Pages - Menu

Saturday 7 October 2017

விவிலிய விடுகதைகள்

விவிலிய விடுகதைகள் 

யோவான் நற்செய்தி அதிகாரம் 10 முதல் 21 முடிய 

- அருட்சகோ. பெரேரா, FIHM, சேலம்

1.     எட்டு நாள்களுக்கு பின் வந்தேன்
    தீவிர வாதம் நீங்க
    மூன்றெழுத்து சொல்லி வாழ்த்தினேன்.
    நான் யார்? மூன்றெழுத்து என்ன?

 2. சந்தேகத்திற்கு இவர் பெயரைக் குறிப்பிடுவர்
      நம்பமாட்டேன் என்பார். பின்பே நம்பிடுவார்.
    பரங்கி மலை வந்தவர். இவர் யார்?

 3. வெளியே கிடந்தால் வெறுமை
      மண்ணில் உறவாடினால் உரிமை
      வெளியில் தலைக் காட்டுவதில் செழுமை
      வளர்ந்தால் தருவது வளமை. நான் யார்?

 4. ஓட்டமிது ஓட்டம்
      அவசரமான ஓட்டம்
      முந்திக்கொண்டவர் இளசு
        பிந்திக் கொண்டவர் பழசு
      இளசு வெளியே
      பழசு உள்ளே. யார் இவர்கள்? எங்கே?

 5. என் பெயர் மூன்றெழுத்து
      கயபாவுக்கு மாமன்
      மக்களுக்காக ஒருவர் இறப்பது நல்லது என்று
      ஆலோசனை கூறினேன். நான் யார்?

 6. கடைசி நாளில் நியாயம் தீர்க்கும் அது
      ஏற்றுக்கொள்ளாதார்க்கு தீர்ப்பளிக்கும்
      அது என்ன?

 7. எல்லோரும் விரும்புவது ஐந்தெழுத்து
      மவில் தொடங்கும்
      சிறுவர்களிடம் எப்போதும் இருக்கும்
      இதை யாரும் உங்களிடமிருந்து
      நீக்கிவிட முடியாது என்று கூறியவர் யார்?
      அது என்ன?

 8. உண்ட வீட்டுக்கு
      இரண்டகம் செய்தவன்
      பண ஆசை பிடித்தவன்
      என்னோடு உண்பவனே
      என் மேல் பாய்ந்தவன்
      என்ற மறைநூல் வாக்கு நிறைவேறும்
      யார்? யாரை? யாரிடம்? 

9.      கருப்பாயும் இருப்பேன்
         பச்சையாயும் இருப்பேன்
         என்னை எல்லாரும் விரும்புபவர்
        என்னை பெண்களின் கண்களுக்கு ஒப்பிடுவர்
        கொடியில் தான் வளர்வேன்
        என்னை உவமையாகப் பயன்படுத்தியவர்
        யார்? நான் யார்?

 10. எனது பெயர் மூன்றெழுத்தில் உள்ளது.
        நானோ மூன்று முறை அழுதேன்
      மூன்றாம் முறையாக அழுதபோது
        அம்மா ஏன் அழுகிறீர் என்று
        கேட்ட இவர்கள் யார்? அவர் யார்?

  11. கெடுவான் கேடு நினைப்பவன் ‡ இவன்
        கூடவே இருந்துக் குழிப்பறிப்பவன்
        தான் வெட்டிய குழியுள் தானே வீழ்பவன்
        அதை பெற்றதும் அவன் அவனுக்குள்
        நுழைந்தான் யார்? யார்?

 12. இரண்டெழுத்து உடையது. அது
        பளப்பளப்பானது. பிடித்தது ஒருகை
        வெட்டியது ஒரு காதை. யார்? யாரை?

 13. கத்திப் போல் இருக்கும் வெட்டாது ‡ அது
        கொண்டையிருக்கும், பூக்காது
      ஹிநு சொல்லி மறுத்தும் அது முழக்கமிட்டது
        அது எது? ஹிநு   சொன்னவர் யார்?

 14. வளர்த்தக் கிடா
        மார்பில் பாய்ந்தார்போல் என்ற
        பழமொழிக்கேற்ப யோவான் 13 ஆம்
        அதிகாரத்தில் கண்டு பிடியும்?

 15. இந்த மை வாயில் இருந்தால் நன்மை
        பிலாத்து இயேசுவிடம் கேட்ட மை
        அது என்ன மை? 

விவிலியத்தில் சிறுவர்கள்

விவிலியத்தில் சிறுவர்கள்

தயாரிப்பு: வேதியர் A.  சகாயராஜ்
 1. சிறுவன்  ஈசாக் - தொடக்கநூல் 

22/ 6 அ) தந்தைக்கு கீழ்படியும் மகனாக இருந்தார்.
22/ 9 ஆ) கடவுளுக்கு தன்னையே பலியாக்க சம்மதித்தார்.
22/ 8 இ)  தந்தையின் சொல்லை நம்பினார்.

2. சிறுவன் யோசேப்பு - தொடக்கநூல் 

37/ 2 அ) தீச்செயல்களை வெறுத்தவன்.
37/ 5-9 ஆ) கனவின் வழியாக இறைவெளிப்பாட்டை அறிந்தவன்.
37/ 28 இ)        சகோதர்களால் அடிமையாக விற்கப்பட்டவன்.
39/ 2 ஈ)       யோசேப்புடன் ஆண்டவர் இருந்துசெயல்பட்டார்

3. சிறுவன் சாமுவேல் 1 சாமு

3/ 1 அ) சிறுவயதிலேயே ஊழியத்திற்கு எனஅர்ப்பணமானான்.
ஆ) ஆலயத்தின் பணிகளில் அக்கறை காட்டினவன்.
3/ 2 இ)        ஆலயத்தில் ஆண்டவர் ன்னிதானத்தில்உறங்கிப்   பழகியவன்.
3/ 6 ஈ)  ஆண்டவரின் குரலைக் கேட்டவன்.
3/ 10 உ) ஆண்டவரது குரலுக்கு செவி கொடுத்தான்.
3/ 18 ஊ) இறைவாக்கை அறிவிக்கப் பயப்படவில்லை.
3/ 19 எ) சிறுவன் சாமுவேலுடன் ஆண்டவர் இருந்தார். அவனை        உருவாக்கி வந்தார்.

4. சிறுவன் தாவீது 1 சாமு

13/ 22 அ) கடவுளுக்கு பிரியமானவன்.
16/ 13      ஆ) சாமுவேலால் திருப்பொழிவு பெற்றவன்.
        இ) ஆண்டவரின் ஆவியை நிறைவாகப் பெற்றவன்.
16/ 18 ஈ) யாழ் மீட்டுபவன்/ வீரன்/ பேச்சுத்திறன்/ அழகு உள்ளவன்.
16/ 18 உ) ஆண்டவரின் உடன் இருப்பை உடையவன்.

5. சிறுமி ஒறுத்தி 2 அரசர் 

5 / 3 அ) நாமான் நலம் பெற வழி காட்டியவள்.
ஆ) இஸ்ரவேலில் இறைவாக்கினர் உள்ளனர் என்ற செய்தியை     பரப்பியவள்.

6. 2 மக்கப்பேயர் ஆகமத்தில் வரும் 7 சிறுவர்கள்

7ம் இயல்அ) கடவுள் பெரியவர்.
ஆ) கடவுள் கொடுத்த கட்டளை பெரியது.
இ) கடவுளை மகிமைப்படுத்தும்படி / உயிர்கொடுக்கவும் தயங்க மாட்டோம்.

7. தானியேல் ஆகமத்தில் வரும் (3 சிறுவர்கள்) 

3/ 18 அ) சிலையை வணங்க மாட்டோம்‡கடவுள்பற்று.
ஆ) எங்கள் கடவுள் வல்லவர் ‡ வாழ்கிறவர்.
இ) நெருப்புக்குள் இறை உதவியை பெற்றனர்.

8. அசுத்த ஆவியால் தொல்லைபட்ட சிறுவன்

மத் 17/ 14 - 29.

9. இயேசுவின் போதகத்திற்குத் துணை நின்ற சிறுவர்கள்
மாற் 10/ 13 - 16.

10. சிறுவனான இயேசு. லூக்.

2/ 43 அ) தன் விருப்பத்தை நிறைவேற்றும்படி தானே முடிவு செய்தார்.
ஆ) இளம் வயதிலேயே ஆலயத்தில் இருந்தார்.
2/ 46 இ) ஆண்டவரைப் பற்றிய காரியங்களை அறிவதில் அக்கறை    காட்டினார்.
2/ 47 ஈ)  புத்தி கூர்மையும், சாதூர்யமான பேச்சும் உடையவராக இருந்தார்.
2/ 49 உ) பெற்றோரின் ஆதங்கத்திற்கு ஒரு பதில்வைத்திருந்தார்.
2/ 51 ஊ) பெற்றோருக்கு பணிந்து நடந்தார்.
2/ 52 எ)  கடவுளுக்கும், மனிதருக்கும் பிடித்தமான சிறுவனாக விளங்கினார்.

11. ஐந்து அப்பம், 2 மீன் தந்த சிறுவன் யோ 6/ 1 - 15:

அ) தன்னிடம் இருப்பதைக் கொடுக்க முன் வந்தான்.
         ஆ) சிறுவனின் பகிர்வு மனப்பான்பை பெரியபுதுமைக்கு வழியானது.

12. பவுலின் பேச்சைக் கேட்டபடி தூங்கிய யூத்திகு சிறுவன் தி.பணி.20/ 9:

அ) இறையனுபவ பேச்சைக் கேட்டவன்.
ஆ) விளையாட்டாக சன்னல் விளிம்பில் அமர்ந்தவன்.
இ) தூங்கினான். எனவே கீழே வீழ்ந்தான்.அதனால் இறந்தான்.
ஈ)  பவுலின் செபத்தால் மறுபடி உயிர் பெற்றான்.

13. பவுல் தப்புவதற்கு உதவிய சிறுவன் 

தி.பணி 23/ 14 - 22.

சைக்கிள் சென்ற பாதை

சைக்கிள் சென்ற பாதை

ச.இ.அ.

குடந்தையைச் சேர்ந்த பாதர் எஸ்.ஐ. அருள்சாமி என்றால், என்னை அவசியமாக சைக்கிள் பயணத்துடன் இணைத்துப் பார்ப்பர். பெங்களூரிலிருந்து, கோவையிலிருந்து குடந்தைக்கு சைக்கிலிலேயே வந்தார் என்று மூக்குவாய் எல்லாம் வைத்து பல கதைகள் கூறுவார்கள். எனவே எனது சைக்கிள் கதையை பல கட்டுரைகளாக வடித்து விடுவதே நல்லது என நினைக்கிறேன்.

1979 ஆம் ஆண்டு ஏப்ரல் 29, அந்நாள் ஆயர் மேதகு பவுல் அருள்சாமி என்னை கூவத்தூர் பங்குதந்தையாக நியமித்தபோது, அவரே ஹம்பர் சைக்கிளை ரூ 1100க்கு வாங்கித் தந்தார். பிறகு அதன் தொகையையும் பெற்றுக் கொண்டார்.

அந்த சைக்கிள் அப்போதைக்கு உயர்ந்த சைக்கிள். அதனை வைத்தே, கிளை கிராமங்கள், பட்டணங்குறிச்சி, மேலநெடுவாய், குப்பம், அருளனாந்தபுரம், அக்னேஸ்புரம், வடுகப்பாளையம் ஆகிய ஊர்களுக்கெல்லாம் சென்று பணிசெய்தேன்.

1984 ஆம் ஆண்டு கூவத்தூரிலிருந்து பணிமாற்றம் பெற்று பெங்களூர் பேதுரு குருமடத்தில் னி.வீஜு     என்ற மேற்படிப்பு படிக்கச் சென்றேன். அப்போது கூவத்தூரில் வைத்திருந்த சைக்கிளையும் இரயிலில் ஏற்றிக் கொண்டு  சென்றேன். இப்போது நினைத்தாலும் சிரிப்பாக வருகிறது. பெங்களூர் எஸ்வந்தப்பூர் இரயில் நிலையத்திலிருந்து அங்கி போட்டுக் கொண்டு, சைக்கிள் பின்னால் இரண்டு பெட்டிகளைக் கட்டிக்கொண்டு, பேதுரு குருமடத்திற்கு  சைக்கிளைத் தள்ளிக் கொண்டே வந்தேன்.

அந்த சைக்கிளை பெங்களூரில் திருப்பலிக்கு  செல்வதற்குப் பயன்படுத்தி வந்தேன். இராயபுரம் பங்கில் ஞாயிற்றுக்கிழமைத் திருப்பலியை ஒவ்வொரு வாரமும் நிறைவேற்றக் கூறினார்கள். அப்போது ஆட்டோவுக்குரியத் தொகையை பயணப்படியாகக் கொடுப்பார்கள். நான் அத்தொகைகளை சேர்த்து வைத்து, இராயபுரம் கோவிலுக்கு கீபோர்டுடன் இணையும் கியூபை நன்கொடையாக வாங்கிக் கொடுத்தேன்.

  நந்தி ஹில்ஸ் பயணம்:  குடிசைவாழ் பகுதிகளுக்கு ஞாயிறு மாலை சென்று குருமட மாணவர்கள் பணி செய்வார்கள். சைக்கிள்தான் அங்கு செல்ல வாகனம். அந்த மாணவர்கள் சேர்ந்து பெங்களூரிலிருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள நந்தி ஹில்ஸிக்குச் சென்றோம். அந்த குன்றுக்கு செல்லும் சுமார் 2 கி.மீ தூரம், செங்குத்தான சாலையில் செல்ல வேண்டும். எல்லோரும் அப்படி  செல்வது கடினம் என்றனர். இருப்பினும் சவாலாக எடுத்துக் கொண்டு சைக்கிளிலேயே குன்றின் உயரத்திற்குச் சென்று கீழே இறங்கி வந்தோம்.

  பெங்களூர் பேதுரு குருமடத்தில்  M. Th.  படித்து முடித்த பிறகு கோவை நல்லாயன் கல்லூரி பேராசிரியராக நியமிக்கப்பட்டேன். அப்போது பெங்களூரிலிருந்து கோவை வரும்போது அந்த பழைய சைக்கிளையும் இரயிலில் எடுத்து வந்துவிட்டேன். கோவையில் 1986 முதல் 1995 வரை அச்சைக்கிளை பயணத்திற்குப் பயன்படுத்தி வந்தேன். மயிலேறிபாளையத்திலிருந்து, போத்தனூர், கோவை, புதூர், ஒண்டிபுதூர் ஆகிய இடங்களுக்கு சைக்கிளிலேயே சென்றிருக்கிறேன். அப்போதுதான் கோவையிலிருந்து குடந்தை வரை நீண்ட சைக்கிள் பயணத்தை மேற்கொண்டேன்.

  1987 மார்ச் 19  ஆம் தேதி கோவை நல்லாயன் கல்லூரியில் கோடை விடுமுறை ஆரம்பித்தது. காலை 10 மணியைப் போல் ஒரு வித்தியாசமான எண்ணம் எனக்குத் தோன்றியது. விடுமுறையில் ஏன் சைக்கிளிலேயே பயணம் செய்யக் கூடாது? என்ற எண்ணம். உடனே அந்த எண்ணத்தை செயல் வடிவமாக்கினேன். கோவை மயிலேறி பாளையத்திலிருந்து சைக்கிளை எடுத்து பல்லடம், கரூர், தோல்கேட், புள்ளம்பாடி, கீழமிக்கேல்பட்டி வழியாக குடந்தை செல்வது என்பது திட்டம்.

  சைக்கிள் பின்னால் கருப்பு நிறத்தினாலான சூட்கேஸ்  பெட்டியை கட்டிக் கொண்டு சென்றேன். வழியில் வினோதமாக சில பெண்கள் வழிமறித்தார்கள். சைக்கிளை நிறுத்தினேன். பெட்டியில் வளையல் தானே வைத்திருக்கிறீர்கள்? திறந்து காட்டுங்கள் என்று நான் வளையல் விற்பவன் என்று கேட்டார்கள். ‘ஐயோ, நான் வளையல் விற்பவனில்லை’ என்று கூறிவிட்டு பயணத்தைத் தொடர்ந்தேன்.  

