் வரலாறு. வல்லவன் நான். எனவே ஆட்சி எனக்கே உரியது என்று சூளுரைத்தான். இளையவன், பிறரைக் கொல்ல என்னால் இயலாது. ஆனால் பிறர் மனங்களை வெல்ல இயலும். நல்லவன் நான். ஆனால் நாடு எனக்கு வேண்டாம். அண்ணனுக்கே அளியுங்கள் என்று அடக்கமாகப் பேசி, அவர் முதுகிலே தட்டிக் கொடுத்து அமர்ந்தான்.

அடுத்த நாள் எனது முடிவை அறிவிப்பேன் என்று இயம்பி அரசர் ஆலயம் நுழைந்தார், ஆண்டவரின் குரல் கேட்க, மறுநாள் இருவரையும் அழைத்து வல்லவர்கள் நாடு பிடிப்பார்கள். நல்லவர்கள் நாடு படைப்பார்கள் என்று சொல்லி ஆட்சியுரிமை இளையவனுக்கே. அண்ணன் அருகிலிருந்து தம்பிக்கு ஆதரவு அளிக்க வேண்டும். இது அரசாணை என்று அறிவித்தார்.



இன்றைய நற்செய்தியின் படிப்பினையும் இதுதான். சமத்துவ சமூகம் சமைத்திட வேண்டும். ஆணவமும் அகந்தையும் அழிந்திட வேண்டும். வானவன் வருகை ஒளிர்ந்திட வேண்டும். அது நம்வாழ்வில் இணைந்திட வேண்டும். இத்தகைய வாழ்வில் இயேசு பிறப்பு விழாவைக் கொண்டாடுவோமா? முதல் வருகையின் போதனைகளை வாழ்ந்து காட்டி இயேசுவின் இரண்டாவது வருகையை எதிர்கொள்வோமா?

Wednesday 11 November 2015

ஆசிரியர் பேனா...

பிரிந்தவர்களால் புரியும் வாழ்வு

பிறப்பு என்பது என்ன? அது இறப்பின் துவக்கம்.
இறப்பு என்பது என்ன? அது பிறப்பின் முடிவு என்று ஓரிடத்தில் படித்தேன்.

அப்துல் ரகுமான் கூறுகிறார், கொஞ்சம் கொஞ்சமாய் இறப்பதற்கு பெயர்தான் வாழ்க்கை.

பூமிக்கடியில் செல்வதற்கு முன் பூமிக்கு மேல் நடக்கும் போராட்டம்தான் வாழ்க்கை என்று மற்றொரு இடத்தில் படித்தேன்.

உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கைக் கொள்பவர் இறப்பினும் வாழ்வார் என்கிறார் இயேசு
(யோனா 11 : 25). வழியும், உண்மையும், வாழ்வும் நானே என்கிறார் மீண்டும் இயேசு (யோவா 14 : 6).

வாழ்வு ஒரு பயணம் - காலத்தில் நாம் நடக்கிறோம்.
வாழ்வு ஒரு போராட்டம், போராட்டங்கள், தடங்கள், எதிர்ப்புகள் ஆகியவைகளைச் சந்தித்து வாழ வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
    வாழ்வு ஒரு தேடல், உள்ள நிறைவையும், மகிழ்வையும் வாழ்வின் பொருளையும் கண்டடைய விரும்புகிறோம்.
நவம்பர் மாதத்தில் நம்மை விட்டு நிரந்தரமாகப் பிரிந்தவர்களை சிறப்பாக நினைத்துப் பார்க்கிறோம்.

நெருநல் உளன்ஒருவன் இன்றுஇல்லை என்னும்
பெருமை உடைத்து இவ்வுலகு (குறள் 336)

நேற்று இருந்தவன் இன்று இல்லை என்ற உண்மையை பெற்றது இவ்வுலகு என்கிறார் வள்ளுவர்.
ஒரு ஞானியிடம் ஒருவர் சீடராக விரும்பி அவரை அனுகினார். ஞானி, பத்து அடக்கச் சடங்குகளில் பங்கெடுத்து விட்டு பிறகு இங்கு வா என்றார்.

எனக்கு இப்போது 67 வயதாகிறது. வயதானவர் என்று சொல்லிக் கொள்ள பலர் விரும்புவதில்லை. இளமையானர் ;என்றே காட்டிக் கொள்ள விரும்புகின்றனர். ஆனால் இப்போது அதிகமாக என் இறப்பைப் பற்றி சிந்தித்துப் பார்க்கிறேன். நாம் இறந்த பிறகு என்ன நடக்கும் என்றும் கற்பனை செய்து பார்க்கிறேன். நாம் இறந்த பிறகு  இப்படி அடக்கம் செய்ய வேண்டும். இந்த இடத்தில் அடக்கம் ;செய்ய வேண்டும் என்று உயில் எழுதுவர். நம் வாழ்வின் நிகழ்ச்சிகளில் எடைபோட்டு பார்க்க முடியாத நிகழ்வு நம் மரணம். நடந்த நிகழ்ச்சியில் இப்படி நடந்திருக்கலாம், அப்படி செய்திருக்கலாம் என்று நினைத்துப் பார்ப்போம். அந்த முறையில் எடைபோட்டு பார்க்க முடியாத நிகழ்வு இறப்பு. 67 ஆண்டுள் மிக விரைவாக ஓடிவிட்டதாக உணர்கிறேன். இந்த குறுகிய காலத்தில் எத்தனை ஏக்கங்கள் பெருமை தேடல்கள். ஒருவர் கூறுகிறார் பசி, பட்டினி இல்லாமல் வாழ்ந்தால் போதும் என்பார். வீட்டுக்கு மேல் வீடு, நிலத்துக்கு மேல் நிலம், வாகனங்களுக்கு மேல் வாகனம், நகைக்கு மேல் நகை, ஆடைகளுக்கு மேல் ஆடை ஆக மேலுக்கு மேல் குவிக்க விரும்புகிறவர்கள் மேல், கடைசியில் மண் குவிக்கப்படுகிறது. இதனிடையே எவ்வளவு பேராசை, கனவுகள். வள்ளுவர் அழகாகக் கூறுவார்,

