Pages - Menu

Monday 30 April 2018

இந்தியாவில் லத்தீன் வழிபாட்டு திருச்சபை ஒரு கணக்கெடுப்பு

இந்தியாவில் லத்தீன் வழிபாட்டு திருச்சபை ஒரு கணக்கெடுப்பு

1. மறைமாவட்டங்கள் -132
2. பேராயர்கள்            - 23
3. ஆயர்கள்       - 105
4. உரோமையில் நியமிக்கப்பட்ட
மறைமாவட்ட நிர்வாகிகள் - 3
5. வாரிசு ஆயர் -1
6. துணை ஆயர்கள் - 7
7. ஓய்வு பெற்ற ஆயர்கள் - 40
8. இந்தியாவின் மக்கள்தொகை - 1, 12, 37,08,047
9. இலத்தீன் வழிபாட்டு கிறிஸ்தவர்கள் - 1,54,59,825
10. மொத்த பங்குகள் -8715
11. நற்செய்தி மையங்கள் - 1926
12. மொத்த அருள்பணியாளர்கள் - 20,221
13. மறைமாவட்ட அருள்பணியாளர்கள் - 10,295
14. துறவற அருள்பணியாளர்கள்    - 9926
15. ஆண்கள் துறவறத்தார் - 22,458
16. பெண்கள் துறவறத்தார் - 62,724
17. கல்வி நிறுவனங்கள் - 20,354
              தகவல் - CCBI News

புதிய ஏற்பாட்டில் காணப்படும் அமைதியின் பரிமானங்கள்

புதிய ஏற்பாட்டில் காணப்படும் அமைதியின் பரிமானங்கள்

அருள்பணி. ச.இ. அருள்சாமி


‘ஆண்டவருடைய அமைதி உங்களோடு இருப்பதாக.’
  ‘ஒருவருக்கொருவர் அமைதியை பகிர்ந்துக் கொள்வோம்’
 என்று புதிய திருப்பலி புத்தகத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. சமாதானம் என்ற வார்த்தை அமைதி என்று மாற்றப்பட்டிருக்கிறது. அண்மையில் ஒரு சிரிப்பு துணுக்கினை பத்திரிக்கையில் பார்த்தேன். ஓர் ஓட்டலில் இவ்வாறு எழுதியிருந்தது. 

‘அமைதி தேடுவோர் இங்கே வாருங்கள் அமைதி கிடைக்கும். ஏனென்றால் நாங்கள் கொடுக்கும் மட்டன் பிரியாணியில் நிறைய பீஸ் கள் உள்ளன.’ 

அமைதி என்பதற்கு எபிரேய வார்த்தை ‘­லோம்’ என்பதாகும். கிரேக்க மொழியில் ‘ஐரேனே’ என்பதாகும். ‘ஐரேனே’ என்ற வார்த்தை புதிய ஏற்பாட்டில்  92 முறை பயன்படத்தப்பட்டுள்ளது. ஐரின் என்ற பெயரை சில பெண்களுக்கு வைத்திருக்கிறார்கள். இது ‘ஐயரேனே’ என்ற வார்த்தையிலிருந்து உருவானது தான்.
 மாற் 5:34 இல், இரத்தப் போக்குள்ள பெண், இயேசுவின் ஆடையைத் தொட்டு குணம் பெற்ற வேளையில், இயேசு, யார் என் ஆடையைத் தொட்டது? என்று கேட்க, அப்பெண் இயேசுவின் காலில் விழுந்து நடந்ததை சொல்ல, இயேசு, ‘மகளே, உனது நம்பிக்கை உன்னை குணமாக்கிற்று, அமைதியுடன் போ’ என்கிறார். ‘அமைதியுடன் செல்லுங்கள்’ என்பது  யூத வழிபாட்டில் இறுதியாக சொல்லப்படும் வார்த்தைகளாகும். இன்றும் இஸ்ரயேல் நாட்டில் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது, நாம் ‘வணக்கம்’ என்று சொல்வது போல ‘­லோம்’ என்றுதான் வாழ்த்துகிறார்கள். ‘­லோம்’ என்றால், எல்லா நலமும் பெறுக என்பதுதான் பொருள். இயேசு கூறும் அமைதி, அவர் கொண்டு வந்த இறையாட்சியின் வாழ்வின் நிறைவு.  நலம் பெற்றவர்களைப் பார்த்து, அமைதியுடன் போ என்றால், இறையரசின் புதுவாழ்வு அவர்களில் வந்து தங்கி விட்டது என்பது பொருள். இரத்த போக்குள்ளவள், தீட்டுப்பட்டவள் என்று கருத்தப்பட்டவரை, தன்னைத் தொட அனுமதித்து, சமுதாயத்தில் ஒன்றாக வாழ ஏற்பாடு செய்கிறார்.

இயேசு சீடர்களுக்கு காட்சி தந்த போது, ‘உங்களுக்கு அமைதி உரித்தாகுக’ என்றுதான் வாழ்த்துகிறார் (யோவா 20:19-21). யோவான் 14:27 இல் இயேசு, ‘என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல’ என்று சீடர்களுக்கு வாக்களிக்கிறார். இறையாட்சியின் நிறைவு மகிழ்வு ஆகியவைகளை இயேசு தன் சீடர்களுக்குக் காட்சியளித்தபோது தருகிறார்.

இதே அமைதியை, இயேசுவின் சீடர்கள் மக்களுக்கு அளிக்க வேண்டும். எனவேதான், சீடர்கள், வீடுகளை சந்திக்கும் போது, ‘இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக’ என்று வாழ்த்த வேண்டும் (லூக் 10:5).
தானி 10:19; தோபி 12:17; ஆகிய குறிப்புகளில், வானதூதர் மக்களை சந்தித்தபோது, ‘உங்களுக்கு அமைதி பெருகட்டும்’ என்று வாழ்த்துகிறார்கள். சீடர்கள் வானத்தூதரைப் போல மக்களைச் சந்தித்து இறையாட்சியின் பிரசன்னத்தை வழங்க வேண்டும் என்றுதான் இயேசு சீடர்களுக்குக் கட்டளை தந்தார். சீடர்கள் தரும் அமைதியை ஏற்றுகொள்பவர்கள், அமைதியின் பிள்ளைகளாகின்றனர். சீடர்களை ஏற்றுக் கொள்ளாதவர்கள், இறையாட்சியிலிருந்து தங்களை ஒதுக்கிக் கொள்கிறார்கள்.

மத் 10:34 இல் ஒரு வில்லங்கமான வாக்கியம் வருகிறது. ‘நான் உலகிற்கு அமைதி கொணர வந்தேன் என எண்ண வேண்டாம். அமைதியை அல்ல வாளையே கொணர வந்தேன்’ என்கிறார் இயேசு. ஆனால் மத் 26:52 இல் இயேசு, ‘வாளை எடுக்க வேண்டாம், வாளை எடுப்போர் அனைவரும் வாளால் அழிந்து போவர்’ என்கிறார். அத்தோடு சீடர்களுக்கு எதிர்ப்புகளும், ஏன் உடன்பிறப்புகளே அவர்களுக்கு எதிராக எழுவார்கள் என்று எச்சரிக்கிறார்
 (மத் 10:21-22). எனவே வன்முறை இயேசுகாட்டிய வழியல்ல என்பது தெளிவாகிறது.

இயேசு தன் மலைப் பொழிவில் ‘அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்’ என்கிறார் (மத் 5:9). ‘உரோமையின் அமைதி’ என்று உரோமையரின்  ஆட்சியின் உயர்வை பேசுவார்கள். அதன் எதிர்நிலையில்தான் இயேசு பிறந்தபோது வானவர், ‘உலகில் அவருக்கு உகந்தோர்க்கு அமைதி உண்டாகுக என்று பாடுகிறார்கள் (லூக் 2:14). அதாவது இறைவனின் கருணை எளிமையாகப் பிறந்திருக்கும் குழந்தையில் வெளிப்படுகிறது. உரோமையர் பேசிய அதிகாரத்தால் வந்த அமைதிக்கு எதிர்நிலையில் தான் இயேசு வல்லமையைக் காண்கிறார். அதனால்தான் ‘இப்போது உம் அடியான் என்னை அமைதியுடன் போகச் செய்கிறீர்’ என்கிறார் சிமியோன் (லூக் 2:29). இயேசு எருசலேமில் நுழைந்தபோது, மக்கள் ‘விண்ணகத்தில் அமைதியும் மாட்சியும் உண்டாகுக’ என்று வாழ்த்துகிறார்கள் (லூக்19:38). இயேசு பிறந்தபோது வானவர் பாடிய வார்த்தைகள் மக்களின் வார்த்தைகளாக இங்கு வெளிபடுகின்றன.

பவுல் அடிகளார், ‘கடவுளே அமைதியை அருளுகின்றார். அதே இறைவன் நம்பிக்கையாளர்களை தூய்மையாக்குகிறார். குற்றமின்றி காப்பாற்றுகின்றார்’ என்று விளக்குகிறார் (1 தெச 5:23).

ஆவிக்குரிய மனநிலை பெற்றவர்கள் பெறுவது வாழ்வும் அமைதியும் என்றுப் பவுலடிகளார் மேலும் விளக்குகிறார். (உரோ 8:6) ஆவியானவர் தரும் கனிகளில் ஒன்று அமைதியாக விளங்குகிறது (கலா 5:22; உரோ 14:17).

இறைவன் தரும் அந்த அமைதி, சீடர்களின் உறவில் வெளிப்பட வேண்டும் என்று கூறுகிறார்.  (உரோ 14:19;  1தெச 5:13;  2 கொரி 13:11) 

இறைவன் தரும்  அந்த அமைதி, சீடர்களை காவல் காக்கும் காவலரைப் போல் அமைந்திருக்கிறது என்றும் பவுலடிகளார் விளக்குகிறார் (பிலி 4:7).

எனவே பவுல் தன் கடிதங்களின் துவக்கத்திலும் இறுதியிலும் இறைவன் தரும் அமைதியை வாழ்த்தாகத் தெரிவிக்கிறார் (உரோ1:7; 1 கொரி 1:3;   2 கொரி 1:2; கலா 1:3; பிலி 1:2;  1தெச 1:1;  1தெச 5:23; பிலி 4:9; உரோ15:23)

புதிய ஏற்பாட்டில், இயேசு தன் சீடர்களுக்கு அளித்த அமைதி, சீடர்கள் மக்களுக்கு எடுத்துச் சென்ற அமைதி, சீடர்களின் வாழ்வில் ஒற்றுமை வழியாக வாழப்பட்ட அமைதி, சீடர்களை குறைகளிலிருந்து காப்பாற்றிய அமைதி என்று விளக்கப்படுகிறது. இவ்வாறு கடவுளின் அரசில் இடம் பெற கடவுளிடமிருந்து புறப்பட்டு வரும் அமைதி என்ற கொடை நம்மிடம் இடம் பெற்று வாழ்வைத் தருகிறது.

அன்னைக் காட்டும் வழி

அன்னைக் காட்டும் வழி

அருட்பணி. ச.இ. அருள்சாமி

மே மாதம் அன்னை மரியாவை சிறப்பாக நினைவு கூறுகின்ற மாதமாக அமைந்திருக்கிறது. பங்குகளில் மே மாதத்தில் சிறப்பான மாதா வணக்க வழிபாடுகள் உண்டு. குடந்தை மறைமாவட்டத்தில் இறையடியார்  லூர்து சேவியர் வளர்த்து தந்த அன்னை மரியாவின் வணக்கம், பூண்டி திருத்தலத்தில் தினமும் எதிரொலித்து வருகிறது. 
அன்னை மரியா திருஅவையின் முன் அடையாளமாகவும் திரு அவையின் முதல் அங்கத்தினராகவும் திருஅவையின் தாயாகவும் விளங்குகிறார்கள். 13ஆம்  நூற்றாண்டைச் சேர்ந்த புனித பெர்நாத்து அவர்கள் கூறுவார். விவிலியத்தில் திருஅவையைப் பற்றி கூறுவதெல்லாம் அன்னை மரியாவுக்கும் பொருந்தும் என்கிறார். திருஅவையும் அன்னை மரியாவும் தாயானவர்கள். ஏனென்றால் இருவரும் இறைவனுக்கு முழுமையாக அர்ப்பணமானவர்கள். இருவரும் தந்தையாகிய இறைவனுக்கு பிள்ளைகளைப் பெற்றுத்தருபவர்கள். அன்னை மரியா திருஅவையின் தலையான இயேசுவை பெற்றுத்தந்தவர்கள். அதேபோன்று திருஅவை திருஅவையின் உடலை பெற்று தருகிறது. 

திருவெளிபாடு 12 ஆம் இயலில் அரக்கபாம்பிற்கும் கருவுற்றிருந்த பெண்ணிற்கும் நடக்கும் போராட்டத்தைப் பார்க்கிறோம். அரக்கபாம்பு அப்பெண் தன் குழந்தையை பிறப்பிக்கும்போது அதனை விழுங்கிவிட காத்திருந்தது. (திவெ12.4). ஆனால் குழந்தை பிறந்ததும் குழந்தை கடவுளின் அரியணைக்குப் பறித்து செல்லப் பெற்றது. பெண் பாலைவனத்திற்கு ஓடி போனார். 260 நாள் அங்கு தங்கியிருந்தார். அங்கு கடவுள் அவரை பேணி பாதுகாத்தார் என்றும் பிறகு கடவுளின் தூதர் மிக்கேலுக்கும் அரக்கப் பாம்பின் துVதர்களுக்குமிடையே போர் உண்டானது. அதில் அரக்க பாம்பு தோல்விக் கண்டது (திவெ 12.4-8)

தமிழ்நாடு சென்ற மாதத்தில் போராட்டக் களமாகவே மாறிவிட்டது. உச்ச நீதிமன்றம் கட்டளையிட்ட‘ காவேரி மேலாண்மை வாரியத்தை’ மத்திய அரசு அமைக்காததை எதிர்த்து ஆளும் கட்சியும் எல்லா எதிர்கட்சிகளும் இணைந்து இரயில் மறியல் போராட்டம், அரசு அலுவலங்களில் முற்றுகையிடுதல் உண்ணா விரதப் போராட்டம் போன்ற போராட்டங்களை நடத்துகிறார்கள். இதனால் தமிழ்நாட்டிற்கு காவேரி நீர் உரிமையைத் தர வேண்டும் என்று உரத்தக் குரலெழுப்பி வருகிறார்கள். திருஅவையும் பல இடங்களில் இப்போராட்டத்தில் பங்குபெற்றிருக்கிறது.  கேட்டால்தான் கிடைக்கும். குரல் கொடுக்கவில்லையயன்றால் உள்ளதையும் கொத்திக் கொண்டு சென்றுவிடுவார்கள்.

தூத்துக்குடியில் தாமிரம் தயாரிக்கும் ஸ்ரலைட் ஆலை அப்பகுதி மக்களின் உடல்நலத்தை அழிக்கிறது என்று அந்த ஆலையை மூட  வேண்டும் என்ற  போராட்டம்.

தேனியில் அமைக்க போகின்ற நியூட்ரோன் ஆய்வுக்கூடமும் இயற்கையை அழித்துவிடும் என்று அதற்கு எதிர்ப்பான போராட்டம்.

காஷ்மீரில் பழங்குடி சிறுமி ஆசிஃபா கோவிலில் பல நபர்களால் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார். இதில் மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க வைச் சேர்ந்தவர்கள் கைதானவர்களுக்கு ஆதரவாக ஊர்வலம் சென்றிருக்கிறார்கள். உத்தரபிரதேசம் மற்ற பல இடங்களில் இளம் சிறுமிகளை பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கியிருக்கிறார்கள். மோகமென்ற உணர்வு மிருக நிலையை அடைந்தது போல நிகழ்வுகள் நடந்துக் கொண்டிருக்கின்றன. உணர்வுகளை ஒழுக்கத்துடன் பயன்படுத்துவதுதான் நாகரீகம்.

கர்நாடகாவில் தேர்தல் நடக்கப் போகிற இவ்வேளையில் மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க. அரசு, காவிரி நீர் பங்கீட்டு நீதியை செயல்படுத்தாமல் நாடகமாடி வருகிறது. காவிரியில் தண்ணீர் வரவில்லையயனில் தமிழ்நாடு பாலை வனமாகத் தான் மாறிவிடும். தமிழக மக்கள் ஒன்றிணைந்து உரிமையைப் பெற வேண்டும்.

