Pages - Menu

Friday 9 December 2016

An Appeal to support the activities of the Pastoral Centre, Kumbakonam

From
Fr. S.I. ARULSAMY
Director
Pastoral Centre
P.B. 3
KUMBAKONAM, Thanjavvur Dt
Tamil Nadu, 612 001
India
Tel.: 0435/2422466
Cell: 94434 34405

09/12/2016
Sub. : Requesting your support to the mission and works of pastoral centre
Sir/Madam,
Pastoral Centre,Kumbakonam takes care various activities. One of its chief activities is the publication of a Tamil monthly, Annaiyin Arutsudar md;idapd; mUl;Rlh;.
It is being published since 1967 and next year will be the golden jubilee year of its publication. Although the circulation is 2000 copies a month, the subscription rate is so low (One hundred rupees a year) and we need some financial support to continue this work.
Therefore, I appeal to your generosity to give your financial support. Your name and contribution will be published in Annaiyin Arutsudar.
Besides Pastoral Centre, Kumbakonam, takes up the works of catechetical moral learning supervision in  Catholic schools in the diocese of Kumbakonam
It is involved in the mission of ecumenism and religious diologue
Those who are abroad may send your contribution to the following account:
Name of the Account holder:    Kumbakonam diocese Society
Name of the Bank:                   Indian Overseas Bank
Address of the Bank:                     Kamaraj Road, Kumbakonam – 612 001,
Thanjavur Dt – Tamil Nadu, India
Bank Account number:                                099001000000001
IFSC code:                                IOBA0000990
MICR code:                              612020010


Those who are in India may send their contribution to the following account:

Name of the Account holder:    Kumbakonam diocese Society
Name of the Bank:                   Indian Overseas Bank
Address of the Bank:                     Kamaraj Road, Kumbakonam – 612 001,
Thanjavur Dt – Tamil Nadu, India
Bank Account number:                                099001000005411
IFSC code:                                IOBA0000990
MICR code:                              612020010

I will be grateful to you if you could support our work.
NB: If you send your contribution kindly inform me by my E. Mail and indicate in your transfer form that your contribution is meant for the activities of Pastoral Centre, Kumbakonam. Thanking you in advance,
Fr. S.I. Arulsamy
Yours sincerely

(Fr. S.I. Arulsamy)


Friday 2 December 2016

நான் எழுத்தாளன் ஆனேன்

நான் எழுத்தாளன் ஆனேன்

- லெயோ ஜோசப், திருச்சி

14. எழுத்தாளனாக கலைக்காவிரிக்குள் நுழைந்தேன்; கவிஞனாக

நீங்க இங்க வந்துடுங்களேன் என்றார் ஃபாதர் ஜார்ஜ் ஒரு நாள். எனக்கும் ஆசைதான். அன்றிரவே சென்னைக்குப் புறப்பட்டேன். மறு நாள் மாலை முரசு அலுவலகத்தில் இருந்தேன். திரு.இராமச்சந்திர ஆதித்தனைச் சந்தித்தேன். நீங்க நல்ல இடத்துக்கு போவது எனக்கு சந்தோ­ம்தான். போங்க, மேனேஜர்கிட்ட சொல்றேன் என்றார்.
மாலை முரசுக்கு வந்தேன். ஆயிரம் ரூபாய் கொடுத்தார்கள். 1998‡இல் கலைக்காவிரியில் சேர்ந்தேன். அப்போதிருந்து அங்கு நான் வேலை பார்த்த 6 ஆண்டுகளும் வானொலிக்காக பாடல் எழுதுவது நான்தான். நான் பாடல் எழுதும்போது, ஒரு சஸ்பென்ஸ் வைத்து பாடலின் கடைசியில் சஸ்பென்ஸை உடைப்பேன். பாடல்களை எழுதி ஃபாதர் ஜார்ஜ் இல்லாத நேரமாகப் பார்த்து அவரது மேஜைமேல் வைத்துவிட்டு வந்து விடுவேன். ஒரு நாள் என்னைக் கூப்பிட்டனுப்பினார். என்ன பாட்டு எழுதியிருக்கீங்க? பல்லவி முடிஞ்சு அனுபல்லவி வரும்போது, பாட்டைக் கேட்கிறவன் பல்லவியை மறந்து விடுவான். சரணம் வரும்போது அனுபல்லவியை மறந்து விடுவான். அப்புறம் எப்படி உங்க பாட்டு மனசில நிற்கும்?
ஒரு கருத்தை எடுத்துக்கிட்டா அதையே டெவலப் பண்ணிக்கிட்டுப் போகனும். பல்லவியிலிருந்து அனுபல்லவி; அனுபல்லவியிலிருந்து சரணம் இப்படி டெவலப் பண்ணிக்கிட்டே போவனும் என்றார். அவர் பாட்டெழுத மாட்டார். ஆனால், ஒரு பாடல் எப்படி இருக்க வேண்டும் என்று தெளிவாகத் தெரிந்து வைத்திருந்தார். அதுதான் தலைமைப் பண்பு.
அதன் பிறகு மெஸேஜுக்கு முக்கியத்துவம் கொடுத்து பாடல் எழுதத் தொடங்கினேன். யாருக்கு எவ்வளவு சம்பளம் கொடுப்பது என்ற பிரச்சனை எழுந்தது. அதற்காக ஒரு மீட்டிங் போடப்பட்டது. அட்மினிஸ்டேசனைச் சேர்ந்தவர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள். வெளியில் நாலு இடங்களுக்குப் போகறவன் என்பதால் சம்பள விகிதங்களைத் தெரிந்து வைத்திருப்பேன் என்பதால் என்னையும் சேர்த்துக் கொண்டார்கள்.
ஃபாதர். ஜார்ஜ்தான் சம்பளங்களை முடிவு செய்தார். டெக்னீ´யனுக்கு 1000 ரூபாய், அவரவர் வேலைக்கு ஏற்றபடி சம்பளங்களை முடிவு செய்தார். என்னை ஒன்றும் கேட்கவே இல்லை. கடைசியில் லியோ ஜோசப்புக்கு 600 ரூபாய் என்று கூறிவிட்டு எழுந்து விட்டார். அது மிகவும் குறைச்சல் என்பது எனக்குத் தெரியும். ஆனால், ஒன்றும் பேசவில்லை.
அதற்குக் காரணம் உண்டு. சிறிது நாட்களுக்கு முன்பு, அவர் எதிர்பார்ததபடி நான் வேலை செய்யவில்லையயன்று ரூபாய்.5000 கொடுத்து என்னை நிறுத்தி விட்டார். ஒரு சலுகையளித்தார். என்னை யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்கு ஒரு நாளைக்கு ரூபாய்.15 சம்பளம். இப்போது சம்பளத்தை  உயர்த்தி விட்டார்.

அப்போது அமாபெல் என்னும் ஹோலி கிராஸைச் சேர்ந்த சகோதரி, ஆங்கிலோ இந்திய மாணவிகளுக்கு பத்திரிகை நடத்துவது எப்படி என்று வகுப்பு நடத்திக் கொண்டிருந்தார். அவர் என்னை பயன்படுத்திக் கொண்டார். நானும் எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் விளக்கங்கள் அளித்தேன். யrலிவeஐ சிஐஆயிஷ்விஜு என்றாலும் அவர்கள் புரிந்துக் கொண்டார்கள். பின்னொரு நாள் மாலை முரசு அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று, தினத்தாள் அச்சாகும் முறையை விளக்கினேன். சகோதரிக்கு மிக்க மகிழ்ச்சி!

அப்போது தான் திருச்சபைக்கு ஒரு பொதுப்பாடல் புத்தகம் தேவை என்று முடிவு செய்திருந்தார்கள். பழைய பாடல்களின் ஆசிரியர்களின் அனுமதி பெற்றும் புதுப் பாடல்களுக்கு இசையமைத்தும் புத்தகம் தயாரிப்பது என்று திட்டம். கோவை ஆயர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.

பாடல்களை கலைக்காவிரியில் ஒலிப்பதிவு செய்வது என்று ஏற்பாடு. அதற்காக இசைக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. அதன் பொறுப்பாளராக மான்போர்டு சபையைச் சேர்ந்த சகோததர் ஜெபமாலை நியமிக்கப்பட்டார். அவர் என்னை அழைத்துக் கொண்டார். (இன்னும் சொல்வேன்)

புது விடியலே வா

 புது விடியலே வா


விடியலின் பிறப்பே வா!
மாட மாளிகை விடுத்து
மாட்டுத் தொழுவத்திலே பிறந்த
எளிமையின் பிறப்பிடம் நீ!

ஏழ்மையின் புகலிடம் கொண்டு
வாய்மையின் மைந்தனாய் வருகைதந்த
வசந்தத்தின் விடிவெள்ளி நீ!

தாழ்ச்சியில் தனித்துவம் கண்டு
தன்னிகரில்லா கன்னிகையின்
வயிற்றில் உதித்த மாபரன் நீ!

இறைநிலை விடுத்து மனிதராய் பிறந்து
இவ்வுலகின் பாவ இருளினை அகற்ற வந்த
விடுதலையின் ஆதவன் நீ

மனித மாண்புகள் மதிப்புற
சீடத்துவத்தை செயலாற்றிய
மாட்சிமை பொருந்திய செம்மறிக்குட்டி நீ!

மன்னிப்பு அகுடம் அளித்து
மறுவாழ்வு உண்டு என்றுரைத்த
மனுமகன் நீ!

தன்னையே வெறுமையாக்கி,
தன்னிகரில்லா சேவகனாகி
தன் குருதியையே அர்ப்பணமாக்கிய
அன்பின் அடையாளம் நீ!

எம்மையாள வந்த
விடியலின் பிறப்பே வா!

மண்ணாக இருக்கும் இருதயங்களை மனங்களாக்க வா!
குழந்தை வடிவிலே வந்த
விடியலே வா!

எம்மை புது விடியலாக்க வா!
விடியலின் பிறப்பே வா!

கிறிஸ்து பிறப்பு விழா

கிறிஸ்து பிறப்பு விழா

- அருள்பணி. ச. இ. அருள்சாமி,

ஒருவர் படித்துவிட்டு பல ஆண்டுகள் வேலை தேடிவந்தார். ஆசிரியர் வேலைக்குப் படித்துவிட்டு கூலி வேலைக்கு சென்றுக் கொண்டிருந்தார். இறுதியாக அரசு வேலைக் கிடைத்தது. மிக்க மிகிழ்ச்சியடைந்தார். அவர் வாழ்வில் புதிய ஒளிக் கிடைத்தாக உணர்ந்தார். புதிய வேலையினால் கிடைத்த நல்ல ஊதியத்தை பொறுப்புடன் பயன்படுத்தி வாழ்வில் உயர்ந்தார். இயேசுவின் பிறப்பு மானிடத்திற்கு புதிய ஒளியைத் தந்தது என்பதுதான் கிறிஸ்து பிறப்பு விழாவின் பொருள்.

இயேசுவின் பிறப்பு விழாவை மகிழ்வுடன் கொண்டாடுகிறோம். மேல் நாடுகளில் பாரம்பரியம் ஆடம்பர நாளாக ஆகிவிட்டது. புத்தாடைகள், பரிசுகள், கொண்டாட்ட விருந்துகள், கேளிக்கைகள் என்றாகிவிட்டது. இயேசுவின் பிறப்பு விழாவைத் தொடர்ந்து புத்தாண்டு 2017இன் தொடக்கத்தையும் கொண்டாட இருக்கிறோம்.
கிறிஸ்து பிறப்பு விழா நமக்கு அளிக்கும் பெரிய பாடம். இறைப்பண்பில் பொதிந்திருக்கும் எளிமை. ரிச்சர்ட் பாக் என்பவர் கூறுகிறார், எளிமையில்தான் உண்மைகள் புதைந்திருக்கின்றன என்கிறார். The Simplest things are truest’ எளிமை என்பது நம்மை பகிர்தலுக்கு இழுத்துச் செல்லும் கருவி. வீட்டுக்கு மேல் வீடு, ஆடம்பரத்திற்கு மேல் ஆடம்பரம். உயிருள்ள மனிதர் உயிரற்ற பொருள்களுடன் இணைந்து, இதயமற்ற மனிதர்களாக மாறுகிறார். கிறிஸ்து பிறப்பு பொருளிலல்ல, ஆடம்பரத்திலல்ல. எளிமையில் நுழைந்து பகிர்தலில் வாழ்வை காண்க என்கிறது.

அன்மையில் நவம்பர் 8இல் நமது மத்திய அரசு எடுத்த பொருளாதார நடவடிக்கையில், சாமானியர்கள் பல சங்கடங்களுக்கு ஆளாகிவிட்டார்கள். பயணம் செய்ய சில்லறையில்லை, திருமணத்திற்கும், முக்கிய செலவுகளுக்கும் சேர்த்துவைத்த பணத்தை முறைபடுத்த பல குட்டிகரணங்கள் போட வேண்டியதாயிற்று. கருப்புப் பணத்தையும், ஊழலையும் அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை இது என்று மத்திய அரசு கூறுகிறது. எந்த அளவிற்கு இந்த செயல்பாடு, கருப்பு பணத்தை அழிக்கப் பயன்பட்டுள்ளது என்பது கேள்வியாகிறது. பெரும் கோடீஸ்வர்களில் விளையாட்டும் கருப்பு பணத்தைப் பிடிக்க சாமானியர்கள் வீண் சுமைகளைத் தாங்க வேண்டியிருந்தது. இன்னும் சற்று கவனமாக இத்திட்டத்தில் இறங்கியிருக்க வேண்டும் என்கின்றனர் பொருளாதார அறிஞர்கள்.

மத்திய பாஜக அரசு, தங்களின் பழமைவாத கொள்கைகளை செயல்படுத்துவதிலேயே தந்திரமாக செயல்பட்டு வருகிறது. மத சுதந்திரத்தை அழிப்பது, பொது அரசியல் சட்டம் என்று சிறுபான்மையினரின் உரிமைகளை அழிப்பது, புதிய கல்வி கொள்கை என்று இந்துத்துவ கொள்கைகளை திணிப்பது போன்ற செயல்களில் ஆர்வம் காட்டி வருகிறது. இப்போது 500, 1000 ரூபாய் நோட்டுகளை சரியாக முறைபடுத்தாமல் முடக்கி, பல இன்னல்களுக்கு மக்களை ஆளாக்கியிருக்கிறது.

இப்போது காவிரி பிரச்சனை அடங்கி போய்விட்டது. ஆனால் காவிரி ஆற்றின் கடைமடை பகுதியில், பயிர்கள் காயும் நிலைமையைப் பார்த்து விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் அம்மா அவர்கள் மருத்துவம் பெற்று வரும் வேளையில் அரசு பணிகள் அடங்கி போயிருக்கின்றன. தலைமைத்துவம் ஒருவர மையப்படுத்தி இல்லாமல், பரவலாக்கப்பட்டு பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும். பள்ளிகளில் மறைக்கல்வி, நன்னெறி வகுப்புகளை ஆய்வு செய்யும் வேளையில், குழந்தைகளை (10 - 12 வகுப்பு) ‘நம் நாட்டில் உயிருள்ள நல்ல தலைவர்கள் யார்?’ என்று கேட்டால், ‘ஒருவருமில்லை’ என்று பதில் தருகிறார்கள். ‘இதனை மாற்ற என்ன செய்யலாம்?’ என்றால் ‘நாமே நல்ல தலைவர்களாக வளர வேண்டும்’ என்றார்கள்.

