Pages - Menu

Sunday 31 January 2016

ஆத்தாவும், தாத்தாவும்

ஆத்தாவும்,  தாத்தாவும்

 என்னடியம்மா இந்த வேசம்? நீ ஒரு பொம்பளை, வயசானவ, இரண்டு பிள்ளைகளுக்கு தாயானவ, இப்படி கால்சட்டையும், பனியனும் போட்டுக்கிட்டு வந்திருக்க. என்ன பைத்தியம் பிடிச்சிருக்கா?
‡ தமிழ் நாட்டுக்கே பிடிச்சிருக்க பைத்தியம்தான் எனக்கும் பிடிச்சிருக்கு. உங்களுக்கு புரியல?
‡ என்னடி எல்லாத்தையும் புதிரா பேசுற? வயசான காலத்தில புரிஞ்சிக்கிறதும் குறைஞ்சு போச்சு.
இப்ப காட்டுரேன் பாருங்க (தாத்தா நெஞ்சில பாட்டி தலையால முட்டுகிறாள்)
‡ புரிஞ்சுதடி, ஜல்லிகட்டு பிரச்சயைத்தான் இப்படி கால்சட்டை, பனியனுடன் காட்டுறியா? பயங்கரமான ஆளுடிநீ.
‡ அரசியல் கட்சிகள் போட்ட சீனெல்லாம் பியூசா போயிடுச்சு. மக்கள் மேலே உண்மையில அக்கறையிருந்தா, இந்த அரசியல் கட்சிகள் இப்படி நாடகமாடியிருக்க மாட்டாங்க.
‡ அரசியல் கட்சிகளெல்லாம் ஏமாத்திர கம்பெனிகள் என்று தெரியாதா?
‡ அடி, உனக்கு ஒன்று தெரியுமா? தமிழ் நாட்டில மாடு வளர்க்கிறதே குறைஞ்சு போச்சு. கிராமத்திலகூட அப்படித்தான். டவுன்ல, சாணி பவுடர் வாங்கி வீட்டுக்கு முன்னால தெளிக்கிறாங்க தெரியுமா?
‡ நம்ப பாரம்பரிய ஜல்லிக்கட்ட அப்படியே விட்டிருக்கலாம், என்ன சொல்றீங்க?
‡ ஜல்லிகட்டு, மிருகங்கள் வதை என்று சொல்றாங்க. மனிதர்கள் அரசாங்கத்தாலேயே வதைக்கப்படுகிறாங்களே.
‡ ஆமாங்க, குழியும் குட்டையுமா இருக்கிற நம் ரோட்டில பயணம் செய்யும் பல பேருக்கு முதுகுவலி வந்திருக்கும், தண்டுவடம் பாதிக்கப்பட்டிருக்கும். நம்ப அரசு மருத்துவ மனைகள், பேருந்து நிலையங்களில் இருக்கும் அசுத்த சூழ்நிலைகள், மக்களுக்கு வியாதியை வாரி வழங்கி வதைத்துக் கொண்டிருக்கு. தமிழ்நாட்டு சாலைகள், அரசு பேருந்துகளை பார்ககும்போது வாந்தியயடுக்கத்தான் வருது. கர்நாடகா பஸ் தேர் மாதிரி பளிச்சினு வருது. அதுல டிக்கட் கிடைக்க மாட்டேங்குது.
‡ இது இப்படி இருக்கும்போது, பி. ஜே. பி.காரங்க அயோத்தி ராமர் கோவில கட்ட அங்கு கட்டிட பொருள்களையயல்லாம் சேர்த்து வராங்களாம்.
‡ 1992ல நடந்தது மாதிரி மீண்டும் ரத்த கலரிய கொண்டுவர பார்க்கிறாங்க. வன்முறைக்கு அவங்க கை அரிச்சிட்டு இருக்கும் போல இருக்கு. வரலாற்று அறிஞர்கள், 1992ல செய்தது பெரிய தப்பு. இப்ப மீண்டும் ராமர் கோவில கட்டனுங்கிறது பெரிய தப்புன்னு சொல்லியிருக்கிறாங்க. இந்த பகீர் செய்திய படிச்சீங்களா?
‡ பஞ்சாபில பதான்கோட் இடத்தில பாக்கிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருக்கிறாங்க. தீவிரவாதிகளை தாக்க வேண்டியவர்களையே திவிரவாதிகள் தாக்கியிருக்கிVர்கள். சுடவேண்டிய துப்பாக்கியையே சுட்டிருக்கிறாங்க.
‡ ஆமாடியம்மா, இதெல்லாம் நம்ம கையாலாகாத தனம். தீவிரவாதிகளுக்கு நம்ம படைவீரர்கள் விளக்கு புடிச்சிருக்காங்கன்னு சந்தேகப்படுறாங்க.
‡ இந்தியாகாரங்கனா, பொய் புரட்டு பித்தலாட்டக்காரங்க, காட்டி கொடுக்கிறவங்கன்னு பெயராயிடுச்சு.
‡ சரிடியம்மா, இதெல்லாம் பார்த்து நம்ம பிறரிடம் ஏமாறாம பார்த்துக்குவோம்.
‡ ஆனா ஆறுதலான, நெகிழ்ச்சியான நிகழ்ச்சியும் தமிழ்நாட்டில நடந்திருக்கே, கவனிச்சிங்களா?
‡ சென்னை வெள்ளத்திலே மக்கள் உதவியதை தானே சொல்ற. ஆமான்டியம்மா, உண்மையான தமிழ் மணம் இப்பத்தான் வீசுச்சு. சரி நேரமாயிடுச்சு, நம்வயித்த கொஞ்சம் கவனிப்போம், வா!

சிரிக்க

சிரிக்க
1. ஆசிரியர் : மாணவர்களே, நீங்க எல்லாம் வைரம் மாதிரி.
பாலு : அப்படின்னா, நீங்களும் வைரம்தான்!
ஆசிரியர் : எப்படி?
பாலு : வைரத்தை வைரத்தால்தான் அறுக்க முடியும்.

2. ஆசிரியர் : பாலு, ஏதோ சந்தேகம்னியே கேளு!
பாலு : சாம்பார் சோத்துல சாம்பார் ஊத்துவாங்க. ரசம் சோத்துல ரசம் ஊத்துவாங்க. ஆனால், தண்டச் சோத்துல எதை ஊத்துவாங்க சார்!

நான் எழுத்தாளன் ஆனேன் - திரு. லெயோ ஜோசப்

நான் எழுத்தாளன் ஆனேன்
- திரு. லெயோ ஜோசப்
(திரு. லெயோ ஜோசப் சிறந்த பழம்பெரும் எழுத்தாளர். தற்போது அவருக்கு வயது 84. தனது வாழ்க்கை அனுபவங்களை இங்கு பகிர்ந்துக் கொள்கிறர் இது நான்காவது பகுதி)

