Pages - Menu

Sunday 30 October 2016

BRICS - ஒருங்கிணைப்பும் இந்தியாவில் நிலையும்

BRICS - ஒருங்கிணைப்பும் இந்தியாவில் நிலையும்

(பொருளாதார விளக்கக் கட்டுரை)

 முனைவர். மனுவேல் ஜுலியஸ் சீசர், 
கலைப்புலத் தலைவர், தூய சவேரியார் கல்லூரி,

2001ஆம் ஆண்டு ஜிம் ஓ நில் என்ற பொருளாதார வல்லுநர் பிரேசில், சீனா, ரஷ்யா மற்றும் இந்தியா (BRICS) ஆகிய நாடுகள் தங்களின் திறன் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் காரணமாக பிற வளர்ந்த நாடுகளைக் காட்டிலும் பொருளாதாரத்தில் முன்னிலையில் வளரும் என்று ஆய்வு மூலமாக அறிவுறுத்தியதன் காரணமாகவும், இந்த நான்கு நாடுகளின் அயல்நாட்டு மந்திரிகள் 2006ஆம் ஆண்டு சந்திப்பின் காரணமாகவும் ஓர் ஒருங்கிணைப்பு ஏற்பட்டது.
2008ஆம் ஆண்டு உலக பொருளாதார மந்த நிலை ஏற்பட்டதன் காரணமாக அமெரிக்கா மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகள் பெறும் பொருளாதார நிலை ஆரோக்கியமான சூழ்நிலையில் இருந்ததன் காரணமாக ஒருங்கிணைப்பு வலுப்பெற்றது.

2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் BRICS நாடுகளின் நிதியமைச்சர்களின் முதல் மாநாடு பிரேசிலில் நடைபெற்றது. இம்மாநாட்டில் நிதி சார்ந்த பிரச்சனைகளில் ஒருங்கிணைந்து செயல்பட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் ஒவ்வொரு ஆண்டும், கொள்கை அடிப்படையில் பேராயம் நடத்துவதெனவும், அதன் பொறுப்பை சுழற்சி முறையில் BRICS நாடுகள் ஏற்றுக்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது. 2009ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்றது. 2010ஆம் ஆண்டு பிரேசிலில் நடந்த இரண்டாவது மாநாட்டில், BRICS கூட்டமைப்பில் ஓர் அங்கமாகும்படி தென் ஆப்பிரிக்காவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி ஒருங்கிணைப்பு BRICS  ஒருங்கிணைப்பாக உருப்பெற்றது. 

நம்நாட்டில் தற்போது, BRICS 8வது பேராயம் கோவாவில் அக்டோபர் மாதம் 15-16 தேதிகளில் நடைபெற்றது.

இந்த 5 நாடுகள் :
$ உலகில் உள்ள 42% மக்கள் தொகையை உள்ளடக்கியது.

$ உலக மொத்த உற்பத்தியில் 20% சதவீத உற்பத்தியை செய்யக்கூடியவை.

$ BRICS என்றால் ‡  Brasil, Russia, India, China and South Africa.

$  New Vision - Building Responsive, Inclusive and Collective Solutions (BRICS)   
  
$ பொருளாதார ஒருங்கிணைப்பு விஸ்தரிக்கப்பட்டு கல்வி, கலாச்சாரம், கட்டமைப்பு, வேலைவாய்ப்பு,   ஒருங்கிணைப்பு, ஆராய்ச்சி போன்றவற்றில் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டது.

$ முதலீடு செய்ய திறம் பெற்றவை மற்றும் அதிகபடியான நுகர்வோரை கொண்டவை.

  வலுப்பெற்ற இந்த ஒருங்கிணைப்பு வரலாறாக மாறும். அந்த வரலாறு BRICS நாடுகளை வல்லரசாக உருமாற்றும்.

  தேச நலனையும், உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அதிகப்படுத்தும் நோக்கோடு செயல்படும் இந்தியா வல்லரசாக  மாற வாழ்த்துவோம், வளர்ச்சிக்குத் துணை நிற்போம்.

இரட்சணிய யாத்திரிகம், இறைவனின் பண்புகள்

இரட்சணிய யாத்திரிகம்

இறைவனின் பண்புகள்

- எம்.சி.குமார், எம்.ஏ., எம்.பில்., பி.எட்.,
விரகாலூர்

இறைவன் நீதி, கருணை, தூய்மை, அன்பு, தானாயிருத்தல், வல்லமை, அறிவு முதலிய பண்புகள் நிறைந்தவர். மேலும் அவர் குற்றமற்றவர், காமம், வெகுளி, மயக்கம் என்னும் முக்குற்றங்களையும் அழிக்கின்றவர்; பாவத்தை எரிக்கின்றவர், ஆதியும், அந்தமுமானவர் என இறைவனது பண்புகளை இரட்சணிய யாத்திரிகம் விரித்துரைக்கின்றது. அடுத்து இறைவன் பண்புகளை கலியாண குணத்து இறை என்ற சொல்லாட்சியைப் பயன்படுத்தி,

“நித்தியமாய்ப் பூரணமாய் நின்மலமாய் ஆனந்த நிலையமாகிச்
சத்திய ஞானந்தர்மம் தயை சாந்தம் பரிசுத்தஞ் சர்வசக்தி
இத்தகைய அனந்த கலியாண குணத்து இறை”

எனக் கூறியுள்ளது. இப்பாடலால் இறைவன், என்றும் அழியாமை, முழுமை, களங்கமின்மை, பேரானந்தம், சத்தியம், ஞானம், தர்மம், தயவு, சாந்தம், தூய்மை, சர்வசக்தி முதலான அளவற்ற கலியாண குணங்களுக்குரியவன் என்ற இறைநிலையை அறிய முடிகின்றது. இறைவனின் தன்மையைத் திரியேகத் தன்மையாகக் கருதுவது சமய உலகப் பொதுச் சிந்தனை. பல்வேறு சமயங்களிலும் திரியேகம் பற்றிய சிந்தனை உண்டு. ஆனால் வேறுபாடுடையது. கிறித்தவ சமயத்தில் இறைவன் பிதாவாகவும், குமாரனாகவும், பரிசுத்த ஆவியாகவும் உள்ளார் என்ற கணிப்பு பிற சமயங்களில் காணப்படாத தனிநிலை எனக் கூறலாம். சைவ, வைணவ சமயங்கள், இலக்கியங்கள் கூறும் திரியேகத்தைக் கிறத்தவமோ, தமிழ்க் கிறித்தவ இலக்கியங்களோ கூறவில்லை. எனினும் கிறித்தவத்தில் சொல்லப்படும் திரித்துவத்தை. திரயேகநிலையைச் சுட்ட சைவ, வைணவ இலக்கியங்கள் பயன்படுத்திய சொற்களை எடுத்தாண்டுள்ளது. இரட்சணிய யாத்திரிகம், சச்சிதானந்தம்; என்று இறைமையைக் கித்தவ சமய திரித்துவத்தோடு இணைத்துக் கூறியுள்ளது. மேலும், திரியேகதேவன், திரியேகன், திரியேகபரமன், மூவரிலொருவராம் முதல்வன் என்பன திரித்துவம் குறிக்க அவர் பயன்படுத்திய சொற்களாகும். இரட்சணிய யாத்திரிகப் பாடலொன்றில்,

“சத்தாய் நிஷ்களமாய் ஒருசாமியமு மிலதாய்ச்
சித்தாய் ஆனந்தமாய்த் திகழ்கின்ற திரித்துவமே”

என வந்துள்ளமை சிறப்பாகச் சுட்டுதற்குரியது.

பிதாவாகிய இறைவன் அழிவில்லாதவராகவும், நிலைபெற்றவராகவும், உலகங்கள் யாவையும் சொல்லொன்றால் படைத்து, தமது படைப்பு நன்றென மகிழ்ந்து உலகிற்கு மீட்பை அருளுகின்ற சத்தியமும், ஞானமும், ஆனந்தமுமாக விளங்குகின்றார். அவரே எல்லாவற்றுக்கும் மூலகாரணமாகிய முதற்பொருள். இறப்பு, நிகழ்வு, எதிர்ப்பு என்னும் முப்பாகுபாடுகளையும் கடந்துநிற்பவர். வேதங்களால் அளவிட முடியாத அருட்பெருங்குணங்களும் செயல்களும் அடைந்த நல்ல தலைவன். அவர் தொடக்க காலமுதல் மெய்யான திருவாக்காகவும், ஒளியாகவும், விளங்கி இவ்வுலகத்திற்கு வந்தவரான கிறிஸ்து என்னும் தம் காதல் மைந்தனைக் கருணையால் தந்து இவ்வுலகிற்கு மீட்பை, இரட்சிப்பை புதுப்பித்து உண்டாக்கிய தந்தை எனப் பிதாவின் தன்மை சுட்டப்பட்டுள்ளது.

இறைவனாகிய குமாரன்,, கிறிஸ்து என்னும் மனித குமாரனாகப் பிறந்து, தமது திருநோக்கால், திருவாக்கால், திருவருளால், திருச்செயலால் மக்களுக்குப் பல நன்மைகள் செய்து, பாடுபட்டுச் சிலுவையில் அறையுண்டு, மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து, பிதாவின் வலப் பக்கத்தில் வீற்றிருக்கிறார் என்பது கிறித்தவ சமய நம்பிக்கை. மனித குல மீட்பானது, அவர் மனித குமாரனாக வந்ததால் கிடைத்தது. கிறிஸ்துவின் பிறப்புச் செய்தியை இரட்சணிய யாத்திரிகம்.

வானோ மகிதலமோ சுடர்மதியோ வயங்கொளிவர்வான்
மினோ விரிகடலோ மழைமுகிலோ வொருவதியில்
ஆனா நெறியமைந்தாக்கிய அகிலாண்ட அச்சுதனோர்
ஊனாடிய திருமேனி கொண்டுதிதார் உலகுவப்ப

எனக் கூறியுள்ளது.

இரட்சணிய யாத்திரிகத்தில் இடம் பெற்றுள்ள இரட்சணிய யாத்திரிகப்பாடலும் இறைமையைப் பெரிதும் வெளிப்படுத்தும் பகுதி எனலாம்.  இரட்சணிய யாத்திரிகம் கூறும் இறைமை, மனிதகுல மீட்புச் செயலில் அடங்கியுள்ளது. கிறித்தவ சமயம் மீட்பின் சமயம் என்பது இரட்சணிய யாத்திரிகத்தின் முடிந்த முடிவு. மனித குமாரனின், கிறிஸ்துவின் மனித குல மீட்பு செய்தியை,

தன்னரிய திருமேனி சதைப்புண்டு தவிப்பெய்தி
பன்னரிய பலபாடு படும்போதும் பரிந்தெந்தாய்
இன்னதென வறிகிலார் தாம் செய்த திவர் பிழையை
மன்னியுமென் றெழிற் கனிவாய் மலர்ந்தார் நம்மருள் வள்ளல்
என்றும்,

கீண்டிருப்பு முறையுடலைக் கிழித்துருவி வதைப்புண்டு
மாண்டுபடும் போதிவர்க்கு மன்னியும் என்றுரைத்த மொழி
ஈண்டிவரே உலகினுக்கோர் ரட்கசகர் என்றெடுத்துரைக்கும்
வேண்டுமாயினிச் சான்று இதை விடுத்து வேறொன்றே
என்றும் பாடியுள்ளது. 

கிறிஸ்து மரணத்தை வென்று உயிர்த்தெழுந்ததை,

இன்னதோர் அமையந்தன்னில் இருநில உலகிற்கெல்லாம்
பன்னரு நலத்த தாய் பரகதிப் பயனை ஈட்டித்
துன்னிய ஐடவியோகத் துயிலுணர் சூழ்ச்சிபோல்
உன்னத தேவமைந்தன் உயிர்தெழுந்த தருவிப் போந்தார்
எனக் கூறியுள்ளது.

பரிசுத்த ஆவியாகிய கடவுள், திருமறையின் ஒளியை மனத்தில் ஒளிவிடச் செய்து, அஞ்ஞானமாகிய இருள் விலகும்படி நீக்கி, எக்காலத்தும் ஒப்பற்ற மீட்பிற்குத் துணையாக நின்று, அடியார்களை வழிநடத்துவதே குறிக்கோளாகக் கொண்டு, எண்ணுகின்ற நற்செயல்களெல்லாம் கைகூட தம் அருட்பெருங்கருணையைத் தருபவர் எனப் பரிசுத்த ஆவியாகிய கடவுளின் தன்மையை வெளிப்படுத்தியுள்ளது. மேலும் பரிசுத்த ஆவியாகிய இறைவன் ஆற்றும் செயல்களாக ஏழு செயல்களைக் குறிப்பிட்டுள்ளது. அவை, உள்ளத்தில் உள்ள கோணலைத் திருத்துவது, மெய்பக்தி என்னும் விதையை மனத்தில் விதைப்பது, விதைத்தது முளைத்துள்ளதா எனப் பார்த்து அதற்கு அருள்நீர் பாய்ச்சுவது, துன்பங்கள் என்னும் களைகளை அகற்றுவது, வளரும் பக்தியாகிய பயிர் வாடாமல் காப்பது, பரிசுத்த ஆவியின் கனிகளை விளையச் செய்வது, தம் அடியார்களின் கூட்டத்தை வாழச் செய்வது என்பனவாம்.
“பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என இறைமையைக் கூறிய இரட்சணிய யாத்திரிகம்,

ஒன்றிலே மூன்றாய் மூன்று மொன்றதா யுலப்பிலாததாய்
நின்றுல கனைத்தும் தூயநினைவுமாத் திரையிற்தந்த
நன்றென வுவந்திரஷை நல்கு மெய்ஞ்ஞானத்தைக்
குன்றினை அகத்துத் தாங்கிச் சிந்தனை கூடி வாழ்வாம்”
என்றும், 

“தந்தையாகி உலகனைத்தும் தந்து மனுக்குள் தமைப்புரக்க
மைந்தனாகிப் புனிதாவி வடிவாய் ஞானவரமருளிப்
பந்தமற நின் றிலங்கு திரியேக பரமன் பதாம்புஜத்தைச்
சிந்தையாரத் தொழுதேத்திச் சேரவாரும் ஜெகத்தீரே”
எனவும் அழைப்பு விடுக்கின்றது.                                             தொடரும்.

நவம்பர் மாதத்தின் புனிதர்கள்

நவம்பர்  மாதத்தின் புனிதர்கள்

- அருட்சகோ. G. பவுலின்மேரி FSAG, 
கும்பகோணம்
நவம்பர் 3   புனித மார்ட்டின் தெ போரஸ்

இவர் பெரு நாட்டில் லீமா நகரில் கி.பி. 1579‡இல் ஸ்பெயினிய தந்தைக்கும், கருப்பின தாய்க்கும் பிறந்தவர். இவர் பிறந்ததும், இவரின் தந்தை தன் மனைவியையும் மகனையும் கைவிட்டுவிட்டுச் சென்றார். எனவே மார்ட்டின் ஏழைகள், துன்புற்றோர் ஆகியோரின் துயர அனுபவங்களை தன்னில் தாங்கி அதனால் ஏழைகள்மீது எல்லையற்ற அன்பு கொண்டு வளர்ந்தார். சிறுவயதில் மருந்து தயாரிக்கும் கலைபயின்றார். பின்பு தோமினிக் சபைத் துணைச் சகோதரருள் ஒருவராகி, இம்மருத்துவக் கலையை ஏழை, எளியவர்களுக்கு பெரிதும் பயன்படுத்தினார். தவமும் தாழ்ச்சியும் நிறைந்த வாழ்வு நடத்தினார். நற்கருணைமீது மிகுந்த பக்திகொண்டு விளங்கினார். இவர் லீமா நகரில் 1639இல் இறந்தார்.