 பல்லடம் சென்று கரூர் நோக்கி சைக்கிளை ஓட்டினேன். கரூர் அருகே வந்ததும், இருட்டாகி விட்டது. மழை வருவது போல் கருக்கலாகவும் இருந்தது. எனவே ஒரு லாரியில் சைக்கிளை ஏற்றிக் கொண்டு கரூர் வந்து, புனித குழந்தை இயேசு தெரசம்மாள் கோவிலுக்கு வந்து சேர்ந்தேன். பங்கு தந்தை இல்லை. எனவே களைப்பாக கோவிலின் முன்னால் துண்டு விரித்து போட்டு, சூட்கேஸை தலையில் வைத்து படுத்திருந்தேன். உபதேசியார் நான் பூசை உடுப்பு விற்பவர் என்று நினைத்து நல்ல பூசை உடுப்பு வைத்திருக்கிறீர்களா? என்று கேட்டார். நான் பங்குத்தந்தையை பார்க்க வேண்டும் என்றேன். சற்று நேரம் கழித்து பங்குத்தந்தை வந்தார். அவரிடம் சென்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். அவர் மிகவும் வியந்து போய் பல அறிவுரைகள் சொன்னார். அங்கியில்லாமல் நீங்கள் வரவே கூடாது. இங்கிருந்து நாளை செல்லும் போது அங்கி போட்டுக் கொண்டுதான் செல்ல வேண்டும் என்றார். நான் வெயிலில் வந்திருந்ததால்  எழும்பிச்சைப்பழம் பிழிந்து குடிக்கக் கொடுத்தார்.

அவர் பெயர் மறந்துவிட்டது. அவர், கோவைபுலியகுளம் அந்தோணியார் திருத்தலம் பங்குகுருவாக இருந்தவர். நிறைய சுருட்டுக் குடிப்பார். அவரைப் பற்றி ஒருநகைச்சுவை சொல்வார்கள். ஒரு திருமணத்தில் அவர் இப்படி மறையுரை ஆற்றினாராம். இன்று இரவு நீங்கள் இருவரும் முக்கியமான வேலை செய்யப் போகிறீர்கள். எல்லோரும் ஆச்சரியமாக என்ன சொல்ல போகிறார் என்று வியப்பாக கேட்கத் தயாராயிருந்தார்கள். அவர் மணமக்களைப் பார்த்து, ‘இன்று இரவு, நீங்கள் இருவரும் சேர்ந்து முழந்தாளிலிருந்து செபமாலை சொல்லப் போகிறீர்கள்’ என்றாராம்.

அடுத்த நாள் காலையில் அவர் கேட்டுக் கொண்டபடியே அங்கிப் போட்டுக் கொண்டு சைக்கிளில் சென்றேன். கரூரைத் தாண்டி செல்கையில் ஓர்  இளம்பெண் என்னைப் பார்த்து, ‘ஓர் ஆள் பாவாடைக்கட்டிக் கொண்டு சைக்கிள் ஓட்டுகிறான் பாருங்கள்’ என்று கத்தினாள். மதியம் ஒரு மணியைப் போல டோல் கேட்டை வந்து சேர்ந்தேன். எனவே ஒரு சிறிய ஓட்டலுக்குச் சென்று உணவருந்த சென்றேன். சாப்பாடு சாப்பிட்டேன். அதற்கான பணத்தை முதலாளியிடம் கொடுக்கச்  சென்றேன். அங்கியிலேயே இருந்தேன். அப்போது ஒரு குடிகாரர் வந்து, ‘சுவாமி, நீங்கள் கொடுக்காதீர்கள். நான்தான் கொடுப்பேன்’ என்றார். அவர் நிலையைப் புரிந்து  கொண்டு பரவாயில்லை. ‘உங்கள் தாராள மனதிற்கு நன்றி. நானே பணம் கட்டிவிடுகிறேன்’ என்றேன்.  ‘இல்லையில்லை நான்தான் கொடுப்பேன்’ என்று  கூறினார். கடைமுதலாளி, ‘நீங்கள் போங்கள் பாதர். அவனிடம் பணம் வாங்கிக் கொள்கிறோம்’ என்றார். குருக்களுக்கு மக்களிடம் எவ்வளவு மரியாதை என்று மகிழ்ந்து அவ்விடம் விட்டு நகர்ந்தேன். அங்கிருந்து புள்ளம்பாடி நோக்கி பயணத்தைத் தொடர்ந்தேன்...... 
( பயணம் தொடரும்)

ஜெப ஆற்றல், அமெரிக்கக் கடிதம்

அமெரிக்கக் கடிதம்

ஜெப ஆற்றல்

- சவரி, கேரி

அன்பு உள்ளங்களே, இந்த வாரம் உங்களுடன் செபத்தின் மகிமையை பற்றி பேச விரும்புகிறேன். அமெரிக்கா ஒரு வளர்ந்த நாடாக இருந்தாலும், பல அறிவியல் கண்டுபிடிப்புகளின் உறைவிடமாக இருந்தாலும், இங்குள்ள மக்கள் இறை நம்பிக்கையிலும், செபத்திலும் நம்பிக்கை வைத்து வருகிறார்கள். சென்ற மாதம் நிகழ்ந்த சூரிய கிரகண (Solar Eclipse) நிகழ்ச்சியை பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். பூமி தன்னை தானே சுற்றி கொண்டு, சூரியனையும் சுற்றி வருகிறதென்றும், சந்திரன் பூமியை சுற்றி வருகிறதென்றும் படித்து இருக்கிறோம். சென்ற மாதம் ஆகஸ்ட் 21, 2017 அன்று, சந்திரன் சூரியனுக்கும், பூமிக்கும் இடையில் நேர்கோட்டில் வந்தது. இது 99 வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் அதிசயம். நாங்கள் இருந்த இடத்தில் மூன்று கிரகங்களும் ஒரே நேர் கோட்டில் வந்த நேரம் மதியம் 2:45 மணி. சந்திரன் கொஞ்சம், கொஞ்சமாக சூரியனை மறைத்தது. அப்போது தட்ப வெப்ப நிலை குறைந்தது, பூமியை முற்றிலுமாக இருள் கவ்வியது, மிருகங்கள் குழம்பி போய் சத்தமிட்டு, உறங்குவதற்கு தயார் ஆகின. அப்போது பலர் இறைவனின் படைப்பின் அதிசயத்தை வியந்து மண்டியிட்டு, அழுது செபித்ததை பார்த்தேன்.

இந்த பிரபஞ்சத்தில் (Universe), கோடிக்கணக்கான கிரகங்கள் சுற்றி கொண்டி ருக்கின்றன. ஒவ்வொன்றும் பல ஆயிரம் மைல்கள் வேகத்தில் சுற்றுகின்றன. உதாரணமாக, பூமி சூரியனை 1037 மைல் வேகத்தில் சுற்றுகிறது. விமானம் சராசரியாக 500 மைல் வேகத்தில் செல்லும். விமானத்தை போன்று இரண்டு பங்கு வேகத்தில் பூமி சுற்றி கொண்டுள்ளது. இவ்வளவு வேகத்தில் சுற்றி கொண்டுள்ள கிரகங்கள் ஒன்றோடு ஒன்று மோதி கொண்டால் நிலைமை என்னாகும்? இதை எல்லாம் இயக்குவது யார்? கண்காணிப்பது யார்? இருக்கும் பல கோடி கிரகங்களில் பூமியில் மட்டும்தான் மனிதர் வாழ்கிறார். எனவே நாம் அனைவரும் இறைவனால் ஆசிர்வதிக்கபட்டவர்கள், முன்குறிக்கபட்டவர்கள்.

அமெரிக்காவில் Prayer Network என்ற அமைப்பு சிறப்பாக செயல்படுகிறது. உங்கள் தேவைகளை இந்த  Prayer Network யிடம் நீங்கள் உங்கள் தேவைகளை வலைத்தளம் மூலம் சமர்ப்பிக்கலாம், உங்களுக்காக உலகம் முழுவதும் உள்ள மக்கள் செபிக்கிறார்கள். ஒவ்வொரு தலைவரும் பதவி ஏற்றவுடன், விவிலியத்தை வைத்து செபித்து, செபத்துடன்தான் தங்கள் வேலையை தொடங்குகிறார்கள். இங்குள்ள எல்லா அமெரிக்க நாணயங்களிலும் “கடவுள் மீது நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்” (In God We Trust) என்ற வாக்கியம் பொறிக்கபட்டுள்ளது.

  இப்போதுள்ள இளைய தலை முறையினர்கள், சமூக ஊடகத்தில் மூழ்கி மயங்கி, கடவுளையும், செபத்தையும் மறந்து வருவதை பார்த்து வருகிறேன். தலை நிமிர்ந்து வாழ வேண்டிய இளைஞர்கள், தலை குனிந்து கைபேசியில் மூழ்கி இருக்கிறார்கள். சமூக ஊடகங்கள், தொலைகாட்சிகள் நம் குடும்பத்துடன் பேசும் நேரத்தையும் சேர்த்து உணவு அருந்தும் நேரத்தை குறைத்து வருகின்றன, அழித்து வருகின்றன என்றால் அது மிகையாகாது. அமெரிக்காவில் செபிக்கும் போதும், படிக்கும் போதும், முக்கியமான வேலைகள் செய்யும் போதும், வாகனங்களை ஓட்டும் போதும், கைபேசிகளையும், தொலைக்காட்சிகளையும் நிறுத்தி விட்டு வேலை செய்கிறார்கள். தங்கள் குழந்தைகளுக்கும் சொல்லி கொடுக்கிறார்கள். தொலைகாட்சிகளே இல்லாத பல வீடுகளை நான் பார்த்திருக்கிறேன்.  குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்க கற்று கொடுக்கிறார்கள். இதை நாமும் பின்பற்றினால் நமக்கும் நன்மை. முதலில் நாம் சமூக ஊடகத்தையும், தொலைக்காட்சியையும் முறையாக பயன்படுத்தி நம் இளைய தலைமுறையினருக்கு வழி காட்டுவோம்.
  இறைவனின் அருளை பெற, அவர் வரும் நாளில் காத்திருக்கும் நல்ல பணியாளனாய் இருக்க, இறைவனை நோக்கி தினமும் செபிப்போம். நம்மை இறைவன் அன்பிலிருந்து பிரிக்கும் தடைகளை தகர்ப்போம்.
‘கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும். ஏனெனில், கேட்கிற எவனும் பெறுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்’ (மத் 7:7-8).

கல்யாணம் எதற்காக? அரை பக்க சிறுகதை

கல்யாணம் எதற்காக? 

அரை பக்க சிறுகதை

ச.இ.அ.

முகிலன் ஓர் ஆசிரியர். முற்போக்கு சிந்தனை உடையவர். கடின உழைப்பாளி. வீட்டிற்கு ஒரே பிள்ளை. இவர் ஆசிரியர் பணியில் நிரந்தரம் ஆனதும் இவர்களின் குடும்பம் சற்று உயர்ந்தது. பெற்றோர், பையனுக்கு வயதாகி விட்டது. திருமணம் செய்துவிட வேண்டும் என்று முடிவெடுத்து பையனிடம் கூறினார். ‘நம்ம உறவுக்காரப் பொண்ணு, அவ பேங்கில வேலை செய்றா, பொறுத்தமா இருக்குமென நினைக்கிறோம். என்னப்பா சொல்ற?’ என்று அம்மா கேட்டாள். முதல்ல என்னுடைய கருத்தை சொல்றேன். என் திருமணம் சீர்திருத்த கலியாணமா, ஆடம்பரமில்லாம கோவில் முறைப்படி எளிமையா நடக்கனும். மேளதாளம், வரவேற்பெல்லாம் வேண்டாம். அத்தோடு ஐந்து  ஏழை தம்பதிகளுக்கும் நம் செலவிலேயே அன்றைக்கு திருமணம் நடக்கனும், என்றான் முகிலன். பொண்ணு வீட்டில கேட்டு சொல்கிறேன் என்று சொன்ன தாய், சிலநாள்களில்,  ‘உன்னுடைய கருத்துக்கு பொண்ணு வீட்டில ஒத்துக்கலப்பா. சகல ஆடம்பரங்களுடன் திருமணம் நடந்தா சரிங்கராங்க’  என்றார்.  

இடையில் முகிலன் படித்து ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றிபெற்றான். கலெக்டர் வேலைக்கு ஆர்டர் வந்து விட்டது. இப்போது  பெண் வீட்டார் திருமணத்தை மாப்பிள்ளை விருப்பப்படியே வைத்துக் கொள்ளலாம் என்று முன் வந்தனர். ‘அடுத்த மாதம் 15 ஆம் தேதி அனாதை பெண்ணுடன் திருமணம் நடக்கப் போகிறது என்பதை அவர்களுக்கு சொல்லுங்கள்’ என்றான் முகிலன். ஆடம்பரத்திற்காக கல்யாணம் அல்ல. குடும்பத்திற்காக தான் திருமணம் என்பதை புரிவதில்தான் திருமணத்தின் சிறப்பு என்றான் முகிலன்.

Thursday 5 October 2017

உனக்கு நீயே....

உனக்கு நீயே....

எஸ்.தீபிகா, திருஇருதய ஆண்டவர் செவிலியர் கல்லூரி, குடந்தை.  
 (புதிய எழுத்தாளர் தங்கையின் கன்னி முதற்கதை)

கனிமொழி 12ம் வகுப்பு மாணவி, தொடர்ந்து எல்லா  தேர்வுகளிலும் குறைந்த மதிப்பெண் வாங்குபவள், எப்பொழுதும் சோர்ந்து காணப்படுவாள். தனிமையிலேயே வாழ்பவள். ஒருநாள் வகுப்பு ஆசிரியர் கதிரவன் தமிழ் புத்தகம் யாரேனும் வைத்திருந்தால் தாருங்கள் என்றார். இவளோ தன் புத்தகத்தை கொடுத்தாள். அதன் முதல் பக்கத்திலேயே  ‘எனக்குனு யாருமே இல்ல’ என்று எழுதியிருந்தது. அதைப் பார்த்த ஆசிரியரோ மெல்லியதாய் புன்னகைத்து விட்டு பாடத்திற்குள் சென்றார். நாட்கள் கழிந்தன. அந்த மாத இறுதித் தேர்விலும் கனிமொழி குறைந்த  மதிப்பெண்ணோடு, இரண்டு பாடங்களிலும் தோல்வியுற்றாள் 
(இயற்பியல், வேதியியல்). இரண்டு ஆசிரியர்களும் இவளை கடிந்து கொள்ள தனது கோபத்தை மதிய உணவில் தினம் சாப்பிடாததால் மயங்கி விழுந்தாள் கனி. 

சக மாணவிகள் தமிழ் ஆசிரியரிடம் நடந்ததைக் கூற, அவரோ கனிமொழியை தனது அறைக்கு வரச் சொன்னார். கனி வந்தாள். மதிய வணக்கம் அவள் கூற, நாற்காலியில் அமரச் சொன்னார். தனது ய்யிழிவிவ ல் இருந்து வீeழி யை எடுத்து உற்ஸ்ரீ ல் ஊற்றி அவளிடம் குடி  என்று கூறினார். அவளோ ‘வேண்டாம் சார்’ என்றாள். ‘பரவா இல்ல குடி’ என்றார். அவளும்  குடித்து முடிக்க.  ‘உனக்கு என்னாச்சு ஏன் தமிழ் ணுலிலிவல அப்படி எழுதியிருந்த?’ என்றார். இவளோ என்ன என்பதுபோல் புருவத்தை சுருக்க, ‘ம் எனக்கு யாருமே இல்லனு எழுதியிருந்தல்ல அத பத்திதான் கேட்கிறேன்’ என்றார். ‘உண்மை அதான சார் எனக்குனு  இங்க யாருமே இல்ல, ஒரு நல்ல தோழி கிடையாது, கூட சேர்ந்து படிக்க, விளையாட, சிரிக்க, சாப்பிடனு யாருமே இல்ல சார்’ என்றாள் விரக்தியாய்.  ‘அப்ப இதுதான் உன் பிரச்சனையா?’ என்று அவர் கேட்க, ‘ம், நா தனிமைய உணருரேன் சார். எனக்கு இங்க இருக்க பிடிக்கல, யாரையுமே பிடிக்கல, எனக்கு ஒத்து போற மாதிரி இங்க யாருமில்ல’  என்று நிறைய குறைகள கூறி விட்டு, ‘நான் படிக்காம இருக்கறதுக்கும் இதுதான்  சார் காரணம்’ என்று முடித்தாள் கண்ணீரோடு.  ‘சரி நான் உனக்கு ஒரு வழி சொல்லுறேன். ஒரு வாரம் இத செய், அதன் முடிவுல உன்னோட இந்த யாருமே இல்ல என்கிற உணர்விற்கு பதில் கிடச்சிடும்’ என்று கூறினார். ‘என்ன சார்’என்று அவள் கேட்க, ‘இந்த ஒரு வாரம் முழுவதும் உன்னைச் சுற்றி நடக்கும்   எல்லா வி­யங்களையும் கவனித்துப்பார் உன்னிப்பாக’ என்றார். இவளோ சரி என்று கூறிவிட்டு சென்றாள். 

