Pages - Menu

Thursday 2 November 2017

ஒன்றாய் இருப்பார்களாக

ஒன்றாய் இருப்பார்களாக

 - நல்லை இ. ஆனந்தன், வேதியர் 

கணவனும் மனைவியும் சண்டையிட்டுக் கொண்டிருந்த நேரத்தில் கதவு தட்டப்பட்டது. திறந்தால் வானதூதர் நின்று கொண்டிருந்தார். உங்களில் ஒருவரை மோட்சம் அழைத்துப் போக வந்திருக்கிறேன். யாரை நான் அழைத்துச் செல்ல என்று நீங்களே முடிவு செய்யுங்கள் என்றார். உடனே மனைவி சொன்னாள். என் கணவரை தயவு செய்து மோட்சத்துக்கு அழைத்துப் போங்கள். அவர் போனால் எனக்கு வீடே மோட்சமாகிவிடும் அதற்கு கணவர் சொன்னார், இவளை நீங்கள் அழைத்துப் போங்கள் இவள் போனால் எனக்கு இந்த உலகமே சொர்க்கமாகிவிடும்  வானதூதர் திகைத்து நின்றார்.

இது கற்பனைக் கதையல்ல. நிஜத்தின் நிழல். உண்மையின் உரைகல். இருமனங்கள் ஒரு மனமாவது திருமணம் என்ற காலகட்டம் இப்போது மலையேறிவிட்டது. நான் பேச நினைப்பதெல்லதாம் நீ பேச வேண்டும், நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும் என்று கணவர் மனைவியிடம் கண்டிசன் போட முடியாத காலம் இது. நீ காணும் உலகத்தை நீயே பாரு. நான் ஏன் பார்க்க வேண்டும்? என்று மனைவி எதிர்ப்புக்குரல் எழுப்பும் காலகட்டம் இது. காரணம் இந்த உலகம் எல்லாவற்றிலும் வளர்ந்துவிட்டது.

திருமணம் என்பது ஆணும் பெண்ணும் இணைந்து, ஆனந்தமாய் வாழ ஆண்டவர் ஏற்படுத்திய, அற்புத அமைப்பு. ஆனந்தக்கொடை ஆனால், நிகழ்காலத்தை விட்டுவிட்டு, கடந்தகால நிகழ்வுகளை நினைத்துப் புலம்பிக்கொண்டு, எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கை இழந்து இறைவன் பாதுகாப்பார் என்பதையும் மறந்து, வேதனை, விரக்தி, நிராசை, கோபம், சந்தேகம், சண்டை, சச்சரவு, குடி, அடிதடி, வன்முறைகள் என்று  குடும்பத்திற்குள்ளே ஒரு மூன்றாம் உலகப்போர் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.

இரு பூசணிக்காய்களை ஒரு சாக்கு மூட்டையில் கட்டி வைத்தது போல ஒட்டாமல், உறவாடாமல் தம்பதியர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். விதிவிலக்காக, சில குடும்பங்கள் புளிமூட்டை போல உறவாடுவதாக ஒட்டியிருப்பதாகத் தோற்றம் அளித்தாலும், ஆழ்மனத்தில் சில புழுத்த விதைகளையும் மறைத்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். நூற்றில் இரண்டுபேர் விவாகரத்து பெற்றுவிடுகின்றனர். ஆனால் நூற்றில் ஐம்பதுபேர் குழந்தைகளின் எதிர்காலத்தையும் உறவினர்களின் ஞானத்தையும், கத்தோலிக்க நம்பிக்கையையும் மனதில் கொண்டு குடும்பமாக வாழ்வதாக நடித்துக்கொண்டிருக்கிறார்கள் விவாகரத்து பெறுவதை மணமுறிவு என்று பெயரிட்ட தமிழ் குடிமகன்கள். இந்த மன முறிவு பெற்ற தம்பதிகள் நிலையை மனவிலகல்  என்று புதுப்பெயரிட்டு அழைக்கிறார்கள் உலகமும், கிறித்தவமும் உட்கார்ந்து குடும்பத்தின் மாண்பு பற்றி ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஏனெனில் இந்த மனவிலகல் நோய் ஓர் ஆட்கொல்லி நோய். உயிர் கொல்லி நோய். இதை வளர விடுவது உலகத்தின் உயர்வுக்கே தடையாகிவிடும். உடனடியாக கவனிக்க வேண்டிய கொள்ளைநோய் இது. இந்த மனவிலகல் எதனால் ஏற்படுகிறது? குடும்பத்தில் மனைவியர் சந்திக்கும் சவால்களில்தான் இது ஆரம்பிக்கிறது.

பொறுப்பு இல்லாத கணவராக இருப்பது, மனைவியை ஓர் அடிமையாக நினைப்பது, ஊதியத்தில் நியாயமான பங்கை குடும்பத்திற்கு வழங்க மறுப்பது, குழந்தைகளைப் பற்றி  அக்கறையின்றி இருப்பது, எதற்கெடுத்தாலும் குற்றம் காண்பது, குடிபோதையில் அதிகமாக ஆழ்வது, பாலுறவில் அளவுக்கு அதிகமான நாட்டம் கொள்வது, பிற பெண்களோடு தொடர்பு கொள்வது, மனம் திறந்து பேச மறுப்பது, மனைவியின் வீட்டை மட்டம் தட்டிப் பேசுவது, சந்தேகப்படுவது, அதிகாரத் தோரணையில் அமட்டுவது, வன்முறையில் இறங்குவது, சமைப்பதைப் பற்றி குறைவாகக் கூறுவது, ஆசிட் வீசுவது, அரிவாளைத் தூக்குவது என்று உடல் ரீதியான தாக்குதல்களை கணவர் ஆரம்பிக்கும்போது மனைவிக்கு மனவிலகல் நோய் ஏற்படுகிறது.