அண்மையில் வாட்ஸ்அப்பில் குறிப்பிட்டி ருந்தார்கள். வருகிற மே 1 ஆம் தேதி கிராம சபைக் கூட்டங்கள் ஒவ்வொரு கிராமத்திலும் நடக்கும். அப்போது அந்தந்த கிராமத்திற்கு கொடுக்கப்படும் திட்டங்கள் என்ன? உதவிகள் என்ன? என்று அறிவிப்பார்கள். கிராமத்திலிருந்து ஒரு நூறு பேராவது அதில் கலந்துக் கொண்டால் கிராமத்திற்கு அளிக்கப்படும் முன்னேற்றத் திட்டங்களை அறிந்துக் கொண்டு உரிமைகளைப் பெறலாம் என்றார்கள். மக்கள்  இதை போன்ற ஆக்கபூர்வமான நிகழ்வுகளில் பங்குபெற வேண்டும். மற்றொரு ஊக்கமளிக்கும் செய்தி. அரியலூர் மாவட்டம் விளாங்குடியில் ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு. தியாக ராஜன் அவர்கள்(69) அமெரிக்காவில் பணிபுரியும் தன் மகளின் உதவி கொண்டு சென்ற இரண்டு ஆண்டுகளாக இரண்டு ஏரிகளை 10 லட்ச ரூபாய் செலவு செய்து தூர் வாரியிருக்கிறார். இதனால் அவ்வூர் மக்கள் பெரிதும் பயனடைந்துள்ளனர். இவரைப் போன்று மக்கள் ஒன்றித்து பொதுப் பணிகளைச் செய்யலாம்.  ஊழல் நிறைந்த நம் நாட்டில் இத்தகைய ஒளிவிளக்குகள் நாட்டிற்கு உயிரைத் தருகின்றன. அன்னை மரியாவின் பணிவு, பிறரன்பு நம்மில் ஒளிமயமாகட்டும். 

Monday 16 April 2018

மாநில மத்திய அரசுசுகள், சிறுபான்மையி னருக்குசெயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள்

மாநில மத்திய அரசுசுகள்,  
சிறுபான்மையி னருக்குசெயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள்

(மாநில மத்திய அரசுகள், சிறுபான்மையினருக்கு நிறைய உதவிகள் செய்கின்றன.  அவைகளை பெற்று வளர்வோம்).

1. ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்ள அரசு நிதி உதவி:

 தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிறித்துவ பிரிவினரும் புனிதப் பயணமாக ஜெருசலேம் செல்வதற்கு நிதியுதவி வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டிலும் 500 கிறித்தவர்கள் புனித பயணம் செய்யலாம். இதற்கென அரசின்  நிதி உதவியாக நபர் ஒருவருக்கு ரூ 20,000/‡  வீதம் வழங்கப்படுகிறது.

* இப்புனித பயணம் பெத்லேகம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டன் நதி, கலிலேயா கடல்  மற்றும் கிறித்தவ மத தொடர்புடைய பிற புனித தலங்களையும் உள்ளடக்கியது.

* விண்ணப்பதாரர்/குடும்பத்தினர் தமிழ்நாட்டில் வசிக்கும் கிறித்தவ மதத்தவராக இருத்தல் வேண்டும். 

* அறிவிப்பு தேதியில் குறைந்த பட்சம் ஓராண்டு செல்லதக்க பாஸ்போர்ட் உடையவராக இருத்தல் வேண்டும்.

* விண்ணப்பிக்கும் போது வெளிநாடு பயணம் மேற்கொள்வதற்கு எவ்விதமான வில்லங்கங்களும் இருத்தல் கூடாது.

* வெளிநாடுகளில் புனித பயணம் மேற்கொள்வதற்கு மருத்துவ மற்றும் உடற்தகுதி பெற்றவராக இருத்தல் வேண்டும்.

* இப்பயணம் மேற்கொள்வதற்காக ஏற்படும் செலவினத்தில் அரசு வழங்கும் நிதி உதவி ரூ 20000/‡ நீங்கலாக மீதமுள்ள தொகையை செலுத்த ஒப்புதல் அளிக்க வேண்டும்.

* ஏற்கனவே இத்திட்டத்தின் கீழ் ஜெருசலேம் புனிதப்பயணம் மேற்கொண்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கக் கூடாது.

* ஒரு குடும்பத்தில் விண்ணப்பதாரரையும் சேர்த்து அதிகபட்சம் 4 நபர்கள் பயணம் மேற்கொள்ளலாம். இதில் 2 வயது நிறைவடைந்த 2 குழந்தைகளும் இருக்கலாம். இப்பயணத்தில் 70 வயது நிறைவடைந்துள்ள விண்ணப்பதாரர்களுக்கு முன்னு ரிமை அளிப்பதுடன் அவருக்கு துணையாக அவர் விரும்பும் ஒரு நபரை  மேற்படி நிபந்தனைகளுக்குட்படும் பட்சத்தில் அவருடன் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.

பயனாளிகள் மாவட்ட வாரியாக கிறித்தவ மக்கட்தொகையின் அடிப்படையில் கணினி மூலம் குலுக்கல் (ஸிலிமி றீதீவிமிeது)  முறையில் கூர்ந்தாய்வு குழுவினரால் தெரிவு செய்யப்படுவர். தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் அரசால் தேர்ந்தெடுக்கப்பட்ட பயண முகவர்கள் மூலம் மட்டுமே இப்புனித பயணம் மேற்கொள்ள வேண்டும்.

* தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தகவல் மற்றும் புனிதப்பயணம் நிரல் குறித்து விவரம் தெரிவிக் கப்படும்.
பயணத்திற்கு பிறகுதான் நிதி வழங்கப்படும்.

2. கிறித்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்ள அரசுநிதி உதவி    
வழங்குதல்:

தமிழகத்தில் உள்ள கிறித்துவ தேவாலயங்கள் புனரமைத்தல் மற்றும் பழுது நீக்குதல் பணிகள் மேற்கொள்வதற்காக நிதியுதவி அளிக்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
யஇத்திட்டத்தில் தேவாலயம் பதிவு செய்யப்பட்டு சொந்தக்கட்டடத்தில் குறைந்த பட்சம் 10 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் இருக்க வேண்டும்.     

* தேவலாயங்களின் ஏற்பட்டுள்ள பழுதுகள் மற்றும் தேவாலய கட்டடத்தின் வயது ஆகியவற்றை கருத்திற்கொண்டு கீழ்காணுமாறு நிதி உதவிகள் வழங்கப் படும்.

* தேவலாய கட்டடத்தின் வயதிற்கேற்ப 10 - 15 வருடம் வரை ரூ 1 இலட்சமும், 15 ‡ 20 வருடம் வரை ரூ 2 இலட்சமும்,20 வருடத்திற்கு மேல் ரூ 3 இலட்சமும் நிதி உதவி வழங்கப்படும்.

* தேவலாயம் சீரமைப்பு பணிக்காக வெளி நாட்டிலிருந்து எவ்வித நிதி உதவியும் பெற்றிருத்தல் கூடாது.

* தேவலாய கட்டடத்தின் பழுதுகளை மாவட்ட ஆட்சித்தலைவரால் அமைக்கப்பட்ட குழுவினரால் நேரடியாக பார்வையிட்டும், கட்டடத்தின் உறுதித்தன் மையினை ஆய்வு செய்து உரிய அதிகாரிகளால் சான்று அளித்தும்,  அங்கீகரிக்கப்பட்ட  கட்டிட வரைபடம், பழுதுகள் தொடர்பான திட்ட மதிப்பீடு மற்றும் கட்டடத்தின் வயது ஆகியவற்றின் அடிப்படையில் நிதி உதவி வழங்கப்படும். 

மத்திய அரசின் நலத்திட்டங்கள்

 1. கல்வி உதவித்தொகை திட்டங்கள் (Scholarships)

அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களிலும் ஒன்றாம் வகுப்பு முதல் தொழிற்கல்வி/ ஆராய்ச்சி படிப்பு வரை பயிலும் கிறித்துவர், இஸ்லாமியர், சீக்கியர், புத்தமதத்தினர், பார்சி மற்றும் சமண மதங்களைச் சார்ந்த சிறுபான்மையின மாணவ/ மாணவியர்களுக்கு மத்திய அரசின் கீழ்க்கண்ட கல்வி உதவித்தொகை திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

பள்ளிப்படிப்பு  பள்ளிமேற்படிப்பு  மற்றும் அடிப்படை தகுதி 
வகுப்பு   1 முதல் 10 வரை   (1 ஆம் வகுப்பு நீங்கலாக)  ஆண்டு  வருமானம் ரூ 1 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் 
                    
11 ம் வகுப்பு முதல்  ஆண்டு  வருமானம் ரூ 2 இலட்சத்திற்கு  மிகாமல் இருக்க வேண்டும். ஆராய்ச்சி தொழிற்கல்வி: ஆண்டு  வருமானம் ரூ 2.5 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் . 

எல்லா நிலையிலும் மதிப்பெண் 50 சதவீதம்  இருக்க வேண்டும்                      
நிபந்தனை:  ஒரு குடும்பத்தை சார்ந்த இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இத்துறையால் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை பெறுபவர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை/ ஆதி திராவிடர் நலத்துறை/ பிறத்துறைகள்/ நல வாரியங்கள் ஆகியவற்றில் எவ்வித கல்வி உதவித்தொகையும் பெறக் கூடாது. கல்வி உதவித் தொகை: கல்விக் கட்டணம் மற்றும் பராமரிப்புக் கட்டணம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: இக்கல்வி உதவித்தொகைப் பெறுவதற்கு ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், மதம்/சாதிச்சான்றிதழ், ஆதார் அட்டை எண், வங்கி கணக்கு எண், IFSC code (ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டது)  ஆகிய விவரங்களை உள்ளீடு செய்து www.Scholarship.gov.in   என்ற இணையதள முகவரியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மேலும் ரூ.50,000 க்கு மிகாமல் கல்வி உதவித்தொகை பெறுபவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த படிவத்தை படியிறக்கம் செய்து உரிய ஆவணங்களுடன் பயிலும் பள்ளி/ கல்லூரியில் தவறாது சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

2. பேகம் ஹஜ்ரத் மகால் தேசிய கல்வி உதவித் தொகை: (Begam Hajrat Mahal National Scholarship Scheme)

 சிறுபான்மையின மாணவிகள் அதிக மதிப்பெண் பெற்று பொருளாதார வசதியின்மையால் கல்வியை தொடர முடியாத நிலையை கலையும் வகையில் உதவி தொகை வழங்கும் திட்டமாகும்.

தகுதி: 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவியர்கள் முந்தைய வகுப்புகளில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். 

ஆண்டுவருமாணம்: குடும்ப ஆண்டு வருமானம் ரூ 2 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். 

உதவித் தொகை: 9 ஆம் வகுப்பு (ம) 10ஆம் வகுப்பு மாணவியர்களுக்கு ஆண்டுக்கு ரூ 5000/- வீதமும், 11 (ம), 12 ஆம் வகுப்பு மாணவியர்களுக்கு ஆண்டுக்கு 6000/- வீதமும், இரண்டு ஆண்டுகளுக்கு  வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு https://scholarship - maef.org என்ற இணையதளத்திலும் அறியலாம்.

3. மெளலான ஆசாத் கல்வி அறக்கட்டளை மூலம் கல்வி நிறுவனங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல். (Maulana Azad Education Foundation)

மத்திய அரசின் நிறுவனமான மெளலான ஆசாத் கல்வி அறக்கட்டளை மூலம் கல்வியில் பின்தங்கிய சிறுபான்மையினர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் உள்ள பள்ளிகள், ஐடிஐ, பாலிடெனிக்/ ஆசிரியர் பயிற்சி நிலையங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்வதற்கு நிதிஉதவி வழங்குகிறது, அனைத்து கட்டுமானங்கள் (ம) விரிவாக்கப் பணிகள், விடுதி கட்டணங்கள் ஆகியவற்றில் கட்டுமானத்தில் தன்மைக்கேற்ப அதிகபட்சம் ரூ.50 இலட்சம் நிதி வழங்கப்படும். திட்டத்திற்கு மே மாதம் முதல் செப்டம்பர் 30ந் தேதிக்குள் www.maef.nic.in ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

4. சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் (IDMI)
கல்வியில் பின் தங்கிய சிறுபான்மை மாணவியரின் கல்வி தரத்தை மேம்படுத்தும் வண்ணம்  மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி இத்திட்டம் செயல்படுத்தப் படுகிறது. உட்கட்டமைப்பு வசதிகளான வகுப்பறை, அறிவியல் கூடம், கணினி அறை, நூலகம், கழிப்பறை, குடிநீர் வசதிகள், விடுதிகள் மற்றும்  இதர அத்தியாவசிய தேவைகளை மேம்படுத்தும் திட்ட மதிப்பீட்டு தொகையில் 75 சதவீதம் மட்டும் (அல்லது) அதிகபட்சம் ரூ.50 இலட்சம் இதில் எது குறைந்ததோ அத்தொகை கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும்.

உதவிப்பெறுவதற்கான தகுதிகள்: அரசு உதவி பெறும் / உதவி பெறாத சிறுபான்மையினரின் பள்ளிகள் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் இயங்கி மாணவர்கள் சேர்க்கை தொடர்ந்து நடைபெற்றிருக்க  வேண்டும்.
விபரங்களுக்கு  www.mhrd.gov.in ல் தெரிந்துக் கொள்ளலாம்.

5. பல்நோக்கு வளர்ச்சி திட்டம் மூலம் அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்துத்தல்  (Multi Sectoral Development Programme)
பின்தங்கிய சிறுபான்மையின சமூகத்தினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் குடிநீர் வசதி, சாலை வசதிகள், கழிவறை வசதி, கான்கீரிட் வீடுகள் அமைத்தல், மின்சார வசதி ஏற்படுத்துதல் போன்ற அடிப்படை வசதிகள், திறன் வளர்ப்பு பயிற்சிகள் பின்தங்கிய சிறுபான்மையினர் வசிக்கும் பகுதிகளில் மேம்படுத்தப்படும்.
தகுதிகள்: இத்திட்டம் மக்கட்தொகை கணக்கெடுப்பின் (2011) படி அந்தந்த மாவட்டங்களில் சிறுபான்மையினர் மொத்த மக்கள் தொகையில் நகர்ப்புறங்களில் 25 சதவீதத்திற்கு குறையாமலும், கிராமப்புறங்களில் 50 சதவீதத்திற்கு குறையாமலும் இருத்தல் வேண்டும்.

இத்திட்டங்களை மாவட்ட ஆட்சித்தலைவரின் தலைமையிலான குழுவின் கருத்துக்களை மாநில அரசு பரிசீலித்து மைய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.

விவிலிய விடுகதை, 2 கொரிந்தியர் 1 முதல் 13 முடிய

விவிலிய விடுகதை

- அருட்சகோ. பெரேரா, FIHM, சேலம்

2 கொரிந்தியர் 1 முதல் 13 முடிய

அண்ட புளுகு திருத்தூதர்களும் உண்டு
    ஆகாசப் புளுகு திருத்தூதர்களும் உண்டு
    வஞ்சக வேலையாள்கள்
  கிறிஸ்துவின் தூதர்களாக நடிப்பவர்கள்
  இவர்களை எப்படி அழைக்கலாம்?

2. தீயவை சொல்பவன்
  தீமைக்குத் தலைவன்
  நடிப்பிலே கில்லாடி
பொய்யுக்கு அப்பன்
பாம்பாய் வந்து கெடுத்தவன்
பாரெங்கும் சுற்றுபவன்
இவன் யார்?

3. அந்தப்படைக்கலத்தை தங்கள்
    இடக்கையிலும், வலக்கையிலும்
  எவற்றால் தாங்கியுள்ளனர்.

4. அன்று முக்காடிட்டு முகத்தை மறைத்தார்
    இரண்டெழுத்துக்காரர்.
    இன்று முக்காடின்றி முகத்தினராய் பிரதிப்பலிப்போம்
  எனக் கூறியவர் இவர் யார்? அவர் யார்?
அது என்ன?