நவம்பர் 4        புனித சார்லஸ் பொரோமியோ

இவர் இத்தாலியில் லம்பார்டிப் பகுதியில் அரோனா என்னுமிடத்தில் கிபி 1538இல் பிறந்தார். உரோமைய சட்டமும், திருச்சபைச் சட்டமும் படித்து பட்டம் பெற்றார். தன் தாய்மாமனான திருத்தந்தை 4ஆம் பயஸால் கர்தினாலாகவும், மிலான் நகர ஆயராகவும் நியமிக்கப்பட்டார். மந்தைக்கு ஓர் உண்மையான ஆயராகி, தம் மறைமாவட்டம் முழுவதற்கும் பலமுறை பயணம் செய்தார். குருக்களைப் பன்முறை கூட்டி ஆய்வு மன்றங்கள் நடத்தினார். மக்களின் மேய்ப்புப் பணி சார்ந்த நடைமுறைகளை முழுமையாக ஊக்குவித்து வளர்த்து 1584‡இல் இறந்தார்.

நவம்பர்9 இலாத்தரைன்   பேராலய நேர்ந்தளிப்பு

மாமன்னர் கொன்ஸ்தாந்தீன் கட்டியயழுப்பிய இலாத்தரைன் பேராலய நேர்ந்தளிப்பு ஆண்டுவிழாவை கிபி 12ஆம் நூற்றாண்டிலிருந்து இந்நாளில் கொண்டாடி வந்ததாகப் பாரம்பரியம் உள்ளது. இவ்விழா முதலில் உரோமை நகர்த் திருவிழாவாக இருந்தது. பின்பு இந்தப் பேராலயம் உரோமை நகரிலும், அனைத்து உலகிலும் உள்ள ஆலயங்களுக்கெல்லாம் தாயும், தலைமையுமாகும் என அழைக்கப்பட்டது. உரோமை திருவழிபாட்டு முறையைச் சார்ந்த அனைவருக்கும் இவ்விழா பொதுவானது. புனித அந்தியோக்கிய இஞ்ஞாசியார் எழுதியுள்ளபடி பேதுருவின் அரியணை பரம அன்பு திருக்கூட்டமனைத்திற்கும் தலைமை தாங்குகிறது.

நவம்பர் 15   புனித பெரிய ஆல்பர்ட் : ஆயர் மறைவல்லுநர்

இவர் ஜெர்மனியில் தானியூப் நதிப் பகுதியில் உள்ள லாவிங்கனில் ஏறத்தாழ கிபி 1206இல் பிறந்தார். பதுவாவிலும், பாரீஸ் நகரிலும் கல்வி பயின்றார். தோமினிக்கன் சபையில் சேர்ந்து, பல்வேறு இடங்களில் கற்றுக்கொடுக்கும் பணியைச் சிறப்புற ஆற்றினார். ரேகன்ஸ்புர்க் நகர் ஆயராகத் திருநிலைப்படுத்தப்பெற்று, மக்களின் நடுவிலும், நகரங்களுக்கு இடையிலும் அமைதியை நிலைநாட்ட அயராது உழைத்தார்.அறிவு, வளர்ச்சிக்கான பல அரிய நூல்களைப் படைத்தார். இப்புனிதர் 1280இல் காலமானார்.

நவம்பர் 16             புனித மர்கரீத் (1045 - 1093) :

இவர் இங்கிலாந்து நாட்டின் அரச குடும்பத்தில் பிறந்தார். அப்பொழுது அவர் தந்தை அங்கு நாடு கடத்தப்பட்டவராய் வாழ்ந்து வந்தார். ஸ்காட்லாந்து அரசரான மால்கோம் என்பவரைத் திருமணம்   புரிந்து, எட்டு குழ்தைகளுக்கு அன்னையானார். மிகச் சிறந்த மாதிரியான தாயாகவும், அரசியாகவும் விளங்கினார். கோவில்கள், துறவற மடங்களையும் இவரே கட்டினார். “அகதிகளின் அன்னை”, “ஏழைகளுக்கு வாரி வழங்குபவர்” என்றும் அழைக்கப்பெற்றாள். இவருடைய கணவர் போரில் இறந்தார். இவர் எடின்பரோவில் 1093இல் இறந்தார்.

நவம்பர் 30           புனித அந்திரேயா - திருத்தூதர்

இவர் பாலஸ்தீனாவில் பெத்சாயிதா ஊரில் பிறந்தவர். முதலில் திருமுழுக்கு யோவானின் சீடராயிருந்தவர். பின்பு கிறிஸ்துவைப் பின்பற்றினார். கிறிஸ்துவிடம் தம் சகோதரர் பேதுருவையும் அழைத்து வந்தார். (யோவா 1 : 40 ‡ 42). பிலிப்புவோடு சேர்ந்து சில கிரேக்கரைக் கிறிஸ்துவிடம் கூட்டிவந்தார் (யோவா 12 : 21 ‡ 22). தவிர, மீனும் அப்பமும் வைத்திருந்த  சிறுவனை இயேசுவிடம் இப்புனிதர் சுட்டிக் காட்டினார். பெந்தகோஸ்து நிகழ்விற்குப் பின் இவர் உலகின் பல பகுதிகளிலும் நற்செய்தியைப் போதித்ததாகவும், இறுதியில் அக்கேயாப் பகுதியில் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டதாகவும் பாரம்பரியம் கூறுகின்றது.

மூச்சுதான் இடைவெளி, அமெரிக்கக் கடிதம், - சவரி, கேரி, வடகரோலினா

அமெரிக்கக் கடிதம்

- சவரி, கேரி, வடகரோலினா

மூச்சுதான் இடைவெளி

இந்த வாரம் உங்களுடன் அமெரிக்காவில் நடத்தப்படும்  இறுதி ஈமச் சடங்குகளை பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இங்கு இறுதி சடங்கிற்கு திருமணத்தைப் போல நிறைய செலவு செய்கிறார்கள். கல்விக்கும், வீடு கட்டுவதற்கும் பணம் சேர்ப்பது போல, தங்கள் இறுதி சடங்குகளுக்கும் பணம் சேர்க்க ஆரம்பித்து விடுகிறார்கள். ஒருவர் இறந்தவுடன், உள்ளுறுப்புகளை நீக்கி பதப்படுத்தும் நிறுவனங்கள் உடலை எடுத்துச் சென்று விடுகின்றன. ஒரு வார காலம் உடலை பாதுகாக்கிறார்கள். ஒரு வாரம் கழித்து வெளியூரில் எல்லா உறவினர்களையும் வரவழைத்து இறுதி சடங்கு திருப்பலி நிறைவேற்றி அடக்கம் செய்கிறார்கள். இறுதி சடங்கிற்கு அனைவரும் திருமணத்திற்கு வருவது போல் சூட் அணிந்து க்ஷூலிrதுழியி உடையில் வருகிறார்கள். வாய் விட்டு அழுவதில்லை. எனக்கு நம் நாட்டு இறுதி சடங்கு முறை தான் பிடித்து உள்ளது. நாம் வாய் விட்டு அழுதுவிடுகிறோம். அதனால் நம் சோகங்களை விரைவாக மறக்கிறோம்.

நவம்பர் 2- ஆம் தேதி கல்லறை திருவிழாவை இங்கு மிக சிறப்பாக கொண்டாடுவதில்லை. நாம் மிக சிறப்பாக இறந்தவர்களை நினைவு கூறுகிறோம். நமது பாரம்பரியம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. இதை நம்மிடமிருந்து அமெரிக்கர்கள் கற்றுக் கொள்ள வேண்டுமென்பது என்னுடைய விருப்பம்.

நமது கல்லறைகள் நமக்கு புகுத்தும் பாடங்கள் பல. நாம் எவ்வளவு செல்வம் சேர்த்தாலும், நமக்குப் பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் நாம் கல்லறைக்குத்தான் கடைசியில் வரப்போகின்றோம். நமது வாழ்வுக்கும், சாவுக்கும் ஒரு மூச்சு தான் இடைவெளி. இதை அறிந்து இறைவன் கொடுத்துள்ள இந்த குறுகிய வாழ்வில் நம் வெறுப்புகளையும்,  நமது  கெட்டப் பழக்கங்களையும் விட்டு அகன்று, நாம் பயனுள்ள வாழ்வை வாழ்ந்து, இறைவனை சந்திக்க எப்போதும் தயாராக இருப்போம்.

இயற்கை மருத்துவம், - ம. இராஜரெத்தினம், இயற்கை மருத்துவச் சங்கம், ஆடுதுறை

இயற்கை மருத்துவம்

- ம. இராஜரெத்தினம், 
இயற்கை மருத்துவச் சங்கம், ஆடுதுறை

உணவில் சேரும் இரசாயன நச்சுக்கள்

அன்றாட நமது வாழ்க்கையில் ஆரோக்கியம் என்பது நமக்கு புரியாத புதிராகவே உள்ளது. ஏன்? எதற்காக நோய் வருகிறது? என்ற நமது கேள்விகளுக்கு நமக்கு சரியான பதில்கள் கிடைப்பதில்லை. காரணம் உண்மை தெரிந்தவர்கள் (மருத்துவர்கள்) சொல்வதில்லை. சொல்வதற்கு நேரமும் இல்லை. அவர்கள் கூற நாம் அனுமதிப்பதும் இல்லை. மேலும் அவர்கள் சொல்ல விரும்பும் வி­யங்கள் அவர்களுக்கு முழுமையாகத் தெரிவதில்லை. இக்காரணங்களால் ஆரோக்கியம் என்பது புரியாத புதிராக உள்ளது. அந்த புதிரை அவிழ்க்கும் சிறிய முயற்சி இந்தக் கட்டுரை. முதலில் நமது உணவுகளில் நாம் அறியாமலேயே எவ்வாறு நச்சுக்களால் பாதிக்கப்படுகிறோம் என்பதை அறிவோம்.

சீனி : 

நிலத்தில் இருந்து கிடைக்கும் கரும்புச்சாறில் 75லிருந்து 80 சதவீதம் நீர்ச்சத்தும், 8லிருந்து 15 சதவீதம் சுக்ரோசும் மற்றும் குளுக்கோஸ், பிரக்டோஸ், மெழுகு, ரெசின், சோடியம், பொட்டாசியம், கால்சியம், சிலிகா, குளோரைட் பாஸ்பேட் போன்ற நமது உடம்பிற்கு தேவையான கனிமச் சத்துக்கள் உள்ளன. சீனி தயாரிப்பில் கரும்புச்சாறு பிழியப்படும் முதல் நிலையில் பால்மாலின் அல்லது பிளிச்சிங்பவுடர் அல்லது குளோரின் அல்லது அம்மோனியா பை புளுயீடு பேக்டீரியா கன்ட்ரோலாக உபயோகப்படுத்தப்படுகிறது.

2வது நிலையில், பிழிந்த சாறு 60 - 70 டிகிரி செல்சியஸில் பாஸ்போரிக் ஆசிட் 200 மில்லிகிராம் / லிட்டர் வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது. பாஸ்போரிக் ஆசிட் அழுக்கு நீக்கி அல்லது கிளினிங் ஏஜெண்டாக பயன்படுகிறது.

3வது நிலையில் வினைபுரிகலனில் சுண்ணாம்பு நீர் (0.2% ) அளவு சேர்த்து, பின் சல்பர்டை ஆக்ஸைடு வாயுவை செலுத்துகிறார்கள். வெண்மைநிறம் சுண்ணாம்பால் பெறப்படுகிறது.

4வது நிலையில் 102 டிகிரி செல்சியஸ் ஹீட்டரில் (கொதிகலனில்) கொதிநிலை அளவிற்கு சூடுபடுத்தப்படுகிறது. இப்போது நாம் நல்ல விட்டமின்களை இழக்கிறோம். செயற்கை சுண்ணாம்பு அளவுக்குமீறி சேர்ந்துவிடுகிறது.

5வது நிலையில் சாறு தெளிவடைய பாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து தெளிகலனில் மண், சக்கை சேர்ந்த பொருள் பிரித்தெடுக்கப்பட்டு, தெளிந்த சாறு கிடைக்கிறது.

6வது நிலையில், சுண்டுகலனில் காஸ்டிக்சோடா, வா´ங் சோடா சேர்த்து அடர்த்தி மிகுந்த சாறு தயாராகிறது.

7வது நிலையில் மறுபடியும் சல்பர் டை ஆக்ஸைடும், சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்ந்து படிகநிலைக்கு வருகிறது. சல்பர் டை ஆக்ஸைடு (கந்தக அமிலத்தின் பகுதி பொருள்) நஞ்சு மறுபடியும் சீனியில் சேருகிறது.

8வது நிலையில் சென்டரி பியூசிங் அல்லது சுழற்சி முறையில் சீனி தனியாகவும் மொலாசஸ் (சாராயச் சர்க்கரை) தனியாகவும் பிரித்து எடுக்கப்படுகிறது. மொலாசஸில் நமக்குத் தேவையான சத்துக்கள் சென்றுவிடுகின்றன. இறுதியில் வெள்ளைநிறச் சீனியாக எஞ்சியிருப்பது கார்பன் எனும் கரியே ஆகும். இதனுடன் மாட்டின் எலும்புச் சாம்பல் சேர்த்து நாம் பயன்படுத்தும் சீனி விற்பனைக்கு வருகிறது. மேலும் சீனி 6 மாதங்களுக்கு உபயோகப்படுத்தாமல் இருந்தால் சல்பர் டை ஆக்ஸைடால் மஞ்சள் நிறமாகி வீரிய நஞ்சாகி விடுகிறது.

தீமைகள் : 

1. சீனி சீரணத்தின் போது, அதில் கரி மட்டுமே எஞ்சியிருப்பதால் நமது உடலில் உள்ள நல்ல வைட்டமின்கள், தாது  உப்புக்கள் மற்றும் பி காம்பளக்ஸ் சத்துக்களை திருடிவிடுகிறது. இதனால் கல்லீரல், கணையம், இதயம் ஆகியவற்றின் செயல்திறன் வீரியம் குறைகிறது. இதன் காரணமாக ஆண்மைக் குறைவு ஏற்பட்டு மனிதன் மிகுந்த பலவீனத்திற்கு உள்ளாகிறான்.

