Pages - Menu

Wednesday 4 May 2016

மரியன்னை வணக்கத்திற்கு வரலாற்றின் சாட்சி

மரியன்னை வணக்கத்திற்கு வரலாற்றின் சாட்சி

- சியா

இறைநம்பிக்கை ஓர் ஆன்மீக அனுபவம். இந்த அனுபவத்தின் அடித்தளம், நாம் பின்பற்றும் சமயங்களின் பாரம்பரியம். கிறிஸ்தவம் இரண்டாயிரம் ஆண்டுகளாக உலகம் முழுவதும் பரவி வளர்ந்து வருகிறது. ஆனால் கிறிஸ்துவத்தில் பிரிவினை சபைகள் உள்ளன. தற்போது பெந்தகோஸ்தே கபையினர், உரோமன் கத்தோலிக்க சபையினரை, சிலை வழிபாடு, மாதா வழிபாடு என்றெல்லாம் சொல்லி குழப்பி வருகின்றனர். மாதாவின் வணக்கம் திருச்சபையின் தொடக்கத்திலிருந்தே  இருந்து வந்திருக்கிறது. இதனை, முதல் ஆறு நூற்றாண்டு வரை இருந்த மாதா வழிபாட்டு பாரம்பரியத்தை கீழே தருகிறோம். தொடர்ந்து அடுத்த நூற்றாண்டுகளில் மாதா வணக்கம் எப்படி இடம் பெற்றிருந்தது என்பதை வரும் இதழ்களில் காணலாம். எனவே மாதா வணக்கம் ஆழ்ந்த கிறித்துவ பாரம்பரியத்தில் புதைந்தது என்பதை அறியலாம்.

இரண்டாம் நூற்றாண்டில் :

லியோன் நகரை சேர்ந்த இரேனியுஸ் மரியாவை இரண்டாவது ஏவாள் என்று விளக்கினார். முதல் ஏவாள் கடவுளின் வார்த்தையை மீறி தடைசெய்யப்பட்ட கனியைத் தின்று இறைவனிடமிருந்து பிரிந்தாள். அந்த பிரிவு மானிடத்தையே பாதித்தது. ஆனால் மரியா இரண்டாம் ஏவாள் கடவுளுடைய வார்த்தைக்கு பணிந்ததால், கடவுளிடமிருந்து பிரிந்த மானிடத்தை  மீண்டும் இறைவனிடம் இணைத்தார் என்று விளக்குகிறார்.

நான்காம் நூற்றாண்டில் :

இந்நூற்றாண்டில் வாழ்ந்த  புனித அம்புரோஸ் மரியாவை திருச்சபையின் தாய் என்றார். அவ்விளக்கத்தை இரண்டாம் வத்திக்கான் சங்க ஏடும் பதிவு செய்தது. (திருச்சபை எண். 8)

ஐந்தாம் நூற்றாண்டில் :

மூன்றாவது திருச்சங்கம், மரியா, ‘இறைவனின் தாய்’ என்று அறிக்கையிட்டது. நெஸ்டோரியஸ் என்பவர் ‘இறைவனின் தாய்’ என்பதற்கும் ‘கிறிஸ்துவின் தாய்’ என்பதற்கும் வேறுபடுத்தி விளக்கினார். இறைவனின் தாய் என்பதை அவர் ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. ஏனென்றால் இறைவார்த்தை உலகம் உருவாகும் முன்னரே இருந்தது. எனவே  உலகில் பிறந்த இயேசுவின் தாய்க்கு ‘இறைவனின் தாய்’ என்பதைவிட, ‘கிறிஸ்துவின் தாய்’ என்பது பொருந்தும் என்றார். ஆனால் திருச்சங்கம், இயேசு, கடவுளும் மனிதரும் ஆனவர். அதனை உறுதிபடுத்தும் வகையில் மரியா இறைவனின் தாய் என்பதே பொருந்தும் என்று அறிவித்தது. இன்றும் கிழகத்திய ஆர்த்தோடாக்ஸ் சபை, லூத்தரன் சபை, ஆங்கிலிக்கன் சபையினர். மரியா இறைவனின் தாய் என்ற நம்பிக்கை கோட்பாட்டினை ஏற்றுக்கொள்கின்றனர்.

ஆறாவது நூற்றாண்டில் :

இந்நூற்றாண்டில் மரியா ஆன்ம, சரீரத்துடன் விண்ணகம் எடுத்துக் கொள்ளப்பட்டாள் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் இடம் பெற்றிருந்தது.

No comments:

Post a Comment

Ads Inside Post