Pages - Menu

Friday 11 May 2018

பணிவு என்னும் இனிய பாதை

பணிவு என்னும் இனிய பாதை

22. தொண்டர்களுக்கும்  வேண்டும் பணிவு...
 அருள்பணி. மகுழன், 
பூண்டி மாதா தியான மையம்

கடந்த இரண்டு மாதங்களாக தலைவருக்குத் தேவையான பணிவையும் தாழ்ச்சியையும் சிந்தித்தோம். தலைவருக்கு மட்டுமல்ல தலைவருக்குக் கீழே இருக்கின்ற உறுப்பினர்களுக்கும் தொண்டர்களுக்கும் பணிவு அடிப்படையானது என்று சிந்திக்க அன்புடன் அழைக்கின்றேன். 

2013 ஆம் ஆண்டு முதல் 2015 ஆண்டும் வரை அமெரிக்காவில் பார்லின் என்ற பங்கில் பணியாற்றினேன். நான் உதவிப் பங்குத்தந்தை. பங்குத் தந்தை மிகவும் நல்லவர். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை இரவு 93 வயதாகும் அவருடைய தாய், அருகிலிருக்கும் தன் இடத்திலிருந்து விருந்துண்ணுவதற்காக வருவார். பாதர் என்னையும் அழைப்பார். பாதர்தான் சமைப்பார். நன்றாகவே சமைப்பார். ஒருமுறை சாப்பிட்டுக் கொண்டு இருந்தபோது பாதரின் தாய்  பாதரிடம் ‘ஜேம்ஸ் அந்த கரண்டியை எடு’ என்றார். பாதர்க்கு கோபம் வந்துவிட்டது. ‘தயவு செய்து’ என்று சொல்லுங்கள்  என்றார். அவரும் அவ்வாறு சொல்ல பின்னர்தான் கரண்டியை எடுத்துக் கொடுத்தார். அந்த அம்மா அதைப்பற்றி கொஞ்சமும் வருத்தப்படவில்லை. தமக்கு வயதாகிவிட்டது. அதனால் மறந்து விடுகிறது. என் மகன் அதனை நினைவுப்படுத்துகிறான். என்னிடம் தவறு இருக்கும்போது நான் அதைத்திருத்திக்கொள்ள வேண்டும் என்ற மனப்பான்மையே அவரிடம் மேலோங்கி இருந்ததைப் பார்க்க முடிந்தது.

தலைவர்களுக்கு நிச்சயம் தேவை பணிவு. பணிவு இல்லாமல் ஒரு தலைவர் புரியும் அனைத்து நல்லக் காரியங்களுக்கும் முகவரி இருக்காது. ஒரு தலைவருக்கு மட்டுமல்ல தொண்டர்களுக்கும் பணிவுத் தேவை. தொண்டர்களுக்குத் தேவையான பணிவை பின்வரும் விவிலிய வரிகள் சுட்டிக் காட்டுவதைப் பார்க்கலாம்.

(1 தெச 5.12-13) ‘சகோதர சகோதரிகளே உங்களிடையே உழைத்து ஆண்டவர் பெயரால் உங்களை வழிநடத்தி உங்களுக்கு அறிவு புகட்டுவோரை மதித்து நடக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். அவர்கள் பணியின் பொருட்டு அவர்களை உயர்வாகவும் அன்புடனும் கருதுங்கள்.’  (எபிரே 13.17) ‘உங்கள் தலைவர்களுக்குக் கீழ்படியுங்கள். அவர்களுக்கு பணிந்திருங்கள். அவர்கள் உங்களைப் பற்றி கணக்கு கொடுக்க வேண்டியிருப்பதால் உங்கள் நலனில் விழிப்பா யிருக்கிறார்கள். இப்பணி அவர்களுக்கு மகிழ்ச்சியு ள்ளதாய் இருக்கும்படி நடந்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு மனத்துயர் தராதீர்கள். அவர்களுடைய துயரம் உங்களுக்கு நலம் பயக்காது.’ சரிங்க உங்கள் தலைவர்களுக்கு எப்படி உங்கள் பணிவைக் காட்டுவது என்று தானே கேட்கிறீர்கள்? அதைப் பற்றி இப்போது பார்ப்போம்.

1.உங்கள் தலைவருக்கு மதிப்பளியுங்கள்.

நீங்கள் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ஆசரியர் ஒரு மாணவனை மாணவர் தலைவனுக்காக நியமிக்கிறார். அப்பொழுது உங்கள் இயல்பான நடவடிக்கை அவருக்கு எதிராக பேசுவதும் இருப்பதும் ஆகும். ஒரு சில நேரங்களில் மேலே இருப்பவர்களுக்கு மதிப்பளிப்பது எளிதானக் காரியமாக இருக்கலாம். அப்பொழுதுதான் நம் வாழ்க்கையில் சிக்கல் இருக்காது. (குருமடங்களில் குருக்களுக்கு குருமாணவர்கள் பயந்து நடப்பது). சிலர் வேலை போய்விடக் கூடாது அல்லது பதவி உயர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காக மேலே இருப்பவர்களுக்கு மதிப்பளிப்பார்கள். உண்மையான தாழ்ச்சி நிறைந்தவர்கள் எந்த விதமான பிரதி பலனையும் எதிர்பார்க்காமல் பதவியில் உள்ளவர்களுக்கு மதிப்பு அளிப்பார்கள். இன்னும் சொல்லப் போனால் தலைவர்கள் குறைகளே இல்லாமல் இருந்ததால்தான் அவர்களுக்கு மதிப்பளிக்க வேண்டுமென்றில்லை. இந்த உலகில் குற்றம் குறைகள் இல்லாதவர்கள் யார்? தலைவர்களின் குறைகளோடு அவர்களுக்கு மதிப்பளிக்கும்போது நம் பணிவு முழுமை பெறுகிறது.

2. உங்கள் தலைவரை பின்பற்றுங்கள். 

பொதுவாக சொல்லுவார்கள் ‘நாம் நாமாக இருக்க வேண்டும். யாரையும் பார்த்து நாம் மாறத் தேவையில்லை.’  ஒரு விதத்தில் பார்த்தால் அது உண்மைதான். ஆனால் இன்னொன்றையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். நம் தலைவர்களிடத்தில் இருக்கின்ற நற்பண்புகளை நல்ல பழக்க வழக்கங்களை பின்பற்ற முன்வர வேண்டும். ஒருவரை தலைவராக நியமித்து இருக்கிறார்கள் என்றால் அவருடைய உயர்ந்த பண்புகள் திறமைகள் அடிப்படையில் தான் நியமித்து இருக்கிறார்கள். அதுமட்டுமல்ல ஒவ்வொருவரிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய வி­யங்கள் ஏராளமாக இருக்கின்றன. ஒரு குருவானவர் நன்றாக திருப்பலி வைப்பதை பின்பற்றலாம். (சில குருவானவர்கள் எப்படி திருப்பலி வைக்கக் கூடாது என்பதற்கு உதாரணமாக இருக்கிறார்கள்). எப்படி பாடம் நடத்த வேண்டும் என்பதற்கு  உதாரணமாக இருக்கலாம்.  எப்படி பொறுமை காக்க வேண்டும் என்பதற்கு சிலர் உதாரணமாக இருக்கலாம்.  எப்படி பிள்ளைகளை வளர்ப்பது என்பதற்கு சிலர் உதாரணமாக இருக்கலாம். காலம் தவறாமையை கடைபிடித்து சிலர் நமக்கு உதாரணமாக இருக்கலாம். நமக்கு மேலே இருப்பவர்களிடம் மட்டுமல்ல. நமக்கு கீழே இருப்பவர்களிடம் நாம் கற்றுக் கொள்ள ஆயிரம் வி­யங்கள் உண்டு என்பதையும் மனதில் கொள்வோம்.

3. உங்கள் தலைவருக்குக் கீழ்ப்படியுங்கள்  

அண்மைக் காலமாக திருச்சபைத் தலைவர்களிடத்தில் ஓர் அருமையான மாற்றத்தைப் பார்க்கிறேன். அவர்கள் சில முயற்சிகளை மேற்கொள்ளும்போது சம்பந்தப்பட்ட குருக்களையும் கன்னியர்களையும் பொதுநிலையினரையும் கலந்தா லோசிக்கிறார்கள்.  முன்னொரு காலத்தில் எந்த விபரமும் சொல்லாமல் கீழ்ப்படிய வேண்டும் என்று திருச்சபைத் தலைவர்கள் வலியுறுத்தினார்கள். நம்  மூளையின் பலம் அபாரமானது. ஆனால் அது காலத்திற்கும் இடத்திற்கும் உட்பட்டது. இந்த உலகில் உள்ள அனைத்தும் குறையுள்ளது. எனவே நம் மூளையும் குறையுள்ளது. நம் தலைவர்களின் சூழ்நிலைகள் எண்ணங்கள் எதிர்பார்ப்புகள் அனைத்தையும் நாம் அறிந்து கொள்ள முடியாது. 

கீழ்ப்படிதல் என்று சொல்லும் போது இரண்டு விதத்தில் நாம் புரிந்துக் கொள்ள வேண்டும். ஒன்று தலைவர் விரும்புவதைச் செய்வது. இரண்டு தலைவர் எடுக்கும் காரியங்களுக்கு ஒத்துழைப்புக் கொடுப்பது. ஒரு தலைவர் குறிப்பிட்ட கருத்தோடு குறிப்பிட்ட திட்டத்தையும் முன்மொழிந்தால் அந்த தலைவரின் மனப்பான்மையோடு ஒன்றிணைந்து செயல்படுத்துவதற்கு முன் வர வேண்டும். 

அது சரிங்க ஒரு தலைவர் தவறு செய்ய சொன்னால் செய்யலாமா? என்று தானே கேட்கிறீர்கள். உங்கள் தலைவர்க்கு தகுந்த விதத்தில் தகுந்த மரியாதையோடு உண்மையை எடுத்துரைக்க வேண்டும். கீழ்ப்படிவதில் மட்டுமல்ல உண்மை நிலையை எல்லோருக்கும் எடுத்துரைப்பதிலும் நம் பணிவையும் தாழ்ச்சியையும் எடுத்தியம்ப முடியும்.            (தொடரும்...)

Friday 4 May 2018

மரியாளும் மகளிரும்

மரியாளும் மகளிரும்
சகோ. விமலி FIHM. இதயா கல்லுVரி, குடந்தை

(அன்னை மரியாவிற்கு அற்பணிக்கப்பட்டுள்ள மே மாதத்தில் மாதாவின் சீரிய பண்புகளை விளக்குகிறார் சகோதரி)

காட்டிய தாய்அன் பையே ஊன்றிக் கொண்டும்
ஊட்டிய நல்லு ணர்வே ஒளிஎனப் போற்றிக் கொண்டும்
பூட்டிய துறவு வாழ்வே பொன்னென வாழ்த்திக் கொண்டும்
ஈட்டிய செல்வ மாக இயேசுவை எண்ணி வாழ்ந்தார் ‡ (மரியம்மை காவியம்)

அன்னை மரியாள்
மாபெரும் புரட்சிகளிலும், மகத்தான செயல்களிலும் மிகப்பெரிய அறிகுறிகளைத் தேடிக்கொண்டு, நம் கண்முண்னே இருக்கின்ற இறையன்பையும், அமைதியையும், மகிழ்ச்சியையும் மறந்து விடுகின்றோம். பாதுகாப்பற்ற பெண்கள் பாதுகாப்பாகிட, மாண்பிழந்த, பெண்கள் மதிப்பீடுகளாகிட, அறமிழந்த குடும்பங்கள் அறநெறியாகிட, இறையிழந்த மக்கள் நிறைவழியாகிட அன்னை மரியாள் தந்திட்டாள் தன்வாழ்வையே தரணிக்கு. மரபுகளை உடைத்து மனிதம் காத்திட தன்னை கையளித்தவர்களில் முதலிடம் பெற்றவள் அன்னை மரியா! மரபுகள் உடைபடும் போதுதான் மாற்றம் மண்ணில் பிறப்பெடுக்கும். மரபுத் தளைகளில் மரியாள் என்ற மலர் நசுங்கி விடாமல் இறைவன் தடுத்து நிறுத்தி உறுதிப்படுத்தினார்.

கல்வி தாயானது அன்றைய காலகட்டத்தில் யூத சமுதாயத்தில் நினைந்து பார்த்திட முடியாத மரபுகளை மீறிய புரட்சி செயல்! மக்கள் மீது ஈடுபாடு மிக்கவள் அன்னை மரியாள்(லூக் 1:47‡55). தேடிச் சென்று உதவும் நற்குணமும், இலக்கணமும் அன்னை மரியாளுக்குண்டு(லூக் 1:39). சிலுவைப் பாதையில் தாய் மகனைச் சந்திக்கிறாள் என்றாலும் மீட்புத் திட்டம் நிறைவேற தன் மகனை தொடர்ந்து கல்வாரி செல்ல அனுமதிக்கிறாள். ஆண்களெல்லாம் விட்டு ஓடிப் போன பின்னும் சிலுவையடியில் நிற்கிறாள். இயேசு, தன்னுயிர் பிரியும் இறுதி வேளையில் தாயிடம்தான் தன் இலட்சியக் கனவை ஒப்படைக்கிறார். அஞ்சி நடுங்கி  இருட்டறையில் ஒளிந்திருந்த திருத்தூதர்களுக்கு அருகிலிருந்து தைரியம் தந்தவள் அன்னை மரியா (திப 1:74). அதனால்தான், இறைவனின் திட்டம் வழுவாமல் நிறைவேறியது.

மாமரி நிலவைப்போல் அழகுள்ளவள் (திபா 69) என்றும் சொல்லப்பட்டுள்ளது. ஆம், நிலவு பூமியில் உள்ள மிகத் தாழ்ந்த படைப்புக்கும் ஒளியூட்டி பயனுறச் செய்வது போல, மரியாளும் தகுதியற்ற பாவிகளையும் இறைஒளியைப் பெறச் செய்து உதவுகிறார்கள். தாயின் அன்பு தெய்வீகத்துக்கு நம்மை இட்டு செல்லும் மகத்தான வழி. மாதா தினமும் அருங்செயல்கள் மூலம் புதுமைகள் செய்து நம்மை மகிழ்வுப்படுத்துகிறார். இந்த மாதம் அன்னை மரியாவின் அன்புச் செயல்களுக்கு நன்றி சொல்லும் மாதம். மரியின் உறவில்,  இறைமகன் இயேசுவின் உயிர்ப்பு வாழ்வில் தொடர்ந்து இனிதாய் பயணிப்போம். அதோடு இந்த மாதத்தில் இவ்வுலகில் மகளிருக்குரிய மரியாதையினை மனமகிழ்ச்சியோடு நோக்குவோம்.

 அன்னை - மகளிர்

‘உங்கள் இலக்குக்கான எதிர்கால திட்டம் வகுக்கப்பட்டிருந்தால், நம்பிக்கை இருந்தால், சிறுபடை கூட புரட்சிக்கு வித்திடும்.’ - பிடல் காஸ்ட்ரோ.

உடலுறுதி கொண்ட ஆணைவிட மனவுறுதி கொண்ட பெண் சிறப்பு மிக்கவள். உடலால் வாழும் ஆணை விட உள்ளத்தால் வாழும் ஆற்றல் பெற்ற பெண் உலகில் சிறப்புப் பெறுகின்றாள். இந்தப் பெண்மையின் பெருமையை உணர்ந்துதான் ‘மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா’ என்று கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை அவர்கள் கூறியுள்ளார்.

அன்று சமூகத்தில் வேரோட்டமான வாழ்வைக் கொண்டிருந்த உயிரோட்டமுள்ள எத்தனையோ பெண்களின் வரலாறு மறைக்கப்பட்டு,  அனுபவங்கள் நிராகரிக்கப்பட்டு, சாதனைகள் புறம்பே தள்ளப்பட்டு, அவர்களின் இருப்பையேக் கண்டு கொள்ளாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.
 ‘பெண்ணுக்குள் ஞானத்தை வைத்தான் - 
புவி பேணி வளர்த்திடும் ஈசன்’ என்றார் பாரதியார். 