நாச்செற்று விக்குள் மேல்வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும் (குறள் 335)

நல்வினை என்பது பகிர்வு
பகிர்வு தருவது உறவு
உறவில் மலர்வது மகிழ்வு
மகிழ்வில் உதிப்பது தெய்வீகம்

நம்மோடு வாழ்ந்தவர்களின் நற்பண்புகளை நினைத்து பார்ப்போம். அவைகள் நம் அக ஒளியாக ஆகட்டும். இறந்தவர்களுக்காக அழும்போது இப்போது இருக்கும் வாழ்வின் அழகை உணர்ந்து பார்க்கலாம். மனிதரின் வாழ்வு முடிவில்லா வாழ்வு, மனிதர் இறந்தபின் இறைவனின் பிரசன்னத்தில் நுழைகின்றனர். அன்பு உணர்வற்ற வாழ்வு, இறைவனின் பிரசன்னத்தை அனுபவமாக பெறுவதில்லை என்று இயேசு தெளிவாக்கியிருக்கின்றார். மொகலாய அம்மாவாசைக்கு ஏராளமான மக்கள் இறந்தவர்களுக்கு காவிரி கரையில் திவசம் அளிப்பதை பார்க்கிறோம். கல்லறை திருவிழவிற்கு நம் மக்கள் தவறாமல் கல்லறைகளை சந்திக்கிறார்கள். நம்மைவிட்டு பிரிந்தவர்களை மனம் பிரியாமல் நினைக்கிறோம். வாழ்வின் திசையை, சுவையை உணர்ந்து வாழவே அனைத்து மரித்தவர் நினைவு தினம் நம்மை அழைத்து செய்தி தருகிறது.

-  அருட்பணி. S.I. அருள்சாமி

இறை இரக்கத்தின் ஆண்டில்

திருத்தந்தை அவர்கள் இறை இரக்கத்தின் ஆண்டில் கடைபிடிக்கூடிய செயல்பாடுகளாகக் கீழ்க்கண்ட செயல்பாடுகளைக் குறித்து காட்டுகிறார்.

1. மன்னிப்பின் மாண்பாளராக வாழ்தல் :
    விண்ணகத் தந்தையின் மன்னிக்கும் பண்பினை கத்தோலிக்கச் சமூகம் தனதாக்கிக் கொண்டு மன்னிப்பினை வழங்கி மன்னிப்பினைப் பெற்று வாழ்தல் வேண்டும்.

2. கருக்கலைப்பு புரிந்தோருக்கான பாவ மன்னிப்பு :
    கருக்கலைப்பு செய்திட்ட பெண்கள் மனதுருகிக் கண்ணீரோடு பாவ அறிக்கை செய்திட்டால் இவர்களுக்கு அருள் பணியாளர்களே பாவ மன்னிப்பு வழங்கலாம். முன்பு இப்படிப்பட்டவருக்கு மன்னிப்பினை அளிக்கும் உரிமை மறைமாவட்ட ஆயர்களுக்கே உரியதாயிருந்தது.

3. புனித பத்தாம் பத்திநாதர் சபைக் குருக்களுக்கான அங்கீகாரம் :
    இரண்டாம் வத்திக்கான் சங்கம் கொணர்ந்த மறுமலர்ச்சிக் கொள்ளைகளை ஏற்றுக் கொள்ளாது பழைமைவாதிகளாகப் பேராயர் லெபேபர் அவர்களின் தலைமையில் திருத்தந்தை  புனித பத்தாம் பத்திநாதரின் துறவற சபை செயல்பட்டு வருகிறது. இதில்; இணைந்து செயல்படும் அருள்பணியாளர்கள் மன்னிக்கப்பட்டு தாய் திருச்சபையில் இணைந்ததாகக் கொள்ளப்படுவர்.

4. இறை இரக்கத்தின் திருத்தூதர்கள் :
    நற்செய்திப் பணியினுக்கு மன்னிக்கும் பண்பே திறவுகோல். எனவே மன்னிக்கும் பண்பு கொண்டோரை உள்ளடக்கிய இறை இரக்கத்தின் திருத்தூதர்கள் என்ற அமைப்பு ஏற்படுத்தப்படும். இந்தக் குழுவில் இணைந்து செயல்படும் அருள் பணியாளர்களுக்கு கருக்கலைப்பு புரிந்தோர் மற்றும் பாவ வாழ்வில் உழல்வோரின் பாவங்களை மன்னிக்கும் சிறப்பு அதிகாரம் மறைமாவட்ட ஆயரால் அளிக்கப்படும்.

5. உடல் சார்ந்த இரக்கச் செயல்கள் :
    பசியோடிருப்போருக்கு உணவளித்தல், தாகமுற்றோரின் தாகம் தணித்தல், ஆடையற்றோருக்கு ஆடை வழங்குதல், அந்நியரை வரவேற்றல், நோயுற்றோரை நலம் பெற செய்தல், சிறையிலிருப்போரைச் சந்தித்தல் மற்றும் இறந்தோரை அடக்கம் செய்தல்.

6. ஆன்மீக இரக்கச் செயல்கள் :
    சந்தேகமுற்றோருக்கு ஆலோசனை வழங்குதல், அறியாமையில் இருப்போருக்கு கற்பித்தல், பாவிகள் மனந்திரும்ப ஊக்குவித்தல், துன்பத்தில் உழல்வோருக்கு உதவுதல், தவறிழைப்போரின் பாவங்களை மன்னித்தல், தீமை புரிவோருக்காகப் பொறுமையுடன் செபித்தல், வாழ்வோர் மற்றும் இறந்தோருக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்ளுதல்.

7. சுற்றுச்சூழல் பாதுகாப்பு :
    சுற்றுச்சூழல் பாதுகாப்பினால் ஏற்படும் தீமைகளை களைந்திட முயற்சிகளை மேற்கொள்ளுதல், சாத்தானின் எச்சம் தான் முதலாளித்துவக் கோட்பாடு. இதனால் விளையும் புவி வெப்ப மயமாதல் அறவே தவிர்க்கப்படல் வேண்டும்.

