Pages - Menu

Monday 2 April 2018

பாஸ்கா காலம் 3 ஆம் ஞாயிறு

பாஸ்கா காலம் 3 ஆம் ஞாயிறு
15-04- 2018
திப 3:13-15. 17-19; 1 யோவா 2: 1-5;  லூக் 24: 35-48


+ உயிர்த்த இயேசு சீடர்களுடன் விருந்துண்டு உறவு கொள்கிறார்.

+   உயிர்த்த இயேசு பாடுகள், உயிர்ப்பின் மறைபொருளை புரிய வைக்கிறார்.

+ உயிர்த்த இயேசு எல்லா நலன்களையும் சுட்டிக் காட்டும் ­லோம் என்ற அமைதியை சீடர்களுக்கு தருகிறார்.

+ எல்லா நாடுகளுக்கும் பாவமன்னிப்பு, மனமாறுதல் என்ற அடிப்படை செய்தியை சீடர்கள் எடுத்துச் செல்ல வேண்டுமென்றும் சீடர்கள் இயேசுவிற்கு சாட்சிகளாய் விளங்க வேண்டுமென்றும் உயிர்த்த இயேசு தெரிவிக்கிறார்.

      லூக்கா நற்செய்தியில் உயிர்த்த இயேசு அளிக்கும் இரண்டாவது காட்சி, இன்றைய வாசகமாக அமைக்கப்பட்டிருக்கிறது. எம்மாவுஸ் நகருக்கு சென்ற இரு சீடர்களை சந்தித்து அவர்களின் கண்களை திறக்க செய்தார்  (லூக் 24:31), மறை நூலை சீடர்கள் பரிய வைத்தார். (லூக் 24:32) அந்த இரண்டு சீடர்களும் எருசலேமிற்குத் திரும்புகிறார்கள்.

திருத்தூதர்கள் பதினொருவரிடம் தங்களுக்கு எம்மாவுஸ் வழியில் நடந்தவற்றை கூறுகிறார்கள். பதினொருவரும் இயேசு உயிர்த்தெழுந்ததை ஏற்றுக்கொள்கிறார்கள். சீமோனுக்கும் (பேதுரு) இயேசு தோன்றினார் என்று உறுதி கூறுகிறார்கள்.

இந்நிகழ்ச்சியில் முதலில் குறிப்பிட்டுள்ளவை நடைபெறு கின்றன. உறவு, புரிதல், அமைதி வழங்குதல், நற்செய்தி அறிவிப்பு, சாட்சியம் ஆகிய நிகழ்வுகள் இடம் பெறுகின்றன.
முதல் வாசகத்தில், பேதுருவின் சொற்பொழிவில், இயேசுவின் பாடுகள், உயிர்ப்பு, ஆகிய மறை உண்மைகள் தெரிவிக்கப்பட்டு, அதன் தாக்கமாக, மக்கள் மனமாறி பாவ மன்னிப்பு பெற வேண்டுமென அழைப்புக் கொடுக்கிறார். இரண்டாம் வாசகத்திலும் யோவான் நாம் பாவம் செய்ய நேர்ந்தால், தந்தையிடம் நமக்காக இயேசு பார்த்து பேசுவார், அனைத்துலகின் பாவங்களுக்கு கழுவாய் அவரே என்று விளக்குகிறார். 

உயிர்த்த இயேசு கிறிஸ்தவர்களின் வாழ்வை விளக்கி வைத்த விளக்குபோல விளங்கிட செய்கிறார். இயேசுவின் பாடுகளில் தங்கள் மனமாற்றத்தின் வழியாக பங்கெடுப்பவர்கள் இயேசுவின் உயிர்ப்பின் ஒளியில் இடம் பெறுகிறார்கள். இதனால் உறவும், புரிதலும், அமைதியும், சாட்சிய வாழ்வும் உண்டாகின்றன. 

இரவில் ஒரு  நாய் குலைத்தது. இதனால் அந்த  தெருவில் இருந்த நாய்கள் எல்லாம் சேர்ந்து குலைத்தன. சற்று நேரம் கழித்து எல்லா நாய்களும் குறைப்பதை விட்டுவிட்டு சென்று விட்டன. ஆனால் முதலில் குலைத்த நாய் மட்டும் விடாமல் குலைத்துக் கொண்டிருந்தது. ஏனென்றால் அதுதான் உண்மையாக ஒரு முயலைப் பார்த்தது. அதைப் பிடிப்பதற்காகக விடாமல் குலைத்துக் கொண்டிருந்தது. 

நம்பிக்கை உள்ளவர்களுக்கு  விளக்கங்கள் தேவையில்லை
நம்பிக்கை இல்லாதவர்களுக்கு விளக்கங்கள் அளித்தாலும் பயனில்லை ‡ தாமஸ் அக்குனாஸ்.

No comments:

Post a Comment

Ads Inside Post