சென்னையில் வசித்த என் அண்ணன் வீட்டுக்குப் போயிருந்தேன். சில மாதங்கள் அங்கு தங்கியிருந்தேன். அண்ணன் வீடு அயனாவரத்தில். குமுதம் அலுவலகம் கெல்ஸியில் இருந்தது. அதன் ஒரு பகுதியாகக் கல்கண்டு அலுவலகம் இருந்தது. நான் எப்போது கல்கண்டு அலுவலகத்துக்குப் போனாலும் தமிழ்வாணன் எனக்கு டிபன் வரவழைத்துத் தருவார்.
ஒரு சமயம் தமிழ்வாணனைப் பார்க்கப் போயிருந்தேன். டிபன் வரவழைத்துத் தந்தார். நான் சாப்பிட்டு முடித்த பின் அவர் சொன்னார் : ‘நீ இந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி.க்குப் பாடமாக இருக்கும் ஆங்கிலத்தில் இருந்து ஒரு கதையை தமிழாக்கம் செய்து கல்கண்டில் எழுதியிருக்கிறாய். ஏராளமான கடிதங்கள் அதுபற்றி வருகின்றன. வருத்தம் தெரிவிக்க வேண்டியுள்ளது. அதனால், 6 மாதத்துக்கு உன் கதையைப் போடமாட்டேன்’ என்றார்.
அதே போல் 6 மாதங்கள் என் கதை கல்கண்டில் வரவே இல்லை. அதன் பிறகுதான் என் கதை வந்தது. நான் எழுதிய கதைகளில் ஒன்று கூட திரும்பி வரவில்லை. எல்லாக் கதைகளையும் போடுவார். ஒரு சமயம் கிறிஸ்தவக் கதை ஒன்றை எழுதி அனுப்பினேன். அதையும் பிரசுரித்தார். சொன்னது போலவே என்னை உற்சாகப்படுத்தியவர் தமிழ்வாணன்தான்.
மீண்டும் திருச்சிக்கு வந்தேன். வழக்கம் போல் கல்கண்டில் கதைகள் எழுதி வந்தேன். ஒரு சமயம் பூஞ்சோலை என்ற குழந்தைகள் பத்திரிக்கைக்கு சிறுகதை ஒன்று எழுதினேன். அந்தப் பத்திரிக்கையின் ஆசிரியர் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா. அவர் என் கதையை அட்டைப் படக் கதையாக வெளியிட்டார்.
அது குறித்து தமிழ்வாணனுக்கு பெருமையோடு ஒரு கடிதம் எழுதினேன். எப்போதும் நான் எழுதும் கடிதங்களுக்கு தமிழ்வாணன், தன் கைப்பட பதில் எழுதுவார். இந்த என் கடிதத்துக்கு தமிழ்வாணன் பதில் எழுதவில்லை. அவருக்குப் பதிலாக அந்த அலுவலகத்தில் பணியாற்றும் திரு. சண்முக சுந்தரம் (பெரிய பையன் என்ற பெயரில் கதைகள் எழுதுவார்) பதில் எழுதினார்.
அன்புள்ள தம்பிக்கு, கல்கண்டுக்கென்று பாரம்பரியம் ஒன்றுண்டு. அது பிற பத்திரிக்கைகளில் கதை எழுதுபவர்களைக் கல்கண்டில் எழுத அனுமதிக்காததுதான். நீ நெடுக வந்து போகும் பத்திரிக்கைகளில் எல்லாம் எழுத விரும்பினால் கல்கண்டில் எழுதுவதை நிறுத்திக் கொள்.
அதன் பிறகு நான் மன்னிப்புக் கேட்டு கடிதம் எழுதினேன். தொடர்ந்து கதைகள் எழுதிக் கொண்டிருந்தேன். கொஞ்ச நாள் கழித்து, கல்கண்டில் அட்டை டு அட்டை தமிழ்வாணனே எழுதத் தொடங்கிய பிறகு நான் எழுதுவதை நிறுத்திக் கொண்டேன்.
இங்கே என் ஆருயிர் நண்பர் கவிஞர். அமலனைப் பற்றிக் கூறி விட வேண்டும். குடத்திலிட்ட விளக்காக இருந்த என்னை, குன்றின் மேல் ஏற்றி வைத்தவர் அவர். அவருக்கு கலைமகள் அலுவலகத்தில் நல்ல செல்வாக்கு இருந்தது. ‘கண்ணன்’ கலைமகளின் துணைப் பத்திரிக்கை. ஆர்வி (ஆர். வெங்கட்ராமன்) என்பவரை ஆசிரியராகக் கொண்டு நடத்தப்பட்ட குழந்தைகள் பத்திரிக்கை அது.
அதில் ஆரம்ப எழுத்தாளர்களைப் பற்றிய அறிமுகம் வந்துக் கொண்டிருந்தது. கவிஞர் அமலன், என்னைப் பற்றிய அறிமுகம் வரச் செய்தார். அதுமுதல் கண்ணனில் நான் சிறுகதைகள் எழுதத் தொடங்கினேன்.

நல்ல நாள், கெட்ட நாள் விளக்கம்

நல்ல நாள், கெட்ட நாள் விளக்கம்

சென்ற வாரம் நான் என் சகோதரி வீட்டிற்கு சென்றிருந்தேன். அங்கு உணவருந்தி ஓய்வெடுத்த பின் அவர்கள் நீண்ட நாட்களாக ஒரு வீட்டுமனை வாங்க வேண்டும் எனக் கூறி வந்ததை நினைவுபடுத்தினேன். எனக்குத் தெரிந்த ஒருவர் நல்ல இடத்தில் ஒரு வீட்டுமனை இருப்பதாகவும், விலையும் சற்று சகாயமாக உள்ளதாகவும் கூறினார். அதைப் போய் இன்று பார்த்துவிட்டு வரலாம் என்று கூறினேன். உடனே ‘என் சகோதரி இன்று வேண்டாம், அண்ணே’ என்றாள். நான் இன்று விட்டால் மனை கிடைக்காமல் போகலாம். வேகமாக விற்று வருவதாகக் கேள்விப்பட்டேன். ‘இன்று ஏன் வேண்டாம் என்கிறாய்?’ எனச் சகோதரியைக் கேட்டேன். இவர் இன்று அஷ்டமி, நாளை நவமி என்றாள். ஆகையால் நாளை மறுநாள் போய் பார்க்கலாம் என்று சொன்னார்.

நான் அஷ்டமி, நவமி என்றால் என்ன? ஏன் கூடாது என்பதற்குக் காரணம் என்ன? என்று கேட்டேன். அதற்கு என் சகோதரி ‘எனக்கு விளக்கம் தெரியாது அண்ணே. ஆனால் எல்லோரும் அவை நல்ல நாட்கள் இல்லை என்பதால் நானும் கூறினேன்’ என்று கூறினார்.

நான் சிரித்துக் கொண்டே அஷ்டமி, நவமியில் நீங்கள் சாப்பிடுவதில்லையா? ரயில், பஸ், விமானம் ஆகியவை ஓடுவதில்லையா? மருத்துவமனை வங்கிகள் மற்றும் அலுவலகங்கள் செயல்படுவதில்லையா? அவசர அறுவை சிகிச்சையைத் தவிர்க்கிறோமா? என்று கேட்டேன்.

அதற்கு என் சகோதரி, ‘போங்க அண்ணா, நீங்க எப்போதும் இப்படித் தான் எடக்கு முடக்காகப் பேசுவீர்கள்’ என்று கேலி செய்தார். நான், ‘இல்லையம்மா இதற்கு விளக்கம் கூறுகிறேன். நாம் ஓரளவு படித்தவர்கள், எதையும் அறிவுப்பூர்வமாக சிந்தித்துத் தெரிந்து கொள்ள வேண்டாமா?’ என்று கேட்டேன். மைத்துனரும், என் சகோதரியும் ‘நீங்கள்தான் விளக்குங்களேன்’ என்றார்கள்.

நான் பின்வரும் விளக்கத்தைக் கூறினேன்.

ஒரு மாதத்திற்கு ஓர் அமாவாசை, ஒரு பவுர்ணமி வரும். இந்த இரு நிகழ்ச்சிகளும் பூமி மற்றும் சந்திரனின் சுழற்சியால் ஏற்படுவதை நீங்கள் அறிவீர்கள். நாட்களைச் சுட்டிக்காட்ட அமாவாசையிலிருந்து அல்லது பவுர்ணமியிலிருந்து எத்தனையாவது நாள் என்று குறிப்பிட்டுக் காட்டவே பிரதமை முதல் சதுர்த்தசி வரை 14 நாட்களுக்கும் பெயரிட்டிக்கிறார்கள். பெயர் தமிழில் வைத்திருந்தால் விளங்கும். சமஸ்கிருதம் ஆதிக்கத்தில் இருந்தபோது தமிழ் வருடங்களின் பெயரை கூட பொருள் தெரியாத வடமொழியில் அல்லவா வைத்து விட்டார்கள்? நாமும் அதை மாற்ற மனமின்றி வைத்துக் கொண்டு திண்டாடுகிறோம். அதே போல தான் நாட்களின் பெயர்களும் பின்வருமாறு வடமொழியில் உள்ளன என்று விளக்கினேன்.

