Pages - Menu

Tuesday 4 July 2017

மூவொரு கடவுள் பெருவிழா

மூவொரு கடவுள் பெருவிழா
11-06-2017

விப 34: 4-6,8,9;  2கொரி 13:11-13; யோவா 3: 16-18

 தாமஸ் ஆடம்ஸ் கூறுவார். ‘மூவொரு கடவுளைப் பற்றி ஆய்வு செய்வது, அது அறிவு சார்ந்த செயலாகாது,  ஆனால் மூவொரு கடவுளின் மறையுண்மையை நம்பிக்கையாகக் கொள்வது இறைத்தன்மையானது.  மூவொரு இறைவனைப் பற்றி போதிப்பது   பாதுகாப்பானது, மூவொரு இறைவனை அறிந்துக் கொள்வது விண்ணக மகிழ்வினைத் தருவது’ என்பார்.
ஜான்வெஸ்லி கூறுவார், ‘மண்ணில் நெளியும் ஒரு புழு மனிதரைப் புரிந்துக் கொள்ள முடியுமென்ற நிலை ஏற்படுமானால், மனிதர், மூவொரு இறைவனின் உண்மையைப் புரிந்து கொள்ள முடியும்’ என்பார்.

ஒரே கடவுள் ஆனால் மூன்று ஆட்கள் என்ற உண்மையை இயேசுதான் நமக்கு வெளிப்படுத்தினார். நற்செய்தி நூல்களில்  மூன்று இடங்களில், மூன்று ஆள்களைக் குறிப்பிட்டு, மூவொரு இறை உண்மை குறிப்பிடப்படுகிறது. (மத்28:19; யோவா 14:26; 15:26)  பவுல் சுமார் பத்து இடங்களில் மூவொரு இறைவனைப் பற்றி குறிப்பிடுகிறார். (2கொரி 13:14; கலாத் 4:6; எபேச 1:17;  2:18-22;  3:14-19;   4:4-6) 1 தெச 1:3-5;   2தெச 2:13-14;   தீத் 3: 4-6;  எபி9:14; மற்றும் 1 பேது 1:1-2வும் குறிப்பிடுகிறார். இதையன்றி, மகன், தூய ஆவியார் இவர்களை இணைத்தும் (உரோ1:4;  8: 9;  14:17-18;    1 கொரி 2:2-5;  6:1;  12: 4-6), தந்தை  மகனை இணைத்தும் (1 கொரி 8:6;  யோவா 1:14), தூய ஆவியைத் தனித்தும் (மத்3:16; 12:28;   லூக் 3:22) வருகின்ற குறிப்புகளைக் காண்கிறோம்.

 டைஸ் டேவிட்ஸ் என்பவர் கூறுவார், ‘நீ  உன்னை அறிந்தால், இறைவனை அறிய முடியும்’  என்பார்.

எனது மறையுரைகளில் மூவொரு இறைவனின் பண்புகள் நம்மில் புதைந்திருக்கின்றன என சுட்டிக் காட்டுவேன். நமது விசுவாச  அறிக்கைகளில் தந்தையின் பணியாக படைப்பவராகவும், பராமரிப்பவராகவும் காண்பிக்கப் ‡படுகிறார். மகன் விடுதலைத் தருபவராகவும், இறைவனின் வழியாகவும் விளங்குகிறார். தூய ஆவி, புனிதப்படுத்துபவராகவும், வழி நடத்துபவராகவும், உண்மைகளை விளங்க செய்பவராகும் செயல்படுகிறார். மனிதர் கடவுளின் சாயலைத் தாங்கி நிற்கும் வேளையில், புதியதைப் படைக்கும் பண்பு, பராமரிக்கும் பண்பு, மற்றவர்களைத் தீமைகளிலிருந்து விடுதலையளிக்கும் பண்பு, உலகினை புனிதமாக்கும் பண்பு ஆகியவை மனிதரிடத்தில் புதைந்துள்ளன. மனிதர், இப்பண்புகளுக்கு உயிர் கொடுக்க வேண்டும்.
மனிதர் உண்டாக்கும் புதிய படைப்புகளில் தந்தையின் பண்பு இடம் பெறுகிறது. பெற்றோர்களைப் போல மற்றவர்களைப் பராமரிப்பதிலும் தந்தையின் பண்பு மறைந்திருக்கிறது. தீமைகளில் சிக்கி உள்ளவர்களை விடுவிக்கும் தியாகச் செயல்களில் மகன் இயேசுவின் பண்பு மறைந்திருக்கிறது. தூய ஆவி புனிதப்படுத்துகிறார் என்றால், அது அர்ப்பணத்தை குறிக்கும். நமது அர்ப்பணிப்பிலும், முழு ஈடுபாட்டிலும் தூய ஆவியின் புனிதத்தன்மை மறைந்திருக்கிறது. எனவே நம் வாழ்வை பிரித்துப் பார்த்தாலே மூவொரு இறைவனின் பண்புகளை உணர்ந்துக் கொள்ளலாம்.  
                                          

No comments:

Post a Comment

Ads Inside Post