8. ஏழையர் மற்றும் உதவியற்றோருக்குத் தஞ்சம் :
    சமூகத்தில் புறந்தள்ளப்பட்ட ஏழையர், அனாதைகள் மற்றும் அகதிகளுக்கு அடைக்கலம் தந்து இறைவனின் இரக்கத்தினையும், கருணையினையும் உணர்ந்திடச் செய்தல் வேண்டும்.

இறை இரக்கத்தின் திருத்தூதர்
புனித பாஸ்டினா கோவல்ஸ்கா
(25, ஆகஸ்ட் 1905 ‡ 5 அக் 1938)
    போலந்து நாட்டின் குளோகோலிக் என்னும் கிராமத்தில் தனது பெற்றோரின் 10 குழந்தைகளில் மூன்றாவதாகப் பிறந்தவர் யஹலினா கோவல்ஸ்கா. இவர் வார்சா நகரில் உள்ள இரக்கத்தின் அன்னை துறவற சபையில் தன்னை இணைத்து, இறைவனின் இரக்கத்தில் நம்பிக்கை கொண்டு துறவு வாழ்வு வாழ்ந்தார். யஹலினா என்னும் இவரின் இயற்பெயர், பேறுபெற்றவர் என்னும் பொருள் கொண்ட பாஸ்டினா என்ற பெயரோடு 30.04.1926 அன்று துறவற ஆடை பெற்றார்.
    தனது கடின செப, தப வாழ்வினால் இயேசுவின் இரக்கப்பெருக்கினை பலமுறை காட்சிகளில் கண்டார். அக்காட்சிகளில் இறைவன் தந்த செய்திகளைத் தனது குறிப்பேட்டில் பதிவு செய்தார். இவரின் ஆன்மீக குரு அருள்திரு. மைக்கின் சொபோக்கோ என்பவரின் ஆலோசனைப்படி அருள்சகோதரி பாஸ்டினா காட்சியில் கண்ட இயேசுவின் திருஉருவம் வரையப்பட்டது. நமதாண்டவரின் திரு இதயத்திலிருந்து ஒளிக்கதிர்கள் வெளிப்பட்ட அந்த ஓவியத்தின் கீழ் இறைக்கட்டளைப்படி இயேசுவே உம்மில் நான் நம்பிக்கை வைக்கிறேன் என்ற வாசகம் பொறிக்கப்பட்டது.
    1937ஆம் ஆண்டு கிராக்கோ நகரில் இறை இரக்கத்தின் ஆண்டவர் ஆலயம் எழுப்பப்பட்டு இதே திருத்தலத்தில் அருள் சகோதரி பாஸ்டினாவின் உடல் 1955ஆம் ஆண்டு அடக்கம் செய்யப்பட்டது. இந்தத் திருத்தலப் பேராலயத்திலிருந்துதான் இறை இரக்கத்தின் ஊற்று வழிந்தோடி உலகெங்கும் பாய்ந்தோடி இறைமக்களின் வாழ்வினை வளப்படுத்தி வருகின்றது.
    திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் உயிர்ப்புக் காலத்தின் இரண்டாம் ஞாயிற்றக் கிழமையினை இறை இரக்க ஞாயிறு எனப் பறைசாற்றினார். இறைவனின் இரக்கத்தினை உலகிற்கு அருள்சகோதரி பாஸ்டினா அவர்களால் இறை இரக்கத்தின் திருத்தூதர் எனப் பெயரிட்டு 18.04.1993 அன்று இவரை அருளாளர் நிலையினுக்கு உயர்த்தினார். மூவாயிரமாண்டின் முதல் புனிதையாக 30.04.2000 அன்று திருத்தந்தை ஜான்பால் இந்த அருள்சகோதரியைப் புனிதை என்னும் பட்டமளித்து பெருமைப்படுத்தினார்.
    1978லிருந்து 2005 வரை 27 ஆண்டுகள் திருச்சபையை வழிநடத்திய திருத்தந்தை ஜான்பால் இறை இரக்கப் பக்தியை உலகெங்கும் பரப்பினார்கள். இன்றைய உலகுக்குத் தேவை இரக்கம் நிறைந்த மனங்கள். இறை இரக்கத்தின் ஆற்றல் உலகை நிரப்பி மக்கள் மகிழ்ச்சியோடும், மன நிறைவோடும் வாழ்ந்திட எதிர்வரும் இறை இரக்கத்தின் ஆண்டு அருள்புரியட்டும்.