1. பவுர்ணமி, அமாவாசைக்கு அடுத்த நாள் பிரதமை. பிரதமர் என்றால் முதல்வர் என்று பொருள். அதுபோல் பிரதமை என்றால் முதல் நாள்.
2. துவிதை என்றால் இரண்டாம் நாள். தோ என்றால் இரண்டு. துவிச் சகர வண்டி என்று சைக்கிளைக் கூறுவது தங்களுக்கு தெரியும்.
3. திரிதியை என்றால் மூன்றாம் நாள். திரி என்றால் ஓடுவதும் அறியாமையே என்றேன். என் சகோதரி மிகவும் ஆர்வமாக இதற்கும் விளக்கம் கூறுங்கள் அண்ணா என்று கேட்டுக் கொண்டாள். ­யம் என்றால் தேய்வு (­யரோகம் ‡ எலும்புருக்கு நோய். அ­யம் என்றால் வளர்ச்சி). அதாவது வளர்பிறையில் அமாவாசையிலிருந்து மூன்றாம் நாள் திரிதியை என்று ஏற்கெனவே விளங்கிக் கொண்டோம். அதாவது வளர்பிறையில் மூன்றாம் நாள் இதில் என்ன சிறப்பு இருக்க முடியும்? இது தங்க வியாபாரிகள் சேர்ந்து செய்த விற்பனை உத்தியே ஆகும் என்று விளக்கம் கூறினேன்.

மக்கள் எப்படி அறியாமையில் மூழ்கிப் போயிருக்கிறார்கள் என்று அனைவரும் பரிதாபப்பட்டோம். பிறகு அன்றே மூவரும் சென்று வீட்டு மனையைப் பார்வையிட்டு இடம் பிடித்திருந்ததால் முன் பணம் செலுத்தி பத்திர நகல்களை வாங்கி வந்தோம். அஷ்டமி, நவமி பார்த்துத் தாமதம் செய்திருந்தால் இந்த வாய்ப்பு கிட்டுமா என்று மகிழ்ந்தோம்.
செய்யும் வேலைகளில் வெற்றி, தன்னை நம்பி இல்லை, கடவுளை நம்பித்தான் இருக்கிறது என்று நினைத்து, உருவாக்கப்பட்ட நல்ல நேரம், கெட்ட நேரம் என்ற பயங்கள் உலகெங்கும் மனிதனை ஆட்டிப்படைக்கின்றன. 
இந்திய அளவில் உள்ள பஞ்சாங்கங்களின்படி ஒரு மாதத்திற்கு எவ்வளவு கெட்ட நேரம் வருகிறது என்று கணக்கிட்டுப் பார்ப்போம்.
வாரத்தில்; செவ்வாய், சனி, நல்ல காரியம் துவங்கக்கூடாது (10 நாட்கள்).
மாதத்தின் அஷ்டி, நவமி நன்மைக்கு உகந்தது அல்ல (4 நாட்கள்)
பாட்டி முகம் நாளில் நல்லது செய்வது நல்லதில்லையாம் (2 நாட்கள்)
ஒரு மாதத்தில் வரும் ராகு காலம், எம கண்டம், குளிகை இவற்றின் கூட்டுத் தொகை ( 3 முக்கால்) தவிர கெளரி பஞ்சாங்கத்தின் படி நன்மை செய்ய தகாத 2 நாட்கள்.

ஆக மொத்தத்தில் ஒரு மாதத்தில் 21 முக்கால் நாட்கள் நாம் நல்லது செய்ய பயந்தால் எப்படி உருப்பட ... எப்படி முன்னேற...?

ஆதாரம்: இணையதளம்

Saturday 30 January 2016

திருப்பலி பற்றிய சரியான புரிதல்

திருப்பலி பற்றிய சரியான புரிதல்
முனைவர் தந்தை எஸ். அருள்சாமி

(தந்தை எஸ். அருள்சாமி அவர்கள் கிறிஸ்துவ வழிபாட்டினை ஆழ்ந்து தெரிந்தவர். பாரீசில் உயர்கல்வி படித்தவர். குரு மடங்களில் போதித்து வருபவர். திருப்பலியைப் பற்றிய அவரின் தெளிவான விளக்கத்தை இங்குக் காணலாம்.)
திருப்பலியின் அவசியத்தையும், முதன்மைத்துவத்தையும் பற்றிக் குறிப்பிடும்போது, இது கிறிஸ்தவ வாழ்வனைத்திற்கும் ஊற்றும் உச்சியுமானது என்று “திருஅவை கோட்பாட்டு விளக்கம்” குறிப்பிடுகிறது (எண் 11). ஊற்றும் உச்சியுமாகியத் திருப்பலியின் உண்மைப் பொருளை சரியாகப் புரிந்து கொள்ளாததால் இத்திருப்பலி கொண்டாடப்படும்போது பல தவறுகள் இடம் பெறுகின்றன. எனவே திருப்பலியை சரியாகப் புரிதல் அவசியமாக இருக்கிறது.

இயேசுகிறிஸ்துவின் பலிவாழ்வு :

திருப்பலியின் உண்மைப் பொருளையும், அதன் தேவையையும் உணரவேண்டுமானால், முதலில் இயேசு கிறிஸ்துவின் வாழ்வு, பணி போன்றவற்றைச் சரியாகப் புரிந்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் திருப்பலி இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பலியின் அருள் அடையாள கொண்டாட்டமாக அமைந்துள்ளது. எபிரேயருக்கு வரையப்பட்ட மடலில் நாம் இவ்வாறு வாசிக்கின்றோம் :
திருச்சட்டப்படி செலுத்தப்பட்ட போதிலும்
“நீர் பலிகளையும், காணிக்கைகளையும்
எரிபலிகளையும், பாவம் போக்கும்
பலிகளையும் விரும்பவில்லை;
இவை உமக்கு உகந்தவையல்ல ......
உமது திருவுளத்தை நிறைவேற்ற
இதோ வருகிறேன்” என்றார்.
இந்தத் திருவுளத்தால்தான் இயேசு கிறிஸ்து
ஒரே ஒருமுறை தம் உடலைப் பலியாகச்
செலுத்தியதன் மூலம் நாம் தூயவராக்கப்பட்டிருக்கிறோம்  (எபி 10 : 8 ‡ 12)
இத்தகைய மனப்பாங்கோடு மனிதரான இயேசு இவ்வுலகில் தம் வாழ்நாள்கள் முழுவதும் தந்தையின் திருவுளத்திற்கு உகந்தவராக விளங்கினார். தம்மை முழுவதும் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்ற அர்ப்பணித்தார். இத்தகைய மனப்பாங்கும், அர்ப்பணமும் அவர் சிலுவையில் தொங்கியபோது உச்சரித்த “தந்தையே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்” (லூக் 23 : 46) என்ற வார்த்தைகளிலும், “எல்லாம் நிறைவேறிற்று” (யோவா 19 : 30) என்ற வார்த்தைகளிலும் நிறைவெய்தின. அவர் இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில், தம்மை சாவிலிருந்து காப்பாற்ற வல்லவரை உரத்தக் குரல் எழுப்பி, கண்ணீர் சிந்தி மன்றாடியதிலும், அவர் கொண்டிருந்த இறைப்பற்றுக் கலந்த அச்சத்தை முன்னிட்டு, கடவுள் அவருக்குச் செவிசாய்த்ததிலும், அவர் இறைமகனாக இருந்தும், துன்பங்கள் வழியே கீழ்படிதலைக் கற்றுக் கொண்டதிலும் (எபி 5 : 7 - 9 காண்க) அவரது பலிவாழ்வு தெளிவு பெற்றது.

இறுதியில் சிலுவையில் அறையப்படுவதை உளமார ஏற்றுக் கொண்டார். தம்மை பாஸ்கா பலியாக ஒப்புக் கொடுத்தார். பழைய ஏற்பாட்டில் பலியாக்கப்பட்ட செம்மறியாட்டுக் குட்டியின் இடத்தை எடுத்துக் கொண்டு தம்மையே பலிபொருளாக்கினார். இவ்வாறு அவரே பலி செலுத்துபவராகவும் (priest), பலிப்பொருளாகவும் (victim) செயல்பட்டார்.
சிலுவையில் அவர் ஒப்புக் கொடுத்த பலி சிலுவையோடு முடிந்துவிடவில்லை. அது முடிந்திருந்தால் இன்று நாம் பலிபீடத்தில் மீண்டும் அதைச் செயலாக்க முடியாது. மாறாக, அவர் ஒப்புக்கொடுத்த பலி, ஒப்புப் கொடுக்கப்பட்ட நிலையிலேயே நித்தியமாக்கப்பட்டு, நிரந்தரமாக இன்று விண்ணகத்தில் நிகழ்ந்து கொண்டுள்ளது. எனவே இன்றும் என்றும் அவர் விண்ணகத்தில் பலி செலுத்தி இறைவனை மாந்தர் பெயரால் வழிபடுகிறவராக விளங்குகின்றார். “அந்த நான்கு உயிர்களும், மூப்பர்களும் புடைசூழ அரியணை நடுவில் ஆட்டுக்குட்டி ஒன்று நிற்கக்கண்டேன். கொல்லப்பட்டதுபோல் அது காணப்பட்டது” (தி. வெ.5 : 6) என்று யோவான் காட்சியில் கண்டது இதை உறுதி செய்கிறது.