 5. நாங்கள் வீதியில் கிடந்தோம்
    எங்களை எடுத்தவர்கள் அவர்கள்
    தட்டினர், மிதித்தனர், அடித்தனர்,
  சுற்றினர், கழற்றினர், உருட்டினர்
  அசைந்துக் கொடுத்தேன்.
நாங்கள் யார்? இயக்கியவர் யார்?

6. கையில் அணியா பூ
      இதயத்தில் இருக்கும் பூ
    மனதை இறுக்கும் பூ
    அது என்னப் பூ

7. சூப்பரா சொல்றேன்க
    சூதும் வாதும் தெரியாதுங்க
    சிறைப்பட்டேன், அடிப்பட்டேன்
  கல்லெறிப் பட்டேன்.
ஆழ்கடலில் அல்லலுற்றேன்
பட்டினிக் கிடந்தேன், குளிரினில் வாடினேன்
  நான் யார்?

 8. மிகுதியாய் சேகரித்தவருக்கு
      எதுவும் மிஞ்சவில்லை
      குறைவாகச் சேகரித்தவருக்கும்
      எதுவும் குறைவுபடவில்லை
      என்று எங்கே எழுதியுள்ளது?

 9. கொடுக்கிற தெய்வம்
    கூரையப் பிச்சிக்கிட்டு கொட்டுமாம் அதுபோல
    வாரி வாரி வறியவர்க்கு வழங்குவது
  பெற்ற பெருவாழ்வை மற்றவர்களோடு பகிர்வதின்
  கிடைத்த வெகுமதி இரண்டெழுத்தில்
  நிலைத்திருக்கும் அது என்ன?

10. நெறிக் கேட்டோடு உறவு   NO NO NO
      இருளோடு இருப்பவரோடு NO NO NO
      சாத்தானோடு உடன்பாடு  NO NO NO
    நம்பிக்கையற்றோருடன்   NO NO NO
    பின்னர் நாம் யார்?

11. விடுவித்தார் இதிலிருந்து - எதில்?
    இனிமேலும் விடுவிப்பார்- எவற்றால் ?

12. கூடையில் குந்திய கோமகன்
      கோபுர மேல் மாட வழியே
    தப்பிய பேரறிவாளர் யார்?

13. எழுதப்பட்ட அதனால் விளைவது இரண்டெழுத்து
      அவரால் விளைவது இது மூன்றெழுத்து
      எப்படி?

14. திருத்தூதர்க்குரிய அறிகுறிகள் இவைகளே?
      மஉ, அஅ, அசெ, வசெ
      இவைகளை தன்னகத்தே கொண்ட தூதர் யார்?

15. பாசத்துக்கு உரிய தம்பி
  நேசத்துக்கு உரிய தம்பி
    அன்பின் தங்கக் கம்பி
    அவருக்கு உகந்த தம்பி
      இந்த தம்பி யார்? யாருக்கு உகந்தவர்?

நிலையில்லா இந்திய பயணங்கள்

நிலையில்லா இந்திய பயணங்கள்

இந்தியாவில் பயணம் செய்வது, அமெரிக்கர்கள் நிலவிற்கு சென்று வருவதற்கு சமம் என்று சொல்லலாம். அந்த நிலவுப் பயணம் கூட திட்டமிட்டு நடைபெறுகிறது. நமது நாட்டில் செய்யும் பயணங்கள் நிச்சயமற்ற தன்மை வாய்ந்தவை. என் அனுபவங்களிலிருந்து கீழ்க்காணும் குறிப்புகளைத் தருகிறேன்.  

 இரயில் பயணம்:

திருவனந்தபுரம் இரயில் நிலையத்தில் ஒருமுறை இப்படி அறிவிப்பு எழுதியிருந்தார்கள். ஓர்  இரயில் இரண்டு மணி நேரம் தாமதமாக வரும். மற்றொரு இரயில்,  எப்போது வருமென்று கூறமுடி யாது என்று எழுதியிருந்தார்கள். நம் நாட்டு இரயில்கள் கடவுளைப் போல, இரயில் எந்த நேரத்தில் வரும் என்று யாராலும் சொல்ல முடியாது. வழக்கமாக தாமதமாக த்தான் வரும். நம் துரதிஷ்டம் நேரத்தோடு அத்திபூத்தாற் போல் வந்து விடும். பல தடங்கள் உள்ள நிலையங்களில் திடீரென்று தடம் மாற்றுவார்கள். அப்போது பயணிகள் ஆடி ஓடுவதை பார்க்க வேண்டுமே. சில நேரங்களில் இரயில் வரும் நேரத்தைப் பற்றி ஒலிப்பெருக்கியில் அறிவிக்கவே மாட்டார்கள். தேவையில்லாததற்கெல்லாம் கத்திக் கொண்டே இருப்பார்கள். எனவே ஒரு மணி நேரத்திற்கு முன்பதாகவே இரயில் நிலையம் சென்று விடுவது நல்லது. வேக வண்டிகளில், முன்பதிவு இல்லாதப் பெட்டிகளில் மக்கள்படும் அவதியைப் பார்க்க வேண்டுமே! ஒருமுறை, ஒருவர் தன் பெட்டியை இரயிலில் வைக்க இடமில்லாமல் நின்றுக்கொண்டே தன் தலையிலேயே தூக்கிக் கொண்டு பயணம் செய்வதைப் பார்த்து பதைத்துப் போனோம். பயணச் சீட்டு வாங்கியும் உட்கார இடமில்லாமல் பயணம் செய்வது வெட்கக்கேடு. இரயில்வே துறை பல சீர்திருத்தங்களை செய்திட வேண்டும். 

பயணச் சீட்டு பரிசோதகர் திடீரென்று வருவார். அல்லது இரயில் நிலையத்தில் சோதனை செய்வார்கள். இது ஆங்கிலேயர் இன்றும் இங்கிலாந்தில் பயன்படுத்தும் முறை. ஜெர்மனியில், நான்கு, ஐந்து பரிசோதகர்கள் ஒவ்வொரு நிலையத்திலிருந்தும் இரயில் புறப்படும்போது எல்லா பெட்டிகளிலும் நுழைந்து பரிசோதிப்பர். பயணச்சீட்டு வாங்க முடியாதவர்களிடம் அப்பொழுதே பயணச்சீட்டை வழங்குவர். நம் நாட்டிற்கு ஏற்ற முறைகளை கண்டுபிடிக்க வேண்டும்.  இரண்டு அல்லது மூன்று பெட்டிகளுக்கு ஒரு நடத்துனரைப் போல நியமித்து, மக்களை அமர வைக்கவும், பயணச்சீட்டுகளை பரிசோதி க்கவும் செய்யலாம்.

முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் உள்ள பரிசோதகர், பெட்டிகளில் பயணம் செய்பவர்களுக்கு பாதுகாவலர் போல செயல்படுவது கடமை என்று கருதுகிறேன். பரிசோதனை செய்துவிட்டுப் பெரும்பாலும் அவர்கள் டிரிங் சாப்பிட்டு விட்டு சாய்ந்து விடுகிறார்கள். இவ்வளவு நிலையற்ற தன்மைகள் பாம்பு ஊர்வதைப் போல இடையில் வந்தாலும் இந்தியரின் பயணம் நடந்து  கொண்டுதான் இருக்கிறது. உலக அதிசயங்களில் இதுவும் ஒன்று என்று வியக்கலாம்.

 பேருந்து:

அரசு பேருந்துகளின் கட்டமைப்பு ஓட்டை உடைசல் ஒருபக்கம். வேறுபல வகையான ஓட்டைவசதிகளும் உண்டு. பேருந்துகளில் அவை செல்லும் இடங்கள் பற்றி அறிவிப்பு பலகைகள் இருக்காது. இருந்தாலும் மாறுபட்ட இடக்குறிப்புடன் இருக்கும். எனவே குழப்பமடைந்த பயணிகள் நடத்துனரைக் கேட்டால், அவரைக் கேட்கக் கூடாத கேள்வியாக நினைத்து முகத்தைக் காட்டுவார்.

நகரங்களிலுள்ள பேருந்து நிலையங்களில், குறிப்பிட்ட பேருந்து எங்கு நிற்குமென்று தெரியாது. அதற்கு விசாரிக்க வேண்டும். தவறான தகவல்களும் தரப்படுவதுண்டு. இதனால் பேருந்து நிலையத்தில் பயணத்திற்காக நிற்கும் மக்கள்படும் மனக்குழப்  பங்களைப்  பார்க்கலாம்.

குடந்தையிலிருந்து பெங்களூருக்கு செல்ல 7 மணி வண்டிக்கு முன்பதிவு செய்திருந்தேன். வண்டிகள் எப்போது வரும் எங்கு வரும் என்ற விபரமற்ற நிலையில் 6 மணிக்கே நிலையம் சென்றேன். 6.30க்கு ஒரு பேருந்து வந்தது. 7 மணி பேருந்துதான் முன்கூட்டியே வந்துவிட்டது என்று நினைத்து நடத்துனரைக் கேட்டால்,  இது ஆறு மணி வண்டி சார். 7 மணி வண்டி பிறகு  வரும் சார் என்றார். பிறகு ஏழே காலுக்குத் தான் ஏழு மணி வண்டி வந்து ஏழரை மணிக்கு எடுத்தார்கள்.  ஜெர்மனி மற்றும் மேலை நாடுகளில் 6:23 மணிக்கு வண்டி என்றால் அந்த நொடிக்கு வண்டி அங்கு வந்து நிற்கிறது. காலதாமதம் அங்கு விதிவிலக்கு. இங்கு இதுதான் விதி.

 ஆட்டோ:

தமிழ்நாட்டில் ஆட்டோ ஓட்டுனர்களைப் பார்த்து நாம் பரிதாபப் பட வேண்டும். ஏனென்றால் அவர்களின் சூழ்நிலை அப்படி. நான், ஏன் பெரும்பாலானோர் ஆட்டோ எடுக்க விருப்பப்படுவதில்லை. முக்கியமாக ஆட்டோ ஓட்டுனர்களுடன் சண்டையிட்டு, பேரம் பேசுவதற்கு தனித்திறமையும், பயிற்சியும் வேண்டும். தமிழ்நாட்டு ஆட்டோ ஓட்டுநர்கள் பிழைக்கத் தெரியாதவர்கள் என்று சொல்வேன்.

கேரளாவில் ஆட்டோவில் மீட்டர் போட்டு, அதிலிருந்துதான் பணம் வசூலிக்கின்றனர். எனவே மக்கள் நம்பிக்கையுடனும், மகிழ்வுடனும் ஆட்டோ எடுத்து செல்கின்றனர். சாலக்குடி என்ற ஊரில்  ஆட்டோ எடுத்தேன். வழியில் ஆட்டோ ரிப்பராகிவிட்டது. அப்போது அந்த ஆட்டோ ஓட்டுநர், மற்றொரு ஆட்டோவை நிறுத்தி அதில் என்னை ஏற்றி விட்டார். அதுவரை சென்றதற்கு கட்டணம் வாங்கவில்லை. அங்கு ஆட்டோ ஓட்டுநர் களுக்கு நிற்பதற்கு நேரமில்லை. நமது ஆட்டோக் காரர்கள் யானை விலை, குதிரை விலை தான் கேட்பார்கள். மீட்டர் போட்டு விட்டால் தமிழ்நாட்டில் மழை கொட்டோ கொட்டு என்று கொட்டும்.

பெங்களூரில் கேரளாவைப் போல நியாயமாக ஆட்டோ பயணம் நடந்தது. இப்போது அங்கும் குட்டிச்சாத்தான் நுழைந்துவிட்டான். இரயில் வந்து சேர்ந்தாலோ, பேருந்துகள், நிலையத்திற்கு வந்தாலோ, ஆட்டோ ஓட்டுநர்கள், ஓடி வருவார்கள். இவர்கள் பெரும்பாலும் ஏமாற்று பேர் வழிகள். ஏடோகோடமாக கட்டணம் கேட்பார்கள். கேள்வி கேட்டால் திட்டுவார்கள். இரயில், பேருந்து நிலையங்களிலிருந்து வெளியே வரிசையாக நிற்பார்கள். அதிலும் நியாயமானவர்கள் ஒருசிலர் தான்.

பெங்களூரில் சிவாஜிநகர் பேருந்து நிலையத்திற்குக் காலை 6 மணிக்கு எனது பேருந்து சென்று சேர்ந்தது. வழக்கம் போல ஆட்டோ ஓட்டுநர்கள், ஆட்டோ வேண்டுமா? என்று ஓடி வந்தனர். அவர்களை தவிர்த்து வெளியே வந்தேன். ‘இந்திரா நகர், விவேகானந்தர் மெட்ரோவுக்கு செல்ல எவ்வளவு’ என்று கேட்டேன். முதலில் பெங்களூர்காரரை விசாரித்து வைத்திருந்தேன். நூறு ரூபாய் தான் கேட்பார்கள் என்று சொல்லியிருந்தார்கள். ஆட்டோ ஓட்டுநர் 200 ரூபாய் என்றார். ‘என்ன சார் அதிகமாய் கேட்கிறீர்கள்’ என்றேன். 150ரூபாய் கொடுங்கள் என்றார். சரியாக சொல்லுங்க சார் என்றேன். எவ்வளவு தருவீர்கள் என்றார். 100 ரூபாய் என்றேன். சிரித்தார். சற்று தள்ளி ஒரு ஆட்டோவை கேட்டேன். அதே இடத்தை சொல்லி எவ்வளவு? என்றேன். 250 ரூபாய் என்றார். சற்று நகர்ந்து சென்று மற்றொரு ஆட்டோவை கேட்டேன். 200ரூபாய் என்றார். ‘பார்த்து சொல்லுங்கள்’ என்றேன். 180 ரூபாய் தாங்க சார் என்றார். ‘100ரூபாய் தான் என்று சொல்லியிருக் கிறார்கள். ஏன்தான் இப்படி அதிகமா கேட்கிறீர்கள்?’ என்றேன். ‘மசால் தோசைக்கூட 70ரூபாய் சார். பார்த்து கொடுங்கள் சார்’ என்றார்.  சரி 170 ரூபாய் என்று ஒத்துக் கொண்டு ஏறினேன். இந்திரா நகர், விவேகானந்தர் மெட்ரோ நிலையம் என்றேன்.  வழியில் தமிழ் பாடலெல்லாம் டேப்பில் போட்டார். நம்ம தமிழ் ஆளுன்னு சந்தோ­ப்பட்டேன். இந்திரா நகர் என்று எழுதியிருந்தது. இதுதான் நீங்க கேட்ட இடம் என்றார். ‘சார் இந்திரா நகர் விவேகானந்தா ரோடு மெட்ரோ நிலையம்’ என்றேன். ‘இந்த ரோடே விவேகானந்தர் ரோடுதான் சார்’ என்று இறக்கி விட்டார். பிறகு அங்கிருந்தவர்களை நான் செல்ல வேண்டிய கோவில் இடத்தை விசாரித்தேன். பலருக்கு தெரியவில்லை. வீட்டில் பணிசெய்யும் பணியாளர் கனடாவில், ‘கொஞ்ச தூரம் சென்று இடதுபக்கமாக செல்லுங்கள்’ என்றார். அவர் சொன்னதைப் போல இடது பக்கமாக சென்றேன். சுமார் நாலு பேரை கேட்டேன். அவர்களுக்குத் தெரியவில்லை. கடைசியாக ஒரு இளம் பெண் காதில் போனை சொருகிக் கொண்டு வந்தார். தயங்கி தயங்கிக் கேட்டேன். தமிழ்ப்பெண். விபரமாகச் சொன்னாள். ஒரு கிலோமீட்டர் தூரம் சென்று நான் போக வேண்டிய இடத்தைக் கண்டுபிடித்தேன். படித்தவர் களுக்கே இந்த நிலை? படிக்காத பாமரர்களுக்கு எந்த நிலையோ? எனக்கு நடந்ததை விட மற்றவர்களுக்கு இன்னும் மிகமிக மோசமாக ஏற்பட்டிருக்கலாம்.

எனவே இந்தியாவில் பயணம் செய்யும் நெளிவு சுளிவுகளை கற்றுக்கொள்ள ஒரு பள்ளி நடத்தினாலும் பரவாயில்லை.