- அருள்பணி.அ. பிரான்சிஸ்,  பாபநாசம்

வெற்றிக்கான கண்ணாடி

எதிர்பாராத சூழல்கள் யாருக்குமே ஏற்படும். அவற்றைக் கையாளுவதில் உங்கள் திறமை எப்படி?
    சீக்கிரமே அதிலிருந்து வெற்றிகரமாக மீண்டு வருவீர்கள் அலலது சுருண்டு விடுவீர்களா? அறிந்துக் கொள்ள கீழே உள்ள கேள்விகளில் உங்களுக்குப் பொருத்தமான பதில்களைக் கிளிக் செய்யுங்கள். இறுதியில் உள்ளன மதிப்பெண்களும், மதிப்பீடும், ஆலோசனைகளும்.
1. ஒரு பிரச்சனையை இந்த விதத்தில் சமாளித்தால் அதன் விளைவு இப்படியிருக்கும் என்பதை உங்களால் சரியாக யூகிக்க முடிகிறதா?
  • நிச்சயம்
  • குழப்பமாகத்தான் இருக்கும். வருங்காலத்தில் என்ன நடக்கும் என்பதை சரியாகக் கணிக்க முடியுமா என்ன?
  • ஒன்றென்ன அதற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் விளைவுகள் நேரலாம். அத்தனையையும் எண்ணிப் பார்த்துவிட்டுதான் பிரச்சனையை அணுகுவேன்.
2. பொதுவாக பெரும் பிரச்சனைகள் வரும்போது என்ன செய்வீர்கள்?
  • தெரிந்தவர்கள் யாரிடமாவது அதைக் கையாளச் சொல்லி கெஞ்சுவேன்.
  • நெருங்கியவர்களின் துணையுடன் அதைச் சமாளிக்க முற்படுவேன்.
  • நிதானப்படுத்திக் கொண்டு அதை எப்படித் தீர்ப்பது என்று சீரியஸாக யோசிப்பேன்.
3. வாழ்க்கையில் தவறான முடிவுகளை நீங்கள் எடுத்துவிட்டால் என்ன செய்வீர்கள்?
  • தவறான முடிவா? நானா? சான்ஸ் இல்லை.
  • அதை மற்றவர்களுக்குத் தெரியாமல் மறைக்க முயற்சிப்பேன்.
  • தவறுகளை வெளிப்படையாக ஒப்புக்கொள்வேன்.
4. பிறர் உங்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை உங்களால் சரியாகக் கணிக்க முடிகிறதா?
  • முடிகிறது, ஆனால் அதுபற்றி எனக்கு அக்கறையில்லை.
  • அதெல்லாம் எனக்குத் தேவையில்லாத வி­யம்.
  • முடிகிறது, ஓரளவாவது அந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முயற்சிப்பேன்.
5. ஒரு துன்பம் வந்தால் கைகொடுக்க சிலராவது நிச்சயம் இருக்கிறார்களா உங்களுக்கு?
        அ. சந்தேகமில்லாமல்.
    ஆ. அப்படி யாரும் இல்லை என்பதுதான் வருத்தமான வி­யம்.
    இ. ஆறுதல் கூற இருக்கிறார்கள், கைகொடுப்பார்களா என்று தெரியவில்லை.
6. திடீர் முடிவுகளை உடனடியாக அமல்படுத்துவீர்களா?
    அ. பலமுறை அப்படி செய்திருக்கிறேன்.
    ஆ. சில தடவை அப்படி செய்ததுண்டு.
    இ. திடீர் முடிவுகள் தோன்றினாலும் நன்கு யோசித்த பிறகுதான் செயல்படுத்துவேன்.
7. ஒரு பெரும் பிரச்சினை உண்டானால் எப்படி உணர்வீர்கள்?
    அ. மூளையில் ஏதோ வெற்றிடம் உண்டானது போல் செயலிழந்த நிலை ஏற்படும்.
    ஆ.    அதிர்ச்சியிலிருந்து சிரமப்பட்டுத்தான் மீள வேண்டியிருக்கும்.
    இ.    சிறிது நேரத்தில் சமாளித்துக் கொண்டுவிடுவேன்.
8. வாழ்க்கையில் எதுபோன்ற லட்சியங்களைக் கொண்டிருக்கிறீர்கள்?
    அ. மிக உயர்ந்த இலட்சியங்களை.
    ஆ. இலட்சியம் என்றெல்லாம் எதுவுமில்லை.
    இ.    அடையக்கூடிய எளிதான இலட்சியங்களைத்தான் கொண்டிருக்கிறேன்.

கேள்வி எண்        மதிப்பெண்கள்
            அ        ஆ        இ
    1        1        2        3
    2        1        2        3
    3        3        1        2
    4        2        3        1
    5        3        1        2
    6        3        2        1
    7        1        2        3
    8        3        1        2
உங்கள் மதிப்பெண்கள் 12 வரை என்றால்
    பிரச்சினை என்றாலே ஓடி ஒளிவதும் இடியோசை கேட்ட நாகம் போல மிரளுவதுமே உங்கள் தன்மை. இந்தத் தன்மையே உங்கள் பிரச்சினையை அதிகமாக்கும். இதோ சில ஆலோசனைகள். மறக்காமல் படியுங்கள்.
உங்கள் மதிப்பெண்கள் 13‡லிருந்து 17 வரை என்றால்
    பிரச்சினைகளின் தன்மையை ஓரளவாவது புரிந்து கொள்ள முயற்சிக்கிறீர்கள். புரிந்து கொண்டதை செயல்படுத்துவதில் அவ்வப்போது தடுமாற்றம்  உண்டாகிறது. உங்களுக்கு இதோ சில ஆலோசனைகள் உங்களுக்கு உதவும்.
உங்கள் மதிப்பெண்கள் 17க்கு மேல் என்றால்
    பிரச்சினையே இல்லையயன்றால்தான் உங்களுக்கு ஒரு வருத்தம் ஏற்படுமோ என்னவோ! போர்க்குணம் நிரம்பிய உங்களால் எந்தப் பிரச்சினையையும் புறம் காணச் செய்ய முடியும்.
இதோ சில ஆலோசனைகள் :
    பிரச்சினை என்பதைவிட அதை சவால் என்று எடுத்துக் கொள்ளுங்கள். எதிர்கொள்ளும் தைரியம் அதிகமாகும். கடந்த காலத்தில் நீங்கள் பிரச்சினைகளைச் சந்தித்திருப்பீர்கள். அவை நிரந்தரமாக நின்றுவிடாமல் எப்படியோ தீர்க்கப்பட்டிருக்கும். இதை மனத்தில் கொண்டு வந்தாலே பாதி டென்­ன் குறைந்துவிடும்.
    தானாக அமையாவிட்டாலும், நீங்களாக முயன்றாவது ஒரு நெருங்கிய நட்பு உறவு வட்டத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். பிரச்சினை என்று வரும்போது இந்த வட்டத்தின் காரணமாக மனத்தில் ஒரு தனி தெம்பு உண்டாகும். மேலும், விரைவாக பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். அதிர்ச்சி, குழுப்பம் என்பதெல்லாம் உடனடியாக ஏற்படும்தான். ஆனால், இவை ஒருபோதும் தீர்வை அளிக்காது. சீக்கிரமே சீரான மன நிலையை அடைந்து பிரச்சினையை நேருக்கு நேர் சந்திக்கத் தயாராகுங்கள். சில பிரச்சினைகைள கண்டு கொள்ளாமல் விட்டால் அவையே எப்படியாவது சரியாகிவிடும். எனவே ஒரு பிரச்சினைக்கு நீங்களாகத் தீர்வு காண முயற்சிப்பதற்கு முன் இந்தக் கோணத்தையும் யோசித்து  பார்ப்பது நல்லது.
Fr. S. John Kennedy