அதேபோல் ஒவ்வொன்றையும் கவனிக்கத் தொடங்கினாள். தன்னைச் சுற்றி இருக்கும் தோழிகளுக்குள்ளேயே சண்டை, சச்சரவு, மனஸ்தாபம், எரிச்சல், பேசாமல் செல்வது, ஏமாற்றுவது என எல்லாவற்றையும் பார்த்தாள். இவதான் என் உயிர்ததோழி என்று கூறிய ஒரு பெண் இன்று ச்சீ, அவ என்னோட தோழியே கிடையாது என்று தூற்றியதையும் காதாரக் கேட்டாள். மிகவும் மன வருத்ததுடன், அந்தத் தமிழ் புத்தகத்தை எடுத்துக் கொண்டு, தமிழாசிரியரின் அறைக்குச் சென்றாள். ஆசிரியரோ  ‘வாம்மா’, என்றார். அவளோ அவரிடம் தனது புத்தகத்தை நீட்டினாள். அதனை வாங்கி பார்த்தவருக்கு மகிழ்ச்சி. ஏனென்றால் அதில் எனக்கு யாருமே இல்லை என்பதை அடித்து விட்டு அதற்குக் கீழாக ‘உனக்கு நீயே’ என்று எழுதியிருந்தது. ‘என்ன? திடீர் மாற்றம்’ என்று ஆசிரியர் கேட்க, ‘சார் எனக்கு யாரும் வேணாம் சார்’ என்று நிகழ்ந்தவற்றை, கண்டவற்றை, கேட்டவற்றை எல்லாத்தையும் கூறிமுடித்து விட்டு ‘எனக்கு நானே போதும் சார்’ என்று கூறிவிட்டாள். ஆசிரியரோ ‘அப்படி இருப்பது சரிதான் ஆனால் முற்றிலும் துறந்துவிடக்கூடாது. எல்லாரிடமும் சகஜமாகப் பேசிக் கொண்டிரு, ஆனால் யாரையும் நம்பி, அவர்களை சார்ந்து வாழ்ந்து விடாதே’ என்றார்.  கனிமொழியும் வாழ்க்கையை சந்தோ­த்துடன் தொடர்ந்தாள்.
உனக்கு நீயே...
யாரும் உன் அருகில் இல்லையயன்று வருந்தாதே
அனைவரும் உன் அருகில் இருந்து
உன்னை துன்புறுத்தி கொல்வதை விட
யாருமே இல்லாமல் அனாதையாக வாழ்வதே நல்லது.
கண்ணீரைத் துடைக்க யாருமில்லை  என்று கலங்காதே
கண்ணீரைத் துடைக்கும் கரங்களே 
நாளை உன்  கண்ணீருக்கு காரணமாய் நிற்கும்
சாய்ந்து கொள்ள ஒரு மடியும்  அனைத்துக் கொள்ள
இரு கரங்களும் இல்லையே என்று ஏங்காதே
எந்நேரத்தில் விட்டுவிட்டு சென்று 
விடுவார்கள் என்று தெரியாது.
கடைசி வரைக்கும் யாருக்காகவும் ஏங்காதே
உன் கண்ணீரைத் துடைக்க, உன் விரல்களும்
உன் துன்பங்களை நீக்க, உன் தன்னம்பிக்கையும்
உன்னை மகிழ்விக்க, உன் வெற்றியும் காத்திருக்கிறது
தொடர்ந்து போராடு தனி ஆளாக நின்று.

Tuesday 3 October 2017

பொதுக்காலம் 30ம் ஞாயிறு A

பொதுக்காலம்  30ம் ஞாயிறு
வி.ப 22:21-27; 1தெச 1:5-10; மத் 22: 34-40

மனிதரின் வாழ்வு, மற்றவர்களின் வாழ்வில் புதைந்திருக்கிறது எனலாம். தங்களை தனிப்படுத்திக் கொண்டு வாழ்பவர், மனித வாழ்வின் நியதியை இழந்த நிலையில் வாழ்கிறார் எனலாம். பைத்தியம் என்று சொல்லப்படுகிறவர்கள், மனிதர்களின் தொடர்பை விடுத்து தனித்து வாழ்பவராவார். குற்றவாளிகளுக்குத் தண்டனையாக அவர்கள் தனிமைப் படுத்தப்படுகின்றனர். ஒரு சோதனை செய்து பார்த்தார்கள் ஒரு சிறுவனை பிறந்தது முதல் தனிமைப்படுத்தி பல ஆண்டுகள் ஒரு வீட்டில் வளர்த்து வந்தார்கள். பல ஆண்டுகளுக்குப் பிறகு அவனை வெளியே அழைத்து வந்தார்கள். முதலில் ஒரு பெரிய கடைக்கு அழைத்துச் சென்று, அங்குள்ளவைகளில்  எது வேண்டுமானாலும் வாங்கிக் கொள் என்றார்கள். அவன் எல்லாவற்றையும் சுற்றி பார்த்து விட்டு, பொருள் விற்றுக்கொன்டிருந்த பெண்ணைக் காட்டி இந்த பொம்மைதான் வேண்டும் என்றானாம்.

அன்பு என்றால் விருப்பம் (Liking), பாசம் (Affection) என்று ஆங்கில அகராதி விளக்கம் கூறுகிறது. மனிதருக்கு மனிதர் இடையில் இயல்பாக விருப்பம், பாசம் உண்டாகிறது. ஆனால் ஒருவர் தன்னையே அதிகமாக தன் விருப்பத்திற்கு உள்ளாக்கிக் கொள்ளும்போது, மற்றவர்மீது கொள்ளும் விருப்பம், பாசம் குறைகிறது அல்லது விருப்பம் வெறுப்பாகக் கூட மாறலாம்.

இன்றைய நற்செய்தியில், சட்டங்களை ஆழ்ந்து கற்றறிந்த பரிசேயர், அதிலும் திருச்சட்ட அறிஞர் ஒருவர், இயேசுவை சோதிக்கும் நோக்குடன் திருச்சட்ட நூலில் தலை சிறந்த, முதல் கட்டளை எது? என்று சோதிக்கும் நோக்குடன் கேட்டார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. யூதர் பாரம்பரியத்தில் 613  கட்டளைகள் இருந்தன. அதிலும் பரிசேயர்கள் பல கிளை சட்டங்களை புகுத்தினர். இவைகளில் எது அடிப்படையானது? எது கட்டளைகள் அனைத்தின் சாராம்சத்தியம் உள்ளடக்கியது? என்பதுதான் கேள்வி. சீசருக்கு வரி செலுத்துதல் நிகழ்ச்சியில், கடவுளுக்குரியதை கடவுளுக்குக் கொடுங்கள் என்று விளக்கினார் இயேசு (மத் 22:21).

இங்கு, ‘உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து’ என்பதுதான் முதல் கட்டளை. இதயம் என்பது ஒருவரின் விருப்பத்தைக் (Will) குறிக்கும், உள்ளம் என்பது  ஒருவரின் வாழ்வைக் (Life) குறிக்கும். மனம் (றீமிreஐஆமிஜு) என்பது ஒருவரின் செல்வத்தைக் (Wealth) குறிக்கும். ஆக, நீ இறைவனின் அன்பில் புதைந்து விடு என்பது இங்கு பொருளாகிறது. இறைவனை அன்பு செய்வதைக் குறிக்கும் இவ்வாக்கியம் இச 6:5 இல் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை தினமும் யூதர்கள் தங்கள் செபத்தில் ஓதுவார்கள்.

அடுத்து ‘உன்மீது அன்பு கூர்வது போல உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக’ என்பது அடுத்த முக்கியக் கட்டளை என்று இயேசு குறிப்பிடுகிறார். இது லேவி 19:18 இல் கொடுக்கப்பட்டுள்ள வாக்கியம். யூதர்கள் அதிக கவனம் செலுத்தாத வாக்கியம் இது. இயேசு மிக திறமையாக ஞானத்துடன், பிறரன்பு கட்டளையை கட்டளைகளில் முதன்மையாக நிறுத்துகிறார். 
வள்ளுவர் கூறுவார்,

  அன்பகத் தில்லா உயிர் வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.      (குறள் 78)

 அன்பில்லா வாழ்க்கை பாலைநிலத்தில் நிற்கிற பட்டுப்போன மரத்தினைப் போன்றது என்கிறார். அன்பிற்கு முதலிடம் கொடுத்து வாழந்தால் இறைவன் அருகில் நாம் நிற்கிறோம். லியோ டால்ஸடாய் கீழ்வரும் கதையைக் கூறுகிறார். இரு நண்பர்கள் எருசலேம் நோக்கி திருப்பயணம் தொடங்குகிறார்கள். செல்கின்ற வழியில் ஒருவர் அந்த ஊரில் மக்கள் பஞ்சத்தால் மடிந்துக்கொண்டிருப்பதைப் பார்த்து அங்கேயேத் தங்கி அவர்களுக்குப் பணிசெய்கிறார். மற்றவர் எருசலேம் சென்று அங்கு ஆலத்திற்குள் செல்கிறார். அப்போது ஓர் ஆச்சரியத்தைக் காண்கிறார். தன்னுடன் வராத அந்த நண்பர் யாரும் செல்ல முடியாத  புனித இடத்தில் நிற்கிறார். பிறர்அன்பு செயலை செய்த அவருக்கு இறைவன் தந்த பாக்கியம் என்று அந்த நண்பர் உணர்கிறார்

பொதுக் காலம் 29ஆம் ஞாயிறு A

அன்பே கடவுளுக்குரியது
பொதுக் காலம் 29ஆம் ஞாயிறு A
29 - 10 - 2017.  
எசா 45 : 1,4-6; 1 தெச 1: 1 -5; மத் 22: 15 - 21 
- அருட்பணி. மரிய அந்தோணி ஜேம்ஸ்  

இன்றைய திருவழிபாடு நமக்கு கூறுகின்ற செய்தி, இறைவனுக்குரியதை இறைவனுக்கும், மனிதருக்குரியவற்றை மனிதருக்கும் கொடுப்போம் என்பதாகும்.

முதல் வாசகத்தில் யாவே இறைவன் தான் தேர்ந்து கொண்ட மக்களை வழிநடத்த, பிற இனத்தவரையும் பயன்படுத்துகிறார் என்பதைப் பார்க்கிறோம். இறைவன் அவர்களை அன்பு செய்வதன் வெளிபாடாக பிற இனத்தவரான சைரஸ் என்ற அசீரிய மன்னன் வழியாக பாபிலோனிய அடிமைத் தனத்திலிருந்து இஸ்ரயேல் மக்களை விடுவித்தார். அதே அன்பு, இரண்டாம் வாசகத்தில் விளக்கப்படுகிறது. கிறிஸ்துவ வாழ்வு  கிறிஸ்துக்குள் வாழ்கின்ற வாழ்வாக, அன்பினை மையமாக வைத்து வாழப்படுகின்ற வாழ்வாக அமைய வேண்டுமென்று, தெசலோனிய மக்களுக்கு பவுல் அடிகளார் எடுத்து கூறுகிறார். ஆக, இந்த மண்ணக அரசு அன்பினை மையமாய் வைத்து யசு இம்மண்ணிலே நிலை நாட்டப்படுகிறது. ஆனால் அன்பினை செயல்படுத்த தாமதித்த, சதுசேயர்கள் மற்றும் பரிசேயர்களை, இயேசு பல்வேறு இடங்களில் வெளிவேடக்காரர்கள் என்றெல்லாம் கண்டிக்கிறார். இதில் ஆத்திரமடைந்த, வெறுப்புற்ற பரிசேயர்கள், எல்லா மக்களாலும் போற்றப்பட்டும், தன்னை இறைவனின் மகன் என்று உறுதிப்படுத்திய இயேசுவை, எவற்றிலாவது சிக்க வைத்து சரியான தண்டனை வாங்கி தர வேண்டுமென்று திட்டமிடுகிறார்கள். ஆனால் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவராக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக இயேசுவின் போதனைகள் அமைந்ததால் அவர்களால் எதுவும் செய்ய இயலவில்லை.

ஆனாலும் எல்லாவற்றிலும் நீதியோடும், நேர்மையோடும் செயல்படுகின்ற இயேசுவிடம் சிக்கலான கேள்விகளை கேட்கின்றபொழுது, எந்த வகையிலாவது அவர் சிக்கி விடுவார் என்று எதிர்ப்பார்த்தனர். பின்வரும் மூன்று முக்கிய பிரச்சனைகளை தேர்ந்தெடுத்து முன் வைத்தனர். (மத் 22: 15 - 22) யாருக்கு வரி செலுத்துவது, (மத் 22: 23‡33) மறுமணம் செய்தவர் விண்ணகத்தில் யாருடைய மனைவியாவார், (மத் 22:34-40) எது சிறந்த கட்டளை ஆகியவையாகும். செசாருக்கு வரி செலுத்த வேண்டுமா? என்பது ஆபத்தான கேள்வி. பாலஸ்தீன் நாடு உரோமை அரசின் எல்லைக்கு உட்பட்டதாக இருந்தது. அந்த பகுதியை சார்ந்த மக்கள் மூன்று விதமான வரிகளை செலுத்த வேண்டியிருந்தது. நிலவரி, வருமான வரி மற்றும் குடிமக்கள் வரி ஆகியவை. இவ்வகை வரிகளில் இன்றைய நற்செய்தி வாசகத்தில் குறிப்பிடப்படுவது குடிமக்கள் வரி. உரோமை ஆட்சியுரிமைக்கு உட்பட்ட மக்கள் என்பதால் உரோமை மன்னரின் முகம் பதித்த நாணயத்தை அவர்கள் வரி செலுத்துப் பயன்படுத்த வேண்டும். ஆகவே பரிசேயர்களும் ஏரோதியர்களும், இக்கேள்வியை கேட்கின்றனர். இயேசுவும், அவர்கள் குறை காணமுடியாத வகையில் சீசருக்குரியதை சீசருக்கும், கடவுளுக்குரியதை கடவுளுக்கும் என்று கூறுகிறார்.

கல்லூரி நூலகங்களில் உள்ள புத்தகங்களை அதனதன் கருத்தியல்களுக்கேற்ப அதற்கென்ற உள்ள பிரிவுகளில் வைக்குமாறு ஆசிரியர் கூறுவர். இயேசுவும் சீசரின் உருவம் பதித்த நாணயத்தை சீசருக்கு கொடுங்கள் என்கிறார். பொன், பொருள் எதுவாக இருந்தாலும் இந்த மண்ணுலக அரசிடம் வரியாகவோ அல்லது வேறுவகையிலோ  செலுத்தலாம். காரணம் அரசாட்சிக்குட்பட்ட மக்கள்மீது அரசுக்கு அதிகாரம் உண்டு. கடவுளுக்குரியது என்பதை பலவாறு விளக்குவர். எல்லாமே கடவுளின் ஆட்சிக்கு உட்பட்டது என்றும் அனைத்தும் இறைவனை முன் வைத்து செயல்பட வேண்டும் என்பது ஒரு விளக்கம். அடுத்து இறைவனின் சாயலை கொண்ட மனிதரை அன்பு செய்து வாழ்வதும் இறைவனுக்குரியதாகும். 

  அதனைத்தான் பத்துக்கட்டளைகளிலும் கூறப்படுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக இந்த உலகில் நாம் கடவுளுக்குரியதை கொடுக்க வேண்டுமென்றால் பணமோ? வேறு பொருளோ? அல்ல. மாறாக அன்பு நிறைந்த உள்ளங்களே, கடவுள் விரும்புவதாகும். கிறிஸ்துவ மதிப்பீடுகளான இரக்கம், தாழ்ச்சி, பணிவு, பொறுமை போன்ற பண்புகளை நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பிறர்நலனுக்காக, இறைசாயலில் உள்ள நம்மை போன்ற மனிதர்களிடத்தில் காண்பிக்கின்ற பொழுது, இறைவனை எல்லாவற்றிற்கும் மேலாக முதன்மைப்படுத்துவோம். கடவுளுக்குரியதை கடவுளுக்கு கொடுக்கின்றோம். ஆகவே அன்பே உருவான இறைவனைப் போன்று நாமும் ஒருவரையயாருவர் அன்பு செய்து நாமனைவரும் இறைவனின் சாயல்கள் என்பதை எடுத்துரைப்போம்.