2. உடல் உழைப்பு இல்லாமல் வெள்ளைச்சீனி கலந்த பண்டங்களை அதிகம் சாப்பிடுவதால் தேவையற்ற உடல் எடை கூடி, உடல் பருமன் ஆகி நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. சுவாசக்கோளாறு, சளித்தொல்லை, மூக்கடைப்பு வருகிறது.
3. ஆஸ்துமா நோயாளிகளுக்கு, வெள்ளைச்சீனி பிராண சக்தியை குறைத்து விட்டமின்களையும் திருடிவிடுவதால், இதயநோய், மாரடைப்பு, சிறுநீரக நோய்களுக்கு வித்திடுகிறது.
4. சீரணத்தின் போது பாஸ்பரஸ், இரும்புச் சத்து, தியமின் போன்ற பொருட்கள் குறைவதால், குடல்புண், இரத்தசோகை ஏற்படுகிறது. இளமை திசுக்கள் விரைந்து அழிய ஆரம்பிக்கின்றன. முகம் பொலிவிழந்து கட்டிகள், முகப்பரு ஏற்பட இதுவே காரணமாய் அமைகிறது.
5. காபி, டீ அதிகம் அருந்துவதால், வெள்ளைச்சீனி அதிகம் சேர்ந்து பலருக்கு பசி என்பதே என்னவென்று தெரிவதில்லை. வயிற்று  உபாதைகள் ஏற்படுகின்றன; நரம்புகள் தளர்ந்து விடுகின்றன. மேலும், கடையில் விற்கும் நாட்டுவெல்லத்தில் சோடியம் பை கார்பனேட் சேர்க்கப்படுவதால் உடலுக்கு ஊறு ஏற்படும். எனவே, இனிப்பிற்கு பனைவெல்லம் (கருப்பட்டி), தேன், இரசாயனம் கலக்காத நாட்டுவெல்லம் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும்.

டீ :
இதில் தியோ புரோமின் என்ற இரசாயனம் கலந்துள்ளது. டீ தயாரித்த பாத்திரத்தின் உள்ளே கருப்பாக இருப்பது தியோ புரோமின்தான். மேலும் நாம் இங்கு குடிப்பது Dust Tea. வெளிநாட்டில் தியோ புரோமின் நீக்கப்பட்ட சுத்தமான டீ‡ஐ பயன்படுத்துகின்றனர். தியோ புரோமின், குடல் பகுதியில் ஒரு லேயர் உண்டாக்குகிறது. இது மலச்சிக்கலை உண்டாக்கி, உள்ளுறுப்புகளை சூடாக்குகிறது. இதனால் இரத்தச்சோகை ஏற்பட்டு, உடலின் எதிர்ப்புச்சக்தி குறைகிறது. ஆவாரம்பூ, தாமரை கலந்த இயற்கை மூலிகை டீ‡ஐ பயன்படுத்த வேண்டும்.

காபி :

இதில் கஃபின் என்னும் கொடிய நஞ்சு கலந்துள்ளது. 
இதன் தீமைகள் : 
குழந்தைகளின் உறக்கத்தை தடுத்து வளர்ச்சியை தடைப்படுத்துகிறது. பித்தத்தை அதிகரித்து வாந்தி, மயக்கம், தலைசுற்றல், அஜீரணம் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. உடலில் உள்ள கால்சியத்தை திருடி விடுகிறது. மேலும், உடல் எலும்புகளிலுள்ள தாதுக்களின் (Bone Mineral Density) அடர்த்தியைக் குறைத்து, அவற்றை வலுவிழக்கச் செய்கிறது. இதனால் அடிக்கடி எலும்பு முறிவு ஏற்படும். இரைப்பையில் அமிலத்தை அதிகப்படுத்தி புண்களை ஏற்படுத்தும். இரத்தத்தில் கொழுப்பை அதிகரிக்கிறது. மன பதட்டம், மன இறுக்கம் போன்ற நரம்பியல் வியாதிகளை ஏற்படுத்துகிறது. சிறுநீரக பாதிப்பையும் ஏற்படுத்துகிறது. இதயத்தை வலுவிழக்கச் செய்கிறது. பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் ஏற்படுகின்ற வலி மற்றும் மார்பக வலிக்கு கஃபினே முழுக்காரணம்.

நிலைத்திருக்கும் நிலையாமைதான் வாழ்க்கை

நிலைத்திருக்கும் நிலையாமைதான் வாழ்க்கை

 அருள்சகோ. விமலி 
இதயா மகளிர் கல்லூரி, கும்பகோணம்


“மாற்றம் என்ற ஒன்றுதான் எப்பொழுதும் மாறாத ஒன்று” கிரேக்க தத்துவஞானி (ஹர்கூலிசியுஸ்)

ஆற்றில் வெள்ளம் பாய்ந்தோடுகிறது. வெள்ளத்து நீரைப் பார்க்க முடிகிறது. ஆனால் அப்படிப் பார்த்தத் தண்ணீர் அங்கே நிலைத்திருப்பதில்லை. வானத்தில் மேகங்களைப் பார்க்கலாம். குவிக்கப்பட்ட வெண்பஞ்சு போல அவை காட்சி அளிக்கின்றன. கொஞ்ச நேரம் கழித்துப் பார்த்தால், அங்கே மேகங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றின் வடிவம் மாறியுள்ளது. மரத்தில் கனிகள் இருக்கின்றன. அவை அழகாக விளங்குகின்றன. சில நாட்கள் சென்றதும் கிளையிலிருந்து அந்தப் பழங்கள் தரையில் விழுந்துகிடக்கின்றன. இப்படி இயற்கை பல விதங்களிலும் வாழ்வின் நிலையாமையை உணர்த்திக் கொண்டே இருக்கிறது.

இந்த நிலையாமை ஆறு வித முக்கியமான உண்மைகளை உணர்த்துகின்றன. 

1. தோற்றம், வளர்ச்சி, மறைவு என்ற இந்த மூன்று நிலைகளும் இயற்கையில் உண்டு என்ற இயக்க முறையை அது அறிவிக்கின்றது. 
2. இயற்கை எப்போதும் இயங்கிக்கொண்டே இருக்கும் என்ற செயல் முறையை அது தெரிவிக்கின்றது. 
3. எதன் மீதும் பெரும் பற்று வைக்காதே, பற்றுக்குரிய பொருளை இழக்கும்போது, பெருந்துன்பம் நேரும் என்ற உணர்வை உணர்த்துகின்றது. இது மறைமுக அறிவிப்பு. 
4. கையிலுள்ள பொருள் ஒரு நாள் நீங்கி விடலாம். ஆகவே, கையில் பொருள் இருக்கும்போதே அறச்செயல் புரிக என்ற அறச்சிந்தனையை அது எழுப்புகிறது. 
5. நிலையாமை கொண்டது இவ்வுலக வாழ்க்கை. இருப்பினும், என்றும் மாறாத உயர்வு நிலை பெறுவதற்குத் துறவு மேற்கொள்க என்ற எதிர்மறைக் கொள்கையை அது ஏற்படுத்தும். 
6. எல்லாப் பொருட்களும், ஆட்களும் நிலையற்றவை. நிலையாக இருப்பவர் இறைவன் ஒருவரே, என்ற உண்மையை உணர்த்துகின்றது.

இவ்வாறு நிலையாமை, மற்றொரு நடைமுறையையும் குறிப்பாகத் தெரிவிக்கிறது. பழைமைப் பொருள் மறைந்து விடும். அந்த இடத்தில் புதுமைப்பொருள் ஒன்று தோன்றும் என்பதே அந்த நடைமுறை, இதைத்தான்
பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையினான
என்ற பவணந்தி முனிவர் சொன்னார். இத்தகைய கருத்தை ஆங்கிலப் பாவலர் டென்னிசனும் உரைக்கின்றார். ‘புதுமைக்கு இடம் தந்து பழைமைமுறை மாறுகிறது’ என்றார். நிலையாமைக்கு உரியவற்றை நாலடியார் எடுத்துரைக்கின்றது. வீடு, இளமை, உடல், அழகு, செல்வம், உடல்வலிமை முதலியன நிலைத்திருக்காது என்று அந்த  நூல் சொல்கிறது. (நாலடி 53). அது நிலையாமையை, நோய், மூப்பு, சாக்காடு (மரணம்) ஆகியவற்றுடன் சேர்த்துச் சொல்கிறது. நிலையாமைக்கு அது ஒரு சான்று காட்டுகிறது. ஆகவேதான் பொருளுடைமை நில்லாது நீங்கி விடும் என்றார் நின்ற நெடும்புகழின் திருவள்ளுவர் (குறள் 592). செல்வம் எல்லோருக்கும் பொதுவானது. அது பகிரப்பட வேண்டியதேயன்றி பதுக்கப்பட வேண்டியது அன்று. இதனால்தான், அன்று தமிழறிஞர். மு. வரதராசனார் சொன்னார், “எத்தனை வள்ளல்கள் வாழ்ந்தும் வறுமையை ஒழிக்க முடியவில்லை. ஒரு நல்ல அரசாங்கம் ஏற்பட்டால் வள்ளல்கள் தேவை இல்லை” என்றார்.

வெற்றி வேற்கையும், செல்வம் நிலையாமைக்கு வேறு ஒரு காட்சியைக் காட்டுகின்றது. செல்வ வளம் உடைய ஒருவன், யானை மீது அமர்ந்து பெருமிதத்துடன் வருகிறான். அவனுடைய இருக்கையின் பின்னால், வேலையாள் ஒருவன் நின்று கொண்டு பெரிய குடையைத் தலைக்கு மேல் பிடித்துக் கொண்டிருக்கிறான். யானையும், குடையும், செல்வச் செழிப்பின் சிறு சின்னங்கள். அப்படிப்பட்ட அந்தப் பெரும் பணக்காரன் திடீரென்று ஏழையாகி விடுகிறான். அவனுடைய யானையும் வெண்குடையும் எங்கோ போய்விட்டன. அவன் நடக்கிறான், அவனால் நடக்க முடியவில்லை. தளர்ந்த நடை உடைய அவன், வாழ்வைத் தேடித் தன் ஊரைவிட்டு வேறோர் ஊருக்குச் செல்கிறான் என்று நல்வழி சொல்கிறது (நல்வழி.12).

இளமைப்பருவமும் நிலைத்திருப்பதில்லை. வில்லில் நாணேற்றி விடப்பட்ட அம்பு விரைந்து மறைந்து விடுவதுபோல், இளமையும் மறையும் என்று நற்றிணை சொல்கிறது (நற்றிணை 47). கழிந்த இளமையை - அழிந்த இளமையை மீண்டும் பெற முடியாது என்பதை, “அரிது அரோ சென்ற இளமை தரற்கு” என்று கலித்தொகையும் நவில்கிறது. இனமை, என்பது தண்ணீரில் தோன்றி மறையும் நீர்க்குமிழி போன்றது என்று கூறுகின்றார். குமரகுருபர அடிகள். “நீரில் குமிழி இளமை” என்று அவர் அறிவுறுத்துகிறார் (நீதி நெறி விளக்கம்).

உடம்பும், உயிரும் நிலையாமைக்கு உரியவை. இதை நூல்கள் எடுத்துரைக்கின்றன. “சாவாத இல்லை பிறந்த உயிர் எல்லாம்” என்று நான்மணிக்கடிகை கூறுகின்றது. ‘உடம்பொடு தோன்றும் உயிரும் இல்லை’ என்று புறநானூறு கூறுகின்றது (புறம் 363). “நீரில் உள்ள அலை போன்றது செல்வம். தண்ணீரில் எழுதப்படும் எழுத்து போன்றது உடம்பு” என்று மற்றொரு நீதிநூல் சொல்கின்றது. நேற்று இருந்தான், இன்று அவன் இல்லை. இப்படிப்பட்ட பெருமையை உடையது இந்த உலகம் என்று திருக்குறள் உரைக்கிறது. காலம் நிலையாக இருக்காது. “நாள் என்று சொல்லப்படும் காலப்பிரிவு, உயிரை அறுக்கும் வாள் போன்றது” என்று திருக்குறள் சொல்கிறது (குறள் 334). தோற்றம் உடையவனுக்கு மரணம் உறுதியாக உண்டு என்று கீதையும் கூறுகிறது.

“மரணம் என்பது இயற்கையின் விருப்பம்” என்று ரோம் நாட்டின் தத்துவஞானி மார்க்கஸ் அரேலியஸ் சொன்னார். “மலைமேல் உலவி நிலைத்திருக்காமல், விட்டு அகலும் மேகம் போன்றது இந்த உடம்பு” என்று நயம்பட நாலடியார் நினைவூட்டுகின்றது. இப்படி பொருள், உடல், உயிர் முதலியவை நிலையற்றவை என்பதால் இரண்டு வித அறிவுரைகள் கூறப்பட்டன. ஒன்று துறவு மேற்கொள்க என்ற அறிவுரை, சமூக நலன் எனும் அக்கினியில் சுயநல ஆசைகளைச் சுடடெரிப்பதுவே தூய துறவு. தன்னலம் மறுத்து பொதுநலத்துக்காகத் தொண்டாற்றும் மனிதர்கள்தான் உண்மையான துறவிகள் என்று விவேகானந்தர் கூறுகின்றார். மற்றொன்று அறம் செய்க என்ற அறிவுரை.

நிலையாமை நோக்கி நெடியார் துறத்தல்
தலையாகத் தான் இனிதே
என்று இனியவை நாற்பது அறிவுறுத்துகிறது (இனி 3).
நிலையாமை கண்டு நெடியார் மெல்ல துறப்ப
தலையாய தாம் உய்யக் கொண்டு
என்று நாலடியார் சொல்கிறது (நாலடி 53). நிலையாமையை உணர்ந்து அறம் செய்க என்று ஒளவையார் பாடினார். ஆற்றில் மணல்மேடு உள்ளது. வெள்ளம் வந்த பிறகு, அந்த மேடு மறைகிறது. அங்கே மடு (பள்ளம்) அமைகிறது. ஆகவே, “செல்வம் இருக்கும்போதே சோறும் நீரும் தந்து தருமம் செய்க” என்றார் ஒளவையார்.

நிலையாமை தீர்க்கும் வாய் நேர்ந்து பசி உண்டி நீக்குவான்
நோக்கும் வாய் விண்ணின் உயர்வு (ஏலாதி 40).
என்று ஏலாதி என்ற நூலும் “அறம் புரிக” என்றது. “வாழ்க்கை இன்பமயமானது எனக் கனவு கண்டேன், கண்விழித்த பிறகு சேவைதான் இன்பமயமானது எனப் புரிந்துகொண்டேன்” என்றார் புத்தர். “சமுதாயச் சேவையைச் சட்டையாக மாற்றாதீர்கள்,  உங்கள் உடம்பின் சதையாக மாற்றுங்கள். சமூக அறத்தை விளம்பரமாக்காதீர்கள், இச்சமுதாயத்தின் அணையா விளக்காகுங்கள்” என்றார் அன்னை தெரசா. எனவே உலகில் மாறாதது, மாற்றம் ஒன்றுதான் என்பதை, ஏற்றுக்கொண்டு வாழ்வோம்.

“இறக்கத்தான் பிறந்தோம் அதுவரை இரக்கத்தோடு வாழ்வோம்” என்றார் (அன்னை தெரசா).

