Pages - Menu

Sunday 13 December 2015

தமிழரின் அறிவியல் சரித்திர சிறப்பு

தமிழரின் அறிவியல் சரித்திர சிறப்பு

பழந்தமிழர்களின் அறிவியல் சிந்தனைகள்
அருட்சகோ. விமலி
அறிவியல் என்ற சொல்லைக் கேட்கும்போதெல்லாம் மேலைநாடுகள்தான் நம் நினைவுக்கு வருகின்றன. அறிவியல் அறிஞர்கள் என்றால் கலிலியேவும், நியூட்டனுமே நம் கண்முன் வந்து நிற்கின்றனர். ஆனால் இவர்கள் கண்டனவாகப் பேசப்படும் பல உண்மைகளை, இன்றையத் தலைமுறையினர் பிறப்பதற்குப் பல நூற்றாண்டுகட்கு முன்னரே தமிழர்கள் அறிந்தனர் என்ற உண்மையை உலகம் அறிந்ததாகும். இவ்வகையில் பண்டையத்தமிழர் உணர்ந்த அறிவியல் களங்கள் பல.
வானவூர்தியல் :
பறவையைப்போல் பறக்க முடியுமா? என முதலில் கற்பனை செய்த மனிதன், அக்கற்பனை உண்மையானபோது விமானமாகப் பிறந்தது. இவ்வாறு பிறந்த வானவூர்தியைப் பற்றிய செய்தியைத் தமிழ் இலக்கியத்தில் புறநானூறும், சிலப்பதிகாரமும், சீவகசிந்தாமணியும் எடுத்தியம்புகின்றன.
“கோநகர் பிழைத்த கோவலன் தன்னொரு
வானவூர்தி ஏறினள் மாதோ” (சிலம்பு ‡ மதுரை காண்டம் 2‡28‡198)
என்று கி.பி.இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சிலப்பதிகாரம் கூறுகின்றது. மலைக்குறவர்களின் கண்ணெதிரில் ஆகாயத்திலிருந்து வந்திறங்கிய ஊர்தியில், கண்ணகி ஏறி தெய்வமாகிறாள் என்றும், 
வல்வன ஏவா வானவூர்தி
எய்துய என்பதஞ் செய்வினை முடித்தெனக் (புறம் ‡ 27)
என்று கி.பி. இரண்டாம் நூற்றாண்டிற்கு முன் எழுதப்பட்ட புறநானூற்று வரியும் மற்றும் சீவக சிந்தாமணியின் திருத்தக்கத்தேவரும் வானவூர்தியைக் கட்டமைத்த விதம், பற்றி கூறுகின்றனர். ஏமாங்காத மன்னன் சச்சந்தன் தன் மனைவி விசயை, தற்காத்துத் தப்பிச் செல்வதற்கான வேந்திறலான் பெருந்தச்சனைக் கூவியோர் எந்திரவூர்தி இயற்றிடின் என்றனராம். அதனால் அன்றைய கட்டமைப்பு வித்தகர் ஏழு நாட்களில் மயிற்பொறிஉருவாக்கிய விதத்தை இன்றைய பொறியாளரையும் வியப்பில் ஆழ்த்தும் என்பதை,
“பல்கிழியும் பயிலும் துகில் நுலோடு
நல்லரக்கும் மெழுகும், நலஞ் சான்றன
வல்லனவும் அமைத்தாங்கு ஏழு நாளிடை
செல்வதோர் மாமயில் செய்தனன் அன்றே”
என்ற பாடல் வரிகளும், பலவகைச் சீலைத் துணிகளும் பற்றுதற்குரிய பயின, இனப்பசை, சரிகை முதலான வெள்ளி இழைகளும் நல்ல அரக்கு வகைகளும், மெழுகு போன்ற கொழுப்பு வஸ்துக்களும் கொண்டு வானவூர்தி அமைக்கப்பட்டது என்பதை 
“பண்தவழ் விரலில் பாவை
பொறிவலந் திரிப்பப் பொங்கி
விண்தவழ் மேகம் பொழிந்து
விசும்புடைப் பறக்கும் வெய்ய”
சீவக சிந்தாமணி 239 என்ற பாடல் வரிகளும் வெளிப்படுத்துகின்றன.
நீரியல் :