புனித அவிலா தெரசம்மாள்

    3 ஆண்டுகளுக்குப் பின் நம் அன்னை தெரசாள் மீண்டும் மடம் நிறுவ செகோவியாவிற்கு அருள்திரு ஜீலியன் சுவாமிகளுடனும், புனித சிலுவை அருளப்பருடனும் ஒரே ஒரு சகோதரியை மட்டும் அழைத்துச் சென்றாள். அவர்களுடன் அன்டோனியோ கேடன் என்பவரும் சென்றார். இவர் தன் மனைவி இறந்த பிறகு பிள்ளைகளை செவிலித்தாயிடம் ஒப்படைத்துவிட்டு நம் அன்னை தெரசாளின் புதிய மடங்களை நிறுவும் பணியில், தான் அவர்களுக்கு உதவி செய்வதாகவும், தன்னை ஏற்றுக் கொள்ளுமாறும் வேண்டி நிற்க, அன்னையும் அவரை ஒரு முக்கிய காரணத்திற்காக செகோவியா மடத்தை நிறுவ அழைத்துச் சென்றாள். பாஸ்ட்ரானா மடத்தில் இளவரசி ஆண்மென்டோன்ஸாவின் கொடுமைகளுக்கும், சீற்றத்திற்கும் பலியாகி தவித்த மாசற்ற தன் வெண் புறாக்களை செகோவியா மடத்திற்குக் கடத்தி வருவதே அன்டோனியோ கேடனுக்கிடப்பட்ட வேலை.
    பாஸ்ட்ரானாவில் இளவரசன் இறந்ததும், இளவரசி தன் பரிவாரங்களோடு மடத்திற்கு வந்து, தானே சபையுடை அணிந்து கொண்டு ஒழுங்குக்கு விரோதமாக உல்லாச வாழ்க்கை வாழ விரும்பினாள். ஏனெனில் இவள் தரும் நன்கொடைகளைக் கொண்டு சகோதரிகள் வாழ்ந்து வந்தனர். அடைப்பு ஒழுங்கை மீறி வெளியே செல்வது. தன் விருப்பம்போல் வெளிமனிதரோடு தொடர்பு கொள்வது போன்ற அத்துமீறிய செயல்களால் தன் ஊழியக்காரிகளை நவகன்னிகைகளாக ஏற்றுக் கொள்ள இல்லத் தலைவி அவளிடம், இந்த எளிய மடம் உம்மைக் கொண்டிருப்பது மதிப்புக்குரிய ஒன்று என்பது உண்மைதான். ஆயினும் இளவரசி தன் மாளிகையில் வாழ்வதே சிறந்ததாகும் என்று சாதுரியமாகவும், அதே சமயத்தில் உறுதியாகவும் கூறினாள். அரசன் 2ஆம் பிலிப்பும் அவளைத் தன் மாளிகைக்குச் செல்லுமாறு கட்டளையிட, சீற்றத்துடன் அவள் அரண்மனைக்குத் திரும்பி வந்தாள். மடத்திலுள்ள 14 கன்னியர்களையும் துன்பத்திற்கு உள்ளாக்குவேன் என்று சபதம் கூறி, அவர்களுக்குத் தான் கொடுத்த பண உதவியை நிறுத்திவிடவே, சகோதரிகள் மிகவும் துன்புற்றனர். பாச உணர்வும், இரக்கமும் நம் அன்னையைத் தூண்ட, அருள்திரு ஜீலியன் சுவாமிகளையும், அன்டோனியோ கேடன் என்பவரையும் அங்கு உடனே அனுப்பி வைத்தாள். அவர்களிருவரும் சகோதரிகளை இரவோடு இரவாக கிராமத்திற்கு வெளியே அழைத்து வந்து, முன்கூட்டியே தாங்கள் ஏற்பாடு செய்திருந்த வண்டிகளில் நீண்ட பிரயாணத்திற்குப் பின் அவர்கள் 7 நாட்கள் கடந்து செகோவியாவிற்கு வந்து சேர்ந்தார்கள்.
    தன் மக்களைக் கண்டதும் நம் அன்னை தெரசாள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அறிவுத் திறமையும், விவேகமும், மிகுந்த துணிவும் கொண்ட பாஸ்டரானா மடத்து தலைவியான இஸபெல்லா சகோதரியை அன்னை செகோவியா மடத்திற்கு தலைவியாக நியமித்தாள். நம் அன்னையை எப்படி பழிவாங்கலாம் என்று பாஸ்ட்ரானாவில் இளவரசி சதித்திட்டம் தீட்டியபொழுது, அன்னை செகோவியாவில் தே தேயும் பாடி ஒவ்வொரு அறையாகச் சென்று கதவைத் திறந்து புதுமடத் திறப்பு விழா நடத்தி, தன் வெண் புறாக்களோடு மகிழ்ந்திருந்தாள். இனி கிறிஸ்துவைத் தவிர இம்மடத்தை வேறெதுவும் ஆட்சி செய்யக்கூடாது என்று சொல்லி அதன் நினைவாக ஓர் சிறு பீடத்தையும் அமைத்து அலங்கரித்தாள்.
வழிகாட்டும் விண்மீன்கள் :
    அன்னை அவிலாவிற்குத் திரும்பியதும் பீஸ் என்னுமிடத்தில் மடம் நிறுவ வழக்கம்போல் அருள்திரு ஜீலியன் சுவாமிகளையும், 8 சகோதரிகளையும் அழைத்துச் சென்றாள். மலைத்தொடர்கள், செங்குத்தான பள்ளத்தாக்குகள் நிரம்பிய பகுதிகளிலும் பயணம் செய்ய வேண்டியிருந்தது. வண்டியோட்டிகள் பாதை தெரியாமல் தவிப்பதைப் பார்த்த அன்னை தன் மக்களிடம் நம் ஆண்டவரையும், புனித சூசையப்பரையும் நமக்கு வழிகாட்டும்படி செபியுங்கள் என்றாள். உடனே வெகு ஆழமான பள்ளத்தாக்கினின்று “நீங்கள் இந்த வழியாக வந்தால் செங்குத்தான பாறைகளிலும், மலைகளிலும் மோதி சாக நேரிடும். வண்டி கவிழ்ந்து விடும். ஆகவே முன்னேறி வரவேண்டாம்” என்று ஒரு குரல் சொன்னது. இதைக் கேட்ட வண்டியோட்டிகள் பின் எப்படிச் செல்வது? எனக் கேட்க அதற்கு அக்குரல், பின்னால் மெதுவாக போய் 100 சக்கர சுழற்சிக்குப் பின் சரியான பாதையைக் கண்டுபிடித்தனர். ஒரு வேலைக்காரப் பையன் குரல் வந்த திசை நோக்கி நீண்டதூரம் சென்றும் யாரையும் காணவில்லை என்றான். உடனே அன்னை தன் மக்களிடம் இது புனித வளனார் நம் மன்றாட்டுகளுக்கு அளித்த பதிலே என்றாள். குவாடல்குவீர் என்ற நதியைக் கடந்து சென்று அக்கரை சேர்ந்தார்களாம். அங்கு பீஸ் குடிமக்களும், சிறியோரும், பெரியோரும் கைகளில் சிலுவையேந்தி பவனியாக சகோதரிகளை அழைத்துச் சென்றார்கள். பீஸில் தான் நம் அன்னை சங்.எரோணிமூஸ் கிராசியன் சுவாமிகளை முதன்முதல் சந்தித்தார்கள். அவரும் சீர்த்திருத்தப்பட்ட சபையில் சேர்ந்து கடின செப தவ வாழ்வைப் பின்பற்ற விரும்பினார். அன்னையும் அவர்மீது நல்லெண்ணம் கொண்டு சீர்த்திருத்தப்பட்ட சபை முழுவதற்கும் தலைவராக ஏற்படுத்த பெருமுயற்சி செய்தாள். இந்நிலையில், தளர்த்தப்பட்ட சபையினர் புனித சிலுவை அருளப்பரை பலாத்காரமாக கடத்திச் சென்று பல துன்பங்களுக்கு உள்ளாக்கினர். எரோணிமூஸ் கிராசியனும் பல இன்னல்களுக்கும், கொடுமைகளுக்கும் ஆளாகினார். நாட்டுத் தலைவர்கள் இதற்கெல்லாம் காரணமான அன்னையை நாடு கடத்தவும் முயற்சி செய்தனர். இதையயல்லாம் கேள்வியுற்ற அன்னை மனவேதனையால் நொறுங்குண்டவளாய் ஒருநாள் சாப்பிடவும் மறுத்து அமர்ந்திருக்கும்பொழுது, நம் ஆண்டவர் அங்குத் தோன்றி அவளது கைத்துண்டை தாமே விரித்து ரொட்டியைப்பிட்டு அவளது வாயில் ஊட்டினாராம். மேலும், இதோ  மகளே அஞ்சாதே, நீ படும் துன்பங்களை நான் அறிவேன். தைரியமாயிரு. இதெல்லாம் ஒன்றுமில்லாமல் மறைந்து போகும் என ஆறுதல் கூறினார். இதை நம் சகோதரி அன்னா பர்த்தலோமேயு அருகிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தார்களாம்.

