Pages - Menu

Sunday, 30 October 2016

33வது வாரம் 13 : 11 : 2016

33வது வாரம்     13 : 11 : 2016

துன்பத்தில் துணை நிற்கும் இறை நம்பிக்கை 

மலா 4 : 1 - 2:           2 தெச 3 : 7 - 12:      லூக் 21 : 5 - 19

ஒரு சிறுமி பள்ளி ஆசிரியரிடம் தனது தாத்தாவின் வீரதீர செயல்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தாள். “என் தாத்தா பெரிய வேட்டைக்காரர். ஏகப்பட்ட புலிகளை வேட்டையாடியிருக்கிறார். ஒருதடவை காட்டுக்குப் போனபோது கூட்டமாக வந்த புலிகள் அவரைக் கடித்து கொன்றுவிட்டன” என்றாள். இதைக் கேட்ட ஆசிரியர், “நான் நம்பமாட்டேன். இதெல்லாம் ரீல்” என்றார். கோபமடைந்த சிறுமி, “அப்படின்னா நான் சொர்க்கத்திற்குப் போகும்போது, அதுபத்தி என் தாத்தாகிட்ட கேட்பேன்” என்றாள். சாமார்த்தியமான அந்த வாத்தியார், “உன் தாத்தா நரகத்திற்கு போயிருந்தா?” என்று கேட்டார். ஒரு நிமிடம் யோசித்த சிறுமி, “அப்ப நீங்க கேளுங்க” என்றாள்.

உடல்  உள்ள கஷ்டம், துன்பம், வேதனைகள், சிலுவைகள் என்று, மனிதர் தாங்கள் சந்திப்பதை அவர்கள் விரும்புவதில்லை. இவைகளுக்கு மாற்று வழி உண்டா? என்று உட்கார்ந்து ஆராயும் மனிதர்கள்தான் இன்று அதிகம். அதிகபடியான துன்ப நேரங்களில்கூட, இறைநம்பிக்கை நமக்கு கைக்கொடுத்து உதவும் என்பதைத்தான் இன்றைய வழிபாடு நமக்கு சொல்கிறது.

இன்றைய நற்செய்தியில், உலக முடிவிற்குமுன் மனிதர்கள் சந்திக்கும் அச்சமூட்டும் நிகழ்வுகளை இயேசு பட்டியலிடுகிறார்.

‡ நானே அவர் எனது பெயரை பயன்படுத்துபவர் பின்னே போகாதீர்கள்.

‡ போர் முழக்கங்களும், குழப்பங்களும் ஏற்படத்தான் செய்யும்.

‡ நாட்டை எதிர்த்து நாடும், அரசை எதிர்த்து அரசும் எழும்.

‡ நில நடுக்கம், பஞ்சம், கொள்ளை நோய் ஆகியவை ஏற்படும்.

‡ அச்சுறுத்தும் பெரிய அடையாளங்கள் வானில் தோன்றும்.

‡ உங்களை துன்புறுத்துவார்கள், சிறையில்அடைப்பார்கள், கொல்வார்கள்.

‡ உடன்பிறந்தவர்கள், நண்பர்கள் உங்களை வெறுப்பார்கள், காட்டிக் கொடுப்பார்கள்.

என்றெல்லாம் சொல்லும் இயேசு இந்த துன்ப நெருக்கடியில் நமது இறைநம்பிக்கையை பலப்படுத்தும் வகையிலான வார்த்தைகளையும் கூறுகிறார்.

- உங்களுக்கு நாவன்மையையும், ஞானத்தையும் கொடுப்பேன்.

- எவராலும் உங்களை எதிர்த்து நிற்கவும், எதிர்த்து பேசவும் முடியாது.

- மன உறுதியுடன் இருந்து உங்கள் வாழ்வை காத்துக் கொள்ளுங்கள் என்கிறார்.

லூக் 12 : 11 - 12லும், துன்பத்திற்கு உள்ளாக்கப்படும் சீடர்களுக்கு இறைவனின் தனி பாதுகாப்பு அளிக்கப்படும் என்று குறிப்பிடுகிறார். ஸ்தேவானும் (தி ப 7), பவுல் அடிகளாரும் (தி ப 21 ‡ 26) தாங்கள் கொடுமைப்படுத்தப்பட்ட நேரங்களில்  மனஉறுதியுடன் தலைவர்களுக்கு பதில் மொழி தந்தனர்.

துன்ப நேரங்களில் நாம் துவண்டுவிடக்கூடாது. இறை மனித உறவுகளில் பல பிளவுகளை ஏற்படுத்தக்கூடிய மனிதர்களும், சூழ்நிலையும் மாறிமாறி நம் வாழ்வில் குறிக்கிடும்போது உடல், உள்ள பாதிப்புகளும், மன உளைச்சலும், மனத்தளர்வும் நம்மை கொடுமையாக சந்திக்கின்றன. இந்த சூழ்நிலையிலும்கூட இறைவன் நம் பக்கமிருந்து வல்லமையுடையவர்களாக நம்மை மாற்றுகிறார்.

இறைதிட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று, மனமுவந்து இவ்வுலகில் உதித்தவர் இயேசுகிறிஸ்து. அன்பையும், இரக்கத்தையும், மன்னிப்பையும், மனித நேய பண்புகளையும் உள்ளடக்கிய இறை மதிப்பீடுகளை தானே வாழ்ந்து காட்டினார். இதனால், சமூகத்தில் பல புரட்சிப் பணிகளை செய்தார் இயேசு. அவருக்கு கிடைத்த பரிசு கொடூர சிலுவை சாவு. ஆனால் இதிலும் முழுமையான பங்கெடுத்து இயேசு வெற்றி பெறுகிறார்.

துன்ப நிலைகளை சந்தித்த இயேசு, நாம் இதுபோன்ற சூழ்நிலைகளில் மனஉறுதியோடு வாழ 4 படிகளைக் கூறுகிறார்.

1. இயேசுவைப் போல நாமும் காலத்தின் அறிகுறிகளை கணிக்க கற்றுக் கொள்வோம்.

2. நமது வாழ்வைக் காத்துக் கொள்ள துன்பங்களை எதிர்கொள்ளத்தான் வேண்டும். (நீதிமன்றங்கள், சிறைகள்).

3. காலத்தின் நிறைவில், நாம் எதிர்கொள்ளும் துன்பங்களில் நாம் தனியாக இல்லை. இறைவன் நம்மோடு இருந்து, நமக்கு துணிவு அளித்து, ஞானத்தையும், நாவன்மையையும் அளிக்கிறார்.

4. வாழ்வை காத்துக் கொள்ள உலகத்தை நாம் இழக்க முன்வர வேண்டும்.
சிலுவைகளை சிம்மாசனமாக மாற்றுவது நமது கையில்தான் உள்ளது.