புதிய ஆண்டில் எல்லா நலன்களும் எல்லாருக்கும் கிடைக்க, அன்னையின் அருட்சுடர் வாழ்த்துகிறது. நல்ல மழை பொழிந்து விவசாயம் செழிக்க, கல்வி  உயர்ந்து, தொழில் வளம் பெருக இறைவன் ஆசீர் வழங்கி நம்மை வழிநடத்தட்டும்.

இரட்சணிய யாத்திரிகம்

இரட்சணிய யாத்திரிகம்

- எம்.சி.குமார், எம்.ஏ., எம்.பில்., பி.எட்.,
விரகாலூர்
கிறித்துவின் பிறப்பு

தமிழ்க் கிறித்தவக் காப்பியங்கள் உலக மீட்பராம் கிறித்து பிறந்த காட்சியினைச் சிறப்பாகப் பாடியுள்ளன. கிறித்தவக் காப்பியங்களில் ஒன்றான இரட்சணிய யாத்திரிகம் கன்னிபாலானாய்க் காசினியில் அவதரித்த கிறிஸ்துவின் பிறப்பை மிகுந்த பக்தியுணர்வோடு பாடியுள்ளதை அதன் பாடல்கள் மூலம் உணர்ந்து கொள்ள முடிகின்றது.

கிறித்துவின் பிறப்பு பேய்களுக்கு எல்லாம் தலைவனான சாத்தானுடைய கைகால்களை விலவிலக்கச் செய்கின்றது. அவனது உள்ளம் திகிலுற்றுப் பயத்தினால் பறையறைகின்றது. அவனது ஆருயிர் நடுங்குகின்றது. அவனது கருமையான முகம் குப்புறவிழுந்து கவிழ்கின்றது. அவனது கொடிய வினைகளெல்லாம் பயந்து ஓடுகின்றன. இத்தகைய சூழ்நிலையில் பாவ இருள் கலைந்தோட ஞானசூரியன் உதயஞ்செய்வது போல் கிறிஸ்து பிறந்தார் என்று கூறியுள்ளது. மேலும் இந்த அகிலத்தை, மண்ணை, விண்ணை, சூரியனை, திங்களை, விண்மீன்களை, விரிகடலை, மழையை, முகிலைத் தமது ஒரு வார்த்தையால் படைத்த அச்சுதன் கடவுள், ஊனுருக் கொண்டு, மனித குமாரனாய் இந்த  உலகமெல்லாம் மகிழ்ச்சியடையுமாறு பிறந்தார் எனக் கிறித்துவின் பிறப்புக் காட்சியை இரட்சணிய யாத்திரிகம் பாடியுள்ளது. பக்திச்சுவை நனிசொட்டச் சொட்ட அப்பாடல்கள் உருவெடுத்துள்ளன.

கள்ளம்புரி அலகைக்குஇறை கைகால் விலவிலக்க
உள்ளம்பறை யறையத் திகில் உற்று ஆர்உயிர் நடுக்கம்
கொள்ளக் கரிமுகம் குப்புறக் கொடுந்தீவினை குலைய
அள்ளிக் கதிர்வீசும் சுடர் அருணோதயம் இதுஎன
வானோமகி தலமோசுடர் மதியோவயங்கொளிர்வான்
மீனோவிரி கடலோமழை முகிலோ ஒருவிதியில்
ஆனாநெறி அமைத்தாக்கிய அகிலாண்ட அச்சுதன்ஓர்
ஊனாடிய திருமேனி கொண்டு உதித்தார் உலகு உவப்ப
என அப்பாடல்கள் வந்துள்ளன.

 இங்கு இவ்விரட்சணிய யாத்திரிகப் பாடல் கம்பன் கவிதையோடு ஒப்புநோக்கி மகிழ இடந்தருகின்றது. இராமன், சீதையோடு காட்டிற்கு செல்லும்போது அவனது அழகினைக் கம்பன்,

வெய்யோன் ஒளிதன்மேனியின் விரிசோதியின் மறைய
பொய்யோ! எனும் இடையாளொடும் இளையாளொடும் போனான்
மையோ மரகதமோ மறிகடலோ மழைமுகிலோ
ஐயோ! இவன் வடிவு என்பதோர் அழியா அழகுடையான்

எனப் பாடியுள்ளார். தேம்பாவணிக் கவிஞரான வீரமாமுனிவர் கிறித்துவின் பிறப்பினை உலகங்கள், காலங்கள் முதலானவற்றுளுள்ளும் உவமை கூறுதற்கியலாத  குற்றமில்லாத  கன்னியாகிய மரியன்னை, அளவிடற்கியலாத பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்ற மூன்றனுள் நடுவில் விளங்குபவரும், மூச்சுடர்களைக் காட்டிலும், ஒளிமிகுந்தவராகத் திகழும் திருக்குமாரனை, பளிங்கு எவ்வாறு  தனக்குச் சிறிதுச் சேதமும் இல்லாது தன்னிடத்துப் படியும் ஒளியினை வெளியிடுகின்றதோ அதுபோலத் தன்கன்னித்தன்மை சேதமுறாது அளவற்ற வல்லமையுடைய அமலனாகிய இயேசு பிரானைப் பெற்றுத் தந்தனள் எனக் கூறியுள்ளார்.

கிறித்துவின் பிறப்பைக் கூறும் தேம்பாவணி, கிறிஸ்து தமிழ் மாதமாகிய மார்கழி மாதம், இருபத்தைந்தாம் நாள் ஞாயிற்றுக்கிழமை இரவு பதினைந்தாம் நாழிகையில் பிறந்தார் எனக் கூறியுள்ளது. தேம்பாவணி கிறிஸ்து பிறந்த மாதத்தினை டிசம்பர் எனச் சொல்லாது மார்கழி மாதம் எனக் குறிப்பிட்டது தமிழக மரபிற் கேற்ப அதனை அமைத்தல் வேண்டும் என்பதற்காகவே என்று கூறலாம்.  தேம்பாவணியில்,

மாதம் மார்கழி வைகல் ஐயைந்தாய்
ஏதிலா நிசிக்கு இருத்தை மூலைந்தாய்
ஆதி நாளென ஆதி நாதனை
காதல் நாயகி களிப்பின் நல்கினாள்
என வந்துள்ளது.

தமிழ்க் கிறித்தவக் கவிஞருள் ஒருவராகிய தஞ்சை வேதநாயக சாஸ்திரியார் தன் திருஅவதாரம் என்ற  நூலில் கிறித்துவின் பிறப்பை வியந்து பாடியுள்ள பாடல் வரிகளும் இத்துடன் எண்ணத்தக்கனவாகும்.

வானம் பூமியோ பராபரன் மானிடர் ஆனாரோ - ஆ! என்னவிது
வானம் பூமியோ பராபரன் மானிடர் ஆனாரோ
                                   - மறைதிரு மாணிக்க ஆசிர்வாதம் (1865 - 1948)

அக்கவிஞருக்கு இறைவன் இம்மண்ணில் மனித குமாரானப் பிறந்தது பேரதிசயமாக பேரற்புதமாகக் காணப்பட்டது. 
எனவே அவர் அதனை,

என்னனோஇவ் வற்புதம்பார் ஈசனிங்கே வந்தார் புவியி
    என்னவோஇவ் வற்புதம்பார் இந்நிலைமை யாளரே
என்னோஇவ் வற்புதத்தை எப்படி மறப்பாய் பாவி

என மிக இனிய எளிய சொற்களால் பாடியுள்ளார்.
கவி ஆரோக்கியசாமி, சுடர்மணி என்னும் தம் காப்பியத்தில், கிறிஸ்துவின் பிறப்புக் காட்சியைச் சந்தேக நயத்துடன் இசைத்துள்ளார்.

நடுநிசி தன்னில் ஆங்கோர் நல்லொளி தோன்ற மேலே
திடமுளவால்மீன் தோன்றித் திக்கெட்டு மொளி பரப்பப்
படும் வலியேதும் இன்றிப் பாவையும் மகவையீன
மடை திறந்தனைய தேவதூதரும் மல்கி நின்றார்

என்பது சுடர்மணிப் பாடலாகும். அன்னை மரியாள் கன்னித்தாய், பிரசவ வலி எதுவுமில்லாமல் கிறிஸ்துவை இவ்வுலகிற்கு ஈன்றளித்தாள் என அப்பாடல் கூறுவதுடன், கிறிஸ்து பிறந்த சூழலை விவரித்துள்ளது. நடுநிசிநேர ஒரு நட்சத்திரம் வானில் நல்லொளி பரப்பிக் கொண்டுள்ளது. கிறிஸ்தவின் பிறப்பை அவனிக்கெல்லாம் அறிவிக்கும் நட்சத்திரம் அது. அதன் அரிய ஒளி திக்கெட்டும் ஒளி பரப்புகின்றது. அது கிறிஸ்துவின் அருள் ஒளி உலகெங்கும் வீசபோவதை முன்னறிவிப்பது போலுள்ளது. இச்சூழல் அன்னை மரி எவ்விதத் துன்பமும் இல்லாமல் வள்ளல் இயேசுவை, கிறிஸ்துவைப் பெற்றுத்தந்தாள். தேவதூதர்களில் மடைதிறந்தாற் போலப் பாலனைச் சூழ்ந்து நின்றனர் என அக்காட்சி விவரிக்கப்பட்டுள்ளது.

கவியரசு கண்ணதாசனின் இயேசு காவியத்திலும் கிறிஸ்துவின் பிறப்புக் காட்சி இடம் பெறுகின்றது. குழந்தையாய்ப் பிறந்த கிறிஸ்துவைக் கண்ணால் கண்டு மகிழ்ந்த  இடையர்களை அவர்தம்  உணர்வுநிலையில் நின்று கவிஞர் போற்றியுள்ளார். இதனை, 

ஆயர் மக்கள் அனைவரும் ஒன்றாய்
ஆநிரைத் தொழுவினை அறிய நடந்தனர்
தேவதூ தன் செப்பிய படியே
பொன்னொளி மாலைப் புகழுடம் பணிந்து
மின்னலின் பிழம்பாய் மேனி வடித்துத்
தண்ணொளி பரப்பும் தகைசால் மைந்தனைக்
கண்ணால் கண்டு களித்தனர் ஆயரே

என்ற அவரது பாடல்  சுட்டுகின்றதாக  உள்ளது. இயேசு என்னும் பாலகனது பிறப்புச் செய்தியைத் தேவதூதர்கள் அறிவித்தவுடனே, ஆயர்கள் அனைவரும் அவ்வற்புதக் காட்சியைக் காணப் புறப்பட்டுச் செல்லுகின்றனர். அங்கு தேவதூதர்களின் சொல்லுக்கிணங்க மாட்டுக் கொட்டிலில், பொன்னார்மேனியுடன், மின்னலின் பிழம்பாய் மேனிதுலங்க, குளிர்ந்த ஒளி பரப்பும் மதியயன விளங்கும் இயேசுபாலனைத் தமது கண்களால் கண்டு களித்தனர்.

இரட்சணிய யாத்திரிகத்தில் பாடப்பட்ட கிறிஸ்துவின் பிறப்புக் காட்சி வேறு பல தமிழ்க் கிறித்தவ நூல்களிலும் பாடப்பட்டுள்ளன. கிறித்தவத்  திருமறைக்கிணங்க, சிறிதும் வேறுபாடில்லாது அவை பாடப்பட்டுள்ளன என்பதை  உணரும்பொழுது இந்நூல்களின் பெருமையை, குறிப்பாக இரட்சணிய யாத்திரிகத்தின் சிறப்பினை அறிந்து போற்ற முடிகின்றது. (தொடரும்).

பட்டிமன்றம் பொருள் : மக்கள், கிறிஸ்துமஸ் கொண்டாடுவதில் மிகுதியாக வெளிப்படுவது ஆடம்பரங்களே - ஆன்மீகக் காரியங்களே

பட்டிமன்றம்

பொருள் : மக்கள், கிறிஸ்துமஸ் கொண்டாடுவதில் மிகுதியாக வெளிப்படுவது 

ஆடம்பரங்களே - ஆன்மீகக் காரியங்களே

நடுவர் : பேராசிரியர் எஸ் சாமிமுத்து

சொற்போர் தொடுப்போர் : பேராசிரியர் எஸ்.பி. பெஞ்சமின் இளங்கோ, பேராசிரியர் ஜி. இரவீந்திரன்

நடுவர் முன்னுரை

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, உங்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கூறி, வணங்கி மகிழ்கின்றேன்.

மக்கள், கிறிஸ்துமஸ் விழாவினைக் கொண்டாடுவதில் ஆடம்பர நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார்களா? அல்லது ஆன்மீகக் காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார்களா? என்று விவாதித்து, உண்மை காணும் நோக்கத்தில் அன்னையின் அருட்சுடர் இதழ் மூலம் இப்பட்டிமன்றம் நடக்கின்றது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்நில உலகத்தில், குறிப்பாக பாலஸ்தீன் நாட்டில், பெத்லேகம் என்னும் தாவீது அரசன் நகரில், எல்லாம் வல்ல இறைவனின் திருமகனாகிய இயேசுகிறிஸ்து மனித உடலெடுத்து, தூய கன்னிமரியின் திருவயிற்றினின்று பிறந்த நாளை நினைத்துக் கொண்டாடி மகிழ்வதுதான் கிறிஸ்துமஸ் விழா என்பது. அனைத்து உலகிலும் உள்ள மக்கள், குறிப்பாகக் கிறித்தவர்கள் இவ்விழாவினை ஆண்டுதோறும் மிகப் பெரிய புனித விழாவாகக் கொண்டாடுகிறார்கள். இவ்விழா நிகழ்ச்சிகளில் மிகுதியும் இடம்பெறுவன ஆடம்பரங்களே என்று பேராசிரியர் எஸ்.பி.பெஞ்சமின் இளங்கோ அவர்கள் முதலில் தம் ஆழமான அறிவும் அனுபவ முதிர்வும் பளிச்சிட, சொற்போர் தொடுக்கின்றார்கள்.

பேரா. எஸ்.பி. பெஞ்சமின் இளங்கோ

சான்றாண்மைமிக்க நடுவர் அவர்களே, மதிப்பிற்குரிய சகோதர சகோதரிகளே,  இன்றைய உலகமே ஆடம்பர  உலகமாக இருக்கின்றது. எந்த நாட்டினராயினும், எந்த சமயத்தவராயினும் விழாக்கள் கொண்டாடுகின்றபொழுது, எவ்வளவு வெளி ஆடம்பரத்தோடு கொண்டாட முடியுமோ அவ்வளவு வெளி ஆடம்பரத்தோடுதான் கொண்டாடுகின்றார்கள். கிறிஸ்துமஸ் விழா மட்டும் அதற்கு விதிவிலக்கல்ல.

