Pages - Menu

Sunday 2 April 2017

தவக்காலம் ஐந்தாம் ஞாயிறு 02 - 04 - 2017

தவக்காலம் ஐந்தாம் ஞாயிறு
02  - 04  - 2017     
எசே 37 : 12 - 1 4; உரோ 8: 8-11 ;  யோவா 11 : 1 -45

ஒருவர்  மற்ற  ஒருவருக்கு ஐந்து இலட்ச ரூபாய் கடன் கொடுத்திருந்தார். கொடுத்த பணத்தை இவர் கேட்டார். இப்போது முடியாது என்று கூறிவிட்டார் பணம் வாங்கியவர்.  ஹார்ட் அட்டாக் வந்து விட்டது பணம் கொடுத்தவருக்கு. மருத்துவரிடம் சென்று மருந்தும் பெற்றார்.  “எனக்கு என் பணத்தை விட என் உயிர்  முக்கியம். பணத்தைக் கொடுத்து என் உயிருக்கு பாதகத்தை ஏற்படுத்திக் கொண்டேன்” என்றார்.
                   தவக்காலத்தின் ஐந்தாம் ஞாயிற்றுக்கிழமை, இயேசு இலாசரை உயிர்ப்பிக்கும் நிகழ்ச்சி  நம்முன் வைக்கப்படுகிறது. சென்ற வாரம், பார்வையற்றவருக்கு பார்வை தருகின்ற  நிகழ்ச்சி  முன் வைக்கப்பட்டது. தவக்காலத்தில் புதிய பார்வை பெறுவதோடு புதிய உயிரையும் பெறுகிறோம். இலாசரின் உயிர்ப்பு நிகழ்ச்சியில்  யோவா 5 : 28 இல் கூறப்பட்டுள்ள வார்த்தைகள் உயிர் பெறுகின்றன எனலாம். “காலம் வருகிறது, அப்போது கல்லறைகளில் உள்ளோர் அனைவரும் அவரது குரலைக் கேட்டு வெளியே வருவர் ”.  இலாசர்  என்பவர்  மார்த்தா ,  மரியா ஆகியோரின் சகோதரர் என்றும் , பெத்தானியா ஊரில் வாழ்ந்தவர் என்றும் , அவ்வூர் எருசலேமிலிருந்து   மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருந்தது என்றும், மரியா, இயேசுவின் மேல் நறுமண தைலம் பூசி , காலை துடைத்தவள் என்றும் விளக்கங்கள் வருகின்றன.
                    இயேசு இலாசரை தன் நண்பன் (11:11) என்றும், அவரை உணர்வு பூர்வமாக அன்பு செய்தவர் என்றும், விளக்கப்பட்டுள்ளது.  மார்த்தாவும் மரியாவும் ஒரே மாதிரியாக , “ஆண்டவரே நீர்  இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான்” (11: 21‡32)  என்கின்றனர். இயேசு ,  “உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே ” என்கிறார் (11:25) .    “நீ நம்பினால் கடவுளின் மாட்சியைக் காண்பாய்” (11:40) என்றும் விளக்குகிறார் இயேசு. இலாசர் மயக்க நிலையில் இல்லை. இறந்து நான்கு நாள்கள் ஆகிவிட்ட நிலையில் புதிய உயிரைத்  தருகிறார் இயேசு.
                  முதல்வாசகத்திலும் எசேக்கியல் நூலில் “என் ஆவியை உங்கள் மீது பொழிவேன். நீங்களும் உயிர் பெறுவீர்கள் ” என்ற வார்த்தைகளைக் காண்கின்றோம். இரண்டாம் வாசகத்தில் பவுல் அடிகளார்,    “இறந்த இயேசுவை உயிர்த்தெழ செய்தவரின் ஆவி உங்களுள் குடியிருந்தால் கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்த அவரே உங்கள் உடல்களையும் உயிர்ப் பெற செய்வார்”  என்கிறார்  (உரோ8:11).  இத்தவக்காலத்தில் நாம் பெறும் மனமாற்றம்
மேம்போக்கான நிலையில் இல்லாமல் நம் அடிப்படை உயிரையே  தொடும் அளவுக்கு இடம் பெற வேண்டும்.
 பழையது  அழியும் போது  புதியது  மலர்கிறது என்கிறார் பிரடரிக் லைர்
  what’s old collapses, new life blossoms in the ruins.   
புதிய விழுமியங்களை முன் வைக்கும் போதுதான் புதிய உயிர் தோன்றுகிறது. 
‘you make a new life by making new choices’
  சீன்  ஸடீபன் சன்
ஒரு மனிதன் பிறந்தான் என்ற கதையை ஒருவர் கூறினார். காட்டில் தனியாக ஒரு பெண் பிரசவ வேதனைப்படுகிறாள். உதவிக்காக கத்துகிறாள். அந்த நேரத்தில் அவ்வூரில் மிக மிக மோசமானவன் வருகின்றான் அவனைப் பார்த்ததும் அவளின் வேதனை சொல்ல முடியாததாகிறது. ஆனால் இதுவரை பிரசவம் பார்த்த அனுபவம் இல்லை என்றாலும் , அவன் அப்பெண்ணின் வேதனையைப் பார்த்து , குழந்தை பிறக்க எல்லா உதவிகளையும் செய்கிறான். குழந்தை பிறந்து அவளுக்கு நினைவு திரும்பியதும் , அவன் அங்கிருந்து சென்று விடுகின்றான் . இந்நிகழ்ச்சிக்கு ஒரு மனிதன் பிறந்தான் என்ற தலைப்புக் கொடுக்கப்பட்டது. தவக்காலம் புதிய உயிரை அனுபவமாகப் பெறும் காலம்.

No comments:

Post a Comment

Ads Inside Post