Pages - Menu

Saturday 3 March 2018

புகுமுக அருள் அடையாளங்கள்...

புகுமுக அருள் அடையாளங்கள்...

-அருள்பணி. எஸ். அருள்சாமி, 
பெத்தானியா இல்லம், கும்பகோணம்

இயேசுகிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பு ஆகியவையை அடங்கிய பாஸ்கா மறைபொருளில் பங்குபெறத் தொடங்குவதின் வழியாக ஒருவர் கிறிஸ்வராகுகிறார். இவ்வாறு தொடங்கிவைக்கப்படுவது புகுமுகம் (Initiation) என்று அழைக்கப்படுகிறது. தமிழர் மரபில் இது தீட்சை (Diksa) எனப்படுகிறது.

 1. புகுமுகம் என்பதின் பொருள்

புகுமுகம் செய்தல் என்று பொருளுடைய ஆங்கிலச் சொல் ‘இனிஸியே­ன்’ Initiation) என்பதற்கு தொடங்குதல் (Commence) உள் இட்டுச் செல்லுதல் (Introduce) தொடங்கிவைத்தல் (Inaugurate) என்றும், நிறைவு செய்தல் ( Perfect) அல்லது நிறைவுக்கு இட்டுச் செல்லுதல் (Lead to perfection) என்றும் இருவகைப்பட்ட பொருள் உண்டு. தொடங்குதல் என்ற பொருளில் இவ்வினைச் சொல் ‘மூவேயின்’ (Muein) என்ற கிரேக்க சொல்லையும், நிறைவு செய்தல் என்ற பொருளில் ‘தேலேயின்’ (Telein) என்ற கிரேக்கச் சொல்லையும்  மொழிபெயர்கின்றன. மறைபொருள்களில் நுழைந்து அவற்றில் பங்குபெற்று அனுபவிப்பதின் வழியாக ஒருவர் நிறைவடைகிறார். ஆகவே இவ்விரு கிரேக்க சொற்களும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. இக்கருத்துக்கள் அனைத்தையும் தொகுத்து புகுமுகம் என்ற சொல்லாகப் பயன்படுத்தப் படுகிறது. இவை அனைத்தையும் ஒருங்கி ணைத்து தமிழில் தீட்சை என்று குறிப்பிடலாம். கிறிஸ்தவ சமயத்தில் இதை கிறிஸ்தவ தீட்சை என்பது சரியாக இருக்கும்.

2. கிறிஸ்தவ வாழ்வைத் தொடங்கி வைக்கும் அருளடை யாளங்கள்

இன்று நம்மிடையே வழக்கில் இருக்கும் திருமுழுக்கு, உறுதிபூசுதல், நற்கருணை என்னும் மூன்றும் கிறிஸ்தவ வாழ்வைத் தொடங்கிவைக்கும் அருளடையாளங்கள் என்று அழைக்கப்படுகின்றன. தொடக்கக் காலத் திரு அவையில் இவை கிறிஸ்தவ புகுமுகம் (தீட்சை) (Christian Initiation) அல்லது வெறுமனே புகுமுகம் (தீட்சை) (Initiation)  என்று அழைக் கப்பட்டன. ஏனெனில் இவை யாவும் ஒரே நிகழ்ச்சியாக, ஆனால் பல படிகளில் அமைக்கப்பட்டு கொண்டாடப் பட்டன. திருமுழுக்கிலிருந்து பிரிக்கப்படாமல் உறுதிபூசுதல் வழியாக நற்கருணை வரை நகரும் ஒரே இயக்கமாக்க இது கருதப்பட்டது என ஜான் மரி என்னும், திருவழிபாட்டு வல்லுநர் குறிப்பிடுகிறார். நாளடைவில்தான் இச்சடங்கு முறையில் இருந்த ஒவ்வொரு படியும் முறையே திருமுழுக்கு, உறுதிபூசுதல், நற்கருணை என்று அழைக்கப்பட்டது. ஒவ்வொரு சடங்கும் கிறிஸ்தவ வாழ்வை நோக்கியதாக இருப்பதால் பிளவுபட்ட இம்மூன்று சடங்குகளும் கிறிஸ்தவ வாழ்வுக்கடுத்த அருளடை யாளங்கள் அல்லது கிறிஸ்தவ  புகுமுகத்திற்கடுத்த அருளடையாளங்கள் (Sacraments of Christian Initiation) என அழைக்கப்படுகின்றன.

ஆனால் இம்மூன்று அருள் அடையாளங்க ளிடையே நெருக்கமான தொடர்பு உண்டு. இது பற்றி கூறும் போது “திருமுழுக்குத் தொடங்குவதை, நற்கருணை நிறைவுச் செய்கிறது. இதுவே கிறிஸ்தவ வாழ்வுக்கும் நிறைவைக் கொணர்கின்றது. திருமுழுக்கு, உறுதிபூசுதல் ஆகிய அருளடையாளங்களின் நோக்கம் நற்கருணைக்குத் தயார் செய்வதே என்று சொல்லலாம். இதில் மட்டுமே நாம் கிறிஸ்துவோடும், அவர் வழியாகத் தந்தையோடும் கொண்டுள்ள கூட்டுறவு நிறைவெய்துகின்றது” என்று சார்லஸ் டேவிஸ் என்னும் இறையியல் வல்லுநர் குறிப்பிடுகிறார்.  (The Making of Christian 1966, p.145).

  திருத்தந்தை ஆறாம்பால் இதையே இன்னும் தெளிவாக விவரித்துள்ளார். “கிறிஸ்துவின் அருள் வழியாக நாம் இறையியபில் பெரும் பங்கானது, மனித பிறப்பு, வளர்ச்சி, உணவூட்டம் போன்ற வாழ்க்கைக் கட்டங்களோடு தொடர்புடையது. திருமுழுக்கில் நம்பிக்கையாளர் மறுபடியும் பிறக்கின்றார்கள். உறுதிபூசுதல் என்னும் அருளடையாளத்தால் புது வாழ்வில் உறுதிபடுத்தப்படுகின்றார்கள். இறுதியாக நற்கருணை உணவால் பேணிக் காக்கப் படுகின் றார்கள். கிறிஸ்தவ தீட்சக்கடுத்த இவ்வருள் அடையாளங்கள் வழியாக நம்பிக்கையாளர்கள் இறைவாழ்வின் வளர்ச்சியைப் பெறுகின்றார்கள். அன்பின் நிறைவை நோக்கி முன்னேறுகின்றார்கள்” (உறுதிபூசுதல் அருளடையாளம் பற்றிய திருத்தூது அமைப்பு விதி தொகுப்பு (Apostolic Constitution) 

3.புகுமுக அருளடையாளங்களின் கொண்டாட் டத்தில் சீர்குலைவு

நாளடைவில் கிறிஸ்தவ புகுமுக அருளடையாளங் களில் அமைப்பு முறையிலும், கொண்டாடும் விதத்திலும் சீர்குலையத் தொடங்கியது.

3.1. பிளவுபட்ட கொண்டாட்டம்

திருஅவையின் தொடக்கத்தில் வயதுவந்தவர் கள்தான் (Adults) கிறிஸ்தவ மறையைத் தழுவினார்கள். நீண்டகால (மூன்று ஆண்டுகள்) தயாரிப்புக்குப் பின் திருமுழுக்கு அளிக்க இருக்கும் தவக்காலத்தில் உடனடியான தயாரிப்பு இடம் பெறும். அதன்பின் பாஸ்கா  திருவிழிப்பின் போது இவர்களுக்குப் புகுமுக அருளடையாளங்கள் மூன்று அளிக்கப்படும். கொண்டாட்டின் போது  திருத்தொண்டர், அருள்பணி யாளரோடு மறைமாவட்ட ஆயரும் இருப்பார். புகுமுகத்தின் இரண்டாவது படியாகிய உறுதிபூசுதலை ஆயர் கொடுப்பார். 

ஆனால் தொடக்க திருஅவை காலத்தில் கிறிஸ்தவ மறையைத் தழுவியர்களின் எண்ணிக்கை மிக விரைவாக அதிகரித்தது. அதனால் நம்பிக்கையாளர் களின் குழுமமும் பலவாகின. இதற்கு ஏற்றாற்போல் ஆயர்களின் எண்ணிக்கை (மறைமாவட்டங்கள்) அதிகரிக்கவில்லை. அதனால் பாஸ்கா திருவிழிப்பின் போது ஒவ்வொரு இடத்து திருஅவையில் புகுமுக கொண்டாட்டம் இடம் பெற்றபோது எல்லா இடத்து திருஅவைகளுக்கும் ஆயர் வர முடியாத சூழ்நிலை உருவாக்கிற்று. அதனால் திருமுழுக்குச் சடங்குக்குப் பின் உறுதிபூசுதல் சடங்கு ஆயருக்கே உரியதாகையால், அது ஒத்தி வைக்கப்பட்டது. 

இத்தகைய பிளவுக்கு இன்னுமொரு காரண மும் உண்டு. தொடக்கத் திருஅவையில் நம்பிக்கை யாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் கிறிஸ்தவ குடும்பங்களும் அதிகரித்தன. அக்குடும்பங் களில் பிறந்த குழந்தைகளுக்குத் திருமுழுக்கு கொடுக்கும் பழக்கமும் பரவலாயிற்று. இந்த நிகழ்ச்சியும் பாஸ்கா திருவிழிப்பின் போது இடம் பெற்றதால் குழந்தைகளுக்குப்  புகுமுகத்தின் முதல்படி நிலையாகிய திருமுழுக்கு மட்டும் கொடுக்கப்பட்டது. மற்ற இருபடி நிலைகளும் (உறுதிபூசுதல், நற்கருணை) ஒத்திவைக்கப்பட்டன. இவ்வாறு புகுமுகத்தின் மூன்று படிநிலைகளும் பிளவுபட்டு போயின.

 3.2. புகுமுகத்தின் முரணான கொண்டாட்டம்

புகுமுக அருளடையாளக் கொண்டாட்ட த்தில் மற்றொரு சீர்குலைவும் தோன்றியது. அதாவது, திருமுழுக்கு, உறுதிபூசுதல், நற்கருணை என்ற வரிசை மாற்றப்பட்டு திருமுழுக்கு, நற்கருணை, உறுதிப்பூசுதல் என்ற வரிசை பெருவாரியாகப் பழக்கத்திற்கு வந்தது. இதற்கு இரு காரணங்கள் உள்ளன.

புகுமுக சடங்கின் இரண்டாவது படிநிலையாகிய உறுதிபூசுதல் பற்றி திருஅவை வரலாற்றின் இடைக் காலத்தில் உருவான ஓர் இறையியல் சிந்தனை முதல் காரணம். இச்சிந்தனைபடி உறுதிபூசுதல் பக்குவமடைந்த வர்களுக்குக் கொடுக்கப்படும் அருளடையாளம். அதாவது வயது முதிர்ச்சியின் தொடக்கக் காலத்தில் (At the age of puberty)

  ஒரு நம்பிக்கையாளர் பக்குவமடைகிறார், பொறுப்பு ணர்வுடன் தன்னை இறைவனுக்கு அர்ப்பணிக் கிறார் என்பதாகும். உறுதிபூசுதல் திருஅவையில் திருத்தூது பணிக்கு (Apostolic ministry) ஒருவரைத் தகுதியாக்குகிறது என்ற தவறுதலான ஒரு சிந்தனை. இதனால் குழந்தைகளுக்குத் திருமுழுக்கு கொடுத்தபோது உறுதிபூசுதல் சடங்கு முதிர்ச்சி வயதுகென விடப்பட்டது.

அதே வேளையில் புத்தி விவரம் அடைந்த சிறுவர்களுக்கு (அதாவது ஆறு வயதையடைந்த சிறுவர்களுக்கு) நற்கருணை வழங்கலாம் என்ற நான்காவது லாத்தரன் சங்கத்தின் (1215) போதகம் உறுதிபூசுதலுக்கு முன் சிறுவர்களுக்கு முதல் நற்கருணை (First communion) வழங்குவதற்கு வழிகோலியதோடு அல்லாமல், புகுமுக அருளடையா ளங்களின் வரிசை முறையை மாற்றியது. இத்தகைய புதிய பழக்கம் திருத்தந்தை பத்தாம் பயஸின் போதகத்தால் (Quam Singular 1910) நிலை நாட்டப்பட்டது.

இவ்வாறு படிநிலைகளில் உருவாக்கப்பட்ட புகுமுக அருளடையாளங்களின் வரிசை முன்னுக்கு முரணாக்கப்பட்டது. இத்தகைய முரண்பட்ட, மாறுபட்டக் கொண்டாட்டங்களை இன்றும் கூட நாம் பார்க்க முடிகிறது.

 3.3. ஆயத்த நிலையில் சீர்கேடு

நாம் மேலே குறிப்பிட்ட சீர்குலைவுகள் திருமுழுக்குக்காக பயன்பாட்டில் இருந்த கிறிஸ்தவ புகுநிலையில் (Catechemunate) குறைபாட்டிற்கு வழிவகுத்தது. தொடக்கத் திருஅவையில் திருமுழுக்குக் காக தயாரிப்பு என்ற ஒருநிலை இருந்தது. இது சில சமயங்களில் மூன்று ஆண்டுகள் கால அளவைக்கு நீடித்தது. நாளடைவில் வயது வந்து (Adults) கிறிஸ்தவ சமயத்தைத் தழுவியவர்களுக்கும், தொடக்கக் கால கிறிஸ்தவ  பெற்றோர்களுடைய குழந்தைகளுக்கும் ஒரே நேரத்தில் ஒரே சடங்கு முறையில் திருமுழுக்குக் கொடுக்கப்பட்டதால் இந்த தயாரிப்புக் காலம் சாத்தியமற்றதாகவும் பொருளற்றும் போய் விட்டது. மூன்றாண்டுகள் கால அளவு குறுக்கப்பட்டு தவக்காலத்தில் தயாரிப்பாகவும், அடுத்து அது தவக்காலத்தில் கடைசி மூன்று வாரங்களுக்கு சுருக்கப்பட்டு, இறுதியில் முழுவதுமே கைவிடப்பட்டது.

இந்த சீர் கேட்டிற்கு மற்றொரு காரணமும் உண்டு. பொதுவாக கிறிஸ்தவ சமயத்தை தழுவ முன் வந்தவர்களுக்கு விவிலிய போதகம், ஒழுக்க நெறி அறிவுறுத்துதல், கோட்பாட்டு விளக்கங்கள் (Scriptural, moral, doctrinal, catechesis)  கொடுக்கப் பட்டன. கிறிஸ்தவ யுகம் (Christian era) என்று சொல்லப்பட்ட காலத்தில் பிற சமயங்களின் தாக்கத்திற்கும், ஒழுக்க கேட்டிற்கும் இடமில்லை என்று கருதப்பட்டதால், திருமுழுக்குக்குரிய தயாரிப்பு நீண்ட காலத்திற்கு இடம் பெறாவிட்டாலும் பாதகமில்லை என்ற ஒரு மனபாங்கு பரவலாக இருந்தது.

  கிறிஸ்தவ யுகம் என்னும் கொன்ஸ்டான்டின் பேரரசர் காலத்தில் குழந்தைகளுக்குத் திருமுழுக்கு கொடுப்பதே பொதுவான பழக்கமாக இருந்தது. அவ்வப்போது சில வயதுவந்தவர்கள் (Adults) கிறிஸ்தவ மறையைத் தழுவிய போது அவர்களுக்குத் திருமுழுக்கு கொடுக்கும் போதும் குழந்தைகளுக்கான திருமுழுக்கு சடங்குமுறையே கையாளப்பட்டது. இத்திருமுழுக்கு களுக்கான தயாரிப்பு பற்றி திருஅவை எவ்வித திட்டமும் வகுக்கவில்லை. கிறிஸ்தவ ஒழுக்கத்திலும் நம்பிக்கை யிலும் குழந்தைகளை வளர்ப்பது பெற்றோர்கள் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டது.

குழந்தைகளால் நம்பிக்கை அறிக்கை செய்யமுடியாததால் திருமுழுக்குத் தயாரிப்பவர்களின் நம்பிக்கையைப்  பரிசோதிக்கும் நிகழ்வுகளும் (Scrutinies) ஒழுக்க முறையையும் மறைகோட்பாடுகளையும் போதிப்பதும் கைவிடப்பட்டன. நற்செய்தி போதகம் நய்செய்தி நூலை அடையாள முறையில் கொடுப்பதிலும் அடங்கியது. 

திருமுழுக்கின் போது கிறிஸ்தவ குழுமத்தின் ஈடுபாடு குறைந்தது. திருமுழுக்கு கொடுப்பது அருள்பணியாளரின் செயலாக மாறியது.  பயனாக திருப்பலி முடிந்து தனியாக பெற்றோர்கள் ஞான பெற்றோர்கள் முன்னிலையில் நடைபெறும் ஒரு நிகழ்வாக மாறியது.

இவ்வாறு கிறிஸ்தவ புகுமுக அருளடையாளங் களில் சீர்குலைவு  அன்று முதல் இரண்டாவது வத்திக்கான் பொதுசங்கம் வரை நீடித்து வந்துள்ளது. வெறும் சடங்குகளின் செயல்பாடாக இந்த அருள் அடையாளங்களின் கொண்டாட்டம் நடந்தனவே தவிர பொருள் உள்ள விதத்திலும் பயன் உள்ள முறையிலும் கொண்டாடப்படவில்லை.

இந்த சூழலில் வத்திக்கான் சங்கம் சில சீர்திருத்தங்களைக் கொணர்ந்தது. அடுத்த சிந்தனையில் அவை என்னவென்றும், எவ்வாறு செயலாக்கத்தில் நடைபெறுகின்றன என்றும் விளக்கம் காண்போம். 
 - தொடரும்...

வீரமாமுனிவர் அருளிய திருக்காவலூர்க் கலம்பகம் இன்றைய தமிழில்

வீரமாமுனிவர் அருளிய திருக்காவலூர்க் கலம்பகம் 
இன்றைய தமிழில்
 அருட்பணி. சலுசா
பாடல் எண் : 49

திருப்பாத மலரழகு
பொன்னி நதி பூரித்து விளையாடி ஒலி எழுப்பி
எண்ணிலா சோலைகள் எங்கும் நிறைந்திருக்கும்.
தன்னிகரில்லா சோழவள நாட்டுச்
சென்னி சூடும் சிறப்பு மலர் ஆத்தி.

ஆத்தி மலர்கள் அழகோடு சரம் தொடுக்கும்
அகில மரங்கள் நறுமணப் புகை எழுப்பும்
நிழல் தரு காவலூர் திறமுடன் சேர்ந்து
குளிர் தரு அருட்காவல் குவலயம் தந்தனள்.

தன்வினைத் தானறிந்து தன் குற்றம் நீங்கிட
வெண்மதி வலிய வந்து வான் அரசி தாங்கினள்.
இளைய நிலா ஏந்துகின்ற ஈடிலாத் திருவடிகள்
நிலையில்லா பாவி நான்தலை தாங்கத் தாராயோ.

ஒளிபொழி திருவடி தரிசனம் கண்டாலே
இருளில்லா பெறுவாழ்வு நிறையின்பம் கிடைத்திடுமே.
பாரில் விளக்கேற்றி பகலாக்கிய பாவையே
நேரில் விண்ணகத்தை கொண்டு வந்த செல்வியே.