பொதுக்காலம் 32ஆம் வாரம்

பொதுக்காலம் 32ஆம் வாரம்         
     06-11-2016 
2 மக்க 7 : 1 - 2, 9 - 14;  2 தெச 2 : 16 : 3 : 5;            லூக் 20 : 27 - 38

கொலம்பியா - மாநில கால்பந்தாட்ட போட்டி, போட்டிக்கு முதல்நாள் குழுவின் தலைசிறந்த ஆட்டக்காரரின் தந்தை இறந்துவிட்டார். அடக்கத்திற்கு சென்றுவிட்டு போட்டிக்கு சற்று முன்னதாகவே அந்த முன்னனி வீரர் வந்துவிடுகிறார்.

குழுவின் பயிற்சியாளர் : உன் மனநிலை சரியாக இருக்காது. எனவே நீ இன்று விளையாட வேண்டாம்
.
வீரர் : உங்களுக்கு என்னைப் பற்றித்தான் தெரியும். என் தந்தையைப் பற்றி தெரியாது. என் தந்தை ஒரு பிறவிக் குருடர். நான் விளையாட்டு வீரராக உயர அவர்தான் காரணம். ஆனால் அவர் ஒரு நாள்கூட என் ஆட்டத்தைப் பார்த்ததில்லை. நேற்று அவர் இறந்தார். மிகவும் நல்லவர். அவர் நிச்சயமாக விண்ணகம் சென்றிருப்பார்.
விண்ணகத்தில் குருடர்கள் கிடையாது. அங்கிருந்து என் தந்தை பார்க்கும் முதல் கால்பந்தாட்டம் இது. தயவுசெய்து என் தந்தையை மகிழ்விக்க ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள். போட்டியில் அபார வெற்றி பெறுகிறது அவரது அணி.

மனிதன் இவ்வுலக வாழ்வில் அடைய முடியாத, இயலாத நிலையை, இவ்வுலக வாழ்விற்குப் பின் அடைய முடியும். அதைத்தான் இயேசு திட்டவட்டமாக போதிக்கிறார்.

முதல் வாசகம் 

அரசனுக்கு அடிபணியாமல், திருச்சட்டத்தை மீறாமல், வீரமரணம் எய்திய 7 சகோதரர்கள் நமது நம்பிக்கைக்கு ஒப்பற்ற சான்று. அவர்களது நம்பிக்கை, இவ்வுலகில் எப்படியாவது தங்கள் உயிரைக் காத்துக் கொள்ள வேண்டும் என்பதில் அல்ல. மாறாக பாவம் செய்வதைவிட உயிருள்ள கடவுளை நம்பி உயிரை இழந்தாலும், உயிர்த்தெழுதலில் தங்களுக்கு வெகுமதியாக கிடைக்கும் என்று நம்பினர்.

நற்செய்தி

மோயிசனின் சட்டப்படி, ஒருவன் வாரிசின்றி இறந்துபோனால் அவனுடைய மனைவியை கொழுந்தனே மணந்துகொண்டு உடன்பிறந்தவன் செய்ய வேண்டிய கடமையை அவளுக்குச் செய்ய வேண்டும். ஆனால் சதுசேயர்கள் இயேசுவை கேள்வி கேட்டு வீழ்த்தாட்ட சதிசெய்கிறார்கள். உண்மையில் அந்தப் பெண் விண்ணகத்தில் யாருக்கு மனைவியாக இருப்பாள்? என்பதுதான் அவர்களது கேள்வி.  இயேசுவை, அவர் வாயாலேயே உயிர்த்தெழுதல் இல்லை என்று சொல்ல வைக்க வேண்டும் என்பதுதான் இந்த சதுசேயர்களின் எதிர்பார்ப்பு. இயேசு இவர்களது கேள்விக்கு சாதுர்யமாக பதில் தருகிறார். சதுசேயர்களுக்கு மோசேதான் முக்கியம் என்று இயேசுவுக்கு தெரியும். ஆகவே, மோசே வழியாக பதில் தருகிறார்.

விடுதலைப் பயணம் 3 : 1 - 6இல் யாக்கோபின் கடவுள் என அறிமுகப்படுத்துகிறார்.
யாக்கோபின் கடவுள், ஆபிரகாமின் கடவுள் என்றால் அவர் வாழ்வோரின் கடவுள்; செத்துப் போனவர்களின் கடவுள் அல்ல என்ற அடிப்படையான உண்மையை தருகிறார்.

யாக்கோபு, ஆபிரகாம் இவர்கள் இறந்த பின்னும் வாழ்வதால்தான் இவர்களை இவ்வாறு இறைவன் அழைக்கின்றார்.

ஆகவேதான் - விண்ணக வாழ்வில் மணம் புரிதலைப் பற்றியும் இறப்பு பற்றியும் கவலைப்பட தேவையில்லை என்கிறார். ஏனெனில் கடவுள் வாழ்வையே விரும்புகிறார்.

இறந்தவர் மீண்டும் வந்து விண்ணக வாழ்வைப் பற்றி விளக்கியது இல்லை. ஆனால் இயேசு விண்ணக வாழ்வைப்பற்றி உறுதியாகக் கூறுகிறார். இயேசுவின் வார்த்தைகள்தான் நமக்கு சான்று. இவ்வுலக வாழ்வுடன் தொடர்பு கொண்டதுதான் மறுவுலக வாழ்வு என்னும் போது, இவ்வுலகின் அறவாழ்வு பொருள்மிக்கதாக விளங்குகிறது. 

ஒரு தாலாட்டுப் பாடலோடு தொடங்குகின்ற மனித வாழ்க்கை பலரின் ஒப்பாரிப் பாடலோடு நிறைவடைகிறது.

ஒருவருக்கு சுமையாக மலர்கின்ற வாழ்க்கை நான்கு பேருக்கு சுமையாக மாறி முடிவடைகிறது.

பிறப்பு - இறப்பு இரண்டிற்கும் இடைப்பட்ட காலத்தை எப்படி வாழ்கின்றோமோ அதனைப் பொருத்துத்தான் இறப்பிற்கு பிந்தைய வாழ்க்கை அமைகிறது.

“இறையாட்சி உங்கள் நடுவே செயல்படுகிறது” (லூக் 17 - 21). இவ்வுலக வாழ்வு மறுவுலக வாழ்வின் கண்ணாடி.

இவ்வுலகில் மரணம் எப்படி நிலையானதோ அப்படியே நமது மரணத்திற்குப் பிந்தைய விண்ணக வாழ்வும் நிலையானது. விண்ணக மகிழ்வினை இங்கேயே முன்கூட்டி அனுபவிக்க முடியும். உயிர்த்தபின் வாழ்வு உண்டு என்ற நம்பிக்கையில்தான் மக்கள் தங்கள் உயிரையும் பலியாக்க தயங்கவில்லை என்று முதல் வாசகத்தில் படிக்கிறோம். 

இறையாட்சி வாழ்வு தருவது என்ற 
நம்பிக்கை வாழும் பலத்தைத் தரும்.
பிறக்கின்ற மனிதனுக்கு இறப்பு நிச்சயம்.
இறக்கின்ற மனிதனுக்கு வாழ்வு நிச்சயம் 
ஆனால் இருக்கின்ற நாள்களில் 
 தெய்வீகத்தில் மூழ்கவைக்கும் உறவு

Friday, 28 October 2016

இறந்த விசுவாசிகளின் நினைவு தினம்

இறந்த விசுவாசிகளின் நினைவு தினம்
             
 02 - 11 -2016

எசா 25 : 6, 7 - 9;    உரோ 5 : 5 - 11;  லூக் 7 : 11 - 17

மரணப்படுக்கையில் படுத்திருந்த ஒரு பணக்கார தந்தையின் பக்கத்தில் அமர்ந்து, 3 மகன்கள் இப்படி பேசிக் கொண்டார்கள்.