இவ்வுலக வாழ்வில் இல்லாமையில் இருப்பாரோடு, இருப்பதை பகிர்ந்துண்டு பசியாற்றிடுவோம். அப்பொழுது வாழ்வு வளமையோடு துளிர்க்கும்.

பணிவு என்னும் இனிய பாதை 8. திறந்த வாழ்வு வேண்டும்

பணிவு என்னும் இனிய பாதை

8. திறந்த வாழ்வு வேண்டும்

 அருள்பணி. மகுழன், 
பூண்டி மாதா தியாள மையம்


வாழ்வில் வெற்றியின் இரகசியங்கள் பல உள்ளன. அதில் ஒரு முக்கியமான இரகசியம்: நீங்கள் உங்கள்மீது கொண்டுள்ள அபிப்பிராயத்திற்கும். மற்றவர்கள் உங்கள்மீது கொண்டிருக்கும் அபிப்பிராயத்திற்கும் வித்தியாசம் அதிகம் இருக்கக்கூடாது. அப்படியயன்றால் உங்களை நீங்கள் நன்கு அறிந்து வைத்துள்ளீர்கள். உங்களை நீங்கள் நன்கு வெளிப்படுத்தியுள்ளீர்கள். மற்றவர்கள் உங்களை விமர்சிக்கும்போது அதில் உள்ள உண்மையை கண்டறிந்து உங்களை மாற்றிக்கொள்ள முன்வந்துள்ளீர்கள். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் உங்கள் வாழ்வு ஒரு திறந்த புத்தகமாக உள்ளது. அதற்குத் தேவையான பணிவு உங்களிடம் உள்ளது. உளவியலில் ஜோஹேரி வடிவம் மிகவும் பிரபலம். ஜோ மற்றும் ஹேரி என்னும் இரண்டு உளவியல் நிபுணர்கள் இதனை கண்டுப்பிடித்ததால் இதற்கு இந்தப் பெயர். இந்த வடிவத்தின்படி நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் நான்கு பகுதிகள் உள்ளன.

1. திறந்தப் பகுதி : எனக்குத் தெரிந்தவை மற்றவர்களுக்கும் தெரிந்தவை.
2. குருட்டுப் பகுதி : எனக்கும் தெரியாதவை, மற்றவர்களுக்கும் தெரியாதவை.
3. மறைத்தப் பகுதி : எனக்குத் தெரிந்தவை, மற்றவர்களுக்குத் தெரியாதவை.
4. மறைந்த பகுதி : எனக்குத் தெரியாதவை, ஆனால் மற்றவர்களுக்குத் தெரிந்தவை.

உதாரணமாக மறைந்த பகுதியை எடுத்துக் கொள்வோம். நீங்கள் உங்கள் நண்பரோடு ஒரு ஹோட்டலுக்கு உணவருந்த செல்கிறீர்கள். உங்கள் முகத்தில் உணவின் சிறுபகுதி ஒட்டிக்கொண்டு இருக்கிறது. உங்களுக்கு அதனைப்பற்றி தெரியவில்லை. ஆனால் உங்கள் நண்பர் அதனை கவனிக்கிறார். அதனை உங்களிடத்தில் சொல்கிறார். நீங்களும் முகத்தைத் துடைத்துக் கொள்கிறீர்கள். அதாவது உங்கள் குறை உங்களுக்குத் தெரியவில்லை. உங்கள் நண்பருக்குத் தெரிகிறது. அதனை அவர் சுட்டிக்காட்டுகிறார். நீங்களும் திறந்த மனதோடு அதை சரிசெய்கிறீர்கள். நம் கோபம், நம் விவேகமின்மை, நம் வைராக்கியம், நம் நடுநிலையின்மை பல நேரங்களில் நமக்குத் தெரிவதில்லை. திறந்த மனதோடு இருந்தால் மற்றவர்கள் சுட்டிக்காட்டும்போது நாம் மாற்றிக் கொள்வோம்.

திறந்தப் பகுதி குறைவாக இருக்கும்போது மற்றவர்களின் மதிப்பைப் பெறுவது மிகவும் கடினம். நாம் சொல்வதை பிறர் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றால் முதலில் அவர்கள் நம்மை ஏற்றுக் கொள்ள வேண்டும். நாம் நல்லவர்கள், நாம் சொல்வதில் உண்மை இருக்கும் என்ற நம்பிக்கையை நாம் ஏற்படுத்தி இருக்க வேண்டும். அதனால்தான் ஒரே வி­யத்தை சொல்லும்போது மறுப்பு சொல்லுகின்ற நாம், அதே வி­யத்தை நமக்குப் பிடித்தவர் சொல்லும்போது ஏற்றுக்கொள்கிறோம்.

நம் சொற்களில், நம் செயல்களில், நம் மதிப்பீடுகளில், நம் அணுகுமுறையில் நாம் எப்படிப்பட்ட மனிதர் என்பதை வெளிப்படுத்த வேண்டும். ஒரு சிலர் மர்ம மனிதர்களாக இருப்பார்கள். மர்ம மனிதர்களாக இருப்பது வாழ்வின் ஒரு சாதூர்யம் என்றுகூட நினைத்துக் கொள்வார்கள். அது தவறான அணுகுமுறை. உண்மையான சாதூர்யம் மிக்கவர்கள். தங்களை வெளிப்படுத்த அஞ்சமாட்டார்கள், தயங்க மாட்டார்கள். பிறரின் நம்பிக்கையையும், நன்மதிப்பையும் பெறுவதற்கு சிறந்த வழி நாம் நல்லவர்களாக வாழ்வது மட்டுமல்ல, நாம் நல்லவர்கள் என்பதை பிறருக்கு தெரிவிப்பதும்கூட. உங்களைப் பற்றி பிறர் என்ன நினைக்கிறார்கள் என்ற ஒரு கருத்துக்கணிப்பு வைத்தால் ஒரே விதமான கருத்துக்கள் வருமா? அல்லது மாறுபட்ட கருத்துக்கள் வருமா? என்பதை பொறுத்து நாம் எவ்வளவு திறந்த வாழ்வு வாழ்கிறோம் என்பதை கண்டுபிடிக்க முடியும். உதாரணமாக நல்ல குணங்களைப் பற்றி மற்றவர்களிடத்தில் கேட்டால், முதலில் அவர்கள் சொல்வது, யார் மனதையும் புண்படுத்தாதவர் (எனக்குப் பணிவு கொஞ்சம் வேண்டுமென்று நினைக்கிறேன் என்பது).

திறந்த வாழ்வின் இன்னொரு முக்கியமான அம்சம் நம் பொறுப்பில் உள்ள நிறுவனத்தின், பங்கின், குடும்பத்தின் வரவு செலவுகளை வெளிப்படையாக தெரிவிப்பது. நீங்கள் உண்மை உள்ளவர்களாக இருந்தால் மட்டும் போதாது, நீங்கள் உண்மை உள்ளவர்கள் என்பதை நிரூபிக்க நீங்கள் தயாராக இருக்க வேண்டும். உங்களுக்கு கீழே இருப்பவர்களிடத்திலும் நீங்கள் கணக்குக்காட்டத் தொடங்கிவிட்டீர்கள் என்றால் பணிவு என்னும் இனியப் பாதையில் சிறப்பாக பயணம் செய்கிறீர்கள் என்று அர்த்தம். (தொடரும்)

திருவருகைக்கால முதல் ஞாயிறு 27 - 11 - 2016

திருவருகைக்கால முதல் ஞாயிறு

  27 - 11 - 2016
எசா 2 : 1 - 5;  உரோ 13 : 11 - 14;     மத் 24 : 37 - 44

விழிப்பாய் இருங்கள், எச்சரிக்கையாய் இருங்கள்

பேய்களின் தலைவனான லூசிபரும், மூன்று குட்டி பிசாசுகளும் சேர்ந்து சதிதிட்டம் தீட்டின. “கடவுள், கடவுள் என்று கடவுள் பின்னாலே சென்று கொண்டிருக்கும் மக்களை கடவுளிடமிருந்து பிரிக்க வேண்டும். அதற்கு நீங்கள் ஏதாவது செய்ய வேண்டும். என்ன செய்யப் போகின்றீர்கள்?” என்று லூசிபர் ஒவ்வொரு குட்டி பிசாசையும் அழைத்துக்கேட்டது. 

முதல் பிசாசு : “கடவுளே இல்லை என்று மக்களிடம் நம்பும்படி சொல்லுவேன்” என்றது.

லூசிபர் : “அது செல்லுபடியாகாது. ஏனெனில் கடவுள் இருக்கிறார் என்பதை மக்கள் உணர்ந்து இருக்கின்றனர்” என்றது.

இரண்டாவது பிசாசு : “நரகமே இல்லை என்று சொல்லுவேன்” என்றது.

லூசிபர் : “இதுவும் பயன்தராது. ஏனென்றால், நரகத்தை பாவத்திற்கு தண்டனை தரும் இடமாக, மக்கள் தங்கள் மனசாட்சியில் அறிந்திருக்கிறார்கள்” என்றது.

மூன்றாவது பிசாசு : “நன்மை செய்ய அவசரப்படாதீர்கள். அதற்கு எதிர்காலத்தில் ஏராளமான நேரம் இருக்கிறது என்று காலம் தாழ்த்தச் சொல்லுவேன்” என்றது.

லூசிபர் : “ஓ ... பிரமாதம். நீ ஒருவன்தான் இலட்சக்கணக்கான மக்களை எனக்குப் பெற்றுத் தருவாய்” என்று சொல்லி மனதார பாராட்டியதாம்.

தீயவைகள், தீமைகள் மற்றும் இவைகளுக்கு காரணமான தீய ஆவி முதலில் நேரடியாக நமது  உடலை தாக்குவது இல்லை. மாறாக நமது உள்ளத்தையும், எண்ணத்தையும் சீர்குலையச் செய்கிறது. மனிதனை அவன் வாழ்விலிருந்து திசை திருப்புகிறது. திருவருகைக்காலத்தின் முதல் ஞாயிறு விழாவைக் கொண்டாடும் நாம், இயேசுவின் இறையனுபவம் பெற்று வாழவும், மனிதன் உள்ள அளவில் தடுமாறாமலும், தடம் மாறாமலும், இறைவனோடு ஒன்றித்து வாழ்ந்து விழிப்புடன் வாழவும், எச்சரிக்கையுடன் செயல்படவும் இன்றைய வழிபாடு நம்மை அழைக்கிறது.

ஆண்டவரின் வருகை எதற்காக? பாவ நிலையில் சிக்கித் தவிக்கும் மனிதரை மீட்க வேண்டும். அவனுக்கு புதிய வாழ்வை ஏற்படுத்தி இறைவனிடம் கொண்டுவர வேண்டும் என்பதற்காகத்தான். ஆண்டவரது வருகையினால் நாம் பெறப்போகும் மாற்றங்கள், புதுவாழ்வு என்ன என்பதை இன்றைய இறைவாக்கு நமக்கு தெளிவுபடுத்துகிறது.

திவெ 22 : 12 “இதோ நான் விரைவில் வருகிறேன், அவரவர் செயலுக்கு ஏற்ப, அவர்களுக்கு நான் அளிக்கும் கைம்மாறு என்னிடம் உள்ளது”.
பிலிப் 3 : 20 - 21 “விண்ணகத்திலிருந்து மீட்பராய் ஆண்டவர் இயேசுகிறிஸ்து வருவார் எனக் காத்திருக்கிறோம். அவர் நமது ஆற்றலால் தாழ்வுக்குரிய நம் உடலை மாட்சிக்குரிய தமது  உடலின் சாயலாக உருமாற்றுவார்”.

எனவே இயேசு கிறிஸ்துவின் வருகை மனிதனுடைய வாழ்வில் புத்துணர்வை பாய்ச்சி அவரை புதிய படைப்பாக் மாற்றுவதுதான் என்பது தெரிகிறது.

இறைவன் நம்முடைய பாவ இருளை உணரவைத்து, புண்ணிய வாழ்வில் மனிதனை சேர்க்க வைப்பதற்காக எடுக்கும் பெறும் முயற்சிதான் இயேசுகிறிஸ்துவின் வருகை.

1 கொரி 4 : 5 “ஆண்டவரின் வருகையின் போது அவரே இருளில் மறைந்திருப்பவற்றை வெட்ட வெளிச்சமாக்குவார்”.

இன்றைய நற்செய்தியில், “விழிப்பாயிருங்கள், உங்கள் ஆண்டவர் எந்த நாளில் வருவார் என உங்களுக்குத் தெரியாது” என்கிறார் இயேசு.

விழிப்பாய் இருப்பது என்பது அர்த்தமுள்ள, பயனுள்ள வாழ்வை வாழ்வது.

எதிர்காலத்தில் அல்லாமல் நிகழ்காலத்தில் கவனம் செலத்தி விழிப்புடன் வாழ்வது.

தீமைகளிலிருந்தும், பாவத்திலிருந்தும் நம்மையே காத்து ஒளியின் மக்களாக வாழ முயற்சிப்பது.

முதல் வாசகத்தில், ‘ஆண்டவருடைய நாள்களில் வன்முறைகள், எதிர்மறைகள் நீங்கி உடன்பாடான வாழ்வு உண்டாகும்’ என்று எசாயா கூறுகிறார். இரண்டாம் வாசகத்தில், ‘இறுதி இக்காலத்தில் தீய இச்சைகளைத் தூண்டும் ஊனியல்பின் நாட்டங்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம்’ என்கிறார் பவுல் அடிகளார்.

இறைவாழ்வில் விழிப்புடன் கவனம் செலுத்தி, மனித வாழ்வில் எச்சரிக்கையாக இருப்போம்

கிறிஸ்து அரசர் திருவிழா 20 11 2016

கிறிஸ்து அரசர் திருவிழா    20  11  2016

2 சாமு 5 : 1 - 3;    கொலோ 1 : 12 - 20;   லூக் 23 : 35 -45

மாவீரன் அலெக்ஸாண்டர் இந்தியப் பெருங்கடலின் கடற்கரை மணலில் நடந்து சென்ற போது துறவி ஒருவர் தமது நாயோடு ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். மாவீரன் தம்மோடு இருந்தவர்களைப் பார்த்து இந்தியாவை வெல்வேன், பின் உலகத்தையே வெல்வேன். உலகம் முழுவதையும் வென்றப் பிறகு, நிம்மதியாக ஓய்வெடுப்பேன் என்றார்.இதைக் கேட்ட துறவி மாவீரனிடம், நானும் எனது நாயும் ஒரு சின்ன இடத்தைக் கூட வெல்லாமல் நிம்மதியாக ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறோம். ஓய்வுதான் உன் கடைசி இலச்சியம் என்றால், இப்போது இந்த அழகான ஆற்றங்கரையில் எங்களுடன் சேர்ந்து கொள். இறுதி காலத்தில் ஓய்வு எடுப்பதற்காக ஏன் உலக மக்களை இப்போது துன்பத்தில் ஆழ்த்த வேண்டும்? என்று கேட்டார்.