“தம்மைத் தாமே பலியாகச் செலுத்தி இதை ஒரே ஒரு முறைக்குள் செய்து முடித்தார்” (எபி 7 : 27) என்ற வார்த்தைகள் இயேசு கிறிஸ்து சிலுவையில் ஒரே ஒரு முறையாக ஒப்புக்கொடுத்தப் பலியைக் குறிக்கின்றது. இது இன்று விண்ணகத்தில் இடைவிடாது (ceaselessly) தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுள்ளது.

பலிபீடத்தில் தொடரும் அவரது பலி :

தமது மீட்புச் செயலில் தம் சீடர்கள் ஈடுபட வேண்டும் என விரும்பிய இயேசு, தமது சிலுவைப் பலியை அவர்களும் ஒப்புக் கொடுக்க வேண்டுமென முடிவு செய்தார். எனவே தாம் பாடுபடுவதற்கு முந்தின நாள் இரவு யூதர்களின் பாஸ்காவைக் கொண்டாடிய பின்புலத்தில், அப்பம் இரசம் ஆகியவற்றின் வழியாகத் தமது சிலுவைப் பலியை முன்கூட்டியே அடையாள முறையில் கொண்டாடி ஒப்புக்கொடுத்தார். “இதை என் நினைவாகச் செய்யுங்கள்” என்று சொன்னதின் வழியாக, இன்று பீடத்தில் நாம் கிறிஸ்துவின் சிலுவைப் பலியை அப்ப இரச அடையாளங்கள் வழியாகக் கொண்டாடுகிறோம். ஆகவே, இன்று திருஅவையின், அதாவது நம்பிக்கையாளர்கள், அருள்பணியாளர் ஆகியவர்களின் செயல்கள் மிக முக்கியமானதொன்றாக இருக்கின்றன. இவர்கள் இன்று அப்பத்தையும், இரசத்தையும் பலிபீடத்திற்குக் காணிக்கையாகக் கொண்டு வராவிட்டால், இயேசு கிறிஸ்து இடைவிடாது விண்ணகத்தில் தம்மை கடவுளுக்குப் பலியாக ஒப்புக்கொடுப்பதை, இம்மண்ணகத்தில் ஒப்புக்கொடுக்க முடியாது. சுருங்கச் சொல்லின், இன்று பலிபீடத்தில் இயேசு கிறிஸ்து தம்மைப் பலியாகக் கடவுளுக்கு ஒப்புக்கொடுக்க நம்மைச் சார்ந்துள்ளார் (depends on us). எனவே நாம் அப்பத்தையும், இரசத்தையும் காணிக்கையாகக் கொண்டு வருவது அவருக்குத் தேவைப்படுகிறது.

திருப்பலி பற்றிய சில தெளிவான உண்மைகள் :

1. திருப்பலியை ஒப்புக் கொடுப்பவர் இயேசு கிறிஸ்து ஆவார். அவர் அந்த பலியை ஒப்புக் கொடுக்க உறுதுணையாக இருப்பவர் அருள்பணியாளர்.
2. சிலுவையில் தம்மை நேரடியாகப் பலியாக்கிய கிறிஸ்து, பீடப்பலியில் அப்ப‡இரச வடிவில் தம்மைக் கடவுளுக்குக் காணிக்கையாக்கி பலியை ஒப்புக் கொடுக்கிறார், இறைவனை வழிபடுகிறார். எனவே திருப்பலிக்கு நாம் கொண்டுவருகின்ற அப்பமும், இரசமும் கடவுளுக்குத்தான் காணிக்கையாக்கப்படுகின்றதே அன்றி கிறிஸ்துவுக்கல்ல.
“ஆண்டவரே, அனைத்துலகின் இறைவா, உம்மைப் போற்றுகின்றோம். ஏனெனில், உமது அருட்பெருக்கிலிருந்து நாங்கள் இந்த அப்பத்தைப் பெற்றுக் கொண்டோம். நிலத்தின் விளைவும் மனித உழைப்பின் பயனுமான இந்த அப்பத்தை உமக்கு ஒப்புக் கொடுக்கின்றோம். இது எங்களுக்கு வாழ்வளிக்கும் அப்பமாக மாறும்” என்று செபிப்பது இந்த உண்மையைத் தெளிவாக்குகின்றது. எனவே இச்சமயத்தில் மக்கள் பாடும் காணிக்கை பாடல்கள் இந்த உண்மையோடு ஒத்துப் போவதாகவும், இதைப் பிரதிபலிப்பதாகவும் அமைய வேண்டும்.
சின்ன குழந்தை இயேசுவுக்கு
என்ன கொடுப்பது - நாம்
என்ன கொடுப்பது (ஆனந்த ராகம், பாடல் எண் 714) என்று பாடுவது மேலே நாம் குறிப்பிட்ட உண்மைக்குப் புறம்பானது. திருப்பலியில் குழந்தை இயேசுவுக்கு நாம் பலி ஒப்புக்கொடுக்கவில்லை. 
3. திருப்பலியில் கிறிஸ்துவை நாம் வழிபடுவதில்லை. கிறிஸ்து வழியாக நாம் எல்லாம் வல்ல இறைவனை வழிபடுகிறோம். திருப்பலியின் இறுதி புகழுரை இதைத் தெளிவுப்படுத்துகிறது:
“இவர்வழியாக, இவரோடு, இவரில்
எல்லாம் வல்ல இறைவனாகிய தந்தையே
தூய ஆவியின் ஒன்றிப்பில்
எல்லாப் புகழும் மாட்சியும்
என்றென்றும் உமக்கு உரியதே”, என்று நாம் சொல்வது அல்லது பாடுவது நாம் மேலே குறிப்பிட்டதை உறுதி செய்கிறது.
அ) இப்புகழுரையில் வரும் ‘இவர் வழியாக, இவரோடு, இவரில்’ என்ற சொற்றொடர்கள் வசிகரம் செய்யப்பட்ட அப்பம் - இரசத்தில் பிரசன்னமாக இருக்கும் இயேசுகிறிஸ்துவைக் குறிக்கும். அவரைக் கையிலேந்தி நாம் தந்தைக்குப் புகழ் கூறுகின்றோம். ஏனெனில் அவரே தந்தைக்குகந்த காணிக்கை.

ஆ) ‘தந்தையே’ என்று விளிப்பதும், ‘உமக்கு உரியதே’ என்று அழுத்தம் கொடுப்பதும் தந்தையாகிய கடவுளைத்தான் குறிக்கும்.

இ) ஆகவே இச்சமயம் நாம் எடுக்கும் தீப, தூப, மலர் ஆரத்தியின்போது இயேசுவே உம்மை ஆராதிக்கிறோம் என்று பாடுவதும், தூய ஆவியே, உம்மை ஆராதிக்கிறோம் என்று பாடுவதும் சரியான பக்தி முயற்சியன்று.