கிறிஸ்துமஸ் விழாவிற்காக மக்கள், தங்கள் தங்கள் வீடுகளை அவரவர்களுடைய வசதிக்கேற்ப மலர், மணிமாலைச் சரங்களாலும், வண்ணமின் விளக்குகளாலும் அலங்கரிக்கின்றார்கள். இயேசுகிறிஸ்து  பிறந்தது வறுமையில்; மாடுகள் தங்கும் மாட்டு கொட்டகையில். அந்தச் சிந்தனை பெரும்பாலான மக்களுக்கு வருவதில்லை. மக்கள், தங்களுடைய செல்வச் செழிப்பையும், வசதியான வாழ்வையும், தங்களுடைய கெளரவத்தையும் பிறர் அறியக்காட்டுவதற்காக ஏராளமான பொருட்செலவில் வீட்டையும், அலுவலகங்களையும் அலங்கரிக்கின்றார்கள். வீட்டை ஓரளவிற்கு அழகுபடுத்துவதில் குறையில்லை. பெரும் பொருளை அதில் செலவிடுவதற்குப் பதிலாக, ஏழை எளிய மக்களுக்கும், வசதியில்லாமல் வறுமையில் வாடுபவர்களுக்கும் பணமாக, புத்தாடைகளாக, உணவுப்பண்டங்களாகக் கொடுத்து உதவினால், அதுவே உண்மையான கிறிஸ்துமஸ் விழா நிகழ்ச்சியாக அமையும். இயேசுகிறிஸ்து மனிதர்களின் தூய உள்ளங்களில் பிறக்க வேண்டும். அதாவது, கிறிஸ்து உலகிற்குக் கொண்டுவந்த சமாதானம் மனிதர்களை ஆட்கொள்ள வேண்டும். அச்சமாதானத்தை மக்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும். தான் படைத்த மனிதனை அதிகமாக நேசித்ததினால்தான் இறைவன் மனிதனாகப் பிறப்பெடுத்து, அவனோடு வாழ்ந்து, அவனை எல்லா அடிமைத்தனங்களிலிருந்தும் மீட்டார். எனவே, ஆடம்பரத்திற்கல்ல கிறிஸ்மஸ் விழா. இது அன்பின் விழா! சமாதானத்தின் விழா! மனித நேயத்தின் விழா! இறை அனுபவத்தின் விழா! இக்கூறுபாடுகளை மறந்த நிலையில் வீட்டை அலங்கரிப்பதிலும், கிறிஸ்துமஸ் குடில் அமைப்பதிலும், பல நட்சத்திரங்களைத் தொங்கவிடுவதிலும், புதிய துணிமணிகள் அணிவதிலும், கேக்குகள் பலகாரங்கள் செய்வதிலும், பிரியாணி விருந்துகள் நடத்துவதிலும், விலையுயர்ந்த வாழ்த்து கார்டுகள் அனுப்புவதிலும், கிறிஸ்துமஸ் பரிசுகள் வழங்குவதிலும், பட்டாசு, மின்விளக்குகளிலும் மக்கள் கவனம் செலுத்தி, கிறிஸ்துமஸ் விழாவின் உண்மைத் தன்மையை மறந்து விடுகின்றார்கள். கிறிஸ்துமஸ் விழாவில் மக்கள் ஆன்மீக நோக்கத்திற்கு மதிப்பளிக்கின்றார்களா என்பதுவே இன்றைய வாழ்க்கையில் ஒரு கேள்விக்குறியாக இருக்கின்றது நடுவர் அவர்களே!

நடுவர்

பேராசிரியர் ஜி. இரவீந்திரன் அவர்களே! இதற்கு உங்கள் வலுவான, நடைமுறை வாழ்வில் மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய பதிலை இந்த மன்றம் எதிர்பார்க்கின்றது.

பேராசிரியர் ஜி. இரவீந்திரன்

மதிப்பிற்குரிய நடுவர் அவர்களே, உங்கள் முன்னிலையிலேயே, பேராசிரியர்  எஸ்.பி. பெஞ்சமின் இளங்கோ அவர்கள் முழுப்பூசணிக்காயைச் சோற்றில் வைத்து மறைக்கப்பார்க்கிறார். கிறிஸ்துமஸ் விழாவில் மக்கள் ஆன்மீகத்திற்குச் சிறப்பிடம் அளிப்பதில்லை, ஆடம்பரத்திற்குத்தான் முக்கியத்துவம் அளிக்கின்றார்கள் என்பதை நான் மறுக்கின்றேன்.

எத்தனையோ மக்கள், கிறிஸ்துமஸ் விழா சமயத்தில் பக்திமுயற்சிகளில் ஈடுபடுவதை நாம் பார்க்கின்றோம். விரதம் இருக்கின்றார்கள், தியானம் செய்கின்றார்கள், திருத்தலங்களுக்குத் திருப்பயணம் மேற்கொள்கின்றார்கள், கோவில் திருவழிபாடுகளில் கலந்துகொண்டு மனத்தூய்மை பெறுகின்றார்கள். கிறிஸ்துமஸ் பாடல் குழுவினர் பக்திப்பாடல்கள் பாடி, மக்களைக் கிறிஸ்துமஸ் விழாவிற்கு ஆன்மீக முறையில் தயார் பண்ணுகின்றார்கள். நன்கொடை வசூலித்து ஏழை, எளிய மக்களுக்கு உணவுக்கும் உடைக்கும் பொருளுதவி செய்கின்றார்கள். பொதுநலப்பணிக் குழுக்கள், பக்த சபைகள் வசதி படைத்தவர்களிடமிருந்து அன்பளிப்புகள் வாங்கி ஆதரவற்றோர், ஊனமுற்றோர், நோயாளிகள், முதியோர்கள், குழந்தைகள் முதலியோர்களுக்கு அவரவர்கள் தேவைக்கேற்ப  உதவுகின்றார்கள். இன்னும் சிலர் சிறை கைதிகளைச் சந்தித்து ஆறுதல் கூறி அன்பளிப்புத் தந்து சமாதானம் அளிக்கின்றார்கள். கலைநிகழ்ச்சிகள் மூலமும், விளையாட்டு நிகழ்ச்சிகள் மூலமும், பக்திச் சொற்பொழிவுகளின் மூலமும் பல்வேறு மக்களை ஒன்று திரட்டுகின்றார்கள். சகோதர பாசத்தோடு பழகி, ஒருவருக்கொருவர் உறவு பாராட்டி அன்பு செலுத்துகின்றார்கள். இவையும், இவை போன்ற பிறவும் மக்கள் உள்ளங்களில் இறை நேயத்தையும், மனிதநேயத்தையும் சாதி, சமயம், மொழி கடந்து வளர்க்கின்றன என்பதை நாம் மறுக்க முடியுமா?

மக்கள் கிறிஸ்துமஸ் விழா எடுக்கும்போது, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்காக, வீட்டை அலங்கரிப்பதும், புத்தாடை உடுத்துவதும், உணவுப்பண்டங்கள் தயாரிப்பதும் ஆடம்பரம் என்றால், குடும்ப உறவுகளில், சமுதாய வாழ்க்கை முறைகளால் வேறு எப்படித்தான் கிறிஸ்துமஸ் விழாவை மகிழ்ச்சிகரமாகக் கொண்டாடுவது? இவற்றையயல்லாம் மறந்துவிட்டு, பேராசிரியர் பெஞ்சமின் அவர்கள் உண்மைக்குப் புறம்பாகப் பேசுகிறார். கிறிஸ்துமஸ் விழாவில் மக்கள் முறையாகச் செய்வதைக்கூட குறைகண்டு பேசுவதை நான் மறுக்கின்றேன்.

கிறிஸ்துமஸ் குடில் அமைப்பதும், நட்சத்திரம் கட்டுவதும், கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தி அனுப்புவதும் கிறிஸ்து பிறப்பு விழாவை நினைவுபடுத்துவதற்குரிய தேவையான வெளி அடையாளங்கள் ஆகும். ஆகவே, மக்கள் கிறிஸ்துமஸ் கொண்டாடுவதில் ஆடம்பரங்களே மிகுதியாக வெளிப்படுகின்றன என்றும், எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எதுவும் சரியில்லை என்று கூறுவது உண்மைக்குப் புறம்பானதாகும். ஊன்றி நோக்கினால் கிறிஸ்துமஸ் விழாக் கொண்டாட்டங்களில் ஆன்மீகக் காரியங்களே மிகுதியாக வெளிப்படுகின்றன என்பதுவே மறுக்கமுடியாத உண்மையும் என் கருத்துமாகும்.

பேரா. எஸ்.பி. பெஞ்சமின் இளங்கோ

நீங்கள் கூறுவது, என்னால் ஏற்றுக் கொள்ளமுடியாதது இன்றைய வாழ்க்கையில் மக்களின் போக்கைப் புரியாமல் பேசுவதாக, உண்மைக்குப் புறம்பான செய்தியாக இருக்கிறது. கிறிஸ்துமஸ் விழாவில் ஆன்மீகக் காரியங்கள் மிகுதியும் வெளிப்படுகின்றனவென்றால், குடித்ததுக் கும்மாளம் போடுவதும் ஆன்மீகக் காரியமா? செல்வம் இருக்கிறது என்பதற்காக, தங்களோடு வாழ்கின்ற ஏழை, எளிய மக்களை அவர்களின் வறுமையை, வாட்டத்தை இம்மியளவும் எண்ணிப் பார்க்காமல் கொடுங்கள், கொடுக்கப்படும் என்னும் கிறிஸ்துவின் நற்செய்தியையும் நினைத்துப் பார்க்காமல், பட்டாடைகள் பளபளக்க, நகை நட்டுகள் ஜொலி, ஜொலிக்க, செல்வந்தர்கள் பலர் கோலாகலமாக கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடுகின்றார்களே, இதற்கு என்ன பதில் சொல்லுகின்றீர்கள்?

பேரா. ஜி.இரவீந்திரன்

குடித்துக் கும்மாளம் போட்டு கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடுவது அறிவீனம் என்று நானும் ஏற்றுக் கொள்கின்றேன். ஆனால், இப்படிப்பட்டவர்கள் ஒரு சிலரே, மேலும், செல்வந்தர்கள் பலர் ஏழைகளை முற்றிலும் மறந்துவிட்டுக் கிறிஸ்துமஸ் விழாவைத் தங்கள் குடும்பப் பெருமைக்காக ஆடம்பரத்துடன் கொண்டாடுகின்றார்கள் என்பதிலும் ஓரளவு உண்மையே இருக்கின்றது. பணக்காரர்களிலும் ஈவு, இரக்கம் கொண்டவர்கள் எத்தனையோ பேர் இருக்கின்றார்கள். வறுமையில் உள்ளவர்களுக்கு நேரடியாகவும், பிறர் மூலமாகவும் கிறிஸ்துமஸ் விழா சமயத்தில் பல உதவிகள் செய்வதை நாம் பார்க்கின்றோம். எனவே, கிறிஸ்துமஸ் விழா மனித நேய விழாவாகவும் கொண்டாடப்படுவதை நாம் மறுக்க முடியாது.

நடுவர் முடிவுரை

அன்பர்களே, இப்பட்டிமன்றத்தில், பேராசிரியர்கள் இருவரும் மிகச் சிறந்த முறையில் கிறிஸ்துமஸ் விழா பற்றிய சிந்தனைகள் பலவற்றையும் நாம் அறிந்து பயனடையுமாறு வழங்கியுள்ளார்கள்.
மக்கள் கொண்டாடும் கிறிஸ்துமஸ் விழாவில் மிகுதியும் வெளிப்படுவது ஆடம்பரமா? ஆன்மீகமா? என்று ஆராய்ந்து பார்க்கும்போது ஒரு புறத்தில் ஆடம்பரம் பளிச்சிடுகின்றது. மற்றொரு புறத்தில் ஆன்மீகம் தலைதூக்கி நிற்கின்றது.
கிறிஸ்து பிறப்பு விழாவை  ஏன் நாம் இன்று கொண்டாடுகிறோம்? அன்று, பெத்லேகம் மாடடைகுடிலில் இயேசுகிறிஸ்து பிறந்தபோது அங்கே தேவதூதர்கள் சூழ்ந்து, ‘உன்னதங்களிலே கடவுளுக்கு மகிமை உண்டாகுக, உலகிலே அவர் தயவு பெற்றவர்க்கு அமைதி ஆகுக’  என்று பாடி மகிழ்ந்தனர். கிறிஸ்து பிறப்பிலே விண்ணகத் தந்தையாகிய இறைவனுக்குப் பெருமையும் அவர் அருள்பெற்ற மண்ணக மனிதர்களுக்கு அமைதியும் உண்டாகின்றன. இந்த  உண்மை அன்றோடு முடிந்த ஒன்றல்ல. இது ஒரு தொடர்கதை. தூய அருளப்பர் சொல்லுகின்றார், வாக்கு மனுவுருவானார், நம்மிடையே குடிகொண்டார். ஆம், ஆதியிலே வாக்காக  ‡ வார்த்தையாக இருந்த இறைவன்தான், காலம் கனிந்து வந்தபோது, மனித உருவெடுத்து, இவ்வுலகில் பிறந்து, நம்மோடு குடிகொண்டிருக்கின்றார். இறைவனின் அருளும் உண்மையும் இயேசுகிறிஸ்து வழியாக இவ்வுகிற்கு வந்தன, வந்துகொண்டே இருக்கின்றன.

இயேசுகிறிஸ்து நம்மோடு இருக்கின்றார், இருக்கின்ற கிறிஸ்துவை - அருளும் உண்மையுமாக இருக்கின்ற கிறிஸ்துவை ‡ உலகத்தின் ஒளியும் வாழ்க்கையின் வழியுமாக இருக்கின்ற கிறிஸ்துவை கிறிஸ்துமஸ் விழாவிலே, ஊனக் கண்ணால் முடியாவிட்டாலும் ஞானக்கண்ணால் பார்க்க வேண்டும். உருவில்லான் உருவாகி ஒப்பற்ற கன்னிமரியின் திருவயிற்றில் கருவாகி இவ்வுலகில் உதித்த  உண்மையைக் காணவேண்டும்.

கிறிஸ்துவுக்காக வீட்டை அலங்கரிப்பது, கிறிஸ்துவுக்காக குடில் அமைத்து, நட்சத்திரம் வைத்து, புத்தாடைகள் உடுத்தி மகிழ்வது போன்றவையயல்லாம் நாம் கிறிஸ்துவின்பால் கொண்ட அன்பை வெளிப்படுத்திக் காட்டுபைவதாம். அனால், குளிக்கப்போன ஒருவன், சேற்றைப் பூசிக்கொண்டு திரும்பிய கதையாக கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் இருந்துவிடக்கூடாது.

கிறிஸ்துமஸ் விழாவில் செய்கின்ற ஒவ்வொரு செயலும் நம்முடைய கெளரவத்தை வெளிப்படுத்துவதற்காகவோ, நம்முடைய செல்வச் செருக்கையும் பெருமையையும் பிறர் அறியவேண்டும் என்பதற்காகவோ இருந்தால் அது வெற்று ஆடம்பரந்தான். அதற்கு மாறாக, இயேசு கிறிஸ்துவின்மீது ‡ இறைவன்மீது நாம் கொண்டுள்ள ஆழ்ந்த பற்று வெளிப்படுவதற்காக, நம்மோடு வாழ்கின்ற பிற மக்கள்மீது நாம் கொண்டுள்ள பிறர் சிநேகம் - மனித நேயம் தெற்றெனப் புலப்படுவதற்காக கிறிஸ்துமஸ் விழா நிகழ்ச்சிகள் பயன்படும் என்றால் அவை போற்றத்தக்கன.