இன்று பெண்களின் வீரமும், விவேகமும், ஆற்றலும் அளவிட முடியாதவையாக உள்ளது என்பது உண்மை. ‘வாழ்வில் நிறைவு என்ற ஒன்று கிடையாது. நிறைவடைந்த மனங்கள் மட்டுமே உண்டு.’ வாழ்வில் தேக்க நிலை என்ற ஒன்று கிடையாது தேக்கமடைந்த மக்கள் மட்டுமே உண்டு. ‘வாழ்க்கை என்பது வேலியில்லாத் திறந்த வெளி, வாய்ப்புகள் கிடைக்கும்போது வேண்டியமட்டும் அதில் நிரப்பிக் கொள்ளுங்கள்’ என்று வாழ்பவர் பெண் மட்டுமே என்பதற்கு சில எடுத்துக்காட்டுகள்.

Wind Shield Wiper இதைக் கண்டுபிடித்தவர் மேரி ஆண்டர்சன். இவர் பனி பெய்துக் கொண்டிருக்கும் சமயம் பேருந்தில் சுற்றுலா ஒன்றை மேற்கொண்டிருந்தார். அப்பொழுது ஓட்டுனர் ஒவ்வொரு முறையும் பேருந்தை நிறுத்தி நிறுத்தி கண்ணாடியைத் துடைத்தார். இதனை கவனித்த மேரி இதற்காக ஒர் உபகரணத்தை வடிவமைத்து ஓட்டுனரிடம் வழங்கினார். அவ்வுபகரணத்தைப் பேருந்தின் உள்ளே இருந்து இயக்க முடியும். மக்கள் இதை வாகனங்களில் பயன்படுத்த ஆரம்பித்தார்கள்.

Colored Flare System

பல ஆங்கிலப் படங்களில் குகைகள், இருளான பிரதேசங்களில் அல்லது கடலுக்கடியில் கையில் வைத்து அழுத்தும் போது பீறிட்டு எரியும். அதன் பெயர்தான் Colored Flare System. இதைக் கண்டுபிடித்தவர். னிழிrமிஜுழி ளீலிவிமிலிஐ இவர் 1847 இல்  தனது 21 வது வயதில் விதவையாக்கப்பட்டார். ஆனால் விடுதலை போராளியாக போராடினார். 

நீரில் கார்பன் ‡ டை ‡ ஆக்ஸைடுடின் அளவை அறியும் கருவியைக் கண்டுபிடித்தவர், கார்பன் பெண்மணி என்று அழைக்கப்பட்ட சாரஹரி காட்ஜீக்கோ. கீது அன்னா ஜோஸ் இந்திய கூடைப்பந்தில் நட்சத்திர வீராங்கனை. இவ்வாறு இன்றைய அநேக பெண் சாதனையாளர்களைக் குறிப்பிடலாம். தன் உரிமையை நிராகரித்து, தன்னை நிர்க்கதியாய் விட்ட சமூகத்திற்காக தன்னைத் தருவதில் பெண்ணைவிட தாராளம் உள்ளவர்கள் யாரும் இருக்க முடியாது. இந்நிலைதனை உணர்தல் இன்றைய தேவையாகும்.

பயன்படுத்தப்படாத திறமை மங்கிப் போகிறது. பயன்படுத்தப்படாத ஆற்றல் குறைந்துவிடுகிறது. பயன்படுத்தப்படாத கருவிகள் துருப்பிடித்து விடுகின்றன. பயன்படுத்தப்படாத நேரம் காணாமல் போய்விடுகிறது. பயன்படுத்தப்படாத அறிவு ஒரு சுமையாகிவிடுகிறது என்பதை உணர்ந்தவர்களாக பெண்களாகிய நாம், உயர்வதற்காக வீழ்கிறோம். ஒவ்வொரு முறையும் முன்பைவிட உயரே செல்கிறோம். இத்தாரகமந்திரத்தை தரணியில் வாழ் மகளிருக்கு உணர்த்திடுவோம்.

தனக்கான நியாயமான அனுமதி மறுக்கப்படும் போது போராடுபவர்களாகவும், அடிப்படை உரிமைகளை விட்டுக் கொடுக்காதவர்களாகவும், உடலால், மனதால், பொருளாதாரத்தால் தங்களை வலிமையானவர்களாக மாற்றிக் கொள்ளும் திறமை வாய்ந்தவர்களாகவும், பிறரின் போற்றுதலுக்கும், தூற்றுதலுக்கும் செவிசாய்க்காத நேர்மையாளர்களாக பெண்கள் திகழ்ந்து, வாழ்வில் ஒளிர்ந்து முன்னேற முழுமையாய் முன்வர முயல்வோம். மரியாளின் ஆன்மீக ஊற்றை உந்து சக்தியாகக் கொண்டு இன்றைய சமூக வாழ்வைத் தெளிவான, துடிப்பான சவாலாக்குவோம். அப்பொழுது மரியாளின் மாண்புலகில் மகளிர் மகத்துவம் பெற்றிடுவர்.        

காவிரி நீரா? கானல் நீரா?

காவிரி நீரா?  கானல் நீரா?

பேராசிரியர், முனைவர் எஸ்.பி. பெஞ்சமின் இளங்கோ ., M.A.; B.L.; M.Phil.; Ph.D.

இந்தியாவையே காவிரிமயமாக்க கார்ப்பரேட்டுகளின் அனைத்து நிதியுதவியோடு அசுர முயற்சிகளில் இறங்கியுள்ள பாரதிய ஜனதா கட்சியின் வருவாய் கடந்த இரண்டு நிதியாண்டுகளில் 81.18 விழுக்காடு அளவாக, அதாவது ரூ.1034.27 கோடியாக உயர்ந்திருப்பதுதான் அக்கட்சியின் ஒப்பாரும் மிக்காரும் இல்லா சரித்திர சாதனை! அதே நேரத்தில் விவசாயிகள், சிறுபான்மையினர், தலித்துகள், ஒடுக்கப்பட்ட அடித்தள பாட்டாளிகள், வறுமைக்கோட்டிற்கு கீழே வாடி வதங்கும் வறியோர், ஆதரவற்றோர், முதியோர், பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலன்களுக்காகவும், மத நல்லிணக்கம், மதச்சார்ப்பின்மை, இந்தியாவின் பன்முகத் தன்மை ஆகியவற்றைப் பாதுகாக்க  பாடுபடும் எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சியின் வருவாய் 14 விழுக்காடு. அதாவது ரூ.225.36 கோடியாகக் குறைந்துள்ளது. இத்தகைய சூழலில்தான் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் பல்வேறு முட்டுக்கட்டைகளை பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய அரசு ஏற்படுத்தி வருகின்றது.

“வான் பொய்ப்பினும் தான் பொய்யாத” பொன்னி நதி என்றழைக்கப்படும் நமது காவிரி நீர் நமது கண்களுக்கு மட்டும் காட்சியளிக்கும் கானல் நீராகி போய்க்கொண்டிருக்கும் அவலநிலை நம்மை உறைய வைக்கும் உண்மைக் காட்சியாகிக் கொண்டிருக்கிறது. அரசியல் சூதாட்டம் என்ற அரக்கக் குரங்கின் கைப்பட்ட, பூமாலையாக, காவிரிப் பிரச்சினை இன்று சின்னாபின்னமாக்கப் பட்டு வருகின்றது. மக்கள் தொகையில் 55 விழுக்காடு மக்கள் தம் வாழ்க்கையின் ஆதாரமாகக் கொண்டு ள்ள விவசாயத்துறையைச் சார்ந்த தமிழக விவசாயி களின், பொதுமக்களின், பொக்கி­மாக, வாழ்வாதார மாக விளங்கிவரும் காவிரி அன்னை. இன்று சுயலாபம், ஓட்டுவங்கி, லாபம், மொழிவெறி, ஏழைகளைச் சுரண்டும் முதலாளித்துவம், வட்டார அரசியல், மனிதநேயமற்ற அதிகார ஆணவம், வடக்கு, தெற்கு என்று இந்திய ஒருமைப்பாட்டைச் சிதைக்கும் காவிரி மதவெறி ஆகிய சமூக விரோத சக்திகள் அனைத்தும் கைகோர்த்து, காவிரி அன்னையை கர்நாடகத்துக்குள்ளேயே சிறை வைக்கத் திட்டமிட்டு, நீதியின் குரலையும் அறவே மதிக்காமல்,  சதிராட்டம் ஆடுவது, “வடக்கு வாழ்கிறது. தெற்கு தேய்கிறது”, என்ற பேரறிஞர் அண்ணாவின் எச்சரிக்கை சங்கநாதத்தை மீண்டும் மீண்டும் ஒலிக்கச் செய்துள்ளது. தமிழகத்தில் அனைத்து விவசாய அமைப்புகளும், எதிர்கட்சிகளும், இளையோர் அமைப்புகள், திரைப்படத் துறையினர் மற்றும் தமிழகப் பொது மக்களும் கனன்றெழுந்து, அறவழிப்போராட்டங்களையும், கடையடைப்பையும், காவிரி நதிநீர் உரிமைப் பயணம். ஐபிஎல் போட்டியை தடைசெய்ய ஆர்ப்பாட்டம், சென்னை வரும் பிரதமருக்கு கறுப்புக்கொடி காட்டுவது என்று மத்திய அரசின் மெத்தனப் போக்கை எதிர்த்து ஒட்டுமொத்த எதிர்ப்பை தமிழகம் காட்டி வருகின்றது. கர்நாடகத்தில் சட்டப்பேரவை நடப்பதால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மேலும் கூடுதலாக 3 மாதங்கள் அவகாசம் தேவைப்படுகின்றது என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. காவிரி நீர் பங்கீட்டு வழக்கில் நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை நிறைவேற்ற, “செயல்திட்டம்” விஉஜுeதுe ஒன்றை, 6 வாரங்களுக்குள் மத்திய அரசு அமைக்க வேண்டும் என உத்தரவிட்டது. தமிழக அனைத்துக் கட்சி கூட்டத்தில் உடனடியாக மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. கர்நாடக அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க விதிக்கப்பட்ட 6 வார கால அவகாசம் நிறைவடைந்தது. கடைசி நாளில் மத்திய அரசின் நீர்வளத்துறை, மத்திய சட்ட அமைச்சகத்திடம் செயல்திட்டம்” (Scheme) என்பதற்கு நிறைய விளக்கங் கள் இருக்கின்றன என்றார். எனவே, “செயல்திட்டம்” (Scheme)  என்றால் என்ன என்று விளக்கமளிக்க மத்திய அரசின் சார்பில் உச்சநீதி மன்றத்தில் விளக்கமனு தாக்கல் செய்தார். சட்ட ஒழுங்கையும் இரு மாநில நட்புறவையும் கவனத்தில் கொண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமா? அப்படி அமைக்கபட வேண்டுமென்றால் உச்சநீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்தக் கூடுதலாக 3 மாதங்கள் கால அவகாசம் தேவைப்படுகிறது என்றும், காவிரி மேலாண்மை வாரியத்தின் பணிகள் என்ன, அதன் அதிகாரங்கள் என்ன? எவ்வாறு செயல்பட வேண்டும்? காவிரி மேலாண்மை வாரியத்தின் நிர்வாக, தொழில்நுட்ப அம்சங்களை மாற்றியமைக்க மத்திய அரசுக்கு அதிகாரம் இருக்கிறதா? என்பதையும் உச்சநீதிமன்றம் தெளிவு படுத்த வேண்டுமெனவும், மத்திய அரசின் சார்பில் உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட விளக்க மனுவில் பல கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

இந்த விளக்க மனுவின் கேள்விகள், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதில் முட்டுகட்டையாகி விடுமோ என தமிழக மக்களின் மனங்களில், நம்பிக்கையற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில், பிரதமர் மோடியைச் சந்தித்து வாரியம் அமைக்க வலியுறுத்த நிறைவேற்றப்பட்ட தீர்மானப்படி பிரதமர் சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை. மார்ச் 9 ஆம் தேதி மத்திய நீர்வளத்துறைச் செயலாளர் நடத்திய கலந்தாலோசனைக் கூட்டத்திலும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. தமிழக சட்டப்பேரவையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தின் சார்பில் இது குறித்து மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்துக்கு மூன்று கடிதங்களும் அனுப்பப்பட்டன. தமிழகத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 18 நாட்களாக நாடாளுமன்றத்தை முடக்கினர். உச்சநீதிமன்றத் தீர்ப்பை வேண்டுமென்றே மார்ச் 29 ஆம் தேதிக் கெடுவுக்குள் மத்திய அரசு நிறைவேற்றாமல் அவமதித்து விட்டதாகவும், மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தமிழக அரசு தொடுத்துள்ளது.

177.25 டி.எம்.சி. காவிரி நதிநீரை உடனடியாக தமிழகத்துக்கு வழங்கவும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீட்டுள்ளது. 2007 இல் காவிரி நடுவர் மன்றம் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கிய 192 டி.எம்.சி. என்பதை  177.25 டி.எம்.சி ஆகக் குறைந்தது உச்சநீதிமன்றம். பெங்களூரின் குடிநீர்த் தேவையைக் கருத்தில் கொண்டும் தமிழகத்தின் நிலத்தடி நீரைக் கணக்கில் கொண்டும் தமிழகத்தின் நீர்ப்பங்கீட்டிலிருந்து 15 டி.எம்.சி. தண்ணீரை ஒப்பந்த விதிமுறைகளுக்கு மாறாக உச்சநீதிமன்றம் கர்நாடகத்துக்கு ஒதுக்கியுள்ளதாக சட்ட வல்லுநர்கள் கருதுகின்றனர். தமிழகத்தின் நிலத்தடி நீரைக் கணக்கிட்ட உச்சநீதிமன்றம் ஏன் கர்நாடகத்தின் நிலத்தடி நீரைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்பது புரியாத புதிராகவே உள்ளது. பெங்களூர் நகரின் நீர்த்தேவை யைக் கவனத்தில் கொண்ட உச்சநீதிமன்றம் ஏன் தமிழக நகரங்களின் நீர்த்தேவைகளை அதே அக்கறையுடன் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்பதும் மர்மமாக உள்ளது. 2007 ஆம் ஆண்டில் தனது இறுதித் தீர்ப்பை முறையாக அமல்படுத்த, காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகிய இரண்டும் மிகவும் இன்றியமையாதவை என்று குறிப்பிட்டுள்ளது. இதே காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு, விரிவாக யாரெல்லாம் காவிரி மேலாண்மை வாரியத்தில் அங்கம் வகிக்க வேண்டும். அவர்களை நியமிக்க, அடிப்படையான அவர்களது துறைசார் தகுதிகள், அனுபவம் மற்றும் அந்தஸ்து தகுதிகள் பற்றி எடுத்துரைத்துள்ளது. ஆக காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக்குழு அமைக்கப்படவில்லை எனில் 2007 ஆம் ஆண்டில் காவிரி நடுவர் மன்றம் வெளியிட்ட இறுதித் தீர்ப்பு வெற்றுக் காகிதமாகவே நிலைத்துவிடும் என்ற எச்சரிக்கையையும் இறுதித் தீர்ப்பு வெளியிட்டிருந்தது. “செயல்திட்டம்” விஉஜுeதுe என்ற சொல்லின் விளக்கம் “வல்லான் வகுத்ததே வாய்க்கால்” என்ற பாணியில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பாதகமாக அமைந்துவிட்டால், தமிழக விவசாயம், குடிநீர்த் தேவைகளுக்குப் பயன் தரவேண்டிய காவிரி நீர், கானல் நீராக மாறிவிட வாய்ப்புகள் அதிகரித்துவிடும்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைந்து விட்டால் கர்நாடகச் சட்டமன்றத்  தேர்தலில் பாரதிய ஜனநாய கட்சி மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்துவிடும் என்று அஞ்சி, காவிரி மேலாண்மை வாரியம் அமைவதற்கு இத்தகைய நயவஞ்சகமான குள்ளநரித்தன தயக்கத்தையும், இழுத்தடிப்பையும், காலங்கடத்தும் அரசியல் கபட நாடகத்தையும், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நடத்திவருவது மிகவும் கண்டனத்துக்குரியது.