ஒருபடிப் பாலையோ (அ) நீரையோ குறைத்து அளந்து காட்டமுடியாது. அழுத்தினால் நீர்ப்பொருட்கள் அளவில் சுருங்குவதில்லை. இவ்வியல்பை நீர்ப் பொருளின் சுருங்கா இயல்பு என்று அறிஞர் பாஸ்கல் கூறியுள்ளார். அதையே 12- ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒளவையார் அழகாகக் கூறுகிறார். காட்டாக,
“ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்
நாழி முகவாது நால்நாழி தொழி”
என்பதாகும். நீருக்கு அழுத்தம் உண்டு என்பதை, “ஆழ்கடல் நீர் ஆழ அமுக்கி முகக்கீனும்” என்ற தொடர் வெளிப்படுத்துகிறது. வேளாண்மைத் தொழிலுக்கு ஏரிகளிலிருந்து நீரினைப் பெற நீரைத் தேக்கி வைத்துக் கொண்டு தேவையான பொழுது வாரி, மதகு, மடை, வாய்க்கால், மடு போன்றவற்றைக் கட்டி தமிழர்கள் நீரைப் பயன்படுத்தினர் என்பதை
“தேவரின்றி வாடும் மரமெல்லாம்
நீர் பாய் மடையின்றி
நீள் நெய்தல் வாடும்”
என்ற வரிகள் உணர்த்துகின்றன. மேலும் நீரின் இன்றியமையாமையை
“நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வானின்று அமையாது ஒழுக்கு”
என்ற குறள்வழி உலகத்திலுள்ள உயிர்களனைத்தும் நீரில்லாமல் வாழமுடியாது என்று திருவள்ளுவர் கூறுகிறார்.
அணுவியல் :
அறிவியல் துறையின் முக்கியப் பிரிவாக இருப்பது அணுவியல், அணு மிகச்சிறிய துகளாகும். அணுக்களை உடைக்க முடியும் என மெய்ப்பித்துக் காட்டியவர் ரூதர்போர்டு. இருவருக்கு முன்னரே அணுவை பிளக்க முடியும் எனக் கூறியவர் ஒளவையார்,
“அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டி
குறுகத் தறித்த குறள்” (திரு.பா.- 2)
எனக் கூறியுள்ளார். இதனையே கி.பி.6-8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமூலரும்
“அணுவில் அணுவினை ஆதிப்பிரானை
அணுவில் அணுவினை ஆயிரம் கூறிட்டு
அணுவில் அணுவை அணுகவல் லார்கட்கு
அணுவில் அணுவை அணுகலும் ஆமே” (திருமந்திரம் - 2008)
என்று கூறியுள்ளார். கண்ணுக்குப் புலப்படாத நுண்பொருளே அணுவாகும். இத்தகைய அணுவுக்கு அணுவாக உள்ள பொருளை ஆயிரமாயிரமாகக் கூறுசெய்து, அந்த ஒரு கூறை ஆராய்ந்து காண வல்லவருக்கு உயிராகிய அணுவில் நுட்பாக மறைந்திருப்பவன் இறைவனாவான் என்றார். இவ்வாறு அணுவைப் பற்றிய சிந்தனைகளைப் பண்டையப் புலவர்கள் மக்களிடையே வேரூன்றச் செய்தனர்.
உலகம், அணுக்களின் பிணைப்பால் வெவ்வேறு வடிவமாக மாறியுள்ளது. இந்த அணுக்கள் ஒன்றோடு ஒன்று சேரும்போது பல்வேறு வடிவங்களைப் பெற்று மாற்றமடைகின்றன. காட்டாக, “வைத்தறு கலாதி எல மண்ணினால் வருமாபோல்” என்று மண்ணை எடுத்துக் குடமாக, சட்டியாக, செம்பாக அழகான வெவ்வேறு பொம்மைகளாகச் செய்கிறோம் என்றாலும், மூலப்பொருள் மண்தான். அணுக்கள் சேரும்போது சேர்க்கையின் அளவினைப் பொறுத்து புல்லாய், புழுவாய், மரமாய், கல்லாய், யூரேனியமாய், விறைநிலமாய், மனிதனாய் என்றெல்லாம் விளங்குகின்றன. அணுவின்றி ஒருபொருளும் அசையாது என்பது உண்மையாகும்.