முதல்வன் : கல்லறை 5 கிலோமீட்டர் தூரத்திலிருக்கிறதே. அப்பாவை அங்கு எப்படி கொண்டு செல்வது? என்றான்.

இரண்டாமவன் : நாம் வைத்திருக்கின்ற காரில் கொண்டு செல்லலாம்; இருந்தாலும் அதற்கு அதிக பணம் செலவாகிவிடுமே என்றான்.

மூன்றாமவன் : குதிரை வண்டியில் கொண்டு செல்லலாம். ஆனால் குதிரை வண்டி கிடைக்குமா? என்றான்.

தந்தை கூறினார், நீங்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டாம். வீட்டு மூலையில் இருக்கிற எனது கைத்தடியை எடுங்கள். நான் நடந்தே கல்லறைக்குச் சென்று விடுகிறேன் என்றாராம்.
நாம் கவனமாக இல்லையயன்றால் பணம் பாசத்தை விழுங்கிவிடும். லூக் 12 : 15‡ல் ‘எவ்வகைப் பொருளாசையும் கொள்ளாதபடி கவனமாக இருங்கள். ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவுதான் இருந்தாலும், செல்வப்பெருக்கினால் வாழ்வு வந்துவிடாது’ என்கிறார் இயேசு.

கருவிலே உருவாக்கப்படும் இந்த உடல்
இளமைக் காலங்களில் துள்ளிக் குதிக்கிறது.
வயது ஆக ஆக வளர்ச்சிப் பெறுகிறது
முதுமை வேளையில் முற்றிவிடுகிறது
முதுமையோடு இறப்பும் ஒட்டிக் கொள்கிறது.

இறைவனது பார்வையில் இறப்பு என்பது ஒரு நிரந்தரமான முற்றுப்புள்ளி அல்ல. இறப்பிற்கு பிறகும் வாழ்வு உண்டு. அந்த வாழ்வு ஒளிமயமான வாழ்வு, அத்தகைய வாழ்விற்கு நம்மை பாவ நிலையிலிருந்து பிரித்து எடுத்து, அழைத்துச் செல்லும் அதிகாரமும், ஆற்றலும், வலிமையும் இறைவனுக்கே உண்டு.
மனிதனை படைத்த இறைவன் மனிதனுக்கு சாவின்மேல் அதிகாரம் கொடுக்கவில்லை (சங்.தி 8 : 8). கொடுக்கப்பட்ட மனித வாழ்வு இறைவனது கொடை. ஆகவேதான் புனித பவுல் அடிகளார், வாழ்வு என்பது கிறிஸ்துவே, சாவது என்பது ஆதாயமே (பிலி 2 : 21) என்கிறார். ஒவ்வொரு மனிதனிலும் கிறிஸ்து வாழ்கிறார் என்றும், மனித உடலின் முக்கியத்துவத்தையும், ஆன்மாவின் புனிதத்துவ அவசியத்தையும் பவுல் அடிகளார் கூறவார்.
எப்போது மனிதர் இம்மண்ணில் பிறக்கின்றாரோ அப்பொழுதே அவரது இறப்பும் பின் தொடர்கிறது. பிறப்பு என்று இருந்தால், இறப்பை கண்டிப்பாக சந்தித்தே ஆகவேண்டும். ஒருவர் கூறினார், 

பிறப்பு என்பது இறப்பின் தொடக்கம்.
இறப்பு என்பது பிறப்பின் முடிவு என்றார். இதனையே
வாழ்வு என்பது சாவின் தொடக்கம்
சாவு என்பது வாழ்வின் முடிவு- என்று கவிஞர் கண்ணதாசன் கூறுவார்.
இறந்துவிட்ட இப்பூமிக்கு எந்த இறைவன்
உயிரூட்டினானோ, அந்த இறைவன்
இறந்தவர்களுக்கும் உயிரூட்டக் கூடியவன் ஆவான் என்கிறது திருக்குறான். 41 / 19

வாழ்வைக் கொடுத்து அதை பயனுள்ளதாக மாற்றும் அதிகாரத்தை மனிதனுக்கு தந்த இறைவன், இறுதிநாளில் நமது செயலுக்கு உகந்த பலாபலனையும் தருகிறார். அந்த அர்த்தமுள்ள வாழ்வைப்பெற இறைவன்மீது முழுமையான நம்பிக்கை கொள்ள நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்படுகிறோம். எனவேதான் இயேசு, ‘உயிர்த்தெழ செய்பவரும், வாழ்வு தருபவரும் நானே, என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வர்’ என்கிறார்.
நமக்கு முன் இறந்தவர்கள், வாழ்வின் கண்ணாடிகள். இப்பொழுதே இறைவன் அடியில் வாழும் உயிர்க்கும் வாழ்வை உயிரோட்டத்துடன் வாழ்வோம்


அனைத்து புனிதர்களின் திருவிழா

அனைத்து புனிதர்களின் திருவிழா     
01 - 11 - 2016

திவெ 7 : 2 - 4, 9 - 14; 1 யோவா 3 : 1 - 3;  மத் 5 : 1 - 12

விண்ணகத்திலுள்ள பெயர் தெரியாத அனைத்து புனிதர்களுக்கும் இன்று திருச்சபை விழா எடுத்து சிறப்பிக்கின்றது. எல்லா நாட்டையும், குலத்தையும், மொழியையும் சார்ந்த இப்புனிதர்கள் யார்? என்பதை அறிந்துகொள்ள இன்றைய நாளை திருச்சபை நமக்கு வழங்கியுள்ளது.

இறைவனுக்கும், மனிதருக்கும் உள்ள ஆழமான அன்புறவை ஏற்படுத்தும் இப்புனிதர்களின் உறவை ஞான உறவு என்று கூறும் திருச்சபை, புனிதர்களின் உறவை விசுவசிக்கின்றேன் என்ற விசுவாச படிப்பினையையும் நமக்கு கொடுத்து, இவர்களை ஜெப பரிந்துரையாளர்களாக கொடுத்திருக்கின்றது.

இன்றைய நற்செய்திப் பகுதி மலைப்பொழிவில் கூறப்படுவதைப் போல இறைவனது விருப்பத்திற்கு பணிந்து, இறையருளில் எல்லா சூழ்நிலையிலும் நிலைத்து நின்று, முற்றிலும் மன தூய்மையுள்ளவர்களாக வாழ்ந்து, இறந்த இப்புனிதர்கள் என்றென்றும் விண்ணக மகிழ்ச்சியை அனுபவிக்கும் பேறுபெறுகிறார்கள்.