நான் எழுத்தாளன் ஆனேன்

    ஸ்டாலுக்கு ஒரு புதிய கிளார்க் வந்திருந்தார். அவர் அருகில் அமர்ந்து, அப்போதுதான் வந்திருந்த ‘குமுதம்’ கட்டை பிரித்துக் கொண்டிருந்தேன். ‘கல்கண்டு’ம், குமுதம் கட்டுடன் சேர்ந்துதான் வசூல். கட்டை பிரித்துக் கொண்டிருந்த நான் அவரிடம் சொன்னேன், “தமிழ்வாணன் ரொம்ப நல்லா எழுதுறான் சார்” என்று.
    “அவரோட மச்சினன்தான் நான்” என்றார் அவர். நான் திடுக்கிட்டேன். என்னுடைய திகைப்பை அதிகமாக்குவது போல், அவர் சொன்னார் : “அதோ, பேப்பர் படித்துக் கொண்டிருக்கிறாரே, அவர்தான் அவரோட அண்ணன்” என வைரவன் செட்டியாரைக் காண்பித்தார்.
    திரு. வைரவன் செட்டியாரைப் பற்றி  சொல்லி விடுகிறேன். வைரவன் செட்டியார் திரு. இராமச்சந்திரனுடைய நண்பர். ஸி.ணூ.ளீ - யின் பிராவிடெண்ட் பகுதியில் உயர் அதிகாரியாக இருந்தார். தினசரி மாலையில் வருவார். திரு. இராமச்சந்திரனுடன் பேசிக் கொண்டிருப்பார். பத்திரிக்கைகளை உரிமையுடன் புரட்டுவார். வீட்டுக்குப் போகும்போது நான் துணைக்குப் போவேன்.
    அவர் வீடு கல்லுக்குழியில் இருந்தது. என்னைத் துணைக்கு அவர் தேர்ந்தெடுத்ததன் காரணம், நான் கொஞ்சம் டீயஸண்ட்டாக இருப்பேன் என்பதுதான். திருச்சி ஜங்­னில் 8 பிளாட்பாரங்கள் உண்டு. ஏராளமான தண்டவாளங்கள். இரவு நேரத்தில் ஒரு துணையுடன் போவது நல்லதல்லவா? இதுதான் என்னை அவர் தேர்வு செய்ததற்குக் காரணம்.
    அப்படி ஒருநாள் அவர் வீட்டுக்குப் போகும்போது, நான் ஒரு கதை எழுதித் தரேன். கல்கண்டுல போடச் சொல்றீங்களா சார்? என்று கேட்டேன்.
    நீ கதைகூட எழுதுவியாடா? என்று அவர் கேட்டார்.
    எழுதுவேன் சார். ஆனா, பத்திரிக்கைகளில் வந்ததில்லை என்றேன்.
    சரிடா, நான் அடுத்த வாரம் மெட்ராசுக்குப் போவேன். எழுதிக் குடு. போட சொல்றேன் என்றார். உடனே ஒரு கதை எழுதி, தபால் தலை வைத்து (கதை பிரசுரத்துக்கு ஏற்றதாக இல்லை என்றால், ஸ்டாம்ப் வைத்தால்தான் திருப்பி அனுப்புவார்கள் என்று படித்திருந்தேன்) அவரிடம் கொடுத்தேன்.
சென்னை சென்று திரும்பிய அவர், போட சொல்லி, சொல்லியிருக்கேண்டா என்றார். மேலும் அவர் ஆமா, கதை எழுதி என்கிட்டத் தானே குடுத்தே! அப்புறம் ஏண்டா ஸ்டாம்பு வச்சே? என்று கேட்டார். எனக்கு பதில் சொல்லத் தெரியவில்லை.
    1951ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 15ஆம் நாள் எனது முதல் சிறுகதை கல்கண்டில் அட்டைப் படக்கதையாக வெளியானது. நான் எழுத்தாளன் ஆனேன்.
    ஒருதடவை தமிழ்வாணன் திருச்சிக்கு வந்தார். அப்போது அவரது அண்ணன் வைரவன் செட்டியார், ரொம்ப ஏழைப் பையன், பார்த்துக் கொள் என்று சொன்னார். அதற்கு தமிழ்வாணன் இவன் நல்லா முன்னுக்கு வருவான் என்று சொன்னதோடு, அப்போது வெளியாகியிருந்த ஒரு சிறுகதையின் ஒரு பாராவைப் படித்துக் காண்பித்தார்.
    அன்று அவர் சொன்ன வாக்குப் பலித்தது. இன்று நான் ஒரு குறிப்பிடத்தக்க கத்தோலிக்க எழுத்தாளனாக இருக்கிறேன்.
    ஹிக்கின்பாதம்ஸ் புக் ஸ்டாலுக்கு அகிலன், சுகி, சுப்பிரமணியன், ராகவன், தாமரை மணாளன் போன்ற பிரபல எழுத்தாளர்கள் வருவார்கள். நான் கதை எழுதுகிறேன் என்று தெரிந்ததும், சிறுகதை எழுதுவதற்கான உத்திகளைச் சொல்லித் தருவார்கள். கதை எழுத வி­யம் கிடைத்ததோ இல்லையோ, நான் ஆங்கில அறிவை வளர்த்துக் கொண்டேன்.
(இன்னும் சொல்வேன்)
‡ திரு. லெயோ ஜோசப்