உன் பாதமலர் அழகு வான்வீட்டின் பேரழகு
அன்னை அடைக்கலமே அளித்திடுவாய் அம் மகிழ்ச்சி.

                                    வஞ்சிப்பா
சீர்விளங்கிய செல்வியாய்ப்
பார்விளக்கிய பாவையே
தென்காவிரி திரண்டொலிப்ப
மன்காவிரி மலர்கமழப்
பூந்தாதகி மலர்கமழப்
பூந்ததாகி புடைநிழற்றத்
தீந்தாதகில் சினைகுளிர்ப்ப
வருட்காவலூ ரமைந்தளிப்பத்
திருக்காவலூர்ச் சேர்ந்தனளே
சேர்ந்தபின்
நானே பூண்பழி நைய வெண்மதி
தானே பூணபதந் தான்றா ராளோ
திருவடி யயாளிவுளந் தெளிவுறக் கண்டாற்
கருவடி யிருளறக் கண்டு
 மருவடி மலரடி வான்கதி யந்தமே.

மன்னிப்பின் மாண்பாளரே உயிர்ப்பின் பங்காளிகள்

மன்னிப்பின் மாண்பாளரே உயிர்ப்பின் பங்காளிகள்
அருள்பணி. அ. பிரான்சிஸ், பாபநாசம்

சாக்ரடீஸ் - இவரே  உலகின் முதல் மெய்யியல் ஞானி. புதிய சிந்தனையினால் மக்களைக் குழப்பி வருகிறார் எனக் குற்றம் சாட்டப்பட்டு கொலைக்களத்தில் நிறுத்தப்பட்டுள்ளார். யஹம்லாக் என்ற உயிர்க் கொல்லி இவருக்குத் தரப்படுகிறது. இந்த வி­க் குப்பியை தந்தவரிடம் ‘நலமோடு வாழ்வாயாக’ என்று வாழ்த்தி அதனை அருந்தி உயிர் துறக்கின்றார்.

 இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்...

இந்திய புராணங்கள் தீயோராகிய அரக்கர்களை அழிப்பதற்காக உலகில் கடவுள் பல அவதாரங்கள் எடுத்ததாகக் கூறுகின்றன. ஆனால் தீயவர்களை அல்ல தீமைகளை மட்டுமே அழிக்க, உலகில் நம்முள் ஒருவராக நம்மை போல் பிறந்து, பாடுகள் அனுபவித்து, சிலுவையில் உயிர் விட்டவரே நம் தலைவர் இயேசு. கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்ற பழைய சட்டத்தை மாற்றி பகைவரிடம் அன்பு. துன்புறுத்துவோருக்காகச் செபம் என்ற புதிய அறநெறியை வாழ்க்கையில் செயல்படுத்த அழைக்கின்றார் நம் இயேசு.

அனைவரையும் அன்பு செய்யக் கற்றுக் கொண்டால், எதிரி பகைவரே இல்லா தொழிவர். மற்றவர்கள் போதுமென்று  சொல்லுமளவுக்கு அன்பு செய்ய வேண்டுமாம். மனமுதிர்ச்சி பெற்ற மனிதரை உருவாக்குவதே அனைவரையும் அன்பு செய்யும் வாழ்க்கை முறை. அன்பு வாழ்வே பிறரைத் திக்குமுக்காட வைக்கும். இதனையே 
இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால் 
என்ன பயத்ததோ சால்பு.  - திருக்குறள் 987

தமக்குத் துன்பம் செய்தவர்க்கும், அவர் அக்குற்றத்தை உணர்ந்து திருந்துமாறு நன்மைகளைச் செய்வதுவே சான்றோரின் பண்பு. அதாவது திகட்டும் அளவுக்கு அன்பு செய்தல் வேண்டும்.

 கடவுளின் வல்லமை:

சிலுவையே கிறிஸ்தவம். கிறிஸ்தவமே சிலுவை. இவையிரண்டுமே நாணயத்தின் இரு பக்கங்கள். தியாகம், வெற்றி, வீரம், நம்பிக்கை, விடுதலை, மீட்பு போன்ற அறநெறிச் சிந்தனையினை வழங்குவதே சிலுவை. சிலுவை பற்றிய செய்தி அழிந்து போகிறவர்களுக்கு மடமையே. ஆனால் மீட்புப் பெறும் நமக்கோ அது கடவுளின் வல்லமை  (1 கொரி 1:18).  தவக்காலம். இது நோன்புக் காலம். இறைவனின் கனிவையும், இரக்கத்தையும் உணரும் அருளின் காலம். சிலுவையைப் பற்றி அதிகமாகச் சிந்திக்கும் காலம். ‘தம் சிலுவையைச் சுமக்காமல் என்னைப் பின்பற்றி வருவோர் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர். தம் உயிரைக் காக்க விரும்புவோர் அதனை இழந்து விடுவர். என் பொருட்டுத் தம் உயிரை இழப்போரே அதைக் காத்துக் கொள்வர்’ (மத் 10:38-39). விண்ணகப் பேரின்ப வீட்டிற்கு இட்டுச் செல்லும் ஏணியாகத் திகழ்வதே திருச்சிலுவை.

 கட்டவிழ்த்துப் போக விடுங்கள்:

“ மரியாவோ நல்லப் பங்கைத் தேர்ந்து கொண்டாள்”(லூக் 10:39). இச்செயல் இத்தவக் காலத்தில் நாம் ஆண்டவரோடு செபத்தில் ஈடுபட வேண்டும் என்பதனைக் குறிக்கின்றது. இறைவனும் மனிதனும் சங்கமம் ஆகும் மையமே செபம். ஆழ்ந்த செபமே ஒரு மனிதன் தன் நிலையுணர்ந்து தீமைகளகற்றி அனைவரோடும் அன்புறவு கொண்டு வாழச் செய்யும். தன்னருகே அமர்ந்து தன்னோடு ஒன்றிருந்ததன்  காரணமாகவே ஆண்டவர் இயேசு மரியாவின் சகோதரர் இலாசர் மரித்து நான்கு நாளாகியும் அவரது சகோதர் இலாசர் மரித்து நான்கு நாளாகியும் அவரைக் கல்லறையினின்று உயிரோடு எழுப்புகின்றார்.

மரித்த இலாசர் உயிர் பெற்று விட்டார். ஆனால் அவரின் கால்களும், கைகளும் துணியால் சுற்றப்பட்டிருந்தன. முகத்தில் துணி சுற்றப்பட்டிருந்தது. “கட்டுகளை அவிழ்த்து அவனைப் போக விடுங்கள்”  என்று இயேசு அவர்களிடம் கூறுகின்றார் (யோவா 11:1-44). உயிர் பெற்றெழுந்தாலும் இலாசரைச் சுற்றியிருந்த கட்டுகள் சுதந்திரமாக நடமாட தடையாக இருந்தன.

இதே போன்றுதான் இயேசு தமது இரத்தம் சிந்தி நமக்கு மீட்பினை வழங்கி விட்டார். ஆம் அனைவரும் இயேசுவின் இரத்தத்தால் விலை கொடுத்து மீட்கப்பட்டுள்ளோம். எனவே நமது உடலால் கடவுளுக்குப் பெருமை சேர்க்க வேண்டும் (1 கொரி 6:20). நமது உடலின் இச்சைகள் நம்மைத் தனக்கு அடிமையாக்கி வைத்துள்ளன. தீமையின் கவர்ச்சி நன்மையானவற்றை மறைத்து விடுகிறது. அலைக் கழிக்கும் இச்சை மாசற்ற மனத்தைக் கெடுத்து விடுகிறது (சாஞா 4:12). நீ நல்லது செய்தால் உயர்வடைவாய் அல்லவா? ‘நீ நல்லது செய்யாவிட்டால் பாவம் உன்மேல் வேட்கை கொண்டு உன் வாயிலில் படுத்திருக்கும். நீ அதை அடக்கி ஆள வேண்டும்’ ( தொநூ 4:7).

பாவக்கட்டுகள் ஒரு மனிதனைச் சுயமாகச் செயல் படுவதிலிருந்து தடுத்து விடுகிறது. பாவத்திற்கு அடிமையாயிருப்பவன் பாவக்கட்டுக்களினால் கட்டுண்டு தனது சுயத்தன்மையினை இழந்து நிற்கின்றான். இப்படிப்பட்ட நிலையில் இருப்போரைப் பார்த்து பாவக் கட்டுகளை அவிழ்த்து விடுங்கள் என்று ஆண்டவர் கூறுகிறார். நமது பாவக் கட்டுகளிலிருந்து விடுதலை பெற்று சுதந்தரமாக வாழ்வதுவே உயிர்ப்பு வாழ்வு.

உயிர்ப்பு வாழ்வின் முன்சுவை

விண்ணுயர்ந்த கல்வாரி மலை. கள்வர் இருவர் நடுவிலே கர்த்தர். ‘என் இறைவா, என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்?’ (மாற் 15:34). இந்த வார்த்தைகள் வேதனையின் உச்சக்கட்டத்தில் இருந்த இயேசுவின் வேண்டுதல். இந்த வேதனை வேளையிலும் ‘தந்தையே! இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை’ (லூக் 23:34). “ஏழுமுறை மட்டுமல்ல, எழுபது முறை  ஏழு முறை மன்னியுங்கள்”  (மத் 18:22) என்று சொல்லிக் கொடுத்ததை தாமே தமது வாழ்வில் செயல்படுத்திக் காட்டுகின்றார். சாதாரணமாக இயேசு மரித்த மூன்றாம் நாள்தான் உயிர்த்தார் என நாம் சொல்வோம். ஆனால் எந்த நொடியில் தம்மைச் சிதைத்துக் கொலை செய்தவர்களை இயேசு மன்னித்தாரோ அந்த வேளையிலேயே உயிர்ப்பின் மகத்துவத்தினை அவர் சுவைத்து விட்டார்.

 நம்முள் நடக்கும் மனப்போராட்டம்:

பகை கொண்ட உள்ளம் துயரத்தின் இல்லம்.
தீராத கோபம் யாருக்கு லாபம்?

 எத்துணை அர்த்தம் பொதிந்த சினிமாப் பாடல்.
குற்றமே செய்யாமல் நல்லதே செய்யும் நேர்மையாளர் எவரும் உலகில் இல்லை (சஉ 7:20).  ஒவ்வொரு வருக்குள்ளும் இருபெரும் முரண்பாடுகள் மிகுந்த போராட்டம். கடவுளின் சட்டம், ஊனியல்பின் சட்டம்.

புறவினத்தாரின் திருத்தூதர் எனப்படும் புனித பவுல் தன்னுள் நடக்கும் நன்மைக்கும், தீமைக்கும் இடையிலான போராட்டத்தினைக் கண்டு கட்டுப்படுத்த முடியாது தவிக்கின்றார். தன் இயலாமையைக் கண்டு மனம் வெதும்பி அந்தோ! இரங்கத்தக்க மனிதன் நான்! சாவுக்குள்ளாகும் இந்த உடலினின்று என்னை விடுவிப்பவர் யார்? (உரோ 7:21-24)  என்று வினா எழுப்புகின்றார். எல்லாரும் நன்மை செய்யத்தான் எண்ணுகின்றோம். ஆனால் பிறரின் தீங்கினுக்கு உள்ளாக்கப்பட்டு பழிக்குப் பழி என்ற உணர்வு தழைத் தோங்குகிறது. நமக்கு எதிராகத் தீங்கு செய்பவருக்காகச் செபிக்க ஒரு வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. வாழ்வின் சவால்கள் நம்மை மகிழ்ச்சியடையச் செய்கின்றன. தீயவர் என்பதே உலகில் இல்லை. ஏதோ சந்தர்ப்பச் சூழல் ஒருவரைத் தீயவராக்குகிறது, அவ்வளவுதான். எனவே பகை கொள்ளாதிருத்தல். மாபெரும் புண்ணியம். ‘பழிவாங் குதல் ஆரம்பத்தில் இனிக்கும். பின் கசக்கும். எய்தவனைத் திரும்ப வந்து கொல்லும்’ என்கிறார் ஜான் மில்டன்.  

மன்னிக்கும் கலை:

இனிமையாக வாழ்தல் ஒரு கலை. அதில் மன்னித்து வாழ்தல் பேரின்பம் அருளும் வாழ்க்கைக் கலை.  Dr.Wayne W. Dyer  என்னும் அறிஞர் How to forgive someone who has hurt you என்னும் தனது நூலில் கீழ்க்காணும்  

15 பண்புகளை நாம் கடைபிடித்து வாழ அழைக்கின்றார்.

1. கடந்ததைப் புறந்தள்ளி கடமையில் முழுமையாக ஈடுபடுதல்.
2. அமைதியின்க ருவியாய் வாழ்வேன் என்று தன்மானத்தோடு உடன்படிக்கை செய்து கொள்ளல்
3. கோபத்தோடு உறங்கச் செல்லாதிருத்தல்.
4. பிறர்மீது குறை சொல்வதைத் தவிர்த்தல்
5. தீங்கிழைத்தோர் பற்றி தவறாகப் பேசாதிருத்தல்.
6. ஓடுகின்ற நீரைப்போல் வாழக் கற்றுக் கொள்ளல்.
7. எனது செயல்பாட்டுக்கு நானே முழுபொறுப்பு.
8. கோபப்படுதல், எரிச்சல் போன்றவற்றை தவிர்த்தல்.
9. அன்போடு சரியானவற்றை எடுத்துரைத்தல்.
10. விட்டுக் கொடுப்பவர் கெட்டுப் போவதில்லை.
11.   தன் நிலையுணர்ந்து பிறரின் நற்பண்புகளைப் பாராட்டுதல்.
12. கடந்த காலத்தில் அல்லது நிகழ்காலத்தில் வாழ்தல்.
13. வாழ்வின்க சப்பான அனுபவங்களையும் அரவணைத்துக்         கொள்ளுதல்.
14. தீர்ப்பிடாதிருத்தல்.
15. அன்பைச் செலுத்தி, அன்பைக் கொண்டாடுதல்.

மன்னிப்பின் பின் விளைவுகள்:

‘Campaign for Forgiveness’  ‘மன்னிக்கும் பண்பினைப் பரப்புதல்’ என்னும் இயக்கத்தின் அமைப்பாளர்களின் ஆய்வு வெளிப்படுத் துவது என்ன தெரியுமா? மன்னிப்பதால் தீராத நோயினால் வாடியோர் பலர் நோய் நீங்கி நலம் பெற்றுள்ளனர். மன்னிக்கும் பண்பு கொண்டோரில் 48 விழுக்காடு உடல், உள்ள ஆரோக்கியத்தோடு ஆனந்தமாக வாழ்கின்றனர்.

மன்னிக்கும் மாண்பே உயிர்ப்பு வாழ்வு:

‘நம் பகைவர்களே நமது மிகச் சிறந்த ஆன்மீக நண்பர்கள்’ என்று புத்தர் கூறுகின்றார். ‘மன்னிக்க முடியாத தவறு என்று உலகில் எந்தத் தவறும் இல்லை என்பது அன்னை தெரசாவின் ஆன்மீக முதிர்ச்சி. உங்களுள் எவரும் கடவுளின் அருளை இழந்து விடாமலிருக்கப் பார்த்துக் கொள்ளுங்கள். கசப்பான நச்சுவேர் எதுவும் உங்களுக்குள் முளைத்து, தொல்லை கொடுக்காதப்படியும் பார்த்துக் கொள்ளுங் கள்’ என்கிறார் பவுல் அடிகளார் (எபி 12:15)

பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே:

நேற்றைய நாள்களின் உயிர்ப்பு விழா போலல்லாமல் இன்றைய நாள்களின் உயிர்ப்பு விழா மன்னிக்கும் மாண்பினைச் சுவைக்கும் விழாவாக அமையட்டும். ‘ரெளத்திரம் பழகு’ என்று சமூகத் தீமைகள் மீது கோபம் கொண்டு வீறுபெற்றெழுந்து நில் என்று பாடிய பாரதி கீழ்க்கண்டவாறும் பாடியுள்ளார்.

பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே
பகைவனுக்கருள்வாய்
புகை நடுவினில் தீயிருப்பதைப் 
பூமியின் கண்டோமே
பகை நடுவினில் அன்புருவான நம் 
பரமன் வாழ்கின்றான் - நன்னெஞ்சே
பரமன் வாழ்கின்றான்.

மன்னிப்பின் மாண்பாளர்களாகி உயிர்ப்பின் பங்காளி களாவோம்.

கல்வியால் வளரும் மனிதம்

கல்வியால் வளரும் மனிதம்

அருட்பணி. ச.இ. அருள்சாமி

மனிதர் வளர்கிறவர், உடல்அளவில் நலமுடன் வளர்வது ஒருபக்கம், மனிதரின் அறிவை வளர்ப்பது, வளர்ச்சியின் முதிர்ச்சியாகும். மனித வளர்ச்சிக்கு உரமூட்டுவதுதான் கல்வி.

உலகம் எவ்வளவோ வளர்ந்திருக்கிறது. இதற்கெல்லாம் கல்வியே காரணம் என்று சொல்லலாம். மக்கள் மத்தியில் கல்வியின் மேல் அதிக கவனம் விழுந்திருக்கிறது எனலாம். பிள்ளைகளின் கல்விக்கு அதிக விலைக் கொடுத்தாலும் பரவாயில்லை. பிள்ளைகளுக்கு தரமான கல்வியைத் தருவது தங்களது வாழ்வின் முக்கிய கடமையாக பெற்றோர்கள் கருதுகிறார்கள். பலவித வசதிகள் கொண்ட தனியார் பள்ளிகள் கொடி கட்டி பறக்கின்றன. பிள்ளைகளை நிறைய மதிப்பெண்கள் பெற செய்வதே இப்பள்ளிகளின் குறிக்கோளாக அமைந்துள்ளது.

வாழ்க்கைக் கல்வியாகவோ, தரமிக்க கல்வியாகவோ  அக்கல்வி அமையவில்லை. மனனம் செய்து, கேள்விகளுக்கு தகுந்த பதில் எழுதி, மதிப்பெண்கள் பெறுவதுதான் நம் நாட்டின் கல்வி முறையாக அமைந்திருக்கின்றது. தேர்வில் துண்டுத் தாள்களை மடித்து வைத்துக் கொண்டு காப்பி அடித்து எழுதும் வழக்கம் தொடக்க வகுப்புகளிலிருந்தே ஆரம்பமாகிறது. காப்பியடிக்கும் கலையில் வளர்வதை திறமையாக பிள்ளைகள் கருதுகிறார்கள்.
நமது அரசும் கல்வியில் ஆர்வம் காட்டாத நிலையினைப் பார்க்கிறோம். இந்திய அரசு, தனது மொத்த வருமானத்தில் சென்ற  2013-2014 இல் 4.57 சதவிகிதம் செலவிட்ட நிலையில் 2017-2018 ஆம் ஆண்டு 3.71 சதவிகிதம் செலவிட திட்டமிட்டிருக்கிறது.

அரசுப் பள்ளிகளில் பிள்ளைகள் சேருவதில்லை. அங்கு பிள்ளைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. பொறியியல் கல்லூரியில் படித்த மாணவர்களுக்கு வேலை கிடைக்காத காரணத்தால் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கைக் குறைந்து விட்டது.