அண்டவியியல் :
வெட்டவெளியும், அதனுள் அடங்கியிருக்கும் பொருள்களும் அண்டமாகும். இதைத்தான் பிரபஞ்சம், அகிலம் என்று கூறுவார்கள். இதில் கோடிக்கணக்கான மீன்மண்டலங்களும் வால்மீன்களும், எரிமீன்களும் சுழன்று கொண்டிருக்கின்றன என்பதை கி.பி.6‡8 நூற்றாண்டுகளில் வாழ்ந்த மாணிக்கவாசகர் அழகாகக் கூறுகிறார்.
“அண்டப்பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பருந் தன்மை வளப்பெரும் காட்சி”
என்னும் வரிகளில் அழகாக இயம்புகிறார்.
“பழந்தமிழர்களின் அறிவியல் சிந்தனை, அன்றாட வாழ்வில்
பயன்பாட்டிற்குரிய வாழ்வியல் சிந்தனை”
என்ற கருத்திற்கிணங்க பழந்தமிழர்களின் அறிவியல் அறிவு வளர்ச்சிப் பெற்று, இன்று நம் மக்களிடம் மாபெரும் வளர்ச்சியடைந்துள்ளது. வானவூர்தியின் விஞ்ஞான பரிணாம வளர்ச்சி, நீர்மப் பொருட்கள் அளவில் சுருங்குவதில்லை. உலகத்தில் உள்ள ஒவ்வொரு பொருளும் அணுக்களின் பிணைப்பாலானது. விண்மீன்கள் சூரியனிடமிருந்து ஒளியை பெற்று வலம் வருகின்றன. இந்த உலகமே அண்டத்திற்குள் அடக்கம் என்பதையும் இந்த உலகத்திலுள்ள ஒவ்வொரு பொருட்களிலும் அறிவியல் தொடர்பான செய்தியை கூறியுள்ளனர். இவை பின்வரும் சந்ததியினருக்கு வழிக்காட்டியாகவும் கருத்துப்புலப்படுத்தும் ஊடகமாகவும் இருந்தார்கள். இவைகளை வீழ்த்திய தொடர்பு ஊடகங்கள் உலகில் இல்லை என்பதை நாம் அறியமுடிகிறது.
அறிவியலில் சிறந்திருந்த தமிழகம், மீண்டும் அறிவியலில் தலைதூக்க ஆரம்பித்திருக்கிறது எனலாம். மேல்படிப்பு படிக்கின்ற ஆராய்ச்சியாளர்கள், புதியவைகளை கண்டுபிடிப்பதில் பெரிதும் ஆர்வம் காட்ட வேண்டும். அறிவியல் சார்ந்த கருவிகளுக்கு மேல்நாடுகளையே சார்ந்து நிற்கிறோம். அதனால் பெரும் தொகையை மேல்நாடுகளுக்கு கொடுக்க வேண்டியுள்ளது. அறிவியலில் ஆர்வம் காட்டுவோம். நம் அறிவியல் பாரம்பரியத்தினை வளர்த்திடுவோம்.

No comments:

Post a Comment

Ads Inside Post