Pages - Menu

Wednesday 11 November 2015

15-11-2015 பொதுக்காலம் 33ஆம் வாரம்

I. தானி 12 : 1 -  3 ; II. எபி 10 : 11 -  14, 18
நற்செய்தி : மாற் 13 : 24 -  32
இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது. மனம் மாற வேண்டும் (மாற் 1 : 15)
மானிட மகன் கதவை நெருங்கி வந்துவிட்டார் (மாற் 13 : 29)
ஆனால் அந்த நாளும் வேளையும் தந்தையைத் தவிர எவருக்கும் தெரியாது (மாற் 13 : 32)
இயேசவின் இரண்டாம் வருகை விரைவில் வர இருக்கிறது என்று ஒரு சில பிரிவினை சகோதரர்கள் தீவிரமாக பேசி வருகிறார்கள். அண்மையில், இளம்குரு ஒருவர் டெங்கு காய்ச்சலினால் திடீரென்று இறந்து விட்டார். சொர்ணமாணிக்கம் என்ற தீவிர நற்செய்தி பணியாளர் நேற்று (16- 10- 2015) அன்று திடீரென்று இறந்து விட்டார். இவையயல்லாம் எதிர்பாராதவை. கதிரவன் இருண்டுவிடும், நிலா ஒளி கொடாது. விண்மீன்கள் வானத்திலிருந்து விழுந்த வண்ணம் இருக்கும். அப்போது மானிட மகன் மேகங்கள் மீது மிகுந்த வல்லமையோடு மாட்சியுடனும் வருவார். வருகின்ற டிசம்பர் 16 முதல் 22 வரை உலகில் இருள் நிலவும் என்று நாசா நிறுவனத்தில் ஒருவர் கூறியுள்ளார். சூரியனில் ஏற்படும் ஒரு புயலினால் இப்படி உண்டாகலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர். சூரியன் இன்னும் 5 இலட்சத்தின் இலட்சம் ஆண்டுகளுக்கு (5 பில்லியன்) எரிந்து ஒளிக் கொடுக்கும். ஏற்கனவே 4.6 இலட்சத்தின் இலட்சம் ஆண்டுகளுக்கு (4.6 பில்லியன்) எரிந்து ஒளி கொடுத்துவிட்டது.
இன்றைய நற்செய்தி பகுதி, மாற்கு நற்செய்தியில் வருகிற இயேசுவின் இறுதி உரை (மாற் 13 : 1 -  37) என்ற தொகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இதில் மானிட மகனின் வருகையைப் பற்றியும் சீடர்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றியும் பார்க்கிறோம். கதிரவன் இருண்டுவிடல், நிலா ஒளி கொடுக்காதது என்பவை பழைய ஏற்பாட்டில் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன (எசா 13 : 10, எசே 32 : 7, ஆமோ 8 : 9 யோவேல் 2 : 10 -  31, 3 : 15, எசா 34 : 4, ஆகாஸ் 2 : 6 -  21 ). இந்த விண்ணக கோள்களின் அழிவு நிலை மானிட மகனின் வரவிற்குமுன்பாக நடைபெறுகிறது. பழைய ஏற்பாட்டில், விண்ணக கோள்களின் அழிவுநிலை தண்டனையின் அடையாளமாக காட்டப்பட்டுள்ளது. திருவழிபாட்டு ஆண்டின் கடைசி ஞாயிறன்று உலக முடிவினைப் பற்றியும், மானிட மகனின் வருகையைப் பற்றியும் படிக்கிறோம். உலக முடிவு பற்றி கவலைப்பட தேவையில்லை. ஏனென்றால் உலக முடிவு காலத்தைப் பற்றி தந்தை ஒருவருக்குத் தான் தெரியும். ஆனால் நம் வாழ்வு உலக முடிவைப் பற்றி நாம் சிந்தித்துப் பார்க்கலாம். நம் முடிவின் கால நேரத்தை தெரிந்துக் கொள்ள முடியாத நிலையில் பணிவுடனும், பரந்த மனப்பான்மையுடன் வாழ வேண்டும். தலையில் தூக்கிகிட்டு போரதில்லை என்று கூறுவோம். ஆனால், தலைகனம் பிடித்தவர்களாய், பொருள் ஆசை, பேய் பிடித்தவர்களாய் வாழ்கின்றோம். அரசியல்வாதிகள், செல்வந்தர்கள் பொருளுக்குமேல் பொருளும், பணத்திற்கு மேல் பணமும் சேர்க்கிறார்கள். பகிர்வதைப் பற்றி அவர்கள் நினைத்துப் பார்ப்பதில்லை. இந்தியாவில் 2 1/2 இலட்சம் கோடீஸ்வரர்கள் உள்ளனர். ஆளால் 32.7 சதவிகித மக்கள் வறுமை கோட்டிற்கும்கீழ் வாழ்கிறார்கள். நடமாடக் கோயில் நம்பர்க்கொன்று ஈயில் படமாடக் கோயில் பகவற்க தாமே -  திருமந்திரம்
ஏழையர் நடமாடும் கோயில். அவர்களுக்கு உதவிசெய்வது இறைவனுக்கே செய்வது என்று இயேசுவின் கருத்துக்களை அருமையான கவிதை வடிவில் கூறுகிறார். பகிர்தலினால் மரண பயம் போகும்.

-  அருட்பணி. S.I. அருள்சாமி

No comments:

Post a Comment

Ads Inside Post