Pages - Menu

Friday 4 May 2018

மூவொரு கடவுளின் பெருவிழா

மூவொரு கடவுளின் பெருவிழா

27-05-2018                            
இச 4:32-34,39‡40, உரோ 8:14-17, யோவா 15: 26-27, 16:12-15
- அருள்பணி. எஸ். அருள்சாமி, 
பெத்தானியா இல்லம், கும்பகோணம்

இன்று நாம் மூவொரு கடவுளின் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். மூவொரு கடவுள் என்ற உண்மை கிறிஸ்தவ சமய கோட்பாடுகளுக்கு அடிப்படையான தொன்று. ஒரே கடவுள் மூன்று ஆள்களாக இருக்கின்றார் என்பதுதான் இதன் பொருளாகும். அதாவது, கடவுள் தந்தை என்றும், மகன் என்றும், தூய ஆவியார் என்றும் அழைக்கப்படுகிறார்.

இது எப்படியாகும்? என்று கேள்வியை எழுப்புவது இயல்புதான். ஒரு மனிதர் ஒரே சமயத்தில் தம் பெற்றோருக்கு மகனாகவும், தம் பிள்ளைகளுக்குத் தந்தையாகவும், தன் மனைவிக்கு கணவராகவும் இருக்கின்றாரோ, அதே போலதான் கடவுளும் ஒரே சமயத்தில் தந்தையாகவும், மகனாகவும், தூய ஆவியாராகவும் இருக்கிறார். எப்படி மகனும், கணவனும், தந்தையுமான ஒருவர் ஒரே ஆளோ, அதேபோல்தான் தந்தையும், மகனும், தூய ஆவியுமானவர் ஒரே கடவுளாவார். இங்கே ஆள் ஒன்றுதான். அவர் தந்தையாக, கணவராக, பிள்ளையாக ஆற்றுகின்ற பணி வேறுபட்டது.  இதே போல்தான் கடவுளும் விளங்குகிறார்.

இந்த மூவொரு கடவுள் கோட்பாட்டை இருவிதங்களில் விளக்கலாம்.

கடவுள் நிறைவுள்ளவர். அவர் அன்பில் நிறைவுள்ளவர், ஏனெனில் கடவுள் அன்பாக இருக்கிறார். அவர் அறிவில் நிறைவுள்ளவர். ஏனெனில் அவர் முற்றறிவுடையவர். கடந்த காலம், நிகழ்காலம், வரும் காலம் அனைத்தையும் அறிந்தவர். முற்றறிவுடைய அவர் சிந்திக்கிறார். ஆனால் தொடக்கத்தில் கடவுளைத் தவிர வேறேதுவும் இல்லை. கடவுளின் ஆறு சிறப்புப் பண்புகளில் முதலாவதாகக் குறிப்பிடுவது கடவுள் தாமாகவே இருக்கிறார் என்பது. தாமாகவே இருக்கும் கடவுள் ஒரு சிந்தனையாளராகவும் இருக்கிறார். அவர் எதைப்பற்றி சிந்திக்க முடியும்? தம்மைப் பற்றியேதான் சிந்திக்க முடியும். ஏனெனில் தொடக்கத்தில் தம்மை தவிர்த்து வேறொன்றும் இருந்ததில்லை. அவருடைய சிந்தனைக்கு இலக்காக (Object) இருப்பது அவரே தான்.
அவர் சிந்திக்கும்போது உள்ளத்தில் உருவெடுக்கும் கருத்தை  உச்சரிக்கும் போது வார்த்தைப் பிறக்கிறது. உச்சரிக்கப்பட்ட அந்த வார்த்தையின் இயல்பும், அதை உச்சரித்தவருடைய இயல்பும் ஒன்றேதான். சிந்தித்தவர் தந்தையாகிய கடவுள், உச்சரிக்கப்பட்டவர் வார்த்தையாகிய மகன். இவருடைய இயல்பு இறைவனுடைய இயல்பே. “அவ்வாக்கு கடவுளாயும் இருந்தார்” (யோவா 1:1). இவருடைய இயல்பைப் பற்றி விவரிக்கும் போது இவர் கடவுளுடைய மாட்சிமையின் சுடரொளி என்றும், அவருடைய ‘இயல்பின் அச்சுபதிவு’ என்றும் எபிரேயருக்கு எழுதப்பட்ட மடலில் வாசிக்கிறோம். இந்த பொருளில்தான் ஒருவனைப் பார்த்து “அவன் தன் அப்பனை உரிச்சு வைத்தாற்போல் உள்ளான்”, என்று சொல்வதைக் கேள்விப்படுகிறோம். “இவ்வாறு இறைமகன் வானத்தூதரைவிடச் சிறந்ததொரு பெயரை உரிமைப் பேறாகப் பெற்றார்” என்றும் வாசிக்கிறோம் (எபி 2:4).

