Pages - Menu

Monday 28 August 2017

நான் எழுத்தாளன் ஆனேன்

நான் எழுத்தாளன் ஆனேன்
- லெயோ ஜோசப்,  திருச்சி
21. கலையரங்கம் மேனேஜர் ஆனேன்

அச்சக உரிமையாளர், திரவியம் அண்ணனிடம் சொல்லியிருக்கிறார்; ‘அவர் வந்து இங்கே அரைமணிநேரம் தான் இருந்தார். அவர் ஒரு புத்திசாலி என்பதைக் கண்டு கொண்டேன். அவரெல்லாம் கலைக்காவிரியில் அவசியம் இருக்க வேண்டும். விட்டு விடாதீர்கள்’ என்று சொல்லியிருக்கிறார்.

 Fr. ஜார்ஜிடம் திரவியம் அண்ணன் கெஞ்சியிருக்கிறார். ‘அவருக்காக நான் மன்னிப்புக் கேட்கிறேன். சேர்த்துக் கொள்ளலாம்’ என்று ய்r. ஜார்ஜ் சம்மதிக்கவில்லை. கலைக்காவிரி சொஸைட்டி என்று ஒன்று உண்டு. ஆயர் அதற்குத் தலைவர். நான் அதில் உறுப்பினன். ஒரு வாரத்தில் அதன் கூட்டம் நடைபெற விருந்தது. அதற்குப் போவதா?, வேண்டாமா? என்று ஒரே குழப்பம். 

எங்கள் கோவிலில் புனித வாரத்திற்காக பக்தியைத் தூண்டும் அளவுக்கு ஜோடிப்பது வழக்கம். நான் அதில் ஈடுபட்டிருந்தேன். அப்போது நண்பர் ஜேக்கப் வந்தார். ‘அப்பா உங்களை வரச் சொன்னார்’ என்றார். திரு அடைக்கல ராஜீக்கு ஓர் அலுவலகம் உண்டு. அதில் ஜேக்கப்பின் அப்பா மேனேஜர். அவரைப் போய்ப் பார்த்தேன்.

‘உங்களுக்கு மூன்று சான்ஸ் இருக்கிறது. சேலத்தில் சின்ன பையன்கள் சாராய பேக்டரிக்கு மேனேஜர்களாக இருக்கிறார்கள். அவர்கள் சரியில்லை. அவர்களை மாற்ற வேண்டும். காட்டூர் அலங்கார் தியேட்டர் மேனேஜர் சரியில்லை. கலையரங்கம் தியேட்டரை லீஸீக்கு எடுக்கப் போகிறார்கள். இது மூன்றில் உங்களுக்கு எது கிடைக்கிறதோ’ என்றார்.

பிரபாத் டாக்கீஸ் மேனேஜர் அருமைராஜ் வேலையை விட்டு விட்டு திரு. அடைக்கலராஜிடம் ஜெனரல் மேனேஜராக இருந்தார். அவர் என்னை அழைத்துக் கொண்டு திரு. அடைக்கலராஜைப் பார்த்தார். ‘நம்ம கலையரங்க  மேனேஜராகப் போடலாம்’ என்றார். ‘இவரை எனக்குத் தெரியுமே! போட்டுக்கலாமே!’ என்றார் அவர். நான் கலையரங்கம் மேனேஜர் ஆனேன். கலையரங்கம் புளீ தியேட்டர்களிலே, தமிழ்நாட்டிலேயே பெரியது. உடனே அருமைராஜீம் நானும் அதே அச்சகத்துக்குப் போனோம். அருமைராஜ் என்னை கலையரங்க மேனேஜர் என்று அச்சக முதலாளிக்கு அறிமுகம் செய்து வைத்தார். டிக்கட்டுகள் அடிக்க ஆர்டர் கொடுத்துவிட்டு வந்தோம். அச்சக  முதலாளி, திரவியம் அண்ணனிடம், ‘அவர் இனிமேல் உங்களுக்குக் கிடைக்க மாட்டார். அவர் கலையரங்க மேனேஜர் ஆகி விட்டார்’ என்று சொல்லியிருக்கிறார்.
Fr. ஜார்ஜும் நானும் சமாதானமாகி விட்டோம். அதன்பிறகு வழக்கம் போல் பாடல்கள், ஒலி‡ஒளி நாடகங்களும் எழுதிக் கொடுத்தேன்; சில கலை நிகழ்ச்சிகளில் நடித்தும் கொடுத்தேன்.

தஞ்சாவூரிலிருந்து சில குருக்கள் வந்தார்கள். ஏதோ நிகழ்ச்சிக்காக எழுத வேண்டுமென்றார்கள். எழுதிக் கொடுத்தேன். அதில் அவர்களுக்கு திருப்தி இல்லை. அவர்களாகவே எழுதிக் கொண்டு கலைக்காவிரிக்குப் போனார்கள்.

 Fr. ஜார்ஜ் ஸ்க்ரிப்டைப் படித்துப் பார்த்தார். அவர்களையும் அழைத்துக் கொண்டு நேரே என்னிடம் வந்தார். ‘சார், திருச்சபையின் வளர்ச்சி பற்றி ஒரு ப்ரொக்ராம் தயார் செய்தோம் அல்லவா?அதில் எழுதி இருந்தீர்களே’ நதியின் நோக்கம் கடலில் கலப்பதுதான். அதற்காக மணல் மேடுகளைக் கரைத்துக் கொண்டு, கற்பாரைகளுக்கு ஒதுங்கிப் போய்க் கொண்டு தனது லட்சியத்தை அடைகிறது’ன்னு. அது மாதிரி எழுதிக் குடுங்க’ என்றார். நானும் அப்படியே எழுதிக் கொடுத்தேன். வாங்கிக் கொண்டு போனார்.

தவக்காலத்திற்காக ஓர் ஆடியோ கேசட் போட Fr.ஜார்ஜ் விரும்பினார். அப்போது Fr.சார்லஸ் அஸிஸ்டெண்ட் இயக்குநராக இருந்தார். ஃபாதர் ஜார்ஜ் என்னைக் கூப்பிட்டனுப்பினார். ‘தவக்காலத்திற்காக ஒரு கேசட் போட வேண்டும். அது வழக்கமான பாணியில் இல்லாமல் புதுமையாக இருக்க வேண்டும். ஃபாதர் சார்லஸிடம் ஐடியா கேட்டுக் கொள்ளுங்கள்’ என்றார்.

Fr. சார்லஸிடம் போனேன். அவர் தவக்காலம் என்றால் என்ன? எது, எது தவம் என்று விளக்கிச் சொன்னார். முதல் பாட்டு ஆயிற்று. அடுத்துப் பாடுகளை பற்றி விளக்கமாக எடுத்துரைத்தார்.
(இன்னும் சொல்வேன்)...

No comments:

Post a Comment

Ads Inside Post