Pages - Menu

Saturday 20 February 2016

தவக்காலம் இரண்டாம் ஞாயிறு, 21-02-2016

21-02-2016
தவக்காலம்  இரண்டாம் ஞாயிறு 
 தொ. நூ. 15 : 5-12, 12:17-18,21;
 பிலிப் 3 : 17- 4: 1;
 நற்செய்தி : லூக் 9 : 28 - 36
இயேசு ஏன் உருமாற வேண்டும்?
அவர் பெயர் அனில்கும்ளே. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர். கிரிக்கெட் பந்து வீச்சலில் அசுரர். ஒரு விளையாட்டில் அவர் தன்னுடைய திறமையை எல்லாம் வெளிப்படுத்தினார். அன்று நடந்த போட்டியில் ஒன்பது விக்கெட்டுகளையும் இவரே வீழ்த்தினார். ஐந்து பேரை பந்து வீசி அப்புறப்படுத்தினார். மீதி நான்கு பேரை பந்துகளைப் பிடித்து பவிலியனுக்கு நடை கட்டச் செய்தார். ஆக ஒன்பது விக்கெட்டுகளின் ஒட்டு மொத்த உரிமையாளர் என்ற பட்டம் கொடுத்து ஊடகங்கள் அவரை சாதனைப் பட்டியலில் பதித்து வியந்தன. விழா நாயகன் என்ற பெருமையும், அதோடு சேர்ந்து அவருக்கு மகிழ்ச்சி அளித்தது. அன்று அவரின் சாதனையின் வெளிப்பாட்டு நாள்.
ஒவ்வொருவருக்கும் ஒருநாள் சிறப்பு நாளாகவோ அல்லது சோகத்தின் நாளாகவோ அமையும். அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கிள் பெல்ப்ஸ் என்பவர் ஓர் ஒலிம்பிக்கில் ஐந்து தங்கப் பதக்கங்களை வென்று அசுர நடைபோட்டார். இந்தியாவில் 120 கோடி மக்களில் ஒருவர்கூட தங்கப்பதக்கம் வென்றது இல்லை. ஆனால் இவர் ஒருவராக இருந்து சாதனை வரிசையில் சாகசம் புரிந்துள்ளார். அன்று அவருடைய திறமையின் வெளிப்பாட்டு நாள்.
ஒவ்வொருவருக்கும் ஒருநாள் சோக நாளாகவும் அமையும். மனைவி கணவரிடம், “உங்கள் வாழ்வில் சோகமான நாள் எது?” என்று வினவினாள். அவர் “உன்னை மணம் புரிந்த நாள்தான். ஏன்னா, உன் தந்தை ஒரு பைசாகூட வரதட்சணை கொடுக்காமல் உன்னை எனக்கு மணமுடித்து வைத்துவிட்டார்” என்றாராம். விவிலியத்தில் யோபுவைக் கேட்டபோது “என்னுடைய பிறந்தநாள் என் வாழ்வின் துயரமான நாள் (யோபு 3 : 1 - 26)” என்றார். இன்னும் சிலருக்கு, உறவினர் ஒருவர் இறந்த நாள், வியாபாரத்தில் நட்டம் ஏற்பட்ட நாள், விளையாட்டில் தோல்வி கண்ட நாள், விபத்து ஏற்பட்ட நாள், வியாதிகள் தாக்கின நாள் போன்ற நாட்கள் சோகமான நாட்களே. இயேசுவுக்கு யூதாஸ் அவரைக் காட்டிக் கொடுத்த நாள் சோகமான நாளாக அமையும். இயேசுவின் வாழ்வில் மிகச் சிறப்பான நாள் அவர் உருமாறிய நாள் (லூக் 9 : 29).
இயேசு உருமாறக் காரணமும், சூழலும் என்ன?