பொதுக்காலம் 28 ஆம் ஞாயிறு A
15 - 10 - 2017
எசா 25: 6 -10;  பிலி 4: 12 ‡ 14, 19 - 20; மத் 22: 1-14

திருமண நிகழ்ச்சி, அது உறவின் நிகழ்ச்சி. எல்லா நாடுகளிலும், எல்லா கலாச்சாரத்திலும் திருமணம் சிறப்பாக,  மகிழ்ச்சியாகக் கொண்டாடப்படுகிறது. ஒரு பெரிய அச்சகம். அதில் அழைப்பிதழ் அச்சடிப்பதே முக்கிய வேலையாக உள்ளது. அழைப்பிதழ்கள் தயாரிப்பதற் கென்றே பல பெரிய நிறுவனங்கள் உள்ளன. அழைப்பிதழில் உறவினர்கள், நண்பர்கள் என்று நூற்றுக்கணக்கான பெயர்களை அச்சடிக்கிறார்கள். கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று அழைப்புக் கொடுப்பார்கள். இன்னும் நெருங்கிய உறவினர்களுக்கு பணம்பாக்கு என்று அழைப்புக் கொடுப்பார்கள். திருமணத்தில் உறவின் அடையாளமாக விருந்து தருகிறார்கள்.

இன்றைய நற்செய்தியில், இயேசு விண்ணரசை, ஓர் அரசர் மகனின் திருமண நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம் என்று விளக்கம் அளிக்கிறார். திருமணத்தில் விருந்திற்கு பலரை அழைக்கிறார் அரசர். அழைக்கப்பட்டவர்கள் திருமணத்திற்கு  வரவில்லை. எனவே மீண்டும் பணியாளர்களை அழைக்கப்பட்டவர்களை அழைத்துவர அனுப்புகிறார். அழைக்கப் பெற்றவர்கள், அழைக்கச் சென்ற பணியாளர்களை பொருட்படுத்தவில்லை. தங்கள் வேலைகளை அவர்கள் கவனிக்க சென்று விடுகிறார்கள். சிலர் சென்ற பணியாளர்களை பிடித்து, இழிவு படுத்தி கொலையும் செய்கிறார்கள். 

இப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சி நடக்குமா என்று நமக்குத் தோன்றலாம். இந்த உவமை இஸ்ரயேல் மக்களின் வரலாற்றையே எடுத்துக்காட்டுகிறது. இறைவன்  இஸ்ரயேல் மக்களைத் தேர்ந்தெடுத்தார். தன் உறவில் பங்குக் கொள்ள அழைத்தார். ஆனால் இறைவனின் உறவை பொருட்படுத்தவில்லை. இறைவனின் அன்பை அவர்கள் மனதில் நிறுத்தவில்லை. பவுல் அடிகளார் இஸ்ரயேல் மக்கள் இறைவனை புறக்கணித்ததால்தான் பிற இனத்தவரையும் தன் அன்பு வலையில் அழைத்துக் கொண்டார் என்கிறார் (உரோ 9:4).

முதல் வாசகத்தில் இறைவன் சுவையான விருந்தினை அனைத்து மக்களுக்கும் தந்து, அவர்களின் துன்பங்களை நீக்குவார் என்றும், அவர்களின் கண்ணீரைத் துடைப்பார் என்றும் நிந்தையை அகற்றுவார் என்றும் எசாயா எடுத்துக் கூறுகிறார். ஆகவே இறைவனை நெருங்குவோருக்கு துன்பங்கள் நொருங்கிப் போகின்றன. விருந்தின் மகிழ்ச்சியும், நிறைவும் அவர்களில் இடம் பெறுகின்றன என்பது  கருத்தாக நிற்கிறது. இது  எசாயாவின் எதிர்கால எதிர்பார்ப்பாகும்.

இரண்டாம் வாசகத்தில், பவுல் அடிகளாரின் அருமையான நம்பிக்கையின் வார்த்தைகளைக் கேட்கிறோம். ‘எனக்கு வலுவூட்டுகிறவரின் துணைக்கொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு’ (பிலி 4:13).

நம் பணிகள், கடவுள் நமக்கு கொடுத்திருக்கிற அழைப்பு என்று சொல்லலாம். நம் பணிகளில் முழு ஈடுபாடு கடவுள் கொடுக்கும் விருந்தில் பங்குக் கொள்ளுதல்  போலாகும்.  துறவற அழைத்தல் என்கிறோம். அதேபோல நம் வாழ்வின்  எந்நிலையும் இறைவன் தந்துள்ள அழைப்பாகும், அதனை ஏற்றுக்கொண்டு ஈடுபாட்டுடன் அதில் வாழ வேண்டும். நம் வாழ்வின் நிலைகளில் நாம் சுமத்திக் கொள்ளும் சலிப்புகள், கடவுள் தந்துள்ள அழைப்பினை கொச்சைப்படுத்துவதாகும். பணிகளை ஏனோதானோ என்று செய்வதும் கடவுள் கொடுத்துள்ள அழைப்பினை மறுத்து செயல்படுவதாகும்.

‘ஒருவரின் சிறப்பு அவர்தம் பணிகளில் காட்டும் முனைப்பில்தான் வெளிப்படும்’
- வின்ஸி லம்பார்டி.

‘ஒருவரின் பணிகளில் ஈடுபாடு இல்லையயன்றால், பணிகள் பலன் தராத மரங்களைப் போன்றதாகி விடும்’ .        - பீட்டர் டிரக்கர்.                     

பொதுக்காலம் 27 ஆம் ஞாயிறு A

பொதுக்காலம் 27 ஆம் ஞாயிறு A
08 - 10 -2017
 எசா 5:1-7; பிலி 4:6-9; மத் 21: 33-43;

கொடுக்கப்படவே நலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன

வாட்ஸ் அப்பில் அண்மையில்  ஒரு நிகழ்ச்சி சொல்லப்பட்டிருந்தது. ஒரு பூங்காவில் ஓரிடத்தில் ஒருவர் மிகவும் சோகமாக அமர்ந்திருந்தார். அப்போது ஒருவர் அவரிடம் வந்து, ‘ஏன் இவ்வளவு சோகமாக இருக்கிறீர்கள்?’ என்று கேட்டார். ‘நான் ஒரு தொழிற்சாலை நடத்தி வருகிறேன். இவ்வருடம் 50 கோடி ரூபாய் நஷ்டமாகி  விட்டது. என்ன செய்வது என்று  தெரியவில்லை’ என்றார். ‘கவலைப்பட வேண்டாம். நான் உனக்கு உதவி செய்கிறேன். இதோ ரூ150/‡ கோடிக்கான காசோலை. இதை வைத்து மகிழ்ச்சியாக தொழில் செய். ஆனால் அடுத்த வருடம் இதே நாளில் இங்கு வருவேன். அப்பணத்தை திருப்பி தந்திட வேண்டும்’ என்று ரூ150/‡ கோடிக்கான காசோலையைத் தந்துவிட்டு சென்றார். இவர் புத்துணர்ச்சி பெற்று வீடு திரும்பினார். அந்த காசோலையை பெட்டியில் வைத்து பூட்டிவிட்டு, அடுத்த நாள் தன் தொழிலாளர்களை அழைத்து, இந்த ஆண்டு 50 கோடி ரூபாய் நஷ்டமாகி விட்டது. இவ்வாண்டு நாம் கடினமாக உழைத்து,  நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டும் என்றார். எனவே அந்த ஆண்டு பெரு முயற்சி எடுத்து உழைத்தனர். 155 கோடி லாபம் கிடைத்தது. எனவே பூங்காவிற்கு பெற்ற காசோலையைத் திருப்பி கொடுக்க சென்றார். அப்போது ஒரு பெண்ணுடன் அவர் வந்தார். ஆனால் திடீரென்று அங்கிருந்து ஓடிவிட்டார். அந்த பெண் மட்டும் வந்தார். அப்பெண்ணிடம், அவர் எங்கே சென்றார்? என்று கேட்டார். அப்பெண், ‘ஏன் அவர் எதுவும் தொந்தரவு கொடுத்து விட்டாரா? அவர் ஒரு பைத்தியம். பார்ப்பவர்களிடம் பழைய காசோலையை கொடுத்து விடுவார்’ என்றார். பணம் இருக்கிறது என்ற நம்பிக்கையில் முயற்சியால் வெற்றி பெற்றார்.

இன்றைய நற்செய்தியில், இயேசு, கடவுள் கொடுக்கும் வரங்களிலிருந்து நாம் பலன்தர வேண்டும் என்கிறார்.  பலன் தராதவர்கள் வெறுமைக்கு ஆளாவார்கள் என்ற கருத்தையும் தருகிறார். எல்லா வசதியும் நிறைந்த  திராட்சைத் தோட்டத்தை குத்தகைக்கு விடுகிறார். பலன்தர வேண்டிய காலத்தில் பலன் பெற்று வர தலைவர் தம் பணியாளர்களை அனுப்புகிறார். குத்தகைகாரர்கள் பலன்தர மறுத்ததோடு, தலைவர் தன் பதிலாளிகளாக அனுப்பிய பணியாளர்களை அவமானப்படுத்தி துன்புறுத்துகின்றனர். கடைசியாக தலைவர் அனுப்பிய அவரின்  மகனையே  கொலை செய்கின்றனர். இஸ்ரயேல் மக்கள், எவ்வாறு கடவுள் தந்த நலன்களை புறக்கணித்தனர், கடவுள் அனுப்பிய இறைவாக்கினர்களையும் அவமதித்தனர். கடைசியாக இறைமகனாகிய இயேசுவையும் கொன்றனர் என்ற இயேசுவின் காலத்தின் நிலவிய சூழலை சுட்டிக் காட்டும் விதமாக இந்த உவமை அமைந்திருந்தது. முதல் வாசகத்தில் இஸ்ரயேல் குலத்தாரே, அவர்களிடமிருந்து நீதி, நேர்மை விளையுமென்று இறைவன் எதிர்பார்த்திருந்தார். ஆனால் விளைந்ததோ, இரத்தப்பழி முறைப்பாடு என்று விளக்கம் கொடுக்கப்படுகிறது.

வாய்ப்புகள் என்ற நதியில்தான் நம் வாழ்க்கைப் படகை செலுத்த வேண்டும். வாய்ப்புகளைக் கண்டு கொள்ளாதவர் வளர முடியாது. உயர முடியாது. தாலந்து உவமையும் (மத் 25:14 - 30). இன்றைய நற்செய்தியில் கொடுக்கப்பட்டுள்ள திராட்சைத் தோட்ட உவமைக்கு ஒத்தது என்று சொல்லலாம். கொடுக்கும் தாலந்தை பெருக்கியவர் பாராட்டும் பரிசும் பெறுகின்றனர். பெற்ற தாலந்தை முடக்கி வைத்தவர் கண்டனத்திற்கு ஆளாகின்றார்.

நம் ஒவ்வொருவருக்கும்  பல நலன்கள், திறமைகள் வழங்கப்பட்டுள்ளன. அந்நலன்களைக் கொண்டு பல நலன்களைப் பெருக்க வேண்டும். பெற்ற நலன்களிலிருந்து மற்றவர்களுக்கு நலன்கள் கொடுக்கப்பட வேண்டும். இன்றைய நற்செய்திப்பகுதியில் கூறப்பட்டுள்ளது போல, பலன்களை குத்தகையைப் போல் தர வேண்டும். பெற்ற நலன்களை நமக்குள்ளே முக்கிக் கொள்ளும் இயல்பு நம்மிடையே உள்ளது.

திறமைகளை எப்படி பயன்படுத்துகிறோம்  என்பதில்தான் மகிழ்ச்சி பிறக்கிறது.      - ஹர்மன் ஹஸ்ஸே.

எல்லோரிடமும் திறமைகள் உள்ளன. ஆனால் ஒரு சிலர்தான் வீரத்தோடு அது காட்டும் சவாலான வழியில் நுழைகிறார்கள்  
- எரிகாயுங்.                                      

புனித ஜெபமாலை மாதா

புனித  ஜெபமாலை மாதா

கேத்தரீன் ஆரோக்கியசாமி, திருச்சி

(ஜெபமாலையைப் பற்றிய வரலாற்றை அழகாக அருட்பணி. பிரான்சிஸ் அவர்களின் கட்டுரை விளக்குகிறது. இங்கு திருமதி கேத்தரின் அவர்கள் தனது ஜெபமாலைமாதா பங்கினைப் பற்றியும் தன் சொந்த ஜெபமாலை ஆன்மீக அனுபவத்தையும் தருகிறார்)

ஜெபமாலை என்பது மரியாவை புகழும் சங்கீதமாகும். இறைவனின் சங்கமமாக ஓர் எளிய வழிமுறையாகும். வானவனின் வார்த்தையை 150 முறை சொல்லி ஜெபிக்க கூடிய ஒரு ஜெபம், எவ்வாறு தாவீது பாடிய பாடல்கள் 150 உள்ளனவோ, அதே போல் இறைமகன் இயேசுவின் வாழ்வை சித்தரிக்கும் ஒரு வழிமுறையாக தோன்றியதுதான் இந்த ஜெபமாலை.

உலக மக்கள் அனைவரையும் ஜெபமாலை ஜெபிக்க புனித 5ம் பத்திநாதர் அழைத்தார். இவரே ஜெபமாலையின் முதல் தந்தை என்று அழைக்கப்படுகிறார். 1572 ஆம் ஆண்டில் கிறிஸ்தவர்களுக்கும், துருக்கியர்களுக்கும் நடந்த போரில் கிறிஸ்தவர்கள் வெற்றி பெற்று விழாவாக கொண்டாடினர். 1572ல் 13ஆம் கிரகோரி ஜெபமாலை திருவிழாவை உருவாக்கி அதை அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் ஞாயிற்றுக் கிழமையில் கொண்டாடச் செய்தார். அதையே நாமும் அக்டோபர் மாதத்தை ஜெபமாலை மாதாவின் மாதமாக பாவித்து முதல் வார ஞாயிற்று கிழமையில் திருவிழாவாக கொண்டாடுகிறோம்.

திருச்சியில் சின்ன ரோமபுரி என்று வர்ணிக்கப்படும், புனித ஜெபமாலை ஆலயம்தான் மிகமிக பழமையான புனித தளமாகும். புனித வியாகுல மாதா ஆலயம், புனித ஜெபமாலை மாதா ஆலயம், பழைய கோயில்  என்று மக்களால் அழைக்கப்படும் இந்த கோவிலில்தான் புனித ஜெபமாலை அன்னை வீற்றிருந்து அனைவர்க்கும் அன்னை இயேசுவின் அருள் புரிந்து வருகிறார்.

அன்னை மரியாள் லூர்து நகரில் 3 சிறுமிகளுக்கு காட்சி கொடுத்த போது அவர்களுக்கு ஜெபம் செய்யவும், ஜெபமாலை செய்யவும் கற்றுக் கொடுத்தார்கள். ஆனால், அந்த ஜெபமாலையையே கையில் ஏந்தி மக்களுக்கு எவ்வாறு ஜெபிக்க வேண்டும் என்பதை கற்பிப்பது போல் அன்னை வீற்றிருக்கிறாள் என்றால், அது பழைய கோவில் என்று எல்லா மதத்தினராலும் அழைக்கப்படும் புனித ஜெபமாலை அன்னை ஆலயம் தான்.

நான் சிறுமியாக இருக்கும்போது கன்னியர்களும், குருக்களும் தமது இடுப்பில் உள்ள கயிற்றில் ஜெபமாலையை அணிந்திருப்பதை பார்த்து மகிழ்ந்திருக்கிறேன். இது அவர்களின் அடையாளம் என்று கொண்டாடியிருக்கிறேன். காலப்போக்கில் இந்த பழக்கம் புடவை கட்டுவதில், பேண்ட், சட்டை போடுவதிலும் அழிந்துவிட்டது என்பது உண்மை.