அன்பு என்றால் என்ன? பகிர்தல் என்றால் என்ன? என்பதை அறியாமலேயே அலெக்ஸாண்டர் மரித்துப் போனார். அவர் புதைக்கப்பட்டார்.

அவரின் வீரம் சில காலமே பேசப்பட்டது. நாட்டை ஆளவேண்டும், உலகை ஆளவேண்டும் என்று எண்ணி, அன்பை ஆயுதமாகவும், கொடுப்பதை கொள்கையாகவும் கொண்டு எல்லோராலும் போற்றப்படும் அரசராக அவர் வாழவில்லை.

இந்த உலகத்தில் எத்தனையோ அரசர்கள் தோன்றி, சரித்திரத்தில் பல சாதனைகள் புரிந்து மறைந்தார்கள்.

செல்வத்திற்காக நாடுகளை வென்றவர்கள் ... மற்றவர்கள் தன்னை போற்ற ... புகழ ... என்று நாடுகளை வென்றவர்கள் உலகில் தலைசிறந்த மன்னன் என்று தன்னை வாழ்த்த, புகழ வேண்டும் என நினைத்தவர்கள். எல்லோருமே இன்று இல்லை. இப்படி பல அரசர்கள் தோன்றி மறைந்தாலும், நேற்றும், இன்றும், என்றும் அகில உலக மக்களின் இதயங்களில் நிரந்தரமான இடத்தைப் பிடித்த ஒரு அரசர் உண்டு. அவர்தான் கிறிஸ்து அரசர்.

இன்றைய நற்செய்தியில் நல்ல கள்வன் இயேசுவை சரியாக அடையாளம் கண்டுகொண்டான். இயேசுவின் ஆட்சி உரிமையில் பங்குபெற்றான். இயேசுவின் கருணை மழையில் நனைந்தான். நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர்.

இயேசுவுக்கு பணபலம் இல்லை, படை பலம் இல்லை. மற்றவர்கள் போற்ற, புகழ வேண்டும் என்ற எண்ணமும் இல்லை. மாறாக அன்பு என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி, மக்களின் இதயங்களில் குடிகொண்டார்.

ஆகவேதான் உலக வரலாற்றில் மட்டுமல்ல, மக்களின் இதயங்களிலும் வாழ்கிறார். இவரது அரசாட்சி, காலத்தையும், இடத்தையும் கடந்தது. “தாவீது வம்சத்தில் ஓர் அரசர் தோன்றுவார், அவரது ஆட்சிக்கு முடிவே இராது”  (2 சாமு 7 : 16) என்று படிக்கின்றோம். இயேசுவின் வாழ்வில்,
-ஏழ்மையும், எளிமையும் அணிகலன்கள்.
-முள்முடி அவரது கிரீடம்.

- ஆடு மேய்ப்பவர் கையில் வைத்திருக்கும் கைத்தடியே அவரது செங்கோல்.

- சிலுவையே அவரது அரியணை.
- அன்பே அவருடைய ஆயுதம்.
- மக்களுடைய இதயமே அவரது அரண்மனை.
- இவ்வுலக அரசர்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டவர் கிறிஸ்து அரசர்.

இன்று, இயேசு, நம்மில் விரும்பும் அரசு எது?

இரணடாம் வாசகத்தில் பவுல் அடிகளார், இறைமக்களுக்கான ‘ஒளிமயமான உரிமைப் பேற்றில் பங்குபெற உங்களை தகுதியுள்ளவர்கள் ஆக்கியுள்ளார்’ என்று கூறுகிறார். எனவே நாம் பங்குபெறும் அரசு

‡ சுயநலமில்லாத அரசு
‡ வேற்றுமையில் ஒற்றுமை காணும்அரசு
‡ பெறுவதைவிட கொடுப்பதை விரும்பும் அரசு
‡ சகோதர பாசத்தை தேடும் அரசு
‡ தேவைப்பட்டால் உயிரையே கொடுக்கும் அரசு

புனித பவுல் அடிகளார் கூறுவது போல,

- நமது உள்ளத்தில் அமைதி ஏற்படும்போது, கிறிஸ்து அரசரின் அரசாட்சியை நமது உள்ளத்தில் உணரமுடியும்.

- ஒருவர் ஒருவரை ஏற்று, மன்னித்து அன்பு செய்யும் போதும்,

- ஒற்றுமையுடனும், சமாதானத்துடனும் வாழும் போதும்,

- நீதிக்கு குரல் கொடுக்கும்போதும், கிறிஸ்து நம்மில் நிலைநாட்ட விரும்பும் இறையாட்சியை வலுப்படுத்த முடியும்.

33வது வாரம் 13 : 11 : 2016

33வது வாரம்     13 : 11 : 2016

துன்பத்தில் துணை நிற்கும் இறை நம்பிக்கை 

மலா 4 : 1 - 2:           2 தெச 3 : 7 - 12:      லூக் 21 : 5 - 19

ஒரு சிறுமி பள்ளி ஆசிரியரிடம் தனது தாத்தாவின் வீரதீர செயல்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தாள். “என் தாத்தா பெரிய வேட்டைக்காரர். ஏகப்பட்ட புலிகளை வேட்டையாடியிருக்கிறார். ஒருதடவை காட்டுக்குப் போனபோது கூட்டமாக வந்த புலிகள் அவரைக் கடித்து கொன்றுவிட்டன” என்றாள். இதைக் கேட்ட ஆசிரியர், “நான் நம்பமாட்டேன். இதெல்லாம் ரீல்” என்றார். கோபமடைந்த சிறுமி, “அப்படின்னா நான் சொர்க்கத்திற்குப் போகும்போது, அதுபத்தி என் தாத்தாகிட்ட கேட்பேன்” என்றாள். சாமார்த்தியமான அந்த வாத்தியார், “உன் தாத்தா நரகத்திற்கு போயிருந்தா?” என்று கேட்டார். ஒரு நிமிடம் யோசித்த சிறுமி, “அப்ப நீங்க கேளுங்க” என்றாள்.

உடல்  உள்ள கஷ்டம், துன்பம், வேதனைகள், சிலுவைகள் என்று, மனிதர் தாங்கள் சந்திப்பதை அவர்கள் விரும்புவதில்லை. இவைகளுக்கு மாற்று வழி உண்டா? என்று உட்கார்ந்து ஆராயும் மனிதர்கள்தான் இன்று அதிகம். அதிகபடியான துன்ப நேரங்களில்கூட, இறைநம்பிக்கை நமக்கு கைக்கொடுத்து உதவும் என்பதைத்தான் இன்றைய வழிபாடு நமக்கு சொல்கிறது.

இன்றைய நற்செய்தியில், உலக முடிவிற்குமுன் மனிதர்கள் சந்திக்கும் அச்சமூட்டும் நிகழ்வுகளை இயேசு பட்டியலிடுகிறார்.

‡ நானே அவர் எனது பெயரை பயன்படுத்துபவர் பின்னே போகாதீர்கள்.

‡ போர் முழக்கங்களும், குழப்பங்களும் ஏற்படத்தான் செய்யும்.

‡ நாட்டை எதிர்த்து நாடும், அரசை எதிர்த்து அரசும் எழும்.

‡ நில நடுக்கம், பஞ்சம், கொள்ளை நோய் ஆகியவை ஏற்படும்.

‡ அச்சுறுத்தும் பெரிய அடையாளங்கள் வானில் தோன்றும்.

‡ உங்களை துன்புறுத்துவார்கள், சிறையில்அடைப்பார்கள், கொல்வார்கள்.

‡ உடன்பிறந்தவர்கள், நண்பர்கள் உங்களை வெறுப்பார்கள், காட்டிக் கொடுப்பார்கள்.

என்றெல்லாம் சொல்லும் இயேசு இந்த துன்ப நெருக்கடியில் நமது இறைநம்பிக்கையை பலப்படுத்தும் வகையிலான வார்த்தைகளையும் கூறுகிறார்.

- உங்களுக்கு நாவன்மையையும், ஞானத்தையும் கொடுப்பேன்.

- எவராலும் உங்களை எதிர்த்து நிற்கவும், எதிர்த்து பேசவும் முடியாது.

- மன உறுதியுடன் இருந்து உங்கள் வாழ்வை காத்துக் கொள்ளுங்கள் என்கிறார்.

லூக் 12 : 11 - 12லும், துன்பத்திற்கு உள்ளாக்கப்படும் சீடர்களுக்கு இறைவனின் தனி பாதுகாப்பு அளிக்கப்படும் என்று குறிப்பிடுகிறார். ஸ்தேவானும் (தி ப 7), பவுல் அடிகளாரும் (தி ப 21 ‡ 26) தாங்கள் கொடுமைப்படுத்தப்பட்ட நேரங்களில்  மனஉறுதியுடன் தலைவர்களுக்கு பதில் மொழி தந்தனர்.

துன்ப நேரங்களில் நாம் துவண்டுவிடக்கூடாது. இறை மனித உறவுகளில் பல பிளவுகளை ஏற்படுத்தக்கூடிய மனிதர்களும், சூழ்நிலையும் மாறிமாறி நம் வாழ்வில் குறிக்கிடும்போது உடல், உள்ள பாதிப்புகளும், மன உளைச்சலும், மனத்தளர்வும் நம்மை கொடுமையாக சந்திக்கின்றன. இந்த சூழ்நிலையிலும்கூட இறைவன் நம் பக்கமிருந்து வல்லமையுடையவர்களாக நம்மை மாற்றுகிறார்.

இறைதிட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று, மனமுவந்து இவ்வுலகில் உதித்தவர் இயேசுகிறிஸ்து. அன்பையும், இரக்கத்தையும், மன்னிப்பையும், மனித நேய பண்புகளையும் உள்ளடக்கிய இறை மதிப்பீடுகளை தானே வாழ்ந்து காட்டினார். இதனால், சமூகத்தில் பல புரட்சிப் பணிகளை செய்தார் இயேசு. அவருக்கு கிடைத்த பரிசு கொடூர சிலுவை சாவு. ஆனால் இதிலும் முழுமையான பங்கெடுத்து இயேசு வெற்றி பெறுகிறார்.

துன்ப நிலைகளை சந்தித்த இயேசு, நாம் இதுபோன்ற சூழ்நிலைகளில் மனஉறுதியோடு வாழ 4 படிகளைக் கூறுகிறார்.

1. இயேசுவைப் போல நாமும் காலத்தின் அறிகுறிகளை கணிக்க கற்றுக் கொள்வோம்.

2. நமது வாழ்வைக் காத்துக் கொள்ள துன்பங்களை எதிர்கொள்ளத்தான் வேண்டும். (நீதிமன்றங்கள், சிறைகள்).

3. காலத்தின் நிறைவில், நாம் எதிர்கொள்ளும் துன்பங்களில் நாம் தனியாக இல்லை. இறைவன் நம்மோடு இருந்து, நமக்கு துணிவு அளித்து, ஞானத்தையும், நாவன்மையையும் அளிக்கிறார்.

4. வாழ்வை காத்துக் கொள்ள உலகத்தை நாம் இழக்க முன்வர வேண்டும்.
சிலுவைகளை சிம்மாசனமாக மாற்றுவது நமது கையில்தான் உள்ளது.

பொதுக்காலம் 32ஆம் வாரம்

பொதுக்காலம் 32ஆம் வாரம்         
     06-11-2016 
2 மக்க 7 : 1 - 2, 9 - 14;  2 தெச 2 : 16 : 3 : 5;            லூக் 20 : 27 - 38

கொலம்பியா - மாநில கால்பந்தாட்ட போட்டி, போட்டிக்கு முதல்நாள் குழுவின் தலைசிறந்த ஆட்டக்காரரின் தந்தை இறந்துவிட்டார். அடக்கத்திற்கு சென்றுவிட்டு போட்டிக்கு சற்று முன்னதாகவே அந்த முன்னனி வீரர் வந்துவிடுகிறார்.

குழுவின் பயிற்சியாளர் : உன் மனநிலை சரியாக இருக்காது. எனவே நீ இன்று விளையாட வேண்டாம்
.
வீரர் : உங்களுக்கு என்னைப் பற்றித்தான் தெரியும். என் தந்தையைப் பற்றி தெரியாது. என் தந்தை ஒரு பிறவிக் குருடர். நான் விளையாட்டு வீரராக உயர அவர்தான் காரணம். ஆனால் அவர் ஒரு நாள்கூட என் ஆட்டத்தைப் பார்த்ததில்லை. நேற்று அவர் இறந்தார். மிகவும் நல்லவர். அவர் நிச்சயமாக விண்ணகம் சென்றிருப்பார்.
விண்ணகத்தில் குருடர்கள் கிடையாது. அங்கிருந்து என் தந்தை பார்க்கும் முதல் கால்பந்தாட்டம் இது. தயவுசெய்து என் தந்தையை மகிழ்விக்க ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள். போட்டியில் அபார வெற்றி பெறுகிறது அவரது அணி.

மனிதன் இவ்வுலக வாழ்வில் அடைய முடியாத, இயலாத நிலையை, இவ்வுலக வாழ்விற்குப் பின் அடைய முடியும். அதைத்தான் இயேசு திட்டவட்டமாக போதிக்கிறார்.

முதல் வாசகம் 

அரசனுக்கு அடிபணியாமல், திருச்சட்டத்தை மீறாமல், வீரமரணம் எய்திய 7 சகோதரர்கள் நமது நம்பிக்கைக்கு ஒப்பற்ற சான்று. அவர்களது நம்பிக்கை, இவ்வுலகில் எப்படியாவது தங்கள் உயிரைக் காத்துக் கொள்ள வேண்டும் என்பதில் அல்ல. மாறாக பாவம் செய்வதைவிட உயிருள்ள கடவுளை நம்பி உயிரை இழந்தாலும், உயிர்த்தெழுதலில் தங்களுக்கு வெகுமதியாக கிடைக்கும் என்று நம்பினர்.

நற்செய்தி

மோயிசனின் சட்டப்படி, ஒருவன் வாரிசின்றி இறந்துபோனால் அவனுடைய மனைவியை கொழுந்தனே மணந்துகொண்டு உடன்பிறந்தவன் செய்ய வேண்டிய கடமையை அவளுக்குச் செய்ய வேண்டும். ஆனால் சதுசேயர்கள் இயேசுவை கேள்வி கேட்டு வீழ்த்தாட்ட சதிசெய்கிறார்கள். உண்மையில் அந்தப் பெண் விண்ணகத்தில் யாருக்கு மனைவியாக இருப்பாள்? என்பதுதான் அவர்களது கேள்வி.  இயேசுவை, அவர் வாயாலேயே உயிர்த்தெழுதல் இல்லை என்று சொல்ல வைக்க வேண்டும் என்பதுதான் இந்த சதுசேயர்களின் எதிர்பார்ப்பு. இயேசு இவர்களது கேள்விக்கு சாதுர்யமாக பதில் தருகிறார். சதுசேயர்களுக்கு மோசேதான் முக்கியம் என்று இயேசுவுக்கு தெரியும். ஆகவே, மோசே வழியாக பதில் தருகிறார்.