ஈ) அப்ப - இரச வசிகரத்திற்குப் பின் அருள் பணியாளர் விசுவாசத்தின் மறைபொருள் என்று பறைசாற்றும் போது, மக்கள், இயேசுகிறிஸ்துவின் மரணம் உயிர்ப்பை எடுத்துரைத்து ஆர்ப்பரிக்கிறார்கள், ஆராதிப்பதில்லை. ஆதலால் நீங்கள் இந்த அப்பத்தை உண்டு, கிண்ணத்திலிருந்து பருகும்போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அவர் வரும் வரை அறிவிக்கிறீர்கள் (1 கொரி 11 : 26) என்ற பவுலடியாரின் வார்த்தைகளின் அடிப்படையில் எழுப்பப்படும் ஆர்ப்பரிப்புக்கும், இது முதல் ஒன்பது நூற்றாண்டுகள் வரை வசீகர வார்த்தைகளுக்குப் பின் அப்பமோ, இரச கிண்ணமோ உயரே தூக்கி காட்டப்படவில்லை. அவற்றை நோக்கி அருள்பணியாளர் திருப்பலியை ஒப்புக் கொடுத்தாலும், தாங்கள் புரிந்துக் கொள்ள முடியாத இலத்தீன் மொழியில் வழிபாடு நிகழ்ந்ததாலும், எப்பொழுதுதான் இயேசு கிறிஸ்து அப்ப-இரச அடையாளங்களில் தம்மை பிரசன்னமாக்குகிறார் என்று அறிய மக்கள் விழைந்ததால் உண்டான தவிர்க்க முடியாத பழக்கமே எழுந்தேற்றம். தூக்கிக் காட்டுவதால், மக்கள் வணங்க ஆரம்பித்தார்கள். பின் அப்பமோ, திருக்கிண்ணமோ தூக்கிக் காட்டப்படுவதில்லை.

எனவே அருள்பணியாளர் விசுவாசத்தின் மறைபொருள் என்று பறைசாற்றும்போது “எனக்காகப் பிறந்து, எனக்காக மரித்து, எனக்காக உயிர்த்த உமக்கே ஆராதனை” என்று பாடுவது சரியல்ல. மாறாக கிறிஸ்து இறந்தார், கிறிஸ்து உயிர்த்தார், கிறிஸ்து மீண்டும் வருவார் என்று ஆர்ப்பரிப்பதே சரியானது. இணையான மற்ற மூன்று பாடங்களும் உண்டு. உரோமை திருப்பலி நூலில் காண்க.
4. திருப்பலியில் கிறிஸ்து, தான் பலி செலுத்தி இறைவனை வழிபடுகிறார் என்றால், அருள் பணியாளரும் நம்பிக்கையாளர்களும் பலிசெலுத்துகிறார்களா? இல்லையா? என்ற கேள்வி எழுவது முறையானதுதான். இதற்குப் பதில் எழுந்தேற்றத்திற்குப் பின் சொல்லப்படும் செபங்களில் உள்ளதைக் காணலாம். நற்கருணை மன்றாட்டு ஒன்றில் பின்வரும் செபத்தை சொல்லி செபிக்கிறார் :

“ஆகவே, இறைவா, உம் திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய கிறிஸ்து பாடுபட்டதையும், இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்ததையும், மாட்சியுடன் விண்ணகம் சென்றதையும், உம் ஊழியராகிய நாங்களும், உம்முடைய புனித மக்களும் நினைவு கூர்கின்றோம். நீர் எங்களுக்கு அளித்துள்ள கொடைகளிலிருந்து முடிவில்லா வாழ்வுதரும் புனித அப்பத்தையும், நிலையான மீட்பளிக்கும் கிண்ணத்தையும் தூய, புனித மாசற்றப் பலியாக மாட்சிமைமிக்க உமக்கு நாங்கள் ஒப்புக்கொடுக்கின்றோம்.”

இச்செபத்தில் வரும் ஊழியர் திருப்பலி ஒப்புக் கொடுக்கும் அருள்பணியாளரையும், புனித மக்கள் என்பது திருப்பலியில் பங்குபெற்றுக் கொண்டிருக்கின்ற நம்பிக்கையாளர்களையும் குறிக்கின்றன. மேலும் புனித அப்பமும், மீட்பளிக்கும் கிண்ணமும் இயேசு கிறிஸ்துவுடைய திருவுடலையும், திரு இரத்தத்தையும் குறிக்கின்றன. இவை புனிதமானதும், தூயதும், மாசற்றதுமான பலிப்பொருள். கடவுளுக்கு மிக உகந்தவை. எனவே நாம் இயேசு கிறிஸ்துவையே இறைவனுக்கு ஒப்புக் கொடுக்கும் நேரம் இது. இறுதி புகழுரை இதை முடிவுக்குக் கொண்டு வருகிறது.

இதே போன்று மூன்றாவது நற்கருணை மன்றாட்டிலும், அவர் மீண்டும் வருவாரென எதிர்ப்பார்த்திருக்கும் நாங்கள் இப்புனிதமான உயிருள்ள பலியை நன்றியறிதலுடன் உமக்கு ஒப்புக் கொடுக்கின்றோம் என்று சொல்லப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம்.

ஆகவே பீடத்தில் நிகழும் திருப்பலியில் தம் உடலாகவும், இரத்தமாகவும் மாற்றப்படும் அடையாளங்களின் வழியாகக் கிறிஸ்து தம்மைப் பலியாக ஒப்புக் கொடுக்கின்றார். நாமே, நமது வாழ்க்கை பலிகளின் அடையாளங்களான அப்பத்தையும், இரசத்தையும் கொண்டு வந்து காணிக்கையாக்கி, அவை கிறிஸ்துவின் உடலாகவும், இரத்தமாகவும் மாறியபின் கிறிஸ்துவையே கடவுளுக்குப் பலியாக ஒப்புக் கொடுக்கின்றோம்.
முடிவுரை : இவ்வாறாகத் திருப்பலியின் உண்மைப் பொருளைச் சரியாப் புரிந்துக் கொண்டு நாம் பலியை ஒப்புக்கொடுப்போமானால், அது உண்மையாகவே நமது வாழ்வுக்கு ஊற்றும், உச்சியுமாக அமையும். பின்வரும் பாடல் இதை அழகாகச் சித்தரிக்கின்றது.

முடிந்தது கல்வாரி சிலுவைப்பலி - தினம்
தொடர்ந்தது பீடத்தில் நினைவுப்பலி
முடிந்தது அந்த பூசை (பீடப்பலி) - இனி
தொடங்குவது நம் வாழ்க்கைப்பலி.

இலக்கியம் என்பது காலக் கண்ணாடி

இலக்கியம்
இலக்கியம் என்பது காலக் கண்ணாடி
- அருள்சகோ. விமலி, கும்பகோணம்.

வாழ்வின் இலக்கு, வாழ்வின் இனிமை பற்றிய விளக்கங்களை தங்கள் அனுபவத்தின் வழியாக வழங்குவதுதான் இலக்கியம் எனலாம். நல்ல இலக்கியங்களை படிக்கும் போது படிப்பவர்கள் தலையசைத்து சுவைத்து படிப்பார்கள். ஏனென்றால் வாழ்வினை உண்மையாக இவை படம்படித்து காண்பிக்கின்றன.  போரிஸ் பாஸ்டர் என்பவர், இலக்கியம் என்பதை கீழ்க்காணும் முறையில் விளக்குகிறார்.
‘இலக்கியம் என்பது ஒருகலை. அதில் சாமானியர்களில் புதைந்திருக்கும் அற்புதமான அனுபவங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. அத்தகைய அற்புதங்களை எளிய வார்த்தைகளில் வடித்து அழகாக தருவதுதான், இக்கலையின் நயம்’ என்கிறார் டேஜான் என்பவர். ‘இலக்கியத்தினால் நாம் இறக்கையில்லாமல் பறக்கலாம், கண் திறந்திருக்கும் போதே கனவு காணலாம், இரவிலும் கண்ணால் காணலாம்’ என்று விளக்குகிறார் மேமட் என்பவர். ‘இலக்கியத்தில் மற்றவர்களின் இதயத்தைப் பார்க்கலாம். இதனால் நம் வாழ்வை மேன்மைப்படுத்தி உயர்த்திக் கொள்ளலாம்’ என்கிறார். பிப்ரவரி மாதம் இலக்கிய மாதம் என்று அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. இலக்கியம் என்ற தொகுப்பில், எழுதப்பட்ட நூற்கள். எல்லா வித ஊடகங்களும் அடங்கும். தமிழில் இலக்கியத் தொகுப்பு மிகவும் தொன்மை வாய்ந்தது. கி. மு. 6ஆம் நூற்றாண்டிலேயே எழுதப்பட்டதாகக் கருதப்படும். தொல்காப்பியம் முதல் இன்று வரை ஆயிரக்கணக்கான நூல்கள் எழுதப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளன. படிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது எனலாம். ஊடகங்கள் வழியாக மக்கள் பார்த்தும், கேட்டும் செய்திகளை உடனுக்குடன் பெற்று வருகின்றனர். இருப்பினும் அழகிய நூல்கள், புதையல்கள். படிப்பதற்கு நேரத்தை ஒதுக்கி வைத்து நூற்களை கற்கலாம். எழுத்தாளர்கள் ஒருவிதத்தில் தியாகிகள் என்று கூறவேண்டும். பெரும்பாலான எழுத்தாளர்கள் வறுமையில் வாழ்பவர்களாக விளங்குகிறார்கள். பழம்காலத்திலும் புலவர்கள் வறுமையில்தான் வாழ்ந்திருக்கின்றனர். இந்த பாரம்பரியம் தொடர்கிறதோ என்னவோ? இருப்பினும். ஆர்வத்தோடு, தங்களின் அனுபவ பொக்கி­ங்களை மக்களுக்கு தெரிவிக்க முன்வருகிறார்கள். இலக்கியங்களை புறந்தள்ளாமல் அகத்தில் ஏற்று மகிழ்ந்து, வாழ்வின் பயனைப் பெறுவோம்.