அபிகைல் ஆதாம் கூறுகிறார். ‘கற்றல் இயல்பாக நம்மிடம் வந்து சேர்வதில்லை. மாறாக ஆர்வத்துடன் தேடுதலால் வருவது’ என்கிறார். 
கேடில் விழுச் செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்ற யவை                                 (குறள் 400) என்கிறார் வள்ளுவர். கல்வி அழியாச் செல்வம் என்று விளக்குகிறார். மார்ச் மாதம் கல்வியின் மாதம் எனக் கருதுகிறோம். பிள்ளைகளின் தேர்வுகள் இக்காலத்தில் வருகின்றன. புனித சூசையப்பர் கல்வியின் பாதுகாவலர், என்று தனி பக்தி முயற்சிகள் செய்யப்படுவதுண்டு. பிள்ளைகளின் கல்வியில் பெற்றோர்களின் பங்கு பெரிது. பிள்ளைகளின் தனித்திறமை அவர்களின் தனி ஈர்ப்பு ஆகியவைகளைக் கண்டு, அவர்களை வழிநடத்த வேண்டும். கல்வி பள்ளிகளோடு முடிந்து விடுவதில்லை. கற்றல் தொடர் நிகழ்வாகும். வாசிப்பிலும் செய்திகளைத் தெரிந்து கொள்வதிலும் பெற்றோர்கள் முன்னோடிகளாகத் திகழ வேண்டும். நாடு வளர, மனிதர் வளர வேண்டும். மனிதர் வளர, கல்வி அவசிய வழியாகும். அப்போது நம் நாட்டிலிருந்து அறிஞர்களும், விஞ்ஞானிகளும் நிறைய தோன்றுவார்கள்.

தமிழ்நாட்டில் அரசியல் குழப்பமும், நிரந்தரமற்ற நிலையும் நிலவுகிறது. நடிகர் கமலஹாசன், ‘மக்கள் நீதி மய்யம்’  என்ற புதிய அரசியல் கட்சியினை ஆரம்பித்திருக்கிறார். நடிகர் ரஜினிகாந்தும் புதிய அரசியல் கட்சியை ஆரம்பிக்க தயாரித்து வருகிறார். காவிரிநீர் பங்கீட்டில், உச்சநீதிமன்றம் கிடைக்க வேண்டிய நீரை 1924 எம்சியிருந்து 177.25 ஆக குறைந்திருக்கிறது. உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்புகளை நடைமுறைப்படுத்தாமல் அடாவடி செய்திருக்கிறது கர்நாடகா அரசு.

  அனைத்துக் கட்சி கூட்டம் 22.2.2018இல் சென்னையில் நடந்திருக்கிறது. நதிநீர் பங்கீட்டில் நமது உரிமைகளை எல்லோரும் இணைந்து போராடி பெற வேண்டும் என்ற உணர்வு எழுந்துள்ளது.
  தமிழக மக்கள் தற்போது, அனைத்தையும் அமைதியாக பார்த்துக் கொண்டிருப்பது போல் தெரிகிறது. விழிப்புணர்விலும், ஒற்றுமையிலும் தமிழகம் வளர வேண்டும்.

Friday 2 March 2018

இலக்கை விளக்கும் இலக்கியம்

இலக்கை விளக்கும் இலக்கியம்

அருட்பணி. ச.இ. அருள்சாமி

வாழ்வு ஒரு கலை. பிள்ளைகள் ஒரு நடனத்தை அரங்கேற்றும் முன் சுமார் ஐம்பது முறையாவது பயிற்சி செய்வதைப் பார்த்திருக்கிறேன். பயிற்சிகள் நடனத்தின் கவர்ச்சியை மேலும் மேலும் மெருகூட்டுகின்றன. வாழ்வின் நுணுக்கங்களை நாம் சிறிதளவே புரிந்துக் கொள்கிறோம். ஆனால் அறிஞர்கள், வாழ்வை ஆழமாக புரிந்து கொண்டு,  மற்றவரோடு பகிர்ந்து கொள்கிறார்கள். வாழ்வின் இலக்கினை குறித்துக்காட்டுவதுதான் இலக்கியம். இயல், இசை, நாடகம் என்பவை இலக்கியத்தின் மூன்று முகங்களாகும்.

வாழ்வின் நிறைவு வழிகளை மற்றவர்களின் ஞானத்திலிருந்தும் பெற்றுக் கொள்கிறோம். பள்ளிகளில், உலகில் வளர்ந்த ஞானத்தை படிப்படியாக பெற்றுக் கொள்கிறோம். அதற்கு மேலாக அறிஞர்களின்  நூல்களை படிப்பதன் வாயிலாகவும், அறிவில் உயர்கிறோம், ‘உலகை உதிர்த்து பார்க்கவும், அதன் நண்பராக விளங்கவும் உதவுவது இலக்கியம்’ என்கிறார் நிகோலாஸ் கிறிஸ்டோப் . தமிழ் நாட்டின் முன்னால் முதலமைச்சர் உயர்திரு அண்ணாதுரை அவர்களுக்கு அறுவை சிகிச்சை நடக்க இருந்தது. அறுவை சிகிச்சைக்காக செவிலியர் அழைத்து செல்ல வந்தனர். அண்ணாதுரை அவர்கள், ‘ஒரு புத்தகத்தைப் படித்தேன். சில பக்கங்கள்தான் இன்னும் படிக்காமல் உள்ளன. எனவே அதனைப் படித்து முடித்ததும் அழைத்து செல்லுங்கள்’  என்றாராம். மறைந்த முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களும் நூல்களை வாசிப்பதில் அதிக ஆர்வம் உள்ளவர் என்றும், மற்றவர்கள் நல்ல புத்தகங்களை பரிசளித்தால் மிக்க மகிழ்ச்சியடைவார் என்றும் குறிப்பிடுகிறார்கள். 

தற்போது புத்தகங்களை வாசிக்கும் வழக்கம் குறைந்து வருகிறது என்கிறார்கள். பேஸ்புக், வாட்ஸ்அப், டுவிட்டர் என்று இணையதள பதிப்புகளால் புத்தகங்களுக்கு மதிப்பு குறைந்து விட்டது என்பார்கள். ஆனால் ஆங்காங்கு நடக்கும் புத்தக கண்காட்சிகளில் ஏராளமான மக்கள் புத்தகம் வாங்கி செல்வதைப் பார்க்கிறோம். 

‘வாசிப்பது, நாம் வாழ்வதற்கு காற்றை சுவாசிப்பதை போல்’ என்கிறார் அன்னி திலார் என்பவர். வாசிப்பதற்கு ஆவல் கொள்வோம். வாசிப்பதால் அறிவு வளரும், அறியாமை இருள் விளங்கும். 

அண்மையில் கலீல் ஜிப்ரான் அவர்களின், ‘ஞான களஞ்சியம்’ என்ற புத்தகத்தை வாங்கினேன்.  அதில் முழுமை என்ற கவிதையின் வரிகள் என் மனதைத் தொட்டன.
‘என்றும் எரிந்துக் கொண்டிருக்கும் தீயாகவும்
என்றும் அணையாத விளக்காகவும் 
உலவும் இளந்தென்றலாகவும், 
சீறியடிக்கும் சூறாவளியாகவும், 
இடிகள் முழங்கும் வானமாகவும், 
மழைபொழியும் விண்ணாகவும்,
எப்போது ஒருவர் உணர்கின்றாறோ...

அப்பொழுது அவர் பூரணத்தின் பாதிவழியைக் கடந்தவராகிறார்.’ என்று நமது விழிப்புணர்வே வாழ்வின் நிறைவு என்று அழகாக வடித்துக் காண்பித்திருக்கிறார் கலீல் ஜிப்ரான்.

பிப்ரவரி மாதம் இலக்கிய மாதம் என்று அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. இலக்கியத்தைப் பற்றி சகோ.விமலி அவர்களும் திரு. பெஞ்சமின் இளங்கோ அவரகளும் எழுதியுள்ள கட்டுரைகள் இவ்விதழில் இடம்பெற்றுள்ளன. பலர், துணுக்குகள் சுருக்கமாக படிக்க நன்றாக உள்ளது என்று கருத்து தெரிவித்துள்ளனர். அன்னையின் அருட்சுடரில் தேர்ந்தெடுத்த கட்டுரைகளை வெளியிட முயற்சிக்கிறோம். உங்களின் கருத்துகளை எழுதியனுப்புங்கள். 

தமிழ்நாட்டில் நடந்த  R.K. நகர் இடைத்தேர்தல், நம் மக்கள் இன்னும் நிறைய விழிப்புணர்வு பெற வேண்டும் என்பதையே நிரூபித்திருக்கிறது. ‘கொடுப்பதை வாங்கிக் கொண்டால் என்ன தவறு? நம்மிடம் பெற்றதை தானே தருகிறார்கள்’ என்ற தவறான கருத்திற்கு நம் மக்கள் அடிமையாயிருக்கிறார்கள். 6000 ரூபாய், பெற்றுக் கொண்டதால் வாழ்வின் பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து விட்டதா? ஆனால் ஒப்புயவர்வற்ற நமது ஓட்டு உரிமையை விற்றிருக்கிறோம் என்பதை நினைத்து நாம் தலை குனிய வேண்டும். பணத்தை பெற்றுக் கொண்டு ஓட்டுப் போட்ட நம் மக்களைப் பார்த்து மற்ற மாநிலத்தார் சிரிக்கிறார்கள் என்று சில குறிப்பிட்டுள்ளார்கள். 

தவக்காலம் துவங்கியிருக்கிறது.  நம்மில் மாற்றங்களும் திருத்தங்களும் இந்நாள்களில் ஏற்பட முயற்சிப்போம். விவிலியம் இலக்கியங்களிலெல்லாம் பெரிய இலக்கியம். வாழ்க்கையைத் தொடுகின்ற இலக்கியம்  அது. இறைவார்த்தைத் துணைகொண்டு தவக்காலத்தில் மேன்மைப் பெறுவோம்.

மனமாற்றம் - சிறுகதை

மனமாற்றம் -  சிறுகதை

திருமதி. சந்தோ­ம் லியோ, விரகாலூர்

வினோத் மற்றும் பிரவீன் இருவரும் அவரது பெற்றோருக்கு செல்லப்பிள்ளைகள். எல்லா பெற்றோரையும் போலவே  தனது பிள்ளைகள் இருவருக்கும் தேவையான சொத்து, வீடு, நல்ல படிப்பு அனைத்தையும் நிறையவே கொடுத்தார்கள். வினோத் மற்றும் பிரவீன் தினமும் கோவிலுக்கு சென்று வருபவர்கள். கடவுளுக்கும், பெற்றோருக்கும் கீழ்ப்படிந்து வாழ்பவர்கள்.

அப்படி ஒரு சுகமான வாழ்க்கை வாழ்ந்த அவர்கள் இருவருக்கும் திருமணம் ஆசை ஆசையாய் பெற்றோர்கள் நடத்தி வைத்தனர். காலம் செல்ல செல்ல கூட்டுக்குடும்பத்துக்குள் விரிசல் எழ ஆரம்பித்தன. பாகம் பிரிக்கப்பட்டது. பிரிக்கப்பட்ட பாகத்தில் பிரச்சனை அதிகமாயின. திருமணத்திற்கு முன்பு அண்ணன் தம்பியாக இருந்தவர்கள் பிறகு விரோதிகளைப் போல் ஆனார்கள். பெற்றோர் மீது கொண்ட மதிப்பும் மரியாதையும் சொத்தின் மீது கொண்ட ஆசையினால் எல்லாம் மாயமாகிவிட்டன.அவர்களுடையப் பெற்றோர் தனித்து விடப்படுவார்கள் என்றுத் தெரிந்துதானோ என்னவோ அவர்களுக்கு என்றே  முதியோர் இல்லத்தின் வாசல் திறக்கப்பட்டபடியே இருந்தன. மனம் கசிந்து, அங்கு சென்று வாழ்ந்தனர். பிள்ளைகள் பெற்று கஷ்டப்பட்டு வளர்த்து, அவர்கள் ஒரு வாழ்வை வாழத் தொடங்கும் பொழுது அந்த வாழ்வின் அர்த்தத்தையும், உண்மையினையும் அறியாமல் பிள்ளைகள் வீணாவதை எண்ணி பெற்றோர் மனம் குமுறி இறைவனிடம் பிராத்தனை செய்கின்றனர். வயது முதிர்ந்தவர்கள் என்பதாலும், பிள்ளைகள் மீது கொண்ட பாசத்தினாலும் பிரிவைத் தாங்க முடியாமல் முதியோர் இல்லத்தில் அவர்கள் இறந்து விடுகின்றனர். செய்தி அறிந்த வினோத்தும் பிரவீனும் வருத்தப்பட்டார்கள். ஆனாலும் சொத்தின் மீது கொண்ட ஆசையினால் அவர்கள் மனம் மாறவில்லை. வினோத்தும் பிரவீனும் மனதில் வஞ்சனை உள்ளவர்கள் என்றாலும் தினமும் விவிலியம் வாசித்து ஜெபமாலை சொல்லும் வழக்கம் உண்டு. 

ஒருநாள் வினோத் கோவிலுக்கு செல்கிறான். மாலை திருப்பலி. வழியில் இருந்த பிச்சைக்காரர்கள் பேசிக்கொண்டது காதில் விழுந்தது.முதியோர் இல்லத்தில் இருப்பதைவிட இப்படி பிச்சையயடுப்பது சந்தோ­மாக இருக்கிறது. எப்படியும் நாலுபேர் உதவி செய்கின்றனர். நாலுபேர் அன்பான ஆறுதலான வார்த்தைகள் சொல்கிறார்கள் என்றனர். நம்மை வளர்த்த பெற்றோர்கள் பிச்சைக்காரரை விட கேவலமாக தானே இருந்திருப்பர் என்று வினோத் நெஞ்சில் குத்து விடுகிறது. 

அன்று இரவு வினோத்தின் மனைவி மேரி, விவிலியத்தை எடுத்து வாசிக்கிறாள். அப்பொழுது தலைவர் ஒருவர் அவரிடம் “நல்ல போதகரே, நிலைவாழ்வை  உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?”  என்று கேட்டார். அதற்கு இயேசு அவரிடம், “நான் நல்லவன் என ஏன் சொல்கிறீர்? கடவுள் ஒருவரைத் தவிர நல்லவர் எவருமில்லையே! உமக்கு கட்டளைகள் தெரியும் அல்லவா? விபசாரம் செய்யாதே, கொலை செய்யாதே, களவு செய்யாதே, பொய்ச் சான்று சொல்லாதே, உன் தாய் தந்தையை மதித்து நட”  (லூக் 18: 18 - 20). இப்படி வசனங்களை வாசிக்கும்போது வினோத்தின் இருதயம் சுக்கு நூறானது என் கடவுளின் கட்டளையை மீறி, என் தாய் தந்தையரை தனிமையில் விட்டு, அவர்கள் இறப்பிற்கும் நான் காரணமாகிவிட்டேன், இந்த சொத்திற்காகவும், பணத்திற்காகவும் என் நல்ல குணங்களையும் என் அன்பு சகோதரனின் அன்பினையும் நான் இழந்து நிற்கின்றேனே! என்று  மனம்  வருந்தி அழுகின்றான். அப்பொழுதுதான் அவனுக்கு ஒரு வசனம் நினைவுக்கு வருகிறது. உங்களுடைய சகோதரர் சகோதரரிகளுள் ஒருவர்  பாவம் செய்தால் அவரைக் கடிந்துக்கொள்ளுங்கள். அவர் மனம் மாறினால் அவரை  மன்னியுங்கள் ஒரே நாளில் அவர் ஏழு முறை உங்களுக்கு எதிராகப் பாவம் செய்து ஏழு முறையும் உங்களிடம் திரும்பி வந்து, “ நான் மனம் மாறிவிட்டேன் என்று சொல்வாரானால் அவரை மன்னித்துவிடுங்கள்”  (லூக் 17: 3-4) .  என்ற வசனத்தின் மீது கொண்ட விசுவாசத்தினால் தனது தம்பி பிரவீனிடம் சென்று, தம்பி, சொத்துக்களை உன் விருப்பம் போல் எடுத்துக்கொள். நீ கொடுப்பதை நான் சந்தோ­மாக பெற்றுக்கொள்கின்றேன். இயேசு சொன்னதுபோல் நான் மனம் மாறி வந்துள்ளேன். என்னை மன்னித்து விடு பிரவீன் என்று முழுமனதோடு மன்னிப்பு கேட்கிறான். வசனம் புரிந்தவன் என்பதாலும் கடவுளை அறிந்தவன் என்பதாலும் இருவரும் ஒருவரை ஒருவர் மன்னித்து சமாதானமாய் சென்று தனது தாய் தந்தையின் இறப்பிற்கு நாமே காரணமாகிவிட்டோமே! என்று மனம் வருந்தி அழுகின்றனர்.

வருந்திய மனத்துடன் இந்த கல்லறைத் திருநாளில்,  ஒரு  முடிவு செய்கின்றனர். நம் தாய் தந்தையர் ஆசைப்பட்ட படி அவர்களிடம் உள்ள நல்ல குணங்களையும், விட்டுக்கொடுத்து வாழ்தலையும், சமாதானத்தையும், கடவுளுக்கு கீழ்ப்படிந்து வாழ்பவர்களாகவும் இனி நம் வாழ்வை மட்டுமல்ல நம் பிள்ளைகளையும், பிள்ளைகளின் பிள்ளைகளையும் அவ்வழியே வளர்ப்போம். அவர்களுக்காக ஜெபிப்போம் என்று சந்தோ­மாய் வாழ்வை தொடர்கின்றனர்.

இலக்கியமும் அரசியலும்

இலக்கியமும் அரசியலும்

 பேராசிரியர், முனைவர் எஸ்.பி. பெஞ்சமின் இளங்கோ

இலக்கியம் என்ற சொல்லைப் பிரித்தால் இலக்கு + இயம் என்று பிரிந்து, ஒரு இலக்கு நோக்கி, ஒரு குறிகோளை நோக்கி இயற்றப்படுவது என்று பொருள் தரும். அரசியல் என்ற சொல் அரசு+ இயல் என்று பிரிந்து அரசை வழிநடத்தக்கூடிய கொள்கைகளும், கோட்பாடுகளும் அடங்கிய அறிவுப்புலம் எனப் பொருள் தருகின்றது. உலகில் அரசியலுக்கு ஆட்படாமல் மனித சமுதாயம் இயங்கமுடியாது என்பதே இன்றைய நடைமுறை உண்மை. பட்டி, தொட்டி மூலம் கண்டங்கள் வரை அரசியலமைப்பு என்ற கட்டமைப்புக்குள்தான் அன்றாட நிர்வாகத்தைப் பேணி வருகின்றன. ஆக இப்படிப்பட்ட விலக்கப்பட முடியாத இன்றியமையாத அரசு நிர்வாகத்தை உள்ளடக்கிய அரசியல் இன்று எவ்வாறு நடைமுறையில் இயங்குகின்றது எனப் பார்த்தால், நாம் எண்ணுவதுபோல அரசியல் மோசமல்ல, மாறாக பெரும்பாலான அரசியல்வாதிகளே மோசம் என்பது தெளிவாகின்றது.