விடுதலைப் பயணம் 3 : 1 - 6இல் யாக்கோபின் கடவுள் என அறிமுகப்படுத்துகிறார்.
யாக்கோபின் கடவுள், ஆபிரகாமின் கடவுள் என்றால் அவர் வாழ்வோரின் கடவுள்; செத்துப் போனவர்களின் கடவுள் அல்ல என்ற அடிப்படையான உண்மையை தருகிறார்.

யாக்கோபு, ஆபிரகாம் இவர்கள் இறந்த பின்னும் வாழ்வதால்தான் இவர்களை இவ்வாறு இறைவன் அழைக்கின்றார்.

ஆகவேதான் - விண்ணக வாழ்வில் மணம் புரிதலைப் பற்றியும் இறப்பு பற்றியும் கவலைப்பட தேவையில்லை என்கிறார். ஏனெனில் கடவுள் வாழ்வையே விரும்புகிறார்.

இறந்தவர் மீண்டும் வந்து விண்ணக வாழ்வைப் பற்றி விளக்கியது இல்லை. ஆனால் இயேசு விண்ணக வாழ்வைப்பற்றி உறுதியாகக் கூறுகிறார். இயேசுவின் வார்த்தைகள்தான் நமக்கு சான்று. இவ்வுலக வாழ்வுடன் தொடர்பு கொண்டதுதான் மறுவுலக வாழ்வு என்னும் போது, இவ்வுலகின் அறவாழ்வு பொருள்மிக்கதாக விளங்குகிறது. 

ஒரு தாலாட்டுப் பாடலோடு தொடங்குகின்ற மனித வாழ்க்கை பலரின் ஒப்பாரிப் பாடலோடு நிறைவடைகிறது.

ஒருவருக்கு சுமையாக மலர்கின்ற வாழ்க்கை நான்கு பேருக்கு சுமையாக மாறி முடிவடைகிறது.

பிறப்பு - இறப்பு இரண்டிற்கும் இடைப்பட்ட காலத்தை எப்படி வாழ்கின்றோமோ அதனைப் பொருத்துத்தான் இறப்பிற்கு பிந்தைய வாழ்க்கை அமைகிறது.

“இறையாட்சி உங்கள் நடுவே செயல்படுகிறது” (லூக் 17 - 21). இவ்வுலக வாழ்வு மறுவுலக வாழ்வின் கண்ணாடி.

இவ்வுலகில் மரணம் எப்படி நிலையானதோ அப்படியே நமது மரணத்திற்குப் பிந்தைய விண்ணக வாழ்வும் நிலையானது. விண்ணக மகிழ்வினை இங்கேயே முன்கூட்டி அனுபவிக்க முடியும். உயிர்த்தபின் வாழ்வு உண்டு என்ற நம்பிக்கையில்தான் மக்கள் தங்கள் உயிரையும் பலியாக்க தயங்கவில்லை என்று முதல் வாசகத்தில் படிக்கிறோம். 

இறையாட்சி வாழ்வு தருவது என்ற 
நம்பிக்கை வாழும் பலத்தைத் தரும்.
பிறக்கின்ற மனிதனுக்கு இறப்பு நிச்சயம்.
இறக்கின்ற மனிதனுக்கு வாழ்வு நிச்சயம் 
ஆனால் இருக்கின்ற நாள்களில் 
 தெய்வீகத்தில் மூழ்கவைக்கும் உறவு

Friday 28 October 2016

இறந்த விசுவாசிகளின் நினைவு தினம்

இறந்த விசுவாசிகளின் நினைவு தினம்
             
 02 - 11 -2016

எசா 25 : 6, 7 - 9;    உரோ 5 : 5 - 11;  லூக் 7 : 11 - 17

மரணப்படுக்கையில் படுத்திருந்த ஒரு பணக்கார தந்தையின் பக்கத்தில் அமர்ந்து, 3 மகன்கள் இப்படி பேசிக் கொண்டார்கள்.

முதல்வன் : கல்லறை 5 கிலோமீட்டர் தூரத்திலிருக்கிறதே. அப்பாவை அங்கு எப்படி கொண்டு செல்வது? என்றான்.

இரண்டாமவன் : நாம் வைத்திருக்கின்ற காரில் கொண்டு செல்லலாம்; இருந்தாலும் அதற்கு அதிக பணம் செலவாகிவிடுமே என்றான்.

மூன்றாமவன் : குதிரை வண்டியில் கொண்டு செல்லலாம். ஆனால் குதிரை வண்டி கிடைக்குமா? என்றான்.

தந்தை கூறினார், நீங்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டாம். வீட்டு மூலையில் இருக்கிற எனது கைத்தடியை எடுங்கள். நான் நடந்தே கல்லறைக்குச் சென்று விடுகிறேன் என்றாராம்.
நாம் கவனமாக இல்லையயன்றால் பணம் பாசத்தை விழுங்கிவிடும். லூக் 12 : 15‡ல் ‘எவ்வகைப் பொருளாசையும் கொள்ளாதபடி கவனமாக இருங்கள். ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவுதான் இருந்தாலும், செல்வப்பெருக்கினால் வாழ்வு வந்துவிடாது’ என்கிறார் இயேசு.

கருவிலே உருவாக்கப்படும் இந்த உடல்
இளமைக் காலங்களில் துள்ளிக் குதிக்கிறது.
வயது ஆக ஆக வளர்ச்சிப் பெறுகிறது
முதுமை வேளையில் முற்றிவிடுகிறது
முதுமையோடு இறப்பும் ஒட்டிக் கொள்கிறது.

இறைவனது பார்வையில் இறப்பு என்பது ஒரு நிரந்தரமான முற்றுப்புள்ளி அல்ல. இறப்பிற்கு பிறகும் வாழ்வு உண்டு. அந்த வாழ்வு ஒளிமயமான வாழ்வு, அத்தகைய வாழ்விற்கு நம்மை பாவ நிலையிலிருந்து பிரித்து எடுத்து, அழைத்துச் செல்லும் அதிகாரமும், ஆற்றலும், வலிமையும் இறைவனுக்கே உண்டு.
மனிதனை படைத்த இறைவன் மனிதனுக்கு சாவின்மேல் அதிகாரம் கொடுக்கவில்லை (சங்.தி 8 : 8). கொடுக்கப்பட்ட மனித வாழ்வு இறைவனது கொடை. ஆகவேதான் புனித பவுல் அடிகளார், வாழ்வு என்பது கிறிஸ்துவே, சாவது என்பது ஆதாயமே (பிலி 2 : 21) என்கிறார். ஒவ்வொரு மனிதனிலும் கிறிஸ்து வாழ்கிறார் என்றும், மனித உடலின் முக்கியத்துவத்தையும், ஆன்மாவின் புனிதத்துவ அவசியத்தையும் பவுல் அடிகளார் கூறவார்.
எப்போது மனிதர் இம்மண்ணில் பிறக்கின்றாரோ அப்பொழுதே அவரது இறப்பும் பின் தொடர்கிறது. பிறப்பு என்று இருந்தால், இறப்பை கண்டிப்பாக சந்தித்தே ஆகவேண்டும். ஒருவர் கூறினார், 

பிறப்பு என்பது இறப்பின் தொடக்கம்.
இறப்பு என்பது பிறப்பின் முடிவு என்றார். இதனையே
வாழ்வு என்பது சாவின் தொடக்கம்
சாவு என்பது வாழ்வின் முடிவு- என்று கவிஞர் கண்ணதாசன் கூறுவார்.
இறந்துவிட்ட இப்பூமிக்கு எந்த இறைவன்
உயிரூட்டினானோ, அந்த இறைவன்
இறந்தவர்களுக்கும் உயிரூட்டக் கூடியவன் ஆவான் என்கிறது திருக்குறான். 41 / 19

வாழ்வைக் கொடுத்து அதை பயனுள்ளதாக மாற்றும் அதிகாரத்தை மனிதனுக்கு தந்த இறைவன், இறுதிநாளில் நமது செயலுக்கு உகந்த பலாபலனையும் தருகிறார். அந்த அர்த்தமுள்ள வாழ்வைப்பெற இறைவன்மீது முழுமையான நம்பிக்கை கொள்ள நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்படுகிறோம். எனவேதான் இயேசு, ‘உயிர்த்தெழ செய்பவரும், வாழ்வு தருபவரும் நானே, என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வர்’ என்கிறார்.
நமக்கு முன் இறந்தவர்கள், வாழ்வின் கண்ணாடிகள். இப்பொழுதே இறைவன் அடியில் வாழும் உயிர்க்கும் வாழ்வை உயிரோட்டத்துடன் வாழ்வோம்


அனைத்து புனிதர்களின் திருவிழா

அனைத்து புனிதர்களின் திருவிழா     
01 - 11 - 2016

திவெ 7 : 2 - 4, 9 - 14; 1 யோவா 3 : 1 - 3;  மத் 5 : 1 - 12

விண்ணகத்திலுள்ள பெயர் தெரியாத அனைத்து புனிதர்களுக்கும் இன்று திருச்சபை விழா எடுத்து சிறப்பிக்கின்றது. எல்லா நாட்டையும், குலத்தையும், மொழியையும் சார்ந்த இப்புனிதர்கள் யார்? என்பதை அறிந்துகொள்ள இன்றைய நாளை திருச்சபை நமக்கு வழங்கியுள்ளது.

இறைவனுக்கும், மனிதருக்கும் உள்ள ஆழமான அன்புறவை ஏற்படுத்தும் இப்புனிதர்களின் உறவை ஞான உறவு என்று கூறும் திருச்சபை, புனிதர்களின் உறவை விசுவசிக்கின்றேன் என்ற விசுவாச படிப்பினையையும் நமக்கு கொடுத்து, இவர்களை ஜெப பரிந்துரையாளர்களாக கொடுத்திருக்கின்றது.

இன்றைய நற்செய்திப் பகுதி மலைப்பொழிவில் கூறப்படுவதைப் போல இறைவனது விருப்பத்திற்கு பணிந்து, இறையருளில் எல்லா சூழ்நிலையிலும் நிலைத்து நின்று, முற்றிலும் மன தூய்மையுள்ளவர்களாக வாழ்ந்து, இறந்த இப்புனிதர்கள் என்றென்றும் விண்ணக மகிழ்ச்சியை அனுபவிக்கும் பேறுபெறுகிறார்கள்.

ஒவ்வொரு புனிதருடைய முன்மாதிரிகையையும் நாம் பின்பற்ற அழைக்கப்படுகின்றோம். இவர்களது வாழ்வில் ஏதாவது ஒரு நற்செய்தி மதிப்பீடு இடம் பெற்றிருக்கும்.
புனிதர்களின் வாழ்வு நமக்கு ஒரு முன்னோட்டம்.
இவர்களோடு உள்ள ஒன்றிப்பு தோழமையை உருவாக்குகிறது.
இவர்களது பரிந்துரை இறை உதவியைப் பெற்றுத் தருகிறது.
தனக்காக அல்லாமல், பிறருக்காகவும், கடவுளுக்காகவும் வாழும் மனிதர்கள்தான் இந்த புனிதர்கள். இவர்கள் அனைவருமே இறைவனுக்கு சமமானவர்கள் அல்ல. புனிதர்களை நாம் வழிபடுவதில்லை, ஆராதிப்பதுமில்லை. மாறாக, அவர்களுக்கு வணக்கம் செலுத்துகின்றோம்.

திருத்தந்தை 23ஆம் யோவான் கூற்றின்படி, கத்தோலிக்க மரபின்படி புனிதர்களுக்குக் காட்டும் வணக்கம் வெறும் மரியாதை மட்டுமன்று அல்லது மன்றாட்டு மட்டுமன்று. ஆழ்ந்த அடிப்படையில் அமைந்த ஞான உறவாகும். அவர்கள் நமக்குத் தந்துள்ள விலைமதிக்கப்பெறாத முன்மாதிரிகையும், பாடமும், நமக்கு மகிழ்ச்சியூட்டும் உதவிகளாகும். எனவே, இப்புனிதர்களின் விழாவைக் கொண்டாடும் நாமும் இவர்களைப் போல புனித நிலைக்கு உயர்த்தப்படவும், இவர்களைப் போல வாழவும் திருச்சபை நமக்கு அழைப்பு விடுக்கின்றது. விண்ணகப் பயணிகளாக வாழும் நாம், இப்புனிதர்களின் அருள்துணையினாலும், பரிந்துரையாலும் நமது ஆன்மாக்களை புனிதப்படுத்தி இறைவனது புனிதர்களாக வலம்வருவோம்.

இறையடியார் லூர்து சேவியர், புனிதராக உயர்த்தப்பட திருச்சபை அவருடைய வாழ்வை முறைப்படி பரிசோதிக்கிறது. புனிதர் என்பவர் முதலில் நல்ல மனிதராக, தனது பலகீனத்தோடு போராடியவராக இருந்திருக்க வேண்டும் என்பதை சோதித்துப் பார்க்கிறது. புனிதையாக அறிவிக்கப்பட்ட அன்னை தெரசா, தன் ஆன்மீக அனுபவத்தை கூறுகையில், தொழுநோயாளருக்கு, மருத்துவம் செய்யும்போது அருவருப்பும், பயமும் இருந்தது. ஆனால் அதனை பலிவாழ்வின் ஒரு பகுதியாக நினைத்து துணிந்து மருத்துவம் செய்தேன் என்கிறார்.
மனிதத்தில் மலர்வதுதான் புனிதம்.
புனிதத்தை யாவரும் அணிந்து கொள்ளலாம்.

திருப்பலி விளக்கம் 10. வார்த்தை வழிபாடு -2

திருப்பலி விளக்கம்

10. வார்த்தை வழிபாடு -2

-அருள்பணி. எஸ். அருள்சாமி, 
பெத்தானி இல்லம், கும்பகோணம்


முன்னுரை

திருவழிபாட்டில் கொண்டாடப்படுவது திருப்பலியாக இருந்தாலும் சரி, வேறு அருள் அடையாளங்களாக இருந்தாலும் சரி, முதலில் வார்த்தை வழிபாடு நடைபெற வேண்டும் என்பது இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் அழுத்தமான போதனையாகும். ‘இறைவார்த்தை வழிபாடும்’, ‘அருள் அடையாள வழிபாடும்’ (நற்கருணை வழிபாடும்) இணைபிரியாத வகையில் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளன. அதாவது ‘இறைவார்த்தை வழிபாடே’ அருள் அடையாள கொண்டாட்டத்தைப் பொருள் உள்ளதாக மாற்றுகிறது. “திருஅவை நம் ஆண்டவரின் திருவுடலுக்கு வணக்கம் செலுத்துவது போலவே விவிலியத்திற்கும் என்றும் வணக்கம் செலுத்தி வந்துள்ளது. சிறப்பாக, திருவழிபாட்டில் இறைவார்த்தையையும், கிறிஸ்துவின் உடலையும் பரிமாறும் பந்தியிலிருந்து வாழ்வின் அப்பத்தைப் பெற்று கிறிஸ்தவர்களுக்கு அளிக்க  தவறுவதில்லை” என்று இறைவெளிப்பாடு கோட்பாட்டு விளக்கத்தில் (இ.வெ.21) கூறப்பட்டுள்ளது. இறைவார்த்தைக்கும் அருள் அடையாளத்திற்கும் (இங்கு நற்கருணை வழிபாட்டிற்கும்) இடையே உள்ள ஒருங்கிணைப்பை அழகாகச் சித்தரிக்கிறது.
இனி இறைவார்த்தை வழிபாட்டின் அமைப்பு முறையைப் பற்றி விளக்குவோம்.