கனிக்குச் சுவையும், மலருக்கு மணமும் இருந்தால்தான் அவற்றிற்குச் சிறப்புண்டு. அவ்வாறே கிறிஸ்துமஸ் விழா நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் மனிதனின் ஆன்மீக வாழ்வைத் தொடவில்லை என்றால், அந்த நிகழ்ச்சிகளுக்கு சிறப்பில்லை.

கிறிஸ்துமஸ் விழாவில் நாம் ஒருவரையயாருவர் சந்தித்து, வாழ்த்துக் கூறுவதில் உண்மையான மனிதநேயம் வெளிப்படவேண்டும். அவ்வாறே, நாம் பிறர்க்குச் செய்யும் உதவிகளில் உண்மையான பிறர்நலத் தொண்டு ‡ பிறர்சிநேகம் வெளிப்பட வேண்டும். இல்லையயன்றால் அவையயல்லாம் வீணான ஆடம்பரங்களே.

எனவே, மக்கள் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடுவதில் ஆடம்பரங்கள் அர்த்தமுள்ளவையாக, இறையன்பையும் பிறரன்பையும் வெளிப்படுத்துவனவாக அமைந்து, அவையனைத்தும் மனிதனுடைய ஆன்மீக வாழ்வை வளர்ப்பனவாக, வளப்படுத்துவனவாக இருக்கவேண்டும். அவ்வாறு அமையும் கிறிஸ்துவின் விழா நிகழ்ச்சிகளே வரவேற்கத்தக்கனவென்று கூறி, அனைவர்க்கும் மீண்டும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்து தெரிவித்து முடிக்கின்றேன். நன்றி வணக்கம்.

டிசம்பர் - ஜனவரி மாதத்தின் புனிதர்கள்

டிசம்பர் - ஜனவரி மாதத்தின் புனிதர்கள் 

டிசம்பர் 3  புனித பிரான்சிஸ் சவேரியார் (1506 - 1552)

இவர் ஸ்பெயினில் கிபி.1506இல் பிறந்தார். பாரீஸ் நகரில் தத்துவக்கலை பயின்று கொண்டிருந்த பொழுது, புனித இஞ்ஞாசியாரோடு சேர்ந்து கொண்டார். உரோமையில் 1537ஆம் ஆண்டு குருப்பட்டம் பெற்று, பிறரன்புச் சேவைகளில் முனைந்து ஈடுபட்டார். 1541இல் கீழை நாடுகளுக்குப் புறப்பட்டு வந்து, இந்தியாவிலும், ஜப்பானிலும் 10 ஆண்டுகள் அயராது மறைபோதகப் பணியாற்றி பலரையும் திருமறைக்கு மனந்திருப்பினார். கடவுளை மக்கள் அறியாத ஓர் இடம் பூமியில் இருக்கிறிது என்று நான் அறிவேனானால் நான் ஒரு போதும் இளைப்பாற முடியாது என்று இவர் அடிக்கடி சொல்வார். இவர் தமிழநாட்டில், தூத்துக்குடி மறைமாவட்டம், குடந்தை மறைமாவட்டம் ஆகிய இடங்களில் கிறிஸ்தவ விதையை ஊன்றினார் என்பது பெருமைக்குரியது. 1552இல் டிசம்பர் 3ஆம் நாள் சீனாவின் அருகில் கான்சியான் தீவில் இப்புனிதர் காலமானார்.

டிசம்பர் 7      புனித அம்புரோஸ் (340 - 397)

இவர் ஜெர்மனியில் திரியயர் நகரில் உரோமைக்  குடும்பம் ஒன்றில் கி. பி. 340இல் பிறந்தார்.  உரோமையில் சட்டப்படிப்பு படித்தார். மிலானில் அரசு அதிகாரியாக பணியாற்றியபோது 374இல் திடீரென்று மிலான் நகர் ஆயராகத் தேர்ந்து கொள்ளப்பட்டு, டிசம்பர் 7ஆம் நாள் திருநிலைப்படுத்தப் பெற்றார். கடமை தவறாது பணியாற்றி, உணமை ஆயரும், மறைவல்லநருமானார். திருச்சபையின் உரிமைகç அயராது காத்து, ஆரியுசின் கொள்ளைகளுக்கு எதிராக நேரிய நம்பிக்கைப் போதனையை நூல்களாலும், பணியாலும் பாதுகாத்தார். 397ஆம் ஆண்டு ஏப்ரல் தி
ங்கள் 4ஆம் நாள் பெரிய சனிக்கிழமை மிலான் நகரில் இறந்தார்.

டிசம்பர் 8                   புனித கன்னிமரியின் அமல உற்பவம்

கன்னிமரியாள் உற்பவித்த முதல் வினாடியிலிருந்தே கடவுளது வரங்களை நிரம்பப் பெற்றிருந்தார். அவர் உலக இரட்கரின் தாயாக இருக்க வேண்டும் என்று இறைவன் தீர்மானித்தார். கிறிஸ்து பிறப்பு அறிவிப்பு நாள் அன்று கபிரியேல் தூதர் அவரை அருள் நிறைந்தவளே வாழ்க என்று அவரை வாழ்த்தினார். இவ்விழாவை முதலில் இங்கிலாந்து நாட்டினர் கொண்டாடினர். 14ஆம் நூற்றாண்டிலிருந்து திருச்சபை முழுவதும் இவ்விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கன்னிமரியாள் அமல உற்பவி என்று 08‡12‡1854இல் 9ஆம் பத்திநாதர் பாப்பானவர் விசுவாச சத்தியமாக அறிவிப்பு செய்தார். 

டிசம்பர் 14                  புனித சிலுவை அருளப்பர்

இவர் ஸ்பெயினில் ஃபான்டிவெரோஸ் என்னுமிடத்தில் கி. பி. 1542இல் பிறந்தார். கர்மேல் துறவிகளுள் ஒருவராக சிறிதுகாலம் வாழ்ந்தார். பின்பு புனித அவிலா தெரசாவின் தூண்டுதலால் 1568ஆம் ஆண்டில் சீர்திருத்தம் கண்ட சபையின் சகோதரர்களுள் முதல்வரானார். கடும் உழைப்பாலும், எண்ணற்ற நூல்களாலும் சபை சீர்த்திருத்தத்திற்கு ஆதரவு அளித்து வந்தார். வாழ்வின் புனிதத்திற்கும், மதிநுட்பத்திற்கும் புகழ்மிக்கவராய் விளங்கிய இவர் 1591இல் டிசம்பர் 14ஆம் நாள் உபேதாவில் திருச்சிலுவையை பிடித்துக் கொண்டு அமைதியாய் உயிர் துறந்தார்.

டிசம்பர் 25                       கிறிஸ்து பிறப்பு விழா

சூசையும், மரியாளும் தாவீது அரசனின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், எருசலேமிற்கு 75 மைல் தொலைவில்  உள்ள பெத்லகேம் என்னும் சிற்றூருக்குச் சென்றார்கள். அங்கு ஒரு தொழுவத்தில் இருந்தபோது பேறுகாலம் வந்தது. அவர் தலைப்பேறான கடவுளின் மகனும், உலன மீட்பருமான இயேசுகிறிஸ்துவை மகனாக ஈன்றெடுத்தார். கிறிஸ்து பிறப்பைப் பற்றி மக்களுக்கு அறிவிக்கவும், அவர்களது  உள்ளத்தில் குழந்தை இயேசு மீது அன்பையும், ஆர்வத்தையும் உண்டாக்கவும், புனித அசிசி பிரான்சிஸ் பாப்பானவரின் அனுமதியுடன் 1226இல் கிறிஸ்து பிறந்த குடிலை முதல் முறையாக நிறுவினார்.

டிசம்பர் 27                   புனித அருளப்பர்

இவர் செபதேயுவின் மகனும் பெரிய யாகப்பரின் சகோதரனுமாவார். திருத்தூதர்களில் இளமையானவர். இயேசுவை அதிகமாக  நேசித்தவர். இயேசு தாபோர் மலையில் உருமாறினதையும், ஒலிவ தோட்டத்தில் இயேசு அனுபவித்த மனபோராட்டத்தையும் கண்டவர். கடைசிவரை சிலுவையடியில் நின்றார். தம்முடைய அன்னையை இவரிடமே இயேசு ஒப்படைத்தார்.  சின்ன ஆசியாவில் பல சபைகளை நிறுவினார். நான்காம் நற்செய்தியையும் 3 கடிதங்களையும், திருவெளிப்பாடு நூலையும் எழுதியவர் இவர். கடவுளை அன்பு செய்யுங்கள், அடுத்தவரை கடவுளுக்காக அன்பு செய்யுங்கள். இவ்வுலகை அன்புசெய்ய வேண்டாம் என தன் கடிதங்களில் வலியுறுத்தியுள்ளார். இவர் எபேசு நகரில் நூறாம் ஆண்டில் இறந்தார் என்பது பாரம்பரியம்.

டிசம்பர் 31                    புனத சில்வெஸ்டர் (335)

இவர் உரோமையில் பிறந்தார். இவரின் அன்னை திறமைவாய்ந்த ஒரு குருவின் பொறுப்பில் இவரை விட்டு வைத்தார். புனித மார்செலினுவிடம் குருப்பட்டம் பெற்றார். இரு ஆண்டுகளுக்குப் பின் புனித மெல்கியாதெஸ் என்னும் பாப்பு இறந்ததும் இவர் பாப்புவானார். இவரின் காலத்தில் நிசேயா நகரில் நடந்த பொதுசங்கத்தின்போது இவருக்கு வயதாகி விட்டதால், சங்கத்தில் பங்கெடுக்க முடியவில்லை. எனவே தன் பிரதிநிதிகளை அனுப்பினார். அவர்கள் அலெக்சாந்திரியா, அந்தியோக்கியா தந்தையர்களை விடவும் பொறுப்பாக நின்று சங்கத்தை நடத்தினார்கள். 24 ஆண்டுகள் 11 மாதங்களாக திருச்சபையை வழிநடத்தி 335ஆம் ஆண்டு இறந்தார்.

ஜனவரி 1  இறைவனின் அன்னை புனித மரியாள்

புனித கன்னிமரியாள் இயேசுவை நமக்கு தந்ததால் முதல் நாளில் மரியன்னையை இறைவனின் அன்னையயன திருச்சபை மகிழ்ந்து கொண்டாடுகிறது. மரியன்னையின் அன்பை இவ்வாண்டு முழுவதும் பெற்று வாழ்வின் பயனடைவோம்.

ஜனவரி 4                      புனித கிரகோரியார் (541)

புனித கிரகோரியார் முதலில் திருமணமானவர். அவரின் மனைவி இறந்தபின், தம்வாழ்வை இறைவனுக்காக அர்ப்பணித்தார். ஆயர் பதவி அவர்மேல் சுமத்தப்பட்டது. தாம் பொறுப்பாயிருந்து மக்களுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தார். இரவில் நெடுநேரம் விழித்திருந்து செபம் செய்வார். தீயவழியில் சென்ற கிறிஸ்தவர்களை மனந்திருப்ப அவர் ஆர்வத்துடன் பணிபுரிந்தார்.

ஜனவரி 17        புனித வனத்து அந்தோணியார் (251 - 356)

இவர் எகிப்து நாட்டில் கி.பி.250இல் பிறந்தார். எல்லாத் துறவிகளுக்கும் முன் உதாரணமாக விளங்குகிறார். இவர் தம் பெற்றோரின் இறப்பிற்குப்பின் தம் உலகச் செல்வங்கள் அனைத்தையும் ஏழைகளுக்கு வழங்கிவிட்டு, வனத்தில் தனித்து தவவாழ்வு வாழத் தொடங்கினார். பலர் இவரைப் பின்பற்றி இவரின் சீடரானார்கள். அரசர் கிறிஸ்துவர்களை துன்புறுத்தியபோது, உறுதியுடன் நம்பிக்கையை அறிக்கையிடுமாறு அவர்களை ஊக்குவித்தார். ஆரியுஸ்  என்ற ஆதரவாளர்களுக்கு எதிராகப் போராடிய அத்தனாசியுசுக்குத் துணை நின்று 356இல் இறந்தார்.

ஜனவரி 20        புனித செபஸ்தியார் (கி.பி. 284 - 305)

இவர்  உரோமை இராணுவத்தில் உயர் பதவி வகித்தார். கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்டபோது கிறிஸ்தவர்களை ஊக்குவித்தார். கிறிஸ்துவுக்காக  உயிரை இழப்பது பெரும்பேறு  என்பார். இவர் செய்த புதுமைகளினால் பலர் கிறிஸ்தவராயினர். வேதகலாபனையின் போது கிறிஸ்தவர்கள் உரோமையைவிட்டு தப்பிக்க உதவி செய்தார். இவரைப் பிடித்து கட்டி அம்புகளை இவர்மீது எய்தார்கள். இவர் இறந்துவிட்டார் எனக்கருதி இவரை விட்டுச் சென்றனர். தம்மைக் கொல்ல உத்தரவிட்ட நடுவரிடம் சென்று தயவுசெய்து இயேசுவை ஏற்றுக்கொள்ளுங்கள் என்றார். அவனோ செபஸ்தியாரை தடிகளால் அடித்து கொன்றான். இவ்வாறு செபஸ்தியார் மறைசாட்சியாக மரித்தார்.

ஜனவரி 25                     புனித சின்னப்பர் மனமாற்றம்

கிறிஸ்தவ மறையை இவர் அறிய வந்ததும் அதனை வெறியுடன் எதிர்த்தார். முதல் மறைசாட்சியான புனித முடியப்பரை கல்லால் எறிந்து கொல்லும்போது இவர் அவர் அருகில் நின்றார். தமஸ்கு நகரிலுள்ள கிறிஸ்தவர்களை பிடித்துக்கட்டி எருசலேமுக்கு கொண்டு செல்ல குருவின் கடிதத்துடன் சென்றார். தமஸ்கு செல்லும்போது வானக ஒளி இவரைத் தாக்க, இவர் தரையில் விழுந்தார். “சவுலே, சவுலே ஏன் என்னை துன்புறுத்துகிறாய்?” என்ற இயேசுவின் குரலைக் கேட்டார். அதன் பிறகு, கிறிஸ்தவ மறையை முழு மூச்சுடன் எதிர்த்து நின்றவர். இப்போது கிறிஸ்துவின் திருத்தூதராக மாறினார். கிறிஸ்தவர்களை துன்புறுத்தியவர் புறவினத்தாரைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர உடலையும் உயிரையும் முழுமையாக அர்ப்பணித்தார்.
     
ஜனவரி 28 புனித அக்குவினோ நகர் தோமா (ம.ப. வல்லுநர்)

இவர் கி.பி. 1225இல் உயர்குடும்பத்தில் பிறந்தவர். முதலில் மோற்தேகாசினோ மடத்திலும், பின்பு நேப்பிஸ்சிலும் கல்வி கற்றார். பின்பு தோமினிக்கன் சபையில் சேர்ந்து, புனித பெரிய ஆல்பர்ட்டை ஆசிரியராகக் கொண்டு பாரீஸ், கொலோன் ஆகிய நகரங்களில் கல்விக் கற்றார். மெய்யியல், இறையியல் ஆகியவைகளில் சிறந்த புலமை பெற்று விளங்கினார். ஆழ்ந்த கருத்துக்களை வெளிபடுத்தி பல புத்தகங்கள் எழுதினார். பலருக்கும் ஆசிரியராகவும் இருந்தார். வொஸ்ஸாநோவாவில் 1274இல் மார்ச் 7ஆம் நாள் இறந்தார்.