முடியாட்சி காலம் போய் மக்களாட்சி நடைபெறும் இக்காலத்தில் மக்களின் அடிமைத்தனம் ஒழிந்துவிட்டதா? மக்களால், மக்களுக்காக, மக்களே நடத்தும் மக்களாட்சி நிலவுகிறதா? மாறாக அதிகார போதையில், கவர்ச்சி சலுகைகளால் பெருவாரியான பொதுமக்கள் ஈர்க்கப்பட்டு ஓட்டு அடிமைகளாக மாற்றப்படும் அவலநிலை மேலோங்கியுள்ளதா என்ற கேள்விகளுக்கு ஒரே பதில் ‡ இன்றைய அரசியல் களம், லஞ்சம், ஊழல், மது, மாது, சொத்து, வன்முறை,கட்சித்தாவல் என்ற சமூக சீர்கேடுகளை வளர்த்துவிடும் தளமாகவே விளங்குகின்றது.

“அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்” என்று இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் அரசியல்வாதிகளுக்கு அறமே நீதியை நிலைநாட்டு பவராக இருந்து தலைவிதியை நிர்ணயித்து தண்டனையைத் தரும் என்று கடும் எச்சரிக்கையை விடுத்திருப்பது கண்கூடாக நம்முன் நடைபெற்று வருவதைக் காண்கிறோம். இப்படிச் சீர்கெட்ட அரசியலை அதனால் புரையோடிய இச்சமுதாயத்தைப் புறந்தள்ளிவிடாமல் இலக்கியமும், இலக்கியவாதிகளும் சமுதாயத்தின் மனச்சாட்சியின் அபாய சங்கை ஒலிக்கும் குரல்களாக, மனித சமுதாயத்தை எப்படியாவது அழிவுப்பாதையிலிருந்து மீட்டெடுத்து, அறப்பாதையில் செலுத்த வேண்டும் என்ற உன்னத குறிக்கோளோடு பெரும்பாலான இலக்கியவாதிகள் தங்கள் படைப்புகளை தொன்றுதொட்டு இயற்றிவருவது இலக்கியத்துக்கும், அரசியலுக்கும் இடையே உள்ள பிரிக்கமுடியாத பிணைப்பை வெளிக்காட்டுகின்றன.

“இந்தியா அழிந்தால், உலகில் ஆன்மீகம் அழியும், ஒழுக்கம் அழியும், அனைத்து உயர்ந்த இலட்சியங்களும் பூண்டோடு அழிந்துவிடும். காம வேட்கையோடு சுகபோகமே அரசாளும். பணம் மையமாகும். பலாத்காரம் வழிபாடாகும் மனிதம் பலியாகும்”  என்று வீரத்துறவி விவேகானந்தர் தமது இலக்கிய உரைநடையில் விளம்பியிருப்பது. இன்றைய இந்தியாவின் நிலையை அப்பட்டமாக  வெளிகாட்டுவதாக உள்ளது. வட்டச்செயலாளாராக வட்டம் போட்டவன், மாவட்டத்தை என்ன, மாநிலத்தையே தன் சுய விருப்புவெறுப்புகளுக்குப் பலிகடா ஆக்குவதைக் கண்டு, அறம் சார்ந்த சமுதாயம் துணிவுள்ள இலக்கியவாதிகள் மூலம் தன்னுடைய அறச்சினத்தை வெளிப்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றது. நாலடி நிலமற்றவன் அரசியல்வாதியாக உருவெடுத்து பதவியிலமர்ந்த ஓரிரு ஆண்டுகளில், நான்காயிரம் ஏக்கர்களுக்குச் சொந்தகாரனாகி விடுகிறான். சைக்கிள் கூட இல்லாத அவரது உற்றார், உறவினர், ஆடிக்காற்றையே அமுக்கிச் செல்லும் பல கோடி மதிப்புள்ள ஆடிக்கார்களில் பவனி வருகின்றனர். மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளையடித்து, அதிலிருந்து, அவ்வப்போது ஏழைகளுக்கு தானதர்மம் செய்து, அதை விளம்பரப்படுத்த, அதே வரிப்பணத்திலிருந்து இலட்சக்கணக்கில் சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்தி, தாங்கள்தான் ஏழைகளின் ஏகபோகக் காவலர்கள் என்று சிறிதும் வெட்கமில்லாமல் மார்தட்டி நிற்பதையும், அதை அறியாத எளிய, படிப்பறிவற்ற மக்கள் கைகொட்டி ஆரவாரிப்பதையும் முன்னரே கண்டுதான் அன்றே இவ்வாறு அறிவித்தார் மகாகவி பாரதியார்.

“நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால், அஞ்சி அஞ்சிச் சாவார் இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே”. ஆள்பவரும் நம்போன்ற மனிதர்களே! ஆள்பவர்கள் ஆண்டவனல்ல! மக்களாட்சியில் மக்கள் பிரதிநிதிகளாகச் சட்டமன்றத்துக்கும், நாடாளுமன்றத்து க்கும் செல்பவர்கள் வானிலிருந்து குதித்தவர்கள் அல்ல! மாறாக நாம் உருவாக்கியவர்கள்தான். அப்படியயன்றால் அரசியல் சீர்கேடுகளுக்கு பொதுமக்களும் காரணமா? அரசு எவ்வழி, அவ்வழி மக்கள் என்பது போய், மக்கள் எவ்வழி, அரசு அவ்வழி அல்லது மக்களுக்கேற்ற அரசுதான் மக்களாட்சி அரசியல் களத்தில் அமைகின்றது என்பதுவும் இன்று உண்மை நிலவரமாகின்றது. ஆக சீர்கெட்ட அரசியல்வாதிகளையும் நெறிபிறழ்ந்த பொதுமக்களையும் தட்டிக்கேட்பது யார்? அவர்களை நெறிப்படுத்துவது யார்? என்று பார்க்கும்போது சமூக ஊடகப்பொறுப்பாளர்களில் பெரிதும் கோலோச்சும் இலக்கியவாதிகளே என்பது தெளிவாகின்றது.
                                                                                                                                            

வனத்தின் நடுவே கால்நடைப் பயணம்

வனத்தின் நடுவே கால்நடைப் பயணம்
அருட்பணி ச.இ. அருள்சாமி

ஊட்டி மறைமாவட்டத்தில் குந்தா என்ற பங்கு உண்டு. அதற்கு முன்னாள் முள்ளி  என்ற பங்கும் இருக்கிறது. இது காட்டு  பகுதியில் உள்ளது.  முள்ளியில்  பழங்குடியினர் வாழ்ந்து வந்தனர். இப்பகுதி கேரளா மாநிலத்தை சேர்ந்தது. இங்கு பிரான்சு நாட்டு அருள்பணியாளர் லெபேவர் (ஸிeக்ஷூeஸre) என்பவர்  பங்குத் தந்தையாக இருந்தார். வெள்ளைக்கார சுவாமியார் அவர். கேரளா காட்டின் நடுவில் உள்ள தொடுக்கி என்ற சிறிய கிராமத்திற்கு வருடத்திற்கு ஒருமுறை சென்று  மக்களை சந்தித்து வருவார். இந்த தொடுக்கி முள்ளியிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. அங்கு செல்ல சாலைகள் கிடையாது. ஒத்தடி பாதையில்தான் செல்ல வேண்டும். அந்த  பாதையும் அங்கு வாழ்பவர்களுக்குத் தான் தெரியும்.

முள்ளியில் ஒரு சிறிய மருத்துவமனையை  ய்னினி சகோதரிகள் நடத்தி வந்தார்கள். அங்கு தொடிக்கியிலிருந்து மக்கள் மருத்துவம் பெற வருவார்கள். அவர்களைத் தொடர்புக் கொண்டு, அவர்களின் துணையோடு சகோதரிகள், வேதியர், அருள்பணியாளர் என்று சுமார் 10 பேர் நடந்தே தொடிக்கிக்கு செல்வார்கள். அப்பகுதியில் யானை நடமாட்டம் உண்டு. யானையின் போக்குவரத்தை யயல்லாம் கணித்துதான் இப்பயணத்தை மேற்கொள் வார்கள்.

1989 ஆம் ஆண்டு, மே மாத விடுமுறையில் நானும் (ச.இ.அருள்சாமி) இப்பயணத்தில் பங்குக் கொண்டேன். நான்கு சகோதரிகள், வேதியர் ஒருவர், அருள்பணியாளர் இருவர் என்ற குழுவாக சென்றோம். இரண்டு நாள்களுக்குத் தேவையான உணவு, மக்களுக்கு கொடுக்க வேண்டிய பரிசு பொருள்கள், மருந்துகள் ஆகியவைகளை சுமந்துக் கொண்டு செல்ல வேண்டும். வயதானவர்கள் போல ஒரு குச்சியை ஊன்று கோலாக பிடித்துக் கொண்டு செல்ல வேண்டும். மேடு பள்ளம், பள்ளத்தாக்கு, அருவிகள் என கடந்து செல்ல வேண்டும். காலை 8 மணிக்கெல்லாம் புறப்பட்டு மாலை 5  மணிக்கெல்லாம் அங்கு போய் சேர்ந்தோம். இரவு தங்குவதற்கு வனஅலுவலர் தங்க பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பாழடைந்த சிறிய கட்டிடம் உண்டு. அதில் புல்களைப் போட்டு அதன் மீது பாயை விரித்து படுத்துக் கொள்ள வேண்டும்.

இரவில் தொடுக்கி மக்கள் பாடல்பாடி நடனம் ஆடுவார்கள். நாங்களும் சேர்ந்து பாடல் பாடுவோம். ஒருவர் பாடிய பாடல் இன்னும் ஞாபகம் இருக்கிறது. ‘ஊசி பட்டாசே வேடிக்கையாச்சே, லைச்சாலே வெடி டமார், டமார்’ பழங்காலத்து பாடல் அது. மக்களுக்கு வேண்டிய முதலுதவி மருந்துகளை மக்களுக்கு சகோதரிகள் கொடுத்தார்கள்.

இரவு அந்த சிறிய அறையில் புல் மெத்தை மேல் உறங்கியபோது,  கஷ்டகாலம்,  சிலருக்கு வயிற்றுபோக்கு வந்துவிட்டது. வெளியில் காடு. சுத்தம் செய்வதற்கு நல்ல வேளை பக்கத்தில் சிறிய ஓடை ஓடியது. பலரும் பல நேரங்களில் எழுந்து சென்றது தெரியாது. அவ்வளவு களைப்பு. காலையில் எழுந்ததும் தான் தங்களின் இரவு அனுபவங்களை வெட்கத்தோடு பட்டும் படாததுமாக பகிர்ந்துக் கொண்டார்கள். 

அடுத்த நாள் அருகிலுள்ள மற்றொரு பழங்குடியினர் பகுதிக்கு சென்றோம். ஆற்று ஓரத்திலும் ஆற்றிலும் பாராங்கற்களில் தாண்டி நடந்து சென்றோம். செல்லும் வழியில், மூங்கில் புற்றில் ஓரு காட்சி. ஒரு பாம்பை மற்றொரு பாம்பு விழுங்கிக் கொண்டிருந்தது. அப்படி செல்லும் வழியில் எனக்கு ஒரு விபத்து. எப்படியோ தெரியவில்லை, சீவங்குச்சியை விட மெலிதான மூங்கில் குச்சி எனது வலது காலின் நடுவிரலின் மேல்பகுதியில் இரத்த நாளத்தில் சொருகிவிட்டது. இரத்தம் வடிய ஆரம்பித்தது. எங்களோடு வந்த சகோதரி ஒருவர் செவிலியர். எனவே லாவகமாக அந்த குச்சியை எடுத்து விட்டு மருந்து வைத்து கட்டுகட்டினார்கள். எங்கள் பயணத்தை தொடர்ந்து அந்த பழங்குடியினர் பகுதிக்கு சென்றோம். சுமார் 10 குடிசைகள். எங்களோடு வந்த வேதியர் ‘ஒரு கோழி கிடைக்குமா?’ என்று அங்கு கோழி நிறைந்திருப்பதைப் பார்த்து  கேட்டு விட்டார். உடனே பழங்குடி சிறுவர்கள், கோழிகளை விரட்டி சென்று பிடித்து வந்தார்கள்.

அங்கு வருடத்திற்கு ஒருமுறை நடக்கும் விழாவினைப் பற்றி விளக்கினார்கள் அவ்வூர் மக்கள். அக்கிராமத்திலுள்ள மக்கள் அனைவரும் காட்டுப் பகுதியில் உள்ள ஓரிடத்திற்கு செல்வர். பத்து ஆடுகளை பலியிட்டு சோறு சமைத்து, இறந்தவர்களைப் பார்த்து சொல்வார்களாம். உங்களுக்கு வேண்டியதை செய்து விட்டோம். எங்கள் இடத்திற்கு திரும்பி வந்துவிடாதீர்கள் என்பார்களாம். மீண்டுமாக, முள்ளி நோக்கி நடைபயணமாக திரும்பினோம். ஒரு பெரிய மூட்டையை தலையில் தூக்கி வந்தேன். அதை இறக்கி வைக்கும் போது இவ்வளவு பாரமான மூட்டையை எப்படி இவ்வளவு தூரம் தூக்கி வந்தீர்கள் என்று வியந்தனர்.

  இப்பயணத்தில் ஊட்டி மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருள்பணி.பெனடிக்ட், எப்எம்எம் சபையைச் சேர்ந்த சகோதரிகள் பவுலா, குரியாகோஸ் ஆகியோரும் வேதியர் (பெயர் மறந்து விட்டது) அவரும் பங்குப் பெற்றனர். அருள்பணி. பெனடிக்ட் நகைச்சுவைக்குப் பெயர் போனவர். நன்கு நடிப்புத் திறமை கொண்டவர். வழியயங்கும் அவரது நகைச்சுவை உரையாடல் மிக இதமாயிருந்தது. அருவிகளில் ஓடிய தண்ணீர் அவ்வளவு குளிர்ச்சியாகவும், சுவையாகவும் இருந்தது. பிரியாணிக்குப் போடும் பட்டைசெடியின் இலை ஆங்காங்குக் கிடைத்தது. சகோதரிகள் அவைகளை நிறைய சேர்த்தனர். 

மரங்கள், செடிகள், மலர்கள் அருவிகள் நிறைந்த அந்த வனப் பகுதியில் பயணம் செய்தது, இறைவனின் ஒப்பற்ற இயற்கையின் அழகைக்  கண்டு வியக்கும் அனுபவம் கிடைத்தது. தொடிக்கிக்கு சென்ற இரண்டாவது பயணத்தைப் பற்றி அடுத்த கட்டுரையில்...

விவிலிய விடுகதைகள், உராமையர் 10 முதல் 16 அதிகாரங்கள் )

விவிலிய விடுகதைகள்
(அருட்சகோ. பெரேரா, FIHM, சேலம்
உராமையர் 10 முதல் 16 அதிகாரங்கள் )

கடவுளின் செயல்கள் கணக்கிட முடியாது
    அவரின் வழிகள் ஆராய முடியாது
    தோண்டித் தோண்டிப் பார்த்தாலும்
    ஆழம் காண முடியாது. அது என்ன?

2. ஊழியத்திற்காக ஊதியம் தேடுபவரா
      ஊழியம், ஊழியம் என்றே
      வயிற்றை நிரப்பிக் கொள்கின்றனர்
      இப்படிப்பட்டவர்கள் யார்?

3. எங்கள் இனம் அழிய
      நான் மட்டும் தப்பினேனே என்று
    பெருமையடித்த இவருக்கு
      இறைமொழி பதில் என்ன? யார்? யாது?

4. இரத்தம் சிந்த துணிந்தவர்கள்
      இரத்த சாட்சியாக விரும்பியவர்கள்
      பவுலடியாரைக் காப்பாற்ற எண்ணி
      தம்முயிரை இழக்க முன் வந்தவர்கள்.
      இவர்கள் யார்?

5. உதவி செய்யும் உத்தமி
      கெங்கிரேயாவின் ஊழியக்காரி
      மூன்றெழுத்துடைய திருத்தொண்டர். இவர்யார்?

6. அனுப்பப்பட்டதால் அறிவித்தார்கள்
      அறிவித்தவர்களுக்கு கிடைக்கும் சன்மானம் கூறும் வசனம் என்ன?

7. கீழ்ப்படியாமை என்னும் வீட்டுக்குள்ளே
      உட்படுத்தியவர்களுக்கு
      கடவுள் நான்கெழுத்தில் உணவு ஊட்டிய சோறு எது?

8. உன்மேல் மட்டுக்கு மீறிய மதிப்பு கொள்ளாதே!
      அது அமிர்தமும் நஞ்சாகும்
      அளவுக்கு மிஞ்சி எண்ணாதே!
      அதிக பெருமைக் கொள்ளாதே!
      அளவிற்கேற்ப மதிப்புக்கொள். எதை?

 9. அதிலே மகிழ்ச்சி எங்கே?
      இதிலே தளரா மனம் எங்கே?
    அதிலே நிலைத்திருங்கள் எதிலே?
    சொல்லுங்கள் பார்ப்போம்.

10. கருப்பு சட்டை வேண்டாம் ‡ அது இரவு
        வெள்ளை சட்டை வேண்டாம் ‡ இது பகல்
        மஞ்சள் சட்டை போதும்
        இதனையே எப்போதும் அணியுங்கள் எதனை?

 11. எதற்கும் வரி
      எங்கும் வரி
      நாடு கடலில் சிக்கித் தவிக்கிறது
        வட்டியில்லா ஒன்றுண்டு
        அது கடன் கொடுக்க ஆசை
        கடன் வாங்க ஆசையா? அது என்னக் கடன்?

 12. அவர்களின் கண்கள் ஒளி  இழக்கட்டும்
        அவர்களின் முதுகு கூன் விழுந்து இருக்கட்டும்
        ஆண்டவர்க்கு பிடித்தமான அரசன் கூறியது
          யார் இவர் ?

13. பவுலின் விருப்பமும் அது
      அவரின் சொந்த  இனமிது
      இதயத்தில் ஆழ்ந்துள்ளது
    அதற்காக வேண்டுதலும் உண்டு, எதற்காக?

14. களியாட்டமும் வேண்டாம்
      குடிவெறியும் வேண்டாம்
      கூடா ஒழுக்கமும் வேண்டாம்
      காம வெறியும் வேண்டாம்
    பின் எப்படி நடக்க பவுல் விரும்புகிறார்?

15. சொப்பன சுந்தரர்
      ஆசியாவில் முதல் கிறிஸ்தவர்
      கிறிஸ்துவை முதன் முதல் ஏற்றவர்
    வாழ்த்துப் பெற்றவர் இவர் யார்?

வடு - சிறுகதை

வடு
 சுந்தரி ஆசா, திருச்சி
 சிறுகதை
வாழ்க்கைக்காக வழக்கத்தை உடைக்க முடியாதா?

இது என் வீடு, என் சொந்த வீடு என்பதில் எனக்கு அளவில்லாத பெருமை. காம்பவுண்டு முதல் சர்வண்ட் குவார்ட்டர்ஸ் வரை பார்த்து, பார்த்து கட்டிய வீடு. காம்பவுண்டை ஒட்டி அழகான கிறிஸ்துமஸ் டிரீ இரண்டை உயரமாக வளர்த்து அதில், கிறிஸ்துமஸ் அன்று சீரியல் லைட் போட்டு அலங்கரிப்பதில் அலாதி பிரியம். நீங்கள் கிறிஸ்ட்டீனா என்று கேட்கும்போது, நான் சொல்லும் ஒரே பதில் நான் மதம், ஜாதிக்கு அப்பாற்பட்டவள். நான் நாத்திகன் இல்லை, மதவெறியனும் இல்லை. நம்மை மீறிய சக்தி ஒன்று உண்டு என்பதை நம்புபவள். அதை தெய்வம் என்று ஏற்றுக்கொண்டவள்.