இறைவார்த்தை வழிபாட்டின் நோக்கம்

இறைமக்கள் அனைவரும் விவிலியத்தை முழுமையாகவும் நன்றாகவும் அறிந்திருக்க வேண்டும் என்பது முதல் நோக்கமாகும். இதற்கு ஏதுவாக திருப்பலியில் பங்கெடுக்க வரும் மக்களுக்கு விவிலியத்தின் முக்கியமான பகுதிகள் எல்லாம் தேர்வு செய்யப்பட்டு பறைசாற்றப்படுகிறது. அதனால் இறைமக்கள் விவிலியத்தை அறியமுடிகிறது.

அடுத்து பறைசாற்றப்பட்ட இறைவார்த்தை மறையுரையில் விளக்கப்படுவதால் அதை புரிந்து கொள்ளவும் அதனால் அவர்களின் விசுவாசம் ஆழப்படுத்தப்படவும் முடிகிறது. இத்தகைய பின்புலத்தில் அவர்கள் நற்கருணை விருந்தில் பங்குபெறத் தகுதியாக்கப்படுகிறார்கள். இது இரண்டாவது நோக்கமாகும்.

இறைவார்த்தை வழிபாட்டின் அமைப்பு

விவிலியத்தின் கருவூலங்கள் திறந்துவிடப்பட்டு அதிகமான வாசகங்கள் வேறுபட்டதாகவும், கொண்டாடப்படும் மறைநிகழ்வு அல்லது விழாவுக்குப் பொருத்தமானதாகவும் இருக்கும்படி இவ்வார்த்தை வழிபாடு அமைக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை கொண்டாட்டங்களுக்கும் வார நாள்களின் கொண்டாட்டத்திற்கும் வேறுபட்ட இருவித கால சக்கரங்கள் அமைக்கப்பட்டு பொருத்தமானதும், கோர்வையானதுமான வாசகங்கள் தேர்வு செய்யப்பட்டு அளிக்கப்படுகின்றன.

1. ஞாயிறு வாசகங்கள்

ஞாயிற்றுக்கிழமை வாசகங்கள் மூன்று ஆண்டு காலவட்டத்தில் தரப்பட்டுள்ளன. ஒவ்வொரு வழிபாட்டு ஆண்டும் நடப்பு ஆண்டுக்கு முன்வரும் திருவருகைக்காலத்திலிருந்து தொடங்குகிறது. எடுத்துக்காட்டாக நடப்பு ஆண்டாகிய 2016, சென்ற ஆண்டின் இறுதியில் வந்த வருகைக்காலத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையே தொடங்கிவிட்டது. இது இவ்வாண்டின் கிறிஸ்து அரசர் பெருவிழாவுக்குப் பின்வரும் சனிக்கிழமை மாலையோடு முடிந்துவிடும்.

நடப்பு ஆண்டு எந்த கால வட்டத்தைச் சார்ந்தது எனத் தெரிந்து கொள்ள பின்வரும் முறையைக் கையாளலாம். அதாவது நடைபெறும் ஆண்டை (2016) 3ஆல் வகுத்தால் மீதம் 1 வந்தால் அது முதல் ஆண்டு என்றும், மீதம் 2 வந்தால் அது இரண்டாவது ஆண்டு என்றும், மீதம் 0 வந்தால் அது மூன்றாவது ஆண்டு என்றும் புரிந்து கொள்ள வேண்டும். அதன்படி வாசகங்களைத் தேர்வு செய்ய வேண்டும். 2016இல் 3ஆல் வகுக்கும்போது மீதம் 0 வருவதால் இந்த நடப்பு ஆண்டில் மூன்றாவது வழிபாட்டு ஆண்டுக்குரிய வாசகங்கள் வாசிக்கப்படுகின்றன.

ஏன் மூன்று ஆண்டுகால வட்டம் என்று ஒரு கேள்வி எழலாம். பெரும்பாலான மக்கள் ஞாயிற்றுக்கிழமை திருப்பலிக்கு மட்டும் செல்வதால், அவர்களுக்கு முழு விவிலியத்தின் விருந்து அளிக்க மூன்று ஆண்டுகள் தேவைப்படுகின்றன. இவர்கள் தவறாமல் மூன்று ஆண்டுகளும் ஞாயிறு திருப்பலியில் பங்குபெற்று வாசகங்களைக் கேட்டால் முழு விவிலியத்தையும் வாசிக்கக் கேட்டதற்கு சமமாகும்.

ஞாயிற்றுக்கிழமைகளில் மூன்று வாசகங்கள் இடம் பெறுகின்றன. முதல் வாசகம் பழைய ஏற்பாட்டிலிருந்தும், இரண்டாவது வாசகம் புதிய ஏற்பாட்டில் திருத்தூதர்களின், சிறப்பாக புனித பவுலின் மடல்களில் இருந்தும், நற்செய்தி வாசகம் நான்கு நற்செய்திகளிலிருந்தும் தேர்வு செய்யப்பட்டிருக்கும். முதல் ஆண்டில் மத்தேயு நற்செய்தியும், இரண்டாவது ஆண்டில் மாற்கு நற்செய்தியும், அதோடு (அது சுருக்கமான நற்செய்தியாக இருப்பதால்) யோவான் நற்செய்தியின் ஒரு பகுதியும், அதாவது யோவான் நற்செய்தியின் 6வது அத்தியாயம் 17, 18, 19, 20, 21 ஆகிய 5 ஞாயிற்றுக்கிழமைகளில் வாசிக்கப்படும். மூன்றாவது ஆண்டு லூக்கா நற்செய்தியும் வாசிக்கப்படும். யோவான் நற்செய்தியில் எஞ்சியிருக்கும் பகுதி தவக்காலத்தின் பிற்பகுதியிலும் பாஸ்காகால ஞாயிற்றுக்கிழமைகளிலும் வாசிக்கப்படுகிறது.

பதிலுரைப் பாடல்:

முதல் வாசகம் முடிந்ததும் பதிலுரையாகத் திருப்பாடல் தொடரும். தொடக்க திருஅவையில் திருவழிபாட்டு கொண்டாட்டங்களில் திருப்பாடல்கள் ஏராளமாகப் பயன்படுத்தியதாக வரலாறு கூறுகிறது. நாளடைவில் அவற்றிலிருந்து ஒரு சில வசனங்கள் மட்டுமே கையாளப்பட்டுள்ளன. இது படிகீதம் என்று அழைக்கப்பட்டு முதல் வாசகத்திற்குப் பின் மிகக் குறுகியிருந்ததை அறிவோம்.

ஆனால் இப்பொழுது பழைய நடைமுறைக்குத் திரும்பியுள்ளோம். முதல் வாசகத்தின் கருபொருளுக்கு ஏற்றவாறு திருப்பாடல் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதன் பலபத்திகளைத் தொடுத்து, பொருத்தமான பல்லவியுடன் அமைத்துத் தரப்பட்டுள்ளது. இது உண்மையிலேயே வாசகத்திற்கு நாம் கொடுக்கும் பதிலுரையாகவும், அவ்வாசகத்தின்மீது நமது சிந்தனையைக் கிளறிவிடும் தியானப் பாடலாகவும் அமைந்திருக்கிறது. “இது இறைவார்த்தை வழிபாட்டின் முழுமையான பகுதியாகும்” என்று உரோமை திருப்பலி நூலின் பொதுப்படிப்பினை கூறுவது கவனிக்கத்தக்கது (றூணூயூனி 61). மேலும் அதே படிப்பினை கூறுவதை நோக்க வேண்டும். “வாசகங்களும், பதிலுரைப்பாடலும் இறைவார்த்தையைக் கொண்டிருப்பதால், அவற்றிற்குப் பதிலாக விவிலியம் அல்லாத வேறு பாடங்களைப் பயன்படுத்தலாகாது” (GIRM 57).

பதிலுரைப் பாடல் ‘இறைவார்த்தை வழிபாட்டின் முழுமையான பகுதி’ என்பதாலும், ‘இறைவார்த்தையைக் கொண்டிருப்பதாலும்’, இதை விட்டுவிட்டு வேறு பாடல்களைப் பாடுவது சரியல்ல என்பதைப் புரிந்துக் கொள்ள  வேண்டும்.

காலம் சென்ற அருள்பணியாளர் வில்லவராயர் சொல்வது எல்லோராலும் சிந்திக்க வேண்டியதொன்றாக உள்ளது. “இத்துணை சிறப்பு வாய்ந்த திருப்பாடல்களைப் பதிலுரைப் பாடலாக பாடுவதில் அல்லது படிப்பதில் ஏற்படும் தளர்வு நம் அறியாமையையே காட்டுகிறது. தரப்பட்ட திருப்பாடல்களைவிட அதிக பொருத்தமானப் பாடல்களைக் காண்பது அரிது. மேலும் இறைவாக்கிற்கு ஈடேது? பதிலுரைப் பாடல்களை நன்கு பயன்படுத்த கருத்துக் கொள்வோம், கற்றுக் கொள்வோம்”.

இரண்டாவது வாசகம் புதிய ஏற்பாட்டின் திருமடல்களில் இருந்து தேர்வுசெய்யப்படுகிறது. இந்த வாசகங்கள் இறைமக்களை ஒழுக்க நெறிகளில் பயிற்றுவிக்கவும், நடைமுறை வாழ்வுக்கு உகந்தனவாகவும் இருக்கும்படி தேர்வு செய்யப்பட்டிருக்கும்.

அல்லேலூயா

இந்த இரண்டாவது வாசகத்திற்குப் பின் பொதுவாக வருவது அல்லேலூயா ஆர்ப்பரிப்பாகும். இதற்கு “ஆண்டவரைப் போற்றுங்கள்” என்பது பொருள். எனவே இது ஓர் ஆர்ப்பரிப்புச் சொல். ஆதலால் இது எப்பொழுதும் பாடப்பட  வேண்டும். பாடாவிட்டால் விட்டுவிடுவது நல்லது. “அல்லேலூயா அல்லது நற்செய்திக்கு முன்வரும் வசனம் பாடப்பெறவில்லையயன்றால் அவற்றை விட்டு விடலாம்” (றூணூயூனி 63/இ) என்று திருப்பலி நூல் பொதுப் படிப்பினையில் கூறப்பட்டுள்ளது. அல்லேலூயாவுக்கு பல்லவி வாசக நூலிலிருந்து அல்லது படிக்கீத நூலிலிருந்து எடுக்கப்பெறும்.

இந்த ஆர்ப்பரிப்பின் வழியாக நம்பிக்கையாளரின் திருக்கூட்டம் நற்செய்தியில் தங்களோடு பேசவிருக்கும் ஆண்டவரை வாழ்த்தி வரவேற்கின்றது. இந்த அல்லேலூயா ஆர்ப்பரிப்பு நற்செய்திக்கு முன்னோடியாக வந்து, நற்செய்தியின் சாராம்சத்தை, மையக்கருத்தை, உட்பொருளை சுருக்கமாக எடுத்துரைப்பதே இதன் நோக்கமாகும். இது தகுந்த முறையில் நற்செய்திக்குச் செவிமடுக்க நம்மைத் தயாரிக்கிறது.

இதற்கு மாறாக நம் விருப்பம்போல் அல்லேலூயா வசனத்தை மாற்றிக்கொள்ளக்கூடாது. அல்லது மனப்பாடமாகத் தெரிந்த “ஆண்டவரே பேசும், உம் அடியான் கேட்கிறேன்” என்று நினைத்தபோதெல்லாம் பாடக்கூடாது. சில நேரங்களில் எந்த வசனமுமின்றி நான்குமுறை தொடர்ந்து “அல்லேலூ, அல்லேலூ, அல்லேலூ, அல்லேலூ” என்று பாடிவிட்டு, அடுத்து “அல்லேலூயா, இயேசுவைப் போற்றுங்கள்” என்று பாடுவதைப் பார்க்கிறோம். இது சரியானதன்று. ஏனெனில் இதில் அன்றைய நற்செய்தியின் சுருக்கம் இல்லை. மேலும் அல்லேலூயா என்பதற்கு “போற்றுங்கள்” என்பதுதான் பொருள் என்பது புரியாமல் பாடுவதாக உள்ளது.

தவக்காலத்தில் அல்லேலூயா பாடுவது விடப்படும். இதற்குப் பதிலாக வாசக நூலில் குறிப்பிட்டுள்ளபடி நற்செய்திக்கு முன் வசனம் பாடப்பெறும்.

தொடர்பாடல்

பாஸ்கா ஞாயிறு, பெந்தகோஸ்து, இயேசுவின் திருவுடல், திருஇரத்தம் ஆகிய மூன்று பெருவிழா நாள்களிலும், கன்னி மரியாவின் துயரங்கள் அதாவது வியாகுல அன்னை நினைவு நாளிலும் (செப்டம்பர் 15) முதல் வாசகம், அதற்குரிய பதிலுரைப் பாடலுக்குப் பின், அல்லேலூயாவுக்கு முன் தொடர்பாடல் பாட அல்லது வாசிக்க வேண்டும். என்று குறிப்பு இருக்கிறது. இந்த தொடர்பாடல் அன்றைய விழாவின் மகிழ்ச்சி அல்லது துயர உணர்வை பிரதிபலிக்கும் விதமாக அமைந்திருக்கிறது.

பாஸ்கா ஞாயிறு அன்றும், பெந்தகோஸ்து நாளன்றும் இரண்டாவது வாசகத்திற்குப் பின் இத்தொடர்பாடல் கட்டாயமாகப் பாடவோ, வாசிக்கவோ வேண்டும். பாஸ்கா ஞாயிறு எண் கிழமைகளிலும் விரும்பினால் தொடர்பாடலைப் பாடலாம் அல்லது வாசிக்கலாம். ஆனால் மற்ற இருநாள்களிலும் தொடர்பாடலை விரும்பினால் பாடலாம் அல்லது வாசிக்கலாம் என்றுள்ளது (GIRM 64).
இயேசுவின் திருவுடல், திருஇரத்த பெருவிழாவன்று முழுமையாக அல்லது சுருக்கமாக இத்தொடர்பாடலை பாடலாம் அல்லது வாசிக்கலாம் என்று கூறுவதோடு, சுருக்கமாக எந்த பத்தியில் (விமிழிஐகுழி) இருந்து எடுக்கலாம் என்றும் அடையாளம் காட்டப்பட்டுள்ளது. இத்தொடர் பாடல் புனித அக்குவினா நகர் தோமாவால் அமைக்கப்பட்டது. இது “சீயோனே உன் மீட்பரைப் புகழ்வாய்” என்று தொடங்குகிறப் பாடலாகும். இது நற்கருணையின் மகத்துவத்தைப் பற்றிய பாடலாகும்.