வரலாற்றை புரட்டிப்பார்க்கும் போது இந்த பழமையான கோவில்தான் முதன் முதலாக திருச்சியிலே கட்டப்பட்ட தேவலாயம் என்று சொல்லப்படுகிறது. கி.பி. 18ம் நூற்றாண்டில் வீரமாமுனிவர் வந்து இந்த ஊரில் இறைப்பணி ஆற்றினார் என்பது வரலாறு. இவரின் பெரும் முயற்சியால் திருச்சி செங்குளத்திற்கு அருகில் உள்ள இடத்தை குறுநில மன்னரான சந்தாசாகீப் அன்பளிப்பாக கொடுத்த இடத்தில் இயேசுசபை குருவான அருள்திரு.பெர்டினான்ட் மெடல் என்பவரால் எழுப்பப்பட்ட இவ்வாலயம், சில நாட்களில் தீக்கிரையானதால், அதே இடத்தில் 1748ல் மற்றொரு ஆலயம் கட்டப்பட்டது. 1780ம் ஆண்டு பத்திரவாத சபை குருக்கள் மீண்டும் பணியாற்றினர். 1838ம் ஆண்டிலிருந்து இயேசு சபை குருக்கள் மீண்டும் பணியாற்றினர். 1938ம் ஆண்டிலிருந்து பழைய கோவில் பணி பொறுப்பு திருச்சி மறை மாவட்ட குருக்களிடம் ஒப்படைக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது.

சுற்று வட்டார கிராம, நகர்புற மக்கள் ஜெபமாலை அன்னையின் புதுமைகளை உணர்ந்து அன்னையிடம் அருள்  பெற வேண்டி ஒவ்வொரு வருடமும் ஜெபமாலை மாதா திருவிழாக்கு திருயாத்திரையாக வந்து அருள் பெற்று செல்கின்றனர். பல ஆண்டுகளாக குழந்தை இல்லாதவர்கள் அன்னையிடம் வரம் வேண்டி, குழந்தை வரம் கிடைக்கப் பெற்றதால், பிள்ளைக்குட்டிமாதா என்று அன்புடன் அழைக்கப்படுகிறார்.

ஒவ்வொரு வருடமும், நான் அன்னையிடம் வேண்டும் வரங்களை தவறாமல் கிறிஸ்துவிடமிருந்து பெற்று தந்து என்னை ஒரு எழுத்தாளியாக உயர்த்தி அவரது புகழை என் எழுத்துக்களில் வடிக்க கருணை புரிந்திருக்கிறார் என்பது உண்மை.

இத்தகைய சிறப்பு வாய்ந்த அன்னை வீற்றிருக்கும், இந்த ஆலய திருவிழாக்களை பங்கு மக்களின் பெரும்  பங்களிப்புடன் பங்கு தந்தையர்களும், புனித வியாகுல மாதா மடத்து கன்னியர்களும், பங்கு பேரவை, இளைஞர் பேரவை, மற்றும் உள்ள அனைத்து சபைகளுடன், திரு.ஜோன்ஸ் ஆண்ட்ரூ பாடகர் குழுவின் இனிமையான குரல்களின் பங்களிப்புடன் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

ஜெபமாலை அன்னையின் வரலாற்றை தெரிந்து கொள்ள எனக்கு வழிகாட்டிய  அந்துவான், முன்னால் பங்கு தந்தை          ஜோசப் தற்போதைய பங்கு தந்தை அவர்களுக்கும், திரு.பிலோமின்ராஜ், முன்னால் மேலாளர் இருதயபுரம், கூட்டுறவு வங்கி, இருதயபுரம் அவர்களுக்கும் ஜெபமாலை மாதா பற்றிய வரலாற்று குறிப்புகளை தந்துதவியதற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கிறிஸ்தவர்கள் நாம் அனைவரும் இறை அன்பில் ஒன்றுபடுவோம். ஜெபமாலை அன்னையின் அருள் பெற்று

கனவுகளைத் தகர்த்த காலன் நீட்

கனவுகளைத் தகர்த்த காலன் நீட்

பேராசிரியர், முனைவர் எஸ்.பி. பெஞ்சமின் இளங்கோ னி. M.A., B.L.,M.Phil., Ph.D

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள குழுமூர் காலணியில் பிறந்து வளர்ந்த, தாழ்த்தப்பட்ட வகுப் பைச் சேர்ந்த  அறிவார்ந்த மாணவி அனிதா (வயது 17), தனது பிளஸ்‡2 தேர்வில் 1200க்கு 1176 மதிப் பெண் களைப் பெற்றும்.    ‘நீட்’  (NEET - The National Eligibility cum Entrance Exam) தேர்வில்  700க்கு 86 மதிப்பெண்களைப் பெற்றதால் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வில் பங்குபெறும் வாய்ப்பு இவருக்குக் கிடைக்கவில்லை. 

அனிதாவின் தந்தை திரு.சண்முகம், திருச்சி காந்தி மார்க்கெட்டில் கூலித் தொழிலாளியாக உள்ளார். இவரது தாயார் ஆனந்தி சில ஆண்டுகளுக்கு முன்பு இயற்கையயய்திய துன்பச்சூழலில் ‘நீட்’ தேர்வை இரத்து  செய்துவிட்டு  பிளஸ்‡2  மதிப்பெண்களின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை நடத்த வேண்டுமெனக்கோரி அனிதாவும் மற்றும் சில மாணவ மாணவியரும் சென்னை உயர்நீதி மன்றத்திலும், டெல்லி உச்சநீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்திருந்தனர். தீர்ப்பு சாதகமாக இல்லாததால் மனமுடைந்த அன்புச்சகோதரி அனிதா தனது நான்கு சகோதர்கள், தந்தை, பாட்டி ஆகிய யாரும் வீட்டில் இல்லாத போது தூக்கிட்டுத் தன் இன்னுயிரை மாய்த்துக் கொண்டார்.

மாநில அரசு இந்த ஓராண்டுக்கு விலக்கு அளிக்கக்கோரி மத்திய அரசுக்கு அனுப்பிய சட்ட வரைவுக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் கிடைக்காததாலும், உச்சநீதி மன்றத்தின் ஆனையாலும் ‘நீட்’ தேர்வு கட்டாயமானது. இந்தப் பேரிடியைத் தாங்கமுடியாத அனிதா விரக்தியின் உச்சக் கட்டத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது மத்தியில் கூட்டாச்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற கூட்டாட்சித் தத்துவத்தின் அடித்தளத்தையே ஆட்டம் காணச்செய்துள்ளது.

அனிதாவின் தற்கொலை தமிழகத்தை மட்டுமல்ல, மனசாட்சியுள்ள அனைவரையும் ஒட்டுமொத்தமாக உலுக்கியது. விளைவு, அரசியலில் எதிர்கட்சியினரும், அனைத்துக் கல்லூரிகளின் மாணவச் சமுதாயமும் இந்தச்  சமூக அநீதியை அறவே ஒழிக்க அறப்போராட்டங்களை நடத்திவரும் வேளையில் உச்சநீதிமன்றம் ‘நீட்’ தேர்வை எதிர்த்து சட்டம் ஒழுங்கு கெடும் அளவிற்கு மறியலோ, ஆர்ப்பாட்டங்களோ நடத்தக்கூடாது என்று தடை விதித்துள்ளது.

வேலூரில் 1918ல் தொடங்கப்பட்ட உலகப் புகழ்வாய்ந்த மருத்துவக் கல்லூரியான வேலூர்  சி.எம்.சி. மருத்துவக் கல்லூரி, தனது கொள்கையாக, சமூக அக்கறையுடன் குழுக்களாகப் பணியாற்றும், தன்னலமற்ற ஏழை எளிய மாணவ, மாணவியர் கிராமங்களில் சேவை செய்யும் வேட்கையுடன் மருத்துவப் பணியைத் தொடரத் தனியாக தேர்வு நடத்தி, அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்த அனுமதிகோரி, உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர். ஆகவே இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையைத் தற்காலிமாக நிறுத்தி வைத்து, அடுத்த மாதம் (அக்டோபர்) 11ந் தேதி உச்சநீதிமன்றத்தில் தாங்கள் ஏற்கெனவே தொடர்ந்த வழக்கில் வரவுள்ள தீர்ப்பை எதிர்நோக்கியுள்ளனர்.

உலகிலேயே மிகச்சிறந்த மருத்துவர்களை உருவாக்கிய, தலைசிறந்த மருத்துவக் கல்லூரிகள் இருப்பது தமிழகத்தில்தான். மாவட்டந்தோறும் ஒரு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டு அதிக அளவில் மருத்துவக் கல்விக்கான  இடங்களைக் கொண்டதும் தமிழகம்தான்.

சி.பி.எஸ்.இ. அமைப்பால் நடத்தப்படும் ‘நீட்’ மருத்துவக்கல்லூரி நுழைவுத்தேர்வு, தமிழகத்தைப் பொறுத்த வரையில், தமிழ்வழிக் கல்வி, மற்றும் தமிழகப் பாடத்திட்டம், மேலும் மெட்ரிக்குலேசன் பள்ளிப்பாடத் திட்டங்களுக்குக் கீழே படிக்கும் அறிவார்ந்த தமிழக மாணவச் சமுதாயத்தின் தலையில் பேரிடியாக இறங்கியுள்ளது. எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் எப்படியும் தமிழக  அரசும் இந்த வருடம் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு ‘நீட்’ தேர்விலிருந்து விலக்குப் பெற்றுத் தந்துவிடும் என்ற நம்பிக்கையும், அனிதா உட்பட ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாயத்தையும் வஞ்சக வலையில் வீழ்த்தியுள்ளது. திடுமென வந்த சுனாமிப் பேரலை உயிர்களைக் காவு வாங்கியதுபோல ‘நீட்’ தேர்வு முடிவுகள், தமிழகத்திலுள்ள மாணவ மாணவியர், ஆசிரியர் சமுதாயம், பெற்றோர்கள், கல்வியாளர்கள் ஆகிய அனைவரின் நெஞ்சங்களையும் சுக்குநூறாக்கி விட்டது.  

பதவி பறிபோகும் பயத்துடன், துணிச்சலற்ற, ஏனோதானோ அலட்சியப் போக்குக்கொண்ட மாநில அரசும், அதிகார  மமதையோடு, மாநில அரசை அடிபணியவைக்கும் நோக்கோடு ஒவ்வொரு காயையும் நகர்த்தும் மத்திய அரசும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஆணிவேரான கூட்டாச்சித் தத்துவத்தையே கூறுபோட்டுள்ளன.

‘வடக்கு வாழ்கிறது ! தெற்குத் தேய்கிறது’ என்ற பேரறிஞர் அண்ணாவின் கூற்றை மத்திய மாநில அரசுகளின் மெத்தனச் செயல்பாடுகள் மெய்ப்பிக்கின்றன.  பெரியார், அண்ணா, காமராசர் அமைத்த சமதர்ம பூமியில் இடஒதுக்கீட்டுக் கொள்கை திட்டமிட்டுத் தவிடுபொடியாக்கப்பட்டு வருகின்றதோ என்ற பெருங்கவலை சமுதாய நலச் சிந்தனையாளர்களை ஆட்கொண்டுள்ளது.

‘நீட்’ தேர்வால் விளையும் நன்மைகள் ஏராளம் என்று எக்காளமிடுவோர், இந்தியா பல்வேறு மொழிகள், கலாச்சாரம், சமயங்கள், சமூக, பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை உள்ளடக்கிய பன்முகத் தன்மைக்கொண்ட நாடு என்பதை எள்ளளவும் மறந்து விடக் கூடாது. அதிக மருத்துவக் கல்லூரிகள் உள்ள தமிழகத்தில், நம்  தமிழக கிராமப்புற ஏழை மாண மாணவியர். அதிகளவில் தலைசிறந்த மருத்துவர்களாகும் அரிய வாய்ப்புகளைப் பிற மாநிலத்தவர்க்குத் தாரை வார்த்துக் கொடுக்கும் அரசியல் சூழ்ச்சியாக ‘நீட்’ அமைந்து விட்டது. தமிழகத்தின் தலைவிதி ! ‘நீட்’ தேர்வுக்கு கோச்சிங் என்ற பெயரில் கல்வி வியாபாரிகள் பல லட்சங்களைக் கல்லாக் கட்ட சாதகமான சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.  ‘ஏழைசொல் அம்பலம் ஏறாது’ என்ற சூழ்நிலையில் பல்லாயிரக்கணக்கான கிராமப்புற முதல் தலைமுறை மாணவர், மாணவியரின் M.B.B.S., BDS மருத்துவப்படிப்பு  எட்டாக்கனியாகிவிடும். தமிழகத் திலுள்ள பணமில்லாத, ஆனால் திறமை மட்டும் உள்ள ஏழை மாணவ மாணவியர் மருத்துவர்களாக முடியாத நிலை நிரந்தரமாகும் அபாயத்தைத் தமிழகம் எதிர்நோக்கியுள்ளது !

C.B.S.E. (Central Board of Secondary Education)  பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவ மாணவியர் ‘நீட்’ தேர்வில் அதிக அளவில் தேர்ச்சிபெற்று அதிக மருத்துவக்கல்லூரி இடங்களைக் கைப்பற்றியதும், திடீரென்று தாங்கள் பார்த்திராத, படித்திராத  C.B.S.E..  பாடத்திட்ட அடிப்படையில் கேட்கப்பட்ட ‘நீட்’ கேள்விகள், தமிழக மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த ஏழை மற்றும் நடுத்தர தமிழக மாணவர் மாணவியருக்கு எதிர்பாராத ஏமாற்றங்களை அளித்ததற்குத் தமிழகப் பள்ளிக் கல்வித்துறையும், பாடத்திட்டக் குழுவும், தமிழக அரசுமே தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும். பல ஆண்டுகளாகப் பள்ளிப் பாடத்திட்டம்  C.B.S.E.. பாடத்திட்டத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் மாற்றப்படாதது வேதனைக்குரியது. இனியாவது உலகத்தரம் வாய்ந்த,    C.B.S.E..  பாடத்திட்டத்தையும் விஞ்சும் அளவுக்குத் தமிழக  மாநிலப் பாடத்திட்டம், தொடக்க நிலையிலிருந்து தரம் உயர்த்தப்பட வேண்டும்,  ‘நீட்’ தேர்வு வினாக்கள் மாநில மொழிகளில் ஒரே மாதிரியாகக் கேட்கபடவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. ஆகவே 2018ல் ஒரே மாதிரியான வினாத்தாள் இந்தியா முழுவதும் அந்தந்த மாநில மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டு ‘நீட்’ தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று உச்சநீதி மன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்த குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி, வைக்க ஏழை எளிய மாணவச்சமுதாயம்  சமூகநீதிபெற,  காந்தி, அம்பேத்கார், பெரியார், காமராசர், அண்ணா ஆகிய உத்தமர்களின் உண்மையான உழைப்பு, தியாகம், வீண்போகாமல் பலனிக்க, கல்வியை மத்திய அரசின் பட்டியலிருந்து முன்பு போலவே மாநில அரசுகளின் பட்டியலுக்கு மாற்றுவதே இந்திய ஜனநாயகக் கூட்டாச்சிக்குப் பொருந்தி வலுசேர்ப்பதாகும்.

கல்லூரி உதவிப்பேராசிரியர் பதவி நியமன தகுதித்தேர்வான  (SET - State Eligibility Test) தேர்வைத் தமிழக அரசே நடத்தி  வருகின்றது. ‘நீட்’ தேர்வை மட்டும் சி.பி.எஸ்.இ. நடத்துவது திட்டமிட்ட சதியாகத்தான் எடுத்துக்கொள்ளப்படுகின்றது. பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் மீண்டும் தமிழக ஏழை கிராமப்புற மாணவ மாணவியர் தேர்வு செய்யப்பட ‘நீட்’ தேர்வுமுறை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். அப்போதுதான் இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி மத்தியில் கூட்டாச்சியும், மாநிலத்தில் சுயாட்சியும் பாதுகாக்கப்பட்டு ‘எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்’ என்ற சமதர்ம சமூகநீதி உயிர்வாழும்.