மனித நேயத்திற்கும், ஜனநாயக நெறிமுறைகளுக்கும், இந்திய அரசியல் நிர்ணயச் சட்டத்தின் நெறிமுறைகளுக்கும் அப்பாற்பட்டு மத்திய அரசு சென்றுவிடாமல், இனியாவது உச்சநீதிமன்றம்  ‘விஉஜுeதுe’    அல்லது “செயல்திட்டம்” என்பது காவிரி மேலாண்மை வாரியம் தான் என்று வலுவாகத் தன் தீர்ப்பில் தெளிவுபடுத்தினால் தமிழகமே நன்றியுடன் அத்தீர்ப்பை உளமாற வணங்கி வரவேற்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. உச்சநீதிமன்றத்தின் இந்த இறுதித் தீர்பபை, “மத்திய அரசு நடைமுறைப் படுத்தாத பட்சத்தில், தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, குடியரசு தலைவருக்கு தீர்ப்பை நிறைவேற்றுவதற்கான உத்தரவை அளிப்பதற்கான அதிகாரமும் உச்சநீதிமன்ற த்துக்கு உண்டு” , என்று உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு கூறியிருப்பதையும், தமிழக அரசு தீவிர கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர், இந்திய ஜனநாயக அமைப்பையும், கூட்டாச்சி முறையின் மாண்பையும் காக்க வேண்டிய தலையாய கடமையாக, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும்.

மூவொரு கடவுளின் பெருவிழா

மூவொரு கடவுளின் பெருவிழா

27-05-2018                            
இச 4:32-34,39‡40, உரோ 8:14-17, யோவா 15: 26-27, 16:12-15
- அருள்பணி. எஸ். அருள்சாமி, 
பெத்தானியா இல்லம், கும்பகோணம்

இன்று நாம் மூவொரு கடவுளின் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். மூவொரு கடவுள் என்ற உண்மை கிறிஸ்தவ சமய கோட்பாடுகளுக்கு அடிப்படையான தொன்று. ஒரே கடவுள் மூன்று ஆள்களாக இருக்கின்றார் என்பதுதான் இதன் பொருளாகும். அதாவது, கடவுள் தந்தை என்றும், மகன் என்றும், தூய ஆவியார் என்றும் அழைக்கப்படுகிறார்.

இது எப்படியாகும்? என்று கேள்வியை எழுப்புவது இயல்புதான். ஒரு மனிதர் ஒரே சமயத்தில் தம் பெற்றோருக்கு மகனாகவும், தம் பிள்ளைகளுக்குத் தந்தையாகவும், தன் மனைவிக்கு கணவராகவும் இருக்கின்றாரோ, அதே போலதான் கடவுளும் ஒரே சமயத்தில் தந்தையாகவும், மகனாகவும், தூய ஆவியாராகவும் இருக்கிறார். எப்படி மகனும், கணவனும், தந்தையுமான ஒருவர் ஒரே ஆளோ, அதேபோல்தான் தந்தையும், மகனும், தூய ஆவியுமானவர் ஒரே கடவுளாவார். இங்கே ஆள் ஒன்றுதான். அவர் தந்தையாக, கணவராக, பிள்ளையாக ஆற்றுகின்ற பணி வேறுபட்டது.  இதே போல்தான் கடவுளும் விளங்குகிறார்.

இந்த மூவொரு கடவுள் கோட்பாட்டை இருவிதங்களில் விளக்கலாம்.

கடவுள் நிறைவுள்ளவர். அவர் அன்பில் நிறைவுள்ளவர், ஏனெனில் கடவுள் அன்பாக இருக்கிறார். அவர் அறிவில் நிறைவுள்ளவர். ஏனெனில் அவர் முற்றறிவுடையவர். கடந்த காலம், நிகழ்காலம், வரும் காலம் அனைத்தையும் அறிந்தவர். முற்றறிவுடைய அவர் சிந்திக்கிறார். ஆனால் தொடக்கத்தில் கடவுளைத் தவிர வேறேதுவும் இல்லை. கடவுளின் ஆறு சிறப்புப் பண்புகளில் முதலாவதாகக் குறிப்பிடுவது கடவுள் தாமாகவே இருக்கிறார் என்பது. தாமாகவே இருக்கும் கடவுள் ஒரு சிந்தனையாளராகவும் இருக்கிறார். அவர் எதைப்பற்றி சிந்திக்க முடியும்? தம்மைப் பற்றியேதான் சிந்திக்க முடியும். ஏனெனில் தொடக்கத்தில் தம்மை தவிர்த்து வேறொன்றும் இருந்ததில்லை. அவருடைய சிந்தனைக்கு இலக்காக (Object) இருப்பது அவரே தான்.
அவர் சிந்திக்கும்போது உள்ளத்தில் உருவெடுக்கும் கருத்தை  உச்சரிக்கும் போது வார்த்தைப் பிறக்கிறது. உச்சரிக்கப்பட்ட அந்த வார்த்தையின் இயல்பும், அதை உச்சரித்தவருடைய இயல்பும் ஒன்றேதான். சிந்தித்தவர் தந்தையாகிய கடவுள், உச்சரிக்கப்பட்டவர் வார்த்தையாகிய மகன். இவருடைய இயல்பு இறைவனுடைய இயல்பே. “அவ்வாக்கு கடவுளாயும் இருந்தார்” (யோவா 1:1). இவருடைய இயல்பைப் பற்றி விவரிக்கும் போது இவர் கடவுளுடைய மாட்சிமையின் சுடரொளி என்றும், அவருடைய ‘இயல்பின் அச்சுபதிவு’ என்றும் எபிரேயருக்கு எழுதப்பட்ட மடலில் வாசிக்கிறோம். இந்த பொருளில்தான் ஒருவனைப் பார்த்து “அவன் தன் அப்பனை உரிச்சு வைத்தாற்போல் உள்ளான்”, என்று சொல்வதைக் கேள்விப்படுகிறோம். “இவ்வாறு இறைமகன் வானத்தூதரைவிடச் சிறந்ததொரு பெயரை உரிமைப் பேறாகப் பெற்றார்” என்றும் வாசிக்கிறோம் (எபி 2:4).

தந்தை, மகன் ஆகிய இருவருடைய பரஸ்பர சிந்தனையிலிருந்தும், அன்பிலிருந்தும் புறப்படுகிறவர் தூய ஆவியாரானார். எனவேதான் தந்தையிடமிருந்தும், மகனிடமிருந்தும் புறப்படும் ஆண்டவரும், உயிர் அளிப்பவருமான தூய ஆவியாரை நம்புகிறேன் என நம்பிக்கை அறிக்கையில் சொல்லுகிறோம். “இவர் தந்தையோடும் மகனோடும் ஒன்றாக ஆராதனையும் மாட்சியும் பெறுகின்றார்” என்கிறோம்.

இவ்வாறாக தந்தை, மகன், தூய ஆவியார் ஆகிய மூவரும் ஒரே இறை இயல்பை உடையவர்கள். இவர்கள் ஆள்வகையில் மூவரானாலும், இயல்பு முறையில் ஒருவரே, அதாவது ஒரே கடவுள்தான். இந்த மூவொரு கடவுளைத் தான் கட்புலனாக மூவொரு கடவுள்  (Transcendent Trnity)  என்பர். மீட்பின் வரலாற்று பின்புலத்தில் மூவொரு கடவுள்  எக்கோனமிக், மூவொரு கடவுள் (Economic Trinity)  என்றும் அழைக்கப்படுகிறார். அதாவது மீட்பின் திட்டத்தில் இவர்களின் ஈடுபாட்டின் அடிப்படையில் இவர்களைப் பற்றி புரிவதாகும். தந்தையாகிய கடவுளின் பேரன்பு செயல் உலக படைப்பு, மீட்பின் திட்டமாகும். மகனாகிய இயேசு கிறிஸ்துவின் செயல் மீட்பின் திட்டத்தைச் செயல்படுத்துவதாகும். தூய ஆவியாரின் செயல் உலகமனைத்தையும் பாதுகாத்து, நேர்வழியில் நெறிபடுத்துவதாகும்.

இந்த மூவொரு கடவுளின் செயல்பாடுகள் நமது அன்றாட கிறிஸ்தவ வாழ்வில் இடம் பெற வேண்டும். தந்தையின் அன்பு, கிறிஸ்துவின் கீழ்படிதல், தூய ஆவியின் வழிநடத்துதல் ஆகிய மூன்றும் நம்மை இயக்குகின்றன. இதை நாம் ஒவ்வொருவரும் உள்ளூர உணர வேண்டும்.

மூவொரு கடவுள் வெகு தூரத்தில் மறைந்திருக்கும் கற்பனைக் கடவுள் அல்ல, இருக்கிறவர் நாமே என்று தம்மை வெளிப்படுத்தியவர் (விப 3:14) இறைவாக்கினர்கள் வழியாக பேசிய கடவுள், இறுதிவரையில் உலகை அன்பு செய்த கடவுள், தமது ஒரே மகனை உலகிற்கு அனுபப்பியவர் ஆவார்.

இயேசு ஓர் இறைவாக்கினர் மட்டுமல்ல, அவர் இறைவனுமாவார். நமது மீட்பிற்காக இரத்தம் சிந்திய வரலாற்று கடவுள். 

இவர்கள் இருவரிடமிருந்து புறப்படுகிறவரே தூய ஆவியார். நமக்கு துணையாளர், வழிகாட்டி, நம்மோடு தங்கியிருப்பவர், நமக்குள் உறைபவர். “நீங்கள் கடவுளுடைய கோவிலென்றும், கடவுளின் ஆவியார் உங்களில் குடிக்கொண்டியிருக்கிறார் என்றும் உங்களுக்குத் தெரியதா?” (1 கொரி 3:16) என்றும், “உங்கள் உடல் நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக் கொண்ட தூய ஆவி தங்கும் கோவில் என்று தெரியாதா?” (1 கொரி 6:19) என்றும் பவுலடியார் கேட்பது நமக்கு படிப்பினையாக இருக்க வேண்டும்.

எனவே மூவொரு கடவுளில் விளங்கிய நல்லிணக்கம் நம் வாழ்விலும் தென்பட வேண்டும். “தந்தை மகனை மாட்சிப்படுத்தினார். மகன் தந்தையை மாட்சிப்படுத்தினார்.தந்தையின் விருப்பத்திற்கு மீட்பின் திட்டத்திற்கு தம்மையே கையளித்தார். எனவேதான் ‘அப்பா, தந்தையே’ எல்லாம் உம்மால் இயலும். இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும். ஆனாலும் என் விருப்பபடி அல்ல. உம் விருப்பபடியே நிகழட்டும்” என்ற மன நிலையோடு (மாற் 14:6) தந்தையே உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன் (லூக் 23:46) என்று தந்தைக்குத் தம்மையே ஈந்தார். இருவருள்ளும் உறவு நல்லிணக்கம், ஒற்றுமை ஆழமாக வேரூன்றியிருந்தது. நானும், தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம் (யோவா 10:30; 14:11) என்ற ஆண்டவரின் வெளிப்படுத்துதல் எவ்வளவு ஆழமான பேருன்மை.

தூய ஆவியும் உறவில் நல்லிணக்கத்தில் ஒன்றித்திருந்தார். தந்தையிடமிருந்து கிறிஸ்து அனுப்பிய தூயஆவி (யோவா 15:26) திருஅவையை ஒருங்கிணைத்தார். இறைவனை ‘அப்பா, தந்தையே’ என்று அழைக்க வைத்து பிள்ளைகளாகிய நாம் உறவில் வளர உறுதுணையாக இருக்கிறார் (கலா4:6). அனைவருக்குள்ளும் நல்லிணக்கத்தை, ஒற்றுமையை உருவாக்குகிறார். கடவுளின் பிள்ளைகள் என்ற உரிமையளித்து (யோவா 1:12) இதற்குச் சான்று பகர்கிறார் (உரோ 8:16), நாளும் நம்மை வழிநடத்துகிறார்.

மூவொரு கடவுளின் விழாவைக் கொண்டாடும் நம்மிடையே அவரில் விளங்கிய நல்லிணக்கம் செயலாக்கப்பட வேண்டும். நம்மிடையே ஒற்றுமை உருவாகிட வேண்டும். ஒருவரொருவருக்காக தியாகம் செய்யும் மனநிலை வேண்டும். விட்டுக் கொடுக்கும் நிலை நம் குடும்பங்களில் உருவாகிட வேண்டும். அன்பினாலும்,தியாகத்தாலும் மெருவூக்கப்பட்டு வளர வேண்டும். மூவொரு கடவுளின் விழா இதற்கு தூண்டுதலாகவும், துணையாகவும் அமைந்திட மன்றாடுவோம்.

தூய ஆவியார் பெருவிழா

தூய ஆவியார் பெருவிழா

திப 2:1‡11, கலா 5: 16-25, யோவா 15:26-27, 16:12-15
20-05-2018
அருட்பணி. எல். ரெக்ஸ் அலெக்ஸ் சில்வஸ்டர்

  உயிர்ப்பு பெருவிழாவை கொண்டாடி முடித்த பிறகு ஐம்பதாவது நாளை பெந்தகோஸ்தே பெருவிழாவாகக் கொண்டாடுகின்றோம். அதாவது தூய ஆவியாரின் விழாவைக் கொண்டாடுகின்றோம். மூவொரு இறைவனில், மூன்றாம் ஆளாகிய தூய ஆவியாரின் விழா. 

திருவிவிலியம் நான்கு முக்கியமான பிறப்புக்களைக் கொண்டது. அவை:
 1. உலகின் பிறப்பு (படைப்பு) (தொநூ 1,2)
 2. தேர்ந்தெடுக்கப்பட்ட இனத்தின் பிறப்பு  (விப 19)
 3. இயேசுவின் பிறப்பு ( மத் 1: 18-25)
 4. திருச்சபையின் பிறப்பு (திப 2:1-11)

இந்த நான்கு பிறப்புகளும் நம்முடைய கிறிஸ்தவ நம்பிக்கைக்கு அடித்தளமாக அமைகின்றன. இந்த நான்கு பிறப்புகளுக்கும், ஓர் ஒற்றுமை உண்டு. பிறப்புக்கெல்லாம் மூல காரணமாய் இருந்தவர் தூய ஆவியார் என்பதே அந்த ஒற்றுமை.

 1. தூய ஆவியானவர் தண்ணீரின் மீது அசைவாடிக் கொண்டிருந்த வேளையில்தான், வெறுமையிலிருந்து ஒவ்வொன்றாக படைத்தார் இறைவன் என்கிறது திருவிவிலியம்.

2. யாக்கோபு முதலே - இறைவனுக்கும், இஸ்ராயேல் மக்களுக்கும் தொடர்பு இருந்தாலும், இவர்களுக்கிடையில் ஒப்பந்தம், உடன்படிக்கை நிகழ்ந்தது சீனாய் மலையில்தான். அங்கே ஆவியாரின் பிரசன்னம் இருந்ததை பேரிடி முழங்கியது (விப 19:6). ஆண்டவர் நெருப்பாக இறங்கி வந்தார் (விப 19:18) என்ற சொற்றொடர்கள் என்பிக்கின்றன.

 3. இயேசுவின் பிறப்பில், அன்னை மரியாள் கருவுற்றிருப்பது தூய ஆவியாரின் வல்லமையால் என்பதை நன்கறிவோம் (லூக் 1:35).

இறுதியாக திருச்சபையின் பிறப்பு, அதாவது இன்றைய நாளில் நாம் நினைவு கூறும் தூய ஆவியாரின் வருகை சிதறுண்டவர்களை, ஒரே திருஅவையாக இணைத்தது. தூய ஆவியானவர் நெருப்புப் பிளவு வழியாக இறங்கினார் என்று திப2:1-11 இல் வாசிக்கின்றோம்.

இந்த நான்கு பிறப்புகளும் நமக்கு வலியுறுத்துவது ஒன்றுதான். தூய ஆவியார் எங்கு இருக்கின்றாரோ, அங்கே புதுப்பிறப்பு உண்டு என்பதுதான் அந்த உண்மை.

அதோடு தூய ஆவியார் உடலளவிலும், உள்ளத்தளவிலும், செயலளவிலும், கொள்கையளவிலும் நம்மை ஒன்றிணைக்கும் பணிகளையும் செய்கின்றார். இதுவே அன்று திருத்தூதர்கள் வாழ்விலும் நடந்தது.

அது வரையிலும் யார் பெரியவர் என்று தங்களுக்குள், போட்டியிட்டவர்களும், இயேசுவின் அரியணையின் இடப் புறமும், வலப்புறமும் அமர வேண்டும் என்று ஆசைப்பட்டவர்களும், உயிருக்குப் பயந்து அவரை மறுதலித்தவரையும், அஞ்சி நடுங்கி கதவை தாழிட்டு கொண்டவர்களையும் இன்று தூய ஆவியார் ஒருங்கிணைக்கின்றார்.