வெற்றி உங்கள் கையில்...

வெற்றி உங்கள் கையில்...
அருட்திரு. எஸ்.ஜான் கென்னடி,
M.A., M.Ed, M.Sc, M.Phil, PGDCA, Ph.D., 

பூண்டி புதுமைமாதா கல்வியியல் கல்லூரி,  சமயபுரம், திருச்சி.

1983 இல் அமெரிக்காவின் ஹார்வார்டு பல்கலைக்கழக கல்வியியல் துறை பேராசிரியர் யஹாவர்டு கார்டனர் (Howard Gardner) தான் வெளியிட்ட பிரபல நூலான “மனத்திட்பங்கள் : பன்முக நுண்ணறிவுக் கோட்பாடு”   என்பதில் 
( Frames of mind : The theory of Multile Intelligence) எட்டு வகையான  நுண்ணறிவினை விவரிக்கின்றார். அவைகளில் ஒன்றான சமூக உறவுகள் தொடர்பான நுண்ணறிவு என்பதைப்பற்றி சற்று ஆழமாக சிந்திப்போம்.

சமூக உறவுகள் தொடர்பான நுண்ணறிவு கொண்டவர்கள் மற்றவர்களோடு நல்ல நட்புறவு கொள்வார்கள். பிறர் உணர்வுகளை நன்கு புரிந்துகொள்வார்கள். பிறர் நம்பிக்கையைச் சம்பாதிப்பார்கள். ஒரு வி­யத்தை முன்னின்று நடத்த துணிந்து முன்வருவார்கள். இது ஒரு பிரத்தியேக நுண்ணறிவு என உளவியல் நிபுணர் கார்டனர் கூறுகிறார். அதே நேரத்தில் அன்றாட வாழ்வில் அனைவரும் பயன்படுத்தும் திறனாகவும் இந்த சமூக உறவுகள் தொடர்பான நுண்ணறிவு விளங்குகிறது.

தனி ஒரு மனிதராக இருந்தாலும், பல மனிதர்கள் இணைந்த குழுவானாலும் தொடர்பு கொள்ள அடிப்படை தேவை சமூக உறவுகள் தொடர்பான நுண்ணறிவு. இந்த நுண்ணறிவை மேலும் மேலும் வளர்த்தெடுக்க முயற்சிப்பவர்களே புற உலகிலும், அக வாழ்விலும் வெற்றி பெறுகிறார்கள் என்கிறார் கார்டனர்.
இயல்பிலேயே சிலரிடம் இந்த நுண்ணறிவு மேலோங்கிக் காணப்படும். சிலரிடம் அது உள்ளே புதைந்திருக்கும். உங்களிடம் இந்த நுண்ணறிவு உள்ளதா என்பதை நீங்கள் சோதித்துப் பார்க்கும் களம் இது. கீழே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு “ஆம்”, “சில நேரங்களில் ஆம்” - , “சில நேரங்களில் இல்லை” அல்லது “இல்லை” ஆகிய ஏதோ ஒரு விடையளிக்கவும். இப்படியிருந்தால் நன்றாக இருக்கும் என யூகித்துக் குறிக்கக்கூடாது.

நீங்கள் தற்போது என்னவாக உள்ளீர்களோ உள்ளதை உள்ளபடி குறிப்பிடுங்கள். அதை பொறுத்து உங்கள் சமூக உறவுகள் தொடர்பான நுண்ணறிவு எந்த நிலையில் உள்ளது என்பதை கண்டுணர்ந்து வாழ்வில் வெற்றியடையுங்கள்.

1. எல்லாச் சூழலுக்கும் ஏற்ற மாதிரி உங்களைத் தகவமைத்துக் கொள்வீர்களா?2. குழுவாகச் செயல்படுவது உங்களுக்குச் சவுகரியமற்றதாக இருக்கிறதா?
3. சிலருடன் மட்டுமே உங்களால் சகஜமாகப் பழகமுடிகிறதா?
4. பிறர் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதைத் துல்லியமாகக் கணித்ததுண்டா?
5. ஒரு சிக்கலை விட்டு வெளியேறப் பொய் சொன்னதுண்டா?
6. திடீரென யாரோ உங்களை மேடையேற்ற அனிச்சையாக நல்ல சொற்பொழிவு ஆற்றியதுண்டா?
7. அன்னியர்களுக்கு நடுவில் மாட்டிக் கொண்டு செய்வதறியாது திகைத்ததுண்டா?
8. குழு கலந்துரையாடலில் பங்கேற்க முதல் ஆளாக இருப்பவரா?
9. அருகில் இருப்பவர் திடீரென்று உணர்ச்சிவசப்படாமல் சூழலைக் கட்டுக்குள் கொண்டுவரத் திணறியதுண்டா?
10. உங்களோடு இருப்பவர்கள் உங்களை நம்பி இரகசியங்களைப் பகிர்ந்ததுண்டா?
11. மேடை பேச்சு என்றால் பயமா?
12. பிறர் சுவாரசியமாக உணரும்படி உரையாற்றியதுண்டா?
13. தனிமை விரும்பியா?
14. மற்றவர்களுடைய தேவை உங்களுக்கு தெரியுமா?
15. உங்களை புரிந்து கொள்வது கடினமா?
16. உங்களை முன்நிறுத்திக் கொள்ளத் தயங்குவீர்களா?
17. உணர்வுகளுக்கு முதலிடம் தருபவரா?
18. புதிதாய்ப் பழகியவரிடமும் சகஜமாகப் பழகியதுண்டா?
19. உங்கள் பிரச்சனையைப் பூதாகரமாக நினைத்துக் கவலைக் கொள்வதுண்டா?
20. மற்றவர்கள் மீது அக்கறை இருக்கிறதா?
21. உங்கள் முடிவுகளில் தீர்க்கமாக இருப்பீர்களா?
22. குழுவாக எடுக்கும் தீர்மானத்தை ஏற்றுக்கொள்வீர்களா?
23. நீங்கள் சோகமாக இருக்கும்போது மகிழ்ச்சியாக இருப்பவர்களிடம் இருந்து விலகிச் செல்வீர்களா?
24. நான் சொல்வதற்கு அதிகம் இல்லை என எண்ணியதுண்டா?