தந்தை, மகன் ஆகிய இருவருடைய பரஸ்பர சிந்தனையிலிருந்தும், அன்பிலிருந்தும் புறப்படுகிறவர் தூய ஆவியாரானார். எனவேதான் தந்தையிடமிருந்தும், மகனிடமிருந்தும் புறப்படும் ஆண்டவரும், உயிர் அளிப்பவருமான தூய ஆவியாரை நம்புகிறேன் என நம்பிக்கை அறிக்கையில் சொல்லுகிறோம். “இவர் தந்தையோடும் மகனோடும் ஒன்றாக ஆராதனையும் மாட்சியும் பெறுகின்றார்” என்கிறோம்.

இவ்வாறாக தந்தை, மகன், தூய ஆவியார் ஆகிய மூவரும் ஒரே இறை இயல்பை உடையவர்கள். இவர்கள் ஆள்வகையில் மூவரானாலும், இயல்பு முறையில் ஒருவரே, அதாவது ஒரே கடவுள்தான். இந்த மூவொரு கடவுளைத் தான் கட்புலனாக மூவொரு கடவுள்  (Transcendent Trnity)  என்பர். மீட்பின் வரலாற்று பின்புலத்தில் மூவொரு கடவுள்  எக்கோனமிக், மூவொரு கடவுள் (Economic Trinity)  என்றும் அழைக்கப்படுகிறார். அதாவது மீட்பின் திட்டத்தில் இவர்களின் ஈடுபாட்டின் அடிப்படையில் இவர்களைப் பற்றி புரிவதாகும். தந்தையாகிய கடவுளின் பேரன்பு செயல் உலக படைப்பு, மீட்பின் திட்டமாகும். மகனாகிய இயேசு கிறிஸ்துவின் செயல் மீட்பின் திட்டத்தைச் செயல்படுத்துவதாகும். தூய ஆவியாரின் செயல் உலகமனைத்தையும் பாதுகாத்து, நேர்வழியில் நெறிபடுத்துவதாகும்.

இந்த மூவொரு கடவுளின் செயல்பாடுகள் நமது அன்றாட கிறிஸ்தவ வாழ்வில் இடம் பெற வேண்டும். தந்தையின் அன்பு, கிறிஸ்துவின் கீழ்படிதல், தூய ஆவியின் வழிநடத்துதல் ஆகிய மூன்றும் நம்மை இயக்குகின்றன. இதை நாம் ஒவ்வொருவரும் உள்ளூர உணர வேண்டும்.

மூவொரு கடவுள் வெகு தூரத்தில் மறைந்திருக்கும் கற்பனைக் கடவுள் அல்ல, இருக்கிறவர் நாமே என்று தம்மை வெளிப்படுத்தியவர் (விப 3:14) இறைவாக்கினர்கள் வழியாக பேசிய கடவுள், இறுதிவரையில் உலகை அன்பு செய்த கடவுள், தமது ஒரே மகனை உலகிற்கு அனுபப்பியவர் ஆவார்.