ஜனவரி 31         புனித தொன்போஸ்கோ (1815 - 1888)

இவர் தூரின் மறைமாவட்டத்தில் பெக்கி என்ற இடத்தில் கி.பி.1815இல் பிறந்தார். இளமை முதல் வறுமையில் வாழ்ந்தார். குருவாகி இளைஞர்களின் வளர்ச்சிக்காக தன் வாழ்வை முழுமையாக அர்ப்பணித்தார். சலேசிய துறவற சபையினை நிறுவி, இளைஞர்களுக்குக் கிறிஸ்தவ வாழ்விலும், தொழில் துறையிலும் பயிற்சி அளிக்கச் செய்தார். திருமறையைப் பற்றி சிறுசிறு நூல்களையும் எழுதினார். 1888ஆம் ஆண்டு ஜனவரி 31இல் இறந்தார். 

நவம்பர் புரட்சி

நவம்பர் புரட்சி


- கேத்தரீன் ஆரோக்கியசாமி, திருச்சி

கடந்த 2016 நவம்பர் 8ஆம் தேதி இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு  உரையாற்றப் போகிறார் என்ற தலைப்புச் செய்தி நாட்டு மக்கள் அனைவருக்கும் ஒரு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய உண்மை. தீவிரவாதத்தை அடியோடு ஒழித்து விட்டாரா? என்ன காரணம் என்று தவித்துக் கொண்டிருக்கும் போது, பிரதமர் மோடி அருமையான ஒரு உரையாற்றினார். இன்று 08‡11‡2016 இரவு 12 மணி முதல் நாட்டில் புழக்கத்தில் உள்ள அனைத்து 500 ரூபாய் மற்றம் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது. கறுப்பு பணத்தை ஒழிக்கவும், கள்ள நோட்டு புழக்கத்தை முடிவுக்கு கொண்டு வரவே இந்த முடிவு. நாட்டு மக்கள் என்னோடு ஒத்துழைக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

கள்ளப்பணத்தை ஒழிக்கவும் கறுப்பு பணத்தை மீட்கவுமே இந்த கசப்பு நடவடிக்கை என்று சொல்கிறார் மோடி. ஆனால், இப்போதைய நடவடிக்கையால் இரண்டுமே ஒழியாது. இது மோடியின் திட்டமிட்ட நாடகமாகவே பார்க்க வேண்டியிருக்கிறது.

2014இல் மோடி பிரதமரான போது 100 நாட்களில் கறுப்பு பணத்தை ஒழிப்பேன் என்றார். அவரது சபதம் நிறைவேறவில்லை. பிறகு செப்டம்பர் 30க்குள் ஒட்டு மொத்த கறுப்புப் பணத்தையும் மீட்பேன் என்று அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார். பதுக்கப்பட்டிருந்த பல லட்சம் கோடிக்கும் அதிகமான கறுப்பு பணத்திலிருந்து வெறும் 50 ஆயிரம் கோடி மட்டுமே மீட்கப்பட்டது. இந்த இரண்டு தோல்வியை மறைக்கவே இப்போது நவம்பர் அதிரடி புரட்சியை ஆரம்பித்திருக்கிறார்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு 2017 பிப்ரவரியில் 2000 ரூபாய் நோட்டு வெளியிடப்படும் என்று அறிவிப்பை செய்தது ரிசர்வ் வங்கி. இது சாமானியனுக்கு விளங்காத  பொருளாதார சூட்சுமம். ஆனால் பண முதலைகளுக்கும், பதுக்கல்காரர்களுக்கும் புரிந்த  சூட்சுமம். அவர்கள் ரூ.500யையும், ரூ.1000த்தையும் வெளிநாடுகளுக்கு கடத்திவிட்டனர். பல்வேறு வழிகளில் அதனை முதலீடும் செய்து விட்டனர்.

கறுப்பு பணம் முழுவதும் வெளியே போனப்பிறகு வந்த இந்த அறிவிப்பு நடுத்தர மக்களையும் ஏழைகளையும் தான் அதிகம் பாதித்துள்ளது. இன்றைக்கு 1000 ரூபாய் புழக்கத்தில் இருப்பது  வெறும் 10 சதவீதம்தான். 500 ரூபாய் நோட்டுக்கள்தான் 90 சதவீதம் புழங்குகின்றன. அதுவும் நடுத்தர வர்க்கத்தினரிடம்தான் இது அதிகம். ஏழைகளை பழிவாங்கியுள்ளார் பிரதமர்.  ரூ.4000 வாங்க நடுத்தெருவில் நாள் முழுவதும் தெருவோரத்தில் வரிசை கட்டி நிற்கிறது  நடுத்தர வர்க்கம்.  ஏ.டி.எம்‡இல் கியூவில் கால்கடுக்க நாள் முழுவதும் நின்று 2000 ரூபாயை எடுத்து அன்றைய செலவுக்கு உபயோகித்துக் கொண்டிருக்கிறது. தெருவில் நிற்க்க வைத்த பெருமை திரு.மோடிக்கு உண்டு.

மோடி குடும்ப செலவுக்கு ஏ.டி.எம் கியூவிலும், பாங்க் வாசலிலும் எப்படி சமாளித்தார் என்று நாட்டு மக்களுக்கு தெளிவுபட சொல்லியிருந்தால் மக்களும் அவரை பின் தொடர்ந்திருப்பார்களே.

தினமும் வங்கி வாசலிலும் ஏ.டி.எம் கியூவிலும் பழைய நோட்டுக்களை மாற்ற நிற்கும் கோடிக்கணக்கான நடுத்தர வர்க்கத்தினர்தான் கறுப்பு பண முதலைகளா? இவர்களை பிடிக்கத்தான் மோடி புரட்சிகரமான அறிவிப்பை வெளியிட்டாரா?
வங்கிகளைவிட அதிகமான பணம் பொது மக்களிடம்தான் இருக்கிறது என்றால் யார் பதுக்கல்காரர்கள்?

வெறும் 4000 ரூபாயை மாற்ற இந்நாட்டு மக்களுக்கு ஐடி கார்டு அவசியம் என்று மக்களை உயர்த்திய பிரதமருக்கு ஒரு சலாம். ஏடிஎம் மையத்தில் ரூ.2000 எடுப்பவர்களுக்கு சேவைக்கட்டணம் டிசம்பர் 30 வரை ரத்து செய்த அரசுக்கு ஒரு சலாம். சமானியருக்காக பாடுபடும் இந்த  அரசுக்கு மக்கள் என்றும் தலை வணங்குவார்கள்.

இவ்வளவு  இக்கட்டான நிலையிலும் ஒருசில இடங்களில் தலை தூக்கிய மனிதநேயம் மனதில் ஈர்ப்பை ஏற்படுத்துகிறது. சில்லரைப் பணம் இல்லாவிட்டாலும் இலவசமாக சாப்பிட அனுமதித்த திருநெல்வேலி, ஸ்ரீபாலாஜி ஹோட்டல் உண்மையில் மனித நேயத்துக்கு ஒரு எடுத்துக்காட்டு.

ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்களை வாபஸ் பெற்று பொருளாதாரத் துறையில் அதிரடி நடவடிக்கையை மோடி அரசு எடுத்துள்ளது. கறுப்பு பணத்தை ஒழிக்க எடுத்த அதிரடி வெல்லுமா? ஊழல் என்பது மனநிலை. இது மாறாத வரை கறுப்புப்பணம் என்ற வைரஸ்ஸை ஒழிக்க முடியாது.

காந்தி நோட்டை வாங்க கால்கடுக்க வரிசை கட்டிய “காந்தி”தேசம் மோடிக்கு பதில் சொல்லும்...

பொதுக்காலம் நான்காம் ஞாயிறு

பொதுக்காலம் நான்காம் ஞாயிறு

செப் 2 : 3; 3 : 12 - 13; 1 கொரி 1 : 26 - 31;  மத் 5 : 1 - 12

வள்ளுவர் கூறுவார் : 
ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அது சான்றோர்
மாற்றாரை மாற்றும் படை (குறள் 985)

ஒருவர் செய்யும் சாதனைகளில் பெரிது, பணிவு  என்ற பண்பினை பெற்றிருத்தல். இப்பண்பினை பெரியவர்கள், பகைவர்களை வெல்வதற்கு பயன்படுத்தும் படை அணி என்கிறார்.

விவிலியத்தில் ‘அனாவிம் யாவே’ என்ற ஒரு குறிப்பு உண்டு. அதாவது ‘யாவே இறைவனின் ஏழைகள்’. இவர்கள் உலக செல்வங்கள், வசதிகள் இல்லாதவர்கள். சமுதாயத்தில் கடைநிலையில் உள்ளவர்கள். இவர்கள் சார்பில்தான் இறைவன் செயல்படுகிறார் என்பது கருத்து.

இன்றைய நற்செய்தி பகுதியில், இயேசு செய்த மலைப்பொழிவின் முதல் பகுதியான, பேறுபெற்றோர் என்ற தொகுதியைப் பார்க்கிறோம். ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது என்று முதல் பேறு சொல்கிறது. தொடர்ந்து  எட்டு பேறுகள் கொடுக்கப்பட்டுள்ளன. துயருறுவோர், கனிவுடையோர், நீதி நிலைநாட்டும் வேட்கைக் கொண்டோர், ‘இரக்கமுடையோர், தூய்மையான உள்ளத்தோர், அமைதி ஏற்படுத்துவோர், நீதியின் பொருட்டு துன்புறுத்தப்படுவோர், என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்தல்’ ஆகிய நிலைகள் பேறுகளாகவும், அதற்கேற்ற வாழ்வின் பயன்களும் அங்கு தரப்பட்டுள்ளன. லூக்கா நற்செய்தியாளர் இதே பகுதியை தரும்போது, ‘ஏழைகளே நீங்கள் பேறுபெற்றவர், இறையாட்சி உங்களுக்கு உரியது என்றும், பட்டினியாய் இருப்போர், அழுதுகொண்டிருப்பவர், மானிட மகன் பொருட்டு மக்கள் வெறுப்பதையும்’ குறிப்பிடுகிறது (லூக் 6 : 20 - 26).

லூக்கா நற்செய்தியில் கொடுக்கப்பட்டுள்ளதுதான், இயேசு சொல்லியிருக்கக் கூடிய வார்த்தைகள் என்றும், மத்தேயு இதன் கருத்துக்களை, யூத சமுதாயத்திற்கேற்ப பழைய ஏற்பாட்டு வார்த்தைகளுடன் பின்னி தருகிறார் என்று அறிஞர்கள் விளக்குவர்.
உதாரணமாக, ‘கனிவுடையவர் நாட்டை உரிமை சொத்தாக்கி கொள்வர்’ என்பது திபா 37 : 11ஐ பிரதிபலிக்கிறது. ‘தூய்மையான உள்ளத்தோர்’ என்பது திபா 24 : 4; 51இல் குறிப்புக் காணப்படுகிறது.
இரக்கமுடையோர் என்ற கருத்து மத்தேயு நற்செய்தியில் அதிகமாகக் காணப்படுகிறது. இரக்கமுடையோர் என்பவர் மற்றவரை மன்னிப்பவர் (மத் 6 : 12, 14 - 15; 18 : 35).

முதல் வாசகத்தில், ‘எளியோரே ... ஆண்டவரைத் தேடுங்கள், நேர்மையை நாடுங்கள்’, மனதாழ்மையை நாடுங்கள் என்று செப்பனியா இறைவாக்கினர் அறிவுறுத்துகிறார். செப்பானியா கி.மு.ஏழாம் நூற்றாண்டில் யோசியா அரசன் காலத்தில் இறைவாக்கினராக செயல்பட்டவர். யோசியா அரசன் காலத்தில் இவருக்கு முன்பிருந்த அரசன் மனாசே செய்த தவறுகளையயல்லாம் களையப்பட்டு, சீர்திருத்தங்கள் நடந்தன. இச்சூழ்நிலையில்தான், இறைவன் மீது நம்பிக்கைக் கொண்டவர்கள் தங்களின் நம்பிக்கையை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும் என்கிறார்.

இப்போதெல்லாம் ஏழையர் உள்ளத்தினைப் பெற்ற எளிமை மக்களால் விரும்பப்படுவதில்லை. மாறாக ஆடம்பரத்தினைத்தான் மக்கள் விரும்புகிறார்கள். அன்மையில் பெங்களூரில், கர்நாடகாவின் முன்னாள் அமைச்சர் ஜனார்த்தனம் ரெட்டி அவர்களின் மகளின் திருமணம் நடந்தது. 650 கோடி ரூபாய் செலவில் மெகா ஆடம்பரத்துடன் அது  நடந்திருக்கிறது. மணமகளின் புடவை 17 கோடி ரூபாய். அவர்களுக்கு நகை 90 கோடி ரூபாய். தங்க முலாம் பூசப்பட்ட அழைப்பிதழ். சிறப்பு விருந்தினர் வந்திரங்க 15 தற்காலிக ஹலிபேட். பிரேசில் நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட நடனகுழுவினர்.  ஆடம்பரத்தால் தற்காலிக பெருமையை, மகிழ்ச்சியைப் பெறலாம். எளிமையால், இறைவனின் அருள் வலிமையில் நுழைகிறோம். காந்தி அடிகள் ஏழை மக்கள் அணிந்திருந்த வேஷ்டி துண்டினைத்தான் அணிந்திருந்தார். அதன் வல்லமையால்தான் வல்லரசான இங்கிலாந்தை  இந்தியாவிலிருந்து அகற்றினார்.

‘உயர செல்ல வேண்டுமா? கீழே செல்வதுதான் அதன் துவக்கம். வான்முட்டும் கோபுரம் கட்ட விரும்புகிறாயா? அதற்கு எளிமை, பணிவு என்ற அடிதளத்தை முதலில் இடு’ என்கிறார், புனித அகுஸ்தினார்.

பணிவு என்பது நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆவல் கொண்ட பண்பு’ - சார்லி சாப்லின்

‘பணிவு என்பது, நான் தவறியிருக்கக் கூடும் என்று ஏற்றுக்கொள்ளும் ஞானம்’ - ரிச்சர்ட் பால் எவான்ஸ்


Thursday 1 December 2016

பொதுக்காலம் மூன்றாம் ஞாயிறு

பொதுக்காலம் மூன்றாம் ஞாயிறு      
          
எசா 9 : 1 - 4:  1 கொரி 1 : 10 - 13 - 17;   மத் 4 : 12 - 13

மனமாற்றம் மாட்சியின் வழி

சில ஆண்டுகளுக்கு முன்பாக விடாத மின் வெட்டால் தமிழகத்தில் ஆட்சியே மாறியது. மின்சாரம் இல்லாத வேளையில் வாழ்வே இருண்டு போகிறது. மின்சார விளக்குகள், சமைக்கும் கருவிகள், தண்ணீர் ஏற்றும் மோட்டார் அனைத்தும் மின்சாரத்தின் உதவியால் இயங்குகின்றன.