15-11-2015 பொதுக்காலம் 33ஆம் வாரம்

I. தானி 12 : 1 -  3 ; II. எபி 10 : 11 -  14, 18
நற்செய்தி : மாற் 13 : 24 -  32
இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது. மனம் மாற வேண்டும் (மாற் 1 : 15)
மானிட மகன் கதவை நெருங்கி வந்துவிட்டார் (மாற் 13 : 29)
ஆனால் அந்த நாளும் வேளையும் தந்தையைத் தவிர எவருக்கும் தெரியாது (மாற் 13 : 32)
இயேசவின் இரண்டாம் வருகை விரைவில் வர இருக்கிறது என்று ஒரு சில பிரிவினை சகோதரர்கள் தீவிரமாக பேசி வருகிறார்கள். அண்மையில், இளம்குரு ஒருவர் டெங்கு காய்ச்சலினால் திடீரென்று இறந்து விட்டார். சொர்ணமாணிக்கம் என்ற தீவிர நற்செய்தி பணியாளர் நேற்று (16- 10- 2015) அன்று திடீரென்று இறந்து விட்டார். இவையயல்லாம் எதிர்பாராதவை. கதிரவன் இருண்டுவிடும், நிலா ஒளி கொடாது. விண்மீன்கள் வானத்திலிருந்து விழுந்த வண்ணம் இருக்கும். அப்போது மானிட மகன் மேகங்கள் மீது மிகுந்த வல்லமையோடு மாட்சியுடனும் வருவார். வருகின்ற டிசம்பர் 16 முதல் 22 வரை உலகில் இருள் நிலவும் என்று நாசா நிறுவனத்தில் ஒருவர் கூறியுள்ளார். சூரியனில் ஏற்படும் ஒரு புயலினால் இப்படி உண்டாகலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர். சூரியன் இன்னும் 5 இலட்சத்தின் இலட்சம் ஆண்டுகளுக்கு (5 பில்லியன்) எரிந்து ஒளிக் கொடுக்கும். ஏற்கனவே 4.6 இலட்சத்தின் இலட்சம் ஆண்டுகளுக்கு (4.6 பில்லியன்) எரிந்து ஒளி கொடுத்துவிட்டது.
இன்றைய நற்செய்தி பகுதி, மாற்கு நற்செய்தியில் வருகிற இயேசுவின் இறுதி உரை (மாற் 13 : 1 -  37) என்ற தொகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இதில் மானிட மகனின் வருகையைப் பற்றியும் சீடர்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றியும் பார்க்கிறோம். கதிரவன் இருண்டுவிடல், நிலா ஒளி கொடுக்காதது என்பவை பழைய ஏற்பாட்டில் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன (எசா 13 : 10, எசே 32 : 7, ஆமோ 8 : 9 யோவேல் 2 : 10 -  31, 3 : 15, எசா 34 : 4, ஆகாஸ் 2 : 6 -  21 ). இந்த விண்ணக கோள்களின் அழிவு நிலை மானிட மகனின் வரவிற்குமுன்பாக நடைபெறுகிறது. பழைய ஏற்பாட்டில், விண்ணக கோள்களின் அழிவுநிலை தண்டனையின் அடையாளமாக காட்டப்பட்டுள்ளது. திருவழிபாட்டு ஆண்டின் கடைசி ஞாயிறன்று உலக முடிவினைப் பற்றியும், மானிட மகனின் வருகையைப் பற்றியும் படிக்கிறோம். உலக முடிவு பற்றி கவலைப்பட தேவையில்லை. ஏனென்றால் உலக முடிவு காலத்தைப் பற்றி தந்தை ஒருவருக்குத் தான் தெரியும். ஆனால் நம் வாழ்வு உலக முடிவைப் பற்றி நாம் சிந்தித்துப் பார்க்கலாம். நம் முடிவின் கால நேரத்தை தெரிந்துக் கொள்ள முடியாத நிலையில் பணிவுடனும், பரந்த மனப்பான்மையுடன் வாழ வேண்டும். தலையில் தூக்கிகிட்டு போரதில்லை என்று கூறுவோம். ஆனால், தலைகனம் பிடித்தவர்களாய், பொருள் ஆசை, பேய் பிடித்தவர்களாய் வாழ்கின்றோம். அரசியல்வாதிகள், செல்வந்தர்கள் பொருளுக்குமேல் பொருளும், பணத்திற்கு மேல் பணமும் சேர்க்கிறார்கள். பகிர்வதைப் பற்றி அவர்கள் நினைத்துப் பார்ப்பதில்லை. இந்தியாவில் 2 1/2 இலட்சம் கோடீஸ்வரர்கள் உள்ளனர். ஆளால் 32.7 சதவிகித மக்கள் வறுமை கோட்டிற்கும்கீழ் வாழ்கிறார்கள். நடமாடக் கோயில் நம்பர்க்கொன்று ஈயில் படமாடக் கோயில் பகவற்க தாமே -  திருமந்திரம்
ஏழையர் நடமாடும் கோயில். அவர்களுக்கு உதவிசெய்வது இறைவனுக்கே செய்வது என்று இயேசுவின் கருத்துக்களை அருமையான கவிதை வடிவில் கூறுகிறார். பகிர்தலினால் மரண பயம் போகும்.