கன்னி மரியாவின் துயரங்கள் நினைவுநாளில் ஒரு வாசகமும், நற்செய்தி வாசகமும் மட்டுமே உண்டு. எனவே முதல் வாசகத்திற்குப் பின் பதிலுரைப் பாடலுக்கு அடுத்து இத்தொடர்பாடல் இடம்பெறுகிறது. இதுவும் முழுமையாகவோ அல்லது அடையாளக் குறியிலிருந்து சுருக்கமாகவோ பாடலாம் அல்லது வாசிக்கலாம் என்றுள்ளது. இப்பாடல் சிலுவையடியில் நின்று துயருற்ற அன்னை மரியாவின் வியாகுலங்களைச் சித்தரிப்பதாக உள்ள ஓர் அழகான பாடலாகும்.

வெற்றி உங்கள் கையில், நேர்மறை ஒரு வளர்பிறை

வெற்றி உங்கள் கையில்

- அருட்திரு. எஸ். ஜான் கென்னடி,
M.A., M.Ed; M. Sc; M. Phil; PGDCA, NET; Ph.D.,
பூண்டி புதுமை மாதா கல்வியியல் கல்லூரி, சமயபுரம்

நேர்மறை ஒரு வளர்பிறை

அது பிராய்லர் கோழி இல்லாத காலம். வீட்டில் வளர்ந்த வெள்ளைக்கோழியை விரட்டிப்புடிச்சு விருந்தாளிக்கு கொழம்பு வச்சுக் கொடுத்தாச்சு. கோழிக்கறி வயிற்றுக்கு உள்ளே போய் பேசுதாம் இப்படி,

“வெரட்டிப் புடிக்கையிலே என்ன தான் சொல்லிச்சாம் வெள்ளக்கோழி?
நான் ஊர்வலம் போறேன் என்றுதான் சொல்லுச்சாம் வெள்ளக்கோழி.

கழுத்தறுக்கையில் என்ன தான் சொல்லிச்சாம் வெள்ளக்கோழி?
நான் ஆபரேசன் பண்ணிக்கிறேன் என்று தான் சொல்லிச்சாம் வெள்ளக்கோழி.
தோல உரிக்கையில் என்ன தான் சொல்லிச்சாம் வெள்ளக்கோழி?
நான் சட்டைய கழட்டுறேன் என்றுதான் சொல்லிச்சாம் வெள்ளக்கோழி.

எண்ணெயில் பொறிக்கையில் என்ன தான் சொல்லிச்சாம் வெள்ளக்கோழி?
நான் எண்ணைய் தேச்சு குளிக்கிறேன் என்றுதான் சொல்லிச்சாம் வெள்ளக்கோழி.

வயித்துக்குள்ள போகையில என்ன தான் சொல்லிச்சாம் வெள்ளக்கோழி?
இந்த உலகம் ரொம்ப பெரிசுன்னு சொல்லிச்சாம் வெள்ளக்கோழி”.

இது ஒரு நாட்டுப்புறப் பாடல். இந்தப் பாடலைப் பாடியவர் திரு.புஷ்பவனம் குப்புசாமி.

பாட்டு நகைச்சுவையாக இப்படி இருந்தாலும் ஒரு வரியில்கூட அந்த கோழி தான் ஆபத்தான நிலையில் இருக்கிறேன் அல்லது வேதனைப்படுகிறேன் என்று சொல்லவில்லை. இதைத்தான் நேர்மறையான சிந்தனை (Pலிவிஷ்மிஷ்ஸe வீஜுஷ்ஐவஷ்ஐஆ) என்பர்.

நான் இரண்டு பூனைக்குட்டிகள் வளர்க்கிறேன். நடைப்பயிற்சி போகும்போது என்னோடு வரும். பிறகு ஓய்வு எடுக்கும். என் அறைக்கு நான் வரும்போது என்னோடு வரும். சாப்பிடும்போதும் வரும். என் அறைக்கு முன்பாக பலமணி நேரம் வெளியில் எனக்காக காத்திருக்கும். அதற்கு திண்பண்டங்கள் கொடுப்பேன். என் அறைக்கு முன்னால் காத்திருந்தால் திண்பண்டம் கிடைக்கும் என்ற நேர்மறையான உள்ளுணர்வு அதற்கு அதை பெற்றுக் கொடுக்கிறது. நம் வீட்டில் வளரும் வளர்ப்புப் பிராணிகள்கூட “கிடைக்கும், கிடைக்கும்” என்ற உள்ளுணர்வினால் காத்திருந்து உணவைப் பெற்றுக் கொள்கிறது. ஐந்தறிவு உள்ள பிராணிகள் இவ்வாறு நேர்மறை உள்ளுணர்வோடு வாழும்போது ஆறறிவு பெற்றுள்ள நாம் அதைவிட அதிகமான நேர்மறை எண்ணத்தை பெற்றிருக்க வேண்டும்.

எப்போதும் உங்களின் சிந்தனையில், பார்வையில், செயலில் நேர்மறை எண்ணங்கள் விதைக்கப்படட்டும். ஒருபோதும் எதிர்மறை எண்ணங்களை விதைக்க வேண்டாம். அவைகள் உங்களின் நல்லெண்ணங்களைத் திருடி வாழ்வில் மகிழ்ச்சியையும், வெற்றியையும் பறித்து விடுகிறது. நீங்கள் வலிமையானவராக எண்ணினால், வலிமையானவராக மாறலாம். வெற்றி வீரராக எண்ணினால் வெற்றி வீரராக மாறலாம். சக்தி வாய்ந்தவராக எண்ணினால் சக்தி வாய்ந்தவராக மாறலாம். மேன்மைமிக்கவராக எண்ணினால் மேன்மைமிக்கவராக மாறலாம். ஆகவே நேர்மறை எண்ணங்கள் நம்மை மிக நல்லவராக மாற்றி வெற்றியாளராக உருவாக்குகிறது,

எனது நண்பரின் குடும்பத்தில் நடந்த நிகழ்வை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். என் நண்பரின் மனைவி மருத்துவமனைக்குச் சென்று கர்ப்பப்பையை ஸ்கேன் செய்த போது அதில் கட்டி இருப்பதாக மருத்துவர் கண்டுபிடித்தார். அதை அறுவை சிகிச்சை செய்து எடுத்துவிட வேண்டும் என்றும் கூறினார். சரியாக ஒருவருடம் கழித்து மீண்டும் ஸ்கேன் செய்த பொழுது கட்டி கரைந்து போய் இல்லாமல் இருந்தது. குடும்பமே மகிழ்ச்சியால் துள்ளியது. நான் “எப்படி இப்படி பட்ட அதிசயம் நடந்தது?” என்று கேட்டேன். அதற்கு என் நண்பர் சொன்னார், “என் கட்டி ஒரு வருடத்தில் கரைந்துவிடும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்று மனைவி அடிக்கடி சொல்லிக்கொண்டே இருந்தார்கள். அதேபோல் கரைந்தும் விட்டது பாருங்கள். நேர்மறை எண்ணத்தினால் ஏற்பட்ட விளைவு இது. இது நேர்மறை எண்ணம் செய்த அதிசயம். நேர்மறை எண்ணம் என்பது ஒரு மந்திர விளக்கு. அந்த விளக்கிடம் நாம் எதை கேட்கின்றோமோ அவை எல்லாவற்றையும் அது கொடுக்கும். ஆகவே நாம் ஒவ்வொருவரும் நேர்மறையான எண்ணங்களை விதைத்து வெற்றியை அறுவடை செய்து வெற்றியாளர்களாக வலம்வருவோம்.

“ரோஜா செடியில் முட்கள் இருக்கின்றதே என்று வருத்தப்படலாம் அல்லது முட்களின் மத்தியில் ரோஜா மலர்கள் இருக்கின்றதே என்றும் மகிழ்ச்சியடையலாம்”- ஆபிரகாம் லிங்கன்.

மரணமில்லா பெரு வாழ்வு நோக்கி

மரணமில்லா பெரு வாழ்வு நோக்கி

நவம்பர் மாத சிறப்புக் கட்டுரை

- அருள்பணி. அ. பிரான்சிஸ், பாபநாசம்

மரணம், சாவு ஆகியவை மனிதருக்கு ஆழ்ந்த அச்சத்தினையும், துக்கத்தினையும் உருவாக்கும் சொற்கள். பிறப்பும், இறப்பும் இயற்கையின் எதார்த்தங்கள். மரணமில்லாப் பெருவாழ்வில் திளைத்திடவே மனிதர் படைக்கப்பட்டார். படைத்தவரையே மதியாது ஆணவத்தினால் மனிதரே வருவித்துக் கொண்டவையே இறப்பு. மருத்துவம் மனித வாழ்வின் மரணத்தினை கீழ்க்கண்டவாறு பகுக்கின்றது.

1. 1. NECROBIOSIS: மனித உடலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான செல்கள் அழிகின்றன. புதிய செல்கள் பிறக்கின்றன. இது வாழ்க்கைச் சுழற்சியின் இறப்பு.

2. NECROSIS: ஏதேனும் ஒரு காரணத்தினால் நமது உடலின் ஒரு பகுதியோ அல்லது ஒரு உறுப்போ முற்றிலும் செயலிழந்து விடுதல். உடலின் ஒரு பகுதியிலோ, ஓர்  உறுப்பிலோ இரத்த ஓட்டம் தடைபடுவதனால் இது ஏற்படுகின்றது.

3. CLINICAL DEATH: சுவாசமில்லை, குருதியோட்டமில்லை, மூளைச் செயல்பாடுகள் இல்லை. ஆனால் இதுவே முழு மரணம் அல்ல. மரணத்தின் தொடக்க நிலை. உதாரணத்திற்கு ஹார்ட் அட்டாக்  இதயம் தனது செயல்பாட்டை ஒரு சில நிமிடங்கள் நிறுத்திக் கொள்ளும். இது ஒரு நான்கு நிமிடங்கள் நீடிக்கும். அதற்குள் CARDIO PURMONARY RESUSCITATION CCRPI என்ற முறையில் செயற்கை சுவாசமூட்டியும், செயற்கை முறையில் இதயத்தை செயல்படத் தூண்டியும் செயல்பட வைக்கலாம்.

4. . BRAIN DEATH: உயிர் வளியோட்டம் இல்லாது 3லிருந்து 7 நிமிடங்கள் வரை ஓரளவிற்குத் தாக்குப் பிடிக்கும். மூளைச் சாவு ஏற்பட்டுவிட்டால் மற்ற உறுப்புகளுக்கு செயல்படத் தெரியாது. இதற்குப் பின் எவரையும் மரணத்திலிருந்து மீட்டெடுக்க முடியாது.

5. SOMATIC DEATH : இது நிச்சயமாக இறப்பு நிலையே. மேற்சொல்லப்பட்ட 3‡4 பகுதிகளின் கூட்டுநிலை செயற்கை சுவாசமும், குருதியோட்டமும் அளித்து செயல்பாட்டில் வைக்க முடியும். இந்தச் செயற்கை நிறுத்தப்பட்டால் உறுதியான இறப்பு நிலைதான்.

உடலின் இறப்பிற்கு பின் ...

ஆத்மாவுக்கு பிறப்போ, இறப்போ கிடையாது. ஒரு முறை இருந்து பிறகு அவர் இல்லாமல் போவதுமில்லை. அவர் பிறப்பற்ற, நித்தியமான என்றும் நிலைத்திருக்கும் மரணமற்ற, மிகப் பழமையானவர் ஆவார். உடல் அழிக்கப்பட்டாலும் ஆத்மா அழிக்கப்படுவதில்லை - பகவத் கீதை 2 . 20.

கரந்த பால் மடி புகா
உடைந்த சங்கில் ஓசை புகா
பிரிந்த  உயிர் மீண்டும்
உடல் புகா - ஆத்மபோதா நிர்விப்தா நந்தா.

நெற்றிக்கு நேரே நிறைந்த ஒளிகாணில்
முற்றும் அழியாது உடம்பு
அகம்புறம் பேராப் பொருளை அறியில்
உகம்பவ காட்டும் உடம்பு - ஒளவைக் குறள்

ஊன உடம்பே ஒளி உடம்பாய் ஓங்கி நிற்க
ஞான அமுதெனக்கு நல்கியதே - வானப்
பொருட் பெருஞ்சோதிப் பொதுவாழ்வில் விளங்கும்
அருட் பெருஞ்சோதி அது - வள்ளலார்.

ஒளியாகிய பேரொளியில் உடல் கலப்பதால் ஒளி உடம்படைந்த ஒருவரின் உடலில் மண்பூதமே இருக்காது.

வாழ்வின் நூல் :

திவெ 3 : 4, 5 வாழ்வின் நூல் குறிப்பைத் தருகிறது. இதில் இடம்பெறத் தகுதி பெற்றவர் யார் என்றும் குறிப்பிடுகிறது.

1. கொடிய வேதனையினின்று மீண்டு, தங்களின் தொங்கலாடைகளை ஆட்டுக்குட்டியின் இரத்தத்தில் தோய்த்து வெண்மையாக்கிக் கொண்டவர்கள். திவெ 7 : 14.

2. கற்றதையும், கேட்டதையும் நினைவில் கொண்டு கடைப்பிடித்து வாழ்ந்தவர்கள். திவெ 3 : 3.

3. தீட்டுப்படாது. அருவருப்பானதைச் செய்யாது, பொய்மையின்றித் திகழ்வோர். திவெ 21 : 27.

திருச்சபையின் பாரம்பரியப் படிப்பினையின் அடிப்படையில் திருச்சபை மூன்று வடிவங்களைக் கொண்டது.

1. பயணிக்கும் திருச்சபை (Pilgrim Church):

இது இம்மண்ணக வாழ்வில் பயணிக்கும் மனிதர்களாகிய நம்மைக் குறிக்கிறது.

2. துன்புறும் திருச்சபை (Suffering Church):

இவ்வுலக நாட்களில் பாவம் புரிந்தாலும் அதற்குரிய பாவ அழுக்கினைப் போக்குவதற்குரிய முயற்சி மேற்கொண்டும் கறைகளோடு இறப்போர், பாவப் பரிகாரம் மேற்கொள்ளும் நிலையினை அடைகின்றனர். இதுவே உத்தரிப்புத் தலம் எனப்படுகின்றது.

3. மகிமையின் திருச்சபை (Glorious Church):

பாவப் பரிகாரம் மேற்கொண்டு இறுதியில் மகிமைமிகு முடிசூழ இறைவனோடு என்றென்றும் வாழ்வோரே மகிமையின் திருச்சபையினர். இவர்களே புனிதர்கள்.

ஆக, இந்த மூவகைத் திருச்சபையினரும் இணைந்து சமூக நலன் சார் சமூக உறவினை உருவாக்குகின்றனர். இவர்களே மரணமில்லாப் பெருவாழ்வு நோக்கிப் பயணித்து வெற்றி கண்டவர்கள். நாமும் மரணமில்லாப் பெருவாழ்வு நோக்கிப் பயணித்து இறை ஒளியில் சங்கமிப்போம்.

Ads Inside Post