ஆனால் கணவர்கள் குடும்பத்தில் சந்திப்பது உளவியல் ரீதியான தாக்குதல்கள். இது அதிக வலுவான தாக்குதல்கள். மற்றவர்கள் முன்னிலையில் கணவரை அவமதிப்பது, யாரோடு பேசினாலும் கண்காணிப்பது, வாழ்வின் எல்லா நேரங்களிலும் தன்னோடு மட்டுமே இருக்க  வற்புறுத்துவது, கணவரின் இயலாமைகளைச் சொல்லிக் காட்டி சிறுமைப்படுத்துவது, முட்டாள், எதற்கும் லாயக்கில்லாதவன் என்று காயப்படுத்தும் வார்த்தைகளைப் பேசுவது, தன் விருப்பப்படி நடக்கவில்லை எனில் விட்டுவிட்டு ஓடிப்போவேன் என்று மிரட்டுவது, நினைத்தது நடக்கும் வரை அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுவது. கணவரின் கைபேசி, கணினிகளை ஆராய்வது வேவு பார்ப்பது, சில நேரங்களில் கையில் கிடைத்த பொருட்களால் தாக்க ஆரம்பிப்பது, தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டுவது, காவல் நிலையத்தில்  போய் பொய் புகார் கொடுப்பது, குழந்தைகளை தூக்கிட்டு போயிடுவேன் என்று மிரட்டுவது, குழந்தையிடம் உன் அப்பா, ஒரு குடிக்காரன், ஊதாரி, பொறுப்பற்றவர் என்று பேசிப்பேசி குழந்தையின் மனதில் அப்பாவைப் பற்றி தப்பான கருத்தை உருவாக்குவது,...... இதுபோன்ற இன்னும் பல கணவருக்கு மனைவியோடு மனவிலகல் நோயை ஏற்படுத்தலாம்.

அடுத்த சில ஆண்டுகளில் உலகம் சந்திக்கப் போகும் ஆபத்துகளைப் பற்றி பேசி வருகிற இத்தொடரில், மனவிலகல்தான் உலகம் முழுவதும் பேராபத்தை விளைவிக்கக் கூடிய ஒன்றாகத் திகழப் போகிறது என்கிறார்கள்.  தயவுசெய்து வீட்டிலே  எதிரிகளாக நடிப்பதை விட்டுவிட்டு, நண்பர்களாகவே பிரிந்து போய் வாழுங்கள் என்று சொல்லலாம் என்றால் கடவுளின் நோக்கம், இயேசுவின் நோக்கத்திற்கு அது எதிராக அல்லவா மாறிவிடும்? இனி அவர்கள் இருவர் அல்ல, ஒருவரே, என்றும் எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக, கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருப்பாராக என்று கிறிஸ்துவத்தின் மதிப்பீடுகளுக்கு எதிராக அல்லவா போய்விடும்?

இறைக்குடும்பமும், திருக்குடும்பமும் எப்படி ஒன்றாய் இருக்கிறார்களோ அப்படியல்லவா நம் குடும்பம் இருக்க வேண்டும். முதல் குடும்பத்தில் இருந்த ஆதாம் ஏவாளைப் போல வாழவா ஆண்டவர் நம்மைப் படைத்தார்? சிறுபிள்ளைகளுக்கு அறிவுரை கூறலாம். ஆனால் கணவன் மனைவி பெற்றோர் நிலைக்கு உயர்ந்த விட்ட நிலையில் அவர்களுக்கு அறிவுரை கூறுவது என்பது சிறுபிள்ளைத் தனமானது.

புனித பவுலடியாரின் வார்த்தைகளைக் கேளுங்கள். திருமணமான பெண்களே, உங்கள் கணவருக்குப் பணிந்திருங்கள். ஆண்டவரைச் சார்ந்து வாழ்வோருக்கு இதுவே தகும். திருமணமான ஆண்களே, உங்கள் மனைவியரிடம் அன்பு செலுத்துங்கள். அவர்களைக் கொடுமைப்படுத்தாதீர்கள் (கொலோசை 3:18-19).

அன்பான தம்பதியரே, கடவுள் முன்னிலையில் கைகளை கோர்த்துக் கொண்டு, வாக்குறுதி அளித்ததை நினைவு கூறுங்கள். உன்னை ஏற்றுக் கொள்கிறேன். இன்பத்திலும் துன்பத்திலும் உடல்நலத்திலும் நோயிலும் நான் உனக்கு பிரமாணிக்கமாயிருந்து என் வாழ்நாளெல்லாம் உன்னை நேசிக்கவும், மதிக்கவும் வாக்களிக்கிறேன். என்ன ஞாபகம் வந்துவிட்டதா? ஏற்றுக்கொள்ளல், நேசித்தல், மதித்தல், பிரமாணிக்கமாயிருத்தல் இந்த நான்கும்தான் மனவிலகல் நோயை அழிக்கும். ஒழிக்கும். உலகமெங்கும் மிக வேகமாக பரவிவரும் மனவிலகல் நோய்க்கு உடனே முடிவுகட்டுங்கள்.

இதைச் செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா? 
     

No comments:

Post a Comment

Ads Inside Post