ஒவ்வொரு புனிதருடைய முன்மாதிரிகையையும் நாம் பின்பற்ற அழைக்கப்படுகின்றோம். இவர்களது வாழ்வில் ஏதாவது ஒரு நற்செய்தி மதிப்பீடு இடம் பெற்றிருக்கும்.
புனிதர்களின் வாழ்வு நமக்கு ஒரு முன்னோட்டம்.
இவர்களோடு உள்ள ஒன்றிப்பு தோழமையை உருவாக்குகிறது.
இவர்களது பரிந்துரை இறை உதவியைப் பெற்றுத் தருகிறது.
தனக்காக அல்லாமல், பிறருக்காகவும், கடவுளுக்காகவும் வாழும் மனிதர்கள்தான் இந்த புனிதர்கள். இவர்கள் அனைவருமே இறைவனுக்கு சமமானவர்கள் அல்ல. புனிதர்களை நாம் வழிபடுவதில்லை, ஆராதிப்பதுமில்லை. மாறாக, அவர்களுக்கு வணக்கம் செலுத்துகின்றோம்.

திருத்தந்தை 23ஆம் யோவான் கூற்றின்படி, கத்தோலிக்க மரபின்படி புனிதர்களுக்குக் காட்டும் வணக்கம் வெறும் மரியாதை மட்டுமன்று அல்லது மன்றாட்டு மட்டுமன்று. ஆழ்ந்த அடிப்படையில் அமைந்த ஞான உறவாகும். அவர்கள் நமக்குத் தந்துள்ள விலைமதிக்கப்பெறாத முன்மாதிரிகையும், பாடமும், நமக்கு மகிழ்ச்சியூட்டும் உதவிகளாகும். எனவே, இப்புனிதர்களின் விழாவைக் கொண்டாடும் நாமும் இவர்களைப் போல புனித நிலைக்கு உயர்த்தப்படவும், இவர்களைப் போல வாழவும் திருச்சபை நமக்கு அழைப்பு விடுக்கின்றது. விண்ணகப் பயணிகளாக வாழும் நாம், இப்புனிதர்களின் அருள்துணையினாலும், பரிந்துரையாலும் நமது ஆன்மாக்களை புனிதப்படுத்தி இறைவனது புனிதர்களாக வலம்வருவோம்.

இறையடியார் லூர்து சேவியர், புனிதராக உயர்த்தப்பட திருச்சபை அவருடைய வாழ்வை முறைப்படி பரிசோதிக்கிறது. புனிதர் என்பவர் முதலில் நல்ல மனிதராக, தனது பலகீனத்தோடு போராடியவராக இருந்திருக்க வேண்டும் என்பதை சோதித்துப் பார்க்கிறது. புனிதையாக அறிவிக்கப்பட்ட அன்னை தெரசா, தன் ஆன்மீக அனுபவத்தை கூறுகையில், தொழுநோயாளருக்கு, மருத்துவம் செய்யும்போது அருவருப்பும், பயமும் இருந்தது. ஆனால் அதனை பலிவாழ்வின் ஒரு பகுதியாக நினைத்து துணிந்து மருத்துவம் செய்தேன் என்கிறார்.
மனிதத்தில் மலர்வதுதான் புனிதம்.
புனிதத்தை யாவரும் அணிந்து கொள்ளலாம்.

திருப்பலி விளக்கம் 10. வார்த்தை வழிபாடு -2

திருப்பலி விளக்கம்

10. வார்த்தை வழிபாடு -2

-அருள்பணி. எஸ். அருள்சாமி, 
பெத்தானி இல்லம், கும்பகோணம்


முன்னுரை

திருவழிபாட்டில் கொண்டாடப்படுவது திருப்பலியாக இருந்தாலும் சரி, வேறு அருள் அடையாளங்களாக இருந்தாலும் சரி, முதலில் வார்த்தை வழிபாடு நடைபெற வேண்டும் என்பது இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் அழுத்தமான போதனையாகும். ‘இறைவார்த்தை வழிபாடும்’, ‘அருள் அடையாள வழிபாடும்’ (நற்கருணை வழிபாடும்) இணைபிரியாத வகையில் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளன. அதாவது ‘இறைவார்த்தை வழிபாடே’ அருள் அடையாள கொண்டாட்டத்தைப் பொருள் உள்ளதாக மாற்றுகிறது. “திருஅவை நம் ஆண்டவரின் திருவுடலுக்கு வணக்கம் செலுத்துவது போலவே விவிலியத்திற்கும் என்றும் வணக்கம் செலுத்தி வந்துள்ளது. சிறப்பாக, திருவழிபாட்டில் இறைவார்த்தையையும், கிறிஸ்துவின் உடலையும் பரிமாறும் பந்தியிலிருந்து வாழ்வின் அப்பத்தைப் பெற்று கிறிஸ்தவர்களுக்கு அளிக்க  தவறுவதில்லை” என்று இறைவெளிப்பாடு கோட்பாட்டு விளக்கத்தில் (இ.வெ.21) கூறப்பட்டுள்ளது. இறைவார்த்தைக்கும் அருள் அடையாளத்திற்கும் (இங்கு நற்கருணை வழிபாட்டிற்கும்) இடையே உள்ள ஒருங்கிணைப்பை அழகாகச் சித்தரிக்கிறது.
இனி இறைவார்த்தை வழிபாட்டின் அமைப்பு முறையைப் பற்றி விளக்குவோம்.

இறைவார்த்தை வழிபாட்டின் நோக்கம்

இறைமக்கள் அனைவரும் விவிலியத்தை முழுமையாகவும் நன்றாகவும் அறிந்திருக்க வேண்டும் என்பது முதல் நோக்கமாகும். இதற்கு ஏதுவாக திருப்பலியில் பங்கெடுக்க வரும் மக்களுக்கு விவிலியத்தின் முக்கியமான பகுதிகள் எல்லாம் தேர்வு செய்யப்பட்டு பறைசாற்றப்படுகிறது. அதனால் இறைமக்கள் விவிலியத்தை அறியமுடிகிறது.

அடுத்து பறைசாற்றப்பட்ட இறைவார்த்தை மறையுரையில் விளக்கப்படுவதால் அதை புரிந்து கொள்ளவும் அதனால் அவர்களின் விசுவாசம் ஆழப்படுத்தப்படவும் முடிகிறது. இத்தகைய பின்புலத்தில் அவர்கள் நற்கருணை விருந்தில் பங்குபெறத் தகுதியாக்கப்படுகிறார்கள். இது இரண்டாவது நோக்கமாகும்.

இறைவார்த்தை வழிபாட்டின் அமைப்பு

விவிலியத்தின் கருவூலங்கள் திறந்துவிடப்பட்டு அதிகமான வாசகங்கள் வேறுபட்டதாகவும், கொண்டாடப்படும் மறைநிகழ்வு அல்லது விழாவுக்குப் பொருத்தமானதாகவும் இருக்கும்படி இவ்வார்த்தை வழிபாடு அமைக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை கொண்டாட்டங்களுக்கும் வார நாள்களின் கொண்டாட்டத்திற்கும் வேறுபட்ட இருவித கால சக்கரங்கள் அமைக்கப்பட்டு பொருத்தமானதும், கோர்வையானதுமான வாசகங்கள் தேர்வு செய்யப்பட்டு அளிக்கப்படுகின்றன.

