Pages - Menu

Wednesday 11 November 2015

நான் எழுத்தாளன் ஆனேன்

    ஸ்டாலுக்கு ஒரு புதிய கிளார்க் வந்திருந்தார். அவர் அருகில் அமர்ந்து, அப்போதுதான் வந்திருந்த ‘குமுதம்’ கட்டை பிரித்துக் கொண்டிருந்தேன். ‘கல்கண்டு’ம், குமுதம் கட்டுடன் சேர்ந்துதான் வசூல். கட்டை பிரித்துக் கொண்டிருந்த நான் அவரிடம் சொன்னேன், “தமிழ்வாணன் ரொம்ப நல்லா எழுதுறான் சார்” என்று.
    “அவரோட மச்சினன்தான் நான்” என்றார் அவர். நான் திடுக்கிட்டேன். என்னுடைய திகைப்பை அதிகமாக்குவது போல், அவர் சொன்னார் : “அதோ, பேப்பர் படித்துக் கொண்டிருக்கிறாரே, அவர்தான் அவரோட அண்ணன்” என வைரவன் செட்டியாரைக் காண்பித்தார்.
    திரு. வைரவன் செட்டியாரைப் பற்றி  சொல்லி விடுகிறேன். வைரவன் செட்டியார் திரு. இராமச்சந்திரனுடைய நண்பர். ஸி.ணூ.ளீ - யின் பிராவிடெண்ட் பகுதியில் உயர் அதிகாரியாக இருந்தார். தினசரி மாலையில் வருவார். திரு. இராமச்சந்திரனுடன் பேசிக் கொண்டிருப்பார். பத்திரிக்கைகளை உரிமையுடன் புரட்டுவார். வீட்டுக்குப் போகும்போது நான் துணைக்குப் போவேன்.
    அவர் வீடு கல்லுக்குழியில் இருந்தது. என்னைத் துணைக்கு அவர் தேர்ந்தெடுத்ததன் காரணம், நான் கொஞ்சம் டீயஸண்ட்டாக இருப்பேன் என்பதுதான். திருச்சி ஜங்­னில் 8 பிளாட்பாரங்கள் உண்டு. ஏராளமான தண்டவாளங்கள். இரவு நேரத்தில் ஒரு துணையுடன் போவது நல்லதல்லவா? இதுதான் என்னை அவர் தேர்வு செய்ததற்குக் காரணம்.
    அப்படி ஒருநாள் அவர் வீட்டுக்குப் போகும்போது, நான் ஒரு கதை எழுதித் தரேன். கல்கண்டுல போடச் சொல்றீங்களா சார்? என்று கேட்டேன்.
    நீ கதைகூட எழுதுவியாடா? என்று அவர் கேட்டார்.
    எழுதுவேன் சார். ஆனா, பத்திரிக்கைகளில் வந்ததில்லை என்றேன்.
    சரிடா, நான் அடுத்த வாரம் மெட்ராசுக்குப் போவேன். எழுதிக் குடு. போட சொல்றேன் என்றார். உடனே ஒரு கதை எழுதி, தபால் தலை வைத்து (கதை பிரசுரத்துக்கு ஏற்றதாக இல்லை என்றால், ஸ்டாம்ப் வைத்தால்தான் திருப்பி அனுப்புவார்கள் என்று படித்திருந்தேன்) அவரிடம் கொடுத்தேன்.
சென்னை சென்று திரும்பிய அவர், போட சொல்லி, சொல்லியிருக்கேண்டா என்றார். மேலும் அவர் ஆமா, கதை எழுதி என்கிட்டத் தானே குடுத்தே! அப்புறம் ஏண்டா ஸ்டாம்பு வச்சே? என்று கேட்டார். எனக்கு பதில் சொல்லத் தெரியவில்லை.
    1951ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 15ஆம் நாள் எனது முதல் சிறுகதை கல்கண்டில் அட்டைப் படக்கதையாக வெளியானது. நான் எழுத்தாளன் ஆனேன்.
    ஒருதடவை தமிழ்வாணன் திருச்சிக்கு வந்தார். அப்போது அவரது அண்ணன் வைரவன் செட்டியார், ரொம்ப ஏழைப் பையன், பார்த்துக் கொள் என்று சொன்னார். அதற்கு தமிழ்வாணன் இவன் நல்லா முன்னுக்கு வருவான் என்று சொன்னதோடு, அப்போது வெளியாகியிருந்த ஒரு சிறுகதையின் ஒரு பாராவைப் படித்துக் காண்பித்தார்.
    அன்று அவர் சொன்ன வாக்குப் பலித்தது. இன்று நான் ஒரு குறிப்பிடத்தக்க கத்தோலிக்க எழுத்தாளனாக இருக்கிறேன்.
    ஹிக்கின்பாதம்ஸ் புக் ஸ்டாலுக்கு அகிலன், சுகி, சுப்பிரமணியன், ராகவன், தாமரை மணாளன் போன்ற பிரபல எழுத்தாளர்கள் வருவார்கள். நான் கதை எழுதுகிறேன் என்று தெரிந்ததும், சிறுகதை எழுதுவதற்கான உத்திகளைச் சொல்லித் தருவார்கள். கதை எழுத வி­யம் கிடைத்ததோ இல்லையோ, நான் ஆங்கில அறிவை வளர்த்துக் கொண்டேன்.
(இன்னும் சொல்வேன்)
‡ திரு. லெயோ ஜோசப்

No comments:

Post a Comment

Ads Inside Post