‘நீட்’ தேர்வு நடந்த தேர்வு மையங்களில், கண்காணிப்பாளர்களின் மிரட்டல் தொனியும், கனிவற்ற போக்கும் இளவயது பள்ளி மாணவ மாணவியரைப் பெரும் அச்ச உணர்வோடு தேர்வை எதிர்நோக்க வைத்ததால் மிரட்சியுற்ற அனிதா போன்ற அறிவார்ந்த மாணவ மாணவியர் கூட ‘நீட்’ தேர்வில் வெற்றிபெற இயலாமல் போனது மிகப்பெரிய கொடுமை. பெரும்பாலும் தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் நடத்தப்படும் உயர்தர அரசு மருத்துவக் கல்லூரிகளின் பெரும்பாலான மருத்துவ இடங்கள் வேற்று மாநில மாணவ மாணவியருக்குப் போவதற்குத் தமிழக மக்கள்,  ஏன் செலவழிக்க வேண்டுமென்ற நியாயமான சமூகநீதிக் கேள்வியையும் மேனாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எழுப்பியுள்ளது பெரிதும் சிந்திக்கத்தக்கது. எப்படி கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் ஏழை, நடுத்தர தமிழக மாணவ மாணவியர்க்கு ‘நீட்’ தேர்வு எமனாகவே அமைந்துள்ளது.

பெருமை நிறைந்த முதுமை

பெருமை நிறைந்த முதுமை

 - நல்லை இ. ஆனந்தன், வேதியர்

முதுமை ஒரு சாபமல்ல. அது ஒரு வரம். ஏனெனில் அது சில பேருக்குக் கிடைப்பதில்லை. ஆனால் பெருகி வருகின்ற முதியோர் இல்லங்கள் நாட்டிற்கு அவமானங்கள். கொடுமையான நாகரீக  வளர்ச்சியின் கொடூர முகங்கள்.  கடந்த நூற்றாண்டில் முதியோர்கள், வீட்டில், ஊரில், நாட்டில் தலைவர்களாக, நடுவர்களாக, வழிகாட்டிகளாக மதிக்கப்பட்டனர். பெருமை மிகுந்த அந்த முதுமை இந்த நூற்றாண்டின்தான் பெரிய பிரச்சனைக்குரியதாக மாறிப் போனது.  உலக சுகாதார நிறுவனம் 2020ல் உலகில் ஆயிரம் மில்லியன் முதியோர்கள் இருப்பார்கள் என்று கணக்கிட்டுள்ளது. அதில் 142 மில்லியன் முதியோர்கள் இந்தியாவில் மட்டும் இருப்பார்கள் என்றும், அவர்களைப் பேணிகாப்பது பிரச்சனையாகும் என்றும் கவலை தெரிவித்துள்ளது.
முதியோர் இல்லத்திற்கு வந்த ஒரு தாத்தாவிடம் அதன் பொறுப்பாளர், இந்த இல்லத்தை உங்கள் வீடு மாதிரி நினைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினாரம். உடனே அந்த தாத்தா கோபத்துடன் வெளியேறினாராம். பொறுப்பாளர் பதறிப்போய் விபரம் கேட்டபோது, வீட்டை மறக்கத்தான் இந்த இல்லம் வந்தேன் என்று கண்ணீருடன் பதில் கூறினாராம். சிரிக்காதீர்கள். இது நகைச்சுவை அல்ல! அவலச் சுவை.
உங்கள் இல்லத்தின் முதிர்யோர்களை எங்களிடம் அனுப்புங்கள். நாங்கள் அனைத்தையும் பார்த்துக்கொள்கிறோம். பணம் மட்டும் மாதாமாதம் நீங்கள் அனுப்பினால் போதும். சிறிதளவு பணத்தில் முதியோர்க்கு பாதுகாப்பு. உங்களுக்கும் விடுதலை என்ற விளம்பரங்கள் கட்டிடத்தின் படத்துடன், கலரில் நாலு தாத்தாபாட்டி சிரித்தபடி இருக்கும் புகைப்படத்துடன் விளம்பரங்கள் ஊடகங்களில் வெளியாவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
இன்றைய முதியோர்கள் நேற்றைய இளைஞர்கள். முந்தா நாள் சிறுவர்கள். அவர்களை கவனியாது விடுவது, கரித்துக் கொட்டுவது வார்த்தைகளால் நிந்திப்பது. பட்டினி போட்டு வதைப்பது, பாசம் காட்ட மறுப்பது, நடுத்தெருவில்  அலைய விடுவது எல்லாமே கடவுளே சகிக்க முடியாத கொடூரங்கள்.
இது வேகமான உலகம். வீட்டிலுள்ள அனைவரும் ஓடிஓடி சம்பாதிக்க வேண்டிய நெருக்கடியான காலகட்டம். எனவேதான் முதியோர்களை கைகழுவும் பழக்கம் உருவாகிவிட்டது. உடல்தளர்ச்சி, ஞாபக மறதி, கண்பார்வைக் குறைவு, பக்கவாதம், மூட்டுவலி, நரம்புத் தளர்ச்சி, செரிமானமின்மை, கூன் விழுதல், நடக்க முடியாத நிலை என்று முதியோர்கள் சுமக்கும் சிலுவைகள் ஏராளம்.
இது நமது நாட்டில் மட்டுமல்ல எல்லா நாடுகளிலும் பரவி வருகின்ற அநாகரிக கலாச்சாரமாகி விட்டது. இன்னும் பத்து வருடங்களில் சீனாவில் இளையோரைப் போல இருமடங்கு முதியோர்கள் இருப்பார்கள் என்று கணக்கிட்டு, அவர்களுக்கான வழிமுறைகளை ஆய்வுகள் வழியாக ஆலோசித்து வருகின்றது. ஆக, இது இனி உலகபிரச்சனையாக உருவெடுக்கப் போகின்றது.
பணம் இல்லாததால் முதியோர்கள் காப்பகத்திற்கு வருகிறார்கள் என்று எண்ணமுடியாது. நான் சந்தித்த தாத்தா ஒருவர், மாதம் நாற்பதாயிரம் பென்சன் வாங்குகிற ஓய்வு பெற்ற அரசு அதிகாரி. அவருக்கு மூன்று பிள்ளைகள். பென்சன் வந்ததும் ஆளுக்கு பத்தாயிரம் பிரித்துக் கொடுத்துவிட்டு தனது பத்தாயிரத்துடன் முதியோர் இல்லம் வருகிறார். அவர் கூறியது, மூன்று பிள்ளைகளுமே பாசமானவர்கள். மொத்தப் பணத்தையும் தன்னிடம் கொடுத்துவிட்டு சுகமாக இருங்கள் என்று ஒவ்வொருவருமே அழைக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை நான் ஓர் ஏடி.எம் இயந்திரம். அது எனக்கு உடன்பாடில்லததால் நான் முதியோர் இல்லத்தில் இருக்கிறேன் என்றார்.
               ஆனால் சாமிமுத்துவின் கதை வேறு. அவருக்கு எட்டுப் பிள்ளைகள். ஆனால் அவர் ஊரின் நாடகமேடையில் படுத்திருந்தார். பேசியபோது, எட்டுப்பிள்ளைகளுக்கும் வீடு கட்டிக் கொடுத்து, திருமணம் செய்து வைத்து, என் கடமைகளை நிறைவேற்றி விட்டேன். மனைவி போயிட்டாள். ஆனால் பிள்ளைகள் அங்கே போ.. இங்கே போ.. என்று விரட்டுகிறார்கள்.  ஞாயித்துக் கிழமை பூசைக்குக்கூடப் போகாமல் ஆடிஓடி சம்பாதிச்சேன். என்ன புண்ணியம்? நடுத்தெருவுல நிக்கறேன். நான் என்னப்பா தப்பு செய்தேன்? என்றார்.
             நீங்கள் செய்த தப்பு எது தெரியுமா தாத்தா? ஞாயிறு பூசைக்குப் போகாததுதான். நீங்கள் போயிருந்தால் பிள்ளைகளும் வந்திருப்பார்கள். மறையுரை, மறைக்கல்வி கேட்டிருப்பார்கள். இயேசு வேணாம். காசு வேணும்னு ஓடினீங்க. காசு கைவிட்டிருச்சு. ஞாயிற்றுக்கிழமை பூசைக்குப் போகாதவன் நடுத்தெருவுலதான் நிப்பான். இனியாவது இயேசுகிட்ட வாங்க அவர் கைவிடமாட்டார் என்றேன்.
அன்புமிகுந்த தாத்தா பாட்டிகளே, அறிவுரையாக இல்லாமல் ஆலோசனையாக பின்வருபவற்றைக் கேளுங்கள். முதலில் உங்கள் உடல்நலத்தில் அக்கறை செலுத்துங்கள். உடல்நலம் கெடும்போது, உங்கள் பிள்ளைகள் உங்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால்  அவர்களின் வேலை பாதிக்கப்படும். வருமானம் போய்விடும். எனவே உடல்நலனை கவனிக்கவும், பேரன் பேத்திகள், கொள்ளுப் பேரன்கள், கொள்ளுப் பேத்திகளோடு நீங்கள் மகிழ்ந்திருக்க உங்கள் உடல்நலனை கவனியுங்கள். எச்சரிக்கையின்றி கீழே விழுந்து எலும்பு முறிவு ஏற்படுத்தி, அன்பு முறிவுக்கு அடிகோலாதீர்க ள். நேரம் போகவில்லை என்று வருந்த வேண்டாம். செபம், அன்பியம், திருப்பலி, பக்த சபைகள், யோகா, தியானங்கள் என்று பல்வேறு வழிகள் உள்ளன. இவை உடல்நலம் மட்டுமல்ல மனநலத்திற்கும் வழிவக்கும். பிறகு நேரம் போதவில்லை என்பீர்கள்.
குடும்ப உறவுகளைக் கொச்சைப்படுத்தும், குடும்ப உறுப்பினர்கள் சிலரின் அற்பபுத்திகளை வெளிப்படுத்தும் தொலைக்காட்சித் தொடர்கள், உங்கள் மனதில் எதிர்மறை எண்ணங்களை உருவாக்கிவிடும். எனவே அத்தகைய தொலைக்காட்சித் தொடர்புகளைப் புறக்கணியுங்கள்.
உங்கள் பிள்ளைகளை, பேரப்பிள்ளைகளை நல்ல நிறுவனங்களில் படிக்க வையுங்கள். கத்தோலிக்க நிறுவனங்கள் நடத்தும் கல்விக்கூடங்களில் மறைக்கல்வி நன்னெறி வகுப்புகள் நடைபெறுவதால் உங்கள் சந்ததி ஒளிமிக்கதாய் உலகில் வாழும்.
நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். எளிதான உடற்பயிற்சி அது. ஏராளமான வியாதிகளை விரட்டியடிக்கும் சக்தி அதற்கு இருக்கிறது. அவநம்பிக்கை ஆட்கொள்ளும் நேரம் இது. மரணபயம் அசைத்துப் பார்க்கும் நேரம் இது. கடவுளை நம்புங்கள். இறைநம்பிக்கையும் தன்னம்பிக்கையும் உங்கள் வாழ்வை உயர்த்தும். கடவுளுக்கு  அஞ்சி வாழுங்கள். அவர் தமக்கு அஞ்சுவோர்க்கு ஆயிரம் தலைமுறைகள் நன்மை செய்யக்கூடியவர். மனித பலவீனத்தில்  தவறுகள், குடி, புகைப்பழக்கம் ஆளாகுதல் போன்ற தீமைகளிலிருந்து  விலகி  இருங்கள். ஏனெனில் கடவுளுக்கு எதிராகச் செயல்படுவோரை அவர் நான்காம் தலைமுறைவரை கணக்கு கேட்பார் என்கிறது திருவிவிலியம். கடவுளின் பேரன்பை நினைத்துப் பாருங்கள்.  தண்டனை நான்கு தலைமுறைகளுக்கு. ஆசீரோ ஆயிரம் தலைமுறைகளுக்கு. திருவிவிலியத்தில் நீதிமொழிகள் புத்தகத்தை ஒருமுறை வாசித்துப் பாருங்கள் உண்மை புரியும். உலகம் தெரியும். வாழ்க்கை வளமாகும். எனவே அன்பான முதியோரே, முதுமையிலே சிறுமையடைவதையும் அதனால் மனம் வெறுமை அடைவதையும் தவிர்த்து முதுமை ஒரு பெருமை என்பதை வாழ்ந்து காட்ட வாருங்கள். இளையோரே... மண்ணுலகில் நெடுங்காலம் வாழ உங்கள் பெற்றோரை, பெரியோரை தயவு செய்து மதிக்க ஆரம்பியுங்கள். ஏனெனில்  கடவுளின் கட்டளைகளில் நான்காவது உன் பிதாவையும் மாதாவையும் சங்கித்திருப்பாயாக. கடவுளே, பலவிதங்களில் முதியவர்கள் வாழ்வில் அற்புதங்கள் செய்தார் என்கிறது விவிலியம். 
முதியோரே, இளையோரே ! இதைச் செய்வீர்களா?  நீங்கள் செய்வீர்களா?...

ஜெயம் தரும் ஜெபமாலை

ஜெயம் தரும் ஜெபமாலை

திருமதி. க. சந்தோசம் லியோ, M.A.; B.Ed.,
விரகாலூர்.
வானதூதர்  மரியாளின் சந்திப்பு
 என்னை வாழ அழைத்தது !
 ஜெயம் தரும் ஜெபமாலையால்....

மரியாள்  எலிசபெத்தின் சந்திப்பு
  பிறரை நேசிக்கச் செய்தது !
  ஜெயம் தரும் ஜெபமாலையால்....

 மன்னவன் இயேசுவின் பிறப்பு
 என்னை எளிய வாழ்விற்குள்
 அழைத்துச் சென்றது !
 ஜெயம் தரும் ஜெபமாலையால்....

யோர்தான் ஆற்றின் அனுபவங்கள் !
என்னில் விடுதலையை கொண்டு வந்தது !
ஜெயம் தரும் ஜெபமாலையால்....

காணாவூர் திருமணம்
என் வாழ்வை  அதிசயமாக்கியது
ஜெயம் தரும் ஜெபமாலையால்....
.
நற்கருணையின் தியாகம்
  என்னை பிறனிடத்தில்
  அன்பு கூறச் செய்தது !
  ஜெயம் தரும் ஜெபமாலையால்....

இயேசுவின்இரத்த வியர்வை
என் பாவங்களை கழுவிச் சென்றது !
ஜெயம் தரும் ஜெபமாலையால்....

கற்றூனில் கட்டி  அடிக்கப்பட்டதும்
என் ஆணவம் அழிக்கப்பட்டது !
  ஜெயம் தரும் ஜெபமாலையால்....

இயேசுவின்  முள்மூடி கண்டதும்
என் குற்றம் என்னுள்  நொறுக்கப்பட்டது !
ஜெயம் தரும் ஜெபமாலையால்....

  சிலுவையின் துயரம்
  என்னில் மன்னிப்பை வளர்த்தது !
  ஜெயம் தரும் ஜெபமாலையால்....

 சிலுவையில் பிரிந்த உயிர்
 என்னில் மீட்பை சேர்த்தது !
 ஜெயம் தரும் ஜெபமாலையால்....

  உயிர் மீண்டும் எழும்போது
  விசுவாசம் என்னை
மனிதனாக மாறச் செய்தது !
ஜெயம் தரும் ஜெபமாலையால்....

 ஆம்
 ஜெயம் வேண்டும் உள்ளத்துக்கு
 ஜெபமாலை அனுதினம் செய்யும்
 அதிசயம் பல !

பணிவு என்னும் இனிய பாதை

பணிவு என்னும் இனிய பாதை

16. நிறைய கேளுங்க... கொஞ்சமா பேசுங்க...