முன்பக்க பூச்செடிகளும், கொல்லையில் காய்கறி தோட்டமும் அமைத்து என் தேவைகளை நானே பூர்த்தி செய்து கொள்கிறேன். என்னோடு இருக்கும் கமலம்மா சமையிலிருந்து, தோட்ட பராமரிப்பு வரை எனக்கு உறுதுணை அவர்தான். ஒருகால் ஊனம், அவளை முடங்கிப்போடவில்லை. என்னோடு சேர்ந்து அவளும் வீராங்கனையாகி விட்டாள்.

அவளுக்கு ஊன்றுகோல் நான், எனக்கு துணை அவள், பத்து வருடமாக என்னோடு அய்க்கியமாகிவிட்டவள். உறவென்று சொல்லிக் கொள்ள பெரிதாக யாரும் இல்லை என்றாலும் பெற்றவர்களை இழந்த பெரும் பாக்கியசாலி.

மன நல மருத்துவர் சுந்தரராஜன் கிளினிக்குக்கு அருகில் எனது வீடு. எம்.ஏ., எம்.பில்., சைகாலஜி முடிந்தவுடன் ஒரு தனியார் கல்லூரியில் மனநல பேராசிரியராக பணிபுரியும்  என்னிடம், டாக்டர் சில நோயாளிகளை கவுன்சிலிங்க்கு அனுப்புவது வழக்கம். பக்கத்திலேயே நான் இருப்பது ஒரு சவுகரியமாக இருக்கலாம். அல்லது எனது கவுன்சிலிங்கில் நம்பிக்கை இருந்திருக்கலாம். எதுவாக இருந்தாலும் இந்த தொழில் மனமகிழ்ச்சியை தருகிறது என்பது உண்மை. 

மாலை நேரம் ரம்மியமானது. வீட்டின் முன் நான் வளர்த்து வரும் ரோஜாக்களின் அழகே தனி. படை வீரர்களைப் போல் வரிசைக் கட்டி சிமெண்ட் தொட்டிகளில் மலர்ந்திருக்கும் ரோஜாக்களை ரசித்து பார்த்துக் கொண்டே மல்லிகை கொடியிலிருந்து பூக்களை பறித்துக் கொண்டிருந்தேன். நானே பறித்து நானே தொடுப்பதுதான் எனக்கு பிடிக்கும். 

‘அம்மா, இரண்டு பெண்கள் உங்களை தேடி வந்து இருக்காங்க’. அவுங்க, பே­ண்ட்டாத் தான் இருக்கனும். ‘வாங்கம்மா’, என்று கமலம்மா கூப்பிட, திரும்பி பார்த்தேன். அழகான சிறுவயது பெண்.  அவளுடன் அவளது தாயாக இருக்க வேண்டும். ஒரு நடுத்தர வயது பெண்மணி. முகம் முழுவதும் சோகம் அப்பிக் கொண்டிருந்தது.

‘வாங்கம்மா, வாங்க’ என்றவுடன் நடுத்தர வயதுப்பெண்மணி, ‘அம்மா எங்களை டாக்டர் சுந்தர்ராஜ் அனுப்பினார்’. ரேவதி மேடத்தை பார்க்கனும். 

‘நான்தம்மா ரேவதி, வாங்க’.

‘கமலா, இவுங்கள கவுன்சிலிங் ரூம்ல உட்கார வை. நான் பூவை சாமிகிட்ட வெச்சிட்டு வந்திடுறேன்’. 

‘சரிம்மா, வாங்கம்மா, மேடம் வந்திருவாங்க ரூம்ல வந்து உட்காருங்க’ என்று சொல்லி கமலா அவர்களை சோபாவில் உட்கார வைத்தாள்.

சிறுவயது பெண்ணை அழைத்து வந்திருக்கிறார்கள் என்றால் ஒன்று காதல் விவகாரமான இருக்கும். அல்லது திருமண பந்தத்தில் சிக்கலாக இருக்கும் என்ற எண்ணத்துடன் கவுன்சிலிங் அறைக்குள் நுழைந்தேன். ரோஜா கொத்தை கையில் ஏந்திக் கொண்டு, சிரிக்கும் அழகான குழந்தையின் படத்தை கண்கொட்டாமல் அந்த இளம்பெண் பார்த்துக் கொண்டிருந்தாள். ‘குழந்தைகள் உனக்கு ரொம்ப பிடிக்குமா?’  என்று அந்த பெண்ணை கேட்டவுடன் ஓ வென்று அழுதுக் கொண்டு எழுந்து ஓட ஆரம்பித்தாள். உடனே அவளது தாயார் பிடித்து இழுத்து வந்து உட்கார வைத்தாள். இதன் காரணம் என்னவாக இருக்கும். அவள் அழுது முடிக்கும் வரை பேசாமல் இருந்தேன். அவளது மனப்பாரம் இறங்கட்டும். வாய்விட்டு சிரிக்கும் போது மன அழுத்தம் குறைகிறது என்றால் வாய்விட்டு அழுது முடிக்கும்போது மனப்பாரம் குறையும் என்பதுதான் கணக்கு. தலை நிறைய பூச்சூட்டி பெரிய குங்குமம் பொட்டும், திருநீறும் பூசி, பட்டுப் புடவையுடன் நகைகளையும் அணிந்து கொண்டு யாரும் டாக்டர் வீட்டுக்கு வரமாட்டார்கள். ஆனால் அலங்காரத்துடன் வித்தியாசமாக வந்திருக்கும் அந்த பெண்ணின் தோற்றம் என்னை சிந்திக்க வைத்தது. இவளது கதைதான் என்ன? என்பது போல் அவரது தாயரை பார்த்தேன். கண்ணைத் துடைத்துக் கொண்டே அவர் ஆரம்பித்தார். ‘மேடம், இவ எங்களோட ஒரே பெண். இஞ்சினியரான பையனுக்கு கல்யாணம் செஞ்சிக் கொடுத்தோம். நாலு வரு­த்துக்கு பிறகு, இப்பத்தான் இவ கர்ப்பமான அந்த சந்தோசத்தை கொண்டாட மாப்பிள்ளையும் இவளும் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு போயிட்டு ஹோட்டலுக்கு போயிருக்காங்க. போற வழியில பாலக்கரை மேம்பாலம் கிட்ட வரு மாப்பிள்ளை பைக்ல வரும்போது பஸ் மோதி அந்த இடத்திலேயே மாப்பிள்ளை இறந்திட்டாரு. இவ மயக்கமாயிட்டதால, ஆஸ்பத்திரியில சேர்த்தோம். காரியங்கள் எல்லாம் முடிஞ்சோன இவகிட்ட மெதுவா சொன்னோம். இவ அத நம்ப மாட்டேங்கிறா’. ‘நீங்க அவசர பட்டிருக்கக் கூடாது’. ‘எப்படிம்மா முடியும், எங்க குடும்பம் பராம்பரிய பழக்கமுள்ள குடும்பம். மாப்பிள்ளையோட இறப்புக்கு பிறகு, செய்ய வேண்டிய சடங்கை எல்லாம் செய்யில்லனா குடும்பத்துக்கு கேடாச்சேம்மா’.

‘அம்மா நீங்க இந்த காலத்துல சடங்கு செய்யிலன்னா குடும்பத்துக்கு கஷ்டம் வரும்ன்னு சொல்றது  சரியில்ல. சின்ன பொண்ணு சடங்கு சம்பிரதாயங்கல ஒதுக்கி வைக்கலாமே. நிறைய சடங்குகளை ஒதுக்கிட்டோம். முக்கியமாக செய்ய வேண்டியதை செஞ்சுதானே ஆகனும்’. ‘என்ன முக்கியமானது?’ ‘மாங்கலியத்தை கழட்டனுமே, இன்னமும் போட்டுக்க முடியாதே’. அந்த இளம்பெண்ணை திரும்பி பார்த்தேன். அவள் மாங்கலியத்தை டாலர் செயினைப் போடுவது போல் போட்டிருந்தாள். மிரட்சியுடன் அதை இருக்கி பிடித்துக் கொண்டிருந்தாள். அவள் கண்களில் நீர், நான் அதை எடுத்து விடுவேனோ என்ற பயத்தில், ‘அம்மா, இதை எடுக்காதீங்க, மாமா இன்னும் உயிரோடுதான் இருக்காரு. வெளியூர் போயிருக்காரு வந்திடுவாரு, என்னை ஏன் இங்க கூட்டிக்கிட்டு வந்தீங்க? வீட்டில் மாமா வந்தார்ன என்னை தேடுவாரு, வாங்க போகலாம்’. என்று தாயாரை பிடித்து இழுத்து கொண்டு ஓட முயன்றாள். ‘பெண்ணோட பேரென்னமா?’ ரேவதி மேடம்.   ‘ரேவதி நீ பயப்படாதே நீ அதை கழட்ட வேண்டாம். மாமா நல்லாதான் இருக்காரு’. ‘நீங்க அம்மாகிட்ட எடுத்துச் சொல்லுங்க.  அவுங்க புரிஞ்சிக்க மாட்டேங்கிறாங்க’. ‘கவலைப்படாதே ரேவதி, நான் உங்க அம்மாவுக்கு புரிய வைக்கிறேன்’.

‘என்ன மேடம் நீங்க அவளுக்கு சாதகமா பேசுறீங்க. அவ இப்படித்தான் மாமா உயிரோட இருக்காரு. நான் கழட்டமாட்டேன். மாமா ஊருக்கு போயிருக்காங்க. அவங்களுக்கு நான் பூ, பொட்டு வைச்சு நகையயல்லாம் போட்டிருந்தாத்தான் பிடிக்கும். அவுங்க வந்தார்ன என்னை கூட்டிக்கிட்டு வெளியே போவங்க. எனக்கு சின்ன குட்டிப்பாப்பா பொறக்கப் போவுது, நாங்க கொண்டானும்னு சொல்லிக்கிட்டே இருக்கா. எப்பவும் ரூம் கதவ திறக்கிறது இல்லை. இப்பவும் அவுங்க அப்பாவும் மாமனாரும்தான் டாக்டர்கிட்ட கூட்டிக்கிட்டு வந்தாங்க. அவுங்க இரண்டு பேரும் காருல உட்கார்ந்து இருக்காங்க. அவுங்க எதையும் இவக்கிட்ட சொல்லாததால அமைதியா இருக்கா’ ‘கொஞ்ச நாளைக்கு எதையும் கட்டாயப் படுத்தாதீங்க. அவுங்க இயல்பு நிலைக்கு வரலை. யதார்த்தத்தை அவ புரிஞ்சிக்க கொஞ்சம் நாளாகும். அது வரைக்கும் பொறுமையா இருங்க. கொஞ்ச நாளைக்கு இங்க கூட்டிக்கிட்டு வாங்க, அவுங்கள சரிபடுத்திடலாம். நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போது ரேவதி குழந்தை போட்டோவுக்கு எதிரில் நின்று கொண்டு மெளவுனமாக பேசிக் கொண்டிருந்தாள். ‘மேடம் இன்னொரு வி­யம், எங்க குடும்பத்துல எல்லோரும் சேர்ந்து ஒரு முடிவு எடுத்து இருக்கிறோம்’. ‘என்ன முடிவு?’ ‘ரேவதி இப்ப இரண்டு மாசமா இருக்க இப்ப அவளுக்கு  வயது 25 ஆகுது. குழந்தை பிறந்தால் அவளுடைய எதிர்காலம் பாழாயிடும். அவ படிச்சவ. ஒரு வேலைக்கு அனுப்பலாம்ன்னு இருக்கோம். எதிர்காலத்தில் அவ வாழ்க்கையில ஒரு முடிவு எடுக்கும்போது குழந்தை ஒரு தடையாய் இருக்கும். அதனால அதை அழிக்க முடிவு செஞ்சிட்டோம். அவங்க மாமனார், மாமியாரும் ஏத்துக்கிட்டாங்க. நீங்கதான் அவளுக்கு புரிய வைச்சி அவளோட சம்மதத்தோட செய்ய ஆசைப்படுகிறோம்.நீங்க தான் சீக்கிரம் அவளுக்கு புரிய வைக்கனும்’. ‘குழந்தை எப்படி தடையா இருக்கும்மா?’

‘உங்களுக்கு தெரியாதது இல்ல, நடைமுறையில உள்ள சிக்கல்களை நீங்களும் தெரிஞ்சிரிப்பீங்க, நாங்களும் பார்த்து உணர்ந்திருக்கிறோம். பெண்ணோட குழந்தையையும் ஏத்துகிற தெய்வ மனசு எல்லாருக்கும் இல்லை’.

அந்த அம்மா சொல்ல சொல்ல என்னோட கடந்த காலம்தான் என் மனக்கண் முன்னாடி நின்னுச்சி. இந்த அம்மா சொன்ன வார்த்தைகளைதான் என்னோட அம்மாவும், அப்பாவும், உறவுகளும் எனக்குச் சொன்னாங்க. என் கணவர் ரவியை இழந்த நேரத்தில் எனக்கு எதுவும் புரியல. வாழ்க்கையே அஸ்தமிச்சிடுச் சின்னுதான் நினைச்சேன். என்னுடைய எதிர்காலத்துக் காக, ‘நல்ல வாழ்க்கை அமையனும், யதார்த்தத்தை நான் புரிஞ்சிக்கனும்ன்னு, என்னிடம் தினிக்கப்பட்ட முடிவுகள் என் விருப்பத்தோடு நடப்பதாக அரங்கேறியது. ரவியின் வாரிசை பறிக்கொடுத்தேன். எல்லாம் சுயநலம். எல்லோரும் சொன்னார்கள் என்ற கருத்து எத்தனை பொய்,  எவ்வளவு சுயநலமானது என்று புரியும்போது நான் எடுத்த முடிவுதான் இந்த உறவுகள் இல்லாத வாழ்க்கை. ரவியின் இறப்பிற்கு பின் அவரது அலுவலகத்தில் இருந்து கிடைத்த பணம், பென்­ன் ஆகியவற்றை வைத்துக் கொண்டு மேலும் படித்தேன். எனது பெற்றோர் உறவுகளை பிரிந்து ஹாஸ்டலில் சேர்ந்ததற்காக அவர்கள் நடத்திய கண்ணீர் போராட்டத்தை வென்று எனது வாழ்க்கை படியில் ஏறி மேலே நின்று ஒரு பேராசிரியராக அவர்களை திரும்பிப் பார்க்கிறேன்.

‘என்ன மேடம், நாங்க எடுத்த முடிவு சரிதானே?’  சீக்கிரம் நாங்கள் சொன்னதை அவகிட்ட சொல்லி புரிய  வெச்சி சீக்கிரமே ஒரு முடிவ எடுக்கிற மாதிரி செய்யுங்கம்மா. இவளோட வாழ்க்கை வீணாப் போறத எங்களால் பார்க்க முடியிலம்மா. ‘நான் இன்னும் கவுன்சிலிங்கை ஆரம்பிக்கவே இல்லை அம்மா. ரேவதிகிட்ட பேசி புரிய வைக்கிறேன்’. நாளைக்கு இதே நேரத்துக்கு வாங்கம்மா. ‘சரிம்மா’. ரேவதி வா. நம்ப வீட்டுக்கு போகலாம். 

‘மாமா உன்னத் தேடுவாரு’ என்று ரேவதியின் கையப் பிடித்து அழைத்துக் கொண்டு போனார். இந்த சமுதாயம் மாறவே மாறாதா? மனைவியை இழந்தவர்களுக்கு குழந்தைகள் இருந்தாலும் அவர்களை ஏற்றுக் கொள்ள பெண்கள் முன்வருகிறார்கள். ஆனால் குழந்தையோடு ஒரு கைம்பெண்ணை ஏற்றுக் கொள்ள எந்த ஆண்மகனும் ஏன் முன் வருவதில்லை. வந்தாலும் விரைவிலேயே சோகத்தில்தானே முடிவடைகிறது. இது ஆணாதிக்க சமுதாயம் பெண்களுக்கென்றே விருப்பு, வெறுப்பு அமுக்கப்படுகிறது. என் குடும்பம், என்னில் எடுத்த முடிவு, என் மனதில் ஏற்படுத்திய புண். நடைமுறையில் ஆறிவிட்டாலும் அது மாறாத வடுவாகத்தானே என் மனதில் பதிந்து விட்டது. 

சுயம் இழந்த பெண், இந்தப்பெண் ரேவதியின் வாழ்க்கையில் நான் என்ன முடிவெடுப்பது? எல்லாம் தெரிந்தே, புரிந்தே என் வாழ்க்கையில் வலுக்கட்டாயமாக எடுத்த முடிவு ரேவதியிடம் சாத்தியமா. அவளிடமும் இந்த மாறாத வடு உருவாகத்தானே செய்யும். இதுதான் எதார்த்தமா? இதுதான் எதிர்காலத்தை நோக்கிய நகர்வா?.

இலக்கியம் சமுதாயத்தின் சுயசரிதை

இலக்கியம் சமுதாயத்தின் சுயசரிதை

 ( இலக்கியம்  என்பதை  இரத்தின  சுருக்கமாக  விளக்கும்  கட்டுரை )

சகோ. விமலிFIHM. இதயா கல்லுVரி, குடந்தை

இலக்கியம் என்பது ஒரு சமுதாயப் படைப்பு. இலக்கியம்
சமுதாயத்திலிருந்து தோன்றுகிறது. அதுவும் சமுதாயத்திற்காகவே தோன்றுகிறது. சமுதாயப் பிரதிபலிப்பாக மட்டுமின்று அதனை மேம்படுத்துவ தாகவும் இலக்கியம் அமைகின்றது. உயர்ந்த எண்ணங்கள்தான் சிறந்த இலக்கியமாக உருக்கொள்கின்றன. சிறப்பானப் பண்புடையது. ஆழமானது. அழகுடையது. இவற்றின் முழுவடிவம்தான் இலக்கியம் “ஸிஷ்மிerழிமிற்re ஷ்வி மிஜுe reஉலிrd லிக்ஷூ ணுeவிமி மிஜுலிற்ஆஜுமிவி”   என்கிறார் எமர்சன். இன வேறுபாட்டாலும், கால வேறுபாட்டாலும் அழியக் கூடாத நிலைத்த இலக்கியமே உயர்ந்த இலக்கியம். எல்லாக் காலத்திலும் படித்து ரசிக்கக்கூடிய கூறுகள் அதில் இருக்க வேண்டும். இலக்கியத்தின் தன்மை நிலைபேறுடையதாக இருக்க வேண்டும்.

இலக்கியம் வாழ்க்கையின் வெளிப்பாடு

வாழ்க்கையில் நம்மால் காணமுடியாத, காணாமல் விட்ட, கண்டும் காண இயலாத, காண விரும்பாத, காண மறுத்த உண்மைகளை விளக்குபவன் கலைஞன். மறைந்த, மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட உணர்ச்சிகள் கவிஞனால் வெளிக் கொணரப்படுகின்றன. வாழ்க்கையின் விளக்கம் கவிஞனால் நமக்கு இலக்கியத்தின் வாயிலாக  கிடைக்கிறது.