இதுவரையில் சுபாவம், பதவிஆசை, உயிர்மேல் பயம் போன்ற கதவுகளால் பூட்டப்பட்டிருந்தவர்கள், தூய ஆவியாரை பெற்றுக் கொண்டபின் கதவுகளை உடைத்தெறிந்து விட்டு வெளியே வந்தார்கள். அந்த இயேசுவிற்கு சான்று பகர்ந்தார்கள். உயிர்ப்புக்கு சாட்சிகளானார்கள். இதுதான் பெந்தகோஸ்தே அனுபவம்.

இதே அனுபவத்தைப் பெறத்தான் நாமும் அழைக்கப்படுகின்றோம். நமக்குள் இருக்கின்ற அல்லது நம்மை பூட்டியிருக்கின்ற சாதி, இன, நிற, மொழி, பொருளாதார, பண்பாட்டு வேறுபாடுகளை, உடைத்தெறிந்துவிட்டு, உயிர்த்த இயேசுவின் சாட்சிகளாய் வாழ, அழைக்கப்படுகின்றோம். இதற்கு உந்துசக்தியாக, ஊக்குவிக்கும் சக்தியாக இருப்பது, திருமுழுக்கு மற்றும் உறுதிபூசுதலில் நாம் பெற்றுக் கொண்ட தூய ஆவியார்தான். அவரை நாம் நம்மில் செயலாற்ற அனுமதிப்போமா?
‘திரு அவையில் துVய ஆவியாரின் பிரசன்னத்தின் முக்கிய வெளிப்பாடு துணிவு’. - ஏ.பி. சிம்சன்

‘பணிவுதான் துVயஆவியார் நம்மை வழிநடத்த உதவுகிறது.’ - ஜான் ஹகி 

‘துVய ஆவியார் உன்னில் உறைவதை  உணரும் போது என்னால் முடியாது என்று உன்னால் சொல்ல முடியாது.’ - ஓஸ்வால்டு சாமபர்ஸ்

Tuesday 1 May 2018

ஆண்டவரின் விண்ணேற்றம்

ஆண்டவரின் விண்ணேற்றம்
13-05-2018
 திப 1: 1-11;    எபே 4:1-13;   மாற் 16:15-20
ச.இ.அ.

ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்காக அல்லது பணிக்காக, படிப்புக்காக வெளியிடங்களுக்குச் செல்லும்போது, எப்போது நம் வீட்டிற்குத் திரும்புவோம் என்ற ஏக்கம், நமக்கு உண்டாகும். பணிகள் முடிந்து திரும்புகிற வேளையில், தனிப்பட்ட நன்றி செபம் சொல்வேன். நாம் துவங்கிய பணி நிறைவாக நடந்தது. இடையில் எவ்வித தடங்கள், இடையூறுகள் இன்றி நிறைவுகண்டதற்காக இறைவனுக்கு நன்றி கூறுகின்ற வேளையில், அந்நிகழ்ச்சி முழுமையான தன் அடிப்படையில் ஒருமன நிறைவு ஏற்படும்.

இயேசு விண்ணகம் சென்ற விழாவை கொண்டாடுகிறோம். இன்றைய முதல் வாசகம் இயேசு விண்ணகம் சென்ற நிகழ்ச்சியை விளக்குகிறது.  இறைவாக்கினர் எலியா, எலிசா கண்முன்பாக, நெருப்புப் தேரும், நெருப்புக் குதிரைகளும் தோன்ற, சுழற்காற்றில் விண்ணகத்துச் சென்றார் என்று வாசிக்கிறோம் (2 அரச 2:11). இயேசு உயிர்த்த பின்பு நாற்பது நாள்கள் திருத்தூதர்களுக்கு காட்சியளித்து, அவர்களை உலகெங்கும் தனது சாட்சிகளாக விளங்கக் கூறின பிறகு, விண்ணகம் எடுத்துக் கொள்ளப்பட்டார் என்று கூறப்பட்டுள்ளது (திப 1:8). 

இயேசு பிறந்தபோது, அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிட்டார்கள். எம்மானுவேல் என்றால் கடவுள் நம்மோடு என்று பொருள். இயேசு இவ்வுலகை விட்டுப் பிரிந்து விண்ணகம் செல்லும்போது சீடர்களுக்கு அவர்தந்த வாக்குறுதி உலகமுடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன் (மத் 28:20) என்பதாகும். எனவே அவரது பிரசன்னம் என்றுமுள்ளதாகிறது.

இயேசு இவ்வுலகில் இருக்கும் போது தன் விண்ணகத் தந்தையுடன் ஒன்றித்திருந்தார் (யோவா 17:22). அதே போல இயேசு விண்ணகம் சென்ற பிறகு தன் சீடர்களுடன் ஒன்றித்திருக்கிறார். அவ்வாறு அவர் தன் சீடர்களுடன் ஒன்றித்திருப்பதற்கு தூய ஆவியை சீடர்களுக்கு அனுப்புகிறார் (யோ14:26). இவ்வாறு தொடர்ந்து சீடர்களுடன் ஒன்றித்திருந்து செயல்படுகிறார். அவர்கள் அரும்அடையாளங்கள்  செய்ய வேண்டிய வல்லமையைத் தருகிறார் (மாற் 16:20). 

நமது பணி விண்ணகத்தைப் பார்த்து நிற்பதல்ல. இயேசு செய்தது போல, தீமைகளை அகற்றுவதும், நோய்களை குணமாக்குவதும், எல்லோரோடும் ஒன்றித்து வாழ்வதுமாகும்.

ஒரு முனிவர், தான் இறப்பதற்கு முன் தன் சீடர்களை அருகில் அழைத்தார். ‘என்னுடைய சிறிய துன்ப வாழக்கை நிறைவுறப் போகிறது. நான் ஒரு சந்தைக்குச் செல்கிறேன். என்னிடம் கொஞ்சம் பணம்தான் இருக்கிறது. ஆனால் அதைக்கொண்டு அளவில்லாமல் நிறைய வாங்குவேன். உலகில் சிறிதுதான் துன்புற்றேன். ஆனால் பெரிய ஒப்பற்ற செல்வத்தைப் பெறப் போகிறேன். அதுதான் விண்ணகம்’ என்றார்.

ஒருவர் விண்ணகத்தைப் பற்றி விளக்கிக் கொண்டிரு ந்தார். கேள்வி நேரத்தில் ஒருவர், ‘நான் விண்ணகம் செல்லும்போது துதர்களுக்கு உள்ளதுபோல இறக்கைகள் இருக்கும். அதில் எப்படி என்சட்டையை மாட்டுவது என்பது பிரச்சனையாய் இருக்காதா’ என்றார். பேச்சாளர், ‘உங்களுக்கு இறக்கைகள் இருக்காது. வால்தான் இருக்கும். வாலில் எப்படி உங்களின் கால் சட்டையை பொருத்துவது என்பதுதான் பிரச்சனையாக இருக்கும்’ என்றார். 

‘எலியாவின் விண்ணேற்றம் ஒரு பறவை பறந்து செல்வது போன்றது. நாம் அதனை பின்பற்ற முடியாது. இயேசுவின் விண்ணேற்றம் விண்ணையும் உலகையும் இணைக்கும் பாலம் போன்றது. இதனால் அவரின் சீடர்கள் அவரை சென்றடைய முடியும்’. - பாம் கார்ட்டன்

பாஸ்கா காலம் 6 ஆம் ஞாயிறு

பாஸ்கா காலம் 6 ஆம் ஞாயிறு

திப 10: 25,26,34,35,44-48; 1யோவான் 4:7-10;   யோவான் 15: 9-17
06-05-2018
பாளை ஜெமி
அன்பா? அறிவா?
உலகையே சிரிக்க வைத்தவர் சார்லி சாப்லின்! அவர் உண்மையான நண்பர் யாரென்பதற்கு இவ்வாறு விளக்கம் தருகிறார். ‘எவனொருவன் மழையிலே நனைந்தவாறு அழுகின்ற நண்பனின் கண்ணீரை மழை நீரிலிருந்து வித்தியாசப்படுத்தி, அத்துன்ப வேளையில் துணை நிற்பாரோ அவரே உண்மையான நண்பன்’ என்கிறார். நண்பகர்ளுக்கு மத்தியில் அன்பு இருத்தல் வேண்டும். அந்த அன்பு உள்ள இடத்தில் துன்பம் இருத்தல் வேண்டும். அப்போதுதான் அந்த அன்பு உண்மையானது எது என நீருபனமாகும். அத்தகைய உண்மை அன்பை வெளிப்படுத்திய உயிர்த்த ஆண்டவரைப் பற்றிய இன்றைய  இறைச்சிந்தனை, ‘இயேசுவின் அன்பில் நிலைத்திருக்க வேண்டும்’ என்பதாகும்.

அன்பிற்கு இலக்கணமாய் பெற்றத்தாயை விட வேறு யாரையும் ஒப்புமைப்படுத்த இயலாது. ஆனாலும் அத்தாயினும் மேலாக (எசாயா 49:15) நான் உன்னை அன்பு செய்கிறேன் என்று தன் உயிரை நமக்காக கொடுத்து வாழ்ந்துக் காட்டியவர் ஆண்டவர் இயேசுகிறிஸ்து. யோவான் 4:16இல் கடவுள் அன்பே உருவானவர் என்றுள்ளது. அதாவது இறைவன் அனைத்து விதமான அன்பின் வெளிப்பாடாக இருப்பதை அது சுட்டிக்காட்டுகிறது. இறைவன் ஒரு தந்தையின் நிலையில், ஒரு தாயின் நிலையில், நமக்கு மிகவும் நெருக்கமானவர்களின் நிலையில் பொருத்திக் காட்டினாலும் இன்றைய நற்செய்தியில், ஒரு நண்பனின் அன்பிற்கு தன் அன்பை இணைத்துக் காட்டுகிறார் இயேசு.

தத்துவவியல் அறிஞர் ஹராலிக்டஸ் என்பவர், ‘மாற்றம் என்பது உண்மையே, ஒவ்வொரு நொடிபொழுதும் மாறிக் கொண்டேயிருக்கின்றன’ என்ற கருத்தினை, ‘யாரும் ஓடுகின்ற ஒரே தண்ணீரில் கால் வைக்க இயலாது’ என்கிறார், (No one can step into the same water). மாற்றமும் என்பது நியதியாயினும் ஆண்டவர் இயேசு நம்மில் வைத்திருக்கின்ற அன்பிலே எந்த விதமான மாற்றம் இல்லை. ஆகவே தான் யோவா 15:9 இல் எனது அன்பில் நிலைத்திருங்கள் என்று அன்போடு கூறுகிறார். 
உண்மையான அன்பு விலை போகாது. 
போலியான அன்புக்கோ   சாயம் பொய்த்துப் போகும். 
அன்பு உள்ள இடத்தில் தியாகம் இரட்டைக்கிழவி. 
அத்தியாகம் இல்லா அன்பு முற்றும்  (ஒற்றை) பிழை ‡ இத்தகைய அன்பினை வெளிப்படுத்தவே இன்றைய நற்செய்தி வாசகத்தில், ‘நான் உங்களைப் பணியாளன் என்று சொல்லமாட்டேன். காரணம் தலைவன் செய்வது இன்னதென்று பணியாளனுக்கு தெரியாது? அவர்கள் இருவருக்குமிடையே அன்பு என்ற பிணைப்பு இடம் பெறாத நிலை. நானோ உங்களை என் நண்பர்கள் என்றேன். இரு நண்பர்களுக்கிடையே அன்பு இருப்பது போல, நான் உங்கள் மீது கொண்ட அன்பினை என் உயிரை ஈந்து உறுதிப்படுத்தியுள்ளேன்.’ அதனைத்தான் வாழ்க்கை அனுபவத்தின் வாயிலாக யாரிடம் எப்படி பேசுவது என்று பெரியோர்கள் கூறுவதுண்டு. 
‘தாயிடம் அன்பாகவும், தந்தையிடம் பண்பாகவும், சகோதரியிடம் பாசத்தோடும், சகோதரனிடம் அளவோடும், குழந்தைகளிடம் செல்லமாகவும், கடவுளிடம் மெளனமாகவும், நண்பர்களிடம் மனம் விட்டும் பேச வேண்டும்’ என்று கூறுவார்கள். அவருடைய நண்பர்களாகிய நம்மிடத்தில் எதிர்பார்ப்பது, அவர் நம்மை அன்பு செய்வதுபோல, பிறரை நாம் அன்பு செய்ய வேண்டுமென்பதே. இதனையே புனித அன்னை தெரஸா, ‘கண்ணுக்கு தெரிந்த மனிதரை அன்பு செய்யாவிட்டால், ஊனக் கண்களுக்குத் தெரியாத கடவுளை அன்பு செய்தும் பயனில்லை’ என்று கூறுகிறார். 
இரண்டாம் வாசகமும் (1யோவா 4:7‡10) ‘அன்பு செய்பவர்கள் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள்’ என்று குறிப்பிடுகிறது. இயேசுவும் நம்மிடத்தில் கூறுவது இதுதான். நீங்கள் என்னை அன்பு செய்கிறீர்கள் என்றால், என் கட்டளைகளைக் கடைபிடியுங்கள் இதிலேதான் அன்பிற்கும், அறிவிற்கும் இடையே உள்ள வேறுபாடு விளக்கம் பெறுகிறது. என் தாய் தந்தையை நான் அறிவேன் என்பது எனக்குள்ள அறிவு. ஆனால் அவர்களின் நிலையறிந்து, வயது முதிர்ந்த காலத்திலே அவர்களுக்கு உறுதுணையாய் இருந்து அவர்களை காப்பாற்றுதல் என்பது எனது கடமையும், அதனினும் மேலான அன்புமாகும். அதுபோன்று, இயேசுவை நான் அறிந்திருப்பது மற்றவர்களைப் போல நானும் பெற்றிருக்கின்ற அறிவு அது. ஆனால் அவர் சொல்கின்றவாறு அவரது கட்டளைகளைக் கடைபிடிப்பது அவர்மீது நாம் கொண்டுள்ள அன்பு.
  ஆக, இந்த அன்பு எங்கே ஆரம்பிக்கிறது? எப்படி தொடங்குகிறது என்ற கேள்விக்கு, புனித அன்னை தெரஸாவின் பதிலே, பொருத்தமாக அமையும்.அன்பானது நமது வீட்டிலே, குடும்பத்திலே ஆரம்பிக்கின்றது. நாம் ஒன்றாக கூடி செபிப்பதிலேதான் அன்பு வலுப்பெறுகின்றது என்று கூறுகிறார். மேலும் ‘அன்பு செலுத்து என்று யாரோ கட்டளை இட்டது போல் குரல் கேட்கிறது’ என்று 17 வயதான ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல், தனது குடும்பத்தால் திருமணத்திற்கு வற்புறுத்தப்பட்டபோது, ‘என் மனதில் ஒரு விதை விழுந்திருக்கிறது, அதற்கு விடை கிடைத்தப் பின்னரே, திருமணம்,  என்று கூறி செபத்தின் வழியாக, ‘அன்பு செலுத்துங்கள்... காலம் குறைவாகவே இருக்கிறது’, என்று தேவாலய சுவரில் இருந்த வாசகம் அவரை சிந்திக்க வைத்தது. 
வாழ்க்கையில் அன்பான உறவு கிடைப்பது முக்கியமல்ல, வாழ்நாள் முழுவதும் அன்பாக இருக்கிறதே முக்கியம். ஆக, நம்மில் அன்போடு நிலைத்துள்ள ஆண்டவர் இயேசுவின் அன்பில் நிலைத்திருக்க ஒருவரையயாருவர் அன்பு செய்வோம். 

‘ஒருவரிடம் உள்ள சிறந்த பண்புகளை வெளிக்கொணர உதவுபவனே சிறந்த நண்பன்’ ‡ யஹன்றி போர்டு

‘நீ நீயாகவே வாழ அதற்குறிய சுதந்திரத்தை தருபவரே உற்ற நண்பர்’ ‡ ஜிம்மோரின்

‘உன் தோல்விகளை பொருட்படுத்தாது உன் வெற்றிகளை தாங்கி நிற்பவர்தான் உயர்ந்த நண்பர்’ ‡ கடக் லார்சன்

புகுமுக அருளடையாளங்கள்... 4. திருமுழுக்கு அருளடையாளம்

புகுமுக அருளடையாளங்கள்...