1. ஞாயிறு வாசகங்கள்

ஞாயிற்றுக்கிழமை வாசகங்கள் மூன்று ஆண்டு காலவட்டத்தில் தரப்பட்டுள்ளன. ஒவ்வொரு வழிபாட்டு ஆண்டும் நடப்பு ஆண்டுக்கு முன்வரும் திருவருகைக்காலத்திலிருந்து தொடங்குகிறது. எடுத்துக்காட்டாக நடப்பு ஆண்டாகிய 2016, சென்ற ஆண்டின் இறுதியில் வந்த வருகைக்காலத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையே தொடங்கிவிட்டது. இது இவ்வாண்டின் கிறிஸ்து அரசர் பெருவிழாவுக்குப் பின்வரும் சனிக்கிழமை மாலையோடு முடிந்துவிடும்.

நடப்பு ஆண்டு எந்த கால வட்டத்தைச் சார்ந்தது எனத் தெரிந்து கொள்ள பின்வரும் முறையைக் கையாளலாம். அதாவது நடைபெறும் ஆண்டை (2016) 3ஆல் வகுத்தால் மீதம் 1 வந்தால் அது முதல் ஆண்டு என்றும், மீதம் 2 வந்தால் அது இரண்டாவது ஆண்டு என்றும், மீதம் 0 வந்தால் அது மூன்றாவது ஆண்டு என்றும் புரிந்து கொள்ள வேண்டும். அதன்படி வாசகங்களைத் தேர்வு செய்ய வேண்டும். 2016இல் 3ஆல் வகுக்கும்போது மீதம் 0 வருவதால் இந்த நடப்பு ஆண்டில் மூன்றாவது வழிபாட்டு ஆண்டுக்குரிய வாசகங்கள் வாசிக்கப்படுகின்றன.

ஏன் மூன்று ஆண்டுகால வட்டம் என்று ஒரு கேள்வி எழலாம். பெரும்பாலான மக்கள் ஞாயிற்றுக்கிழமை திருப்பலிக்கு மட்டும் செல்வதால், அவர்களுக்கு முழு விவிலியத்தின் விருந்து அளிக்க மூன்று ஆண்டுகள் தேவைப்படுகின்றன. இவர்கள் தவறாமல் மூன்று ஆண்டுகளும் ஞாயிறு திருப்பலியில் பங்குபெற்று வாசகங்களைக் கேட்டால் முழு விவிலியத்தையும் வாசிக்கக் கேட்டதற்கு சமமாகும்.

ஞாயிற்றுக்கிழமைகளில் மூன்று வாசகங்கள் இடம் பெறுகின்றன. முதல் வாசகம் பழைய ஏற்பாட்டிலிருந்தும், இரண்டாவது வாசகம் புதிய ஏற்பாட்டில் திருத்தூதர்களின், சிறப்பாக புனித பவுலின் மடல்களில் இருந்தும், நற்செய்தி வாசகம் நான்கு நற்செய்திகளிலிருந்தும் தேர்வு செய்யப்பட்டிருக்கும். முதல் ஆண்டில் மத்தேயு நற்செய்தியும், இரண்டாவது ஆண்டில் மாற்கு நற்செய்தியும், அதோடு (அது சுருக்கமான நற்செய்தியாக இருப்பதால்) யோவான் நற்செய்தியின் ஒரு பகுதியும், அதாவது யோவான் நற்செய்தியின் 6வது அத்தியாயம் 17, 18, 19, 20, 21 ஆகிய 5 ஞாயிற்றுக்கிழமைகளில் வாசிக்கப்படும். மூன்றாவது ஆண்டு லூக்கா நற்செய்தியும் வாசிக்கப்படும். யோவான் நற்செய்தியில் எஞ்சியிருக்கும் பகுதி தவக்காலத்தின் பிற்பகுதியிலும் பாஸ்காகால ஞாயிற்றுக்கிழமைகளிலும் வாசிக்கப்படுகிறது.

பதிலுரைப் பாடல்:

முதல் வாசகம் முடிந்ததும் பதிலுரையாகத் திருப்பாடல் தொடரும். தொடக்க திருஅவையில் திருவழிபாட்டு கொண்டாட்டங்களில் திருப்பாடல்கள் ஏராளமாகப் பயன்படுத்தியதாக வரலாறு கூறுகிறது. நாளடைவில் அவற்றிலிருந்து ஒரு சில வசனங்கள் மட்டுமே கையாளப்பட்டுள்ளன. இது படிகீதம் என்று அழைக்கப்பட்டு முதல் வாசகத்திற்குப் பின் மிகக் குறுகியிருந்ததை அறிவோம்.

ஆனால் இப்பொழுது பழைய நடைமுறைக்குத் திரும்பியுள்ளோம். முதல் வாசகத்தின் கருபொருளுக்கு ஏற்றவாறு திருப்பாடல் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதன் பலபத்திகளைத் தொடுத்து, பொருத்தமான பல்லவியுடன் அமைத்துத் தரப்பட்டுள்ளது. இது உண்மையிலேயே வாசகத்திற்கு நாம் கொடுக்கும் பதிலுரையாகவும், அவ்வாசகத்தின்மீது நமது சிந்தனையைக் கிளறிவிடும் தியானப் பாடலாகவும் அமைந்திருக்கிறது. “இது இறைவார்த்தை வழிபாட்டின் முழுமையான பகுதியாகும்” என்று உரோமை திருப்பலி நூலின் பொதுப்படிப்பினை கூறுவது கவனிக்கத்தக்கது (றூணூயூனி 61). மேலும் அதே படிப்பினை கூறுவதை நோக்க வேண்டும். “வாசகங்களும், பதிலுரைப்பாடலும் இறைவார்த்தையைக் கொண்டிருப்பதால், அவற்றிற்குப் பதிலாக விவிலியம் அல்லாத வேறு பாடங்களைப் பயன்படுத்தலாகாது” (GIRM 57).

பதிலுரைப் பாடல் ‘இறைவார்த்தை வழிபாட்டின் முழுமையான பகுதி’ என்பதாலும், ‘இறைவார்த்தையைக் கொண்டிருப்பதாலும்’, இதை விட்டுவிட்டு வேறு பாடல்களைப் பாடுவது சரியல்ல என்பதைப் புரிந்துக் கொள்ள  வேண்டும்.

காலம் சென்ற அருள்பணியாளர் வில்லவராயர் சொல்வது எல்லோராலும் சிந்திக்க வேண்டியதொன்றாக உள்ளது. “இத்துணை சிறப்பு வாய்ந்த திருப்பாடல்களைப் பதிலுரைப் பாடலாக பாடுவதில் அல்லது படிப்பதில் ஏற்படும் தளர்வு நம் அறியாமையையே காட்டுகிறது. தரப்பட்ட திருப்பாடல்களைவிட அதிக பொருத்தமானப் பாடல்களைக் காண்பது அரிது. மேலும் இறைவாக்கிற்கு ஈடேது? பதிலுரைப் பாடல்களை நன்கு பயன்படுத்த கருத்துக் கொள்வோம், கற்றுக் கொள்வோம்”.