இயேசு ஓர் இறைவாக்கினர் மட்டுமல்ல, அவர் இறைவனுமாவார். நமது மீட்பிற்காக இரத்தம் சிந்திய வரலாற்று கடவுள். 

இவர்கள் இருவரிடமிருந்து புறப்படுகிறவரே தூய ஆவியார். நமக்கு துணையாளர், வழிகாட்டி, நம்மோடு தங்கியிருப்பவர், நமக்குள் உறைபவர். “நீங்கள் கடவுளுடைய கோவிலென்றும், கடவுளின் ஆவியார் உங்களில் குடிக்கொண்டியிருக்கிறார் என்றும் உங்களுக்குத் தெரியதா?” (1 கொரி 3:16) என்றும், “உங்கள் உடல் நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக் கொண்ட தூய ஆவி தங்கும் கோவில் என்று தெரியாதா?” (1 கொரி 6:19) என்றும் பவுலடியார் கேட்பது நமக்கு படிப்பினையாக இருக்க வேண்டும்.

எனவே மூவொரு கடவுளில் விளங்கிய நல்லிணக்கம் நம் வாழ்விலும் தென்பட வேண்டும். “தந்தை மகனை மாட்சிப்படுத்தினார். மகன் தந்தையை மாட்சிப்படுத்தினார்.தந்தையின் விருப்பத்திற்கு மீட்பின் திட்டத்திற்கு தம்மையே கையளித்தார். எனவேதான் ‘அப்பா, தந்தையே’ எல்லாம் உம்மால் இயலும். இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும். ஆனாலும் என் விருப்பபடி அல்ல. உம் விருப்பபடியே நிகழட்டும்” என்ற மன நிலையோடு (மாற் 14:6) தந்தையே உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன் (லூக் 23:46) என்று தந்தைக்குத் தம்மையே ஈந்தார். இருவருள்ளும் உறவு நல்லிணக்கம், ஒற்றுமை ஆழமாக வேரூன்றியிருந்தது. நானும், தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம் (யோவா 10:30; 14:11) என்ற ஆண்டவரின் வெளிப்படுத்துதல் எவ்வளவு ஆழமான பேருன்மை.

தூய ஆவியும் உறவில் நல்லிணக்கத்தில் ஒன்றித்திருந்தார். தந்தையிடமிருந்து கிறிஸ்து அனுப்பிய தூயஆவி (யோவா 15:26) திருஅவையை ஒருங்கிணைத்தார். இறைவனை ‘அப்பா, தந்தையே’ என்று அழைக்க வைத்து பிள்ளைகளாகிய நாம் உறவில் வளர உறுதுணையாக இருக்கிறார் (கலா4:6). அனைவருக்குள்ளும் நல்லிணக்கத்தை, ஒற்றுமையை உருவாக்குகிறார். கடவுளின் பிள்ளைகள் என்ற உரிமையளித்து (யோவா 1:12) இதற்குச் சான்று பகர்கிறார் (உரோ 8:16), நாளும் நம்மை வழிநடத்துகிறார்.

மூவொரு கடவுளின் விழாவைக் கொண்டாடும் நம்மிடையே அவரில் விளங்கிய நல்லிணக்கம் செயலாக்கப்பட வேண்டும். நம்மிடையே ஒற்றுமை உருவாகிட வேண்டும். ஒருவரொருவருக்காக தியாகம் செய்யும் மனநிலை வேண்டும். விட்டுக் கொடுக்கும் நிலை நம் குடும்பங்களில் உருவாகிட வேண்டும். அன்பினாலும்,தியாகத்தாலும் மெருவூக்கப்பட்டு வளர வேண்டும். மூவொரு கடவுளின் விழா இதற்கு தூண்டுதலாகவும், துணையாகவும் அமைந்திட மன்றாடுவோம்.

No comments:

Post a Comment

Ads Inside Post