Pages - Menu

Tuesday 3 October 2017

பொதுக்காலம் 30ம் ஞாயிறு A

பொதுக்காலம்  30ம் ஞாயிறு
வி.ப 22:21-27; 1தெச 1:5-10; மத் 22: 34-40

மனிதரின் வாழ்வு, மற்றவர்களின் வாழ்வில் புதைந்திருக்கிறது எனலாம். தங்களை தனிப்படுத்திக் கொண்டு வாழ்பவர், மனித வாழ்வின் நியதியை இழந்த நிலையில் வாழ்கிறார் எனலாம். பைத்தியம் என்று சொல்லப்படுகிறவர்கள், மனிதர்களின் தொடர்பை விடுத்து தனித்து வாழ்பவராவார். குற்றவாளிகளுக்குத் தண்டனையாக அவர்கள் தனிமைப் படுத்தப்படுகின்றனர். ஒரு சோதனை செய்து பார்த்தார்கள் ஒரு சிறுவனை பிறந்தது முதல் தனிமைப்படுத்தி பல ஆண்டுகள் ஒரு வீட்டில் வளர்த்து வந்தார்கள். பல ஆண்டுகளுக்குப் பிறகு அவனை வெளியே அழைத்து வந்தார்கள். முதலில் ஒரு பெரிய கடைக்கு அழைத்துச் சென்று, அங்குள்ளவைகளில்  எது வேண்டுமானாலும் வாங்கிக் கொள் என்றார்கள். அவன் எல்லாவற்றையும் சுற்றி பார்த்து விட்டு, பொருள் விற்றுக்கொன்டிருந்த பெண்ணைக் காட்டி இந்த பொம்மைதான் வேண்டும் என்றானாம்.

அன்பு என்றால் விருப்பம் (Liking), பாசம் (Affection) என்று ஆங்கில அகராதி விளக்கம் கூறுகிறது. மனிதருக்கு மனிதர் இடையில் இயல்பாக விருப்பம், பாசம் உண்டாகிறது. ஆனால் ஒருவர் தன்னையே அதிகமாக தன் விருப்பத்திற்கு உள்ளாக்கிக் கொள்ளும்போது, மற்றவர்மீது கொள்ளும் விருப்பம், பாசம் குறைகிறது அல்லது விருப்பம் வெறுப்பாகக் கூட மாறலாம்.

இன்றைய நற்செய்தியில், சட்டங்களை ஆழ்ந்து கற்றறிந்த பரிசேயர், அதிலும் திருச்சட்ட அறிஞர் ஒருவர், இயேசுவை சோதிக்கும் நோக்குடன் திருச்சட்ட நூலில் தலை சிறந்த, முதல் கட்டளை எது? என்று சோதிக்கும் நோக்குடன் கேட்டார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. யூதர் பாரம்பரியத்தில் 613  கட்டளைகள் இருந்தன. அதிலும் பரிசேயர்கள் பல கிளை சட்டங்களை புகுத்தினர். இவைகளில் எது அடிப்படையானது? எது கட்டளைகள் அனைத்தின் சாராம்சத்தியம் உள்ளடக்கியது? என்பதுதான் கேள்வி. சீசருக்கு வரி செலுத்துதல் நிகழ்ச்சியில், கடவுளுக்குரியதை கடவுளுக்குக் கொடுங்கள் என்று விளக்கினார் இயேசு (மத் 22:21).

இங்கு, ‘உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து’ என்பதுதான் முதல் கட்டளை. இதயம் என்பது ஒருவரின் விருப்பத்தைக் (Will) குறிக்கும், உள்ளம் என்பது  ஒருவரின் வாழ்வைக் (Life) குறிக்கும். மனம் (றீமிreஐஆமிஜு) என்பது ஒருவரின் செல்வத்தைக் (Wealth) குறிக்கும். ஆக, நீ இறைவனின் அன்பில் புதைந்து விடு என்பது இங்கு பொருளாகிறது. இறைவனை அன்பு செய்வதைக் குறிக்கும் இவ்வாக்கியம் இச 6:5 இல் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை தினமும் யூதர்கள் தங்கள் செபத்தில் ஓதுவார்கள்.

அடுத்து ‘உன்மீது அன்பு கூர்வது போல உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக’ என்பது அடுத்த முக்கியக் கட்டளை என்று இயேசு குறிப்பிடுகிறார். இது லேவி 19:18 இல் கொடுக்கப்பட்டுள்ள வாக்கியம். யூதர்கள் அதிக கவனம் செலுத்தாத வாக்கியம் இது. இயேசு மிக திறமையாக ஞானத்துடன், பிறரன்பு கட்டளையை கட்டளைகளில் முதன்மையாக நிறுத்துகிறார். 
வள்ளுவர் கூறுவார்,

  அன்பகத் தில்லா உயிர் வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.      (குறள் 78)

 அன்பில்லா வாழ்க்கை பாலைநிலத்தில் நிற்கிற பட்டுப்போன மரத்தினைப் போன்றது என்கிறார். அன்பிற்கு முதலிடம் கொடுத்து வாழந்தால் இறைவன் அருகில் நாம் நிற்கிறோம். லியோ டால்ஸடாய் கீழ்வரும் கதையைக் கூறுகிறார். இரு நண்பர்கள் எருசலேம் நோக்கி திருப்பயணம் தொடங்குகிறார்கள். செல்கின்ற வழியில் ஒருவர் அந்த ஊரில் மக்கள் பஞ்சத்தால் மடிந்துக்கொண்டிருப்பதைப் பார்த்து அங்கேயேத் தங்கி அவர்களுக்குப் பணிசெய்கிறார். மற்றவர் எருசலேம் சென்று அங்கு ஆலத்திற்குள் செல்கிறார். அப்போது ஓர் ஆச்சரியத்தைக் காண்கிறார். தன்னுடன் வராத அந்த நண்பர் யாரும் செல்ல முடியாத  புனித இடத்தில் நிற்கிறார். பிறர்அன்பு செயலை செய்த அவருக்கு இறைவன் தந்த பாக்கியம் என்று அந்த நண்பர் உணர்கிறார்

No comments:

Post a Comment

Ads Inside Post