4. திருமுழுக்கு அருளடையாளம்

-  அருள்பணி. எஸ். அருள்சாமி
பெத்தானியா இல்லம், கும்பகோணம்

முன்னுரை:

புகுமுக அருளடையாளங்களின் முதல் படிநிலை திருமுழுக்கு ஆகும். இதன் அவசியத்தைப் பற்றிக் கூறவந்த யோவான் “ஒருவர் தண்ணீராலும், தூய ஆவியாலும் பிறந்தாலன்றி இறையாட்சிக்கு உட்பட இயலாது” (3:5) என்கிறார். இதிலிருந்து விண்ணரசுக்கும், நிலைவாழ்வுக்கும் நுழைவாயிலாக இருக்கிறது திருமுழுக்கு என அறிகிறோம்.

நாம் பெற்றத் திருமுழுக்கை நம் நினைவுக்குக் கொண்டு வந்து அதைப் பாராட்ட பழகி கொள்வது கிறிஸ்தவ வாழ்வுக்கு அடிப்படையாக இருக்கிறது என்று ‘மூன்றாவது ஆயிரமாம் ஆண்டின் நுழைவாயில்’ ஆவணத்தில் திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் குறிப்பிட்டுள்ளார். “நம்பிக்கையின் அருளடையாளம் எனப்படும் திருமுழுக்கில் உதயமாகும் கிறிஸ்தவ வாழ்வின் புதின்மையை அறிய முற்படுவது நம்பிக்கையாளர்களின் குறிக்கோளாக இருக்க வேண்டும். இத்தகைய புரிதல் தங்களது அழைப்பின் பொறுப்புகளுக்கு ஏற்ப வாழ உதவியாக இருக்கும்”  என்று ‘நம்பிக்கையாளர்களாகிய பொது நிலையினர்’(Christifideleshaics)    என்ற திருத்தூது ஊக்கவுரையில் வாசிக்கிறோம்.

எனவே இத்தகைய மாண்புயர் திருமுழுக்குப் பற்றிய படிப்பினையையும், அதன் சிறப்பு பண்புகள் பற்றியும் அறிய முயற்சிப்போம்.

 1. உயிர்த்த ஆண்டவரின் போதகம்

இயேசு பதினொரு சீடர்களைப் பார்த்து “விண்ணுலகிலும், மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது. எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன்,தூய ஆவியார்  பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் கட்டளையிட்ட யாவையையும் அவர்களும் கடைபிடிக்கும் படிகற்பியுங்கள். இதோ! உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்” என்று கூறினார் (மத் 28:16-20) என்றும்  இயேசு அவர்களை நோக்கி “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்”. நம்பிக்கை கொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்பு பெறுவர் (மாற் 16:15-16) என்றும் நற்செய்தி நூல்களில் வாசிக்கிறோம்.

திருமுழுக்குப் பற்றி விளக்கும் சடங்குமுறை நூலில் பின்வருமாறு வாசிக்கிறோம். “மாந்தர் தூய ஆவியின் அருளால் ஒளிர்விக்கப் பெற்று, கிறிஸ்துவின் நற்செய்தியை ஏற்கச் செய்யும் நம்பிக்கையின் அருளடையாளமே திருமுழுக்கு” (குழந்தைகளுக்கான திருமுழுக்கு சடங்குமுறை எண்3)..

மேலே நாம் குறிப்பிட்ட மூன்று பகுதிகளும் ஒருவர் விண்ணரசை நுழையவும், நிலைவாழ்வைப் பெறவும் தகுதியடைய வேண்டுமானால் பின்வரும் சில காரியங்கள் இடம் பெற வேண்டும் என்று வலியுறுத்துகின்றன.

- நற்செய்தி போதிக்கப்பட வேண்டும்.
- தூய ஆவியாரின் அருளால் ஒருவர் 
ஒளிர்விக்கப்பட வேண்டும்.
- நற்செய்தியை அவர் ஏற்க வேண்டும்.
- அதில் நம்பிக்கைக் கொள்ள வேண்டும்.
- திருமுழுக்குப் பெற வேண்டும். 
- இயேசுகிறிஸ்துவின் சீடராக வேண்டும்.
- இயேசு கட்டளையிட்டயாவற்றையும் 
கடைப்பிடிக்க வேண்டும்.
- விளைவாக மீட்பு பெறுவர்.

 இத்தனையும் நிகழும்போது ஒருவர் திருமுழுக்கு பெறுகிறார்.

2. திருமுழுக்கு அடிப்படை தேவைகள்

நற்செய்தி போதகமும், மனந்திரும்புதலும், விசுவாசமும் ஒருவர் திருமுழுக்குப் பெறுவதற்கு தேவையானவை என்பது தெளிவு.
நற்செய்தியைப் போதித்துதான் ஒருவரைச் சீடராக்க வேண்டும் என்பது உயிர்த்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் விருப்பம். நற்செய்தி போதகம் என்பது வாய்மொழி போதகத்தை மட்டும் குறிப்பிடுவதில்லை. இன்றைய உலகின் சூழலில் எல்லா இடங்களிலும் இதற்கு வாய்ப்பில்லாமல் இருக்கலாம். சில இடங்களில் இதற்குத் தடையும் போடப்பட்டிருக்கலாம். “கிறிஸ்துவின் வாய்மொழியாலும் அவரோடு நடத்திய வாழ்வாலும் அவர்தம் செயல்களாலும் தாம் பெற்றவற்றையும் தூய ஆவியாரின் தூண்டுதலால் தாம் கற்றவற்றையும் திருத்தூதர்கள் தம் வாய்மொழிப் போதனை, வாழ்வின் எடுத்துக்காட்டுகள், ஏற்படுத்திய அமைப்புகள் ஆகியவற்றின் வாயிலாக வழிவழியாக வழங்கினார்” என்று (இ.வெ.எண் 7). இறைவெளிபாடு பற்றிய கோட்பாடு விளக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. இதிலிருந்து வாய் மொழி போதகத்தைத் தவிர்த்து வாழ்வின் எடுத்துக்காட்டுக்களாலும் நற்செய்தியைப் போதிக்கலாம் என்று தெரிகிறது. “உண்மையான கிறிஸ்தவ வாழ்வின் சான்றுதான் திருஅவையின் நற்செய்தி போதகப் பணியின் முதல் வழியாகும்”  (சிஹி.41) என்று திருத்தந்தை ஆறாம்பால் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு நற்செய்தி போதகத்தைக் கேட்பதாலும், நற்சான்று வாழ்வையும், அறப்பணி செயல்களைப் பார்ப்பதாலும், அவற்றின் பயனை ஒருவர் அனுபவப்பதினாலும் அவர் இயேசுகிறிஸ்துவின் பக்கம் கவரப்படுகிறார். இதை செயலாற்றுபவர் தூய ஆவியார் ஆவர். பயனாக அவர் மனம் மாறுகிறார், இயேசுவைப் பற்றிக் கொள்ள ஒழுக்கத்துக்கடுத்த தகாத தம் நடத்தையை விட்டுவிடத் தூண்டப்படுகிறார். விரும்புவார், அவர் காட்டிய நெறியைக் கடைப்பிடிக்க முன்வருவார். இதுதான் அவரைப் பொறுத்தமட்டில் மனம் மாறுதல் ஆகும்.

இவற்றின் ஒட்டுமொத்த வெளிப்பாடே விசுவாசமாகும். “ஆகவே அறிவிப்பதைக் கேட்டால்தான் நம்பிக்கை உண்டாகும் ” (உரோ 10:17) என்று பவுலடியார் கூறுகிறார். மேலும் ‘இயேசு ஆண்டவர்’ என வாயார அறிக்கையிட்டு, இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார் என நீங்கள் உள்ளூர நம்பினால் மீட்புப் பெறுவீர்கள் (10:9) என்று அவரே கூறியுள்ளார்.

இவ்வாறு தங்கள் நம்பிக்கையை வெளிப் படுத்தியவர் திருமுழுக்குப் பெறுவர். எத்தியோப்பிய அரச அலுவலர்  ஒருவர் எருசலேம் சென்று கடவுளை வணங்கி விட்டுத் திரும்பிச் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது எசாயாவின் இறைவாக்கு நூலை வாசித்துக் கொண்டு சென்றார். பிலிப்பு என்ற திருத்தொண்டர் தூய ஆவியரால் தூண்டப்பட்டு அவரிடம் சென்று நீர் வாசிப்பதன் பொருள் உமக்குத் தெரிகிறதா? என்று கேட்கிறார். அவர் இல்லை என்றுச் சொல்ல, பிலிப்பு அப்பகுதிக்கு விளக்கம் அளிக்கிறார். அதைக்கேட்டு நம்பிக்கைக் கொண்ட அரச அலுலர் வழியில் தண்ணீர் இருப்பதைக் கண்டு திருமுழுக்குப் பெற்றார் (காண் தி.ப 8:9-40).

இவை அனைத்திலுமிருந்து தெளிவாவது என்னவென்றால் போதகம் மனந்திருப்புதலுக்கு வழிவகுக்கும் மனம்திரும்புவர் நம்பிக்கைக் கொள்ளச் செய்கிறது. நம்பிக்கை திருமுழுக்கு பெறுவதில் முடிவடைகிறது. ஆனால் இவை அனைத்தும் ஒரு நாளில் நிகழ்வதன்று இதற்கு நீண்டகாலம் தேவைப்படுகிறது. 

இது தொடக்கக்கால திருஅவையில் ‘ஆயத்தக் காலம்’ (தயாரிப்புக்காலம் ‡ ளீழிமிeஉஜுற்துலிதுமிe)                                       என அழைக்கப்பட்டது. இந்த தயாரிப்பு காலம் காலப்போக்கில் சீரழிந்துவிட்டது என்று முந்திய சிந்தனையயான்றில் குறிப்பிட்டோம். இதை புதுப்பிப்பது எவ்வாறு என்று இனிவரும் சிந்தனையில் விளக்கம் காணலாம்.

3. திருமுழுக்கின் பயன்கள்

திருமுழுக்குப் பெறுவதினால் பாவங்களுக்கு மன்னிப்பு பெறுகிறோம்; கிறிஸ்துவின் பாஸ்கா மறைபொருளில் பங்கு பெறுகிறோம்; இருளின் வல்லமையிலிருந்து விடுபட்டு, இறைவனின் சுவிகாரப் பிள்ளைகள் என்னும் நிலைக்கு உயர்த்தப்படுகிறோம்; நீரினாலும், தூய ஆவியினாலும் புதுப்படைப்பாக மாறுகிறோம். அதனால் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுகிறோம்; திருஅவையின் உறுப்பினராகின்றோம்; இறைவனின் உறவிடமாகக் கட்டி எழுப்பப்படுகிறோம்; மறுபிறப்படைந்த மற்றவர்களுடன் ஒற்றுமைப் பிணைப்பைப் பெறுகின்றோம்; புனித எண்ணெய்யால் திருநிலைப்படுத்தப்பட்டு இயேசு கிறிஸ்துவின் அரச, குருத்துவ, இறைவாக்குரைக்கும் பணிகளில் பங்கு பெறுகின்றோம். சுருங்கச் சொல்லின் நாம் பெறும் திருமுழுக்கு நம்மில் தீவிர மாற்றத்தைக் கொணர்கின்றது.

“நீங்கள் மனம் மாறுங்கள், உங்கள் பாவங்களிலிருந்து மன்னிப்பு பெறுவதற்காக ஒவ்வொருவரும் இயேசுகிறிஸ்துவின் பெயரால் திருமுழுக்குப் பெறுங்கள்” (திப 2:38) என்று புனித பேதுரு கூறுவதிலிருந்து திருமுழுக்கினால் மனந்திரும்புவரின் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன எனத் தெரிகிறது. பாவங்கள் என்பது பிறப்பு வழி பாவங்களையும், செயல்வழி பாவங்களையும் குறிக்கும்.

திருமுழுக்கினால் கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருக்கும் நாம் அவருடைய சாவிலும் இணைந்திருக்கிறோம்... இறந்த கிறிஸ்துவை மாட்சிமைக்கு தந்தை உயிர்த்தெழச் செய்தார். அவ்வாறு நாமும் திருமுழுக்கினால் புதுவாழ்வு பெற்றுள்ளோம். கிறிஸ்துவோடு நாம் இறந்தோமாயின், அவரோடு வாழ்வோம் என்பதே நமது நம்பிக்கை என்று புனித பவுல் கூறுகிறார் (உரோ 6:3-10 காண்க).

திருமுழுக்குப் பெற்றவர்கள் ‘கிறிஸ்துவின் உறுப்புகள்’ (1 கொரி 6:15) ‘அவர் எழுப்பிய கட்டடம்’ (1 கொரி 3:9) என்றும், ‘ஆண்டவரோடு சேர்ந்திருப்பவர் அவருடன் உள்ளத்தால் ஒன்றித்திருக்கிறார்’ (1 கொரி 6:17)என்றும், ‘தூய ஆவி தங்கும் கோவில்’ (1 கொரி 3:16; 6:19) என்றும் பவுல் குறிப்பிட்டிருப்பது திருமுழுக்கினால் நம்மில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை -  அதாவது நாம் கிறிஸ்துவோடு ஒன்றித்திருப்பதால் அவரது மறைஉடல் ஆகிறோம். தூய ஆவியார் நம்மில் குடிக்கொண்டிருக்கிறார் - கோடிட்டுக் காட்டுகிறது.

இறைவன் நிறைவான நிலையில் இவ் வுலகைப் படைத்தார். ஆனால் மனிதனின் பாவம் படைப்பைப் பங்கப்படுத்தி விட்டது. இது பற்றி விவரிக்க விரும்பிய புனித பவுல் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “படைப்பு பயனற்ற நிலைக்கு உட்பட்டுள்ளது. தானே விரும்பியதால் அப்படி ஆகவில்லை; அதை உட்படுத்தியவரின் விருப்பத்தால் அவ்வாறு ஆயிற்று; எனினும் அது எதிர்நோக்கை இழந்த நிலையில் இல்லை” (உரோ 8:20). ஆனால் கிறிஸ்து இயேசுவில் புதிய படைப்பு ஏற்கனவே தோன்றியுள்ளது. இது முதன்முதலில் மனிதனில் நிகழ்ந்துள்ளது.அவன் பெற்ற திருமுழுக்கு வழியாக அவன் புதுப்படைப்பாக (காண் கலா 6:15; கொலோ 3:10) பிறந்துள்ளான்.

திருமுழுக்கு வழியாக ஒருவர் திருஅவையின் உறுப்பினர் ஆகின்றார். இதுபற்றி திருத்தூதர் பணியில் கூறப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது. “அவருடைய வார்த்தைகளை ஏற்றுக்கொண்டவர்கள் திருமுழுக்குப் பெற்றார்கள். அன்று ஏறக்குறைய மூவாயிரம் பேர் அவர்களோடு சேர்க்கப்பட்டார்கள்”  (2:41). இங்கு “அவர்களோடு”  என்பது திருஅவையைக் குறிக்கும்.

இதன் விளைவாக திருமுழுக்குப் பெற்றவர் மற்ற நம்பிக்கையாளர்களுடன் ஒன்றிக்கிறார்கள். இது பற்றி புனித பவுல் இவ்வாறு கூறுகிறார். “கிறிஸ்து இயேசுவின் மீது கொண்டுள்ள நம்பிக்கையால் நீங்கள் அனைவரும் கடவுளின் மக்களாய் இருக்கிறீர்கள். அவ்வாறெனில், கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்படி திருமுழுக்குப் பெற்ற நீங்கள் அனைவரும் கிறிஸ்துவை அணிந்துக் கொண்டீர்கள். இனி உங்களிடம் யூதர் என்றும், கிரேக்கர் என்றும், அடிமை என்றும், உரிமைக் குடிமக்கள் என்றும் இல்லை; கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள நீங்கள் யாவரும் ஒன்றாய் இருக்கிறீர்கள்”  (கலா 3:26-28).

முடிவுரை :

ஒருவர் மனந்திரும்பி திருமுழுக்குப் பெறுவதினால் அவரில் ஏற்படும் மாற்றங்கள் பற்றியும், அவர் அடைந்துள்ள புதிய நிலையின் மாண்பினை எடுத்துரைத்தோம். இவற்றை வாழ்வியலாக மாற்றி வாழ்வது ஒவ்வொரு நம்பிக்கையாளரின் கடமையாகும்.