1, 4, 6, 8, 10, 12, 14, 17, 18, 20, 21, 22 ஆகிய கேள்விகளுக்கு உங்கள் பதில் ஆம் என்றால் நீங்கள் உறுதியாக சமூக உறவுகள் நுண்ணறிவு படைத்தவர்தான். அரசியல்வாதி கல்வியாளர், உளவியல் நிபுணர், மருத்துவர், மனிதவள மேலாளர், மனநல ஆலோசகர் விற்பனையாளராகும் கூறுகள் உங்களிடம் பிரகாசமாக உள்ளன.
ஆம் என்றும் சொல்வதற்கில்லை, இல்லை என்றும் சொல்லிவிட முடியாது போன்ற குழப்பமான பதில் இருந்தால் நீங்கள் முதலில் உங்களை உற்று கவனிக்க வேண்டும். மேலே குறிப்பிட்ட எண்களில் உள்ள கேள்விகளுக்கு இல்லை என்ற பதில்தான் பெருவாரியாக சொல்லியிருந்தால் உங்கள் பலம் வேறுத் திறனாக இருக்கும் என்பது பொருள். அதை கண்டுணர்ந்து வளர்த்துக் கொள்ளுங்கள். வெற்றியும் காணுங்கள்.
“வாழ்க்கை என்பது வழுக்குமரம் போன்றது.
விடாமுயற்சியும், கடின உழைப்பும் இல்லாமல் வெற்றி இல்லை.”

Friday 29 January 2016

இறை இரக்கம் தவக்கால சிந்தனை

இறை இரக்கம் தவக்கால சிந்தனை

- அருள்பணி.அ. பிரான்சிஸ், பாபநாசம்

சாம்பல் வெறுமையின் சின்னம். ஒன்றும் இல்லாமையின் அடையாளம். மண்ணிலிருந்து வந்து மண்ணுக்கே திரும்பும் மனிதன் தனது நிலையாமையினை வீடு பேறு நோக்கிப் பயணிக்க அழைத்திடும் காலமே தவக்காலம். ஈராறு ஆண்டுக்கொரு முறை மகா மகக் குளியல் மூலம் மக்களைப் புனிதமடையச் செய்யும் மகா மக விழா குடந்தை நகருக்குப் பெருமை சூட்டுவது பிப்ரவரி மாதம். இம்மாதம் 10ஆம் நாள் தவக்காலத்தின் முதல் நாள். அடுத்த நாள் உலக நோயாளர் தினமாகிய லூர்தன்னை பெருவிழா. இரக்கமிகு விண்ணகத் தந்தையின் காணுகின்ற முகமாகிய இயேசுவை ஈன்றெடுத்த மரியா 1858 பிப்ரவரி 11 முதல் அதே ஆண்டு ஜீலை வரை பிரான்ஸ் நாட்டின் பிரன்னிஸ் மலைத் தொடரில் உள்ள மசபியேல் என்னும் குகையில் பெர்னதெத் என்ற 12 வயது சிறுமிக்கு காட்சி தந்தார். லூர்து என்னும் சிற்றூர் இன்று அனைவரின் சிந்தை கவரும் நகராகத் திகழ்ந்து வருகின்றது. 
 இறை - மனித உறவு, இறைவனின் இரக்கத்தின் வெளிப்பாடாகும். கடவுளோடு தான் செய்து கொண்ட உடன்படிக்கையினை மனிதன் மீறி பிரமாணிக்கம் இன்றி வாழ்ந்த வேளைகளில் இறைவனின் இரக்கமே மனித குலத்தினை மீட்டது. பாவிகளை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்.... நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன் (மத். 9 : 13) என்ற சொற்றொடர் மூலம் தனது இரக்கமிகு பண்பினை வெளிப்படுத்துகின்றார் இறைவன். 

இறை - மனித உடன்பாடு இறை இரக்கத்தின் அடிப்படைக் கூறு. தனது பிரமாணிக்கம் இழந்து இஸ்ரயேல் மக்கள் தனது மனம் போன போக்கில் வாழ்ந்துவந்த போதெல்லாம் உண்மையும், நீதியும் உள்ள கடவுளாக அல்ல. ஊதாரியின் தந்தையாகத் தனது இரக்கத்தினை வெளிப்படுத்துகின்றார். விடுதலைப் பயண நூல் 32 - 34 வரை உள்ள பிரிவுகளை வாசித்தால் இறைவனின் இரக்கம் தெளிவாகப் புலப்படும். எகிப்தின் அடிமைத் தளையறுத்து பாதம் நனையாமல் செங்கடலைக் கடந்து வரச் செய்தார் யாவே இறைவன். 40 ஆண்டுகள் பாலை நிலத்தில் மன்னா, காடைகள், பாறையின் தெளிந்த நீர் ஊற்றால் உணவளித்துக் காப்பாற்றினார் இறைவன். சீனாய் மலை மீதேறி இறைவன் தந்த 10 கற்பனைகளை மோசே சுமந்து வருகின்றார். பிரமாணிக்கத்தினை மீறி பொன் கன்று வழிபாட்டின் விழாக்கோலம் மோசேயின் கோபக் கனலைத் தூண்டுகிறது. இரக்கமிகு இறைவன் இன்னொரு முறை தனது கட்டளைகளை வழங்குகின்றார். இரண்டாம் பிரதி திருச்சட்டக் கற்பலகைகளைக் கொண்டு வந்த மோசே அக்களிப்போடு பின்வரும் வார்த்தைகளில் இறைப்புகழ் பாடுகின்றார். ஆண்டவர்! ஆண்டவர்! இரக்கமிக்க பரிவும் உள்ள இறைவன் சினம் கொள்ளத் தயங்குபவர். பேரன்பு செய்பவர்; கொடுமையையும், குற்றத்தையும், பாவத்தையும் மன்னிப்பவர் (வி. ப. 34 : 6 - 7) விண்ணகத் தந்தையின் இந்தக் காதல் ஓவியம் இறைமகனின் மனுவுருவாதலில் நிறைவு பெறுகின்றது. இறை இரக்கமே மனுவாகி நம்மில் இரண்டறக் கலக்கின்றது. இந்த இரக்கமே பாவி தன்னை உற்று நோக்கி, மனம் மாறி நம்பிக்கை கொண்டு வாழ அழைக்கின்றது என்று திருந்தந்தை பிரான்சிஸ் தனது இரக்கத்தின் முகம் என்ற மடலில் எண் : 8 மற்றும் 21இல் குறிப்பிடுகின்றார். 

 இறைவனின் இரக்கப் பெருக்கினுக்குத் தன்னை முற்றுமாக அர்ப்பணித்த இறையன்பை மரியா தனது காட்சிகள் வழியாக அவ்வப்போது மனுக்குலம் தழைத்திடும் வழிகாட்டுதலை வழங்கி வருகின்றார். குறிப்பாக இம்மாதம் 11 அன்று நினைவு கூரும் லூர்து நகர் காட்சிகள் வழியாக கீழ்க்காணும் 4 கருத்துக்களை இத்தவக்காலத்தில் செயல்படுத்திட மரியா நம்மைப் பணிக்கின்றார். 

அ) ஏழ்மை : மாடடைக் குடிலில் விண்ணகத் தந்தையின் காணுகின்ற முகமாகிய இயேசு உதயமானார். அதே பான்று மாதா காட்சி தந்த மசபியேல் குகை பன்றிகள் அடையும் இடமாகும். இறைவனின் நன்மைத்தனம், தூய்மைத்தனம் ஆகியவை மனிதனின் ஏழ்மைத் தனத்தில் சங்கமிக்கின்றன. ஏழ்மையே மாட்சிமை என்பது இந்நிகழ்ச்சி மூலம் தெளிவாகின்றது. 

 ஆ) தவம் : ‘துர்நாற்றம் மிக்க, அழுக்குப் படிந்த பன்றிகளின் எச்சம் கலந்த மண்ணைத் தோண்டிப்பார்’ என்று விமலனின் தாய் கூறுகின்றார். பெர்னதெத்தும் அவ்வாறே செய்கின்றார். முகம் சுளிக்க வைக்கும் பன்றிகளின் எச்சம் கலந்த மண்ணிலிருந்தே புனிதம் உலக மக்களைத் தேடிவந்தது. இந்நிகழ்ச்சி பற்றிப் பிறரிடம் கூறிய வேளையில் மக்களின் இச்சகமான பேச்சு, எகத்தாளம் மிக்க அனுமானச் சொல் இவளைக் கூனிக் குறுகச் செய்தது. இவ்வாறு இயேசுவின் பாடுகளில் பங்கேற்றுத் தவ வாழ்வு வாழ்ந்தாள் பெர்னதெத். நாமும் இவள் போன்று தவ வாழ்வு வாழ்வோம். 