இலக்கியம் வாழ்க்கையின் விமர்சனம்

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏற்படும் வாழ்க்கை மாற்றங்களையும் அதன் காரணங் களையும் இலக்கியம் விமர்சனம் செய்கிறது. அந்த விமர்சனங்களை திறந்த மனதுடன் சந்திக்கும் சமூகம் இன்று உலகுக்குத் தேவையாக உள்ளது.

இலக்கியம் வாழ்க்கைக்கு வழிகாட்டி

மனிதன் வாழ்க்கையில் கவனிக்கப்படாத சிறு நிகழ்ச்சியையும் இலக்கியம் தனதாக்கிக் காட்டுகிறது. இலக்கியம் உணர்வைத் தொட்டு உள்ளத்தைத் தன்வயப்படுத்திப் பண்படுத்தும் இயல்புடையது. இயற்கையான வாழ்க்கையும், உணர்வுகளும் மனித உள்ளத்தை விரிவுப்படுத்துவதைவிடக் கற்பனை உணர்ச்சிகள் மனித உள்ளத்தைப் பண்படுத்துகின்றன. வாழ்க்கையின் கூறுபாடுகளில் இலக்கியத்தில் பளிச்சிடுவதால் இலக்கியம் மனித வாழ்க்கைக்கு வழிகாட்டியாகும்.

 இலக்கியம் சமுதாய ஆவணம்

மனிதன் படைக்கும் இலக்கியம் சமுதாயத்தைத் தவிர்த்த ஒன்றில்லை. மனிதர்கள், தான் பிறந்து, வளர்ந்து, வாழ்கின்ற இச்சமுதாயத்தை எந்நிலையிலும் விட்டு விலகி இலக்கியம் படைத்திட இயலாது. ஒரு கலைஞன் படைக்கும் இலக்கியங்கள் சமுதாயத்தில் காலந்தோறும் நடைபெறும் பல நிகழ்வுகளையும், அந்நிகழ்வுகள் படைப்பாளியிடம் ஏற்படுத்திய தாக்கங்களையும் வெளிப்படுத்தும் சாதனங்களாகின்றன. ஒவ்வொரு மனிதனுக்கும், சமுதாயத்திற்கும் இடையே யான உறவுகளைப் பற்றி அறிந்துக் கொள்வதற்கும் சமுதாய நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள், பண்பாட்டுக் கூறுகள் ஆகியவற்றை அறிய உதவும் ஒரு சமுதாய ஆவணமாக இலக்கியம் அமைந்துள்ளது.

இலக்கியத்தில் பொதிந்துள்ள கருத்துக்கள் காலம் கடந்தும்  மக்களுக்குப் பயன்படும் அளவிற்கு அதன் வாழ்நாள் வளர்கிறது. இலக்கியம் என்பது கவிதை, நாடகம், காவியம், புதினம், சிறுகதை, மடல், மொழிபெயர்ப்பு உள்ளிட்ட பலவுமாகும். இலக்கியத்திற்குக் கலைத் தன்மையை அளிப்பன  அழகியல், கற்பனை, உணர்ச்சி, வடிவம் என்பனவாகும்.
 முடிவாக
ஒருவர் தான் அனுபவித்த ஒன்றை மற்றவர்க்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற மனிதப் பண்பே இலக்கியத் தோற்றத்திற்குக் காரணமாகின்றது. ஒருவர் ஒரு பொருளிலோ, நிகழ்ச்சியிலோ கண்ட உண்மையைப் பிறருக்குச் சொல்ல வேண்டும் என்று இயல்பாக எழும் ஆசையே இலக்கியம் தோன்றியதற்கானக் காரணம் எனலாம். ஆழ்ந்த அனுபவித்த உண்மையைக் கூறுவதே இலக்கியம். வாழ்க்கையில் எங்கோ, எப்போதோ தோன்றிய ஒரு நினைவு, ஒரு நிகழ்ச்சி இலக்கியம் பிறக்கக் காரணமாகியுள்ளது. நம் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் இலக்கியம் தோன்றுவதற்கான வித்து ஏற்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றது. அதை புரிந்து கொள்வோம். நாமும் சிறந்த இலக்கியப் படைப்பாளியாகிடுவோம். இனிமையான, ஏற்றமிகு இலக்கியம் படைத்தளிப்போம். அதுவே இன்றைய சமூகத்திற்கான உயரிய வாழ்க்கை சாதனமாகட்டும்.

Thursday 1 March 2018

பணிவு என்னும் இனிய பாதை

பணிவு என்னும் இனிய பாதை

 19. தம்மை நீதிமான்களாக எண்ணுவோர்......

அருள்பணி. மகுழன், 
பூண்டி மாதா தியான மையம்

அவர் அடிப்படையில் நல்லவர். ஆனால் அவர் வாழ்வில் மகிழ்ச்சி இல்லை. அவருடைய மனைவி அவரை புரிந்து கொள்ளவில்லை. அவருடைய பிள்ளைகள் அவரை மதிப்பதில்லை. அவருடைய பேச்சை யாரும் கேட்பதில்லை. அவருக்கு உலக வாழ்வே வெறுத்துவிட்டது. அந்த  ஊரில் மிகவும் புகழ் வாய்ந்த  முனிவர் ஒருவர் இருந்தார். நல்லவர் அந்த முனிவரிடம் சென்று, “முனிவரே, எனக்கு இந்த உலகம் வெறுத்துவிட்டது. நான் மோட்சத்திற்கு செல்ல வேண்டும். இப்போதே நான் மோட்சத்திற்கு செல்லும் வழியைக் காட்டுங்கள்” என்றார். முனிவரும், “கவலைப்படாதீர்கள் நண்பரே, இந்த வழியாக எங்கும் நிற்காமல் 100 நாட்கள் செல்லுங்கள். ஓர் ஓலைக்குடிசை இருக்கும். அங்கே இரவு தங்கி விட்டு மீண்டும் 100 நாட்கள் செல்லுங்கள். மோட்சத்தை அடைந்து விடுவீர்கள்”  என்றார். மகிழ்ச்சியோடு அந்த நல்லவரும் புறப்பட்டார். முனிவர் சொன்னதைப் போலவே 100 நாட்கள் நடந்தார். 

ஓலைக்குடிசையும் வந்தது. அதில் உறங்குவதற்கு முன்பு தாம் செல்லும் வழியை மாற்றிவிடக் கூடாது என்பதற்காக தன் காலணிகளை செல்லும் வழிநோக்கி வைத்தார். முனிவரின் சீடர் ஒருவர் அந்த ஊரில் இருந்தார். அவர் அந்த நல்லவர் நன்கு உறங்கிக் கொண்டிருந்த போது காலணிகளின் திசையை மாற்றி எதிர்திசையில் வைத்துவிட்டார். காலையில் எழுந்த நல்லவர் மீண்டும் உத்வேகத்துடன் நடக்கத் தொடங்கினார். 100 வது நாளில் ஓர் ஊரை அடைந்தார். அதுதான் மோட்சம் என்று எண்ணி மகிழ்ச்சி அடைந்தார். அந்த ஊர் தம் சொந்த ஊரைப் போலவே இருப்பதைக் கண்டு ஆச்சரியம் அடைந்தார். அவர் ஒரு வீட்டிற்குச் சென்றார். அந்த வீடும் அவர் சொந்த வீட்டைப் போலவே இருந்தது. அந்த வீட்டில் ஒரு பெண்மணியும், சில பிள்ளைகளும் இருந்தனர். அவர்கள் மோட்சத்தில் இருப்பதால் நல்லவர்களாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு அவர்களிடம் அன்பாக பேசினார். அவர்களும் தன் கணவர் திரும்பி விட்டார். தம் தந்தை திரும்பி வந்துவிட்டார் என்று மகிழ்வோடு உறவாடினார். அந்த இடமே மோட்சமாக அவர்களுக்கு மாறியது. மகிழ்ச்சியை நாம் கைகொள்வதற்கு ஒரு சிறந்த வழி நாம் பார்வைகளை
 (Attitudes)  பரிசீலிப்பதாகும். நாம் உண்மையான பார்வைகளைப் பெறுவதற்கு ஒரு பெரும் தடையாக இருப்பது நான் நீதிமான் என்ற எண்ணம்.  (Self righteous attitude). ஆண்டவர்  இயேசு கிறிஸ்து தம்மை நீதிமான்களாக நினைத்துக் கொண்டு சாதாரண மக்களை குறைசொல்லி வாழ்ந்து வந்த பரிசேயர், மறைநூல் அறிஞர்களை கடுமையாகச் சாடுகிறார். இயேசுவின் காலத்திலும், ஏன் இப்பொழுதும் இறைநம்பிக்கை கொண்டோர் எளிதாக இந்த “நான் மட்டுமே நீதிமான்” என்ற எண்ணத்தில் வாழ்ந்துவிடுவதைப் பார்க்கிறோம். இறைநம்பிக்கை உடையவர்கள் மத்தியில் மட்டுமல்ல இறைநம்பிக்கை இல்லாத உலகைச் சார்ந்த மக்கள் கூட நான் இறைநம்பிக்கை உடையவர்களைப் போல வெளிவேடக்காரன் இல்லை” என்று நினைக்கலாம். 

சமய நல்லிணக்கத்தின் தொடக்கம் நாம் இந்த “நான் நீதிமான் பார்வையை” அகற்றுவதாகும். நம் மதத்தின் பெருமையை நாம் உரைப்பதில் தவறில்லை. மற்ற மதத்தினர் மனத்தைப் புண்படுத்தும்படியாக பேசுவது சமய உரையாடலுக்கு இட்டுச் செல்லாது. சில தேசியவாதிகள், பிரிவினை வாதிகள் நம் அழகிய இந்திய தேசியத்தின் அமைதியை குலைக்கின்றனர் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. ஆனால் மற்ற மதத்தினரின் உணர்வுப்பூர்வமான நம்பிக்கைகளை நாம் குறைசொல்வதால் சமய நல்லிணக்கம் குலைவதற்கு நாமும் துணை போகிறோமோ என்று நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்
.
நீங்கள் செய்தித்தாளை படிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். தற்போது உள்ள பத்திரிக்கைகளில் சமூகத்தில் உள்ள அவலங்கள் தான் பிரதானமாக பிரசுரிக்கப்படுகின்றன. அவற்றைப் பார்க்கும்போது உங்கள் கருத்து என்ன? அந்த இடத்தில், அந்த சூழ்நிலையில் நீங்கள் இருந்தால் எப்படி நல்விதத்தில் நடந்து இருப்பீர்கள் என்றுதானே நினைக்கிறீர்கள். உங்களுக்கு ஓர் இரகசியம் சொல்கிறேன். உங்கள் இடத்தில், உங்கள் சூழ்நிலையில் உங்களைவிட சிறப்பாக செயல்படமுடியும் என்று எத்தனை பேர் நினைக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? அப்படி நினைக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

இயேசு தாம் நீதிமான்கள் என எண்ணியோரை மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறார். இறைவேண்டல் புரியச் சென்ற இருவருள் இறை ஆசீர் பெற்று வீடு திரும்பியவர் தாழ்ச்சி மிகுந்த ஆயக்காரரே அன்றி “ தான் நீதிமான்”  என நினைத்த பரிசேயர் அல்ல என்று நிரூபித்தார். மத்தேயு நற்செய்தி 23 ஆம் இயலில் பரிசேயர், மறைநூல் அறிஞரின் “நீதிமான்கள் மனப்பான்மையை”  சாடுகின்றார். அவர் வாழ்வு முழுவதும் பரிசேயர், மறைநூல் அறிஞரின்“நான் நீதிமான்”  எண்ணத்தை எதிர்த்து போர் புரிகிறார் என்பதை நாம் காணமுடியும்.

நம் அன்றாட வாழ்வில் நன்மைக்கும், தீமைக்கும் இடையே நடைபெறும் போராட்டத்தை நாம் உணரலாம். நம் தனிப்பட்ட வாழ்வில் கூட நன்மைக்கும், தீமைக்கும் போராட்டம் நடைபெறுவதையும் அதில் எதற்கு நாம் முக்கியத்துவம் தருகிறோமோ அவ்வாறே நம் வாழ்வும் அமையும் என்பதையும் நாம் அறிவோம். அது சரிங்க, அதே வேளையில் நம் மனதில் ஒரு கேள்வி எழலாம். அதாவது பிறர் தவறு செய்யும்போது நாம் அதை தவறு என்று எடுத்துச் சொல்வது நம் கடமைதானே. அந்த சமயத்தில் நாம் குற்றப்படுத் தலாமா? என்று எண்ணலாம்.  பிறர் தவறு செய்யும்போது அந்த குறையை அந்தக் குற்றத்தின் கடுமைக்கேற்ப நாம் சுட்டிக்காட்ட வேண்டும். அந்தக் குற்றத்தை சுட்டிக்காட்ட வேண்டும். அந்த குற்றத்தை சுட்டிக்காட்டும்போது நாம் என்னவோ தவறே செய்ய இயலாத புனிதர் போலவும் அவர் மட்டும் தான் குற்றம் செய்கிறார் என்பதை போலவும் நினைக்கக் கூடாது. மாறாக அவருடைய உண்மையான முன்னேற்றத்தை மட்டுமே கவனத்தில் கொள்ள வேண்டும்.

சரிங்க, உங்களுக்கு “நான் நீதிமான்”  என்ற எண்ணம் இருக்கிறதா என்பதை எளிதில் கண்டுபிடித்துவிடலாம். எப்படி என்று கேட்கிறீர்களா? நீங்கள் எந்த அளவிற்கு பிறரைப் பற்றி பிறருக்கு பின்னால் பேசுகிறீர்களோ அந்த அளவிற்கு உங்களுக்கு “நான் நீதிமான்”  என்ற எண்ணம் இருக்கிறது. இந்த எண்ணத்தை புதிய ஆண்டில் தவிர்க்க புறணி பேசுவதை தவிர்ப்போம்.
இயேசு நம்மைப் பார்த்து கூறுகிறார்:

“தம்மை நீதிமான்களாக எண்ணுவோருக்கு ஐயோ கேடு. அவர்கள் அழிவை விரைவில்  காண்பார்கள். ஏனெனில் அழிவுக்கு முந்தியது அகந்தை”

தவக்காலம் 4 ஆம் வாரம்

தவக்காலம் 4 ஆம் வாரம்
 11 - 3- 2018
2 குறி 36: 14-16.19-23; எபே 2: 4-10; யோவா 3: 14-21

  நம்பிக்கை வாழ்வைத் தரும், வெற்றியைத் தரும். ஆனால் நம்பிக்கை என்பது என்ன? என்பது பற்றி இன்றைய வாசகங்கள் விளக்குகின்றன. இன்றைய நற்செய்தி பகுதி, நிக்கோதேமுஸ் என்ற யூதருடன் இயேசு உரையாடிய பகுதியிலிருந்து எடுக்கப்பட்டது. தன் அன்பை வெளிப்படுத்த தன் மகனையே  இறைவன் நம்பிக்கையாளருக்கு அளிக்கிறார். இதனால் நம்பிக்கையாளர்கள் அழிவதில்லை. ஆபிரகாம் தன் மகனை இறைவனுக்குப் பலியிட முன் வருகிறார் (தொ.நூ 22: 1-13) ஆனால் இறைமகன் தன் மகனான இயேசுவின் தியாகத்தினால் தன்மீது நம்பிக்கைக் கொண்டவர்களுக்கு அன்புக் காட்டுகிறார்.

இறைவனின் தியாக அன்பை புரிந்து ஏற்றுக் கொள்ளாதவர்கள் தீர்ப்பு பெற்று விட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அன்பிலும் தியாகத்திலும் நம்பிக்கை வைக்காதோர் அழிவை சந்திக்கின்றனர். முதல் வாசகத்திலும் இஸ்ரயேல் மக்கள் உண்மையற்ற வர்களாய், இறைவனின் வார்த்தைகளைப் புறக்கணித்து வாழ்ந்தார்கள் என்றும், இதனால் ஆண்டவரின் சினம் அவர்கள் மேல் வீழ்ந்ததென்றும், அதற்கு தண்டணையாக பாபிலோனுக்கு அடிமைகளாக எடுத்துச் செல்லப்பட்டார்கள் என்றும் விவரிக்கப் பட்டுள்ளது.

அதே நேரத்தில் பாரசீக அரசன் சைரசீன் வழியாக அவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள். எனவே அவர்களின் நம்பிக்கையின்மைக்கு தண்டனையும், இறைவன் இரக்கத்தினால் அவர்களுக்கு விடுதலையும் கிடைக்கிறது.

இரண்டாம் வாசகத்தில் பவுல் அடிகளார் கடவுளின் கருணையினால் மக்கள் வாழ்வு பெறுகின்றனர் என்கிறார். ‘நீங்கள் மீட்கப்பட்டிருப்பது அந்த அருளாலேயே’ (எபே 2:8) என்கிறார். அதே நேரத்தில் இறைவனின் அருளையும் நம்பிக்கையையும் இணைத்துக் கூறுகிறார் பவுல் அடிகளார். நீங்கள் அந்த அருளாலேயே நம்பிக்கையின் வழியாக மீட்கப் பட்டுள்ளீர்கள் (எபே 2:8 ). 
இன்றைய இரண்டாம் வாசகத்தின் இறுதியில் ஓர் அருமையான வாக்கியம் வருகிறது, ‘நற்செயல்  புரிவதற்கென்றே கிறிஸ்து இயேசு வழியாகப் படைக்கப் பட்டிருக்கிறோம்’ ( எபே 2:  10)
இத்தவக்காலத்தில் சோதனைகள் மீது வெற்றி கொண்டு புது மனிதர்களாக மாற்றம் பெற்று, இப்போது நமது நம்பிக்கையில் உறுதி பெற வேண்டும். தியாகம் செய்யும் அன்பினால் நம் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறோம்.

தியாகம் செய்யும் மனது மனிதருக்கு எளிதாக வருவதில்லை. மற்றவர்கள் நமக்காக தியாகம் செய்வதை விரும்புகிறார்கள். ஒருவர் சற்று வசதியுடையவர். அடிக்கடி சுற்றுலா செல்வார். வெளிநாடுகளுக்குக் கூட பெரும் செலவழித்து சுற்றுலா செல்வார். அவர்களின் ஊரில் பள்ளிக்கூடம் இருந்தது. பள்ளியின் தலைமை ஆசிரியர், பிள்ளைகள் அமர பெஞ்ச் செய்து தரும்படி அவரிடம் கேட்டார். எங்களுக்கு வசதியில்லை என்று பதிலளித்தார். அந்த சற்று வசதியுள்ளவர். பிள்ளைகளின் படிப்புக்காக சற்று தியாகம் செய்ய முன் வரவில்லை அவர்.

தண்டாமல் ஈவது தாளாண்மை தண்டி 
அடுத்தக்கால் ஈவது வண்மை அடுத்தடுத்துப்
பின்சென்றால் ஈவது கால்கூலி பின்சென்றும்
ஈயான் எச்சம் போல் அறு.        - ஒளவையார்.

