Pages - Menu

Monday 16 May 2016

மூவொரு இறைவன்

மூவொரு இறைவன்   
 22 - 5 - 2016

நீ மொ 8 : 22 - 31,   உரோ 5 : 1 - 5,   யோவா 16 : 12 - 15

இறை நம்பிக்கை ஓர் உள்ளார்ந்த அனுபவம். இந்த நம்பிக்கை நம் வாழ்விலும், நம் வாழ்வின் செயல்பாடுகளிலும் வெளிப்படுகிறது. இறைவன், மூன்று ஆட்களாய் இருக்கிறார் என்பது இயேசு வெளிப்படுத்திய மறை உண்மை. அறிவியலுக்கு ஒவ்வாத உண்மை. ஆனால் மனிதர் அனுபவத்தில் இயேசு வெளிப்படுத்திய உண்மையை உணரமுடிகிறது. ‘தந்தையே விண்ணுக்கும், மண்ணுக்கும் ஆண்டவரே’ என்கிறார் இயேசு (மத் 1 : 25). நாம் பாவிகளாய் இருந்தபோதே கிறிஸ்து நமக்காக தம் உயிரைக் கொடுத்தார் (உரோ 5 : 8). தூய ஆவியார் அருள்பொழிவு செய்கிறார் (லூக் 4 : 18). நமது விசுவாச அறிக்கையில் தந்தை படைத்து காப்பவர் என்றும், மகன் மீட்பவர் என்றும், தூய ஆவியார் புனிதப்படுத்துகிறவர் என்றும் அறிக்கையிடுகின்றோம். நாம் அனைவரும் கடவுளின் உருவில், சாயலில் உருவாக்கப்பட்டுள்ளதால், இறைவனின் பணிகளும், பண்புகளும் நம்மில் சாயலாக பதிந்துள்ளன எனலாம். தந்தையைப் போல் மனிதர் புதிதாக படைக்கும் ஆற்றலை பெற்றிருக்கின்றார். உலகில் ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக உண்டாக்கப்படும் கருவிகள், புது கண்டுப்பிடிப்புக்கள் அனைத்தும் மனிதரின் படைக்கும் பண்பிலிருந்து  உண்டானதுதான் எனச் சொல்லலாம். இந்த  படைக்கும் ஆற்றல் ஒவ்வொரு மனிதரிலும் புதைந்துள்ளது. எனவே ஒவ்வொரு மனிதரும் தந்தையின் படைக்கும் பண்பையும், காக்கும் பண்பையும் உள்வாங்கியுள்ளனர் என்பது தெளிவு.

மகன் உலகை மீட்டார், விடுதலை அளிக்கிறார். ஒவ்வொரு மனிதர் மனதிலும் மற்ற உயிரினங்கள் மேலும், துன்புறும் மானிடர் மேலும் இயல்பாக கருணை, இரக்கம் பிறக்கிறது. அண்மையில் சென்னையில் ஏற்பட்ட வெள்ள சேதத்தின் போது, மனிதரின் இரக்கம், கருணை எப்படி செயல் வடிவில், தியாக வடிவில் வெளிப்பட்டது என்று பார்க்கிறோம். தாய்மையில் பொதிந்திருக்கும், பிள்ளைகள் மீதுள்ள பாசம், பற்று  இந்த மகனின் சாயல் எனலாம்.

தூய ஆவியார் புனிதபடுத்துகிறவர். அர்ப்பணம் என்ற பண்பில் துணை செய்தல், வழிகாட்டுதல், ஆறுதலைத் தந்து உற்சாகப்படுத்துதல் ஆகிய அனைத்தும் அடங்கும். அர்ப்பண பண்பும், மற்றவர்களுக்கு வழிகாட்டும் பண்பும் ஒவ்வொருவரிடத்திலும் புதைந்திருக்கிறது. இதனை சிலர் அன்னை தெரசா போன்றோர் முழுமையாக்கி காட்டுகின்றனர்.

இன்றைய நற்செய்தி பகுதியில் தூய ஆவியார், முழு உண்மையை நோக்கி வழிநடத்துபவர் என்று இயேசு விளக்குகிறார். தூய ஆவி உள்ளார்ந்த அனுபவமாக இருக்கிறார். அவரை உணர்ந்து கொள்பவர்கள் உண்மையின் ஒளியை பெற்றவர்கள் என்கிறார் இயேசு.

முதல் வாசகத்தில், ஞானம், இறைவனோடு,  உலக தொடக்கம் முதல் இருந்தது. அது ‘மனிதரோடு இருப்பதில் மகிழ்ச்சி கண்டது’ என்று நீதிமொழிகள் நூலிலிருந்து வாசிக்கிறோம். இரண்டாம் வாசகத்தில், பவுலடியார், நம்பிக்கையால் நாம் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆனோம் என்கிறார். சடங்குகளால் அல்ல,  நம்பிக்கையால், நாம் கடவுள்முன் குற்றமற்றவர்களானோம் என்கிறார். நம்பிக்கை என்பது மனவுறுதி.

இவ்வாறு  மூவொரு இறைவனை நம்மிலேயே பதித்து வைத்திருக்கிறோம். தந்தையை போல் படைப்பவராகவும், காப்பவராகவும், மகனைப் போல் மற்றவர்களுக்கு வாழ்வு தருபவர்களாகவும், தூய ஆவியைப் போல் நம் பணிகளுக்கு முழு அர்ப்பணம் காட்டுபவர்களாகவும் விளங்குவோம்.

No comments:

Post a Comment

Ads Inside Post