-  அருட்பணி. S.I. அருள்சாமி

22-11-2015 கிறிஸ்து அரசர் பெருவிழா

I. தானி 7 : 13 -  14 ; II. தி.வெ. 1 : 5 -  8
நற்செய்தி : யோவா. 18 : 33 -  37
               முடியரசு மறைந்து குடியாட்சி கோலோட்சும் இக்காலத்தில் இன்னும் சில நாடுகளில் பாரம்பரிய மன்னர்கள், அவர்களின் வழிமரபினர், அவர்களின் பாரம்பரியம் கவனமாகப் பாதுகாக்கப்படுகிறது. அவர்கள் காட்சிப் பொருளைப் போல வலம் வருகிறார்கள். இங்கிலாந்தின் தற்போதைய அரசி, எலிசபெத் 63 ஆண்டுகள் அரசியாக இருந்து வரலாறு படைத்திருக்கிறார். ஹாலந்து, பெல்ஜியம், ஜப்பான், தாய்லாந்து ஆகிய வளர்ந்த  நாடுகளிலும் அரச பாரம்பரியம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்கிலாந்து அரசி, ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளுக்கும் அரசியாக விளங்குகிறார். அரச வாரிசு பிறந்து விட்டால் அதனை பெரிதாக கொண்டாடுகிறார்கள். இயேசு அரசர் என்று இயேசுவின் தலைமை வழி நடத்துதலை இன்று கொண்டாடுகிறோம். முதலில் இயேசு விண்ணகம் சென்ற விழாவை கிறிஸ்து அரசர் பெருவிழாவாக கொண்டாடினார்கள். 1925இல் பதினோராம் பியுஸ் என்ற திருத்தந்தை அக்டோபர் மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையில் இவ்விழாவைக் கொண்டாட ஆணையிட்டார். ஆனால் 1965இல் திருத்தந்தை ஆறாம் சின்னப்பர் செய்த திருவழிபாட்டு சீர்த்திருத்தத்தில் திருவருகைக் காலம் தொடங்குவதற்கு முந்தைய ஞாயிறன்று இவ்விழாவை குறித்தார்.
               இன்றைய நற்செய்தியில், பிலாத்துவின்முன் உண்மையைப் பற்றி இயேசு கூறுகின்ற விளக்கத்தைப் பார்க்கின்றோம். “உண்மையை எடுத்துரைப்பதே என் பணி, இதற்காகவே நான் பிறந்தேன், இதற்காகவே உலகிற்கு வந்தேன்.” (யோவா 18 : 37) என்கிறார் இயேசு.
யோவான் நற்செய்தியில் பல இடங்களில் இயேசு உண்மைக்குச் சாட்சியம் அளிப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது (யோவா 5 : 33, 8 : 40 -  45, 46). இயேசுவின் சீடர்களும் அந்த உண்மையை இயேசுவிடமிருந்து பெற்றுக் கொள்கிறார்கள் (யோவா 14 : 6 ; 17 : 17 -  19). இயேசு உண்மையின் உருவம். சாத்தான் பொய்மையின் உருவம். உண்மை என்பதற்கு எபிரேயத்தில் ஏமெத் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏமெத் என்றால் பிரமாணிக்கம் என்று பொருள். கடவுளுடான உறவில் உடன்படிக்கையில் உறுதியாயிருப்பது. இயேசு இறை உறவில் உறுதியாய் இருந்தார். அதே உறவில் வாழ தன் சீடர்களை அழைத்தார். எனவேதான், “என் வார்த்தைகளை நீங்கள் தொடர்ந்து கடைபிடித்து வந்தால் உண்மையில் என் சீடர்களாய் இருப்பீர்கள். உண்மையை அறிந்தவர்களாயும் இருப்பீர்கள். உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்என்றார் (யோவா 8 : 32). நம் நாட்டின் தலைவர்கள் சுயநலத்தின் வேர்களாக விளங்குகிறார்கள். பொய்மையின் தாய்நாடாக வாழ்கிறார்கள். மருந்துவிற்கும் ஏஜெண்ட்டைப் பார்த்து, “எப்படி வியாபாரம் செய்கிறாய்?” என்று ஒருவர்¼ கேட்டார். “கையிலேயே பை, கழுத்திலே டை, வாயிலே பொய்என்றார். ஓர் ஊருக்கு அரசியல்வாதி சென்றார் அங்குஇந்த ஊருக்கு பாலம் கட்டித் தருவேன்என்றார். அவருடைய செயலர், “இங்கு ஆறே இல்லை சார்என்றார். “புதிதாக ஆறு கொண்டு வந்தால் போகிறதுஎன்றார் தலைவர். பொய்மையின் தலைநகராக விளங்குகிறார்கள் நம் தலைவர்கள். கிறிஸ்து அரசர் கொண்டு வந்த அரசு
உண்மையின் அரசு, நீதியின் அரசு. உண்மையுடன் வாழ்ந்து, இறையாட்சியை உலகில் நிலவிட செய்வோம்.

-  அருட்பணி. S.I. அருள்சாமி

Ads Inside Post