இதுவரை திருமுழுக்குப் பற்றிய பொதுப் படிப்பினைப் பற்றிய விளக்கம் கண்டோம்; திருமுழுக்குப் பெற அடிப்படையான தேவைகள் பற்றியும் பட்டியலிட்டோம். இனிவரும் சிந்தனைகளில் இவையனைத்தும் எவ்வாறு குழந்தைகளின் திருமுழுக்கிலும், முதியோருக்கான திருமுழுக்கிலும்  சித்திப்  பெறுகின்றது என்றும், அங்கு நாம் சந்திக்கும் சவால்கள் யாவை, அவற்றை எவ்வாறு மேற்கொள்வது எனக் காண்போம்.
                                                                                                                                                   (தொடரும்...)

Monday 30 April 2018

இந்தியாவில் லத்தீன் வழிபாட்டு திருச்சபை ஒரு கணக்கெடுப்பு

இந்தியாவில் லத்தீன் வழிபாட்டு திருச்சபை ஒரு கணக்கெடுப்பு

1. மறைமாவட்டங்கள் -132
2. பேராயர்கள்            - 23
3. ஆயர்கள்       - 105
4. உரோமையில் நியமிக்கப்பட்ட
மறைமாவட்ட நிர்வாகிகள் - 3
5. வாரிசு ஆயர் -1
6. துணை ஆயர்கள் - 7
7. ஓய்வு பெற்ற ஆயர்கள் - 40
8. இந்தியாவின் மக்கள்தொகை - 1, 12, 37,08,047
9. இலத்தீன் வழிபாட்டு கிறிஸ்தவர்கள் - 1,54,59,825
10. மொத்த பங்குகள் -8715
11. நற்செய்தி மையங்கள் - 1926
12. மொத்த அருள்பணியாளர்கள் - 20,221
13. மறைமாவட்ட அருள்பணியாளர்கள் - 10,295
14. துறவற அருள்பணியாளர்கள்    - 9926
15. ஆண்கள் துறவறத்தார் - 22,458
16. பெண்கள் துறவறத்தார் - 62,724
17. கல்வி நிறுவனங்கள் - 20,354
              தகவல் - CCBI News

புதிய ஏற்பாட்டில் காணப்படும் அமைதியின் பரிமானங்கள்

புதிய ஏற்பாட்டில் காணப்படும் அமைதியின் பரிமானங்கள்

அருள்பணி. ச.இ. அருள்சாமி


‘ஆண்டவருடைய அமைதி உங்களோடு இருப்பதாக.’
  ‘ஒருவருக்கொருவர் அமைதியை பகிர்ந்துக் கொள்வோம்’
 என்று புதிய திருப்பலி புத்தகத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. சமாதானம் என்ற வார்த்தை அமைதி என்று மாற்றப்பட்டிருக்கிறது. அண்மையில் ஒரு சிரிப்பு துணுக்கினை பத்திரிக்கையில் பார்த்தேன். ஓர் ஓட்டலில் இவ்வாறு எழுதியிருந்தது. 

‘அமைதி தேடுவோர் இங்கே வாருங்கள் அமைதி கிடைக்கும். ஏனென்றால் நாங்கள் கொடுக்கும் மட்டன் பிரியாணியில் நிறைய பீஸ் கள் உள்ளன.’ 

அமைதி என்பதற்கு எபிரேய வார்த்தை ‘­லோம்’ என்பதாகும். கிரேக்க மொழியில் ‘ஐரேனே’ என்பதாகும். ‘ஐரேனே’ என்ற வார்த்தை புதிய ஏற்பாட்டில்  92 முறை பயன்படத்தப்பட்டுள்ளது. ஐரின் என்ற பெயரை சில பெண்களுக்கு வைத்திருக்கிறார்கள். இது ‘ஐயரேனே’ என்ற வார்த்தையிலிருந்து உருவானது தான்.
 மாற் 5:34 இல், இரத்தப் போக்குள்ள பெண், இயேசுவின் ஆடையைத் தொட்டு குணம் பெற்ற வேளையில், இயேசு, யார் என் ஆடையைத் தொட்டது? என்று கேட்க, அப்பெண் இயேசுவின் காலில் விழுந்து நடந்ததை சொல்ல, இயேசு, ‘மகளே, உனது நம்பிக்கை உன்னை குணமாக்கிற்று, அமைதியுடன் போ’ என்கிறார். ‘அமைதியுடன் செல்லுங்கள்’ என்பது  யூத வழிபாட்டில் இறுதியாக சொல்லப்படும் வார்த்தைகளாகும். இன்றும் இஸ்ரயேல் நாட்டில் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது, நாம் ‘வணக்கம்’ என்று சொல்வது போல ‘­லோம்’ என்றுதான் வாழ்த்துகிறார்கள். ‘­லோம்’ என்றால், எல்லா நலமும் பெறுக என்பதுதான் பொருள். இயேசு கூறும் அமைதி, அவர் கொண்டு வந்த இறையாட்சியின் வாழ்வின் நிறைவு.  நலம் பெற்றவர்களைப் பார்த்து, அமைதியுடன் போ என்றால், இறையரசின் புதுவாழ்வு அவர்களில் வந்து தங்கி விட்டது என்பது பொருள். இரத்த போக்குள்ளவள், தீட்டுப்பட்டவள் என்று கருத்தப்பட்டவரை, தன்னைத் தொட அனுமதித்து, சமுதாயத்தில் ஒன்றாக வாழ ஏற்பாடு செய்கிறார்.

இயேசு சீடர்களுக்கு காட்சி தந்த போது, ‘உங்களுக்கு அமைதி உரித்தாகுக’ என்றுதான் வாழ்த்துகிறார் (யோவா 20:19-21). யோவான் 14:27 இல் இயேசு, ‘என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல’ என்று சீடர்களுக்கு வாக்களிக்கிறார். இறையாட்சியின் நிறைவு மகிழ்வு ஆகியவைகளை இயேசு தன் சீடர்களுக்குக் காட்சியளித்தபோது தருகிறார்.

இதே அமைதியை, இயேசுவின் சீடர்கள் மக்களுக்கு அளிக்க வேண்டும். எனவேதான், சீடர்கள், வீடுகளை சந்திக்கும் போது, ‘இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக’ என்று வாழ்த்த வேண்டும் (லூக் 10:5).
தானி 10:19; தோபி 12:17; ஆகிய குறிப்புகளில், வானதூதர் மக்களை சந்தித்தபோது, ‘உங்களுக்கு அமைதி பெருகட்டும்’ என்று வாழ்த்துகிறார்கள். சீடர்கள் வானத்தூதரைப் போல மக்களைச் சந்தித்து இறையாட்சியின் பிரசன்னத்தை வழங்க வேண்டும் என்றுதான் இயேசு சீடர்களுக்குக் கட்டளை தந்தார். சீடர்கள் தரும் அமைதியை ஏற்றுகொள்பவர்கள், அமைதியின் பிள்ளைகளாகின்றனர். சீடர்களை ஏற்றுக் கொள்ளாதவர்கள், இறையாட்சியிலிருந்து தங்களை ஒதுக்கிக் கொள்கிறார்கள்.

மத் 10:34 இல் ஒரு வில்லங்கமான வாக்கியம் வருகிறது. ‘நான் உலகிற்கு அமைதி கொணர வந்தேன் என எண்ண வேண்டாம். அமைதியை அல்ல வாளையே கொணர வந்தேன்’ என்கிறார் இயேசு. ஆனால் மத் 26:52 இல் இயேசு, ‘வாளை எடுக்க வேண்டாம், வாளை எடுப்போர் அனைவரும் வாளால் அழிந்து போவர்’ என்கிறார். அத்தோடு சீடர்களுக்கு எதிர்ப்புகளும், ஏன் உடன்பிறப்புகளே அவர்களுக்கு எதிராக எழுவார்கள் என்று எச்சரிக்கிறார்
 (மத் 10:21-22). எனவே வன்முறை இயேசுகாட்டிய வழியல்ல என்பது தெளிவாகிறது.

இயேசு தன் மலைப் பொழிவில் ‘அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்’ என்கிறார் (மத் 5:9). ‘உரோமையின் அமைதி’ என்று உரோமையரின்  ஆட்சியின் உயர்வை பேசுவார்கள். அதன் எதிர்நிலையில்தான் இயேசு பிறந்தபோது வானவர், ‘உலகில் அவருக்கு உகந்தோர்க்கு அமைதி உண்டாகுக என்று பாடுகிறார்கள் (லூக் 2:14). அதாவது இறைவனின் கருணை எளிமையாகப் பிறந்திருக்கும் குழந்தையில் வெளிப்படுகிறது. உரோமையர் பேசிய அதிகாரத்தால் வந்த அமைதிக்கு எதிர்நிலையில் தான் இயேசு வல்லமையைக் காண்கிறார். அதனால்தான் ‘இப்போது உம் அடியான் என்னை அமைதியுடன் போகச் செய்கிறீர்’ என்கிறார் சிமியோன் (லூக் 2:29). இயேசு எருசலேமில் நுழைந்தபோது, மக்கள் ‘விண்ணகத்தில் அமைதியும் மாட்சியும் உண்டாகுக’ என்று வாழ்த்துகிறார்கள் (லூக்19:38). இயேசு பிறந்தபோது வானவர் பாடிய வார்த்தைகள் மக்களின் வார்த்தைகளாக இங்கு வெளிபடுகின்றன.

பவுல் அடிகளார், ‘கடவுளே அமைதியை அருளுகின்றார். அதே இறைவன் நம்பிக்கையாளர்களை தூய்மையாக்குகிறார். குற்றமின்றி காப்பாற்றுகின்றார்’ என்று விளக்குகிறார் (1 தெச 5:23).

ஆவிக்குரிய மனநிலை பெற்றவர்கள் பெறுவது வாழ்வும் அமைதியும் என்றுப் பவுலடிகளார் மேலும் விளக்குகிறார். (உரோ 8:6) ஆவியானவர் தரும் கனிகளில் ஒன்று அமைதியாக விளங்குகிறது (கலா 5:22; உரோ 14:17).

இறைவன் தரும் அந்த அமைதி, சீடர்களின் உறவில் வெளிப்பட வேண்டும் என்று கூறுகிறார்.  (உரோ 14:19;  1தெச 5:13;  2 கொரி 13:11) 

இறைவன் தரும்  அந்த அமைதி, சீடர்களை காவல் காக்கும் காவலரைப் போல் அமைந்திருக்கிறது என்றும் பவுலடிகளார் விளக்குகிறார் (பிலி 4:7).

எனவே பவுல் தன் கடிதங்களின் துவக்கத்திலும் இறுதியிலும் இறைவன் தரும் அமைதியை வாழ்த்தாகத் தெரிவிக்கிறார் (உரோ1:7; 1 கொரி 1:3;   2 கொரி 1:2; கலா 1:3; பிலி 1:2;  1தெச 1:1;  1தெச 5:23; பிலி 4:9; உரோ15:23)

புதிய ஏற்பாட்டில், இயேசு தன் சீடர்களுக்கு அளித்த அமைதி, சீடர்கள் மக்களுக்கு எடுத்துச் சென்ற அமைதி, சீடர்களின் வாழ்வில் ஒற்றுமை வழியாக வாழப்பட்ட அமைதி, சீடர்களை குறைகளிலிருந்து காப்பாற்றிய அமைதி என்று விளக்கப்படுகிறது. இவ்வாறு கடவுளின் அரசில் இடம் பெற கடவுளிடமிருந்து புறப்பட்டு வரும் அமைதி என்ற கொடை நம்மிடம் இடம் பெற்று வாழ்வைத் தருகிறது.

அன்னைக் காட்டும் வழி

அன்னைக் காட்டும் வழி

அருட்பணி. ச.இ. அருள்சாமி

மே மாதம் அன்னை மரியாவை சிறப்பாக நினைவு கூறுகின்ற மாதமாக அமைந்திருக்கிறது. பங்குகளில் மே மாதத்தில் சிறப்பான மாதா வணக்க வழிபாடுகள் உண்டு. குடந்தை மறைமாவட்டத்தில் இறையடியார்  லூர்து சேவியர் வளர்த்து தந்த அன்னை மரியாவின் வணக்கம், பூண்டி திருத்தலத்தில் தினமும் எதிரொலித்து வருகிறது. 
அன்னை மரியா திருஅவையின் முன் அடையாளமாகவும் திரு அவையின் முதல் அங்கத்தினராகவும் திருஅவையின் தாயாகவும் விளங்குகிறார்கள். 13ஆம்  நூற்றாண்டைச் சேர்ந்த புனித பெர்நாத்து அவர்கள் கூறுவார். விவிலியத்தில் திருஅவையைப் பற்றி கூறுவதெல்லாம் அன்னை மரியாவுக்கும் பொருந்தும் என்கிறார். திருஅவையும் அன்னை மரியாவும் தாயானவர்கள். ஏனென்றால் இருவரும் இறைவனுக்கு முழுமையாக அர்ப்பணமானவர்கள். இருவரும் தந்தையாகிய இறைவனுக்கு பிள்ளைகளைப் பெற்றுத்தருபவர்கள். அன்னை மரியா திருஅவையின் தலையான இயேசுவை பெற்றுத்தந்தவர்கள். அதேபோன்று திருஅவை திருஅவையின் உடலை பெற்று தருகிறது. 

திருவெளிபாடு 12 ஆம் இயலில் அரக்கபாம்பிற்கும் கருவுற்றிருந்த பெண்ணிற்கும் நடக்கும் போராட்டத்தைப் பார்க்கிறோம். அரக்கபாம்பு அப்பெண் தன் குழந்தையை பிறப்பிக்கும்போது அதனை விழுங்கிவிட காத்திருந்தது. (திவெ12.4). ஆனால் குழந்தை பிறந்ததும் குழந்தை கடவுளின் அரியணைக்குப் பறித்து செல்லப் பெற்றது. பெண் பாலைவனத்திற்கு ஓடி போனார். 260 நாள் அங்கு தங்கியிருந்தார். அங்கு கடவுள் அவரை பேணி பாதுகாத்தார் என்றும் பிறகு கடவுளின் தூதர் மிக்கேலுக்கும் அரக்கப் பாம்பின் துVதர்களுக்குமிடையே போர் உண்டானது. அதில் அரக்க பாம்பு தோல்விக் கண்டது (திவெ 12.4-8)

தமிழ்நாடு சென்ற மாதத்தில் போராட்டக் களமாகவே மாறிவிட்டது. உச்ச நீதிமன்றம் கட்டளையிட்ட‘ காவேரி மேலாண்மை வாரியத்தை’ மத்திய அரசு அமைக்காததை எதிர்த்து ஆளும் கட்சியும் எல்லா எதிர்கட்சிகளும் இணைந்து இரயில் மறியல் போராட்டம், அரசு அலுவலங்களில் முற்றுகையிடுதல் உண்ணா விரதப் போராட்டம் போன்ற போராட்டங்களை நடத்துகிறார்கள். இதனால் தமிழ்நாட்டிற்கு காவேரி நீர் உரிமையைத் தர வேண்டும் என்று உரத்தக் குரலெழுப்பி வருகிறார்கள். திருஅவையும் பல இடங்களில் இப்போராட்டத்தில் பங்குபெற்றிருக்கிறது.  கேட்டால்தான் கிடைக்கும். குரல் கொடுக்கவில்லையயன்றால் உள்ளதையும் கொத்திக் கொண்டு சென்றுவிடுவார்கள்.

தூத்துக்குடியில் தாமிரம் தயாரிக்கும் ஸ்ரலைட் ஆலை அப்பகுதி மக்களின் உடல்நலத்தை அழிக்கிறது என்று அந்த ஆலையை மூட  வேண்டும் என்ற  போராட்டம்.

தேனியில் அமைக்க போகின்ற நியூட்ரோன் ஆய்வுக்கூடமும் இயற்கையை அழித்துவிடும் என்று அதற்கு எதிர்ப்பான போராட்டம்.

காஷ்மீரில் பழங்குடி சிறுமி ஆசிஃபா கோவிலில் பல நபர்களால் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார். இதில் மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க வைச் சேர்ந்தவர்கள் கைதானவர்களுக்கு ஆதரவாக ஊர்வலம் சென்றிருக்கிறார்கள். உத்தரபிரதேசம் மற்ற பல இடங்களில் இளம் சிறுமிகளை பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கியிருக்கிறார்கள். மோகமென்ற உணர்வு மிருக நிலையை அடைந்தது போல நிகழ்வுகள் நடந்துக் கொண்டிருக்கின்றன. உணர்வுகளை ஒழுக்கத்துடன் பயன்படுத்துவதுதான் நாகரீகம்.