பலருடைய வாழ்வு, இயங்காத இருளான நிலையைப் பார்த்தோம். அங்கு வாழ்வைத் தரக்கூடிய  சக்தி இடம் பெறவில்லை. இன்றைய நற்செய்தி பகுதி, நம் வாழ்வை வெளிச்சமாக்கும் சக்தியைப்பற்றி விளக்கிக் கூறுகிறது. மனிதரின் மனமாற்றம் தான் ஒருவரின் வாழ்வை ஒளிரச் செய்யும்.

இயேசு தன் பணியைத் தொடங்குகின்ற போது முதல் வார்த்தையாக, ‘மனம் மாறுங்கள்: ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்து விட்டது’ என்கிறார். விண்ணரசு நம்மில் வரவேண்டுமென்றால், முதலில் மனமாற்றம் வரவேண்டும். நம்மில் இருக்கும் இருளை அகற்றுவது மனமாற்றம். நம் முயற்சியை முன்வைத்துத்தான் இறைவன் நம்மில் செயலாற்ற வருகிறார்.

திருமுழுக்கு யோவான் கைது செய்யப்பட்ட பிறகு தனது பணியை துவங்குகிறார். ‘திருமுழுக்கு யோவான் கைது செய்யப்பட்டார்’ என்றால் அதில் அவருடைய இறப்பும் உள்ளடங்கும். இயேசு கலிலேயா பகுதிக்கு வருகிறார். ஏரோது அரசனிடமிருந்து இயேசுவுக்கும் ஆபத்து காத்திருக்கலாம். எனவே ஒரு மறைவான பாதுகாப்பான இடத்திற்கு இயேசு செல்கிறார் என்று அறிஞர்கள் விளக்குவர். ‘கப்பர்நாகுமுக்குச் சென்று குடியிருந்தார்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது ஒரு வீட்டை தனதாகப் பெற்று அங்கு வாழ்ந்திருக்கிறார். ‘செபுலோன் நப்தலி ஆகிய இடங்களின் எல்லையில் கடலோரமாய் அமைந்திருந்த கப்பர்நாகும்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. செபுலோன், நப்தலி என்பவை யாக்கோபின் பிள்ளைகளின் (12 பேரில் இருவர்) பெயர்கள்.
இவர்களின் வழிமரபினருக்கு யோசுவா நாடுகளை பிரித்துக் கொடுத்தார் (யோசு 19: 10  16; 24 - 31). கப்பர்நாகும் நகர் நப்தலி பிரிவினருக்குக் கொடுக்கப்பட்ட பகுதியில் உள்ளது. ‘பிற இனத்தவர் வாழும் கலிலேய பகுதியே’ என்று கூறப்பட்டுள்ளது. பிற இனத்தவர்களால் சூழப்பட்ட கலிலேயப் பகுதியே என்று எபிரேய மூலத்தில் உள்ளது. இயேசு வாழ்ந்த காலத்தில் கலிலேயப் பகுதியில் கிரேக்க மொழியையும் அரமேய மொழியையும் பேசி வந்தனர். ஆக இயேசு தனது மனந்திரும்புதல் நற்செய்தியை யூதர்களையும், பிற இனத்தவரையும் இணைத்து பொதுமைப்படுத்திக் கூறுகிறார்.
இரண்டாம் வாசகத்தில் பவுல் அடிகளார், கொரிந்து நகர மக்களில் விளங்கும் பிரிவினையை நீக்கி ஒற்றுமையுடன் வாழுங்கள் என்று அழைப்புக் கொடுக்கிறார். ‘பிளவுகள் வேண்டாம், ஒரே மனமும், ஒரே நோக்கமும் கொண்டிருங்கள்’ என்று துவக்கத் திருச்சபையில் விளங்கிய அதே அனுபவத்தை இங்கு நினைவுபடுத்துகிறார் (திப 4 : 32).

மனமாற்றம் தன்நலத்தை  உடைக்கிறது. 
தீய சார்புகளை நன்மை வாய்க்காலாக மாற்றுகிறது.

எம்.ஸ்காட் பெக் என்பவர் கூறுவார்,

‘ஒருவரின் தனிப்பட்ட மனமாற்றத்தால், உலக வரலாறே மாறியிருக்கிறது. உலகில் நன்மை தீமைகளின் வெற்றி, தோல்வி தனிப்பட்ட ஒருவரின் உள்ளத்தில் நடக்கும் போராட்டத்தில் நடக்கும் முடிவாகும்’ என்பார்.

‘இறைவன் உன் சிக்கலான சூழ்நிலையை மாற்றாது இருக்கலாம், ஏனென்றால் இறைவன் முதலில் உன் மனதை மாற்ற முயல்கிறார்’. இன்றைய நற்செய்திப் பகுதியில் இயேசு முதல் நான்கு சீடர்களை அழைத்த நிகழ்ச்சியையும் காண்கின்றோம். இறைவன் கொடுக்கும் அழைத்தலிலெல்லாம் பெரிய அழைத்தல், மனமாற்றத்திற்கான அழைத்தல். மனமாற்றம் என்பது, தீய வழியை நல்வழியாக தலைகீழாக மாற்றுவது.

ஒருவர் தன் மனைவியையும், பிள்ளைகளையும் பிரிந்து வாழ்ந்தார். மனைவி மேல் அவருக்கு சந்தேகம். யார் சொல்லியும் மனைவியோடு சேர்ந்து வாழ மறுத்து விட்டார். ஒரு நாள் கோவிலில் ஜெபிக்கும்போது, அவர் மனதை ஏதோ உருத்தியிருக்கிறது. அடுத்த நாளே மனைவியையும், பிள்ளைகளையும் அழைத்து வந்து சமாதானமாக வாழ்ந்தார். மனமாற்றத்தால் எல்லோருக்கும் அளவில்லா மகிழ்வு பிறந்தது.




பொதுக்காலம் இரண்டாம் ஞாயிறு

பொதுக்காலம் இரண்டாம் ஞாயிறு

எசா 49 : 3, 5 - 6: 1 கொரி 1 : 1 - 3:   யோவா 1 : 29 - 34

ஒரு குத்து (Punch) வாக்கியம் :  

‘மனிதருக்கு பயப்படுகிறவர்தான் கடவுளைத் தேடி போகனும். மனசாட்சிக்குப் பயப்படுகிறவரை அந்த கடவுளைத் தேடி வருவார்’. 

இன்றைய நற்செய்தியில் இயேசுவிற்கு திருமுழுக்கு யோவானின் சாட்சியத்தைப் பற்றி பார்க்கிறோம். இயேசுவை, ‘உலகின் பாவம் போக்கும் ஆட்டுக்குட்டியாகவும்’, ‘தூய ஆவியாரை பெற்றவராகவும்’, ‘தூய ஆவியால் திருமுழுக்கு அளிப்பவராகவும்’ சாட்சியம் தருகிறார். ‘உலகின் பாவம் போக்கும் ஆட்டுக்குட்டி’  என்ற கருத்தில் எசா 53 : 4, 7, 12 என்ற துன்புறும் ஊழியரின் பாடலின் தாக்கத்தைக் காணமுடிகிறது.

“அடிப்பதற்கு இழுத்துச் செல்லப்பட்ட ... கத்தாத செம்மறி போல் வாயை திறவாதிருந்தார்” (எசா 53 : 7)
“பலரின் பாவத்தை சுமந்தார்” (எசா 53 : 12) “பவுல் அடிகளாரும் இயேசுவின் இறப்பினை, பாஸ்கா ஆடாகிய கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கிறார்” என்று விவரிக்கிறார் (1 கொரி 5 : 7)

திருமுழுக்கு யோவான் இயேசுவை தன் அனுபவத்தில் புரிந்துக் கொண்டு எழுதுகிறார். ஒத்தமைப்பு நற்செய்திகளில், இயேசு திருமுழுக்கு பெறும்போது, இயேசுவே தூய ஆவி அவர்மேல் எழுந்து வருவதைக் காண்கிறார். வானிலிருந்து ‘நீரே என் அன்பார்ந்த மகன்’ என்று குரல் ஒலிப்பதையும் கேட்கிறார். ஆனால் யோவான் நற்செய்தியாளர் திருமுழுக்கு யோவானே தூய ஆவியார் இயேசுவின் மீது இறங்கி வந்ததைக் கண்டதாகக் கூறுகிறார். இது திருமுழுக்கு யோவானின் உள்ளாந்திர அனுபவத்தைக் காட்டுகிறது. திருமுழுக்கு யோவான் இயேசுவை சரியாக அடையாளம் கண்டு கொண்டார். இயேசுவின் மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை என்றும் (யோவா 1 : 27), ‘இயேசு வளர வேண்டும், தான் குறைய வேண்டும்’ என்றும் (யோவா 3 : 30) இயேசுவின் நிலையில் தன் நிலையை ஒப்பிட்டு உண்மையை எடுத்துக் கூறுகிறார்.

முதல் வாசகத்தில் இறைவனுக்கும் துன்புறும் ஊழியருக்கும் இடையில் உரையாடல் நடக்கிறது.

இறைவன்: ‘நீரே என் ஊழியன்’, ‘உலகம் முழுவதும் என் மீட்பை அடைவதற்கு பிற இனத்தாருக்கு ஒளியாக ஏற்படுத்தினேன்’.

ஊழியர்: ‘கருப்பையிலிருந்தே ஆண்டவர் தம் ஊழியராக உருவாக்கினார்’, ‘ஆண்டவர் பார்வையில் நான் மதிப்புப் பெற்றவன்’ ‘என் கடவுளே என் ஆற்றல்’.

இந்த  உரையாடல் ‘நான் உன் கடவுள், நீ என் மக்கள்’ என்ற  உடன்படிக்கையின் வெளிப்பாடாகவே நாம் பார்க்கலாம். ஆக இறைவனின் செயல்பாட்டை தன்னிலேயே துன்புறும் ஊழியரும் காண்கிறார்.

இரண்டாம் வாசகத்தில், பவுலடிகளார் கொரிந்து நகர கிறிஸ்தவர்களின் ஆன்மீக அனுபவத்தை சுட்டிக்காட்டி எழுதுகிறார். ‘கிறிஸ்துவோடு இணைக்கப்பெற்று தூயவராக்கப்பட்டு, இறைமக்களாக இருக்க அழைக்கப்பட்டவர்கள் கிறிஸ்தவர்கள்’. தூயவராக்கப்பட்டவர்கள் என்றால், இறைவனால் முன்குறித்து வைக்கப்பட்டவர்கள். எனவே தங்களின் மேன்மை நிலைக்கு ஏற்ப வாழ வேண்டியவர்கள்.

ஒருவர் ஒரு முனிவரிடம் சென்று, ‘நான் கடவுளைக் காண வேண்டும். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்டார். அதற்கு முனிவர், ‘கடவுளைக் காண வேண்டுமென்றால் தவம் செய்ய வேண்டும். காட்டில் போய் தவம் செய்’ என்றார். அவனும் காட்டிற்கு சென்று தவம் செய்தான். கடவுளைக் காணவில்லை. அவன் தவம் செய்து கொண்டிருக்கும்போது, வேடன் ஒருவன் அங்கு வந்தான். தவம் செய்து கொண்டிருப்பவரைப் பார்த்து, ‘என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?’ என்று கேட்டான். அவர், ‘கடவுளைக் காண தவம் செய்து கொண்டிருக்கிறேன்’ என்றார். வேடன், ‘கடவுள் எப்படி இருப்பார்?’ என்றான். தவம் செய்தவருக்கு தூக்கி வாரி போட்டது. ஏதோ சொல்லிவைப்போம் என்று ‘மனித  உடலோடும், சிங்கமுகத்தோடும் இருப்பார்’ என்றான். எனவே வேடன் அத்தகைய வேடம் கொண்ட கடவுளை தேட ஆரம்பித்தான். பல நாள்கள் தேடியும் அத்தகைய கடவுளைக் காண முடியவில்லை. எனவே தூக்குமாட்டிக் கொண்டு சாகப் போனான். அப்போது கடவுள், மனித  உடலோடும் சிங்கமுகத்தோடும் தோன்றினார். உடனே அதனை இழுத்துக் கொண்டு தவம் செய்தவரிடம் வந்தான். கடவுளைப் பார்த்து தவம் செய்தவர், ‘ஏன் எனக்குத் தோன்றவில்லை? வேடனுக்கு மட்டும் தோன்றினீர்கள்?’ என்றான். ‘அவன் முழு மனதுடன் தேடினான், வந்தேன். நீ பெயருக்கு தவமிருந்தாய்’ என்றார் கடவுள்.

வரும்  உலகிற்கு முன்னே நம் உள் உலகம் இருக்கிறது. இந்த உள் உலகத்தில் இறைவன் உலவுவதைக் காணலாம். உள் உலக அனுபவம் இறைவனை உணர்வதற்கும், மற்றவர்களிலும் இறைவனின் பிரசன்னத்தை  உணர்வதற்கும் உதவியாக 
விளங்கும். புனித திருமுழுக்கு யோவானைப் போல, மற்றவர்களின் நன்மைகளைக் கண்டு கொண்டு வாழ்வோம்.


ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழா

ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழா

- அருட்பணி. .ச. இ. அருள்சாமி,

எசா 60 : 1 - 6; எபே 3 : 2 - 3, 5 - 6   மத் 2 : 1 - 12

சென்னையைச் சேர்ந்த திரு. குழந்தைசாமி அவர்கள், ‘காந்திய அமைதி அமைப்பு’ என்ற இயக்கத்தை நடத்தி வருகிறார். இவர் பொறியல் படித்து விட்டு, வேலைக்கு செல்லாமல் பல்சமய  உரையாடல், உலக அமைதிக்காக பொது பிராத்தனை கூட்டங்கள் நடத்தி, பல வன்முறைகள் நடந்த இடங்களுக்கெல்லாம் சென்று பிராத்தனை கூட்டங்களினால் அமைதி கண்டுவருகிறார். காந்திஅடிகள் எல்லா சமய கருத்துக்களை ஏற்று மக்களை ஒன்றிணைத்தார் என்று உணர்வு பூர்வமாக ஏற்றுக் கொண்டு செயல்படுகிறார்.

இன்று ஆண்டவரின் திருகாட்சி விழாவைக் கொண்டாடகிறோம். இறைவன் உலக மக்கள் அனைவருக்கும் தன்னை வெளிப்படுத்துகிற இயேசுவின் பிறப்பு அமைந்திருக்கிறது என்பதுதான் இவ்விழாவின் கருத்து. மத்தேயு நற்செய்தியில் மட்டும்தான் கிழக்கிலிருந்து ஞானிகள் இயேசுவைக் காணவரும் நிகழ்ச்சியைக் குறிப்பிடுகிறார். ஞானிகள் என்பதை,  அவர்கள் அரசர்கள் என்ற பாரம்பரியம் திபா 72 : 10; எசா 49 : 7 ஆகிய குறிப்புகளின் அடிப்படையில் உண்டானது. அவர்கள் அளித்த மூன்று காணிக்கைகளை வைத்து, அவர்கள் மூவர் என்ற பாரம்பரியம் ஏற்பட்டது. அவர்களின் பெயர்களைக் கூட குறிப்பிட்டார்கள். கஸ்பார், பல்த்தசார், மெல்கியோர் ஆகிய மூவரில் கஸ்பார் கருப்பினத்தைச் சேர்ந்தவர் என்றும் அடையாளம் கண்டனர்.