Friday 13 April 2018

பாஸ்கா காலம் 5 - ஆம் ஞாயிறு

கிறிஸ்துவுக்குள் இணைந்த வாழ்வு 

பாஸ்கா காலம் 5 - ஆம் ஞாயிறு

அருள்பணி . மரிய அந்தோணி ஜேம்ஸ் , குடந்தை

தி.ப 9: 26 - 31; 1 யோவா 3: 18-24;  யோவா 15:1-8;

மனித வாழ்வில் உறவுகள் அவசியம் அடிப்படையாகும். இயேசுவும் தனக்குதான் தேர்ந்துகொண்ட திருத்தூதர்களுக் குமிடையே இருக்க வேண்டிய உறவுகளைப்பற்றி இன்றைய அருள்வாக்குகள் பாஸ்கா விளக்குகின்றன. 

சில உறவுகள் நாம் தேர்ந்தெடுக்காமலே, அடிப்படையிலே நம்மோடு தொடரும் உறவுகளாக அமையும். உதாரணமாக நமது பிறப்பால் ஏற்படுகின்ற உறவுகள். சில உறவுகள் நம்மால் சுதந்திரமாக தேர்ந்தெடுக்கப்படுகின்றன. உறவுகளாக அமைந்திடும். பழைய ஏற்பாட்டில் யாவே இறைவன் இஸ்ராயேல் மக்களை தனது அன்பிற்கு உரிய சுவிகார மக்களாக தேர்ந்தெடுகிறார். புதிய ஏற்பாட்டிலும் இயேசு தனது மீட்புப் பணியை தனக்குப் பின் தொடர்ந்தாற்றிட திருத்தூதர்களை அழைத்தார். (யோவா 15: 16) இல் “நீங்கள் என்னை தேர்ந்து கொள்ளவில்லை, நான்தான் உங்களை தேர்ந்து கொண்டேன்” என்று தன் உறவை இயேசு உறுதிப்படுத்துகிறார். 

அந்த ஆழ்ந்த உறவையே, “நானே திராட்சைச் செடி நீங்கள் அதன் கொடி”  என்றும், அச்செடியோடு கொடியாகிய அவர்கள் இணைந்திருக்க வேண்டும் என்றும் தெளிவுப்படுத்துகிறார். மாற் 3:14 இல் தான், திருத்தூதர்களை அழைத்ததன் நோக்கத்தை தெரிவிக்கிறார். இயேசுவோடு இருப்பதற்காகவே, அதாவது இயேசுவோடு வாழ, இயேசுவாக வாழ, இயேசுவுக்காகவே வாழ. ஒரு சீடனுக்கு தனது சீடனுக்கு தனது குருவோடு உள்ள முதல் கடமை குரு சொல்வதைக் கேட்டு, அவர் வாழ்க்கையிலிருந்து கற்றதை செயல்படுத்துவதுதான். அவரது போதனைக்களைச் சிந்தித்து, அவரோடு உறவாட மகிழ வேண்டுமென்பதே அவரோடு இணைந்து கனி கொடுத்தல் என்பதன் பொருளாகும்.

இரண்டாவதாக: அவரோடு இணைந்திருத்தல் என்பது பிறரோடு இருந்து இயேசுவின் அன்பை பகிர்தலாகும். அதனைத்தான் புனித அன்னை தெரசாவும், மற்ற புனிதர்களும் செய்தனர்.  எந்த அளவிற்கு நாம் இயேசுவோடு இணைந்துள்ளோமோ அந்த அளவிற்கு நாம் மக்களில் இயேசுவை காணமுடியும். 

இன்றைய முதல் வாசகமும், கிறிஸ்துவுக்குள் வாழ்கின்ற வாழ்வினைப் பற்றியே பேசுகிறது. இதுவரை கிறிஸ்து என்ற பெயரைக் கேட்டாலோ, அல்லது அவரைப் பின்பற்றுகின்ற மக்களை கண்டாலோ வெறுக்கின்ற சவுல், மனந்திருந்தியப்பின் இயேசுவின் மற்ற சீடர்களோடு இணைந்து நின்றார். ஆகவே தான் பிலி 1:21 இல் புனித பவுல் வாழ்வென்பது கிறிஸ்துவே, இறந்தால் அது ஆதாயமே, என்று சொல்கிறார். மேலும் கலா 3: 27 இல் புனித பவுலடிகளார், கிறிஸ்துவுக்குள் திருமுழுக்கு பெற்ற நீங்கள் கிறிஸ்துவை அணிந்து கொண்டீர்கள் என்கிறார். நாமும் கிறிஸ்துவில் திருமுழுக்கு பெற்றோம் என்பதை உணர்ந்தால், இயேசுவின் உறவில் வளர, இயேசு கொண்டிருந்த அந்த மனநிலையை கொண்டு வாழ்வோம். அன்பு, இரக்கம், நீதி, பொறுமை, கனிவு, தாழ்ச்சி, பரிவு போன்ற நல்மதிப்பீடுகளை நாமும் நமது அன்றாட வாழ்க்கை அனுபவங்களில் செயல்படுகின்ற போது அது கிறிஸ்துவுடன் கொண்ட உறவு வெளிச்சமாகிறது.

பாஸ்கா காலம் 4 ஆம் வாரம் B

பாஸ்கா காலம் 4 ஆம் வாரம்
22-4-2018
திப 4:8-12;  1 யோவா 3:1-2;    யோவா 10:11-18

நீதிமொழிகள் நூலில் மக்கள் தலைவர்கள் எப்படிப்பட்ட வராய் இருக்க வேண்டும் என்று விளக்குகிறது. நியாயம் வழங்குவதில் அரசர் அக்கரை காட்டினால் நாடு செழிக் கும், அவர் வரி சுமத்துவதில் அக்கறை காட்டினால் நாடு பாழாய் ப்போகும் (நீமொ 29:4).
வள்ளுவரும் நல்ல தலைவரின் பண்புகளை குறிப்பிடு கிறார்.

தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலன் ஆள்பவர்க்கு    (குறள் 383)

இன்றைய ஞாயிறு நல்லாயன் ஞாயிறு என்று அழைக்கப்படுகிறது. மனிதர் ஒருவருக்கொருவர் வழிநடத்துபவர்களாக விளங்க வேண்டும் என்றுதான் விரும்புகிறார்.

நானே நல்லாயன் தந்தை என்னை அறிந்திருப்பது போல நானும் என் ஆடுகளை அறிவேன் என்றும், என் ஆடுகளுக்காக என் உயிரை கொடுக்கிறேன் என்றும் கூறுகிறார் (யோவா 10:14-15).

நல்ல ஆயன் என்றால் ஆயருக்குரிய முழு பண்புகளைப் பெற்றவர் என்பது பொருள். ஆடுகளை அறிதல் என்றால் உறவைக் குறிக்கும். உயிரைக் கொடுப்பேன் என்றால் ஆடுகளோடு ஒன்றித்த நிலை.

கூலியாட்களோடு நல்ல ஆயரை ஒப்பிட்டுக் காட்டுகிறார். கூலியாள்களுக்கு ஆடுகளைப் பற்றி கவலையில்லை என்கிறார்
முதல்வாசகத்தில், பேதுரு தன் உரையில், இயேசுதான் நமக்கு முன்னோடி அடித்தளம் அவரைப் பின்பற்ற வேண்டும் என்கிறார். இரண்டாம் வாசகத்தில் யோவான், நாம் கடவுளின் பிள்ளைகள். அவரை அறிந்து கொண்டால் நம்மையே அறிந்து கொள்வோம் என்கிறார். 

நம் இந்தியா, குறிப்பாக தமிழ்நாடு நல்ல தலைவர்கள் இல்லா தரிசு நிலமாக விளங்குகிறது. மக்களை ஏமாற்றி, ஆடுகளாகிய மக்களை தோலுருத்து சாப்பிடுகிறார்கள். மக்களின் வரிப் பணத்தை தந்திரமாக தங்களுக்கு வசமாக்கிக் கொண்டு கோடி கோடியாக சேர்த்து வைத்திருக்கிறார்கள்.

இந்திய மக்கள் வாயில்லா ஆடுகளாகவே, நம் தலைவர்களின்  ஏமாற்று சித்துகளுக்கு அடிமையாகி வாழ்கின்றனர். ஆற்றின்  மணலைச்  சுரண்டி இயற்கையை அழிக்க நம் அரசியல் தலைவர்கள் தீவிரமாக செயல்படுகின்றனர். விவசாயிகளுக்கு அவர்களின் விளைச்சலுக்கேற்ற ஊதியத்தைப் பெற வழி செய்யவில்லை.

நாம் இயேசுவைப் பின்பற்றி மற்றவர்களோடு நல்லுறவு கொண்டு (அறிதல்) தியாகம் செய்து மற்றவர்களை வழிநடத்துவோம். அதனால் வாழ்வு பெறுவோம். 

உயிர்ப்பு வெற்றி (வாழ்வு) க்கான நிறைவு

உயிர்ப்பு வெற்றி (வாழ்வு) க்கான நிறைவு

சகோ. விமலி FIHM. இதயா கல்லுVரி, குடந்தை
முன்னுரை

‘ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கிக் கொண்டாலும் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? ’ (மத் 16, 26)
வாழ்க்கையில் நேற்றைய தினம் முடிந்துவிட்டது. நாளைய தினம் நிச்சயமில்லை. இன்று மட்டும் வாழ்ந்துவிடு என்பதற்காக பொறுப்பில்லாமல் உண்டு, குடித்து, கூத்தாடி, வீணே செலவழிப்பது பொருத்தமுள்ள மானிட வாழ்வா? ஒரு மனிதர் பிறந்து, வளர்ந்து, நிறைவான முதுமை அடையும் வரைக்கும் தோற்றத்தில், எண்ணத்தில், உணர்வுகளில், பேச்சில், செயல்பாட்டில் மாற்றங்கள் ஏற்படுவது இயல்பே. மாற்றங்கள் இல்லையேல் வாழ்வில் இனிமை ஏது? புதுமை ஏது? நிறைவு ஏது? வெற்றி ஏது?

வெற்றிக்கான மானிட வாழ்வின் உயர் நெறியே அன்புதான். அது நிலையானதாக, நிரந்தரமானதாக, நிறைவானதாக இருந்து உயர் நெறியில் வாழும் ஒருவரின் முன்னேற்றம் அடைவது கண்டு பொறாமை கொள்ளாது, பிறர் நலம் நாடும் தியாகம் வளர்கிறது. அன்பு தியாகமாக வளருகின்ற பொழுது பிறருக்காக தன் உயிரையும் இழக்கும். பகையை நீக்கிப் பாசத்தைப் பெருக்கும். வேற்றுமையை விலக்கி ஒற்றுமையை வளர்க்கும். நீதிக்குத் தலைவணங்கி எளியோரின் துயர்துடைக்கும். தன் பிழை கண்டு மனம் திரும்பும். ஆன்றோரின் வழி காட்டுதலை நாடும். வாழ்வில் வரும் சிலுவைகளை ஏற்கவும் துணிந்து நிற்கும். இதனைத்தான் இறைமகன் இயேசு வாழ்ந்து காட்டி உயிர்ப்பின் வழி வெற்றிவாழ்வைத் தந்தார். 

‘சிறப்பானவற்றை வாழ்வில் நீ தொடர்ந்து செய்துகொண்டே இருந்தால் மோசமானவை ஒரு போதும் நிகழாது.’ -  போர்ப்ஸ்.

‘தன்னைத் தாண்டும் அன்பு வாழ்வுக்கு, விண்ணைத் தாண்டியும் கை நீளும்.’ இயற்கை கொடுத்து மகிழ்கிறது. எடுக்க எடுக்க கடல்தாய் கொடுத்துக் கொண்டே இருக்கின்றாள். அகழ அகழ பூமித் தாய் விளைவித்துக் கொண்டே இருக்கின்றாள். வெட்ட வெட்ட வாழை தந்துக் கொண்டே இருக்கிறது. ஒளி உமிழும் முழு நிலவு தேய்ந்து தேய்ந்துக் கொண்டே அழிந்து போவதில்லை. அது எழுந்து ஒளிர்கிறது முழு நிலவாய். இவ்வாறு இயற்கையே கொடுப்பதில் இமயமாய் உயர்ந்து, நிமிர்ந்து வாழுகிறது. இயற்கை கொடுத்து, கொடுத்து உயிர்ப்பு வாழ்வை நிரந்தரமாக்குகிறது. இறைவன் சாதாரண ஏழை வறியவர்களுக்கு உரிமை வாழ்வு வழங்கிட, சரித்திரத்தில் தம்மையே வெளிப்படுத்தி, உயிர்ப்பு என்ற விடுதலையை எதார்த்தமாக்கி உள்ளார். இன்றைய சமுதாயத்திலும், சரித்திரத்திலும் திருப்பங்களைக் கொண்டு வரவேண்டுமென்றால், வார்த்தை விளக்கங்களால் இயலாது. ஆனால் திண்ணமான வாழ்க்கை விளக்கங்களால் கூடும். நமது வாழ்க்கை நடைமுறைகள், நற்சான்று வாழ்வை நாளும் சமுதாயத்திலும், சரித்திரத்திலும் சவாலாகப் பிரசன்னப்படுத்த வேண்டும். இதுவே மானிட வாழ்வின் வரலாறு. நமது வாழ்வும், வரலாறும் அன்றாட நடைமுறை விளக்கமாக வடிவெடுக்க வேண்டுமென்றால், மானிடர் தனது வாழ்வாலும், வார்த்தையாலும், சாதனையாலும், சீரும் சிறப்பும் மிக்க வரலாற்றை உருவாக்க வேண்டும். 

நீதிக்கானச் செயல்களும் விடுதலைக்கான போராட்ட ஈடுபாடுகளும் உயிர்ப்பு வாழ்விற்கான பணியின் பாங்கான பாகங்களே ஆகும். மேற்கண்ட அரிய அழுத்தமான உண்மைகளை மனிதர்களிடையேப் பேசக்கூடியச் சாத்தியக் கூறுகளை உருவாக்க வேண்டும். இன்றைய சமூகம் மறைக்கப்பட்ட, வீரியத்தை மீண்டும் வளர்த்தெடுக்க இயேசுவின் வாழ்வு தந்திருக்கும். உயிர்த்தல் வரலாற்றின், தீர்க்கமான செயல்பாடுகளைத் துணிந்து வாழ்ந்திடுவோம். இன்று நாம் வாழும் சமுதாயத்தில் அழுக்குப் படிந்த அரசியல், பாழாய்ப் போன ஊடகங்கள், எங்கும் எதிலும் தன்னலப் போக்கு... கலாச்சார மாற்றத்தால் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு காணமாற் போய்விட்டது. பிரச்சனைகளோடு பின்னிப் பிணைந்திருக்கும் இன்றைய நெருக்கடிகளைச் சமாளிக்க மனிதனுக்கு அவசியம் தேவை மன வலிமை.

‘நம் வாழ்வைத் தீர்மானிக்கும் ஆற்றல் மிகுந்த ஆயுதம் மனப்பாங்கு.’ - டேவிட்யஹல்மன்.

அன்று சிறைச் சாலையில் தன்னை உதைத்த அதிகாரியின் காலுக்கு காலணி செய்யத் துணிந்தவர் காந்தி. யாசித்தபோது கையில் காரி உமிழ்ந்த மனிதனையும் மதித்து கருணைப்  பார்வை பார்த்தவர் புனித அன்னை தெரசா. ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடியவர்’ வள்ளலார். ‘இவர்கள் அறியாமல் செய்கிறார்கள் மன்னியும்’ என்று கனிவாய் மலர்ந்தவர் இயேசு. இவர்களின் விழுமியங்களையும், சமூகத் தாக்கங்களையும் நாம் வாழும் வாழ்வில் கற்றுக் கொள்ள வேண்டியது இன்றையக் காலத்தின் தேவையாகும். இத்தகைய அன்புணர்வுகளும், அறவுணர்வுகளும் மனிதரைச் சரியான வாழ்வுப் பாதையில் நெறிப்படுத்தும் வல்லமைமிக்க உயிர்ப்பு வாழ்வுக்கான நிறைவு என்பதை உய்த்துணர்வோம்.