கர்நாடகாவில் தேர்தல் நடக்கப் போகிற இவ்வேளையில் மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க. அரசு, காவிரி நீர் பங்கீட்டு நீதியை செயல்படுத்தாமல் நாடகமாடி வருகிறது. காவிரியில் தண்ணீர் வரவில்லையயனில் தமிழ்நாடு பாலை வனமாகத் தான் மாறிவிடும். தமிழக மக்கள் ஒன்றிணைந்து உரிமையைப் பெற வேண்டும்.

அண்மையில் வாட்ஸ்அப்பில் குறிப்பிட்டி ருந்தார்கள். வருகிற மே 1 ஆம் தேதி கிராம சபைக் கூட்டங்கள் ஒவ்வொரு கிராமத்திலும் நடக்கும். அப்போது அந்தந்த கிராமத்திற்கு கொடுக்கப்படும் திட்டங்கள் என்ன? உதவிகள் என்ன? என்று அறிவிப்பார்கள். கிராமத்திலிருந்து ஒரு நூறு பேராவது அதில் கலந்துக் கொண்டால் கிராமத்திற்கு அளிக்கப்படும் முன்னேற்றத் திட்டங்களை அறிந்துக் கொண்டு உரிமைகளைப் பெறலாம் என்றார்கள். மக்கள்  இதை போன்ற ஆக்கபூர்வமான நிகழ்வுகளில் பங்குபெற வேண்டும். மற்றொரு ஊக்கமளிக்கும் செய்தி. அரியலூர் மாவட்டம் விளாங்குடியில் ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு. தியாக ராஜன் அவர்கள்(69) அமெரிக்காவில் பணிபுரியும் தன் மகளின் உதவி கொண்டு சென்ற இரண்டு ஆண்டுகளாக இரண்டு ஏரிகளை 10 லட்ச ரூபாய் செலவு செய்து தூர் வாரியிருக்கிறார். இதனால் அவ்வூர் மக்கள் பெரிதும் பயனடைந்துள்ளனர். இவரைப் போன்று மக்கள் ஒன்றித்து பொதுப் பணிகளைச் செய்யலாம்.  ஊழல் நிறைந்த நம் நாட்டில் இத்தகைய ஒளிவிளக்குகள் நாட்டிற்கு உயிரைத் தருகின்றன. அன்னை மரியாவின் பணிவு, பிறரன்பு நம்மில் ஒளிமயமாகட்டும். 

Monday 16 April 2018

மாநில மத்திய அரசுசுகள், சிறுபான்மையி னருக்குசெயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள்

மாநில மத்திய அரசுசுகள்,  
சிறுபான்மையி னருக்குசெயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள்

(மாநில மத்திய அரசுகள், சிறுபான்மையினருக்கு நிறைய உதவிகள் செய்கின்றன.  அவைகளை பெற்று வளர்வோம்).

1. ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்ள அரசு நிதி உதவி:

 தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிறித்துவ பிரிவினரும் புனிதப் பயணமாக ஜெருசலேம் செல்வதற்கு நிதியுதவி வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டிலும் 500 கிறித்தவர்கள் புனித பயணம் செய்யலாம். இதற்கென அரசின்  நிதி உதவியாக நபர் ஒருவருக்கு ரூ 20,000/‡  வீதம் வழங்கப்படுகிறது.

* இப்புனித பயணம் பெத்லேகம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டன் நதி, கலிலேயா கடல்  மற்றும் கிறித்தவ மத தொடர்புடைய பிற புனித தலங்களையும் உள்ளடக்கியது.

* விண்ணப்பதாரர்/குடும்பத்தினர் தமிழ்நாட்டில் வசிக்கும் கிறித்தவ மதத்தவராக இருத்தல் வேண்டும். 

* அறிவிப்பு தேதியில் குறைந்த பட்சம் ஓராண்டு செல்லதக்க பாஸ்போர்ட் உடையவராக இருத்தல் வேண்டும்.

* விண்ணப்பிக்கும் போது வெளிநாடு பயணம் மேற்கொள்வதற்கு எவ்விதமான வில்லங்கங்களும் இருத்தல் கூடாது.

* வெளிநாடுகளில் புனித பயணம் மேற்கொள்வதற்கு மருத்துவ மற்றும் உடற்தகுதி பெற்றவராக இருத்தல் வேண்டும்.

* இப்பயணம் மேற்கொள்வதற்காக ஏற்படும் செலவினத்தில் அரசு வழங்கும் நிதி உதவி ரூ 20000/‡ நீங்கலாக மீதமுள்ள தொகையை செலுத்த ஒப்புதல் அளிக்க வேண்டும்.

* ஏற்கனவே இத்திட்டத்தின் கீழ் ஜெருசலேம் புனிதப்பயணம் மேற்கொண்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கக் கூடாது.

* ஒரு குடும்பத்தில் விண்ணப்பதாரரையும் சேர்த்து அதிகபட்சம் 4 நபர்கள் பயணம் மேற்கொள்ளலாம். இதில் 2 வயது நிறைவடைந்த 2 குழந்தைகளும் இருக்கலாம். இப்பயணத்தில் 70 வயது நிறைவடைந்துள்ள விண்ணப்பதாரர்களுக்கு முன்னு ரிமை அளிப்பதுடன் அவருக்கு துணையாக அவர் விரும்பும் ஒரு நபரை  மேற்படி நிபந்தனைகளுக்குட்படும் பட்சத்தில் அவருடன் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.

பயனாளிகள் மாவட்ட வாரியாக கிறித்தவ மக்கட்தொகையின் அடிப்படையில் கணினி மூலம் குலுக்கல் (ஸிலிமி றீதீவிமிeது)  முறையில் கூர்ந்தாய்வு குழுவினரால் தெரிவு செய்யப்படுவர். தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் அரசால் தேர்ந்தெடுக்கப்பட்ட பயண முகவர்கள் மூலம் மட்டுமே இப்புனித பயணம் மேற்கொள்ள வேண்டும்.

* தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தகவல் மற்றும் புனிதப்பயணம் நிரல் குறித்து விவரம் தெரிவிக் கப்படும்.
பயணத்திற்கு பிறகுதான் நிதி வழங்கப்படும்.

2. கிறித்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்ள அரசுநிதி உதவி    
வழங்குதல்:

தமிழகத்தில் உள்ள கிறித்துவ தேவாலயங்கள் புனரமைத்தல் மற்றும் பழுது நீக்குதல் பணிகள் மேற்கொள்வதற்காக நிதியுதவி அளிக்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
யஇத்திட்டத்தில் தேவாலயம் பதிவு செய்யப்பட்டு சொந்தக்கட்டடத்தில் குறைந்த பட்சம் 10 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் இருக்க வேண்டும்.     

* தேவலாயங்களின் ஏற்பட்டுள்ள பழுதுகள் மற்றும் தேவாலய கட்டடத்தின் வயது ஆகியவற்றை கருத்திற்கொண்டு கீழ்காணுமாறு நிதி உதவிகள் வழங்கப் படும்.

* தேவலாய கட்டடத்தின் வயதிற்கேற்ப 10 - 15 வருடம் வரை ரூ 1 இலட்சமும், 15 ‡ 20 வருடம் வரை ரூ 2 இலட்சமும்,20 வருடத்திற்கு மேல் ரூ 3 இலட்சமும் நிதி உதவி வழங்கப்படும்.

* தேவலாயம் சீரமைப்பு பணிக்காக வெளி நாட்டிலிருந்து எவ்வித நிதி உதவியும் பெற்றிருத்தல் கூடாது.

* தேவலாய கட்டடத்தின் பழுதுகளை மாவட்ட ஆட்சித்தலைவரால் அமைக்கப்பட்ட குழுவினரால் நேரடியாக பார்வையிட்டும், கட்டடத்தின் உறுதித்தன் மையினை ஆய்வு செய்து உரிய அதிகாரிகளால் சான்று அளித்தும்,  அங்கீகரிக்கப்பட்ட  கட்டிட வரைபடம், பழுதுகள் தொடர்பான திட்ட மதிப்பீடு மற்றும் கட்டடத்தின் வயது ஆகியவற்றின் அடிப்படையில் நிதி உதவி வழங்கப்படும். 

மத்திய அரசின் நலத்திட்டங்கள்

 1. கல்வி உதவித்தொகை திட்டங்கள் (Scholarships)

அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களிலும் ஒன்றாம் வகுப்பு முதல் தொழிற்கல்வி/ ஆராய்ச்சி படிப்பு வரை பயிலும் கிறித்துவர், இஸ்லாமியர், சீக்கியர், புத்தமதத்தினர், பார்சி மற்றும் சமண மதங்களைச் சார்ந்த சிறுபான்மையின மாணவ/ மாணவியர்களுக்கு மத்திய அரசின் கீழ்க்கண்ட கல்வி உதவித்தொகை திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

பள்ளிப்படிப்பு  பள்ளிமேற்படிப்பு  மற்றும் அடிப்படை தகுதி 
வகுப்பு   1 முதல் 10 வரை   (1 ஆம் வகுப்பு நீங்கலாக)  ஆண்டு  வருமானம் ரூ 1 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் 
                    
11 ம் வகுப்பு முதல்  ஆண்டு  வருமானம் ரூ 2 இலட்சத்திற்கு  மிகாமல் இருக்க வேண்டும். ஆராய்ச்சி தொழிற்கல்வி: ஆண்டு  வருமானம் ரூ 2.5 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் . 

எல்லா நிலையிலும் மதிப்பெண் 50 சதவீதம்  இருக்க வேண்டும்                      
நிபந்தனை:  ஒரு குடும்பத்தை சார்ந்த இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இத்துறையால் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை பெறுபவர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை/ ஆதி திராவிடர் நலத்துறை/ பிறத்துறைகள்/ நல வாரியங்கள் ஆகியவற்றில் எவ்வித கல்வி உதவித்தொகையும் பெறக் கூடாது. கல்வி உதவித் தொகை: கல்விக் கட்டணம் மற்றும் பராமரிப்புக் கட்டணம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: இக்கல்வி உதவித்தொகைப் பெறுவதற்கு ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், மதம்/சாதிச்சான்றிதழ், ஆதார் அட்டை எண், வங்கி கணக்கு எண், IFSC code (ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டது)  ஆகிய விவரங்களை உள்ளீடு செய்து www.Scholarship.gov.in   என்ற இணையதள முகவரியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மேலும் ரூ.50,000 க்கு மிகாமல் கல்வி உதவித்தொகை பெறுபவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த படிவத்தை படியிறக்கம் செய்து உரிய ஆவணங்களுடன் பயிலும் பள்ளி/ கல்லூரியில் தவறாது சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

2. பேகம் ஹஜ்ரத் மகால் தேசிய கல்வி உதவித் தொகை: (Begam Hajrat Mahal National Scholarship Scheme)

 சிறுபான்மையின மாணவிகள் அதிக மதிப்பெண் பெற்று பொருளாதார வசதியின்மையால் கல்வியை தொடர முடியாத நிலையை கலையும் வகையில் உதவி தொகை வழங்கும் திட்டமாகும்.

தகுதி: 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவியர்கள் முந்தைய வகுப்புகளில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். 

ஆண்டுவருமாணம்: குடும்ப ஆண்டு வருமானம் ரூ 2 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். 

உதவித் தொகை: 9 ஆம் வகுப்பு (ம) 10ஆம் வகுப்பு மாணவியர்களுக்கு ஆண்டுக்கு ரூ 5000/- வீதமும், 11 (ம), 12 ஆம் வகுப்பு மாணவியர்களுக்கு ஆண்டுக்கு 6000/- வீதமும், இரண்டு ஆண்டுகளுக்கு  வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு https://scholarship - maef.org என்ற இணையதளத்திலும் அறியலாம்.

3. மெளலான ஆசாத் கல்வி அறக்கட்டளை மூலம் கல்வி நிறுவனங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல். (Maulana Azad Education Foundation)

மத்திய அரசின் நிறுவனமான மெளலான ஆசாத் கல்வி அறக்கட்டளை மூலம் கல்வியில் பின்தங்கிய சிறுபான்மையினர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் உள்ள பள்ளிகள், ஐடிஐ, பாலிடெனிக்/ ஆசிரியர் பயிற்சி நிலையங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்வதற்கு நிதிஉதவி வழங்குகிறது, அனைத்து கட்டுமானங்கள் (ம) விரிவாக்கப் பணிகள், விடுதி கட்டணங்கள் ஆகியவற்றில் கட்டுமானத்தில் தன்மைக்கேற்ப அதிகபட்சம் ரூ.50 இலட்சம் நிதி வழங்கப்படும். திட்டத்திற்கு மே மாதம் முதல் செப்டம்பர் 30ந் தேதிக்குள் www.maef.nic.in ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

4. சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் (IDMI)
கல்வியில் பின் தங்கிய சிறுபான்மை மாணவியரின் கல்வி தரத்தை மேம்படுத்தும் வண்ணம்  மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி இத்திட்டம் செயல்படுத்தப் படுகிறது. உட்கட்டமைப்பு வசதிகளான வகுப்பறை, அறிவியல் கூடம், கணினி அறை, நூலகம், கழிப்பறை, குடிநீர் வசதிகள், விடுதிகள் மற்றும்  இதர அத்தியாவசிய தேவைகளை மேம்படுத்தும் திட்ட மதிப்பீட்டு தொகையில் 75 சதவீதம் மட்டும் (அல்லது) அதிகபட்சம் ரூ.50 இலட்சம் இதில் எது குறைந்ததோ அத்தொகை கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும்.

உதவிப்பெறுவதற்கான தகுதிகள்: அரசு உதவி பெறும் / உதவி பெறாத சிறுபான்மையினரின் பள்ளிகள் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் இயங்கி மாணவர்கள் சேர்க்கை தொடர்ந்து நடைபெற்றிருக்க  வேண்டும்.
விபரங்களுக்கு  www.mhrd.gov.in ல் தெரிந்துக் கொள்ளலாம்.

5. பல்நோக்கு வளர்ச்சி திட்டம் மூலம் அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்துத்தல்  (Multi Sectoral Development Programme)
பின்தங்கிய சிறுபான்மையின சமூகத்தினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் குடிநீர் வசதி, சாலை வசதிகள், கழிவறை வசதி, கான்கீரிட் வீடுகள் அமைத்தல், மின்சார வசதி ஏற்படுத்துதல் போன்ற அடிப்படை வசதிகள், திறன் வளர்ப்பு பயிற்சிகள் பின்தங்கிய சிறுபான்மையினர் வசிக்கும் பகுதிகளில் மேம்படுத்தப்படும்.
தகுதிகள்: இத்திட்டம் மக்கட்தொகை கணக்கெடுப்பின் (2011) படி அந்தந்த மாவட்டங்களில் சிறுபான்மையினர் மொத்த மக்கள் தொகையில் நகர்ப்புறங்களில் 25 சதவீதத்திற்கு குறையாமலும், கிராமப்புறங்களில் 50 சதவீதத்திற்கு குறையாமலும் இருத்தல் வேண்டும்.

இத்திட்டங்களை மாவட்ட ஆட்சித்தலைவரின் தலைமையிலான குழுவின் கருத்துக்களை மாநில அரசு பரிசீலித்து மைய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.

விவிலிய விடுகதை, 2 கொரிந்தியர் 1 முதல் 13 முடிய

விவிலிய விடுகதை

- அருட்சகோ. பெரேரா, FIHM, சேலம்

2 கொரிந்தியர் 1 முதல் 13 முடிய

அண்ட புளுகு திருத்தூதர்களும் உண்டு
    ஆகாசப் புளுகு திருத்தூதர்களும் உண்டு
    வஞ்சக வேலையாள்கள்
  கிறிஸ்துவின் தூதர்களாக நடிப்பவர்கள்
  இவர்களை எப்படி அழைக்கலாம்?

2. தீயவை சொல்பவன்
  தீமைக்குத் தலைவன்
  நடிப்பிலே கில்லாடி
பொய்யுக்கு அப்பன்
பாம்பாய் வந்து கெடுத்தவன்
பாரெங்கும் சுற்றுபவன்
இவன் யார்?

3. அந்தப்படைக்கலத்தை தங்கள்
    இடக்கையிலும், வலக்கையிலும்
  எவற்றால் தாங்கியுள்ளனர்.