அருள்பணி. மகுழன், 
பூண்டி மாதா தியான மையம்

ஆற்றுப்படுத்துதல் (Counsellin) நம் அன்றாட வாழ்வில் அண்மைக் காலமாக அதிgகரித்து விட்டது என்று சொல்லலாம்.  ஆற்றுப்படுத்துதலில் முக்கியமான படி (Step) என்னவென்றுத் தெரியுமா? அதை சற்று விபரமாகக் காணலாம். குடும்பப்பிரச்சனை உள்ள ஒருவர் (Client) உங்களிடம் வருகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் உங்களிடம் வந்து இவ்வாறு சொல்கிறார், ‘என் கணவர் குடிகாரர். தன் சம்பளம் முழுவதையும் குடித்தே தீர்த்து விடுகிறார். தினமும் வீட்டில் சண்டைதான். நாங்கள் சண்டை போடுவதால் என் இரண்டு பிள்ளைகளும் என் பேச்சை கேட்பதில்லை. பிள்ளைகள் சரியாக படிப்பதில்லை. குடும்பத்தில் நிம்மதி இல்லை. எனவே எனக்கு வாழவே பிடிக்கவில்லை’ என்று  சொல்லி அழுகிறார். உங்களுடைய பதில் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா? ‘சரிம்மா, உங்கள் பிரச்சனை எனக்குப் புரிகிறது. உங்கள் கணவர் குடிகாரர். அதனால் உங்களுக்கு பணப்பிரச்சினை மனஉளைச்சல். அதுமட்டுமல்ல வீட்டில் சமாதானம் இல்லாததால் உங்கள் பிள்ளைகள் உங்களுக்கு மதிப்பு கொடுப்பதில்லை. படிப்பிலும் கவனம் இல்லை. எந்த அளவிற்கு நீங்கள் மனஉளைச்சளில் இருக்கிறீர்கள் என்றால் தற்கொலை செய்து கொள்ளலாமா என்று கூட நினைக்கிறீர்கள். என்னம்மா நான் சொல்வது சரிதானே?’ இவ்வாறு அவர் சொன்னதையே திரும்பச் சொல்லி நீங்கள் அவரது பிரச்சனையை உற்று கவனித்தீர்கள். அவர்கள் மேல் அன்பு, மிகுந்த இரக்கம் (Empathy) கொண்டுள்ளீர்கள். அவர்கள் பிரச்சனையை மதிக்கிறீர்கள் என்பதை வெளிப்படுத்த வேண்டும். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் அவர்கள் பிரச்சனையை நன்கு கவனித்து கேட்டு அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டீர்கள் என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்.

ஆற்றுப்படுத்துதலுக்கு மட்டுமல்ல நம் வாழ்விற்கு நம் வாழ்வின் வெற்றிக்கு, நம் வாழ்வின் மகிழ்ச்சிக்கு சிறந்த காரணி பிறருக்கு செவிமடுப்பதாகும். இந்த உலகில் மிகவும் எளிதான காரியம், இயல்பானக் காரியம் எதுத் தெரியுமா? பிறருக்கு அறிவுரைக் கூறுவதுதான். இந்த உலகில் மிகவும் கடினமானக் காரியம் எது தெரியுமா? பிறர் கூறும் அறிவுரைகளுக்கு செவிமடுப்பதுதான். நாம் அறிவுரைக் கூறும் ஒவ்வொரு முறையும், பிறர் நமக்கு அறிவுரை கூறும்போது நமக்கு எவ்வளவு கடினமாக இருக்கிறது என்பதை நினைத்துப்பார்க்க வேண்டும். நாம் பிறருக்கு அறிவுரை  கூறுவதற்கு முன்னால் அவர்களுடைய சூழ்நிலை, அவர்களுடைய இயல்புகள், அவர்களுடைய இயலாமைகள் அனைத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஒரு பங்கில் நான் பங்குத்தந்தையாக இருந்த போது அந்தப்பங்கில் கிறிஸ்மஸ் ஜோடனையை இளைஞர்கள் செய்துக்  கொண்டிருந்தார்கள். அந்த ஊரில் உள்ள பெரியவர்கள் ஜோடனை முடிந்தவுடன் அப்படி செய்யலாம், இப்படி செய்யலாம் என்று ஆலோசனை சொல்வது வழக்கம். அதனால் அந்த ஆண்டு ஜோடனை செய்யும்போது ஒரு காரியத்தை இளைஞர்கள் செய்தார்கள். ஜோடனைக்கு முன்பு ஒரு போர்டு வைத்து அதில், ‘தயவு செய்து கருத்து வேண்டாம்’ என்று எழுதி வைத்தார்கள். அறிவுரைகளை வாரி வழங்குவதற்கு ஒரு முக்கியக் காரணம் இருக்கிறது தெரியுமா? அதாவது பிறருக்கு என்ன தெரியும்? இளைஞர்களுக்கு என்ன  தெரியும்? வயதானவர்களுக்கு என்ன தெரியும்? என்ற ஆணவ எண்ணம்தான். ஒவ்வொருவருக்கும் ஒரு சிறப்பு இருக்கிறது. நம்மிடம் உள்ள சிறப்புகள் மற்றவரிடம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் மற்றவரிடம் உள்ள சிறப்புகள் நம்மிடம் இல்லை என்பதையும் மனதில் வைப்போம். பொதுவாக வலது என்பதை விட இடது என்று சொல்லும்போது கொஞ்சம் தாழ்வாக நினைக்கிறோம். ஆனால் இடது பக்கத்திற்கும் ஒரு சில சிறப்புகள் இருப்பதைக் கவனித்தீர்களா? ஆம், நாம் போன்னை  எடுப்பது பொதுவாக நம் இடக்கையினால். நாம் போன்னை வைப்பது பொதுவாக நம் இடக்காதில். நம் இதயம் இருப்பது நம் இடதுப்பக்கம்தான். நாம் பயணம் செய்வதும் இடதுபுறம்தான். 

ஒரு         Taxi Driverஐ விட நாம் சிறப்பாக காரை ஓட்டுவது கடினம். ஏனென்றால் அதில் அவர் அதிக பயிற்சிப் பெற்றிருக்கிறார். ஒரு நல்ல விவசாயியைவிட நாம் நன்கு பயிரிடுவது கடினம். ஏனென்றால் அவர் வானிலை, காலமாற்றம், மண்வளம் போன்றவற்றில் நம்மைவிட அதிகம் ஞானமிக்கவர். சாதாரண வேலை செய்யும் துணி துவைப்பவர்கள், தட்டச்சு செய்வோர், கார் மெக்கானிக் இவர்களைவிட நாம் அதிகமாக பணம் வைத்திருக்கலாம். கெளரவமான வேலையில் இருக்கலாம். ஆனால் அவர்கள் வேலையில் அவர்கள்தான் திறமைசாலிகள்.  அவர்கள் பணிகளில் 50% சதவீதத்தை கூட நாம் அறிந்து கொள்வது கடினம். அப்படி இருக்கின்றபோது நாம் அறிவுரைகளை எல்லாருக்கும் வாரி வழங்க நமக்கு என்ன உரிமை இருக்கிறது என்பதை சற்று நினைவில் கொள்ள வேண்டும்.  
நான் பணிபுரிந்த ஒரு பங்கில் மணி என்ற பெயருடைய ஒருவர் இருந்தார். அவர் பெயரே  Idea மணி. ஏனென்றால் அவர் எல்லாருக்கும் Idea க்களை வாரி வழங்குவார். ஒரு முறை எனக்குத் தெரிந்த ஓவியர் (Artist) ஒருவரை அந்தப் பங்கிற்கு வரவழைத்து பீடத்திற்கு மேல் சிலுவையைச் சுற்றி கல்வாரி நிகழ்வை வரையுமாறு கேட்டுக் கொண்டேன். அவர் திறமையான ஓவியர். மாதா, யோவான் மற்றும் கள்வர்கள் அனைத்தையும் சிறப்பாக வரைந்திருந்தார். அதற்கு பின்னணியாக மரங்களையும், பறவைகளையும் வரைந்திருந்தார். அவர் முடித்த பிறகு Idea மணி  வந்தார். என்னிடம் சொன்னார்.  Father  எல்லாம் நன்றாக இருக்கிறது. ஆனால் இதில் ஒரு சிறிய குறை இருக்கிறது. சிலுவையின் இடதுபுறம் மூன்றுப் பறவைகள், வலதுபுறம் இரண்டு பறவைகள் என்று இருந்தால் சிறப்பாக இருக்கும் என்றார். மனிதரை திருத்தவே முடியாது என்று நினைத்துக் கொண்டேன்.
  இன்னொருப் பங்கிலே ஈஸ்டரின் போது ஆலயத்தில் தண்டமாலைகளை இளைஞர்கள் கட்டிக்கொண்டு இருந்தார்கள். நான் அந்தப்பக்கமாக போனேன். அப்போது உயரம் சரியாக இருக்கிறதா என்று பார்க்கச் சொன்னார்கள். வலதுபக்கம் உள்ள மாலையை 2 இன்ச் தூக்குங்கள் என்றேன். தூக்கிக்கட்டி விட்டு இப்போது சரியாக இருக்கிறதா? என்றுக் கேட்டார்கள். இல்லை, இல்லை 2 இன்ச் இறக்குங்கள் என்றேன்.  Father  முன்பே அங்குதானே கட்டி இருந்தோம் என்றார்கள். ‘அதுசரி என்னிடம் ஆலோசனை கேட்டபிறகு நான் எதுவும் சொல்லாமல் இருந்தால் நன்றாக இருக்காது. அதற்காகத்தான் சொன்னேன்’ என்றேன். என் நகைச்சுவை உணர்வை எண்ணி சிரித்தார்கள்.
அறிவுரையும், ஆலோசனையும் கேட்டால் கொடுங்கள் அல்லது கொடுப்பதற்கு முன்பு இது தேவையா என்று பலமுறை யோசியுங்கள். ஆனால் மற்றவர்கள் தரும் ஆலோசனைகளை கூர்ந்து கவனியுங்கள். சாதாரண மனிதர்கள் மூலமாகக் கூட ஆண்டவர் நமக்கு ஆலோசனைகளைத் தருவார்.
                                                                                                                                                 (தொடரும்...) 
   


Monday 2 October 2017

இன்றைய தமிழில் வீரமாமுனிவர் அருளிய திருக்காவலூர்க் கலம்பகம்

இன்றைய தமிழில் 
வீரமாமுனிவர் அருளிய திருக்காவலூர்க் கலம்பகம்

-அருள்பணி.ச. லூர்துசாமி, பவனமங்களம்.   

பேரின்பம்  ஈட்ட
கலி விருத்தம்:
 தங்கடேக மதங்கடீர மறக்கடேயுக தாழ்வெலா
மங்கவேத வறங்கடேற மனங்கடேர வழங்கிவா
னங்கிலாப மடைந்துவாழ வடங்கலேதிருக் காவலூர்
நங்கைசேவடி நம்பிநாளு நயந்துசூடுக நாடியே.   (பாடல் எண் 11)

ஓங்கு உடல் நலம்
           உயர்ந்து வாழ
 வீங்கு பாவம்
             வீழ்ந்து மடிய
 தேங்கு தாழ்வு
               தினமும் போக
 மங்கா அறங்கள்
              மலையாய் உயர
 குன்றா புகழுடை
               மனிதர் சேர
 தேடிய செல்வம்
             வாடிய மனிதர்க்கு
 நாடியே நல்கி
             பேரின்பம் ஈட்ட
 பாடியே வருவீர்
             பாருலகோரே
 திருகாவலூர் அன்னை
           திருவடி மலரை
 மலரடி சூடி
           மகிழ்திடுவீரே...!   

‘பெண்களின் ‘என்னங்க’ என்பதற்கு பல அர்த்தங்கள்’

‘பெண்களின் ‘என்னங்க’ 
என்பதற்கு பல அர்த்தங்கள்’ 


குளியல் அறையில் நின்று கொண்டு என்னங்க என்று அழைத்தால்:

சுவரில் பல்லி இருக்கிறது எனக்கு பயமாயிருக்கிறது என்று அர்த்தம்
.
உணவகத்தில் சாப்பிடும் போது என்னங்க என்று அழைத்தால்:

சாப்பிட்டது போதும், ரசீதை கொண்டு வரச்சொல்லி பணத்தைக் கட்டுங்கள் என்று அர்த்தம்.

கலியாண வீட்டில்  என்னங்க என்று அழைத்தால்: 

யாரோ தெரியாதவர் வந்திருக்கிறார் வாங்க அவரிடம்பேச வேண்டும்  என்று அர்த்தம்.  

துணிக்கடையில் என்னங்க என்று அழைத்தால்: 

தேடிய சேலை கிடைத்து விட்டது என்று அர்த்தம்.

வண்டியில் செல்லும்போது என்னங்க என்று அழைத்தால்:

வண்டியை நிறுத்துங்க பூ வாங்க வேண்டும் என்று அர்த்தம்.

மருத்துவமனைக்குச் செல்லும்போது   என்னங்க என்று அழைத்தால்:

மருத்துவரிடம் நான் பேச வேண்டும் என்று அர்த்தம்.

வீட்டுக்கு வெளியே பார்த்து என்னங்க என்று அழைத்தால்:

யாரோ தெரியாதவர் வெளியே நிற்கிறார் என்று அர்த்தம்.

அலமாரியின் முன் நின்று கொண்டு என்னங்க என்று அழைத்தால்:

பணம் வேண்டும் என்று அர்த்தம்.

சாப்பாடு எடுத்து வைக்கும் போது என்னங்க என்று அழைத்தால்:

சாப்பிட வாங்க என்று அர்த்தம்.

 சாப்பிடும் போது என்னங்க என்று அழைத்தால்: 

சாப்பாடு சுவையாயிருக்கிறதா? என்று அர்த்தம்.

நடக்கும் போது என்னங்க என்று அழைத்தால்: 

விரலைப் பிடித்துக் கொள்ளுங்கள் என்று அர்த்தம்.

கண்ணாடி முன்பு நின்றுக் கொண்டு என்னங்க என்று அழைத்தால்:

போட்டிருக்கும் நகை ஒப்பனை நன்றாயிருக்கிறதா சொல்லுங்கள் என்று அர்த்தம். 
   
காலமெல்லாம் சொன்னவள் கடைசி மூச்சின்போது  என்னங்க என்று அழைத்தால்: 

என்னையும் அழைத்துச்  செல்லுங்கள் என்று அர்த்தம்.

என்னங்க என்ற வார்த்தை இல்லையயன்றால்

எல்லாமே முடிந்து விட்டது என்று அர்த்தம்.

வெற்றி உங்கள் கையில்

வெற்றி உங்கள் கையில் 

அருட்திரு. எஸ். ஜான் கென்னடி
பூண்டி புதுமை மாதா கல்வியியல் கல்லூரி, சமயபுரம்

முழுக்கவனமும்  புதிய சிந்தனையும்


குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதன் பெயரை தெரியாதர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஒரு மரம் நட வேண்டும்  என்றாலும் அல்லது மரத்தை பிடுங்க வேண்டும் என்றாலும்  இந்த  Machine  இல்லாத இடமே இருக்காது. எவ்வளவு கோடி செலவு செய்து கட்டிடம் கட்டினாலும் இதன் பங்கு 1% ஆவது இருக்கும். என்ன  Machine என்று கண்டுபிடித்து விட்டீர்களா? 
Correct M.  சொல்றீங்க. ஆமாங்க JCB Machine தான். எப்படி இந்தப் பெயர் வந்தது?  Joseph Cyril Bamford என்ற பெயரை தான் சுருக்கமாக மூளீய  என்று சொல்கிறோம். ஏன்னா இந்த Machine யைford கண்டுபிடித்தவரே அவர்தான். அதனால் அவர் பெயரையே வைச்சுட்டாங்க.    Joseph Cyril Bamford  இங்கிலாந்து நாட்டில்  Uttoxeter என்ற இடத்தில்  ஜீன் 21, 1916ல் ஏழைக்குடும்பத்தில் பிறந்தார். இவரது குடும்பம் நல்ல ஒரு கத்தோலிக்க குடும்பம், இவர் படித்தது Buisness Management . ஆனால் Engineering  துறையில் அதிக ஆர்வம் இருந்தது. இவர் ஒரே நேரத்தில்  JCB Machine யை கண்டு பிடிக்கவில்லை. சின்ன சின்ன கண்டுபிடிப்புகள் மூலமாகத்தான் இந்த நிலைக்கு வந்திருக்கிறார். 1944ல் Electric Welding யை கண்டு பிடித்தார். 1945ல் அக்டோபர் மாதத்தில் இங்கிலாந்து நாட்டின் Uttpxeter  என்ற இடத்தில்  JCB  நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை நிறுவினார். 1951ல் அவர் தயாரித்து அனைத்து கருவிகளுக்கும் மஞ்சள் நிற வர்ணம் இருக்க வேண்டும் என்ற திட்டத்தை நிறைவேற்றினார். தற்போது கூட எல்லா JCB  Machineம் மஞ்சள் நிறத்தில்தான் இருக்கும். ஏன் மஞ்சள் நிறம்? மஞ்சள் நிறம் அனைவரின் கவனத்தையும் விரைவாக ஈர்க்கும் சக்தி கொண்டது. மனிதர்கள் தாங்கள் பார்க்கும் பொருட்களில் மஞ்சள் நிறப்பொருளைத்தான் முதலில் பார்ப்பார்கள். சிவப்பு நிறத்தை விட மஞ்சள் நிறத்தை ஒளி குறைவான இடத்திலும் நமது கண்கள் கண்டுபிடிக்கும் என்று அறிவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். அதற்கும் மேலாக பாதுகாப்புத் தன்மைக்காகவும் இந்த நிறம் பயன்படுத்தப்படுகிறது. நம் நாட்டிலும் கூட பள்ளி ஊர்திகள் அனைத்தும் மஞ்சள் நிறத்தில் உள்ளதர்க்கும் இதுதான் காரணம். 1953 ஆம் ஆண்டு JCB யின் Logo உருவாக்கப்பட்டது. 1979இல் நம் இந்திய நாட்டில் JCB Company  ஆரம்பிக்கப்பட்டது.