வாழ்க்கையில் மிக மோசமான சூழ்நிலைகளில்
பல வெற்றியாளர்கள் சிக்கித் தவித்திருக்கிறார்கள்
அவற்றைத் தங்களுடைய 
அசாத்திய மனப்பாங்கினாலும்
திடமான தன்னம்பிக்கையினாலும்
அயராத முயற்சியினாலும் 
தோல்விகளை முறியடித்து 
தடைகளைத் தகர்த்தெறிந்து
வெற்றிக் களிப்பில் மிதப்பர் 
என்கிறார்.  - ஆபிரகாம் லிங்கன்.

Sunday 8 April 2018

வெற்றி உங்கள் கையில்

வெற்றி உங்கள் கையில்

- அருட்திரு. எஸ்.  ஜான் கென்னடி,
பூண்டி புதுமை மாதா கல்வியியல் கல்லூரி, சமயபுரம்

களத்தில் கலக்கும் கோலி’; ‘கரையில் தவிக்கும் கோலி’, ஆரம்பமே கண்ண கட்டுதோ! சொல்றேன், சொல்றேன். கடந்த 2008ம் ஆண்டு, மலேசியாவில் நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிகட் உலகக் கோப்பை போட்டி அது. அதுவரை  ஓப்பனிங் பேட்ஸ் மேனாக அவர் களமிறங்கியதில்லை. ஆனால் அன்று களமிறங்க வேண்டிய கட்டாயம் அந்த கோலிக்கு இருந்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஆறு போட்டிகளில் 3 அரை சதங்கள் விளாசினார். அந்த தொடரில் 218 ரன்கள் குவித்து பிரமிக்க வைத்தார் கோலி. ஆனால் கோலி என்றவுடன் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் என்று நினைத்துவிட வேண்டாம். அவரை விட 42 நாட்கள் இளையவரான அதே அணியில் இணைந்து அந்த உலகக் கோப்பையை வெல்லக் காரணமாக இருந்தவர் தார்வார் கோலி. கடந்த 2008 ம் ஆண்டுதான் ஐ.பி.எல் போட்டிகள் பிரபலமடையத் தொடங்கியிருந்தன. நம்ம ஹீரோ தர்வார் கோலியும் ராஜஸ்தான் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். அதிரடி காட்ட வேண்டிய இடத்தில் சுருண்டு போனார். அந்த அணிக்காக 2 இன்னிங்ஸ்களில் வெறும் 10 ரன்கள்தான் அடித்திருந்தார். அதே சமயம் நம்ம டெஸ்ட் கேப்டன் விராட் கோலி கொஞ்சம் கொஞ்சமாக தன்னை அதிரடி ஆட்டத்துக்கு மாற்றத் தொடங்கியிருந்தார். 2008 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் விராட் கோலி 12 இன்னிங்ஸ்களில் 165 ரன்கள் எடுத்திருந்தார். நிதான ஆட்டத்தை கடைபிடிக்கும் தார்வார் கோலியால் ஐ.பி.எல் போட்டிகளில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. அடுத்த சீசனில் கிங்ஸ் லெவன் அணிக்காக தார்வார் கோலி ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இந்த முறை 2 இன்னிங்ஸ்களில் 2 ரன்களே எடுத்தார். தார்வார் கோலியின் ஐ.பி.எல்.லில் சோடை போனதால் தேர்வாளர்கள் தார்வார் பக்கம் பார்வையை திருப்பவில்லை. அதனால் தேசிய அணியில் இடம் பிடிக்கும் தார்வாரின் கனவும் சிதைந்து போனது. ஆனால் விராட் கோலி ஒவ்வொரு போட்டியிலும் தன்னை மெருகேற்றிக் கொண்டார். அடுத்த ஆண்டு டிராவிட் காலிஸ் போன்றவர்களையயல்லாம் காலி செய்த பெங்களூர் அணி, விராட்டை மட்டும் தக்க வைத்துக் கொண்டது. 

தன்னைத் தானே மெருகேற்றிக் கொள்ளும் திறன்தான் இன்று சிலரை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. தொடக்கப்புள்ளி ஒரே இடத்தில்தான். ஒரு கோலி முயற்சி மட்டும் செய்தார். இன்னொரு கோலி திறன்களை மெருகேற்றிக் கொண்டார். தற்போது 2016இல்,  20 உலகக் கோப்பை போட்டியில் தொடர் நாயகன் விருதையும் தட்டிச்சென்றார். ஒருவர் ஏணியில் ஏறினார். இன்னொருவர் சறுக்கினார். நாம் எப்படி? நாம் எந்த வேலையை செய்தாலும் நம்முடைய திறன்களை மெருகேற்றிக் கொண்டால் வெற்றி நிச்சயம். பள்ளியில், அலுவலகங்களில், தொழிற் சாலைகளில் வேலை செய்பவர்கள் அவ்வப் பொழுது தங்களுடைய  அறிவை வளர்த்துக் கொண்டு திறன்களை மெருகேற்றிக் கொண்டால்தான் வேலையை தக்க வைத்துக் கொண்டு வெற்றி பெற முடியும். இது அவர்க ளுக்கு மட்டுமல்ல ஆசிரியர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்குரைஞர்கள், விவசாயிகள், சமூக சேவகர்கள், அரசியல்வாதிகள், ஆன்மீகவாதிகள், விளையாட்டு வீரர்கள் தங்களுடைய திறன்களை மெருக்கேற்றிக்கொண்டால் வெற்றிக் கனியை சுவைக் கலாம். குறிப்பாக மாணவ மாணவியர்கள் தங்கள் திறன்களை மெறுக்கேற்றிக் கொண்டால் நல்ல மதிப்பெண்களைப் பெற்று அவர்கள் வெற்றி வாகைச் சூடலாம். ஆகவே திறன்களை மெறுகேற்றுவோம். வெற்றியாளர்களாகத் திகழ்வோம்.

விழித்துக் கொண்டிருக்கும் போதெல்லாம்
உழைத்துக் கொண்டே இரு.  ‡ கவிஞர் வைரமுத்து. 

இருள் விலகிய போது

இருள் விலகிய போது

ஒரு தலை காதலில் கொலையில் முடியும் இக்காலத்திற்கேற்ற சிறுகதை

கேத்தரீன் ஆரோக்கியசாமி, திருச்சி

Vர்கழி மாதத்து இருட்டு, இருட்டைப் பற்றி பல்வேறு விமர்சனங்களும், அர்த்தங்களும் எழுதப்பட்டாலும் அதன் முழு அர்த்தங்களும் மனிதர்களால் புரிந்து கொள்ள முடியாத இருட்டுத்தான் அதன் முழு அர்த்தம். கருப்பு கம்பளிக்குள் கம்பளிப்பூச்சி ஒளிந்திருப்பது போல் இருட்டு என் மனமும் அப்படிதான் இருட்டாகிவிட்டது. எதிலும் தெளிவுள்ள எனது மனம் இந்த வி­யத்தில் சஞ்சலப்படுகிறது ஏன்? இந்த இருட்டு கொஞ்ச நேரத்தில் வெளிச்சமாகி விடுமே. இது நிரந்தரம் இல்லையே... ஒரு முடிவோடு வாசலில் தண்ணீர் தெளித்து கோலமிட்டேன். கோலம் கோணலாக இருந்தது. இருந்தாலும் குறுக்கு வழியில் அதை நேர்ப்படுத்தினேன். கோணல் நேர் படுத்த முடியும் என்ற எண்ணமே எனக்கு புத்துயிர் தந்தது. எப்படியும் இன்று சமாளித்து விடலாம் என்ற எண்ணம் மேலோங்க எழுந்து என் அறைக்கு சென்றேன். காலேஜிக்கு இன்று சீக்கிரமே கிளம்பினேன்.

இந்த இளம் வயதில் எல்லா பெண்களுக்கும் ஏற்படும் தடுமாற்றம் சரியான புரிதல் இல்லாததால் எடுக்கப்படும் முடிவுகள் விபரீதமாகிறது. அப்பாவிடம் சொல்லி உதவி கேட்கலாம் என்றால், அப்பாவின் முன் கோபம் எல்லாவற்றையும் சொதப்பிவிடும். அம்மா சரியான கட்டுப்பெட்டி, எதையும் பாஸிட்டிவாக எடுத்துக் கொள்ள தெரியாத சுபாவம். இருந்தாலும் சூட்சகமாக அம்மாவிடம் சொல்லி வைப்போம் என்ற எண்ணத்துடன்

‘அம்மா, அப்பாவுக்கு இன்னைக்கு நைட் டூட்டிதானே, மதியானம் ரெண்டு மணிக்கு காலேஜிக்கு வந்து பைக்ல கூட்டிக்கிட்டு வரச்சொல்லுமா, எனக்கு பாலகரையில ஒரு வேலை இருக்கு.’
‘சரிம்மா, அப்பா, ஏந்திரிச்ச பிறகு சொல்றேன். இந்தா டிபன் மறந்திட்டுப்போற.’

என் மனக் குழப்பத்தில் டிபனை எடுக்கக்கூட மறந்துவிட்டேன்.
நமது சந்தோ­த்தையும், துக்கத்தையும் கடவுளிடம் பகிர்ந்துக் கொள்ளும்போது ஒரு மனநிம்மதி கிடைக்கும் என்பது உண்மைதான். கடவுள் முன் நான் இன்று சந்திக்கப்போகும் முடிவுக்கு ஒரு  தீர்வும் கிடைக்க வேண்டும் என்று கண்மூடி பிராதித்தேன். ஆன்மீக உலகில் தேடல் ஒரு கண்ணாமூச்சி. நம்மை நாம் வெளியில் தேடுகிறோம். அதனால்தான் நமக்கு நாம் இருப்பது தெரிவதில்லை. எல்லைகளை தாண்டிய கருணைக் கடவுள் உதவுவார் என்ற நம்பிக்கையோடு என பேக்கை எடுத்துக் கொண்டு புறப்பட்டேன். உள்ளே இருந்து அம்மாவின் குரல்.

‘பார்த்துப்போ, காலேஜிக்கு போனோம்மா வந்தோம்மான்னு இருக்கனும்.’ இது தினமும் அம்மா சொல்லும் மந்திரம் தான். அதற்கு குந்தகம் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வலுவிக்க வரும் வம்பை எப்படி சமாளிக்கப்போறேன்?

கல்லில் கால் தட்டி இரத்தம் வந்தது. இதை நான் கெட்ட சகுணம் எடுத்துக் கொள்ளவில்லை. கடவுள், ‘என்னை பார்த்துப்போ, கவனமாக இரு’ என்று சொல்வதாகத்தான் எடுத்துக் கொண்டேன்.

பாட்டிலில் இருந்த தண்ணீரை ஊற்றி கழுவிவிட்டு கர்ச்சீப்பை கிழித்து கட்டுக்கட்டிக் கொண் டேன். காலேஜ் பஸ் போய்விடும், ஓட்டமாக ஓடி பஜ்சில் ஏறினேன்.

வாழ்க்கை, ஓட்டமும் தடுமாற்றமும் தெளிவும் உள்ள கலவையான ஓட்டமான தாகத்தானே இருக்கிறது. தடுமாறி விழும்போது எழமுடியாமல் போனால், எழமால் சாய்ந்தால் என்ற பயம் வந்தாலும், வீழ்ந்த போதிலும் எழுந்து தெளிவோடு ஓடினால் வெற்றி பெறுகிறோம்.

வாழ்க்கை தத்துவங்களை சிறிது தெரிந்து கொண்ட எனது மனதில் உள்ள இருட்டு எப்போது விலகப்போகிறது?

கல்லூரிக்குள் பஸ்சை நிறுத்தியவுடன் எனது வகுப்பறையை நோக்கி ஓடினேன். இக்கல்லூரி ஒரு, இரு பாலர் கல்லூரி. எனக்கு வந்த தொல்லையே என் கல்லூரியில் படிக்கும் சீனியர் தியாகுவால்தான். மேடைப் பேச்சில் அவனை பாராட்டியபோது வந்த நட்பு இன்று என்னை நிம்மதியில்லாமல் பயமுறுத்தும் அளவுக்கு முன்னேறிவிட்டது.  

அம்மாவின் கண்டிப்பு இப்போதுதான் எனக்கு புரிந்தது. ‘ஆண்களிடம் நல்லதும் பேசாத, கெட்டதும் பேசாத,’ அனுபவபூர்வமான வார்த்தைகள். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எதுக்கு. சாதாரண பாராட்டு என்னை பாதாளத்தில் இறக்கிவிட்டு பாக்குது. தியாகு என் கிளாஸ் ரூம் அருகில் நின்று கொண்டிருந்தான். அவனைப் பார்ப்பதை தவிர்க்க முயன்று தோற்றுப்போனேன். தியாகு என்னருகில் வந்து, 

‘மாலை கிளாஸ் முடிந்தவுடன் உன்  பதிலை சொல்லு’ என்று சொல்லிவிட்டு மாடி ஏறி அவனது கிளாசுக்கு போய்விட்டான். நான் அவனுக்கு அதிக இடம் கொடுத்து விட்டேனோ, என்ற எண்ம் என்னை ஆக்கிரமித்தது. அன்று முழுவதும் பாடத்தில் என் மனம் லயிக்கவில்லை. என்ன பதில் சொல்லலாம் என்ற எண்ணத்திலேயே என் மனம் ஆழ்ந்துவிட்டிருந்தது.

கல்லுVரி வகுப்புகள் முடியும் நேரம், அப்பா வாசலில் பைக்குடன் நிற்கிறார். எனக்கும் கிளாஸ் முடிந்துவிட்டதால், அப்பாவை நோக்கி நடந்தேன்.
என் வருகையை எதிர்பார்த்திருந்து காத்திருந்த தியாகு என் பின்னால் வந்தான். வாசலை தாண்டியதும் என்னை இடமறித்து, ‘சுமதி, என்ன உன்னோட இறுதியான முடிவு சொல்லு.’ கொஞ்சம் அதட்டும் தோரணையில் தியாகு கேட்க, சுமதி  பேசத் தொடங்கினாள். ‘தியாகு, உன்னோட திறமையையும், அறிவையும் பார்த்துதான் உங்கள பாராட்டினேன். வேற எந்த எண்ணமும் இல்லை. போகப்போக உங்க பேச்சில் தெரிஞ்ச வித்தியாசம் என் மனச சங்கடப்படுத்திருச்சி.’

‘என்ன? என்னோட நீ பேசினதுக்கு காரணம் இது மட்டும்தானா? என்னை நீ விரும்பலயா?’ ‘இல்லை தியாகு, உண்மை, இத  நம்பு!’ 
இருவரின் பேச்சையும் கேட்டுக்கொண்டு கதிர்வேல் முன்னேறி வந்து தியாகுவின் பின்னால் நின்றுகொண்டு அவன் கையில் ஏதும் ஆயுதம் இருக்கான்னு பார்த்துக் கொண்டு நின்றார். பேச்சு முத்தி போகும்போது தலையிடலாம். நல்லப் பையனா தெரியிறான். பேசிப் பார்ப்போம் என்ற தயார் நிலையிலேயே அவர் காத்திருந்தார்.

‘இல்லை, சுமதி அத என்னால நம்ப முடியில வீட்டில பெற்றோர்க்காக பயப்படுறீயா’

‘இல்லை தியாகு நான் சொல்றத கேளு. காதல்ன்றது புனிதமானது. அதை இப்ப உள்ள இளம் பெண்களும், பையன்களும் கொச்சப்படுத்துறாங்க. உனக்கு புரியாதது இல்ல. உன் பேச்சில் உள்ள தெளிவும் உயரிய கருத்துக்களும்தான் எனக்கு பிடிச்சிருந்தது.’ ‘நீ சொல்றது வேடிக்கையா இருக்கு சுமதி.’ ‘வேடிக்கை இல்ல தியாகு, வெறும்  Appreciation  காதலாகாது.’  ‘சரி உன்னோட இறுதி முடிவு என்ன?’
‘நாம நல்ல நண்பர்களாக இருப்போம். படிப்பு முடிஞ்சிட்டா என்ன?  நல்ல கருத்துகளை பரிமாறிக் கொள்ள எவ்வளவோ வழி இருக்கு. பழகுவோம் காலபோக்கில் மனம் ஒத்துப்போனால் மணம் முடிச்சிக்குவோம்.’

‘இது எல்லாம் நடைமுறையில சாத்தியம் இல்ல.’