ஞானிகள் ஒரு தேடலில் அங்கு வருகிறார்கள். யூதரின் அரசர் பிறந்திருக்கிறார் என்று தேடி வருகிறார்கள். நட்சத்திரம் ஒன்று அற்புதமாக வழிநடத்துகிறது. ஏரோது தந்திரமாக, ‘அவரை போய் பாருங்கள், வந்து என்னிடம் கூறுங்கள்’ என்கிறான். அவனின் தந்திர திட்டத்திலிருந்தும் தப்பிக்கிறார்கள். இறுதியில் தேடியதை கண்டடைகிறார்கள். நல்முத்துக்களைத் தேடிய வணிகரைப் போல (மத் 13 : 45 ‡ 46), ஞானிகள் இயேசுவை தாய் மரியா வைத்திருப்பதைக் காண்கிறார்கள். தங்களின் காணிக்கைப் பரிசுகளையும் தருகிறார்கள். (பொன், சாம்பிராணி, வெள்ளைப் போளம்). மூன்று பொருள்களும் அடையாளமாக விளங்கின என்று பிறகு விளக்கம் கூறிய பாரம்பரியம் உண்டானது. ஞானிகள் பரிசுகள் தருவதும், திருபாடலின் பின்னனியை பெற்றிருக்கிறது (திபா 72 : 10 ‡ 11). பொன் இயேசுவின் தலைமை (அரசர்)யையும், சாம்பிராணி  இயேசுவின் இறைத்தன்மையையும், வெள்ளை போளம் இயேசுவின் பாடுகளின் பயனையும் வெளிப்படுத்தின என்று துவக்கத்திருச்சபையினர் பொருள் கண்டனர்.

வாழ்க்கை ஒரு தேடல், ஒரு பயணம். புதிய உண்கைளை, நன்மைகளை இந்த தேடலில் கண்டுக் கொள்ளலாம். உயிரற்ற பொருள்களை தேடுவதில் தான் மக்களின் மனம்அலைபாய்கிறது. வாழ்வின் உண்மைகளை தேடிக்காண்கிறபோது வாழ்வின் பொருளையும் நிறைவையும் காணலாம்.

அன்மையில் வாட்ஸ் அப்பில் பார்த்த கவிதை :
வாழ்க்கை என்பது

‡ ஒரு சந்தர்ப்பம் நழுவ விடாதீர்கள்.
‡ ஒரு கடமை நிறைவேற்றுங்கள்
‡ ஒரு இலட்சியம் சாதியுங்கள்
‡ ஒரு சோகம் தாங்கிக் கொள்ளுங்கள்
‡ ஒரு போராட்டம் வென்று காட்டுங்கள்
‡ ஒரு பயணம் நடத்தி முடியுங்கள்

அன்னை மரியாள் இறைவனின் தாய் - புத்தாண்டு பெருவிழா

அன்னை மரியாள் இறைவனின் தாய் - புத்தாண்டு பெருவிழா 
              01 - 01 - 2017
,

இறைமையும், மனிதமும் இணைந்தது மரியில் - இதனால் 
மாண்பும், புனிதமும் மலர்ந்தது மனிதரில்
பிறந்துள்ள புத்தாண்டில், புது வாழ்வு சிறக்கட்டும்
அல்லவை நீங்கட்டும், நல்லவை நடக்கட்டும்
இயற்கை செழிக்கட்டும், இனிமை பொங்கட்டும்
மதவெறி மடியட்டும், மனித நேயம் மலரட்டும்
அன்பு பெருகட்டும், அருள் பொழியட்டும்
உறவுகள் சூழட்டும், உண்மைகள் நிலைக்கட்டும்
இறைவனின் அன்னை பெருநாளில் இனியவை பூக்கட்டும்

உலகம் இன்று புத்தாண்டு விழாவை சிறப்பித்து கொண்டாடும் வேளையில், நம் திருஅவை அன்னை மரியா, இறைவனின் தாய் என்ற பெருவிழாவை கொண்டாடி மகிழ்கின்றது. காரணம், அன்னை மரியா இயேசுவைச் சுமந்த ஆலயம். அகிலத்தை காப்பவரை, தன் உதிரத்தில் காத்தவர். சர்ப்பத்தால் வந்த சாபத்தை தனது கர்ப்பத்தால் தீர்த்தவர். காலங்களை கடந்தவர் காலம் நிறைவுற்ற போது, காலத்தில் கரையவும், மனிதத்தில் கலக்கவும், தன் நிலைத் துறந்து, நம் நிலை ஏற்க விரும்பிய போது (கலா 4 : 5) “நிகழட்டும்” என்றார், நம் அன்னை, (லூக் 1 : 38). தன் உடலை உருக்கி, உணவாக்கி, ஒன்பது மாதமளவு உன்னத இறைவனின் உடலை வளர்த்து 57 டெல் யூனிட் வலியுடன் (பிரசவத்தின் போது, ஒரு தாய் படும் வலியின் அளவு, மற்றும் ஒரே நேரத்தில் 200 எலும்புகள் முறியும் அளவுக்கு வேதனை) இப்புவிக்கு இறைவனை கொணர்ந்தாள். பத்து நிமிடங்கள், நாம் எதையும் சுமந்தால், நம் தோல் வலிக்கின்றது. ஆனால் பத்து மாதங்கள் தன் கருவறையில், குழந்தையை சுமக்கும் தாய்க்கு மட்டும் எப்படி இனிக்கிறது? இறைவனை தன் உதிரத்தில் மட்டுமல்ல, தன் உள்ளத்தில் சுமந்தவர் அன்னை மரியா. எனவே! இறைவனுக்கும், அன்னை மரியாவுக்கும் இடையேயான உறவு, சந்தித்தலில் பூத்ததல்ல, இரத்தத்தில் பூத்தது. தாய்மை என்பது கருவின் சரித்திரம், உயிரின் பிறப்பிடம், ஒப்பிட முடியா அழகு, வர்ணிக்க முடியா அன்பு. இத்தகைய அன்னையை புறந்தள்ளிப் போகின்றவர்களும், புறங்கூறிப் பேசுகின்றவர்களும் அதிகரித்து வருகின்ற சூழலில் தான் நம் திருத்தந்தை பிரான்சிஸ், தன்னுடைய டிவுட்டர் வலை தளத்தில் “அன்னை மரியாவை தன் தாயாக உணராத கிறிஸ்தவர்கள் அனாதைகள்” என்று குறிப்பிடுகிறார். (02, செப்.2014) மரியன்னைக்கும், இறைவனுக்குமான உறவை  புரிந்துக் கொள்ளாமல் வாதம் பண்ணுபவர்கள் (திப 20 : 28 அடிப்படையில்) இன்று மட்டுமல்ல, தொடக்க திருஅவையின் காலத்திலேயிருந்து தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இறைவனின் மீட்பு திட்டத்தில் அன்னை மரியா ஆற்றிய பங்களிப்பை போற்றும் வகையில்தான் திருஅவை ஆண்டின் முதல் நாளே, அன்னை மரியாவை சிறப்பிக்கின்றது.

அன்னை மரியா இறைவனின் தாய் என்று இவ்விழா கோட்பாடு இறையியல் அடிப்படையில் ஆழமான கிறிஸ்தவியல் சிந்தனைகளைக் கொண்டது. மூவொரு கடவுளின் இரண்டாம் ஆளாகிய இறைமகன் இயேசுவின் இறைத்தன்மையும், மனிதத்தன்மையும்  குறித்த  மறையுண்மைகயை  சீரணிக்கின்ற விழா இது. ஒரு சாதாரண நாசரேத்து பெண், எவ்வாறு இறைவனுக்கு தாயாக முடியும்? அப்படியானால் இறைவனால் படைக்கப்பட்ட அன்னை மரியா, இறைவனைவிட வல்லமை கொண்டவரா அல்லது ஆயர் நெஸ்டோரியசின் தப்பரைக் கோட்பாட்டின் படி, இயேசுவின் மனித இயல்புக்கு மட்டும் தாயா அல்லது இறைத்தன்மை அவர் பிறந்த பின் வந்து ஒட்டிக்கொண்டதா போன்ற கேள்விகள் தொடக்க திருஅவையிலும் இருந்தது. கி.பி.431இல் கூடிய எபேசு மாமன்றம் இத்தகைய குழப்பங்களுக்கு தெளிவான விளக்கமளித்து, கோட்பாட்டைப் பிரகடனப்படுத்தியது. அதனடிப்படையில் ஆண்டவர் இயேசு கடவுளும், மனிதனுமானவர், அவரில் இரண்டு இயல்புகளும், மனுவுரு எடுத்த  நொடிப்பொழுதில் இணைந்தன என்றும், அதனால் அன்னை மரியா, தன் உதிரத்தில் சுமந்த, இறை மனித இயல்புகளைக் கொண்ட இறைமகன் இயேசு என்றும், இதனால் இறைவனை தன் கருவறையில் வைத்து வளர்த்த, அன்னை மரியா இறைவனின் தாய் அல்லது இறைவனை சுமப்பவர் என்றும் அறிதியிட்டு கூறியது. இறைமகன் இயேசுவின் இறைத்தன்மையும், மனித தன்மையையும் இவ்விழா விளக்குகிறது எனலாம். ஆண்டவர் இயேசு, தன் தாயிடமிருந்துதான் தன் மனித தன்மையை சாதாரண எந்த மனிதரைப் போலவும் பெறுகின்றார். அன்னை மரியாவைப் போல, வேறு எந்த மனிதரும் இந்த அளவுக்கு, இறைவனோடு இரத்த  உறவுடன் இருந்திருக்க முடியாது. இறைவனின் மனுவுரு எடுத்தலில் அன்னை மரியாவின் “ஆகட்டும்” மிக முக்கியமான ஒன்று. அதே வேளையில் மனித குல மீட்புக்காக இதை முன்னெடுத்தது இறைவனே அன்றி, மரியா அல்ல.

அன்னை மரியாவின் பெருவிழா நாளில் பிறக்கின்ற இப்புத்தாண்டு சிறக்கட்டும், இனியவை நடக்கட்டும், ஈகை பெருகட்டும். இன்றைய முதல் வாசகத்தில் (எண் 6 : 22 - 27) ஆண்டவர் மோசே வழியாக, ஆரோனுக்கு கொடுத்த இறையாசீர், இப்புத்தாண்டில் நிறைவாய் நமக்கும் கிடைக்கட்டும். இறைவன் எல்லா தீங்குகளிலிருந்தும் காப்பாராக. அவரது திருமுகத்தை நம்மீது திருப்பி அருள் பொழிவாராக, அவரது அக்கரையையும், கரிசனையையும் நமக்கு காட்டுவாராக. அமைதியை அருளி, நம்மை அவருக்கு உரியவர்கள் ஆக்குவாராக. “என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?” என்ற எலிசபெத்தின் வாழ்த்துகளின்படி, ஆண்டவரை சுமந்த அன்னை மரியாவை பின்பற்றி, நாமும், ஆண்டவரை நம் இதயத்தில் சுமப்பவர்கள் ஆவோம்.

கிறிஸ்துமஸ் விழா

கிறிஸ்துமஸ் விழா

எசா 9 : 1 - 6;     தீத் 2 : 11 - 14;          லூக் 2 : 1 - 14

- அருள்பணி. பு. அமிர்தசாமி S.T.D, 

இரண்டாயிரம்  ஆண்டுகளுக்கு முன் உலகின் ஏதோ ஒரு மூலையிலிருந்த ஒரு சிறிய மலை கிராமத்தின் மீது,  உலகின் பார்வை பட இறைவன் அருள் கூர்ந்த புனிதமான இரவு இந்த  இரவு.  உலகிற்கே மகிழ்ச்சியளிக்கும் நற்செய்தியை அறிவிக்கின்ற கிராமமாக மாறுகிறது பெத்லகேம். அன்றைய உலகின் மிகப் பெரிய, வலிமைமிக்க உரோமைப் பேரரசின் தலைநகர் உரோமையை இறைவன் தேர்ந்தெடுத்திருக்கலாம். அல்லது  உலகிற்கே நாகரீகத் தொட்டிலாகத் திகழ்ந்த கிரேக்க நாட்டின் தலைநகர் ஏதென்ஸை தேர்ந்தெடுத்திருக்கலாம். இவ்விரு நகரங்களுக்குமுன் பாலஸ்தீனத்தின் குக்கிராமமான பெத்லகேம் ஒன்றுமில்லை. யாரும் தெரிந்திராத பெத்லகேமைத் தெரிவு செய்ததில் இறைவன், தான் எப்படிப்பட்டவர், தனது அன்பு எப்படிப்பட்டது என்பதை நாம் புரிந்து கொள்ள செய்கிறார்.
வரலாற்று மனிதர் இயேசு ஏழைகளை கண்ணோக்குகின்றார்

இந்தப் புனித வழிபாட்டின் நற்செய்தி நமக்கு இரண்டு முக்கிய செய்திகளை சொல்கின்றது. 1. அகஸ்துஸ் சீசர் உரோமைப் பேரரசின் மக்கள் தொகை கணக்கு எடுப்பதுபற்றி கூறுவதன் வழியாக இயேசு மனித வரலாற்றில் பிறந்தவர் என்றும், அப்பிறப்பு மீட்பின் வரலாற்றில் உன்னதமான நிகழ்வு என்றும், உலகில் உள்ள எல்லா மக்களினத்தாருமான ஒரு நற்செய்தியாகவும் விளங்குகின்றது என்பதை தெளிவுபடுத்துகின்றது. 2. முதலில் இடையர்களுக்குத்தான் இயேசுவின் பிறப்பு நற்செய்தி அறிவிக்கப்படுகின்றது என்பதிலிருந்து கடவுள் எல்லா காலத்திலும் ஏழைகளையும், தாழ்நிலையில் உள்ளவர்களையுமே கண்ணோக்குகின்றார், அவர்களைத் தேடிச் செல்கின்றார் என்ற செய்தி இரண்டாவது செய்தியாக அமைகின்றது.

காரிருளில் தவித்த மக்களுக்கு பேரொளி

‘காரிருளில் நடந்து வந்த மக்கள் பேரொளியைக் காண்பார்கள்’ என்ற மகிழ்ச்சியூட்டும் செய்தியை கிமு எட்டாம் நூற்றாண்டில் அசீரிய நாட்டின் ஆதிக்கத்தின்கீழ் துவண்டு கிடந்த இஸ்ராயேல் மக்களுக்கு இறைவன் எசாயா இறைவாக்கினர்  வழியாகக் கூறுகின்றார். இன்றைய இரண்டாம் வாசகம் வழியாக இங்கே குறிப்பிடப்படுவது, பின்னர் வரவிருந்த அரசன் எசேக்கியாவைப் பற்றிதான் என்றாலும், இயேசுவின் பிறப்பை முன்னுணர்த்துவதாகவும் நாம் இதைப் பார்க்கலாம். அந்த அரசனைப் பற்றி சொல்லப்படுகின்ற அடைமொழிகளான, ‘வியத்தகு ஆலோசகர், வலிமைமிகு இறைவன், என்றுமுள தந்தை, அமைதியின் அரசர்’ என்பவை இயேசுவுக்கும் பொருந்துவனவாக அமைந்துள்ளன. எசேக்கியா அரசர் வழியாக இருளின் பிடியில் இருந்த இஸ்ராயேல் மக்கள் மீது கருணை கூர்ந்து மீண்டும் புது வாழ்வை இறைவன் தந்தது வரலாற்று உண்மை. மாபரன் இயேசுவின் பிறப்பு, பாவம் என்னும் இருளில் சிக்கித் தவித்த  உலகின் எல்லா மக்களுக்கும் மீட்பளிக்கும் நற்செய்தியாக அமைகிறது.