4. அன்று முக்காடிட்டு முகத்தை மறைத்தார்
    இரண்டெழுத்துக்காரர்.
    இன்று முக்காடின்றி முகத்தினராய் பிரதிப்பலிப்போம்
  எனக் கூறியவர் இவர் யார்? அவர் யார்?
அது என்ன?

 5. நாங்கள் வீதியில் கிடந்தோம்
    எங்களை எடுத்தவர்கள் அவர்கள்
    தட்டினர், மிதித்தனர், அடித்தனர்,
  சுற்றினர், கழற்றினர், உருட்டினர்
  அசைந்துக் கொடுத்தேன்.
நாங்கள் யார்? இயக்கியவர் யார்?

6. கையில் அணியா பூ
      இதயத்தில் இருக்கும் பூ
    மனதை இறுக்கும் பூ
    அது என்னப் பூ

7. சூப்பரா சொல்றேன்க
    சூதும் வாதும் தெரியாதுங்க
    சிறைப்பட்டேன், அடிப்பட்டேன்
  கல்லெறிப் பட்டேன்.
ஆழ்கடலில் அல்லலுற்றேன்
பட்டினிக் கிடந்தேன், குளிரினில் வாடினேன்
  நான் யார்?

 8. மிகுதியாய் சேகரித்தவருக்கு
      எதுவும் மிஞ்சவில்லை
      குறைவாகச் சேகரித்தவருக்கும்
      எதுவும் குறைவுபடவில்லை
      என்று எங்கே எழுதியுள்ளது?

 9. கொடுக்கிற தெய்வம்
    கூரையப் பிச்சிக்கிட்டு கொட்டுமாம் அதுபோல
    வாரி வாரி வறியவர்க்கு வழங்குவது
  பெற்ற பெருவாழ்வை மற்றவர்களோடு பகிர்வதின்
  கிடைத்த வெகுமதி இரண்டெழுத்தில்
  நிலைத்திருக்கும் அது என்ன?

10. நெறிக் கேட்டோடு உறவு   NO NO NO
      இருளோடு இருப்பவரோடு NO NO NO
      சாத்தானோடு உடன்பாடு  NO NO NO
    நம்பிக்கையற்றோருடன்   NO NO NO
    பின்னர் நாம் யார்?

11. விடுவித்தார் இதிலிருந்து - எதில்?
    இனிமேலும் விடுவிப்பார்- எவற்றால் ?

12. கூடையில் குந்திய கோமகன்
      கோபுர மேல் மாட வழியே
    தப்பிய பேரறிவாளர் யார்?

13. எழுதப்பட்ட அதனால் விளைவது இரண்டெழுத்து
      அவரால் விளைவது இது மூன்றெழுத்து
      எப்படி?

14. திருத்தூதர்க்குரிய அறிகுறிகள் இவைகளே?
      மஉ, அஅ, அசெ, வசெ
      இவைகளை தன்னகத்தே கொண்ட தூதர் யார்?

15. பாசத்துக்கு உரிய தம்பி
  நேசத்துக்கு உரிய தம்பி
    அன்பின் தங்கக் கம்பி
    அவருக்கு உகந்த தம்பி
      இந்த தம்பி யார்? யாருக்கு உகந்தவர்?

நிலையில்லா இந்திய பயணங்கள்

நிலையில்லா இந்திய பயணங்கள்

இந்தியாவில் பயணம் செய்வது, அமெரிக்கர்கள் நிலவிற்கு சென்று வருவதற்கு சமம் என்று சொல்லலாம். அந்த நிலவுப் பயணம் கூட திட்டமிட்டு நடைபெறுகிறது. நமது நாட்டில் செய்யும் பயணங்கள் நிச்சயமற்ற தன்மை வாய்ந்தவை. என் அனுபவங்களிலிருந்து கீழ்க்காணும் குறிப்புகளைத் தருகிறேன்.  

 இரயில் பயணம்:

திருவனந்தபுரம் இரயில் நிலையத்தில் ஒருமுறை இப்படி அறிவிப்பு எழுதியிருந்தார்கள். ஓர்  இரயில் இரண்டு மணி நேரம் தாமதமாக வரும். மற்றொரு இரயில்,  எப்போது வருமென்று கூறமுடி யாது என்று எழுதியிருந்தார்கள். நம் நாட்டு இரயில்கள் கடவுளைப் போல, இரயில் எந்த நேரத்தில் வரும் என்று யாராலும் சொல்ல முடியாது. வழக்கமாக தாமதமாக த்தான் வரும். நம் துரதிஷ்டம் நேரத்தோடு அத்திபூத்தாற் போல் வந்து விடும். பல தடங்கள் உள்ள நிலையங்களில் திடீரென்று தடம் மாற்றுவார்கள். அப்போது பயணிகள் ஆடி ஓடுவதை பார்க்க வேண்டுமே. சில நேரங்களில் இரயில் வரும் நேரத்தைப் பற்றி ஒலிப்பெருக்கியில் அறிவிக்கவே மாட்டார்கள். தேவையில்லாததற்கெல்லாம் கத்திக் கொண்டே இருப்பார்கள். எனவே ஒரு மணி நேரத்திற்கு முன்பதாகவே இரயில் நிலையம் சென்று விடுவது நல்லது. வேக வண்டிகளில், முன்பதிவு இல்லாதப் பெட்டிகளில் மக்கள்படும் அவதியைப் பார்க்க வேண்டுமே! ஒருமுறை, ஒருவர் தன் பெட்டியை இரயிலில் வைக்க இடமில்லாமல் நின்றுக்கொண்டே தன் தலையிலேயே தூக்கிக் கொண்டு பயணம் செய்வதைப் பார்த்து பதைத்துப் போனோம். பயணச் சீட்டு வாங்கியும் உட்கார இடமில்லாமல் பயணம் செய்வது வெட்கக்கேடு. இரயில்வே துறை பல சீர்திருத்தங்களை செய்திட வேண்டும். 

பயணச் சீட்டு பரிசோதகர் திடீரென்று வருவார். அல்லது இரயில் நிலையத்தில் சோதனை செய்வார்கள். இது ஆங்கிலேயர் இன்றும் இங்கிலாந்தில் பயன்படுத்தும் முறை. ஜெர்மனியில், நான்கு, ஐந்து பரிசோதகர்கள் ஒவ்வொரு நிலையத்திலிருந்தும் இரயில் புறப்படும்போது எல்லா பெட்டிகளிலும் நுழைந்து பரிசோதிப்பர். பயணச்சீட்டு வாங்க முடியாதவர்களிடம் அப்பொழுதே பயணச்சீட்டை வழங்குவர். நம் நாட்டிற்கு ஏற்ற முறைகளை கண்டுபிடிக்க வேண்டும்.  இரண்டு அல்லது மூன்று பெட்டிகளுக்கு ஒரு நடத்துனரைப் போல நியமித்து, மக்களை அமர வைக்கவும், பயணச்சீட்டுகளை பரிசோதி க்கவும் செய்யலாம்.

முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் உள்ள பரிசோதகர், பெட்டிகளில் பயணம் செய்பவர்களுக்கு பாதுகாவலர் போல செயல்படுவது கடமை என்று கருதுகிறேன். பரிசோதனை செய்துவிட்டுப் பெரும்பாலும் அவர்கள் டிரிங் சாப்பிட்டு விட்டு சாய்ந்து விடுகிறார்கள். இவ்வளவு நிலையற்ற தன்மைகள் பாம்பு ஊர்வதைப் போல இடையில் வந்தாலும் இந்தியரின் பயணம் நடந்து  கொண்டுதான் இருக்கிறது. உலக அதிசயங்களில் இதுவும் ஒன்று என்று வியக்கலாம்.

 பேருந்து:

அரசு பேருந்துகளின் கட்டமைப்பு ஓட்டை உடைசல் ஒருபக்கம். வேறுபல வகையான ஓட்டைவசதிகளும் உண்டு. பேருந்துகளில் அவை செல்லும் இடங்கள் பற்றி அறிவிப்பு பலகைகள் இருக்காது. இருந்தாலும் மாறுபட்ட இடக்குறிப்புடன் இருக்கும். எனவே குழப்பமடைந்த பயணிகள் நடத்துனரைக் கேட்டால், அவரைக் கேட்கக் கூடாத கேள்வியாக நினைத்து முகத்தைக் காட்டுவார்.

நகரங்களிலுள்ள பேருந்து நிலையங்களில், குறிப்பிட்ட பேருந்து எங்கு நிற்குமென்று தெரியாது. அதற்கு விசாரிக்க வேண்டும். தவறான தகவல்களும் தரப்படுவதுண்டு. இதனால் பேருந்து நிலையத்தில் பயணத்திற்காக நிற்கும் மக்கள்படும் மனக்குழப்  பங்களைப்  பார்க்கலாம்.

குடந்தையிலிருந்து பெங்களூருக்கு செல்ல 7 மணி வண்டிக்கு முன்பதிவு செய்திருந்தேன். வண்டிகள் எப்போது வரும் எங்கு வரும் என்ற விபரமற்ற நிலையில் 6 மணிக்கே நிலையம் சென்றேன். 6.30க்கு ஒரு பேருந்து வந்தது. 7 மணி பேருந்துதான் முன்கூட்டியே வந்துவிட்டது என்று நினைத்து நடத்துனரைக் கேட்டால்,  இது ஆறு மணி வண்டி சார். 7 மணி வண்டி பிறகு  வரும் சார் என்றார். பிறகு ஏழே காலுக்குத் தான் ஏழு மணி வண்டி வந்து ஏழரை மணிக்கு எடுத்தார்கள்.  ஜெர்மனி மற்றும் மேலை நாடுகளில் 6:23 மணிக்கு வண்டி என்றால் அந்த நொடிக்கு வண்டி அங்கு வந்து நிற்கிறது. காலதாமதம் அங்கு விதிவிலக்கு. இங்கு இதுதான் விதி.

 ஆட்டோ:

தமிழ்நாட்டில் ஆட்டோ ஓட்டுனர்களைப் பார்த்து நாம் பரிதாபப் பட வேண்டும். ஏனென்றால் அவர்களின் சூழ்நிலை அப்படி. நான், ஏன் பெரும்பாலானோர் ஆட்டோ எடுக்க விருப்பப்படுவதில்லை. முக்கியமாக ஆட்டோ ஓட்டுனர்களுடன் சண்டையிட்டு, பேரம் பேசுவதற்கு தனித்திறமையும், பயிற்சியும் வேண்டும். தமிழ்நாட்டு ஆட்டோ ஓட்டுநர்கள் பிழைக்கத் தெரியாதவர்கள் என்று சொல்வேன்.

கேரளாவில் ஆட்டோவில் மீட்டர் போட்டு, அதிலிருந்துதான் பணம் வசூலிக்கின்றனர். எனவே மக்கள் நம்பிக்கையுடனும், மகிழ்வுடனும் ஆட்டோ எடுத்து செல்கின்றனர். சாலக்குடி என்ற ஊரில்  ஆட்டோ எடுத்தேன். வழியில் ஆட்டோ ரிப்பராகிவிட்டது. அப்போது அந்த ஆட்டோ ஓட்டுநர், மற்றொரு ஆட்டோவை நிறுத்தி அதில் என்னை ஏற்றி விட்டார். அதுவரை சென்றதற்கு கட்டணம் வாங்கவில்லை. அங்கு ஆட்டோ ஓட்டுநர் களுக்கு நிற்பதற்கு நேரமில்லை. நமது ஆட்டோக் காரர்கள் யானை விலை, குதிரை விலை தான் கேட்பார்கள். மீட்டர் போட்டு விட்டால் தமிழ்நாட்டில் மழை கொட்டோ கொட்டு என்று கொட்டும்.

பெங்களூரில் கேரளாவைப் போல நியாயமாக ஆட்டோ பயணம் நடந்தது. இப்போது அங்கும் குட்டிச்சாத்தான் நுழைந்துவிட்டான். இரயில் வந்து சேர்ந்தாலோ, பேருந்துகள், நிலையத்திற்கு வந்தாலோ, ஆட்டோ ஓட்டுநர்கள், ஓடி வருவார்கள். இவர்கள் பெரும்பாலும் ஏமாற்று பேர் வழிகள். ஏடோகோடமாக கட்டணம் கேட்பார்கள். கேள்வி கேட்டால் திட்டுவார்கள். இரயில், பேருந்து நிலையங்களிலிருந்து வெளியே வரிசையாக நிற்பார்கள். அதிலும் நியாயமானவர்கள் ஒருசிலர் தான்.

பெங்களூரில் சிவாஜிநகர் பேருந்து நிலையத்திற்குக் காலை 6 மணிக்கு எனது பேருந்து சென்று சேர்ந்தது. வழக்கம் போல ஆட்டோ ஓட்டுநர்கள், ஆட்டோ வேண்டுமா? என்று ஓடி வந்தனர். அவர்களை தவிர்த்து வெளியே வந்தேன். ‘இந்திரா நகர், விவேகானந்தர் மெட்ரோவுக்கு செல்ல எவ்வளவு’ என்று கேட்டேன். முதலில் பெங்களூர்காரரை விசாரித்து வைத்திருந்தேன். நூறு ரூபாய் தான் கேட்பார்கள் என்று சொல்லியிருந்தார்கள். ஆட்டோ ஓட்டுநர் 200 ரூபாய் என்றார். ‘என்ன சார் அதிகமாய் கேட்கிறீர்கள்’ என்றேன். 150ரூபாய் கொடுங்கள் என்றார். சரியாக சொல்லுங்க சார் என்றேன். எவ்வளவு தருவீர்கள் என்றார். 100 ரூபாய் என்றேன். சிரித்தார். சற்று தள்ளி ஒரு ஆட்டோவை கேட்டேன். அதே இடத்தை சொல்லி எவ்வளவு? என்றேன். 250 ரூபாய் என்றார். சற்று நகர்ந்து சென்று மற்றொரு ஆட்டோவை கேட்டேன். 200ரூபாய் என்றார். ‘பார்த்து சொல்லுங்கள்’ என்றேன். 180 ரூபாய் தாங்க சார் என்றார். ‘100ரூபாய் தான் என்று சொல்லியிருக் கிறார்கள். ஏன்தான் இப்படி அதிகமா கேட்கிறீர்கள்?’ என்றேன். ‘மசால் தோசைக்கூட 70ரூபாய் சார். பார்த்து கொடுங்கள் சார்’ என்றார்.  சரி 170 ரூபாய் என்று ஒத்துக் கொண்டு ஏறினேன். இந்திரா நகர், விவேகானந்தர் மெட்ரோ நிலையம் என்றேன்.  வழியில் தமிழ் பாடலெல்லாம் டேப்பில் போட்டார். நம்ம தமிழ் ஆளுன்னு சந்தோ­ப்பட்டேன். இந்திரா நகர் என்று எழுதியிருந்தது. இதுதான் நீங்க கேட்ட இடம் என்றார். ‘சார் இந்திரா நகர் விவேகானந்தா ரோடு மெட்ரோ நிலையம்’ என்றேன். ‘இந்த ரோடே விவேகானந்தர் ரோடுதான் சார்’ என்று இறக்கி விட்டார். பிறகு அங்கிருந்தவர்களை நான் செல்ல வேண்டிய கோவில் இடத்தை விசாரித்தேன். பலருக்கு தெரியவில்லை. வீட்டில் பணிசெய்யும் பணியாளர் கனடாவில், ‘கொஞ்ச தூரம் சென்று இடதுபக்கமாக செல்லுங்கள்’ என்றார். அவர் சொன்னதைப் போல இடது பக்கமாக சென்றேன். சுமார் நாலு பேரை கேட்டேன். அவர்களுக்குத் தெரியவில்லை. கடைசியாக ஒரு இளம் பெண் காதில் போனை சொருகிக் கொண்டு வந்தார். தயங்கி தயங்கிக் கேட்டேன். தமிழ்ப்பெண். விபரமாகச் சொன்னாள். ஒரு கிலோமீட்டர் தூரம் சென்று நான் போக வேண்டிய இடத்தைக் கண்டுபிடித்தேன். படித்தவர் களுக்கே இந்த நிலை? படிக்காத பாமரர்களுக்கு எந்த நிலையோ? எனக்கு நடந்ததை விட மற்றவர்களுக்கு இன்னும் மிகமிக மோசமாக ஏற்பட்டிருக்கலாம்.

எனவே இந்தியாவில் பயணம் செய்யும் நெளிவு சுளிவுகளை கற்றுக்கொள்ள ஒரு பள்ளி நடத்தினாலும் பரவாயில்லை.

Ads Inside Post