Pages - Menu

Friday 30 September 2016

அக்டோபர் மாத புனிதர்கள்

அக்டோபர் மாத புனிதர்கள்

- அருள்சகோ.G.பவுலின் மேரி FASG
கும்பகோணம்

அக்டோபர் 4     அசிசி நகர்  புனித பிரான்சிஸ் (கி. பி 1181 - 1226)

பிறப்பு : இத்தாலி நாட்டில் அசிசி நகர், 1881

இளமை : செல்வந்தர் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து பிறகு செல்வங்களைத் துறந்து துறவு பூண்டார்.

தனிவரம் : இயற்கையில் இறைவனைக் கண்டு போற்றினார். விலங்கினங்கள் தன் நண்பர்கள் என்று அவைகளுடன் பழகினார். ஏழ்மையை தன் காதலி என்றார். மனிதரின் மாண்பினை உணர்த்த தொழுநோயாளரை கட்டி அரவணைத்தார். தற்போதைய திருத்தந்தை, இவரின் பெயரை தனதாக்கிக் கொண்டு இவரின் ஏழ்மையையும், எளிமையையும் பின்பற்றுகிறார். கிளாராம்மாளும் இவரின் வழியைப் பின்பற்றி தனி சபையை ஏற்படுத்தினார். இவரின் ஏழ்மை எளிமை ஆயிரக்கணக்கான இளைஞர்களை ஈர்த்தது. அவர்கள் இவரின் சபையில் சேர்ந்தனர். மூன்றாம் சபை என்ற பிரிவிலும் மக்கள் சேர்ந்து இவரின் வழியைப் பின்பற்றினர்.
இறப்பு : தன் 44வது வயதில் இறந்தார். இயேசுவின் ஐந்து காயம் வரம் பெற்றவர். 
 
க்டோபர் 7    புனித ஜெபமாலை அன்னை

மக்களும், துறவிகளும் பக்தியோடு மாதாவின் ஜெபமாலையை செபித்ததன் பயனாக 1571இல் கிறிஸ்தவர்கள் துருக்கியரைத் தோற்கடித்து வெற்றி பெற்றார்கள். இதற்கு நன்றியாக வெற்றிகளின் அரசி என்னும் விழா கொண்டாடும்படி திருத்தந்தை 5‡ஆம் பியுஸ் கி.பி.1573இல் ஏற்படுத்தினார். ஜெபமாலையை சொல்லும்போது ஆண்டவரது வாழ்வு, இறப்பு, உயிர்ப்பு, விண்ணேற்பு இவற்றைப்பற்றி சிந்திக்கிறோம். ஜெபமாலையின் தேவ இரகசியங்களைப்பற்றி சிந்திக்கும் நாம் இயேசு, மாதாவைப் போல வாழ முயலவேண்டும். ஜெபமாலையானது நம்மை மரியாளுடன் ஒன்றிக்கிறது.

அக்டோபர் : 9  புனித யோவான் லெயோனார்ட் (1541 - 1609)

இவர் இத்தாலியில் தஸ்கனிப் பகுதியில் கி.பி.1541இல் பிறந்தார். மருந்து செய்யும் கலையைத் கற்றார். ஆனால், அதைக் கைவிட்டுக் குருவாக விரும்பினார். போதிக்கும் திருப்பணி, சிறப்பாக சிறுவர்களுக்கு மறைக்கல்வி கற்றுக்கொடுத்தார். 1547இல் இறை அன்னையின் பெயரால், துறவற மறைபபணியாளர்கள் சபை ஒன்றை நிறுவினார். இதனால் துன்பங்கள் பல அடைந்தார். பின்பு திருமறையை பரப்ப மறைப்பணியாளர்களின் குழு ஒன்றை ஏற்படுத்தினார். திருத்தந்தையர் பலரின் தீவிர முயற்சியால் இன்று அது வளர்ச்சி கண்டு, உரோமை நிறுவனத்திற்கு அடித்தளம் இட்டவர் என்று கருதப்பட்டார். திருச்சபையின் பற்பல சபைகள் மீண்டும் தங்கள் ஒழுங்கு முறைப்படி செயலாற்ற பரிவன்புடனும், முன்மதியுடனும் பாடுபட்டார். உரோமையில் 1609இல் இறந்தார்.

அக்டோபர் 13  புனித எட்வர்ட் (1004 - 1066)

இவர் இங்கிலாந்து நாட்டில் 40 வயதில் அரசராக முடிசூட்டப்பட்டார். செபித்து, பிறரன்பு செயல்கள் செய்து மக்களைச் சார்ந்து, நீதி, விவேகத்துடன் ஆண்டு வந்தார். எனவே மக்கள் மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் வாழ்ந்தார்கள். 23 ஆண்டுகளாக நாட்டை ஆண்டார். அநியாயமாக யாரும் தண்டிக்கப்பட்டதில்லை. மக்கள் இவரைத் தெய்வமாகக் கருதினார்கள். தம் நாட்டுக்கு வர இருந்த தீமைகளை இவர் முன்னறிவித்தார். பின்னர் நிறைவேறிற்று. திருச்சபையின், நாட்டின் தலைவர்களுக்கும் சாந்தகுணம். நீதி, விவேகம் ஆகிய தேவையான புண்ணியங்களை அருளும்படி மன்றாடுவோம்.