கீழிறங்கி வரும் இறைவன்

நம்மை மீட்க வந்த இறைவன் நம் மனித இயல்பை ஏற்றுக் கொண்டார். இயேசுவின் பிறப்பு நிகழ்ச்சி, இறைவனை நம்மை மீட்க எப்படிப்பட்ட நிலைக்கு தன்னைத் தாழ்த்திக் கொண்டார் என்பதை விளக்குகின்றது. ‘அவர்களுக்கு விடுதியில் இடமில்லை’ என்ற விவிலிய வார்த்தைகள் நமது மனித அன்புக்கு சவாலாகவும், கடவுள் நம்மீது கொண்ட நிறை அன்பின் அடையாளமாகவும் உள்ளன. இரவு நேரம், கடும் குளிர், பேறுகாலம் நெருங்கிய மனைவியோடு தஞ்சம் கேட்டு யோசேப்பு ஒவ்வொரு வீடாக கதவைத் தட்டுகின்றார். அக்காலத்தில் அந்நியருக்கும், வழிப்போக்கருக்கும் விருந்தோம்பல் அளிப்பதைக் கடமையாகக் கொண்டிருந்த  யூத மக்கள், அவர்களுக்கு இடம் தர மறுக்கின்றனர். பேறுகால வேதனையில் துடிக்கின்றவருக்குக்கூட இரங்காத மனம் படைத்தவர்கள். ஆனால் இயேசுவை வரவேற்று அரவணைத்து, இதமான வெப்பத்தைக் கொடுத்து காப்பாற்றுகின்றன மற்ற உயிரினங்கள். இஸ்ராயேலின் அரசராகிய இயேசுவை அவருடைய மக்கள் அறியாமையினால் வரவேற்கவில்லை. ஆனால் அப்படிப்பட்ட இரவில்தான் கடவுளின் தூய அன்பு அவர்கள் மேல் ஒளிர்கின்றது. கடவுள் ஏன் இந்த அளவுக்கு தன்  உன்னத நிலையிலிருந்து வரவேண்டும்? நம்மீதான அவரது அன்பு தான் காரணம். நம்மோடு நம்மைப் போன்றே பாவம் தவிர்த்து வாழ்ந்த  ஏசுவைக் காண  நாமும் நம் தற்பெருமை,  ஆணவம், சுயநலம் போன்ற பாவநிலையிலிருந்து கீழிறங்கி வரவேண்டும். இன்னும் பெத்லகேமில் இயேசு பிறந்த இடத்தில் கட்டப்பட்டுள்ள ஆலயத்தின் நுழைவாயில் கதவு நான்கே அடி உரயம் கொண்டதுதான். உள்ளே செல்பவர்கள் குனிந்துதான் செல்லவேண்டும். அதுவும் உள்ளே சென்று குழந்தை இயேசு பிறந்த குகை போன்ற இடத்தைப் பார்க்க வேண்டுமெனில் முழந்தாள்படியிட்டு குனிந்துதான் பார்க்க வேண்டும். இது எதைக் குறிக்கின்றது  என்றால், நாமும் இயேசுவைப் போன்று தாழ்ச்சியில் மிளிர வேண்டும். கடவுள் தற்பெருமையை, அகங்காரத்தை வெறுக்கின்றார். நம்மை மீட்க  கீழிறங்கி  வந்த  அவர், தடிகளோடும், கத்திகளோடும் வரவில்லை. மாறாக தாழ்ச்சியோடு வந்தார். இருளை இருளால் விரட்ட முடியாது. அது  ஒளியால்தான் முடியும். பாவ இருளை அகற்ற ஒளியாக வந்த இறைவன் தனது வல்லமையை அதிசயங்களால் வெளிப்படுத்தவில்லை. மாறாக, அமைதியான, வன்முறை தெரியாத ஒரு குழந்தையின் நிலையை ஏற்றுக் கொண்டு வெளிப்படுத்தினார். இப்படிப்பட்ட ஒரு நிலையிலிருந்துதான் இன்று நம்மையும் அவரைப் போன்று ஒரு வளர்ந்த அன்பு நிலையில் வாழ அழைக்கின்றார் இயேசு.

நம் இதயக் கதவைத் தட்டுகிறார் இயேசு

யோசேப்பு போன்று இன்று இயேசு நம் இதயக் கதவுகளைத் தட்டுகின்றார். ‘நான் கதவருகில் நின்று தட்டிக்கொண்டிருக்கின்றேன். யாராவது என் குரலைக் கேட்டு கதவைத் திறந்தால் நான் உள்ளே சென்று அவர்களோடு உணவு அருந்துவேன். அவர்களும் என்னோடு உணவு அருந்துவர்’ (திவெ.3 : 20). ஒவ்வொரு கிறிஸ்து பிறப்பு விழாவும் கிறிஸ்து நமக்கு விடுக்கும் அழைப்பு இதுதான். இந்த ஆண்டும் கிறிஸ்மஸ் வழியாக நம் இதயக் கதவுகளைத் தட்டுகின்றார் இயேசு. எசாயா காலத்து மக்களைப் போன்று இன்றைய நம் சமுதாய மக்களும் காரிருளில்தான் நடக்கின்றனர். ஏழைகள், ஒடுக்கப்பட்டோர், அரசின் அதேச்சதிகாரம், கருவறையிலேயே  பாதுகாப்பில்லாத  குழந்தைகள். வறுமை, உணவில்லா, உறைவிடமில்லா நிலையை அனுபவிக்கும் குழந்தைகள், ஆகிய இருள் மேகங்களின் நடுவே வாழ்கிற மக்கள் நிரம்பிய சமூகம் நம் சமூகம்.

சில நாட்களுக்குமுன் மும்பையில் ஒரு சாதாரண குடும்பத் தம்பதியருக்குக் குழந்தை பிறந்தது. பிறந்தவுடன் குழந்தைக்கு சுகவீனம்.  உடனே ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். ஆனால்  குழந்தையை அனுமதிக்க மறுக்கின்றனர். ஏனெனில் அவர்களிடம் பழைய செல்லாத ரூபாய் நோட்டுக்கள்தான் இருந்தன. நிர்வாகத்தோடு போராடினர், வாக்குவாதம் செய்தனர். இந்த நிலையில் குழந்தை இறந்து போகிறது. மனித உயிருக்கு மதிப்பில்லா சமூகம் நம் சமூகம். நாம் இன்னும் காரிருளில்தானே உள்ளோம்? இந்த நிலையில்தான் நம் இதயக் கதவுகளைத் தட்டுகிறார். நாம் இயேசுவுக்கு இடம் கொடுப்போமா?

இயேசுவின் அழைப்பை ஏற்போமா?

உலகினை மீட்க பெத்லகேமைத் தேர்ந்தெடுத்த இறைவன், மனித நிலையை ஏற்று கீழிறங்கி வந்த இறைவன், ஏழைகளோடு ஏழையாக வாழ்ந்த இறைவன், தன் உயிரைக் கொடுத்து நம்மை மீட்ட இறைவன், இன்னும் நம்மைக் கைவிடவில்லை, நம்மோடுதான் இருக்கின்றார் என்பதை, அவரது மக்களாகிய நம் வழியாக பிறருக்கு ஒளியாக இருக்க விரும்புகிறார் என்பதை ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்மஸ் நமக்கு நினைவுபடுத்துகின்றது. தனது அன்பை நமக்கு, இயேசுவில் முழுமையாக வெளிப்படுத்திய இறைவன், நமது அன்பை பதிலாக எதிர்பார்க்கின்றார் இறைவன்.

மனிதனுக்குக் கடினமானது மனிதனாக இருப்பதுதான் என்கிறார் கவிக்கோ அப்துல் ரகுமான். உண்மையான முழு மனிதனாக எப்படி வாழ வேண்டும், வாழ முடியும் என்று அழைக்கின்றது. இவ்வழைப்பை மகிழ்ச்சியோடு ஏற்போமா?

பணிவு என்னும் இனிய பாதை

பணிவு என்னும் இனிய பாதை

மிக மோசமான வார்த்தை நான்
.
 அருள்பணி. மகுழன், 
பூண்டி மாதா தியாள மையம்

குருத்துவ வெள்ளி விழா காணும் இரண்டு குருக்களின் வாழ்வை உங்கள்முன் வைக்கிறேன். யாருக்கு பணிவு இருக்கிறது என்று சொல்லுங்கள் பார்ப்போம். 

குரு 1 : 

என் குருத்துவ வாழ்வில் அர்த்தம் இல்லை. என் மக்கள் என்னை புரிந்து கொள்ளவுமில்லை. ஒவ்வொரு பங்கிலும் பலவிதமான பிரச்சனைகளை சந்தித்துவிட்டேன். அதற்கு பலக் காரணங்கள் உண்டு. இந்தப் பகுதி மக்கள் இப்படிதான் நடந்து கொள்வார்கள். என் பங்கில் எனக்கு உதவி செய்வதற்கு நம்பிக்கையான நபர்கள் இல்லை. எனக்கு முன்னால் இருந்த குருக்கள் தவறுகள் செய்ததால் நான் பாதிக்கப்பட்டிருக்கிறேன். எனவே நிம்மதி இல்லை.

குரு 2 :

கடந்த 25 ஆண்டுகளாக நான் நிறைவான குருத்துவ வாழ்வு வாழ்ந்து வந்துள்ளேன். என்னை மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். என் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு தருகிறார்கள். மக்கள் கேட்டபோதெல்லாம் பணத்தை அள்ளிக் கொடுத்தார்கள். என் மக்கள் என்னை மதிக்கிறார்கள். அன்பு செய்கிறார்கள்.

இந்த இண்டு குருக்களிடையே யாரிடம் பணிவு இருக்கிறது என்று சொல்ல முடியுமா? என் கருத்துபடி இந்த இரண்டு குருக்களிடமும் பணிவு இல்லை. அவர்கள் சிந்தனையில், சொற்களில், செயல்பாடுகளில் “நான்”, “என்”, “என்னை”, “எனக்கு” போன்ற தன்னல வார்த்தைகள்தான் அதிகம் தென்படுகின்றன. குருத்துவ வாழ்வை பணிவாழ்வு என்று அழைக்கிறோம். ஏனென்றால் குருத்துவ வாழ்வு  குருக்களை சார்ந்த  வாழ்வு அல்ல. அது மக்களை சார்ந்த வாழ்வு. இந்த  இரண்டு  குருக்களிடத்திலும் அவர்களை சார்ந்த வாழ்வுதான் மிகுந்திருக்கிறதே தவிர மக்களை சார்ந்த வாழ்வு இல்லை.

சரிங்க, இந்த உலகத்தில் மிகச் சிறந்த மூன்று வார்த்தைகள் கொண்ட வாக்கியம் எது? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும். “ஐ  லவ்  யு”  என்று நினைக்கிறீர்கள். அதுதான் இல்லை. இந்த உலகில் மிகச் சிறந்த மூன்று வார்த்தைகள் கொண்ட வாக்கியம் “உங்கள் கருத்து என்ன?” இந்த  உலகில் மிகச் சிறந்த இரண்டு வார்த்தைகள் கொண்ட வாக்கியம் எது? “மிஸ் யு” என்று நினைக்கிறீர்கள். இதுதான் இல்லை. இந்த  உலகில் மிகச் சிறந்த இரண்டு வார்த்தைகள் கொண்ட வாக்கியம் “தவறு செய்துவிட்டேன்”. இந்த  உலகில் மிகச் சிறந்த வார்த்தை நாம். இந்த  உலகில் மிக மோசமான வார்த்தை நான்.

அமெரிக்காவின் மொழி எது என்பதை தீர்மானிப்பதற்காக அமெரிக்க மக்கள் மன்றத்தில் வாக்கெடுப்பு நடந்தது. ஜெர்மானிய மொழியையும், ஆங்கில மொழியையும் வைத்துக்கொள்ளலாம் என்று பெரும்பாலானோர் கருத்து தெரிவித்தனர். இறுதிப் போட்டியில் ஆங்கில மொழியானது ஒரு ஓட்டில் ஜெர்மானிய மொழியை வென்றது. ஆங்கில மொழி இருப்பதால்தான் இன்று அமெரிக்கா முதல் நாடாக விளங்குகிறது. ஒவ்வொரு கரத்திற்கும் உள்ள மகத்தான வல்லமையைத்தான் இது காட்டுகிறது. நான் முடிவு எடுப்பதில் வல்லவன். என் தீர்ப்பு சரியாக இருக்கும் என்று ஒருபோதும் சொல்லாதீர்கள். நம்மில் பலர் வாழ்வில் 50% அதிகமாக தவறான தீர்ப்புகளையே எடுக்கிறோம் என்று அறிவியல் கூறுகிறது.
என் தனிப்பட்ட வாழ்வில்கூட என் தீர்ப்புகள் எவ்வளவு தூரம் தவறாக இருக்கிறது என்று எண்ணி வியந்திருக்கிறேன். ஒருமுறை என் கையில் இலேசாக அரிப்பு ஏற்பட்டது. அரிப்பிற்கான காரணங்கள் என்ன இருக்கலாம்? என்று வலைதளத்தில் தேடினேன். யயிலிலிd ளீழிஐஉer ஆகவும் இருக்கலாம் என்று வந்தது. அன்று இரவு முழுவதும் எனக்கு Blood Cancer வந்துவிட்டது என்றுதான் எண்ணிக் கொண்டிருந்தேன்.

ஒரு நல்ல பங்குத்தந்தைக்கு சிறந்த அடையாளம் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளகூடிய அமைப்புகளை ஏற்படுத்துவது. பங்குப் பேரவை, அன்பியங்கள் போன்ற பங்கேற்பு அமைப்புகள் பங்குத்தந்தையின் செயல்பாடுகளை மக்கள் ஏற்றுக்கொள்ளவும், மக்களின் கருத்துக்களை பங்குத்தந்தை அறிந்துகொள்ளவும் சிறந்த வழிகளாகும். எனக்குத் தெரிந்த ஒரு அருள்தந்தை உண்டு. அவர் நல்லவர். மக்களுக்காக தன் சொந்த பணத்தை செலவழிக்க தயங்காதவர். ஆனால் மக்கள்; அவரின் சேவையை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனென்றால் அவர் எடுத்த முடிவுகளாகும். மக்களின் கருத்திற்கு அவர் மதிப்புக் கொடுக்கவில்லை. குடும்பத்தில், சமூகத்தில், நட்பில், ஊரில்  உங்கள் கருத்து என்ன? என்று தினமும் ஒருமுறையாவது கேட்டுப் பாருங்கள். உங்கள் உறவுகள் சிறக்கும்.

என் கருத்து என்ன? என்று பதிவு செய்வதில் ஆர்வம் காட்டாமல், உங்கள் கருத்து என்ன? என்று கேட்டு வாழ்ந்தால் வாழ்க்கைப் பயணத்தில் இனிமை கூடும்.

(தொடரும்)

Ads Inside Post