‘சாத்தியமா மாத்தனும் தியாகு, நாம படிச்சவங்க. புரிதல் இருக்கனும், இப்ப இளைஞர்களும், இளம் பெண்களும் காதல தப்பா புரிஞ்ச்சிகிட்டு இருக்காங்க. இப்ப இவர்கள் சொல்ற காதல்  வெறும்  Sex Attraction தான். காதலின் ஆழத்தை புரிந்துக் கொள்ளாமல் மாயமான நினைவில் வாழ்ந்துக்கிட்டு இருக்கிறாங்க. அவுங்க நிஜத்துக்கு வரும்போது எல்லாம் புரியும்.’ 

‘என்ன நீ பெரிய லெக்சர் குடுக்கிற,’  ‘நான் உண்மையை சொல்றேன் தியாகு,’  சுமதியின் அப்பா கதிர்வேல் குறிக்கிட்டு பேச ஆரம்பித்தார். 

‘தம்பி நான் சுமதியோட அப்பா. நீங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருந்ததை கேட்டுக்கிட்டுத்தான் இருந்தேன். என் பொண்ணு சுமதி சொல்றது உண்மைதான். தியாகு தம்பி. நீங்க நிறைய படிச்சவங்க. மனசு சார்ந்ததுதான் காதல் வாழ்க்கை, உடல் சார்ந்தது காமம். இத சரியா புரிஞ்சிக்காம இப்ப உள்ள புள்ளைங்க தவறான முடிவெடுக்கிறாங்க. இதனால் உயிர் இழப்பும் சோகமும் தான் மிஞ்சுது. பழிவாங்கிறது உண்மையான அன்புக்கு அடையாளம் இல்லை. எதையும் பேசி நல்ல முடிவெடுக்கனும்.’

‘என்ன சொல்றீங்க சார், எனக்கு புரியில.’ 

‘சுமதி சொல்ற மாதிரி நல்ல நண்பர்களா இருங்க. உங்க திறமைகளை வளர்த்துங்க. உண்மையான நட்பு தவறான முடிவெடுக்காது. நட்பு  அன்பாக மாறின பிறகு நல்ல முடிவெடுப்போம். வாழ்க்கை பெரியது வாழ்ந்து காட்டனும்.’

‘ரொம்ப நன்றி சார், நான் தவறான முடிவெடுக்க பார்த்தேன். நீங்க என்னை தெளிவு படுத்திட்டீங்க. சுமதி தன்னோட முடிவையும் சொல்லிட்டா நல்ல முடிவு எடுப்பேன் சார்.

சுமதி நான் வரேன். ஊருக்கு போய் என்னோட முடிவை உனக்கு எழுதறேன். சார் நான் வரேன்.’

‘சரி தம்பி, ஊருக்கு போய் நல்லா யோசிச்சி, முடிவெடுங்க.’

விபரீதம் தடுக்கப்பட்ட சந்தோ­த்தில் கதிர்வேல் மனநிம்மதியுடன் புறப்பட்டார். இந்த வி­யத்தில் பெற்றோரின் துணையுடன் தீர்வு காண்பதுதான் எப்போதும் நல்லது. இப்போது ஒரு சிலரை தவிர பெற்றோர்கள் புரிதலோடும் தெளிவோடும் இருக்கிறார்கள். 

வாம்மா சுமதி வீட்டுக்கு கிளம்புவோம் என்று சொல்லிக் கொண்டே பைக்கை ஸடார்ட் செய்தார் கதிர்வேல்.

‘கடவுளே, நல்லபடியா பிரச்சினை யை சமாளிச்சாச்சு. உங்களுக்கு ரொம்ப நன்றி. என் மனதில் இருந்த இருள் 

Saturday 7 April 2018

பணிவு என்னும் இனிய பாதை

பணிவு என்னும் இனிய பாதை

 21. நல்லத் தலைவரின் அடையாளங்கள்

 அருள்பணி. மகுழன், 
பூண்டி மாதா தியான மையம்

ஒரு பணக்கார நாட்டிற்கு பெருமளவில் வேறோரு நாட்டிலிருந்து அகதிகள் வருகிறார்கள் என வைத்துக் கொள்வோம். பொதுவாக என்ன நடக்கும்? ஒரு சில பேர் அவர்களுக்கு புகலிடம் கொடுப்பார்கள். ஒரு சில பேர் அவர்கள் குடியேறுவதற்கு எதிராக குரல் கொடுப்பார்கள். அதனால் அந்த நாட்டின் தலைவர் அகதிகளைக் கண்டும் காணாமல் விட்டு வருவார். ஆனால் அண்மையில் ஒரு நாட்டின் தலைவர் விமானநிலையத்திற்கே சென்று அகதிகளை வரவேற்று அவர்களுக்கு குளிர் போக்கும் ஆடைகளை வழங்கி வரவேற்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆமாங்க சிரியா நாட்டு அகதிகளை வரவேற்ற கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூமோதான் அவர்.

ஜஸ்டின் ட்டூடோ ஒரு நல்ல தலைவர். ஒரு நல்ல தலைவரின் அடையாளங்கள் பல அவரிடம் உள்ளன. அவற்றில்  சிலவற்றை சொல்ல வேண்டுமென்றால் 

 - அவர் எளிமையானவர். எளிமையாக எல்லோராலும் அணுகக்கூடியவர். அவரைப் பற்றி அவரது குடும்பம் பற்றி பேசத் தயங்காதவர். அவர் சிறிய வயதில் ஏழ்மையில் வாழ்ந்ததை பகிர்ந்து கொள்பவர். அவர் போதைப் பொருள்களை எடுத்துக் கொண்டதை மறைக்காதவர்.

- ஏழைகள் மீதும் ஒடுக்கப்பட்டோர் மீதும் கரிசனை கொண்டவர். சிரியா அகதிகளை இருகரம் விரித்து வரவேற்பவர். தம் அமைச்சரவையில் 50 சதவீதம் பெண்களுக்கு இடம் அளித்தவர்.

- பிற இன மக்களுக்கும், பிற சமய மக்களுக்கும் மதிப்பு அளிப்பவர். இஸ்லாமிய சகோதர, சகோதரிகளை வரவேற்பவர். தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்துக் கூறியவர்.

- ஒரு நல்ல தலைவரின் அடையாளங்கள் எவை என்று கேட்டால், நீங்கள் பல பயனுள்ள கருத்துக்களை பகிர்ந்துக் கொள்வீர்கள். என் மனதில் பட்ட தாழ்ச்சியின் அடிப்படையில் மூன்று அடையாளங்களை உங்கள் முன் வைக்க ஆசைப்படுகிறேன். 

1. ஒரு நல்லத் தலைவர் எளிதாக அணுகக் கூடியவராக இருக்க வேண்டும். இந்த உலகின் சிறந்த தலைவர் இயேசு. அவர் எப்போதும் எல்லோராலும் எளிதில் அணுகக்கூடியவராக இருந்தார். இயேசுவும் திறந்த உள்ளத்தோடு எல்லாரையும்  சந்தித்தார்.

தொழு நோயாளர் அவரை சந்தித்தனர்
குருடர்கள் அவரைத் தேடி வந்தனர்
ஏழைகள் அவரை நாடி வந்தனர்.
பணக்காரர்கள் அவரிடம் பேசினார்கள்
படித்தவர்கள் அவரை சூழ்ந்த வண்ணம் இருந்தனர்
பாமரர் அவரைப்  பின்பற்றிச்  சென்றனர்
குழந்தைகள் அவரை தொடுவதற்கு முயற்சி செய்தனர்
பாவிகள் அவரிடம் அடைக்கலம் புகுந்தனர்.

யாருக்கும் எந்த விதமான அச்ச உணர்வும் இல்லை. எல்லோரையும் இயேசு சமமாக மதித்தார். உடல் நோயால் வருந்துவோருக்கு உடல் நலம் அளித்தார். பாவிகளை அரவணைத்தார். மத்தேயுவை சந்தித்தார். அனைவருக்கும் அன்பையும், சமாதானத்தையும் வழங்கினார். 

சரிங்க, நீங்கள் எளிதாக அணுகக் கூடிய தலைவரா?  என்பதை அறிய ஒரு எளிய சோதனை இருக்கிறது. நீங்கள் ஒரு கூட்டத்திற்குச்  செல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது நீங்கள் அதிகம் உரையாடுவது, உறவாடுவது அதிகம்  படித்த, பதவிகள் உடைய பெரிய ஆட்களிடமா?  (High Profile People)   அல்லது முக்கியம் இல்லாத பாரமரரிடமா? பாமரருக்கு முன்னுரிமை அளித்து எல்லாரிடமும் நன்கு பழகினால் நல்லத் தலைவரின் வரிசையில் நீங்கள் உள்ளீர்கள் என்று உறுதியாகச் சொல்லலாம்.

2. ஒரு நல்லத் தலைவர் அனைவரின் கருத்துகளையும் வரவேற்று ஏற்புடையவற்றை செயல்படுத்தத் தயங்காதவர். உழவர் சந்தை என்ற ஒன்று நம் ஊரில் இருக்கிறது அல்லவா? ஒரு தலைவர் அதை கொண்டு வந்தார். இன்னொருத் தலைவர் அதை மூடி வைத்தார். மாறாக ஒரு நல்லத் தலைவர் மற்றவர்கள் கொண்டு வந்த நல்லக் காரியங்களைத்  தொடருவார். பொதுவாக அடுத்தவர்கள் நமக்கு அறிவுரை வழங்கும் போது நாம் செய்கின்ற முதல் காரியம் நம்மை நியாயப்படுத்துவது தான். நாம் கேட்கின்ற முதல் கேள்வி, “எனக்கு அறிவுரை சொல்ல நீ யார்?” நாம் சொல்கின்ற முதல் பதில் “அறிவுரை சொல்வது எளிது. என் இடத்தில் இருந்து பார்த்தால் புரியும்”. 

அன்புமிக்கவர்களே, நேர் மறையான விமர்சனங்களை மட்டுமல்ல, எதிர் மறையான விமர்சனங்களையும் ஏற்றுக் கொண்டால்தான் விமர்சனங்கள் தொடரும். இல்லையேல் நமக்கு ஏன் வம்பு? என்று விமர்சனங்கள் செய்வதை நிறுத்தி விடுவார்கள். நமக்கு மேலே உள்ளவர்களின் கருத்துகளை மட்டுமல்ல நமக்குக்  கீழே உள்ளவர்களின் கருத்துக்களையும் உள்ளன்போடு ஏற்று செயல்படுத்துவோம்.

3. ஒரு நல்லத் தலைவர் தம்மை
 முழுமையாக வெளிப்படுத்துவார். தலைவர் என்று சொல்லும்போது குறை இல்லாதவர் இல்லை. குறைகளைக்  கடந்து செயல்படுவதற்கு முன்வருபவர். எனவே நம் குறைகளைப்  பிறர் அறிவதை நாம் தடை செய்யக் கூடாது. அதே வேளையில், நம் குறைகளை எப்போதும் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்க வேண்டும் என்றில்லை. மாறாக நம் உண்மைத் தன்மையை  (Personality) மக்களுக்கு உணர்த்த வேண்டும். மக்களிடத்தில் பொருளாதாரம் உள்ளிட்ட வி­யங்களின் உண்மை  நிலையை பகிர்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதால் மக்களிடத்தில் நம் மதிப்பு கூடும். நம் குறைகளை மறைத்தால் மக்கள் நம்மை சந்தேகிப்பார்கள். நம் இயலாமைகளை மக்கள் அறிய செய்தால்  மக்கள் நம் பணிவைப் போற்றுவார்கள்.

சரிங்க, நல்லத் தலைவர்களைப் பற்றி பார்த்தோம்.  இந்த உலகில் மிக மோசமானத் தலைவர்கள் யார் தெரியுமா? அடிப்படை ஞானம் இல்லாத, வெறியை ஊட்டுகின்ற, தன்னலம் மிகுந்த, ஆணவம் நிறைந்த , ஊழல் செய்து வாழ்கின்ற  நம்ப ஊர் அரசியல் வாதிகள் தான்.  (தொடரும்...)

Monday 2 April 2018

புகுமுக அருளடையாளங்கள்

புகுமுக அருளடையாளங்கள்...

3. புகுமுக அருளடையாளங்கள் கொண்டாட்டதை புதுப்பித்தல்
-அருள்பணி. எஸ். அருள்சாமி, 
பெத்தானியா இல்லம், கும்பகோணம்

காலப்போக்கில் புகுமுக அருளடையாளங்களின் கொண்டாட்டங்களில் சீர்குலைவு ஏற்பட்டது என்றும், அது காலத்தின் கட்டாயமானதாக இருந்தது என்றும், முந்திய சிந்தனையில் எழுதப்பட்டது. இப்பொழுது எவ்வாறு இரண்டாவது வத்திக்கான் சங்கத்திற்குப் பின் இச்சீர்குலைவைச் சரிசெய்ய முயற்சிகள் எடுக்கப்பட்டன எனப் பார்ப்போம்.

1. புதுப்பிக்கும் திட்டம்

காலபோக்கில் அருளடையாளங்கள், அருள் வேண்டல் குறிகள் ஆகியவற்றின் சடங்குகளின் இயல்பும், நோக்கமும் இக்காலத்தில் தெளிவாகத் துலங்கா வண்ணம் ஒரு சில கூறுகள் புகுத்தப்பட்டன. இதன் விளைவாகத் தற்கால தேவைகளுக்கு ஏற்பவும், தொடக்கக் காலத்தில் இடம் பெற்றக் கொண்டாட்ட முறையை மீட்டெடுக்கும் முறையிலும், புகுமுக அருளடையாளங்களின் கொண்டாட்டம் புதுபிக்கப்பட வேண்டும் என்று திருவழிப்பாடு கொள்கை விளக்கம் பரிந்துரைத்தது. (காண்: தி.வ. எண்.62)

தொடக்க திரு அவையில் கிறிஸ்தவ வாழ்வைத் தொடங்கி வைத்த படிநிலைகள் திரும்பவும் நிறுவபட வேண்டும். மேலும் திருமுழுக்குப் புகுநிலைகாலம் (ளீழிமிeஉஜுeஐதுeஐழிமிe) ஒன்றன்பின் ஒன்றாகக் குறிப்பிட்ட காலத்தினுள் நிறைவேற்றபட சடங்குகள் உருவாக்கப்பட வேண்டும். (காண்: தி.வ.எண்.64) என்பதும் சங்கத்தின் போதகம்.

கிறிஸ்தவ சமயம் தழுவும் தொடக்கச் சடங்கு முழுவதுடன் உறுதிபூசுதல் என்னும் அருளடையாளம் கொண்டுள்ள நெருங்கிய தொடர்பு அதிகத்தெளிவாக வெளிப்படும் வகையில் இதன் சடங்கு திருத்தி அமைக்கப்பட வேண்டும். (தி.வ.எண்.71) என்று சொல்லப் பட்டது.

2. புகுமுக அருளடையாளங்களின் கொண்டாட் டத்தில் மறுமலர்ச்சி

மேலே குறிப்பிடப்பட்ட பரிந்துரைகளை செயலாக்க திருவழிபாட்டு குழு ஒன்று நிறுவப்பட்டது. இது புகுமுக அருளடையாளங்கின் சடங்கு முறையைத் தயாரித்து அளித்துள்ளது. சிறுவர்களின் திருமுழுக்கு சடங்குமுறை 1971-லும், முதியோருக்கான திருமுழுக்கு சடங்குமுறை 1972‡யிலும் வெளிவந்தன.

புகுமுக அருளடையாளங்களின் முதல் கட்டமாக வருவது திருமுழுக்கு அருளடையாளம் இதைப் பெறுவதினால் ஒருவர் முடிவில்லா வாழ்வைப் பெற தகுதியுடையவர் ஆகிறார். இந்த அருளடையாளம் பெற நம்பிக்கை (விசுவாசம்) முன்னதாகவே தேவையாகிறது. அது தொடர்ந்து பேணி வளர்க்கப்படுகிறது. 

திருமுழுக்கு பெற்றவர்கள் உறுதிப்பூசுதல் என்னும் அருளடையாளத்தின் வழியாக கிறிஸ்தவ வாழ்க்கைப் பயணத்தில் முன்னேறுகின்றனர். குழந்தைப் பருவத்தில் திருமுழுக்கு பெற்ற முதியவர்கள், தகுந்த தயாரிப்புப் பெற்ற பின் உறுதிபூசுதலையும், நற்கருணையையும் ஒரே பொது கொண்டாட்டத்தில் பெற்றுக் கொள்ள வேண்டும். குழந்தைகளைப் பொருத்தமட்டில் உறுதிபூசுதல் ஏறத்தாழ ஏழுவயதிற்குப் பின்னர் வரை தள்ளிவைக்கப்படுகிறது. திரு அவை சட்டம் 891 புத்தி விவரம் அடைந்த சிறுவர்களுக்கு உறுதிபூசுதல் கொடுக்க வேண்டும் என பணித்துள்ளது.