கேட்கமால் கொடுப்பது பெருமை, கேட்டுக் கொடுப்பது குறைந்த பெருமை. பலமுறைக் கேட்டு கொடுப்பது தர்மத்தின் கால்பகுதி, கேட்டும் கொடுக்காதவர், கழிவினை போன்றவர் என்று அவர் உறவை விட்டு விடுக என்கிறார்  ஒளவையார். நம்பிக்கையால் தியாகம் நம் வாழ்வில் துளிர்விடும்

தவக்காலம் மூன்றாம் வாரம்

தவக்காலம் மூன்றாம் வாரம்
 4- 03 - 2018
வி.ப 20: 1-7;  1 கொரி 1: 22-25;  யோவா 2: 13-25;

கெடாத பால் நமக்கு நலம் தரும். திரிந்த பால் கெடுதல் தரும். வழிபாடுகளை முறையுடன் செய்வது, கடவுளுடன் நாம் கொள்ளும் உண்மை, உறவின் வெளிப்பாடு. வழிபாடுகளை வணிக முறையில் செய்தால் இறைவனின் அன்பிற்கு எதிரான நிலையாகும். ஒருவர் பெந்தகோஸ்தே சபையினரை, பரிசுத்த ஆவியாரின் வியாபாரிகள் என்று குறிப்பிட்டார்.

இத்தவக்காலத்தில் நம் நம்பிக்கையைத் தூய்மை செய்ய வேண்டும். நம்பிக்கையில் அழுக்கு பிடிப்பது உண்டு. அந்த அழுக்குகளை அகற்ற வேண்டும். இன்றைய நற்செய்திப் பகுதியில், இயேசு எருசலேம் ஆலயத்தில் வியாபாரிகளை விரட்டியடிக்கும் நிகழ்ச்சியைப் பார்க்கிறோம்.

ஒத்தமைப்பு நற்செய்திகளில் இயேசு எருசலேமில் வெற்றி வீரராக நுழைந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, இயேசு எருசலேம் ஆலயத்திலிருந்து வியாபாரிகளை விரட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஆனால் யோவான் நற்செய்தியில், இயேசுவின் பணி துவக்கத்திலேயே அது நடைபெறுகிறது. காணாவூர் திருமண நிகழ்ச்சிக்குப் பிறகு இடம் பெறுகிறது. இயேசு ஆடுமாடுகளையயல்லாம் விரட்டினார் என்று யோவான் நற்செய்தியில் மட்டும்தான் தரப்பட்டுள்ளது.

கோவிலை பராமரிக்க நிதி தேவைப்பட்டது. அதற்காக கோவில் வரிகூட வசூலித்தார்கள். ஆனால் மக்களின் பக்தியை பயன்படுத்திக் கொண்டு, பொருள்கள் விற்பனை செய்து வியாபாரச் சூழலை சில இடங்களில் ஏற்படுத்தி விடுகிறார்கள். நம் திருத்தலங்களிலும், மற்ற சமய திருத்தலங்களிலும் இந்த வியாபாரச் சூழலை இப்போதும் காண முடிகிறது.

முதல் வாசகத்தில் விடுதலைப் பயணத்தின்போது மக்களுக்கு, மோசே அளித்த பத்து கட்டளைகளைப் பற்றி பார்க்கிறோம். ‘என்மீது அன்பு கூர்ந்து என் விதிமுறைகளை கடைபிடிப்போர்க்கு ஆயிரம் தலைமுறைக்கு அன்பு காட்டுவேன்’ என்று இறைவன் கூறுகிறார். அதே நேரத்தில், ‘என்னைப் புறக்கணிக்கும் மூதாதையரின் பாவங்களைப் பிள்ளைகள் மேல் மூன்றாம் நான்காம் தலைமுறை மட்டும் தண்டித்துத் தீர்ப்பேன்’ என்றும் கூறப்பட்டுள்ளது.

தவக்காலம், கடவுளின் அன்பில் உயர்கிற, உறுதி பெறுகின்ற காலம். வழிபாடுகள், ஆலயங்கள் இறை அன்பில் வளர்க்கின்ற கருவிகளாக விளங்க வேண்டும். புனிதத்தை வளர்க்கும் வழிகள் திரிந்து போக விடக் கூடாது. இரண்டாம் வாசகத்தில் பவுல் அடிகளார், ‘சிலுவை கடவுளின் ஞானமும் வல்லமையுமாயுள்ளது’ என்கிறார். வழிபாடுகளை முறையாகப் பயன்படுத்தினால், விண்ணக வழி நமக்குத்  திறக்கும்

தமிழகத்தில் வீசும் வெற்றிடம்

தமிழகத்தில் வீசும் வெற்றிடம்

கேத்தரீன் ஆரோக்கியசாமி, திருச்சி

2016 டிசம்பரில் தொடங்கிய குழப்பத்திலிருந்து தமிழ்நாடு இன்று வரை மீண்டு வரமுடியவில்லை. பிரேக்கிங் நீயூஸ்களால் வீயூP யூழிமிe  உயர்த்திக் கொண்டிருந்த தொலைக்காட்சி சேனல்கள் சற்று அமைதியாக இருந்தாலும் ஆர்.கே நகர்  தேர்தல் தமிழ்நாட்டையே புரட்டிப்போட்டுவிட்டது.

‘பணம் ஆறாக ஓடுகிறது’ என்று ஆளும் கட்சி, எதிர்கட்சி, தொலைக்காட்சி, வாட்ஸ்அப், பேஸ் புக், இருபது ரூபாய் நோட்டு விளையாடுகிறது என்று அலரினாலும் ஜம்மென்று தேர்தல் வெற்றியுடன் முடிந்தது என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பது வெட்கக் கேடானது. துணை ராணுவம், தேர்தல் பார்வையாளர்கள், காவல்துறை அதிகாரிகள் எல்லோரும் என்ன செய்து கொண்டிருந்தார்கள். வெளிப்படையாக பணம் வென்றது  என்று எல்லோரும் பேசுவது வெட்கத்துக்குரிய செயல் இல்லையா? தமிழ்நாடு, வெட்கி தலைக்குனிய வேண்டும் . தம்பட்டம் அடித்துக் கொண்டிருப்பது தேசிய அளவில் தமிழ்நாட்டுக்கு ஒரு தலை குணிவு இல்லையா? பணத்தால், வென்றவர்கள் தர்மம் நியாயம் பற்றி பேசுவது ‘சாத்தான் வேதம் ஓதுவது’ போன்று இல்லையா? வீரந்தமிழன், தன்மானத் தமிழன் தரம் தாழ்ந்து விட்டானா? வறுமையிலும் கையேந்த வைத்தது  யார்? திரும்ப வாங்கினால் என்ன தவறு? என்பது எந்த விதத்தில் நியாயம்? 

வறுமையை சுட்டிக்காட்டி விலை பேசுவதும், வாங்குவதும் குற்றமில்லையா? ஜனநாயகத்தில் பணம் எப்படி விளையாடியது? லஞ்சம் தமிழகத்தில் தலைவிடுத்தாடுகிறது என்பது உண்மை என்றாலும், ஆட்சியையே பணயம் வைக்கும் லஞ்சம், சமுதாயத்தை எங்கோ கொண்டு நிறுத்திவிடும். மனிதம் மரித்து போகும். வாழ்வியல் வகையற்றுபோகும். வந்தாரை வாழ வைத்த தமிழகம் இன்று வாழ்வுரிமை தேடி அலைகிறது.

தமிழகம் இவ்வளவு கேவலமான நிலைக்கு போனதற்கு காரணம் 2016 டிசம்பர் 5 இல் ஏற்பட்ட பேரிழப்புதான் காரணம் என்று எல்லோராலும் சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டை தன் கண் அசைப்பில் வைத்திருந்த அந்த ஆளுமை மறைந்தபின் ஏற்பட்ட வெற்றிடம் ‘தலைக்குத் தலை நாட்டாமையாக ஆடவைத்திருக்கிறது’ என்று கருத்து பரவலாக வைரஸ்சாக பரப்பப்படுகிறது.

இரும்பு கரம் கொண்டு எல்லோரையும் அடக்கி ஆண்ட அந்த இரும்பு மனுசி வெற்றியாளர்களை உருவாக்கவில்லçயா? நெஞ்சுரம் கொண்ட வீரப்பெண். தன்னைப்போலவே நெஞ்சுரமிக்கவர்களாக அவரது அரசியல் பெண் வாரிசுகளை உருவாக்கவில்லையா? அவரை சுற்றியுள்ள மந்திரிகளும் எம்.எல்.ஏக்களும் கோழைகளா? தலைவியின் ஆளுமையும் வீரமும், அரசியல் லவாகமும் அவர்களிடம் இல்லையா? இல்லை அவர்கள் அப்படி வளர்ந்துவிடக்கூடாது என்ற நோக்கத்தில் அடக்கி வைக்கப்பட்டவர்களா?

அரசியல் வெற்றிடம் என்பது ஒரு மாயை. ஓர்  ஆளுமை மறைந்தால் மற்றொரு ஆளுமை நிரப்பும். அதை நாம் இனங்கண்டு கொள்ளாமல் இருப்பது நமது தவறு. கருணாநிதி, ஜெயலலிதா இருவருமே இரு பெரும் ஆளுமைகள். இன்றைய அரசியல் களத்தில் ஒருவர் மறைந்துவிட்டார். மற்றொருவர் செயலிழந்து இருக்கிறார் என்றாலும், அவரது வாரிசு ஆளுமை இல்லாதவர் என்று சொல்ல முடியாதே. ஜெயலலிதாவுக்கு வாரிசு அவரது தொண்டர்கள். ஒன்னரை கோடி தொண்டர்களை கொண்டிருக்கும் அவரது கட்சி ஆளுமைமிக்கது. கட்சியிடையே பிளவும், சண்டையும் ஏற்பட்டாலும் மற்ற கட்சிக்கு தாவாத தொண்டர்களை கொண்ட கட்சி. அது இரு பெரும் திராவிட கட்சிகளும் தொண்டர்கள் வி­யத்தில் பலம் பொருந்தியது. இது எப்படி மறைந்து போகும்?. காவிக்கு எப்போதும் வழிவகுக்காது.

ஜெயலலிதாவுக்கு முன்பு எம்.ஜி.ஆரை ஆளுமையாக கொண்டாடிய தொண்டர்கள் பிற்காலத்தில் ஜெயலலிதாவை ஆளுமையாக ஏற்றுக்கொள்ள வில்லையா? அண்ணாவுக்கு பின் கலைஞரை ஏற்றுக்கொள்ளவில்லையா? தமிழ்நாடு எப்போதும் திராவிடத்தன்மையை கொண்டது. திராவிட கட்சிகளால் இப்போது தமிழ்நாட்டுக்கு ஏற்படும் இழிவு தமிழ் மக்களைத்தானே சாரும்.

ஆளுமையின் மறைவுக்குப் பிறகு அந்த அரசியல் அமைப்பில் இருந்த பலகீனங்கள் இப்போது வெளிப்படுகிறது. பலகீனங்களையும், அரசியலமைப்பின் கோளாறுகளையும் வெல்பவர்களே ஆளுவார்கள். ஆளப்போகிறார்கள்.  பொறுத்திருந்து பார்ப்போம் !!!

வெற்றி உங்கள் கையில்

வெற்றி உங்கள் கையில்
வெற்றியைக் கொண்டாடுவோம்.

 அருட்திரு. எஸ்.  ஜான் கென்னடி,
பூண்டி புதுமை மாதா கல்வியியல் கல்லூரி, சமயபுரம்

திரைப்படத்தில் வடிவேலுவின் நகைச்சுவையை ரசிக்காதோர் யாரும் இல்லை. அப்படி அனைவரும் ரசித்த ஒரு நகைச்சுவையை சொல்கிறேன். வடிவேலு போய்க்கொண்டிருப்பார். சிங்கமுத்துவும், மற்றொரு நடிகரும், வடிவேலைப் பார்த்து பேசிக்கொள்வார்கள். ‘அண்ணே! இவன் சரியா வருவானாண்ணே’ என்று ஒரு நடிகர் சொல்ல அதற்கு சிங்கமுத்து ‘யாரு? இவன் சரியா வரமாட்டான்டா’ என்று சொல்லுவார். வடிவேலு ‘யோவ் எதுக்குயா நான் சரியா வரமாட்டேன்’, சொல்லுயா என்பார். சிங்கமுத்து, ‘நான் நினைக்கிற மேட்டருக்கு நீ சரியா வரமாட்டடா போடா’ என்று சொல்லுவார். காலையில் வடிவேலு சிங்கமுத்து வீட்டின் முன் நின்று, ‘மெட்ராசுக்கு போறேன். அதுக்கு முன்னாடி ஒரு டவுட்ட கிளியர் பண்ணிட்டு போலாம்ன்னு வந்தேன். அன்னைக்கு நீ அதுக்கு சரிபட்டு வரமாட்டேன்னு சொன்னீங்க, நான் எதுக்கு சரிபட்டு வரமாட்டேன்னு சொல்லுங்க’ என்பார். சிங்கமுத்து ‘நீ அதுக்கு சரிபட்டு வரமாட்டடா என்று கோபத்தோடு சொல்லுவார்’. மனைவியும் ‘நீ அதுக்கு சரிபட்டு வரமாட்ட’ என்பார். கடைசியில் வடிவேலுவின் அப்பாவும் இணைந்து நீ அதுக்கு சரிபட்டு வரமாட்ட என்பார். வடிவேலு ‘கடைசி வரைக்கும் சொல்லவே மாட்டேன்கிறாங்களே, எப்ப அடிச்சாலும் அதுக்கு ஒரு காரணத்த சொல்லி அடிப்பாங்க. அது மனசுக்கு ஒரு ஆறுதலா இருந்துச்சு. இப்ப அடிச்சதுக்கு காரணமே சொல்லாம அனுப்புறாங்களே. நான் எப்படிடா ஊருல போய் பொழப்ப நடத்துறது. எந்நேரமும் மனசு உருத்துமே, எதுக்குடா நான் சரிபட்டு வரமாட்டேன் சொல்லுங்கடா,’ என்று கூறுவார். இந்த ஜோக்கை பல முறை பார்த்து பார்த்து சிரிச்சிருப்பீங்களே. 

நண்பர்களே! வடிவேலு  அவர் எதற்கு சரிபட்டு வரமாட்டார் என்பதை அறிய என்ன பாடுபடுகிறார் பாருங்கள். ஆனால்,‘உனக்கு கணக்கு வராது, ஆங்கிலம் வராது, அறிவியல் வராது, பெயிலாத்தான் போவ, மாடு மேய்க்கத்தான் லாயக்கு, பேசத்  தெரியாது, பாடத்  தெரியாது, எழுதத் தெரியாது, உனக்கு எதுவும் வராது. நீ எதுக்கும் சரிப்பட்டு வரமாட்ட’ என்று மற்றவர்கள் நம்மைப் பார்த்து சொல்லும்போது நம்மில் பலர் ஏற்றுக்கொள்கிறோம். வடிவேலைப் போல் நான் ஏன் சரிப்பட்டு வரமாட்டேன்னு கேட்க, சிந்திக்கத் துணிவதில்லை. அதற்கும் மேலாக நமது தோல்விகளைக் கொண்டாடியும் வருகிறோம். ஆம் சில இளைஞர்கள், ‘மாப்ள எனக்கு 4 அரியர்ஸ் இருக்கு, ஆங்கிலம் வராது, எங்களுக்கு எதுவுமே வராதுப்பா’ என்று சொல்லிக்கொண்டு இருப்பார்கள். சிலர், ‘எனக்கு படிப்பு வராது, படிச்சாலும் மனசுல ஏறாது, அப்படியே படிச்சாலும் பரீச்சை அன்னைக்கு மறந்திடும். எல்லாமே கஷ்டமான கேள்வியா வரும்’ என்று சொல்வார்கள். ஒரு சிலர், ‘எனக்கு எந்த நல்லதும் நடக்காது. எப்பவும் என் வாழ்க்கை கஷ்டம்தான். எனக்குன்னு யாருமில்லை. எதுவுமில்லை. எது செஞ்சாலும் தோல்வியில்தான் முடியும்’ என்று சொல்வார்கள். இவ்வாறு பேசி பலர் தங்களது தோல்விகளைக் கொண்டாடி வருகிறார்கள். அவர்கள் தங்களின் இயலாமையை ஏற்றுக்கொண்டு அந்தத் தடைகளை உடைத்து வெளியே வருவதற்கு பயந்து, தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி தோல்விகளை வெளிப்படையாக ஒத்துக்கொள்ளாத காரணத்தினால் தான் தோல்விகளைக் கொண்டாடப் பார்க்கிறார்கள். தோல்விகளைப் பற்றி ஒரு சமூகம் கைத்தட்டினால் அந்தச் சமூகம் தோற்றுவிடும். ‘தோல்விகளைக் கொண்டாடுதல்’ என்ற மனநிலையிலிருந்து வெளியே வர வேண்டும். நமது வெற்றியை நாம் எப்பொழுதும் கொண்டாட வேண்டும். எனக்கு ஆங்கிலம், பேசத்தெரியாதுன்னு சொன்னா, எனக்கு படிப்பு வராதுன்னு சொன்னா, உடனே கைத்தட்டுகிற பழக்கம் சமூகத்தில் புரையோடிக்கிடக்கிறது. இந்த மனப்பாங்கு மிக மிக தவறானது. எனக்கு வராது, வராது என்று சொல்லி தோல்விகளை ஏற்றுக்கொண்டு தப்பிக்கும் மனப்பாங்கை உடைக்க வேண்டும். அதிலிருந்து மீண்டு வரவேண்டும். ‘ஏன் எனக்கு வராது, ஏன் நான் அதற்கு சரிப்பட்டு வரமாட்டேன், ஏன் நான் அதுக்கு செட்டாகமாட்டேன் ’ என்று கேள்விகளை எழுப்புகிறவர்களால் மட்டுமே வெற்றி பெற முடியும்.  வரலாற்றில் இடம் பிடித்த வெற்றியாளர்களைப் பாருங்கள். அவர்கள் எல்லோருமே தங்கள் தோல்விகளைக் கொண்டாடவில்லை. அவர்கள் அவைகளை எதிர்த்துப் போராடியவர்கள். அந்தத் தடைக்கற்களை உடைத்தெறிந்தவர்கள்.  மற்றும் தோல்விகளை படி கற்களாக மாற்றியவர்கள். ஆகவேதான் அவர்களின் வெற்றியை அவர்களால் கொண்டாட முடிந்தது. அன்பு வாசகர்களே! இனி யார் உங்களைப் பார்த்து ‘இது வராது, அது வராது, இதுக்கு சரிப்பட்டு வரமாட்ட, அதுக்கு சரிப்பட்டு வரமாட்ட’ என்று சொல்லும்போது ‘நான் ஏன் இதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்’. நான் ஏன் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன் என்று கேள்விகளை எழுப்பி ‘எனக்கு எல்லாம் வரும், எல்லாவற்றிற்கும் சரிப்பட்டு வருவேன்’ என்ற மனப்பாங்கை வளர்த்து, தோல்விகளைக் கொண்டாடாமல் வெற்றிகளைக் கொண்டாட வாழ்த்துகிறேன். 

Don't Celebrate failures, Celebrate success

ஒருவர்  உன்னை தாழ்த்தி  பேசும்போது ஊமையாயிரு.  புகழ்ந்து  பேசும்போது செவிடனாய் இரு, எளிதில் வெற்றி பெறலாம்.     