 இ) செபம் : மாதா தனது ஒன்பதாவது காட்சியில் பன்றியின் எச்சம் மிக்க மண்ணைத் தோண்டுகின்ற வேளையில் முதலில் சேறும், சகதியும் கலந்த நீர் பீறிட்டு வருகிறது. இந்நீரை இச்சிறுமி அள்ளிப் பருகுகின்றார். அதன்பின் சுவை மிகுந்த, உடல் மன நோய் தீர்க்கும் அருமருந்தாக நீராக இது மாறுகின்றது. பாவத்தில் உழன்று கொண்டிருக்கும் பாவி தன்னிலை நீங்கிட கண்ணீர் சிந்திக் கசிந்துருகி மன்றாடுகின்ற போது பாவ அழுக்கு நீங்கி ஆன்ம, உடல், மன ஆரோக்கியம் பெறுகின்றார். முடக்குவாதமுற்ற மனிதனை இயேசு குணப்படுத்தும் போது, ‘உன்பாவங்கள் மன்னிக்கப்பட்டன’ (மாற்கு 2 : 1 : 12) என்று கூறி முழுச் சுகத்தினை அளிக்கின்றார்.

 ஈ) திருச்சபை : நீ கண்ட காட்சி பற்றி திருச்சபையின் தலைவர்களிடம் அறிவி என்று தனது பதிமூன்றாவது காட்சியில் பெர்னதெத்திடம் அன்னை மரியா கூறுகின்றார். இதன் நோக்கம் என்ன? மக்கள் குழுவாக தங்களின் மொழி, இனம், மதம், நாடு என்ற பிரிவினை மறந்து திருப்பயணம் மேற்கொள்ள வேண்டும். அவ்வேளையில் ஒரே வானம், ஒரே உலகம் என்ற நிலை உருவாகும். தீவிரவாதம், பிரிவினை வாதம் பெருகி வரும் .க்காலத்தில் இறை இரக்கத்தின் மக்களாக வாழுகின்ற சமூகத்தின் அடையாளச் சின்னமாக திருச்சபை திகழ வேண்டும். இதுவே இரக்கத்தின் அரசியாகிய அன்னை மரியா நமக்குத் தருகின்ற செய்தியாகும். இந்த இறை இரக்கத் தவக்காலத்தில் கீழ்க்காணும் வரிகள் நமது வாழ்வில் அருள் பெறும் வழிகாட்டிகளாகட்டும்.

Thursday 28 January 2016

வெள்ளமும், உள்ளமும்

வெள்ளமும், உள்ளமும் 

 வரலாறு காணாத மழை, சொல்ல முடியாத சோகங்கள் ஆகியவை சென்னை, கடலூர் பகுதிகள் சந்தித்த துயரின் கருமேகங்கள். அடை மழை, ஆறுகள் நிறைந்து வீடுகளை குளமாக்கின. பலநாள்கள் உணவில்லா பட்டினி, அடுத்தவருடன் தொடர்பு கொள்ள முடியாது, கைகள் போன்ற அலைபேசிகள் ஊமைகளாயின. மின்சாரம் இல்லாது வீடுகளும், வீதிகளும் இருளாயின. பாதைகள் சகதியின் வாகனமாயின. ஆனால் துன்பங்களும், துயரங்களும் தெய்வீகத்தைத் திறக்கும் சாவிகள் என்பதை, இந்த கொடூர காலம் நிரூபித்துவிட்டது. ‘உன் கண்ணில் நீர் வடிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி’ என்ற பாடல் வார்த்தைகள் இந்த சோக காலத்தில் உயிர்பெற்றன. அரசு இயந்திரங்கள் வழக்கம் போல உதவாக்கரைகளாக நிற்க, மனிதரில் புதைந்து நின்ற நேசமும், பாசமும், இரக்கமும், உருக்கமும் மடை திறந்து ஓடின. திருந்தந்தை அறிவித்த இரக்கத்தின் ஆண்டு, இங்கு நடைமுறையானது எனலாம். 

மழை சேதத்தை கேட்டதும், தங்கள் தலையில் இடி விழுந்ததது போல ஒவ்வொரு கிராமமும், ஒட்டு மொத்த தமிழகமும் உதவிகளை தாங்கி ஓடோடி சென்றன. பெங்களுரில் பள்ளி பிள்ளைகள் வீதியில் உண்டியல் எடுத்து உதவி அனுப்பியுள்ளார்கள். ஒரு பங்கில், அது எளிய கிராமம், பங்குத் தந்தை ஒலிபெருக்கியில் உதவிக்காக அறிவித்தவுடன், ஒருமணி நேரத்தில் ஒரு லாரி நிறைய உதவி பொருள்கள் சேர்ந்துவிட்டன. ஆனால் திருமண வீட்டில், வேண்டுமென்றே வம்பிழுப்பதை போல உதவி கொண்டு சென்றவர்களை கொச்சைப்படுத்தி ஸ்டிக்கர் எல்லாம் ஒட்டி, காய்ச்சிய பாலில் உப்பை கொட்டியிருக்கிறார்கள். நல்லதற்கும் தடைகள் உண்டு. ஆனால், உடைத்து சென்ற வெள்ளத்தை போல, மக்களின் மனித நேயம் அரசியல் தடைகளையயல்லாம் உடைத்து சென்றுவிட்டது. 

இந்நேரத்தில் நமது மனித நேயம் நம் நாட்டையும் தாண்டி செல்ல வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. ஆப்ரிக்காவில், சோமாலி நாட்டில் பட்டினியால் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதை, உள்ளத்தை உருக்கும் படங்கள் காண்பிக்கின்றன. திரு அவையும் வெள்ள உதவிக்கரங்களில் தீவிரவாதமாகவே செயல்பட்டிருக்கிறது. தொண்டு நிறுவனங்கள், துறவற சபைகள், மறைமாவட்ட பங்குத்தளங்கள் கிறிஸ்துவ பிறரன்பை வாழ்ந்து காட்டியுள்ளது. குடந்தை மறைமாவட்டத்தில் அவ்வளவு தீவிரமாக மக்கள் உதவிகளை கொடுத்துள்ளார்கள். பல பங்குகளிலிருந்து உதவிகளை ஏற்றிக் கொண்டு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைந்தார்கள். குடந்தை மறைமாவட்ட பங்குகளிலிருந்து 17 1/2 லட்சம் ரூபாய்கள் உதவியாக வந்து சேர்ந்திருக்கிறது. இதே ஆர்வத்தை, ஊழல் ஒழிப்பில் மக்கள் காட்டினால் நம் நாடு புனித நாடாக மாறும்.

Monday 11 January 2016

சென்ற ஜனவரி 10, 2016 ஆம் நாள் 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வீரமாமுனிவர் தங்கியிருந்த ஏலாக்குறிச்சி என்ற ஊருக்கு சென்றிருந்தேன். அதற்கு திருமானூர் என்ற ஊர் வழியாக செல்ல வேண்டும். திருமானூரில் சோழ அரசன் தஞ்சைக்கு கொண்டு செல்ல வடநாட்டிலிருந்து கொண்டுவந்த முழுமையும் செதுக்கபடாத கல் அங்கு பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது. கொள்ளிட நதியில் கரையில் உள்ளது திருமானூர். கொள்ளிடத்தில் வெள்ளம் வந்ததால் கல்லை எடுத்துசெல்ல முடியாமல் அக் கற்களை அங்கு விட்டு சென்றதாக மரபு வழி செய்தி கூறுகிறது அதன் படமும், பேருந்து நிலையம் அருகில் வாழை பழம் விற்கும் எளிய வியாபாரியையும், பிறகு ஏலாக்குரிச்சியில் அமைந்துள்ள ஆலயம், மாதா பீடம், அங்கு உள்ள அடைக்கல மாதா சுருபத்தின் பிரதியை வெங்களத்தில் 53 அடி உயரத்தில் செய்து வருகிறார்கள். அதன் முக பகுதி மட்டும் நிறைவு பெற்றுள்ளது, ஆகியவற்றையும் படங்களில் காணலாம்.

Friday 1 January 2016

புத்தாண்டு பொங்கல் நல் வாழ்த்துக்கள்

அன்னையின் அருட்சுடர் வாசகர்கள் அனை வருக்கும் அன்பான புத்தாண்டு பொங்கல் நல் வாழ்த்துக்கள்

Ads Inside Post