  JCB நிறுவனம் 22 தயாரிப்பு நிறுவனங்களை ஆசியா, ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா கண்டங்களில் நிறுவியிருக்கிறது. 150 நாடுகளுக்கு மேலாக இதனுடைய உற்பத்தி கருவிகளை வியாபாரம் செய்கிறது. 10,000 ஏக்கர் நிலப்பரப்பில் தனது தலைமை அலுவலகத்தை செயல்படுத்தி 11,000 பணியாளர்களுக்கு வேலை வாய்ப்பினை அளித்து வருகிறது. 300 விதமான கருவிகளை தயாரிக்கிறது. இந்த நிறுவனம் அமெரிக்க நாட்டு இராணுவத்திற்கு தேவையான கருவிகளை உற்பத்தி செய்து தருகிறது. உலக அளவில் அரசு சார்ந்த நிறுவனம் JCB  மட்டும்தான். இன்னும் ஒரு முக்கியமான விசயம். மூன்று தோண்டும் கருவிகளை ஒருவர் வாங்கினால் அதில் ஒன்று JCB  நிறுவனத்தின் கருவியாக இருக்கும். அந்த அளவிற்கு இதன் தாக்கம் உலகெங்கும் பரவியிருக்கிறது. உலக அளவில் Construction Machine தயாரிப்பில்  முதல் இடத்தில் இருக்கும்  இந்நிறுவனத்தின் தலைவர் Joseph Cyril Bamford  மார்ச் 1, 2001 ம் ஆண்டில் 84 ஆம் வயதில் இயற்கை எய்தினார். தற்போது அதனுடைய தலைவராக அவரின் மகன்  Antony Bomford  சிறப்பாக செயல்படுகிறார். எப்படி இப்படிப்பட்ட சாதனையை செய்து இந்நிறுவனம் வெற்றி நடைபோடுகிறது என்று சிந்தித்து பார்த்தால் Joseph Cyril Bamford  அவரின் மந்திர  சொற்கள் தான் காரணமாக அமைகிறது.  Focus on What you do best and be Innovative  இவ்வார்த்தைகள் தான் அவரை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது.

‘எதை மிக நன்றாக செய்ய முடியுமோ அதில் முழு கவனத்தையும் செலுத்தி புதிய சிந்தனைகளோடு செயல்பட்டால் வெற்றி நிச்சயம்’.Joseph Cyril Bamford  வியாபாரம் சம்பந்தப்பட்ட படிப்பை படித்திருந்தாலும் பொறியியல் துறையில் மிக நன்றாக செயல்பட முடியும் என்று உணர்ந்து கவனத்தை செலுத்தினார். புதிதாக சிந்தித்து பல கருவிகளை உருவாக்கினார். JCB நிறுவனத்தை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்று வெற்றி வீரராக மாறினார். நம் வாழ்விலும் நாம் எதை மிக நன்றாக செய்யமுடியும் என்பதை கண்டுணர்ந்து அதில் கவனத்தை செலுத்தி புதிய சிந்தனைகளை புகுத்தினால் வெற்றி நம் வசப்படும். அப்போது உங்கள் பெயரையும் இந்த உலகம் வாசிக்கும். சரித்திரமும் அதை பதிவு செய்யும்! நீங்களும் வெற்றி வீரர்களாக வலம் வரலாம்!
 “தளராத இதயம் உள்ளவனுக்கு
 இவ்வுலகில் முடியாதது என்று எதுவுமே இல்லை”          - புக்கன்ஸ். 

Sunday 1 October 2017

இயேசுவின் புனித முகம் காட்டும் திருச்செபமாலை

இயேசுவின் புனித முகம் காட்டும்  திருச்செபமாலை

 அருள்பணி. அ. பிரான்சிஸ், பாபநாசம்

கத்தோலிக்கத் திருச்சபையில் பல பக்தி முயற்சிகள் உள்ளன. இவற்றுள் காலத்தால் முந்தையதும், எளிதில் அனைவராலும் சொல்லக் கூடிய செபமாகவும் திகழ்வது செபமாலை. இதுவே இறை - மனித ஒன்றிப்பின் அடையாளமான அருள் மாலை. இது நமது பாரம்பரியச் சொத்து. பாமரர் முதல் படிக்காதவர் வரை அனைவரையும் ஒருங்கிணைக்கும் எளிய வழியிலான தியானமுறை. நமக்கே உரித்தான தனி அடையாளமே செபமாலைதான். 

 செபமாலையின் வரலாறும், வளர்ச்சியும்: 

இன்று நம் கரங்களில் தவழ்ந்து செபிக்கத் தூண்டும் செபமாலை தனக்கேயுரிய வரலாற்றுப் பின்னணியினைக் கொண்டதாகும்.

 கொலோசியம் மறைசாட்சியர்: 

  உரோமைக்குச் செல்வோர் அனைவரின் சிந்தை கவர்வதும் இளந்திருச்சபை அனுபவித்த  கொடூரமான வேதனைகளை நம் கண்முன் கொண்டு வருவதன் சின்னமாகத் திகழ்வது கொலோசியம் என்ற விளையாட்டு  அரங்கம். சிறுவர், இளையோர், முதியோர் என எல்லாப் பருவத்தினரும் கிறிஸ்தவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக வன விலங்குகளுக்கு இரையாக்கப்பட்டனர். இவர்களின் வேதனைகளைக் கண்டு இன்ப ரசனையில் ஈடுபட்டது அன்றைய ஆட்சியாளர் கூட்டம்.
இத்தகைய வேதனைகளை அனுபவித்து இயேசுவுக்காய் இன்னுயிரைத் தந்த இந்த மறைச்சாட்சியர் தங்களது தலைகளில் ரோசாக் கீரிடம் சூட்டிக் கொண்டு மகிழ்ச்சி கீதம் இசைத்துக் கொண்டு வன விலங்குகள் முன் வீரத்தோடு துள்ளிக் குதித்து மகிழ்ந்தனர். மரித்த இவர்களின் மலர்க்கிரீடங்களை பொறுக்கி வந்து விசுவாசிகள் மாலைகளாகக் கோர்த்து இறைப்புகழ்ச்சிப் பாடல்களைப் பாடினர். இதுவே செபமாலை தோற்றத்தின் முதல் படி எனலாம். 

பாலைவனத் தந்தையர்:

எகிப்தின் பாலைவனத்தில் தவ வாழ்வு வாழ்ந்து வந்த புனித வனத்து அந்தோணியார், புனித வனத்து சின்னப்பர் போன்ற பலரை நாம் பாலைவனத் தந்தையர் என்கிறோம். இவர்கள் தங்களுக்குக் கிடைத்த கூழாங்கற்கள் அல்லது தானியங்களை 150 எண்ணிக்கையில் சேர்த்து திருப்பாடல்களைப் பாடி வந்தனர். 

பாமரர் வாழ்வில் ...

இவர்களைத் தரிசித்து இவர்களின் ஆலோசனையின்படி படிப்பறியா பாமரர்களும் 150 முறை மிகவும் எளிமையாக மங்கள வார்த்தை செபம் சொல்லிச் செபித்து வந்தனர்.

 துறவிகள்: 

  9,10,11,12 ஆகிய நூற்றாண்டுகளில் ஆங்காங்கே உலக இன்பத்தினை வெறுத்து இறைவனையே தங்களது வாழ்வின்  ஒரே சொந்தமெனக் கருதிய பலர் பல குழுக்களாகத் துறவு மடங்களை நிறுவிச் செயல்பட்டனர். இவர்கள் 50 முறை கர்த்தர் கற்பித்த செபம், 50  முறை மங்கள வார்த்தை செபம் சொல்லிச் செபித்தனர். தங்களின் கவனம் சிதறாமல் இருப்பதற்காக கம்பி இழைகளில் மணிகள் போல் கோர்த்துப் பயன்படுத்தி வந்தனர்.

அல்பீஜியன்ஸ் தப்பறையாளர்களும், புனித தோமினிக்குவும்:

பிரான்ஸ் நாட்டின் தென் பகுதியில் அல்பி என்ற அல்பீஜியன்ஸ் என்னும் புதிய கொள்கை உருவாகிறது. அவர்களின் முக்கிய தவறான போதனைகள்: இயேசு உண்மையான மனித உடலில் தோன்றவில்லை. உலகில் கானும்படி மட்டும் தோன்றினார். எனவே உடலின் உயிர்ப்பு இல்லை. திருவருட்சாதனங்கள் இல்லை. திருமணம் செய்துக்கொள்வதை எதிர்த்தனர். 12,13 ஆம் நூற்றாண்டுகளில்  உருவான  இந்தத் தப்பறைக் கொள்கையினால் ஐரோப்பியத் திருச்சபை ஆட்டம் கண்டது. குருக்களும், துறவிகளும் பெரும் நெடிக்கடிக்கு உள்ளாயினர். எங்கும் கலகங்களும், குழப்பங்களுமே மிகுந்திருந்தன. கத்தோலிக்க  தேவாலயங்களும், பரிசுத்த பொருட்களும் அவசங்கைக்குள்ளாயின. திருச்சபை அழிக்கப்பட்டு வருமோ என்ற அச்சமும், கவலையும் எளிய நம்பிக்கையாளர்களின் மனதினை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. இந்த இக்கட்டான நேரத்தில்தான் ஆண்டவர் தோமினிக்கு என்னும் கர்த்தூசியன் சபைக் குருவை வல்லமையாகப் பயன்படுத்தினார். இவர் அன்பீஜென்ஸ் கொள்கை கொண்டோரை மனம் மாற்ற பத்தாண்டுகள் கடுமையாகக் போராடினார். இந்த இழிநிலை மாறிட அன்னை மரியாவை நோக்கிக் கண்ணீரோடு செபித்தார்.

செபமாலையினைக் கரங்களில் ஏந்திய மாதாக் காட்சி:
1208 ஆம் ஆண்டு அன்றொரு நாள் டோமினுக் ப்ருயில்லே என்னும் ஆலயத்தில் காதலாகி, கசிந்துருகி செபித்துக் கொண்டிருந்தார். இதோ! ஆங்கே கரங்களில் ஜெபமாலை ஏந்தியபடி கண்ணைப் பறிக்கும் அன்னை மரியா. ஒளியுடன் டோமினுக்குவை நோக்கி வந்தார். இந்த உலகின் எல்லாப் பாவங்களுக்கும் பரிகாரமாகக் கபிரியேல் வானத்தூதரின் வாழ்த்துச் செய்தியோடு செபியுங்கள். எனது மகனின் பிறப்பு, வாழ்வு, மரணம், உயிர்ப்பு என்னும் மறைபொருள்களைத் தியானியுங்கள் என்று சொல்லி மறைந்தார். இவ்வாறு செபமாலை பக்தி பரவுவதற்கு டோமினிக்குவே முதல் கருவியாகத் தெரிந்து கொள்ளப்பட்டார்.

அல்பீஜினியர்களின் மனமாற்றம்:

அன்னை மரியாவின் காட்சியினால் உற்சாகம் அடைந்த தோமினிக்கு துலூஸ் மாநகர் சென்றார். ஆலயக் கதவுகள்  தாமாகவே திறக்கின்றன. ஆலயமணிகள் தாமாகவே ஒலியயழுப்புகின்றன. மக்கள் கூட்டம் ஆலயத்துள் நிறைகின்றது. மாதாவின் காட்சி பற்றியும், அவர் தந்த செய்தி பற்றியும் எடுத்துரைக்கின்றார் தோமினுக்கு. ஆனால் இவரின் பேச்சினை நம்பாத அல்பீஜினியர்கள் ஆலயத்தினை விட்டு வெளியேற முனைகின்றனர். ஆனால் என்ன ஆச்சரியம். வானம் திறந்து இடி, மின்னலோடு கூடிய மழை, கடும் பனி போன்றவை திடீரென எழும்பி இவர்களைத் தடுத்து நிறுத்துகிறது. அக்கனமே மனம் மாறிச் செபமாலை செபிக்க ஆரம்பிக்கின்றனர். வாழ்விலும் மாற்றம் காணுகின்றனர்.

அக்டோபர் மாதம் செபமாலை மாதம் எனப்படுவதன் வரலாற்று நிகழ்வு:

16  ஆம் நூற்றாண்டில் முஸ்ஸீம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இடையில் பெரும் போர் மூண்டது. திருத்தந்தை 5 ஆம் பத்திநாதர் ஐரோப்பிய நாடுகளை உள்ளடக்கிய புனிதக் கூட்டமைப்பு ஒன்றினை உருவாக்கி போருக்கு ஆயத்தப்படுத்துகின்றார். கடும்போர் நடைபெறுகிறது. திருத்தந்தை மக்களோடு இணைந்து திருச்செபமாலையினைக் கரங்களில் ஏந்தி பக்திப் பரவசத்தோடு  செபிக்கின்றார். என்னே ஆச்சரியம். அன்னையின் பேருதவியினால் எதிரிப்படைகள் மீது கிறிஸ்தவர்கள் வெற்றிக் கொள்கின்றனர். அந்த நாள் 1571 ஆம் ஆண்டு அக்டோபர் 07. போரில் வெற்றிப் பெற்ற இடம் லெபாண்டோ. இறைமக்களோடு இணைந்து ஒரு நாள் முழுவதும்  திருத்தந்தை செபித்த ஆலயம் சாந்தா மரியா மஜியோரே. எனவேதான் இந்த நாள் செபமாலை மாதா திருவிழாவாகவும், அக்டோபர் மாதம் செபமாலை மாதா மாதமாகவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

நற்செய்தியின் சாரம் ஜெபமாலை:

மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் என்னும் நான்கு நற்செய்தி நூல்களும் இயேசுவின் வாழ்வினைத் தெளிவாக எடுத்துரைக்கின்றன. இதனை மையமாகக் கொண்டே செபமாலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு, பிறப்பு, வளர்ப்பு, புதுமைகள், போதனைகள், பாடுகள், மரணம், உயிர்ப்பு, போன்றவற்றினையே நாம் செபமாலையில்  தியானித்துச் செபிக்கின்றோம். மகிழ்வின் மறை உண்மைகள், ஒளியின் மறை உண்மைகள், துயரின் மறை உண்மைகள், மற்றும்  மகிமையின் மறை உண்மைகள்,  போன்ற நான்கு தலைப்புகளில் இருபது மறை உண்மைகளை தியானித்துச் செபிக்கின்றோம். எனவே செபமாலை என்பது நற்செய்தியின் சாரம் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.

இயேசுவின் புனித முகம் காட்டும் திருச்ஜெபமாலை:

இயேசுவின் வாழ்க்கை வரலாற்றினையும், போதனைகளையும் மட்டும் தியானிக்கச் செய்வது ஜெபமாலை அல்ல. மாறாக இறைவனின் மீட்புத் திட்டத்தில் அன்னை மரியாவின் பங்களிப்பு, இறைமகன் இயேசுவின் மீட்புச் செயல் பங்களிப்பு, இறைமகன் இயேசுவின் மீட்புச்செயல்பாடுகள் ஆகியவற்றையும் நாம் தியானிக்கின்றோம். அன்னை மரியா தந்த ஜெபமாலை அமலன் இயேசுவின் புனித முகம் காட்டும் அருள்மாலை. எனவே தினமும் ஜெபமாலை செபிப்போம். இயேசுவின் முகம் காண்போம். இறை மீட்புத் திட்டத்தில் நம்மையும் இணைத்துக் கொண்டு உலகின் ஈடேற்றத்திற்காக உழைப்போம்

Ads Inside Post