கிறிஸ்தவ வாழ்வும் அருள் அடையாளங்களும்

கிறிஸ்தவ வாழ்வும் அருள் அடையாளங்களும்
 அருள்பணி. எஸ். அருள்சாமி, 
பெத்தானியா இல்லம், கும்பகோணம்

முன் குறிப்பு

  கடந்த இரு ஆண்டுகளாகத் திருப்பலிக்கடுத்த  அடிப்படை உண்மைகள் பற்றியும், அதன் அமைப்புக் கூறுகள் பற்றியும் விளக்கம் எழுதிக் கொண்டிருந்தேன். இது 2017 ஆம் ஆண்டு டிசம்பர் திங்களோடு முடிவடைந்தது. அதோடு முடித்துக் கொள்ளலாம் என நினைத்தேன். ஆனால் இவ்விதழின் ஆசிரியர் தொடர்ந்து ஒப்புரவு அருள் அடையாளம் பற்றி எழுதும்படிக் கேட்டார். வேறு சிலர் அருள் அடையாளங்கள் எல்லாவற்றையும் பற்றி எழுதலாமே என்ற ஆலோசனை கொடுத்தார்கள்.

முதலில் சற்று தயங்கினேன். பிறகு சரி எழுதலாம் என்ற முடிவுக்கு வந்தேன். ஆனால் ஒவ்வொரு அருள் அடையாளங்கள் பற்றி எழுதும் முன்பு அருள் அடையாளங்கள் பற்றிய அடிப்படை புரிதல் அவசியம் எனத் தோன்றிற்று. எனவே “கிறிஸ்தவ வாழ்வும் அருள் அடையாளங்களும்”  என்ற தலைப்பில் எனது விளக்கத்தைத்  தொடங்குகிறேன்.

முன்னுரை

கிறிஸ்தவ வாழ்வு அருள் அடையாளங்களைப் பின்புலமாக வைத்து உருவெடுத்து வளர்ந்து வளமையை நோக்கி நகர்வது என்று சொல்லலாம். அருள் அடையாளங்களைப் பெறுவதும் கொண்டாடுவதும் இறையனுபவத்திற்கு இட்டு செல்ல வேண்டும். அப்போதுதான் கிறிஸ்தவ வாழ்வு வளரவும், வளமையை நோக்கி நகரவும் முடியும். எனவே  அனுபவம் பற்றியும், அருள் அடையாளம் பற்றியும் உண்மையான புரிதல் வேண்டும். முதலில் இவை பற்றிய புரிதலைக் காண்போம்.

1. அனுபவம் என்றால் என்ன?

நமது கட்டுப்பாட்டிற்கும் செல்வாக்கிற்கும் அப்பாலுள்ள ஒரு பொருளையோ, ஆளையோ, நிகழ்வையோ  அகபுற புலன்களால் நேருக்கு நேராக துய்த்துணர்ந்து, அதனால் விளையும்  பயனை, அதாவது இன்ப துன்பங்களை நுகருவதைப் பொதுவாக அனுபவம் (Experience) என்று சொல்லலாம். எடுத்துக்காட்டாக தொலைகாட்சிகளில் பல பொருள்கள் பற்றிய (சோப்பு, தைலம், உணவுப்பொருள்கள்) விளம்பரத்தைப் பார்க்கிறோம். அவை இப்பொழுது  நம் கையில் இல்லை. அவற்றில் ஒன்று - சாக்லேட்டை -  வாங்கி வாயில் போட்டவுடன் நீர் வாயில் சுரக்கிறது, ருசியை உணர முடிகிறது. அதனால் ஒருவித இன்ப உணர்வு ஏற்படுகிறது. சப்கொட்டி, ஆகா! என்ன ருசி! என்கிறோம். இது புறபுலனின் அனுபவம். சில சமயங்களில் நாம் தவறுதல்களைச் செய்து விடுகிறோம். அதனால் நஷ்டம் ஏற்படுகிறது. நிறுவன அதிகாரி என்ன சொல்ல போகிறாரோ, என்ன தண்டனையை அளிப்பாரோ என்ற அச்சம் ஏற்படுகிறது. அவரைச் சந்திக்கவும் பயம் உண்டாகிறது. கடைசியில் சந்திக்கும் நேரம் வருகிறது. கூனி குருகி, ஐயா, நான் செய்தது தவறுதான், வருந்துகிறேன். நீங்கள் என்ன சொன்னாலும் செய்கிறேன் எனக் கெஞ்சிக் குழைக்கிறோம். அவரும் பெருந்தன்மையோடு நம்மை மன்னித்து விடுகிறார். இனிமேல் கவனமாக இருக்க வேண்டும் என்கிறார். அப்போது நம் உள்ளத்தில் ஒரு நிம்மதி பிறக்கிறதல்லாவா? அது ஒரு அனுபவம். அகபுலனால் உணரப்படுவது இந்த அனுபவம்.
   
2. இறையனுபவம்

கட்புலனாகாத இறைவனைக் கட்புலனாகும் பொருள்கள் வழியாகவும், எ.கா. தண்ணீர், எண்ணெய், அப்பம், இரசம், ஆள் வழியாகவும், (இயேசு கிறிஸ்து வழியாக) நிகழ்வு வழியாகவும்  எ.கா. பாவ மன்னிப்பு செயல் - மனிதன் இறைவனைச் சந்திப்பது இறையனுபவம் ஆகும். இச்சந்திப்பினால் விளையும் பயனைத் துய்த்துணர்கிறோம். இதிலிருந்து மனிதப் புலன்களுக்குட்பட்டவைகள் வழியாகதான் அறிவையும், அனுபவத்தையும் நாம் அடைகிறோம் என்பது தெளிவாகிறது.

3. இறையனுபவத்தில் உருவானதே இஸ்ரயேல் மக்கள் வாழ்வு

மனிதர் எவ்வாறு இறைவனைச் சந்தித்து அனுபவித்து வாழ்ந்துள்ளனர் என்பதற்கு மீட்பின் வரலாறு சான்றாக உள்ளது. இஸ்ரயேல் மக்களை அழைத்து தம் மக்களாக்கிக் கொண்ட இறைவன் அவர்களது அன்றாட வாழ்வில் நுழைந்து  ஈடுபாடு கொண்டார். அவர்களது பதிலையும் ஒத்துழைப்பையும் எதிர்பார்த்தார். அவர்களோடு உரையாடினார். புதியதோர் நாட்டிற்கு அழைத்துச் செல்வதாக வாக்களித்தார். அது நடைபெறும் என்பதை எவ்வாறு அறிவது என்று அவர்கள் கேட்டபோது அவர்களுடன் உடன்படிக்கை செய்து பதிலளித்தார். எகிப்திலிருந்து அவர்களை விடுவிக்கவும், தாம் உடன்படிக்கையின் வழியாக அவர்களோடு என்றும் ஒன்றித்து இருப்பதை உணர்த்தவும் கடவுள் பல அரும்பெரும் செயல்களைப் புரிந்தார். பின் சீனாய் மலையில் மேகங்கள் நடுவில் அவர்களுக்குத் தோன்றினார். பல அடையாளச் செயல்கள் வழியாக உடன்படிக்கைக்கு உடன்பட அவர்களை அழைத்தார் (காண் விப .19) பாலைவன பயணத்தின் போதும் இன்னும் பல மகத்தான செயல்களைப் புரிந்தார். பிற்காலத்தில் இறைவாக் கினர்கள் வழியாக அடையாளச் செயல்கள் பல செய்தார். இச்செயல்கள் வழியாக வரவிருந்த  துன்பங்களையும், தண்டனைகளையும் நல்வாழ்வையும் சுட்டிக் காட்டினார்.
இவ்வாறு பலமுறை பலசெயல்கள் வழியாக இஸ்ரயேல் மக்கள் கடவுளைச் சந்திக்கவும், அவரது பாதுகாவலை அனுபவிக்கவும் முடிந்தது. அத்தகையை அனுபவங் களின் தொகுப்பே இறைமக்களுடைய வாழ்வாக அமைந்திருந்தது. 

4. கிறிஸ்தவ மக்களின் இறை அனுபவத்திற்கும் வாழ்வுக்கும் அடிப்படை இயேசு கிறிஸ்து

இறுதியாக இந்த இறை அனுபவம் மனிதராகி நம்மிடையே குடிகொண்ட இயேசுகிறிஸ்துவில் நிறைவெய்தியது. ஏனெனில் “தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும்பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார்” (யோவா 3:16) என்பதிலிருந்து கடவுள் யார் என்றும், அவரது அன்பு எத்தகையது என்றும் உணர முடிகின்றது. இந்த இயேசுவோ தந்தையின் நெஞ்சுக்கு நெருக்கமானவர்.. இந்த ஒரே மகனே அவரை வெளிப்படுத்தினார் (காண் யோவா 1:18). அவர் வழியாக கடவுள் இறுதியில் நம்மோடு பேசினார் (காண் யோவா 1:18).  உறவுக் கொண்டார். மனிதரும் இயேசுவைக் கண்டதால் இறைவனைக் காண முடிகிறது (யோவா 14:9). 

இவற்றிக்கெல்லாம் மேலாக இயேசுகிறிஸ்து வினுடைய பாஸ்கா மறைபொருளின் அதாவது, அவரது பாடுகள், மரணம், உயிர்ப்பு, விண்ணேற்றம் ஆகியவற்றின் வழியாக இந்த இறையனுபவம் உச்சநிலையை அடைந்தது. “கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இதனால் அன்பு இன்னதென்று அறிந்துக் கொண்டோம்” (1 யோவா 3:16). இயேசு கிறிஸ்துவை அறிவதின் வழியாக இறைவனை அறிய முடிகின்றது (யோவா 14:7). இவ்வாறு கிறிஸ்தவன் மனிதராகிய இயேசு கிறிஸ்து வழியாக இறை அனுபவம் பெறுகிறான்.

இயேசுகிறிஸ்துவின் பாஸ்கா மறைபொருள் தங்களுக்கு இறை அனுபவம் கொடுத்தது என்றும், அதை மற்றவர்களுக்கும் பகிர்ந்தளிக்காமல் தங்களால் இருக்க முடியவில்லை என்றும் திருத்தூதர்கள் துணிச்சலோடு கூறுவதை நாம் திருத்தூதர் பணியில் வாசிக்கிறோம். “நாங்கள் கண்டதையும், கேட்டதையும் எடுத்துரைக் காமலிருக்க எங்களால் முடியாது” (தி.ப 4:20). “தொடக்க முதல் இருந்த வாழ்வு அளிக்கும் வாக்கை நாங்கள் கேட்டோம், கண்ணால் கண்டோம்... கையால் தொட்டுணர்ந்தோம்... அதற்குச் சான்று பகர்கிறோம்... தந்தையுடனும், அவருடைய மகன்  இயேசு கிறிஸ்துவுடனும் நாங்கள் கொண்டுள்ள நட்புறவை நீங்களும் கொண்டிருக்குமாறு நாங்கள் கண்டதை, நாங்கள் கேட்டதை உங்களுக்கு அறிவிக்கிறோம்” (1 யோவா 1:1-3)  என்று திருத்தூதர் யோவான் கூறுவது  எந்த அளவு அவர்களுடைய இறையனுபவம் அவர்களது வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதைக் காட்டுகிறது.

திருமுழுக்குப் பெற்ற கிறிஸ்தவ மக்கள் புதிய இஸ்ரயேல் ஆவர். இவர்களும் இந்த இறை அனுபவத்தை அடைய வேண்டுமல்லவா? இயேசுகிறிஸ்துவின் வாழ்விலும், அவரது பாஸ்கா மறைபொருளிலும் இறைவனைச் சந்தித்து தந்தையோடும் இயேசு கிறிஸ்துவோடும் நட்புறவு கொண்டத் திருத்தூதர்களைப் போல் கிறிஸ்தவர்களும் நட்புறவு கொள்ள வேண்டு மல்லவா? இன்று இவர்கள் இதை எவ்வாறு அடைவது? அருள் அடையாளங்களைப் பெற்று, அவை அளிக்கும் அருள்கொடைகளில் பங்கு பெறுவதின் வழியாக இதை அடையாளம். அப்படியானால், 

5. அடையாளங்கள் என்றால் என்ன?

அடையாளம் (Symbol) அல்லது குறியீடு  (Sign) என்பது மற்றொன்றிக்காக நின்று எதைக் குறிக்கிறதோ, அதைச் சுட்டிக்காட்டுவதாகும் அல்லது உணர்த் துவதாகும். 
“சைகை” தான் மனிதர் முதன் முதலில் பயன்படுத்திய அடையாளம். காலபோக்கில் இதுவே பேச்சு என்ற அடையாளமாகவும், மொழி என்ற அடையாளமாகவும் மாறியது. அதே  போல் குறியீடு என்பது ஏதோ ஒன்றின் மீது ஒரு குறிப்பிட்ட பொருளை ஏற்றிக் கூறுவதாகும். உதாரணமாக, தங்க பதக்கம் வெற்றி, திறமையின் அடையாளம். சாலைக் குறியீடுகள் ( சிவப்பு, பச்சை) போக்குவரத்து அடையாளங்கள்.

  இதே போன்று சமய சார்ந்த அடையாளங்கள் உள்ளன. சிறப்பாக இவற்றை சமய வழிபாடுகளில் காண்கிறோம். இந்து சமயத்தில் ஒரு இளைஞன் பூநூலை அணிவது அவன் பிரமசாரி நிலையை அடைந்துள்ளான் என்பதற்கு அடையாளமாக அமைகிறது. இது “சம்ஸ்காரா” என்று அழைக்கப்படுகின்றது.

விவிலியத்தில் இது போன்ற அடையாளங்கள் இருப்பதைக் காண்கிறோம். வானவில் கடவுளுக்கும், நோவாவுக்கும் இடையே செய்யப்பட்ட உடன்படிக்கையின் அடையாளமாக இருந்தது. வீட்டு நிலைகளில் பூசப்பட்டிருந்த ஆட்டின் இரத்தம் அது யூதர்களின் வீடு என்பதற்கும், தொடர்ந்து அவர்களின் பாதுகாப்பு, விடுதலைக்கும் அடையாளமாக இருந்தது.

6. இயேசு கிறிஸ்து முதன்மையான அருள் அடையாளம்

மனிதரான இறைவார்த்தையாகிய இயேசு கிறிஸ்துவே ஒரு மாபெரும்  அரும் அடையாளமாகத் திகழ்ந்தார். “வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிக்கொண்டார்” (யோவா 1:14). அதாவது நாசரேத்து ஊர் இயேசுவில் இறைவன் மனிதர் ஆனார். எனவேதான் என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும்( யோவா 14:9) என்றார். கட்புலனாகும் இயேசுவில் கட்புலனாகாத இறைவன் இருக்கிறார். “நான் தந்தையினுள்ளும் தந்தை என்னுள்ளும் இருக்கிறோம்” என்று இயேசு கூறியது இயேசுவும் இறைவன்தான் என்பதைக் குறிக்கிறது (காண் யோவா 14:10).

இதனால் அவர் இறைவனுக்கும் மனிதருக்கும் இடையே ஓர் ஒப்பற்ற, நிகரற்ற இணைப்பாளராகத் திகழ்கின்றார். “கடவுளையும் மனிதரையும் இணைப்பவர் ஒருவரே. அவரே இயேசு கிறிஸ்து என்னும் மனிதர்”  (1 திமோ 2:5) என்று பவுல் குறிப்பிடுகிறார். மேலும் இவர் கட்புலனாகா கடவுளின் சாயல் என்றும், இறை இரக்கத்தின் அருள் உருவம் என்றும், இறை மீட்பின் திருவெளிப்பாடு என்றும் (காண் கொலோ 1:15) சொல்கிறார். இதேபோல் இவர் கடவுளுடைய மாட்சிமையின் சுடரொளியாகவும், அவருடைய இயல்பின் அச்சுபதிவாகவும் விளங்குகிறார் என்று எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்தில் வாசிக்கிறோம் (எபி1:3).

இவ்வாறாக இயேசு கிறிஸ்து இறை-மனித சந்திப்பின் இணைப்பின், ஒன்றிப்பின் காணக் கூடிய அடையாளமாகத் திகழ்கிறார்; அருள் பொழியும் அடையாளமாக விளங்குகின்றார். எனவே அவரே முதன்மையான அருள் அடையாளமாவார் (Primordial Scrament).

7. திருஅவை அடிப்படை அருள் அடையாளம்

உலகம் முடியும் வரை தம் பணியைத் தொடர்ந்தாற்ற இயேசு கிறிஸ்து திருஅவை ஏற்படுத்தினார். இன்று நாம் கிறிஸ்துவை கண்ணால் காணாவிட்டாலும், அவரது மறை உடலாகிய திருஅவையைக் காண்கிறோம். திருஅவை கிறிஸ்துவின் உடல், எல்லா வகையிலும் எப்பொழுதும் இறைவனால் நிறைவாக்கப் பெறும் கிறிஸ்துவின் நிறைவே அத்திருஅவை (காண் கொலோ 1:18).
இத்திருஅவை எல்லா இடங்களிலும் எல்லாக் காலங்களிலும், தமது சொல், செயல் அடையாளங்கள் வழியாக கிறிஸ்துவை உடனிருக்கச் செய்கிறது. இதனுடைய செயல்கள் ஏழு அருள் அடையாளங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. எனவே திருஅவை ஓர் அடிப்படை அருள் அடையாளம் (Fundamental Sacrament)  எனப்படுகிறது.  

8. ஏழு அருள் அடையாளங்கள்

இவ்வுலகு சார் முறையில் மனித வாழ்வு பல்வேறு பருவங்களால் ஆனது. ஒவ்வொரு பருவ நிலைக்கேற்றவாறு  ஒரு மனிதர் பேணிக்காக்கப் படுகிறார். அதேபோல் ஒரு  மனிதருடைய ஆன்மீக வாழ்விலும் பலவித படிநிலைகள் உள்ளன. அவை ஒவ்வொன்றையும் புனிதப்படுத்த திருஅவை பயன்படுத்தும் மீட்பளிக்கும் செயல்களே அருள் அடையாளங்கள் எனப்படுகின்றன. இவை ஏழு படிநிலைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. முதல் மூன்று அருள் அடையாளங்கள் (திருமுழுக்கு, உறுதிபூசுதல், நற்கருணை) உருவாகும் இறைவாழ்வு, வளர்ச்சி வளமை நிலைகளைச் சார்ந்தவையாகும். அடுத்து இரு அருள் அடையாளங்கள் (ஒப்புரவு, நோயில் பூசுதல்) ஆன்மீக வாழ்வில் உண்டாகும் தடுமாற்றங்களுக்கு ஈடு செய்யும் மருந்தாக அமைந்துள்ளன. கடைசி இரு அருள் அடையாளங்களும் (குருத்துவம், திருமணம்) சமூக கண்நோக்கும், பணியைச் சார்ந்தவைகளாக அமைக்கப்பட்டுள்ளன. 

இந்த ஏழு அருள் அடையாளங்களும் கிறிஸ்துவின் பாஸ்கா மறைபொருளில் இருந்தே மீட்பளிக்கும் தம் ஆற்றலைப் பெறுகின்றன. அதே நேரத்தில் இவை இறைவனை வழிபடும் செயல்களாகவும் அமைந்துள்ள ( காண் தி.வ 7:1-2; திரு அவை 11). எனவே இவற்றை திருவழிபாட்டு அருள் அடையாளங்கள் என்றும்  சொல்லலாம். இனி இவ்வருள் அடையாளங்கள் ஒவ்வொன்றையும் பற்றியும் விளக்கம் காண்போம்.
                                                                                                                                                        தொடரும்...

Ads Inside Post