உறுதிபூசுதல் சடங்குமுறையை அறிமுகப்படுத்த வரைந்த   திருத்தூது   அமைப்பு    விதித் தொகுப்பில்   புஸ்ரீலிவிமிலியிஷ்உ உலிஐவிமிஷ்மிற்மிஷ்லிஐ திருத்தந்தை ஆறாவது பால் பின்வருமாறு குறிப்பிடுகிறார். திருமுழுக்கில் மறுபிறப்படைந்த நம்பிக்கை யாளர் உறுதிப்பூசுதல் அருளடையாள த்தைப் பெறுவதினால் வலிமைப்படுத் தப்படுகிறார். இறுதியாக நற்கருணை உணவால் போழிக்கப்படுகிறார். இவ்வா றாக இந்த புகுமுக அருளடையாளங்கள் வழியாக இறைவாழ்வின் செல்வங் களைப் பெற்று நிறைவை அடைகிறார்கள்.

இதைத் தொடர்ந்து திருவழிபாட்டில் வல்லுநரும், சிறந்த அருள்பணியாளருமாகிய கிரிக்டென் (ளீஜுrஷ்உஜுமிலிஐ) என்பவர், திருமுழுக்கு, உறுதிபூசுதல், நற்கருணை என்ற வரிசை முறையிலேயே புகுமுக அருளடையாளங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்று புகுமுகம் பற்றிய எல்லா ஆவணங்களும் குறிப்பிடுகின்றன என்கிறார். இந்த வரிசை முறையில் முரண்பாடு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே சில நேரங்களில் அருள்பணியா ளர்களும் உறுதிபூசுதல் அருளடையாளத்தை வழங்க லாம் என்கின்றனர், என்று விளக்கம் கொடுத்துள்ளார்.

 3. செயலாக்கத்துக்கு வராத புதுப்பித்தல்

மேலே நாம் விவரித்த புதுபித்தல்கள் ஏட்டளவில் தான் உள்ளனவே  தவிர இன்னும் செயலாக்கத்திற்கு வரவில்லை என்றுதான் சொல்ல வேண்டியுள்ளது. ஏனென்றால் திருமுழுக்கு, நற்கருணை, உறுதிப்பூசுதல் என்ற நிலை இன்னும் மாறவில்லை. தமிழக ஆயர் பேரவை அருள்பணியா ளர்களுக்கு வழங்கிய செயலுரிமைகளில் (ய்ழிஉற்யிமிஷ்eவி)  உறுதிபூசுதல் கொடுக்கக் கூடிய வயது 12 முதல் 14 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு ஆதாரமாக அகில இந்திய ஆயர் பேரவை  திருஅவைச்சட்டம் 891‡ ன்றை தழுவி அமைத்த துணைச்சட்டத்தை (ளீலிதுஸ்ரீயிeதுeஐமிழிrதீ யிeஆஷ்வியிழிமிஷ்லிஐ)  மேற்கோலாகக் காட்டுகிறது. இத்தகையைத் துணை சட்டம் உறுதிபூசுதல் பக்குவ வயதானவரின் அருளடையாளம் (றீழிஉrழிதுeஐமி லிக்ஷூ  னிழிமிற்rஷ்மிதீ),   திருத்தூது   பணிக்கு    அர்ப்பணிக்கத்    தகுதியுடையவரின்  அருளடை யாளம்   (றீழிஉrழிதுeஐமி லிக்ஷூ ழிஸ்ரீலிவிமிலியிழிஉe லிr ளீலிதுதுஐஷ்மிதுeஐமி) போன்ற பழைய, திருஅவையின் வரலாற்றின் இடைக்கால இறையியல் சிந்தனையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆயர்களின் இத்தகைய மனப்பாங்கைப் பற்றி குறிப்பிடும்போது சீர்கேடான இறையியல் மேல் சரியான அருள்பணியை கட்டியமைக்க அல்லது உருவாக்கக் கூடாது என்று பிரான்சு வழிபாட்டு வல்லுநர் தோம் போத்தே (ம்லிது யலிமிமிeயி)  “தீலிற் உழிஐஐலிமி ணுற்ஷ்யிd ழி விலிற்ஐd Pழிவிமிலிrழியி லிஐ ஆலிலிd மிஜுeலியிலிஆதீ” குறிப்பிடுவது இச்சூழ்நிலைக்குப் பொறுத்தும்.

இத்தகைய துணை சட்டமும், அதை தமதாக்கிக் கொண்ட தமிழக ஆயர் பேரவையும், குழந்தைகளைப் பொறுத்தமட்டில், இலத்தீன் திரு அவையில் உறுதிபூசுதல் ஏறத்தாழ ஏழுவயதிற்குப் பின்னர் வரை தள்ளி வைக்கப்படுகிறது என்று உறுதிபூசுதல் சடங்கு முறையில் முன்னுரையில் சொல்லப்பட்டிருப்பதையும் (எண். 11 &2)
“நம்பிக்கையாளர்களுக்கு உறுதிப்பூசுதல் அருளடை யாளம் அவர்கள் புத்தி விவரம் அடையும் வயதில் கொடுக்கப்பட வேண்டும்”  என்று திருஅவை சட்டம் 891 குறிப்பிட்டிருப்பதையும் கருத்தில் கொள்ளவில்லை என்பது தெளிவு. இது ஏற்புடையதன்று. மேலும் குழந்தைகளுக்கான சடங்குமுறை பரிந்துரையும், வயதானவர்களின் (புdற்யிமிவி) திருமுழுக்கு சடங்கு முறையின் பரிந்துரையும் இன்னும் செயலாக்கப்பட வில்லை என்பதும், அதற்காகன எந்த முயற்சியும், வழிகாட்டல்களும் தமிழக திரு அவையில் கொடுக்கப்படவில்லை என்பது வருத்தத்துக்குரியது.

முடிவுரை:
ஒரு செடியில் மலர் திடீரென ஒருநாளில் பூத்துவிடுவதில்லை. முதலில் மலர் அரும்பாகத் தோன்றுகிறது. பின்னர் மொக்குவிட்டு மலர்கின்றது. அதன்பின் மலர்ந்து மணங் கமழ்கின்றது. அதுபோலவே கிறிஸ்தவ வாழ்வு இறைவாழ்வில் பங்கு பெறுவதாகும். இதை நாம் ஒரு நாளில் அடைவதில்லை. அடையவும் முடியாது. திருமுழுக்கு அருளடையாளத்தில் நம்பிக்கை யாளரில் அரும்பாகி, உறுதிபூசுதல், அவர் பெறும்போது மொக்குவிட்டு மலர்ந்து, பின் நற்கருணை விருந்தில் பங்கு பெறும்போது மணங்கமழ்கின்றது. ஒரு வாழை இலை தோன்றுவதும் இதே போல்தான் என்பதை நாம் கவனிக்கலாம். மலர்ந்த பின்புதான் கிறிஸ்தவ வாழ்வு காய்த்துக் கனி கொடுக்க முடியும்.

இனிவரும் சிந்தனைகளில் எவ்வாறு புகுமுக அருள் அடையாளங்கள் ஒவ்வொன்றையும் முறையான வரிசையில் பொருளும் பயனும் உள்ள விதத்தில் கொண்டாடலாம் என்பது விளக்கம் பெறும்.
    ‡ (தொடரும்...)

நீருயரக் குடியுயரும்..

நீருயரக் குடியுயரும்...

(காவிரி,  தமிழ்நாட்டில் தவழவிடாமல் தடுக்கும் சதித்திட்டங்கள் நடைபோடும் இந்நாளில்,  நீரின் அருமையை  விளக்குகிறார் கட்டுரை ஆசிரியர்)
-அருள்பணி. அ. பிரான்சிஸ், பாபநாசம்

நீருயர நெல்லுயரும்
நெல்லுயரக் குடியுயரும்
குடியுயரக் கோலுயரும்
கோலுயரக் கோணுயர்வான்’

பெண்கவி ஒளவையார் மிக்க மதிநுட்பத் தோடு கூறிய வார்த்தைகள் இவை. வரப்பு உயர்வதை ஆதாரமாகக் கொண்டே அரசின் பெருமை உயரும். ஆனால் இப்போதுள்ள விவசாயிகளின் நிலைமையும், அரசாங்கத்தின் கொள்கையும் நேர்மாறாக உள்ளது. உலகில் முதல் உயிரே தண்ணீர். அதன் தொடர்ச்சியாகவே தாயின் கருவில் வளரும்  குழந்தை நீர் நிறைந்த தாயின் பனிக்குடத்தில் சுவாசிக்கின்றது.

விவிலியம் கூறும் தண்ணீர் பற்றிய சிந்தனை: 

உலகப் படைப்புக்கு முன்னரே நீர்த்திரள் நிறைந்திருக்கின்றது. (தொநூ 1:20). உயிரினங்களின் தோற்றம் நீர் (தொநூ 1:20). வாழ்வின் அடிப்படைத் தேவை தண்ணீர், உணவு, உடை, மானம் காக்க  வீடு (சீஞா 29: 21). ‘மண்முகத்தே மழையைப் பொழிபவரும், வயல் முகத்தே நீரைத் தருபவரும் ஆண்டவரே’ (யோபு 5:10) நிலம் அதன் மீது அடிக்கடி பெய்யும் மழை நீரை உறிஞ்சி வேளாண்மை செய்வோருக்குப் பயன் தரும்  வகையில் பயிரை விளைவிக்குமாயின் அது கடவுளின் ஆசி பெற்றதாகும் ( எபி 6:7) தண்ணீர்த் தொட்டிக்கும் அதன் ஆதாரத்திற்கும் திருப்பொழிவு செய்து அர்ப்பணிப்பாய் (விப 40.11).

தமிழ் இலக்கியத்தில் நீர்:

விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உண்ணின்று உடற்றும் பசி.    குறள் எண் 113

மழை பெய்யாமல்  பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று 
உயிர்களை வருத்தும்.

இடியுடைப் பெருமழை எய்தா ஏகப் 
பிழையா விளையுள் பெருவளம் சுரப்ப
மழை  பிணித் (து) ஆண்ட மன்னவன்                           -சிலப்பதிகாரம்  (வரி 26-28)

  முறையாகப் பெய்யும் மழை நீரைச் சேமித்து வைப்பதற்கு ஏற்ற நீர் நிலைதனை அமைப்பது ஒரு மன்னனின் கடமை. 
அறையும் பொறையும் மனந்த தலைய
எண்நாள் திங்கள் அணைய கொடுங்கதைத்
தெண்ணீர்ச் சிறுகுளம் கீள்வது மாதோ.                              - புறநானூறு 118.

ஏரிக்கரை நீளம் குறைவாகவும் ஆனால் அதிக நீர் கொள்ளளவு கொண்டதுமான அமைப்பு எட்டாம் பிறை வடிவில் ஏரி இருக்கும்போது ஏற்படும். இது ஒளி வடிவமைப்பில் சிக்கனமான   வடிவமைப்பாகும்
யாருள் அடங்குங் குளமுள வீறுசால்                       -நான்மணிக்கடிகை.

மிகுதியாக வரும் ஆற்று வெள்ள நீரைத் தம்முள் அடக்கிக் கொள்ளக் கூடிய பெரிய ஏரிகள் இருப்பது ஒரு நாட்டுக்குச் சிறப்புத் தரும். பெருகி வரும் படையலை ஒரு வீரன் தடுத்து நிறுத்திப் போராடுவதுபோல் ஆற்று வெள்ளத்தைக் கற்சிறை தடுத்து நிறுத்துகிறது. (தொல்காப்பியம் வரி 725, 726). மேற்கூறப்பட்டவை அனைத்தும் கற்பனையான ஒன்றல்ல, அறிவியல் சார்ந்தவை.
 சோலை மலைக் காடுகள்:

சோலை மலைக் காடுகள் கடல் மட்டத்திலிருந்து 1800 மீட்டர் உயரம் கொண்டவை. புல்வெளிகளும் பசுமை மாறாக் காடுகளும் ஒருங்கிணைந்து காணப்படுபவையே சோலை மலைக் காடுகள். இந்தியாவின் இமய மலைத் தொடர்கள், கிழக்கு மலைத் தொடர்கள், வட மேற்கு மலைத் தொடர்கள், ஆரவல்லி மலைத் தொடர்கள், விந்திய-சாத்பூரா மலைத் தொடர்கள் ஆகியவை வளத்தின் ஆதாரங்களாகத் திகழ்கின்றன. மேலும் தமிழகத்தில் நீலகிரி, ஆனைமலை, கொடைக்கானல், அகத்தியமலை, மற்றும் மேகமலை ஆகியப் பகுதிகளில் சோலை மலைக் காடுகள் நிறைந்துள்ளன. 

மழைக் காலங்களில் ஏற்படும் அதிகப்படியான மழைப் பொழிவால் பெறப்படும்  நீர்வளம் சோலைக் காடுகளின் புல்வெளிக்கு அடியில் உள்ள பஞ்சு போன்ற அடிப்பரப்பில் சேமிக்கப்படுகிறது. இது தவிர இலைகளால் அமைக்கப் பெற்ற  அடுக்கு. இந்த அடுக்கில் சேமிக்கப் பெற்றத் தண்ணீர் சிறிது சிறிதாக வெளியேற்றப்பட்டு மிகப் பெரிய அருவிகளாக, ஆறுகளாக உருமாறுகின்றன. இந்தக் காடுகளில் அதிகப் படியான தாவர இனங்களும், ரோடோடெண்ரான், ரோடோமிர்டாஸ், இம்பேசியன்ஸ் எக்சாகம் உள்ளிட்ட சில தாவரங்களும் காணப்படுகின்றன. விலங்குகளில் மரத்தவளைகள், வரையாடு, யானை, பாம்புகள், கருமந்தி, காட்டுக்கோழிகள் போன்றவை மிகுந்த அளவு காணப்படுகின்றன. இதன் பரப்பளவு குறைந்து கொண்டே வருவதனால் மழை குறைவுக்குக் காரணமாகின்றது. 

மரங்கள் வளத்தின் ஆதாரம். நாம் சுவாசிக்கும் பிராண வாயு ஆக்ஸிஜன் மரங்களிலிருந்தே கிடைக்கிறது. இயற்கை அன்னையின் மடியில் தவழ்ந்த முதல் குழந்தை தாவரம் தானே! அவற்றை இல்லாது செய்வது மனிதன் தனக்கே அழிவைத் தேடிக் கொள்ளும் செயலாகும்.

மறைநீர்:

மறைநீர் என்பது ஒரு பொருளாதாரத் தத்துவம். இதனை இங்கிலாந்து நாட்டின் நிதியியல் வல்லுநர். ஜான் ஆண்டனி ஆலன் கண்டுபிடித்தார். இது ஒரு பொருளுக்குள் மறைந்துள்ள பொருளாதாரத் தத்துவமாகும். இதன்படி ஒரு டன் கோதுமை விளைவிக்க 1600 கியூபிக் மீட்டர் தண்ணீர் செலவாகிறது. முட்டை உற்பத்தியில் மகாராஷ்டிரம் மாநிலம் முதலிடம். தமிழகத்தில் நாமக்கல் இரண்டாமிடம். நாமக்கல்லில் ஒரு நாளைக்கு ஒரு கோடி முட்டை உற்பத்தியாகிறது. இதில் 70 லட்சம் முட்டைகள் தினசரி வளைகுடா நாடுகள், ஆப்பிரிக்கா மற்றும்  ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. இதன் மூலம் ஆண்டுக்கு 4.80 கோடி டாலர் இந்திய செலாவணி கிடைக்கிறது. 60கிராம் முட்டை உற்பத்தி செய்ய 196 லிட்டர் தண்ணீர் செலவாகிறது. மூன்று ரூபாய் முட்டை 19 லிட்டர் தண்ணீருக்குச் சமம்.