இரண்டாவது வாசகம் புதிய ஏற்பாட்டின் திருமடல்களில் இருந்து தேர்வுசெய்யப்படுகிறது. இந்த வாசகங்கள் இறைமக்களை ஒழுக்க நெறிகளில் பயிற்றுவிக்கவும், நடைமுறை வாழ்வுக்கு உகந்தனவாகவும் இருக்கும்படி தேர்வு செய்யப்பட்டிருக்கும்.

அல்லேலூயா

இந்த இரண்டாவது வாசகத்திற்குப் பின் பொதுவாக வருவது அல்லேலூயா ஆர்ப்பரிப்பாகும். இதற்கு “ஆண்டவரைப் போற்றுங்கள்” என்பது பொருள். எனவே இது ஓர் ஆர்ப்பரிப்புச் சொல். ஆதலால் இது எப்பொழுதும் பாடப்பட  வேண்டும். பாடாவிட்டால் விட்டுவிடுவது நல்லது. “அல்லேலூயா அல்லது நற்செய்திக்கு முன்வரும் வசனம் பாடப்பெறவில்லையயன்றால் அவற்றை விட்டு விடலாம்” (றூணூயூனி 63/இ) என்று திருப்பலி நூல் பொதுப் படிப்பினையில் கூறப்பட்டுள்ளது. அல்லேலூயாவுக்கு பல்லவி வாசக நூலிலிருந்து அல்லது படிக்கீத நூலிலிருந்து எடுக்கப்பெறும்.

இந்த ஆர்ப்பரிப்பின் வழியாக நம்பிக்கையாளரின் திருக்கூட்டம் நற்செய்தியில் தங்களோடு பேசவிருக்கும் ஆண்டவரை வாழ்த்தி வரவேற்கின்றது. இந்த அல்லேலூயா ஆர்ப்பரிப்பு நற்செய்திக்கு முன்னோடியாக வந்து, நற்செய்தியின் சாராம்சத்தை, மையக்கருத்தை, உட்பொருளை சுருக்கமாக எடுத்துரைப்பதே இதன் நோக்கமாகும். இது தகுந்த முறையில் நற்செய்திக்குச் செவிமடுக்க நம்மைத் தயாரிக்கிறது.

இதற்கு மாறாக நம் விருப்பம்போல் அல்லேலூயா வசனத்தை மாற்றிக்கொள்ளக்கூடாது. அல்லது மனப்பாடமாகத் தெரிந்த “ஆண்டவரே பேசும், உம் அடியான் கேட்கிறேன்” என்று நினைத்தபோதெல்லாம் பாடக்கூடாது. சில நேரங்களில் எந்த வசனமுமின்றி நான்குமுறை தொடர்ந்து “அல்லேலூ, அல்லேலூ, அல்லேலூ, அல்லேலூ” என்று பாடிவிட்டு, அடுத்து “அல்லேலூயா, இயேசுவைப் போற்றுங்கள்” என்று பாடுவதைப் பார்க்கிறோம். இது சரியானதன்று. ஏனெனில் இதில் அன்றைய நற்செய்தியின் சுருக்கம் இல்லை. மேலும் அல்லேலூயா என்பதற்கு “போற்றுங்கள்” என்பதுதான் பொருள் என்பது புரியாமல் பாடுவதாக உள்ளது.

தவக்காலத்தில் அல்லேலூயா பாடுவது விடப்படும். இதற்குப் பதிலாக வாசக நூலில் குறிப்பிட்டுள்ளபடி நற்செய்திக்கு முன் வசனம் பாடப்பெறும்.

தொடர்பாடல்

பாஸ்கா ஞாயிறு, பெந்தகோஸ்து, இயேசுவின் திருவுடல், திருஇரத்தம் ஆகிய மூன்று பெருவிழா நாள்களிலும், கன்னி மரியாவின் துயரங்கள் அதாவது வியாகுல அன்னை நினைவு நாளிலும் (செப்டம்பர் 15) முதல் வாசகம், அதற்குரிய பதிலுரைப் பாடலுக்குப் பின், அல்லேலூயாவுக்கு முன் தொடர்பாடல் பாட அல்லது வாசிக்க வேண்டும். என்று குறிப்பு இருக்கிறது. இந்த தொடர்பாடல் அன்றைய விழாவின் மகிழ்ச்சி அல்லது துயர உணர்வை பிரதிபலிக்கும் விதமாக அமைந்திருக்கிறது.

பாஸ்கா ஞாயிறு அன்றும், பெந்தகோஸ்து நாளன்றும் இரண்டாவது வாசகத்திற்குப் பின் இத்தொடர்பாடல் கட்டாயமாகப் பாடவோ, வாசிக்கவோ வேண்டும். பாஸ்கா ஞாயிறு எண் கிழமைகளிலும் விரும்பினால் தொடர்பாடலைப் பாடலாம் அல்லது வாசிக்கலாம். ஆனால் மற்ற இருநாள்களிலும் தொடர்பாடலை விரும்பினால் பாடலாம் அல்லது வாசிக்கலாம் என்றுள்ளது (GIRM 64).
இயேசுவின் திருவுடல், திருஇரத்த பெருவிழாவன்று முழுமையாக அல்லது சுருக்கமாக இத்தொடர்பாடலை பாடலாம் அல்லது வாசிக்கலாம் என்று கூறுவதோடு, சுருக்கமாக எந்த பத்தியில் (விமிழிஐகுழி) இருந்து எடுக்கலாம் என்றும் அடையாளம் காட்டப்பட்டுள்ளது. இத்தொடர் பாடல் புனித அக்குவினா நகர் தோமாவால் அமைக்கப்பட்டது. இது “சீயோனே உன் மீட்பரைப் புகழ்வாய்” என்று தொடங்குகிறப் பாடலாகும். இது நற்கருணையின் மகத்துவத்தைப் பற்றிய பாடலாகும்.

கன்னி மரியாவின் துயரங்கள் நினைவுநாளில் ஒரு வாசகமும், நற்செய்தி வாசகமும் மட்டுமே உண்டு. எனவே முதல் வாசகத்திற்குப் பின் பதிலுரைப் பாடலுக்கு அடுத்து இத்தொடர்பாடல் இடம்பெறுகிறது. இதுவும் முழுமையாகவோ அல்லது அடையாளக் குறியிலிருந்து சுருக்கமாகவோ பாடலாம் அல்லது வாசிக்கலாம் என்றுள்ளது. இப்பாடல் சிலுவையடியில் நின்று துயருற்ற அன்னை மரியாவின் வியாகுலங்களைச் சித்தரிப்பதாக உள்ள ஓர் அழகான பாடலாகும்.