இயேசு கடவுளின் மகன் என்று, அன்னை மரியா, யோசேப்பு, திருமுழுக்கு யோவான், இடையர்கள், ஞானிகள், நிக்கதேம், சமாரியப் பெண், ஏன் பேய்களுக்கும் கூட தெரிந்திருந்தது. ஆனால் யூத மக்களும், சீடர்களும் இந்த உண்மையை முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் குழப்பத்தில் இருந்தது வியப்பாகத்தான் இருக்கிறது.
இயேசு, தான் மெசியா என்றபோது யூதர்கள் அவர்மேல் எறிய கற்களை எடுத்தனர் (யோவான் 10 : 30). நான் வானின்று இறங்கி வந்த உணவு என்றபோது (யோவான் 6 : 66) குழம்பிப் போயினர். இவன் எங்கிருந்து வந்தான் என்பதே எங்களுக்குத் தெரியாது என்றனர் (யோவான் 9 : 29). இயேசுவின் சிலுவைச் சாவுக்கு யூதர்கள் கூறிய முக்கிய காரணம் ‘அவர் தன்னையே கடவுளின் மகனாக்கிக் கொண்டார்’ (லூக் 23 : 2) என்பது. இவர் யாரோ? என்று ஏரோது குழப்பமுற்றான் (லூக் 9 : 9).
இயேசுவின் சீடர்களும் குழம்பிப் போயிருந்தனர். நான் வானின்று இறங்கி வந்த உணவு என்று இயேசு சொன்னபோது சில சீடர்கள் குழப்பமுற்று அவரை விட்டு விலகி வெகுதூரம் போய்விட்டனர் (யோவான் 6 : 66). காற்றும், கடலும் கீழ்ப்படிகின்றனவே, இவர் யாரோ? (லூக் 8 : 25) என்று குழம்பினர். சீடர்கள் இயேசு தன் பாடுகளை அறிவித்த போது பேதுரு இயேசுவைக் கண்டித்தார். அதற்கு பேதுரு நன்றாகவே வாங்கிக் கட்டிக் கொண்டார் (மத் 16 : 23). இந்தப் பின்னணியில்தான் இயேசு உருமாறினார். சீடர்களுக்குத் தெளிவு ஏற்படுத்த, நான் கடவுள் மகன் - மீட்பர் என்பதை உணர்த்த இயேசு உருமாறினார். மரியன்னைக் கொடுத்த உடலை - உருவை மாற்றி, தூய ஆவியார் கொடுத்த - கடவுளுக்கே உரிய ஒளியாகிய உருவில் பிரகாசித்தார். அன்று அவருடைய முகம் மாறியது. ஆடை மாறியது. உடல் மாறியது. மொத்த உருவமே மாறியது. அகம் ஒளிர்ந்தது. மேகம் சூழ்ந்தது. வானம் திறந்து பேசியது. ஒளி வீசியது. அவருக்குள்ளிருந்த கடவுள் ஒளியாகப் பிரகாசித்தார்.
இயேசு பிறந்தபோது ஞானிகளுக்குத் தன்னை வெளிப்படுத்தினார் (மத் 2 : 1 - 12). திருமுழுக்கின்போது மக்களுக்குத் தன்னை வெளிப்படுத்தினார் (மத் 3 : 17). பொது வாழ்வின்போது சீடர்களுக்கு வெளிப்படுத்தினார் (லூக் 9 : 28 - 36).
முதல் வாசகத்திலும் ஒரு வெளிப்பாடு. ஆபிரகாமுக்கு இறைவன் தன்னை வெளிப்படுத்தி அவரோடு உடன்படிக்கை செய்துக் கொண்டார். இரண்டாம் வாசகத்தில் விண்ணுலகமே நம் தாய் நாடு என பவுலடியார் வெளிப்படுத்தினார். இந்த வெளிப்பாடுகள் எல்லாம் நாம் இறை உறவில் மலர, ஒளிர, வாழ்வோமா?

No comments:

Post a Comment

Ads Inside Post