புத்திசாலி நாடுகள்:

நீரின் தேவையையும், பொருளின் தேவை யையும் துல்லியமாக ஆய்வு செய்து அதற்கேற்ப ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகளை வகுக்க வேண்டும். சீனா, இஸ்ரேல், ஐரோப்பிய நாடுகள் இப்படித்தான் செய்கின்றன. சீனாவின் பிரதான உணவு பற்றி இறைச்சி, ஒரு கிலோ பன்றி இறைச்சிக்கான மறைநீர் தேவை 560 லிட்டர். அதனால் பன்றி உற்பத்திக்குக் கெடுபிடி அதிகம். ஆனால் தாராளமாக இறக்குமதி செய்து கொள்ளலாம். ஒரு கிலோ ஆரஞ்சுக்கான மறைநீர் தேவை 560 லிட்டர். சொட்டுநீர் பாசனத்தில் கோலோச்சும் இஸ்ரயேல் ஆரஞ்சு உற்பத்திக்கும், ஏற்றுமதிக்கும் கெடுபிடி செய்கிறது. இந்த இரு நாடுகளும் மறைநீர் தேவையைத் துல்லியமாகக் கணக்கிட்டு அதன்படி ஏற்றுமதி, இறக்குமதிக் கொள்கைகளை வகுக்கின்றன.

பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகள்:

சென்னையில் ஆயிரக்கணக்கான கார்களைத் தயாரித்து நம் நாட்டுக்கும், வெளிநாட்டுக்கும் ஏற்றுமதி செய்கின்றன. அவர்களின் நாடுகளில் உற்பத்தி செய்ய முடியாதா? இடம் தான் இல்லையா? எல்லாம் உண்டு. இங்கு மனித சக்திக்குக் குறைந்த செலவு என்றால் நீர்வளத்துக்குக் குறைவே இல்லை. 1.1 டன் எடை கொண்ட ஒரு கார் உற்பத்திக்குக்கான மறைநீர் தேவை நான்கு லட்சம் லிட்டர்கள். ஒரு பொருளின் விலை என்பது எல்லா செலவுகளையும் உள்ளடக்கியதுதானே? அப்படி எனில் பெரும் நிறுவனங்கள் தண்ணீருக்கு மட்டும் ஏன் அதன் விலையை செலவுக் கணக்கில் சேர்ப்பது இல்லை. ஏனெனில் நம்மிடமிருந்து இலவசமாகத் தண்ணீரைச் சுரண்டி நமக்கே கொள்ளை விலையில் பொருட்களை விற்கின்றன. இது ஆட்சியாளர்களுக்குத் தெரியாதா? எல்லாம் தெரியும். தங்களின் பண பலத்தைப் பெருக்கிக் கொள்ள,  நாட்டையும், நாட்டு மக்களையும் அடமானம் வைக்கின்றனர். மறைநீருக்கு மதிப்பு கொடுப்போம். இந்திய விவசாயிகளும்  உலகின் பணக்காரப் பட்டியலில் இடம்பிடிக்க மறைநீர் தத்துவத்தை  உணர்வோம்.

திரவத் தங்கம் நீர் நாள்:

1992 ஆம் ஆண்டு பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் சுற்றுச் சூழல் மற்றும் வளர்ச்சி பற்றிய ஐ.நா. பேரவைக் கூட்டம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக 1993 ஜனவரி 18 ஆம் நாள் நிகழ்வுற்ற ஐ.நா பேரவையில் ஆண்டு தோறும் மார்ச் 22 ஆம் நாளை உலக நீர்வள நாளாகக் கொண்டாட  முடிவெடுக்கப்பட்டது. அதன்பின் 2003 ல் நடைபெற்ற 58 வது ஐ.நா பேரவைக் கூட்டத்தில் 2005லிருந்து 2015 வரையுள்ள பத்தாண்டுகள் ‘உயிர் வாழ்வதற்கு நீர்’ என்னும் அனைத்துலக செயல்திட்டம் அறிவிக்கப்பட்டது. இதனை

நீரின்ற யமையா துலகெனின் யார்யார்க்கும்
வானின் றமையா தொழுக்கு      - திருக்குறள் 20

என்னும் கூற்றினை உலகோர் உணர்ந்ததை உணர்த்துகிறது.

நீருக்கான போர்கள்:

உலகின் தொடக்கத்திலேயே நீருக்கான போர் ஆரம்பமானதை தொநூ 26:12 லிருந்து 22 வரையுள்ள பகுதிகள் பதிவு செய்கின்றன. வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவேரி என்று சிலப்பதிகாரத்தில் பாடப்பட்ட காவிரியாறு இன்று நீரின்றி வறண்டுக் கிடக்கின்றது. காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு,  போன்ற பிரச்சனைகள் தமிழகத்தைப்  பாலைவனமாக்கிக் கொண்டிருக்கின்றன. உலகெங்கும் நீருக்கான போர்கள் நடைபெற காரணம் என்ன? இங்கிலாந்தில் ஏற்பட்ட  தொழிற்புரட்சி புளோரோ கார்பன் அதிக உற்பத்தி  செய்யப்படக் காரணமாய் அமைந்தது. அறுபதுகளில் திணிக்கப்பட்ட பசுமைப்புரட்சி, முதலாளிகளின் ஒப்பந்த விவசாயம், 1990ல் அறிமுகம் செய்யப்பட்ட  உலகமயமாதல், தனியார் மயமாதல் போன்ற கொள்கைகளால் ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்து புவி வெப்பமடைந்து  கொண்டிருக்கின்றது. 

 உலகின் முதல் நீரில்லா நகர்:

தென் ஆப்பிரிக்காவின் 2-வது பெரிய நகரான கேப்ட­ன். இங்கு 30 லட்சம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். கடந்த மூன்றாண்டுகளாகத் தொடர்ந்து  சுத்தமாக மழையில்லை. எனவே அனைத்து நீர் நிலைகளும்  வற்றி விட்டன. இதனால் நீர் இருப்புக்கு ஏற்றபடி, மக்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. ஒரு நாளைக்கு 80 லிட்டர். பிப்ரவரியிலிருந்து 50 லிட்டர் எனக் குறைந்து வருகிறது. பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகின்றன. விவசாயம் அறவே நடைபெறவில்லை. ஏப்ரல் 22 நீரில்லா நாள்  ரீerலி ம்ழிதீ  என அறிவிக்கப்படப் போகிறது.  இப்படியே போனால் மனிதகுலம்  செத்தழிய வேண்டியது தான்.

எச்சரிக்கை: 

இது எங்கோ நடைபெறும் நிகழ்ச்சி தானே. எனக்கு எதுவும் நடக்காது. நம் நாட்டுக்கு இந்த நிலை வராது என்று எவரும் மெத்தனப் போக்கோடு செயல்பட வேண்டாம். இந்த நாள் நம்மை நோக்கி விரைந்து வருகின்ற என்பதனை  நினைவில் கொண்டு தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவோம். மரங்கள் வளர்ப்போம். கிடைக்கும் மழைநீரைச் சேமிக்கும் நீராதாரங்களாகிய ஏரிகள். குளங்கள், குட்டைகள், கண்மாய்கள், ஊருணிகள் இவற்றினைத் தூர்வாரி எதிர்வரும் துன்ப நாளிலிருந்து நம்மைக் காத்துக் கொள்வோம்.

 இதோ இன்றைய நிலையைப் படம் பிடித்துக் காட்டும் ஒரு சமூக விழிப்புணர்வு பாடல்:

தாய்ப்பாலும் தண்ணீரும் ஒன்னாத்தான் இருந்துச்சு. விலையில்லாம கிடைச்சிச்சு. ஆனா இப்ப எல்லாமே தலைகீழா  போயிடிச்சு. தடம் மாறி போயிடுச்சி. 
நிலாவில் தண்ணி இருக்கான்னு தேடுறோம்
ராக்கெட்ட ஏவுறோம் குடிநீரை பூமியிலே
வியாபாரம் பண்ணுறோம்.
பறவ நட்ட காடுகள பாவிசனம் அழிக்குதே
நன்றி மறந்து திரிகுதே ஆறறிவை வச்சிக்கிட்டு
ஆணவத்தில் வாழுதே.
மண்ணப் போல  தண்ணீருக்கும் 
எல்லக் கோட்டப் போடுற, 
வறுமைக் கோட்ட வளக்குற, 
இயற்கையைத்தான் பூட்டி வச்சு 
பொம்மையாக்கிப் பாக்குற அடிமையாக்க நினைக்கிற 
இப்படியே போனாக்க பூச்சி இங்கே வாழுண்டா 
புழுவும் இங்கே வாழுண்டா
மனு­ப்பய இடமட்டும் மண்ணாகிப் போகுண்டா.  

தியாகம் பிறப்பிக்கும் உயிர்ப்பு

தியாகம் பிறப்பிக்கும் உயிர்ப்பு

அருட்பணி. ச.இ. அருள்சாமி

உயிர்ப்பு இல்லையயன்றால் நம் நம்பிக்கை வீண் என்கிறார் பவுல் (1 கொரி 15:14). கிறித்துவத்தின் அடிப்படையாக அமைவது இயேசுவின் உயிர்ப்பு. ஒவ்வொருவரின் வாழ்விலும் மறக்கமுடியாத திருப்புமுனை உண்டு. ஒருவர் தன் தாய் இறந்த பிறகு, அவரின் வாழ்வு மாற்றம் பெற்றது என்கிறார். அவர் வாழ்வின் குறுகிய நிலையை உணர்ந்துக் கொண்டார். தன் குறைகளை திருத்திக் கொண்டார். இயேசுவின் சீடர்களுக்கு இயேசுவின் உயிர்ப்பு அடிப்படை அனுபவமாகியது. காலியான கல்லறையைத்தான் கண்டார்கள். ஆனால் உயிர்த்த இயேசுவின் காட்சிகள் அவரின் உயிர்ப்பை உறுதிப்படுத்தின. எனவே தான் பவுல் தனது கொரிந்தியருக்கு எழுதிய முதல் கடிதத்தில் 15  ஆம் இயலில் உயிர்ப்பைப்  பற்றி மிக அழுத்தமாக பேசுகிறார். யூதர்களில் பரிசேயர் உயிர்ப்பினை நம்பினார்கள். சதுசேயர் உயிர்ப்பினை நம்பவில்லை. 

திமத்திராட் கிளிப் கூறுகிறார், ‘இயேசுவின் உயிர்ப்புதான், இறைவன் மனித உறவில் பெரிய மறுமலர்ச்சியை அடையச் செய்தது’ என்கிறார்.

சார்லஸ் எச் ஸபர் கூறுகிறார். ‘இயேசுவின் உயிர்ப்பு தந்த பெரிய கொடை நம்பிக்கை.  இறைவன் தரும் அசைக்க முடியாத வெற்றியையும் அன்பையும் நன்மைகளையும் இந்த நம்பிக்கை உறுதி செய்கிறது’ என்கிறார். 

இயேசுவின் உயிர்ப்பு கற்றுத் தரும் பாடம், தீமைக்கு வீழ்ச்சி உண்டு. தியாகத்திற்கு வாழ்வு உண்டு என்பதுதான். மனிதர் விரைவான பலன்களை எதிர்பார்க்கின்றனர். தியாகத்தையோ, கடின உழைப்பையோ அவர்கள் நம்புவதில்லை. பணம், பதவி, வசதி, நம்மில் குவிய வேண்டும் என்றுதான் விரும்புகின்றனர். 

தற்போது ‘உண்ண உணவு’ என்பது மாறி ‘உடுக்க உடையும், இருக்க இடமும்’ நம் மக்கள் மத்தியில் முதலிடம் பெறுகின்றன. ஒரு பொருளாதார நிபுணர் கூறியதாக நினைவு. வீடு கட்டுவது, ஒருவரின் கடைசி பொருளாதார முயற்சியாக இருக்க வேண்டும். பிற்கால வாழ்விற்கு வேண்டியதை சேமித்த பிறகு, சேர்த்து வைத்திருக்கும் பணத்தில் வீடு கட்ட வேண்டும் என்று கூறியதாக நினைவு. இப்போது வங்கிகளிலோ, மற்ற இடங்களிலோ கடன் வாங்கி வீடு கட்டுவதை வாழ்வின் இலட்சியமாக மக்கள் கருதுகிறார்கள். வீட்டை கட்டி விட்டு அதற்குரிய வட்டியால் முடங்கி வாழ்கிறார்கள். நகரங்களில்,  தெருக்களுக்காக இடப்பட்ட இடத்தையும் ஆக்கிரமித்து வீடு கட்டுகிறார்கள். அவர்களின் வீடுகளுக்குச் சென்று வர, வசதியான தெருக்கள் இல்லை. எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளான ஊழலால் அனுமதியில்லாத வயல் நிலங்களிலும், தண்ணீர் தேங்க வைத்திருந்த குளங்களிலும் வீடுகள் எழுகின்றன.

வசதி, சொகுசுகளில் மக்கள் மிதந்துக் கொண்டிருக்கிறார்கள். சொகுசு வாழ்வு, சோம்பலுக்கு அழைத்துச் செல்லும் அகன்ற வழி. பாடுகள், இறப்பின்றி உயிர்ப்பிற்குத்  தாண்டி செல்ல மக்கள் விரும்புகிறார்கள். சிலுவையில்லாமல் உண்டாக்க நினைக்கும் உயிர்ப்பு வெறும் கானல் நீர். 

இயேசுவின் உயிர்ப்பு தந்தது புதிய சமத்துவ சமுதாயம். வசதிகள் பெருக பெருக, இதயம் குறுகி விடுகிறது. வசதி படைத்தவர்கள் மனம் திறப்பதில்லை. இரகசிய கூட்டினை கட்டிக் கொள்கிறார்கள். அவர்களின் சுதந்திர மூச்சு குறைகிறது. மனநோயும் உடல்நோயும் ஒட்டிக் கொள்கின்றன.

இயேசுவின் உயிர்ப்பு, தியாகத்தில் புதைந்திரு க்கும் உயர்வை,  உயிர்ப்பை எடுத்து முன் வைக்கிறது. சந்திக்கின்ற சவால்களில் நாம் கீழே சாய்ந்துவிடாமல், நம்பிக்கையோடு தியாக வாழ்வில் நின்றால் உயிர்ப்பின் வெற்றியும் மகிழ்வும் நமக்குக் கிடைக்கும்.

இந்த உயிர்ப்பின் தத்துவத்தை நம் நடுவில் வாழ்பவர்கள் எத்தனைப் பேர் என்று கண்களை உருட்டிப் பார்த்தேன். ஒரு சில பேரைத்தான் அடையாளம் காண முடிந்தது.  ஒருவர் என் கண்முன் நிற்கிறார். கலப்பு திருமணத்தால் வீட்டை விட்டு விரட்டப்பட்டவர். நம் சொந்த ஊரை விட்டு தொலையில் இருந்த கிராமத்தில் வாழ்ந்து, தனக்கு தெரிந்த வியாபாரத் தொழிலை செய்து வாழ்ந்தார். ஐந்து பிள்ளைகள். ஐந்தும் அறிவில் சிறந்து அதனால் படிப்பில் உயர்ந்து, மருத்துவர், பொறியாளர் என்று  வளர்ந்து நிற்கிறார்கள். வந்த சிலுவையைத் தாங்கி உயிர்ப்பில் பங்குப் பெற்றவர்கள் என்றே அவர்களை கருதுகிறேன்.

தமிழ்நாடு கத்தோலிக்க ஆயர் குழுமத்தின் தலைவர் பேராயர் மேதகு அந்தோணி பாப்புசாமி, அவர்கள் மத்திய பா.ஜ.க அரசின் நிழலில் பல மதவாத வன்முறைகள் நடந்து வருவதை சுட்டிக் காட்டியிருக்கிறார். இராமர் கோவிலை அயோத்தியில் கட்டுவதற்கு, உணர்வைத் தூண்டும் வகையில் ரத யாத்திரையை மேற்கொள்கின்றனர். வன்முறையாளர்கள், வீழ்வதும் அழிவதும் நியதியாக நடப்பதைப் பார்க்கிறோம். இன்றைய சூழல் நாம் அதிகம் அதிகமாக அரசியல் விழிப்புணர்வு பெற்றவர்களாக, ஒற்றுமையைக் காப்பவர்களாக தியாகச் சிந்தனையாளர்களாக வாழ அழைக்கிறது. 

Ads Inside Post