வெற்றி உங்கள் கையில், நேர்மறை ஒரு வளர்பிறை

வெற்றி உங்கள் கையில்

- அருட்திரு. எஸ். ஜான் கென்னடி,
M.A., M.Ed; M. Sc; M. Phil; PGDCA, NET; Ph.D.,
பூண்டி புதுமை மாதா கல்வியியல் கல்லூரி, சமயபுரம்

நேர்மறை ஒரு வளர்பிறை

அது பிராய்லர் கோழி இல்லாத காலம். வீட்டில் வளர்ந்த வெள்ளைக்கோழியை விரட்டிப்புடிச்சு விருந்தாளிக்கு கொழம்பு வச்சுக் கொடுத்தாச்சு. கோழிக்கறி வயிற்றுக்கு உள்ளே போய் பேசுதாம் இப்படி,

“வெரட்டிப் புடிக்கையிலே என்ன தான் சொல்லிச்சாம் வெள்ளக்கோழி?
நான் ஊர்வலம் போறேன் என்றுதான் சொல்லுச்சாம் வெள்ளக்கோழி.

கழுத்தறுக்கையில் என்ன தான் சொல்லிச்சாம் வெள்ளக்கோழி?
நான் ஆபரேசன் பண்ணிக்கிறேன் என்று தான் சொல்லிச்சாம் வெள்ளக்கோழி.
தோல உரிக்கையில் என்ன தான் சொல்லிச்சாம் வெள்ளக்கோழி?
நான் சட்டைய கழட்டுறேன் என்றுதான் சொல்லிச்சாம் வெள்ளக்கோழி.

எண்ணெயில் பொறிக்கையில் என்ன தான் சொல்லிச்சாம் வெள்ளக்கோழி?
நான் எண்ணைய் தேச்சு குளிக்கிறேன் என்றுதான் சொல்லிச்சாம் வெள்ளக்கோழி.

வயித்துக்குள்ள போகையில என்ன தான் சொல்லிச்சாம் வெள்ளக்கோழி?
இந்த உலகம் ரொம்ப பெரிசுன்னு சொல்லிச்சாம் வெள்ளக்கோழி”.

இது ஒரு நாட்டுப்புறப் பாடல். இந்தப் பாடலைப் பாடியவர் திரு.புஷ்பவனம் குப்புசாமி.

பாட்டு நகைச்சுவையாக இப்படி இருந்தாலும் ஒரு வரியில்கூட அந்த கோழி தான் ஆபத்தான நிலையில் இருக்கிறேன் அல்லது வேதனைப்படுகிறேன் என்று சொல்லவில்லை. இதைத்தான் நேர்மறையான சிந்தனை (Pலிவிஷ்மிஷ்ஸe வீஜுஷ்ஐவஷ்ஐஆ) என்பர்.

நான் இரண்டு பூனைக்குட்டிகள் வளர்க்கிறேன். நடைப்பயிற்சி போகும்போது என்னோடு வரும். பிறகு ஓய்வு எடுக்கும். என் அறைக்கு நான் வரும்போது என்னோடு வரும். சாப்பிடும்போதும் வரும். என் அறைக்கு முன்பாக பலமணி நேரம் வெளியில் எனக்காக காத்திருக்கும். அதற்கு திண்பண்டங்கள் கொடுப்பேன். என் அறைக்கு முன்னால் காத்திருந்தால் திண்பண்டம் கிடைக்கும் என்ற நேர்மறையான உள்ளுணர்வு அதற்கு அதை பெற்றுக் கொடுக்கிறது. நம் வீட்டில் வளரும் வளர்ப்புப் பிராணிகள்கூட “கிடைக்கும், கிடைக்கும்” என்ற உள்ளுணர்வினால் காத்திருந்து உணவைப் பெற்றுக் கொள்கிறது. ஐந்தறிவு உள்ள பிராணிகள் இவ்வாறு நேர்மறை உள்ளுணர்வோடு வாழும்போது ஆறறிவு பெற்றுள்ள நாம் அதைவிட அதிகமான நேர்மறை எண்ணத்தை பெற்றிருக்க வேண்டும்.

எப்போதும் உங்களின் சிந்தனையில், பார்வையில், செயலில் நேர்மறை எண்ணங்கள் விதைக்கப்படட்டும். ஒருபோதும் எதிர்மறை எண்ணங்களை விதைக்க வேண்டாம். அவைகள் உங்களின் நல்லெண்ணங்களைத் திருடி வாழ்வில் மகிழ்ச்சியையும், வெற்றியையும் பறித்து விடுகிறது. நீங்கள் வலிமையானவராக எண்ணினால், வலிமையானவராக மாறலாம். வெற்றி வீரராக எண்ணினால் வெற்றி வீரராக மாறலாம். சக்தி வாய்ந்தவராக எண்ணினால் சக்தி வாய்ந்தவராக மாறலாம். மேன்மைமிக்கவராக எண்ணினால் மேன்மைமிக்கவராக மாறலாம். ஆகவே நேர்மறை எண்ணங்கள் நம்மை மிக நல்லவராக மாற்றி வெற்றியாளராக உருவாக்குகிறது,

எனது நண்பரின் குடும்பத்தில் நடந்த நிகழ்வை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். என் நண்பரின் மனைவி மருத்துவமனைக்குச் சென்று கர்ப்பப்பையை ஸ்கேன் செய்த போது அதில் கட்டி இருப்பதாக மருத்துவர் கண்டுபிடித்தார். அதை அறுவை சிகிச்சை செய்து எடுத்துவிட வேண்டும் என்றும் கூறினார். சரியாக ஒருவருடம் கழித்து மீண்டும் ஸ்கேன் செய்த பொழுது கட்டி கரைந்து போய் இல்லாமல் இருந்தது. குடும்பமே மகிழ்ச்சியால் துள்ளியது. நான் “எப்படி இப்படி பட்ட அதிசயம் நடந்தது?” என்று கேட்டேன். அதற்கு என் நண்பர் சொன்னார், “என் கட்டி ஒரு வருடத்தில் கரைந்துவிடும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்று மனைவி அடிக்கடி சொல்லிக்கொண்டே இருந்தார்கள். அதேபோல் கரைந்தும் விட்டது பாருங்கள். நேர்மறை எண்ணத்தினால் ஏற்பட்ட விளைவு இது. இது நேர்மறை எண்ணம் செய்த அதிசயம். நேர்மறை எண்ணம் என்பது ஒரு மந்திர விளக்கு. அந்த விளக்கிடம் நாம் எதை கேட்கின்றோமோ அவை எல்லாவற்றையும் அது கொடுக்கும். ஆகவே நாம் ஒவ்வொருவரும் நேர்மறையான எண்ணங்களை விதைத்து வெற்றியை அறுவடை செய்து வெற்றியாளர்களாக வலம்வருவோம்.

“ரோஜா செடியில் முட்கள் இருக்கின்றதே என்று வருத்தப்படலாம் அல்லது முட்களின் மத்தியில் ரோஜா மலர்கள் இருக்கின்றதே என்றும் மகிழ்ச்சியடையலாம்”- ஆபிரகாம் லிங்கன்.