அக்டோபர் 15               புனித அவிலா தெரசாள் (1515 - 1582)

இப்புனிதை ஸ்பெயினில்  அவிலா நகரில் கி.பி.1515இல் பிறந்தார். கர்மேல் கன்னியர் சபையில் சேர்ந்து நிறைவுப் பாதையில் விரைந்து முன்னேறினார். தம் சொந்த சபையைச் சீர்திருத்த முற்பட்டுத் துன்பங்கள் பலவற்றைப் பொறுமையுடன் தாங்கிக் கொண்டார். இதில் புனித சிலுவை அருளப்பர் உதவியினால் ஆண்களின் கார்மேல் சபையையும் சீர்திருத்தினாள். இடைஞ்சல்கள் அனைத்தையும் வீரத்துணிவோடு மேற்கொண்டார். மிக ஆழ்ந்த போதனை நிறைந்த நூல்களையும் எழுதினார். அந்நூல்கள் பயனுள்ளவை எனத் தம் சொந்த அனுபவத்திலேயே கண்டறிந்தார். இவர் ஆல்பா நகரில் 1582இல் இறைவனடி சேர்ந்தார்.

அக்டோபர் 18 புனித லூக்கா நற்செய்தியாளர்

இவர் சிரியாவில் உள்ள அந்தியோக்கியா நகரில் யூதரல்லாதார் குடும்பத்தில் பிறந்தார். திருமறையை முதலில் தழுவியவர்களில் இவரும் ஒருவர். இவர் எழுதிய நற்செய்தியில், எல்லையற்ற இரக்கத்தைக் காட்டும். ஊதாரிப் பிள்ளையின் உவமையை நமக்குத் தருகிறார். இவரின் நற்செய்தியில், சமத்துவம், பெண்களின் சிறப்பு, மன்னிப்பு, ஏழ்மை போன்ற சிறந்த கருத்துக்களைக் காணலாம். திருதூதர் பணிகள் நூலையும் இவர்தான் எழுதினார் என்பது அறிஞர்களின் கருத்து. இவர் ஒரு சிறந்த ஓவியர் என்றும் நம்பப்படுகிறது.

அக்டோபர் 24   புனித அந்தோணி மரிய கிளாரட் (1807 - 1870)

இவர் ஸ்பெயின் நாட்டில் சாலந்தில் கி.பி.1807இல் பிறந்தார். திருநிலைப்பாடு அடைந்து, பல ஆண்டுகள் கத்லோனியப் பகுதி எங்கும் சென்று மக்களுக்குப் போதித்தார். மறைபரப்பும் பணிக்கென்று சபை ஒன்று நிறுவினார். பின்பு கியுபா தீவின் ஆயரானார். மக்களின் மீட்புக்காக மிகத் திறம்பட உழைத்தார். இவர் நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். செபமாலை பக்தியையும், மரியாயின் மாசற்ற இருதய பக்தியையும் இவர் பரப்பினார். ஸ்பெயினுக்குத் திரும்பி வந்து, தொடர்ந்து திருச்சபைக்காகப் பல துன்பங்களைப் பொறுமையுடன் ஏற்றார். பிரான்சிஸ் ஃபான்ப்ராய்ட் என்னுமிடத்தில் 1770இல் இறந்தார்.

அக்டோபர் 26           புனித சிலுவை சின்னப்பர் (1694 - 1775)

இவர் சிலுவையில் அறையப்பட்ட இயேசு மீது சிறு வயதிலிருந்தே மிகுந்த பக்தி கொண்டிருந்தார். வேதத்திற்காக உயிரைவிட விரும்பிய இவர் துருக்கியரை எதிர்த்து போரிட இருந்த இராணுவத்தை விட்டுவிலகி, ஒரு புதுசபையைத் தொடங்கினார். சபை உடையை ஒரு காட்சியில் கண்டார். சிலுவையில் உயிர்விட்ட இயேசு மீது பக்தியை எங்கும் பரப்புவதே சபையின் நோக்கம். 50 ஆண்டுகளாக, இவர் கஷ்டங்களைப் பாராமல் இத்தாலிய நாடெங்கும் சென்று போதித்தார். கடவுள் இவருக்கு பல வரங்களைக் கொடுத்தார். எனினும் இவர் தம்மீது வெகு கண்டிப்பாக இருப்பார். ‘நான் பயனற்ற ஊழியன் நான் பாவி’ என்பார்.

அக்டோபர் 28 புனித சீமோன், யூதா ‡ திருத்தூதர்கள்

திருத்தூதர் பட்டியலில் 11ஆம் இடத்தில் உள்ளது சீமோனின் பெயர். இவர் கானாவூரில் பிறந்தவர். தீவிரவாதி என்றழைக்கப்பட்டவர். கடவுளின் சட்டங்களை அனுசரிப்பதிலும், பாவத்தை எதிர்த்துப் போராடுவதிலும், கிறிஸ்துவிடம் மக்களைக் கொண்டு சேர்ப்பதிலும் இவர் ஆர்வத்துடன் உழைத்தார். பரிசுத்த ஆவியைப் பெற்றப்பின் பாரசீக நாட்டில் வேதம் போதித்து, வேதத்திற்காக உயிரைக் கொடுத்தார். புனித யூதாவுக்கு ‘ததேயுஸ்’ என்ற வேறு பெயரும் உண்டு. ‘ததேயுஸ்’ என்றால் ‘தைரியசாலி’ என்று பொருள். இவர் புனித சின்ன யாகப்பருடைய சகோதரர். இயேசுவின் உறவினர். பரிசுத்த ஆவியைப் பெற்றப்பின் யூதேயா, சமாரியா, இதுமேயா, சிரியா, மெசபத்தோமியா, லீபியா ஆகிய இடங்களில் வேதம் போதித்து, ஆர்மேனியா நாட்டில் வேதத்துக்காக கொல்லப்பட்டார் என்பது பாரம்பரியம்.

No comments:

Post a Comment

Ads Inside Post