மரணமில்லா பெரு வாழ்வு நோக்கி

மரணமில்லா பெரு வாழ்வு நோக்கி

நவம்பர் மாத சிறப்புக் கட்டுரை

- அருள்பணி. அ. பிரான்சிஸ், பாபநாசம்

மரணம், சாவு ஆகியவை மனிதருக்கு ஆழ்ந்த அச்சத்தினையும், துக்கத்தினையும் உருவாக்கும் சொற்கள். பிறப்பும், இறப்பும் இயற்கையின் எதார்த்தங்கள். மரணமில்லாப் பெருவாழ்வில் திளைத்திடவே மனிதர் படைக்கப்பட்டார். படைத்தவரையே மதியாது ஆணவத்தினால் மனிதரே வருவித்துக் கொண்டவையே இறப்பு. மருத்துவம் மனித வாழ்வின் மரணத்தினை கீழ்க்கண்டவாறு பகுக்கின்றது.

1. 1. NECROBIOSIS: மனித உடலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான செல்கள் அழிகின்றன. புதிய செல்கள் பிறக்கின்றன. இது வாழ்க்கைச் சுழற்சியின் இறப்பு.

2. NECROSIS: ஏதேனும் ஒரு காரணத்தினால் நமது உடலின் ஒரு பகுதியோ அல்லது ஒரு உறுப்போ முற்றிலும் செயலிழந்து விடுதல். உடலின் ஒரு பகுதியிலோ, ஓர்  உறுப்பிலோ இரத்த ஓட்டம் தடைபடுவதனால் இது ஏற்படுகின்றது.

3. CLINICAL DEATH: சுவாசமில்லை, குருதியோட்டமில்லை, மூளைச் செயல்பாடுகள் இல்லை. ஆனால் இதுவே முழு மரணம் அல்ல. மரணத்தின் தொடக்க நிலை. உதாரணத்திற்கு ஹார்ட் அட்டாக்  இதயம் தனது செயல்பாட்டை ஒரு சில நிமிடங்கள் நிறுத்திக் கொள்ளும். இது ஒரு நான்கு நிமிடங்கள் நீடிக்கும். அதற்குள் CARDIO PURMONARY RESUSCITATION CCRPI என்ற முறையில் செயற்கை சுவாசமூட்டியும், செயற்கை முறையில் இதயத்தை செயல்படத் தூண்டியும் செயல்பட வைக்கலாம்.

4. . BRAIN DEATH: உயிர் வளியோட்டம் இல்லாது 3லிருந்து 7 நிமிடங்கள் வரை ஓரளவிற்குத் தாக்குப் பிடிக்கும். மூளைச் சாவு ஏற்பட்டுவிட்டால் மற்ற உறுப்புகளுக்கு செயல்படத் தெரியாது. இதற்குப் பின் எவரையும் மரணத்திலிருந்து மீட்டெடுக்க முடியாது.

5. SOMATIC DEATH : இது நிச்சயமாக இறப்பு நிலையே. மேற்சொல்லப்பட்ட 3‡4 பகுதிகளின் கூட்டுநிலை செயற்கை சுவாசமும், குருதியோட்டமும் அளித்து செயல்பாட்டில் வைக்க முடியும். இந்தச் செயற்கை நிறுத்தப்பட்டால் உறுதியான இறப்பு நிலைதான்.

உடலின் இறப்பிற்கு பின் ...

ஆத்மாவுக்கு பிறப்போ, இறப்போ கிடையாது. ஒரு முறை இருந்து பிறகு அவர் இல்லாமல் போவதுமில்லை. அவர் பிறப்பற்ற, நித்தியமான என்றும் நிலைத்திருக்கும் மரணமற்ற, மிகப் பழமையானவர் ஆவார். உடல் அழிக்கப்பட்டாலும் ஆத்மா அழிக்கப்படுவதில்லை - பகவத் கீதை 2 . 20.

கரந்த பால் மடி புகா
உடைந்த சங்கில் ஓசை புகா
பிரிந்த  உயிர் மீண்டும்
உடல் புகா - ஆத்மபோதா நிர்விப்தா நந்தா.

நெற்றிக்கு நேரே நிறைந்த ஒளிகாணில்
முற்றும் அழியாது உடம்பு
அகம்புறம் பேராப் பொருளை அறியில்
உகம்பவ காட்டும் உடம்பு - ஒளவைக் குறள்

ஊன உடம்பே ஒளி உடம்பாய் ஓங்கி நிற்க
ஞான அமுதெனக்கு நல்கியதே - வானப்
பொருட் பெருஞ்சோதிப் பொதுவாழ்வில் விளங்கும்
அருட் பெருஞ்சோதி அது - வள்ளலார்.

ஒளியாகிய பேரொளியில் உடல் கலப்பதால் ஒளி உடம்படைந்த ஒருவரின் உடலில் மண்பூதமே இருக்காது.

வாழ்வின் நூல் :

திவெ 3 : 4, 5 வாழ்வின் நூல் குறிப்பைத் தருகிறது. இதில் இடம்பெறத் தகுதி பெற்றவர் யார் என்றும் குறிப்பிடுகிறது.

1. கொடிய வேதனையினின்று மீண்டு, தங்களின் தொங்கலாடைகளை ஆட்டுக்குட்டியின் இரத்தத்தில் தோய்த்து வெண்மையாக்கிக் கொண்டவர்கள். திவெ 7 : 14.

2. கற்றதையும், கேட்டதையும் நினைவில் கொண்டு கடைப்பிடித்து வாழ்ந்தவர்கள். திவெ 3 : 3.

3. தீட்டுப்படாது. அருவருப்பானதைச் செய்யாது, பொய்மையின்றித் திகழ்வோர். திவெ 21 : 27.

திருச்சபையின் பாரம்பரியப் படிப்பினையின் அடிப்படையில் திருச்சபை மூன்று வடிவங்களைக் கொண்டது.

1. பயணிக்கும் திருச்சபை (Pilgrim Church):

இது இம்மண்ணக வாழ்வில் பயணிக்கும் மனிதர்களாகிய நம்மைக் குறிக்கிறது.

2. துன்புறும் திருச்சபை (Suffering Church):

இவ்வுலக நாட்களில் பாவம் புரிந்தாலும் அதற்குரிய பாவ அழுக்கினைப் போக்குவதற்குரிய முயற்சி மேற்கொண்டும் கறைகளோடு இறப்போர், பாவப் பரிகாரம் மேற்கொள்ளும் நிலையினை அடைகின்றனர். இதுவே உத்தரிப்புத் தலம் எனப்படுகின்றது.

3. மகிமையின் திருச்சபை (Glorious Church):

பாவப் பரிகாரம் மேற்கொண்டு இறுதியில் மகிமைமிகு முடிசூழ இறைவனோடு என்றென்றும் வாழ்வோரே மகிமையின் திருச்சபையினர். இவர்களே புனிதர்கள்.

ஆக, இந்த மூவகைத் திருச்சபையினரும் இணைந்து சமூக நலன் சார் சமூக உறவினை உருவாக்குகின்றனர். இவர்களே மரணமில்லாப் பெருவாழ்வு நோக்கிப் பயணித்து வெற்றி கண்டவர்கள். நாமும் மரணமில்லாப் பெருவாழ்வு நோக்கிப் பயணித்து இறை ஒளியில் சங்கமிப்போம்.

Ads Inside Post